Sunday 19 April 2015

காஞ்சனா -2 - ஓவர் டோஸ்

 # எதுக்குப் போனேன்னா.... 
கே கண்மணி படத்துக்கு போகலாம்னுதான் பிளான். ஆனா படம் பார்த்த பிற்பாடு 'மவுஸ்' புடிச்ச கையை வைச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாதே.. பிறகு என்ன செய்யிறது என்கிற குழப்பத்தோடு இருந்தபோதுதான் '0.5/5 ' என்ற மெட்ராஸ்பவன் சிவாவின் மார்க்கு ' ஓகே கண்மணி ' யைத் தவிர்த்துவிட்டு காஞ்சனாவைப் பார்க்கத் தூண்டியது.

தற்போது ' ஓகே கண்மணி ' பரவாயில்லை என்பதுபோன்ற விமர்சனங்கள் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது. இருக்கட்டும். அதற்கு முன்பு காஞ்சனா-2 என்கிற காவியத்தைப் பற்றிப் பார்ப்போம்.

பார்ட்- 1, 2, 3 இது மாதிரி வருகிற படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான கதையமைப்பு உடைய படங்கள் என்பது சினிமாவுக்கே உரித்தான ஓர் விதி என்பதால் அதற்குள் காஞ்சனாவும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்..!.  முன்பாதி முழுக்க காமெடி.. பின்பாதி முழுக்க த்ரில்லர்... இந்த எளிய சூத்திரத்தை வைத்துக் கொண்டு இன்னும் ஒரு டஜன் படங்களை எடுக்கும் செம்ம தில் ராகவா லாரான்சைவிட வேறு யாருக்கு இருக்கப் போகிறது..!

# என்ன சொல்றாங்கனா... 

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ராகவா லாரன்சுக்கு பிறவியிலிருந்தே பேய் என்றாலே மூச்சா போகும் அளவுக்கு பயம். அவர் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்திற்கு வருவதற்காக பேய் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப முடிவு செய்கிறது. அதை ஒருங்கிணைப்பவர் டாப்சி. அதைப் படம்பிடிக்கும் பொறுப்பு லாரன்சிடம் கொடுக்கப்பட, டாப்சி மீது கொண்ட காதலால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார்.

பீச் ஓரத்தில் அமைந்துள்ள ஒரு பழைய பங்களாவைத் தேர்ந்தெடுத்து ' செட்டப் பேய் ' யை வைத்து படப்பிடிப்பை நடத்தும்போது அங்கு உண்மையிலேயே பேய் நடமாட்டம் இருப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. அங்குள்ள பீச் மணலில் புதைத்திருந்த ஒரு தாலியை எதிர்பாராத விதமாக டாப்சி தோண்டி எடுத்துவிட, அதுவரை அடங்கியிருந்த பேய் ஆக்ரோசமாய் கிளம்புகிறது.  பேய் என்றாலே யார் மீதாவது ஏறத்தானே வேண்டும்.. அந்த விதிப்படி முதலில் ஹீரோயின் உடலினுள் ஏறிவிடுகிறது. ச்சீ.. புகுந்து விடுகிறது. பிறகு அங்கிருந்து ஷிப்ட் ஆகி ஹீரோவின் உடலினுள் தஞ்சம் அடைகிறது.

பிறகு என்ன...  வழக்கம்போல மனித உடலில் புகுந்த பேய் அதற்கு என்ன நடந்தது என்பதை நமக்கு 'பிளாஸ்பேக்' போட்டு காட்டிவிட்டு, அதற்குக் காரணமானவர்களை பழிதீர்த்துவிட்டு, கடைசியில் மனித உடலிலிருந்து வெளியேறி ஒன்வே டிக்கெட் எடுத்துக்கொண்டு மேலே போய்விடுகிறது. இறுதியில் ஹீரோ ஹீரோயினோடு சேர்ந்து நாமும் பெருமூச்சு விட்டு நிம்மதியடைகிறோம்.

அவ்வளவுதான். ஆனால் ஒரு ஹாரர் படத்தில் காமெடியை கலந்துகட்டி மூன்று மணிநேரம் சலிப்பில்லாமல் கொண்டு செல்லும் ராகவா லாரன்ஸில் திரைக்கதை அமைப்பு உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது.

 

# எப்படி இருந்துச்சுன்னா...

முன்பாதி முழுவதும் கலகலகல என்று போகிறது. கோவை சரளாவை லாரன்சுக்கு அம்மாவாக ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்கள் போல. அம்மா-மகனுக்குள் அப்படியொரு கெமிஸ்ட்ரி. ஆரம்பத்தில் தன் மகனின் பேய் பற்றிய பயத்தை விளக்குவதாக இருக்கட்டும், பிறகு பேயுடன் சிக்கிக் கொண்டு சமாளிப்பதாக இருக்கட்டும், மொத்தப் படத்தையும் தன் தனித்துவமான டயலாக் டெலிவரியால் ஒத்தை ஆளாக தூக்கி நிறுத்துகிறார் இந்த கொங்கு நாட்டு 'ஆச்சி' . பேயுடன் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. கோவை சரளா இல்லாத இடங்களில் மனோபாலா, மயில்சாமி கூட்டணி கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்கிறது.

முதல் இரண்டு பாகங்களிலும் முறையே ராஜ்கிரண், சரத்குமார் நடித்த பாத்திரத்தை இதில் லாரான்ஸே ஏற்றிருக்கிறார். முந்தைய படங்களில் அந்த இரண்டு பாத்திரங்களும் பரவலாகப் பேசப்பட்டதால் என்னவோ எல்லாப் புகழும் எமக்கேயாகட்டும் என்கிற சுயநலமாக இருக்கலாம். ஆனால் முன்பாதி+பின்பாதி முழுவதும் இவரே வியாபித்திருப்பதால் கொஞ்சம் சலிப்புத் தட்டுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

முன்பாதியில் பேய்க்கு பயப்படும் 'ராகவா' பாத்திரம் செயற்கையாகப்படுவதால் அவ்வளவாகக் கவரவில்லை. எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவதால் இவர் மீதுதான் பேய் ஏறப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கமுடிவது படத்தின் முக்கிய பலவீனம். பிளாஷ்பேக்கில் மொட்டை சிவாவாக அதிரடி காட்டியிருப்பது வித்தியாசமாக இருந்தாலும் ராஜ்கிரன்- சரத்குமார் பாத்திரங்கள் கொடுத்த அழுத்தத்தை ' மொட்டை சிவா ' தரவில்லை. ஆனால் பேயாக மாறி, கொலை செய்யப்பட ஒவ்வொருவரின் தோற்றத்தில் லாரன்ஸ் தோன்றி பீதியைக் கிளப்புவது அட்டகாசம். அதிலும் அந்த சிறுமியின் தோற்றம். 'மொட..மொட ..' பாடலில் அச்சு அசலாக பெண்ணின் நளினத்தோடு ஆடுவது செம கிளாஸ்..!

பொதுவாக பேய்ப் படங்கள் என்றாலே சில பாத்திரங்களின் ஓவர் ஆக்டிங் எரிச்சலை ஏற்படுத்தும். இதில் டாக்டர் பிரசாத்தாக வரும் ஸ்ரீமானும், கங்காவாக வரும் நித்யா மேனனும் அப்பொறுப்பை செவ்வனே செய்கிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரிக்க வைத்த ஸ்ரீமான் பேயிடம் மாட்டிக்கொண்டு அலறும் காட்சிகள் கொஞ்சம் ஓவர்.

நித்யா மேனன் சாதரணமாக பேசும்போதே பேய் பிடித்தது போல பேசுகிறார். மாற்றுத்திறனாளியாக வரும் அவரது பாத்திரம் ஏனோ அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. அவர் பிடிவாத குணம் உடையவரா அல்லது அரக்க மனம் படைத்தவரா என்பதைக் காண்பிப்பதில் இயக்குனருக்கு ஏன் அவ்வளவு குழப்பம்..? அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. அதனால்தான் என்னவோ கங்கா பாத்திரம் மீது அனுதாபம் வர வேண்டியதற்குப் பதில் அருவருப்பே வருகிறது. என்ன நோக்கத்தோடு அந்த பாத்திரத்தை கால் ஊனமுற்றவராக இயக்குனர் காண்பிக்க முயன்றாரோ, அவரின் குணாதிசயத்தை தவறாக காண்பித்ததின் மூலமாக அந்த நோக்கமே அடிபட்டு போகிறது. அந்த ஊனமான பாத்திரப் படைப்பின் மீது நமக்கு எவ்வித மென்மையான பிம்பமோ, அனுதாபமோ வராததால், அவர் கொல்லப்படும் காட்சிகூட நமக்கு அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

லாரன்சுக்கு இணையான பாத்திரம் டாப்சிக்கு. அவரது உடலில் பேய் புகுந்த பிற்பாடு ஒவ்வொரு காட்சியிலும்  வெளிப்படுத்தும் உடல்மொழி , இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கவைக்கிறது. பேய் படத்திலும் சரி.. 'பிட்' படத்திலும் சரி.. முடிச்சை அவிழ்க்கும் வரைதான் சுவாரஸ்யம். அதற்குப் பிறகு 'சப்' என்று ஆகிவிடும் அல்லது ஓவர் டோஸாகிவிடும். இதிலும் அப்படித்தான் சொதப்பியிருக்கிறார்கள்.

இடைவேளை வரை சுவாரஸ்யமாக சென்ற திரைக்கதை, நாயகி உடலில் பேய் புகுந்தவுடன் பேய்க்குப் பயந்த லாரன்ஸ் போல பம்ம ஆரம்பித்துவிடுகிறது. பேய் என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதால் அதன் குணாதியங்களை எப்படி வேண்டுமானாலும் வரையறுக்கலாம் போலும். அதிலும் இந்த சினிமாக்காரர்கள் கையில் கிடைத்தால் கேட்கவா வேண்டும். தமிழ் சினிமா வரலாற்றிலே பேய் முதல் முறையாக பன்ச் டயலாக் பேசுகிறது. " நீ மோசமானவன்னா நா ரொம்ப மோசமானவன்.... நீ பொறுக்கின்னா நா கேடுகெட்ட பொறுக்கி....நீ மாஸ்னா நா பக்கா மாஸ்..."  .

கடைசியில் வில்லன் பேயை  பழிவாங்கும் நேரத்தில் கூட " பேய்க்கும் பேய்க்கும் சண்டை..அத இந்த ஊரே வேடிக்கை பார்க்குது..நீ சாதா பேய் நான் சாமிப்பேய்.." என்று ஹீரோ பேய் ஃபைனல் பன்ச் அடிக்கிறது. நல்லவேளை வில்லன் பேய்க்கு எதிர் பன்ச் அடிக்கும் வாய்ப்பை இயக்குனர் கொடுக்கவில்லை. அடுத்தப் பாகத்தில் கொடுப்பார் போல..

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்.. இந்தப் பேய்கள் எல்லாம் இருக்கிறதே..குறிப்பாக கொல்லப்பட்டவர்களின் உடலிலிருந்து புறப்படும் பேய்கள்.. இவைகள் எல்லாம் நள்ளிரவில் கிளம்பி சம்மந்தமே இல்லாத ஆட்களை எல்லாம் அச்சுறுத்தி கொலை நடுங்க வைப்பது போல எல்லாப் படங்களிலும் காண்பிக்கிறார்கள் . இவைகள் எல்லாம் எதற்காக பேய்களாக அலைகிறது என்று கேட்டால் கொன்றவர்களை பழிதீர்க்க என்கிறார்கள். சரி போகட்டும். அதற்கு சம்மந்தமே இல்லாத ஆட்களை பயமுறுத்துவதற்குப் பதில் கொலை செய்தவர்களையே நான்கு நாட்கள் இப்படி பயமுறுத்தினால் போதுமே.. தக்காளி எல்லோரும் பயத்தில ஜன்னி வந்தே செத்துப் போயிடுவாங்களே..! அதைவிட்டுவிட்டு எதற்கய்யா சம்மந்தமில்லாதவர்களை பயமுறுத்தி, படம் பார்க்க வந்த நம்மையும் பயமுறுத்தி.... இதையெல்லாம் கேட்டா நம்மள.... சரி விடுங்க.  

சரி... இன்னொருவரின் உடலில் ஏன் ஏறுகிறது..? ஏனென்றால் அதற்கு முன்பு வெறும் ஆன்மாக இருந்த பேய், உரு பெறுவதற்காக மனித உடலில் புகுந்து தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறது. அப்படியென்ன காரியம்..? கொலை செய்தவர்களை பழி தீர்ப்பதுதான். அது எப்படிப்பா.. ஆன்மாவாக இருக்கும்போது  அதை எதிர் கொண்டவர்களை அந்தரங்கத்தில் தூக்கி அடிக்கிறது. மந்திரவாதியை போட்டுத்தள்ளுகிறது. புழுதிப் புயலை வரவழைக்கிறது. மேகங்களை திரட்டுகிறது. பகலை இரவாக்குகிறது. இவ்வளவு சக்தி படைத்த அந்த ஆன்மா, நேரா போயி கொலை செய்தவர்களை தூக்கிப்போட்டு நாலு மிதிமிதிச்சி சாவடிப்பதை விட்டுட்டு ஹீரோயின் உடலில் பூருமாம்... அப்புறம் ஹீரோ உடலிலும் பூருமாம்... பாதிரியார், பெண் உடலில் உள்ள ஆன்மாவை ஆண் உடலில் புகுந்துக்கொள் என்று சொன்னவுடன் கபால்னு ஹீரோயினை விட்டுவிட்டு ஹீரோ உடலில் புகுந்து கொள்ளுமாம்..   ஆஆ.....வ்... போங்கையா யோவ்...

சரி விடுங்க.. மொத்தத்தில் முன்பாதி கலகல...பின்பாதி லகலக..

10 comments:

  1. ஸ்ரீராகவேந்திரர் தான் காக்க வேண்டும்...! ஹிஹி...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஸ்ரீராக வேந்திரா துணை.... விமர்சனத்தை எழுதியதை படித்தேன் நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இனித்தான் பார்க்க வேண்டும்படம் லாரன்ஸ் மூலம் உங்களை மீண்டும் பதிவுலகில் பார்ப்பது சந்தோசம்!

    ReplyDelete
  4. நித்யா மேனன் நடிப்பு அருமை. . தங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. ..

    ReplyDelete
    Replies
    1. அவரது துணிச்சலான பாத்திரத் தேர்வுக்கு வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால் மிகை நடிப்பை அச்சு பிசகாமல் செய்திருக்கிறார் என்பது மட்டும் நிதர்சனம். அந்த கதாபாத்திரத்திற்கு உண்டான மென் பிம்பம் கடைசிவரை பார்வையாளனுக்கு ஏற்படவில்லை.

      Delete