Saturday 29 November 2014

காவியத்தலைவன்..( கொஞ்சம் பொறுமை வேணும்.)

ரு நாடக சபா கம்பெனியில் யார் காவியத் தலைவன்(ராஜபார்ட்) என்பதில் இரு நடிகருக்குள் நடக்கும் ஈகோ அரசியலே காவியத்தலைவன்.

அதற்கு முன், மாற்று சினிமா எடுக்கிறேன் என்று கதை சொல்லவரும் உதவி இயக்குனர்களின் உழைப்பைத் திருடி ,கொரியன் படத்திலிருந்து ஒரு சீன், ஈரானிய படத்திலிருந்து ஒரு சீன், ஹாலிவுட் படத்திலிருந்து ஒரு சீன் என காட்சிகளை உருவி காவியம் படைத்ததாகப் பீற்றிக்கொள்ளும் சமகால இயக்குனர்கள் மத்தியில் நம் மண்ணின் வாசம் நிறைந்த கதைக்களத்தில் காவியம் படைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் வசந்தபாலன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முழுக்கதையும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சினிமா அறிமுகமாகாத,மேடை நாடகங்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் நடக்கிறது.

நாசரின் ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவில் அனாதைகளாக கோமதி நாயகமும் (பிருத்விராஜ்), காளியப்பனும்(சித்தார்த்தும்) சிறுவயதில் சேர்கிறார்கள். நாசரிடம் நடிப்புக்கலையைக் கற்று சிறுசிறு வேடங்களில் நடிக்கிறார்கள். அதே நாடக குரூப்பில் ராஜபார்ட்டாக பொன்வண்ணன் நடிக்கிறார். நாசருக்கும் பொன்வண்ணனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொன்வண்ணன் அக்குழுவை விட்டு வெளியேறிவிட அடுத்த ராஜபார்ட் யார் என்பதில் சித்தார்த்துக்கும் பிருத்விராஜுக்கும் போட்டி நிலவுகிறது .

குருசாமி சிவதாஸ் சுவாமி(நாசர்)யின் சாய்ஸ் சித்தார்த்தாக இருக்க, அதுவரை உடன்பிறவா தம்பியாக பழகி வந்த சித்தார்த்தை பகையாளியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார் பிருத்வி. இதற்கிடையில் ஜமீன்தாரின் பெண்ணுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர, அதை நாசரிடம் சமயம் பார்த்து வத்தி வைக்கிறார் பிருத்வி. அதனால் நாடக சபாவை விட்டே சித்தார்த்தை விலக்கி வைப்பதாக நாசர் முடிவெடுக்க, வேற வழி தெரியாமல் அப்பெண்ணை மறந்துவிடுவதாக நாசரிடம் சத்தியம் செய்து திரும்பவும் அக்குழுவில் இணைந்தது எடுபிடி வேலைகள் செய்கிறார் சித்தார்த். தன் இத்தனை நாள் கனவான ராஜபார்ட் வேடம் நயவஞ்சகத்தின் மூலம் பிருத்விக்கு கிடைக்கிறது.

சித்தார்த் காதலால் களங்கப்பட்ட(!) நாசரின் நாடகசபா அவ்வூரைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு கிளம்புகிறது.காதலனைப் பிரிந்த ஜமீன்தார் மகள் தற்கொலை செய்துகொள்ள, வெகுண்டெழுகிறார் சித்தார்த். தன் குருவான நாசர் மீது சினம் கொண்டு சாபம் விட அவர் இறந்துவிடுகிறார். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடக சபாவை பிருத்விராஜ் 'டேக்ஓவர்' செய்கிறார். அதன்பின்பு, அதுநாள் வரை உதட்டில் சகோதரனாகவும் உள்ளத்தில் எதிரியாகவும் பாவித்து வந்த சித்தார்த்தை, அந்நாடக சபாவை விட்டே துரத்துகிறார் பிருத்வி. இப்படி நாடக சபாவினுள் நடக்கும் அரசியலைப் பேசிச் செல்கிறது முதல் பாதி.

பிறகு இருவரும் சேர்ந்தார்களா என்பதை இரண்டாம்பாதியில் இன்னும் இழுவையாக இழுத்து சொல்லியிருக்கிறார்கள்.
முக்கால்வாசி படம் வரை ஒரு நாடகக் கம்பெனிக்குள் நடக்கும் அரசியலையே அரைத்துக் கொண்டேயிருக்க, இப்போ இந்தப்படம் மூலம் இயக்குனர் என்னதான் சொல்ல வருகிறார் என்று நாம் குழம்பும் நேரத்தில், சுதேசி இயக்கம், விடுதலைப் போராட்டம் என்று வேறு ஒரு ட்ராக்கில் கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.

ராஜபார்ட்டாக வரும் பொன்வண்ணன் கனகச்சிதம்.ஆனால் அவருக்கடுத்து அமுல்பேபியான சித்தார்த்துக்குத் தான் அவ்வேடம் மிகச்சரியாக பொருந்துகிறது என நாசர் கண்டுபிடிப்பது மிகப்பெரிய நெருடல். ஆனால் ரசிகனின் தேர்வு என்னவோ பிரித்விராஜாகத்தான் இருக்கும். ராஜபார்ட் வேடத்திற்கு உடல்மொழியைவிட, வசன உச்சரிப்பை விட கம்பீரமான தோற்றம் மிக முக்கியம் அல்லவா..?  வட்டமுகம், பெருத்த விழிகள் முக்கிய பிளஸ் பாய்ன்ட் அல்லவா..? ஒட்டுமீசை வைத்து,லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சித்தார்த் வரும்போது பெண்ணுக்கு ஆண்வேடம் போட்ட மாதிரியே தெரிகிறார்.  ஆனால் காதலியிடம் ரொமான்ஸ் செய்வது, அவர் இறந்தவுடன் துடித்தழுவது, நாசரிடம் கெஞ்சுவது, இறுதிக் காட்சியில் சுடவந்த பிருத்வியின் மனதை மாற்றுவது என்று நிறையக் காட்சிகளில் செம்மையாக ஸ்கோர் செய்கிறார் சித்தார்த். தமிழில் அவருக்கு இது முக்கியமான படம்.

அனைத்து தகுதிகளிருந்தும் தான் புறக்கணிக்கப்படுகிறோமே என்கிற ஆதங்கத்தை தன் கண்களாலே பதிவு செய்யும் பிரித்விராஜ் அட்டகாசம். வசன உச்சரிப்பு கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதோடு இலவச இணைப்பாக ஒட்டிக்கொண்டு வரும் மலையாள வாடைதான் நெருடுகிறது.வேதிகாவுக்கு இடைவேளைக்குப் பிறகுதான் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. அதில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

சிங்கம்புலியும் தம்பி ராமையாவும் இருந்தும் காமெடிக்கு ஏன் இப்படியொரு பஞ்சம்...? இடைவேளைக்குப் பிறகு கிருஷ்ணன் வேடத்திலிருக்கும் பிருத்வி,மன்சூர்அலிகானை அடிக்கும்போது 'நானும் உன்னை அடிச்சிடுவேன். ஆனா நீ என் கண்ணுக்கு கிருஷ்ணர் மாதிரி தெரிகிற' என்று திருப்பி சொல்லும்போது தியேட்டரில் சிரிப்பலை கேட்கிறது. அப்பாடா இப்பயாவது எங்களை சிரிக்க விட்டீங்களே என்கிற பெருமூச்சின் வெளிப்பாடுதான் போல.

நீண்ட இடைவேளைக்குப் பின் நாசர் என்கிற சிங்கத்துக்கு கறிவிருந்து வைத்திருக்கிறார்கள். அளவான, நேர்த்தியான நடிப்பு..!. சிவதாஸ் ஸ்வாமியாகவே வாழ்ந்திருக்கிறார்.முன்பாதி முழுவதும் நாசர் ராஜாங்கமே நடப்பதால் மற்றவர்களுக்கு பின்பாதியில்தான் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.


பாடல்கள் ஏற்கனவே விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமடைத்துவிட்டதால் பாடல் காட்சிகளின் போது வெளியே பாப்கார்ன் விற்பனை கொஞ்சம் மந்தம்தான். 'ஏய் மிஸ்டர் மைனர்' ,'யாருமில்லா' பாடல்கள் திரும்ப கேட்க வைப்பவை.

ஒரு நாடக சபாவுக்குள் நடக்கும் அரசியலை நுட்பமாக அலசியிருப்பதால் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். நாடகம் என்கிற கலை வடிவத்தில் நாட்டுப்பற்றையும் விடுதலை வேட்கையும் எவ்வாறு அக்காலத்தில் புகுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் என்பதை நம் கண்முன்னே காட்சிப்படுத்திய விதத்தில் வசந்தபாலனுக்கு பெரிய பொக்கேயே பரிசளிக்கலாம். ஆனால் இரண்டரை மணி நேரம் ரசிகனுக்கு  ஒரு நாடகக் கொட்டகைக்குள் உட்காந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது எவ்வகையில் நியாயம்...? இது ஒரு பீரியட் படம் போலதான். அதில் சராசரி ரசிகனை உள்ளிழுக்க வேண்டுமென்றால் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைக்க வேண்டும் அல்லவா.. ஆமை வேகத்தில் நகருகிறது. அதிலும் இடைவேளைக்குப் பிறகு சுதேசி நாடகம்,விடுதலைப் போராட்டம் அன்று அவிழ்த்துவிட்ட காளைபோல தறிகெட்டு ஓடுகிறது திரைக்கதை.

கதை நடக்கின்ற காலகட்டத்தில் உள்ள வாகனங்கள், ஆடைகள், வசிப்பிடங்கள் என அத்தனையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.மின்சாரமில்லாத காலகட்டம் என்பதால் மின்சாரக்கம்பிகள்,தெருவிளக்குகள் எதுவுமே கேமரா வளையத்துக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். கலை இயக்குனருக்கு பாராட்டுகள். இதையெல்லாம் விட சவாலான விஷயம் மின்சார விளக்கு வெளிச்சம் இல்லாமல் வெறும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் மட்டும் நடந்த அக்கால நாடகத்தை திரையில் கொண்டுவருவது. துல்லியம்மாக பதிவு செய்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. அதேபோல் 40 களில் வந்த திரைப்படங்களில் பயன்படுத்திய இசைக்கருவிகளைக்கொண்டு  பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்பை செய்து நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்து சென்ற இசைப்புயலும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஆனால் இவையெல்லாம் ஒரு சராசரி ரசிகனை திருப்திப் படுத்திவிடுமா என்பதுதான் இங்கு எழும் கேள்வி. எப்படியிருந்தாலும்  தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது நம்பிக்கை வைத்து ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் பயணித்திருக்கும் இயக்குனர் வசந்தபாலனை ஒரு முறை கைதட்டி ஊக்கப்படுத்தலாம்...!

                        ப்ளஸ்                   மைனஸ்
நாசரின் நடிப்பு ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை
கிளைமாக்ஸ் நாடகத்தன்மை
இசை நகைச்சவை வறட்சி
ஒளிப்பதிவு அழுத்தமில்லாத கதை

நம்ம பார்வையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்...


Saturday 22 November 2014

நாய்கள் ஜாக்கிரதை....

பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றும் போராட்டத்தில் வில்லனின் தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் சிபி. அதற்குப் பழிதீர்க்கும் விதமாக சிபியின் மனைவியையேக் கடத்துகிறது அக்கும்பல். கடத்தப்பட்ட தன் மனைவியை ஒரு நாயின் உதவியுடன் ஹீரோ மீட்பதே நாய்கள் ஜாக்கிரதை படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பின் சொந்த தயாரிப்பில் போலிஸ் கான்ஸ்டபிளாக களம் இறங்கியிருக்கிறார் சிபி. "நடப்பது நடக்கட்டும். கிடைப்பது கிடைக்கட்டும். நான் ரொம்ப துணிஞ்சவண்டா..." என்ற பாடலின் பின்னணியில் அறிமுகமாகும்போதே அடுத்த இன்னிங்க்ஸ்-க்கு தயாராகிவிட்டதை உணர்த்துகிறார்.

எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ வீரரை  ராணுவம் மீட்கும்வரை காவல் காக்கும் இடோ என்ற Belgian Shepherd நாய்தான் படத்தின் ஹீரோ.அதன் அறிமுகமும் அசத்தலாகத்தான் இருக்கிறது.பிறகு தமிழ்நாட்டுக்கு வரும்போது 'சுப்ரமணி' யாக மாறி ராமநாராயணன் குரூப்பில் சேர்ந்துவிடுகிறது .

ஒரு மிலிட்டரி நாயைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை என்பது தமிழ் சினிமாவில் ஒரு வியத்தகு முயற்சி. இப்படிப்பட்ட துப்பறியும் கதையில் திரைக்கதைதானே இரண்டாவது ஹீரோ. ஆனால் சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட சுலபமாகக் கணிக்க முடிகிறது.  உயிருக்குப் போராடும் ஹீரோயினை ஒரு நாய் தன் மதிக்கூர்மையாலும் மோப்ப சக்தியாலும் கண்டுபிடிப்பதாக நகரும் கதையின் ஒவ்வொரு சீனையும் எப்படிக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்..?. நிறைய லாஜிக் ஓட்டைகள்.

ஒரு military-trained நாயைப் பற்றிய படம் என்று ஏற்கனவே நிறைய பில்டப் கொடுத்திருந்தார்கள். சமீபத்தில் மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடுபாடுகளில் சிக்கி உயிரோடு மீட்கப்பட்ட ஒரு நாயைத் தத்தெடுப்பதாக விளம்பரம் வேறு செய்தார்கள். தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் செல்லப் பிராணிகளையும் விலங்குகளையும் வைத்து பல காவியங்களை(!)ப் படைக்க வல்லவர் ராமநாராயணன் மட்டும்தான் என்பது தமிழ்கூறும் சினிமா உலகம் அறிந்ததே. அவர் பாணி செயற்கைத்தனமானது. இது ராமநாராயணன் படத்திற்கும் ஹாலிவுட் படத்திற்கும் இடையில் தொங்கி நிற்கிறது.

ஒரு விளம்பரம்...!?
மயில்சாமி வளர்க்கும் லேடி டாக்குடன் காதல் கொண்டு காரில் சல்சா செய்வது, சிபியின் மேலே படுத்து விளையாடுவதை பக்கத்துவீட்டு ஆண்டி வக்கிரமாக கற்பனை செய்வது போன்ற காட்சிகள் மிலிட்டரி நாயின் கம்பீரத்தையே குறைத்துவிடுகிறது. மிலிட்டரி / போலிஸ் நாய்கள் எவ்வாறு தயார் படுத்தப்படுகிறது என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இதுபோன்ற படங்களில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும்  முக்கியமானது. சூழ்நிலையைப் பொறுத்து மாறும் நாயின் முக பாவனைகள், அங்க அசைவுகள் எல்லாவற்றையும் நுட்பமாகப் படம்பிடித்திருக்க வேண்டாமா...?

ஒரு மிலிட்டரி ஆபிசரின் வீட்டில் வளரும் அந்த நாய் எதிர்பாராத விதமாக சிபியுடன் ஐக்கியமாகிறது. பொதுவாக நாய்களை வெறுக்கும் சிபி எந்த காரணத்திற்காக அந்த நாயுடன் இவ்வளவு அன்யோன்யமானார் என்பதை சொல்லவில்லை.சிபி செகண்ட் ஹீரோ என்பதால் அவரை இவ்வளவு சப்பையாக காட்டியிருக்க வேண்டுமா.? வில்லனிடம்" உன் தம்பியை வேணும் என்றே கொல்லவில்லை... அவனா செத்துட்டான். என் மனைவியை எங்கே ஒளிச்சி வச்சிருக்க" என  கெஞ்சும் போது உண்மையிலேயே அவர் போலிஸ்காரரா என்கிற சந்தேகம் வலுக்கிறது. கடைசியில் நாய் சாகும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சியில் கொஞ்சமாவது தன் மனைவி கடத்தப்பட்ட விசயத்தில் காண்பித்திருக்கலாம் சிபி..

(ஹீரோயின் பெயரை கூகுள்ள போட்டு தேடினப்போ கிடைச்சது..ஹி..ஹி உடனே ஃபிரேம் போட்டுட்டேன்.  அம்மணி தாராளமா நடிக்கிற டைப் தான் போல. இவிங்கதான் யூஸ் பண்ணிக்கல.)
அதுசரி, முழுவதும் மூடப்பட்ட, காற்று புகமுடியாத ஒரு சவப்பெட்டியில் ஆறுமணி நேரம் மூச்சு விடலாம் என்கிற அபத்தம் இருக்கட்டும், வெப் கேமராவில் மிகத்துல்லியமாக படம் தெரியுமளவுக்கு வெளிச்சம் ஏது..? அவ்வளவு கிளியராக வாய்ஸ் கேட்குமா..?  மண்ணில் புதைக்கப்பட்டப் பிறகும் அந்த மலையில் வெப் கேமரா இவ்வளவு தெளிவாக வேலை செய்கிறது என்பதே ஆச்சர்யம்தான். அந்த வில்லன் கோஷ்டி எதற்காக பெண்களைக் கடத்தி வெப் கேமரா பொருத்தி உயிரோடு புதைக்கிறார்கள் என்பதை கடைசி வரை சொல்லவே இல்லை.

பொதுவெளியில் பட்டப்பகலில் மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு வில்லன் குரூப் ஹீரோயினைக் கடத்துவது, போலீசைக் கண்டு ஓடுவது எல்லாமே செயற்கைத்தனமாக இருக்கிறது. அது எப்படி அச்சம்பவங்கள் நடக்கும் போது எந்த சலனமுமே இல்லாமல் மக்கள் போகிறார்கள் என்பது தெரியவில்லை. வில்லனாக வரும் பாலாஜி வேணுகோபால் ஆரம்பத்தில் கொடூர வில்லன் போல பில்டப் கொடுத்து  கடைசியில் நாயிக்குப் பயந்து ஓடும்போது அக்மார்க் காமடியனாகிறார்.

சிபிக்கு துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டால் சிறுவர்கள் போல பயப்படும் வினோத நோய் இருப்பதாக ஆரம்பத்தில் சொல்கிறார்கள்(அதை வில்லன் குரூப் கண்டுபிடிப்பதுதான் செம காமெடி). அதை வைத்து கிளைமாக்சில் ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள் எனப் பார்த்தால் வில்லன் கிண்டல் செய்வதோடு அவ்விசயம் முடிந்துவிடுகிறது.ஹீரோவை வில்லன் சுடும்போது குறுக்கே ஓடிவந்து குண்டுகளை தன் உடலில் வாங்கிக் கொள்ளும் எம்ஜியார் காலத்து டெக்னிக்கை எப்பப்பா விடப்போறீங்க..? நாய்க்குக் கூட அப்படி சீன் வைக்கணுமா..?

ஹீரோயின் யாரோ அருந்ததியாம். எந்தப்பக்கம் பார்த்தாலும் மொக்கையாகத்தான் இருக்கிறார். இவர்தான் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படத்தின் ஹீரோயினா..?

உள்ளே நுழையாதீர்கள். நாய்கள் இருக்கிறது.மீறி வந்தால் கடிச்சி வச்சிடும் என்பதின் குறியீடுதானே ' நாய்கள் ஜாக்கிரதை'..!  அதை நமக்குத்தான் சொல்கிறார்கள் போல. வித்தியாசமான முயற்சிதான். போரடிக்காமல் செல்லவேண்டும் என்பதற்காக நிறைய கத்தரி போட்டு இரண்டுமணி நேரத்திற்கும் குறைவாக எடிட் செய்திருக்கிறார்கள். அந்த விசயத்தில் ஓரளவு ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், காட்சிகள் மட்டுமல்ல இறுதியில் தன் எஜமானரைக் காப்பாற்ற உயிர்விடும் அந்த நாய் கூட மனதில் நிற்கவில்லை.



  

Thursday 20 November 2014

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவது எப்படி..?



ரே நாளில் உலக ஃபேமஸ் ஆவது எப்படி..? ரொம்ப சிம்பிளான விசயம்ங்க..

நம் சமூகத்தின் ஏதோ ஒரு சந்து பொந்தில் வாழும் விளிம்பு நிலை மனிதர் நீங்கள். யாருக்கும் உங்களைத் தெரியாது. தெரு நாய் கூட உங்களை மதிக்காது என வைத்துக்கொள்வோம்

ஆனால் ஒரே நாளில் இந்த உலகமே உங்களைப்பற்றி பேசும். சிறார்கள், மாணவர்கள் எல்லாம் "சார்" என்று மரியாதையோடும், பெரியவர்கள் எல்லாம் "தம்பி" என்று பாசத்துடனும் அழைப்பார்கள். மாணவ சமுதாயமே உங்கள் பின்னால் திரளும். ஏழைகளுக்கு அடுத்த எம்ஜியார் நீங்கள் தான். அரசு ஊழியர்கள் எல்லோரும் கையெடுத்துக் கும்பிடுவார்கள். ஊடகங்கள்,தொலைக்காட்சி எல்லாம் உங்களைப் பற்றியே பேசும். அரசியல்வாதிகளுக்கும்,  கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் நீங்க சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள்.

இப்படியெல்லாம் நடக்கணும்னா ஏதாவது புரட்சி செய்யணும் அல்லது போராட்டம் நடத்தனும் அல்லது தீவிரவாதியாக மாறணும் அப்படித்தானே... என நீங்கள் கேட்க வருவது புரிகிறது. அதுதான் இல்லை. நீங்கள் செய்யவேண்டியது ஒன்னே ஒன்னுதான்... வாயால வடை சுடனும்..!

தெளிவாகச் சொல்கிறேன். அக்கம் பக்கத்தில் ஏதேனும் அநீதிகள் நடப்பதுபோல் உங்கள் ஞானக் கண்களுக்குத் தெரிந்தால் உடனே அதை பேஸ்புக்கில் ஸ்டேடஸ் ஆக பதியுங்கள். அல்லது சமூகத்தை திருத்துகிறேன் என்று ஏதாவது நாலு ஐடியா கொடுங்கள். உடனே உங்கள் பெயர் இந்தியா முழுவதும் பரவும்.

இந்த ரோடு ஏன் இப்படி குண்டும் குழியா இருக்கு தெரியுமா...? ரோடு போடுற கான்ட்ராக்டர் சரியில்லை. இந்த பைப்பில் ஏன் தண்ணீர் வரவில்லை தெரியுமா..? தண்ணீர் டேங் பைப்பை இன்னும் யாரும் திறக்கல.. தெருவிளக்கு ஏன் எரியமாட்டேங்குது தெரியுமா..லைட் பியூஸாகி விட்டது. இந்த பஸ் ஏன் ஆக்சிடெண்ட் ஆகுது தெரியுமா..?  டிரைவர் சரியில்லை. அதனால் தினமும் டியூட்டிக்கு செல்லும்முன் ஒரு மருத்துவரை வைத்து ஓட்டுனர்களை சோதிக்கணும். இப்படிப்பட்ட சமூக விழிப்புணர்வு ஐடியாக்களை, நாலு பேரைக் கூப்பிட்டு தெரு முக்குல கூட்டம் போட்டு சொல்லுங்க. அப்புறம் பாருங்கள் .

எல்லோரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி,'இப்படி ஒரு அறிவாளியைத்தான் நாங்க தேடிகிட்டு இருந்தோம். இவ்வளவு நாளா நீ எங்க இருந்த ராசா...' என்று உங்களை ஆரத்தழுவிக் கொள்வார்கள். 'இம்பூட்டு  நாளா மூடிக்கிடந்த எங்கள் அறிவுக்கண்ணை சாவி இல்லாமலே திறந்து விட்டியே தம்பீ...'  என்று பெக்கர் முதல் கலெக்டர் வரை உங்கள் காலில் விழுவார்கள். 'இந்தத் தம்பி சொன்னது என்னிக்கு நடக்குதோ அன்னிக்குத் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைச்ச மாதிரி..'  என்று சொச்ச நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் தியாகிகள் எல்லாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

இவ்வளவு ஏன் நீங்கள் பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது.

என்ன...சொந்த மானிட்டராக இருந்தாலும் பரவாயில்லை, பொளிச்னு துப்பிடலாம்னு தோணுமே. எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஜெய்ஹிந்த்-2 படத்தை பார்த்தபோது...! .


ஒரு நாய் அனாதையா செத்துக்கிடக்கிறத பார்த்தவுடனையே அர்ஜுனுக்கு ஜென்டில்மேன், முதல்வன் படம் ஞாபகத்துக்கு வந்திடும். உடனே "மனுசனா பொறந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்" னு சொல்லிட்டு கிளம்புவாரு. ஏதோ புரட்சி பண்ணப்போறாரு என்று பார்த்தால் இணையத்துல எதைஎதையோ தேடுவாரு. முடிவில ஹீரோயின் சைலண்டா வந்து 'இது மட்டும் நடந்திருச்சுன்னா இந்தியா வல்லரசு ஆகிடும்' என்பாங்க.

ரமணா பாணியில ஏதோ நடக்கப் போகுதுன்னு சீட் நுனி வரை நகர்ந்து  சீரியஸா கவனிச்சா, பிரஸ்ஸை கூப்பிட்டு, "தனியார் பள்ளிகளை எல்லாம் தேசியமயமாக்கனும்" னு வடை சுடுவாரு. அதற்கடுத்து நடக்கும் பாருங்க கொடுமை....! அவர் சொன்னது இந்தியா பூரா பரவி எல்லோரும் அபிமன்யு சொன்னது மட்டும் நடந்துட்டா இந்தியா அப்படியாகிடும்..இப்படியாகிடும்னு பில்டப் கொடுப்பாணுக.. இவ்வளவு நாளா எல்லோரும் அடிமுட்டாளா இருந்திருக்கோம் போல. அட இதைக்கூட மன்னித்து விடலாம். ஜெயில்ல இரண்டு கைதிகள்  அர்ஜுனைப் பார்த்து,"டிவியில பாத்தேன் தலைவா. சோக்கா பேசின..","தம்பி நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் தம்பி.."என்று சொல்லும்போது வரும் பாருங்க ஒரு கோபம்.. தட் அவரே குண்டு வைப்பாராம் அவரே எடுப்பாராம் மொமென்ட்..!

ஏம்பா இந்தியாவில உள்ளவங்க எல்லாம் இந்த அளவுக்குக் கூட சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா.. தினமும் டிவியில விவாதம் என்கிற பெயரில் ஆளுக்கொரு ஐடியா சொல்றாங்க.. அவர்கள் எல்லாம் உலக பேமஸ் ஆகிடுறாங்களா என்ன..? அப்படிப் பார்த்தா நீயா நானா கோபியும் மனுஷ்யப் புத்திரனும் இந்நேரம் ஐநா சபை வரை போயிருக்க மாட்டாங்களா.. என்ன லூசுத்தனமான கான்செப்ட் அது..?  டிராபிக் ராமசாமிக்கே ஃபைனப் போட்டு ஆஃப் பன்ற ஊருய்யா இது.

எப்பவோ போட்ட டீ -யை இப்போ வந்து எதுக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்துறேன்னு கேக்கிறீங்களா.. ?  இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன். "ஜெய்ஹிந்த்-2 படத்தை பிரதமருக்கு போட்டுக் காண்பிப்பேன்.." என்று அண்ணாத்தே அர்ஜூன் பேட்டி  கொடுத்திருந்தார்.  அதனாலதான் இவ்வளவு ஆத்த வேண்டியிருக்கு.

பாவம் அவரே பேக்கேஜ் டூர்ல ஒவ்வொரு நாடா சுத்திப் பாக்கப் போயிருக்கார். அதிலும் கேமராவைத் தேடித்தேடி போஸ் கொடுத்தே டயர்டா போயி வருவாரு. வந்த உடனே படத்தை போட்டு காண்பித்து ஏன்யா அவரை இன்னும் டயர்டா ஆக்கணும்..?


ஜெய்ஹிந்த் வெளிவந்த 1994 ஆம் வருடத்தில் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்ப எந்தப் படமும் சிக்காததால் வேறு வழியில்லாமல் அப்படம் தேர்வானது. வித்தியாசமான கவுண்டமணி-செந்தில் காமெடி டிராக், ரகளையான(ஹி..ஹி..) ரஞ்சிதா என்கிற கமர்சியல் கலவைகள் நிறைந்திருந்தாலும் patriotism என்கிற விஷயம் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தது பாராட்டும்படி இருந்தது . எப்படா இது மண்டையப் போடும் என்று எரிச்சல் ஏற்படுத்தும் மனோரமாவின் போர்சனைத் தவிர படம் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஜெய்ஹிந்த்-2 வில் கான்செப்ட்டும் காமெடியும் மொக்கை, ஹீரோயின் சப்பை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சுவாரஸ்யமாகப் போகவேண்டிய திரைக்கதையை இப்படி தலைகீழாகத் திருப்பி  சொதப்பியிருக்கிறார்களே..!

திரைக்கதையைப் பற்றி அவ்வளவு நுட்பமாக எனக்குத் தெரியாது. இணையத்தில் உள்ள திரைக்கதைப் புலிகள் யாராவது சொல்லட்டும். இந்தப் படத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் நடக்கிறது. அதைப் பின்னித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்

1. தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பீஸ் கட்ட முடியாமல் ஒரு குடும்பம் தற்கொலை செய்துக் கொள்கிறது.

2. அதனால் பாதிக்கப்பட்ட அர்ஜுன் பிரஸ்மீட் வைத்து ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறார். நாடு முழுதும் அது காட்டுத்தீயாகப்(!) பரவுகிறது.

3. நீதி கிடைக்காததால் வெளிநாட்டில் பயிலும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளைக் கடத்துகிறார்.

இம்மூன்று சம்பவங்களும் இதே வரிசைப்படி நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அப்படியே ரிவர்ஸில் அமைத்திருந்தால்...!

1. வெளிநாட்டில் படிக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளை அர்ஜுன் கடத்துகிறார். அது இந்தியா முழுமையும் பரபரப்பான செய்தியாகிறது. யார் கடத்தினார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்று மீடியாக்கள் அலசுகிறது.

2.கடத்திய அர்ஜுன் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இந்தியாவே அந்த பிரஸ்மீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

3. எதற்காகக் கடத்தினார் என்று சொல்வதற்கு முன், ஒரு குடும்பம் தற்கொலை செய்துகொள்ளும் பிளாஸ்பேக்கை அவிழ்க்கிறார். அதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். அதன்பிறகு அந்த தேசியமயமாக்கல், இன்னபிற சமாச்சாரங்களை எல்லாம் சொல்கிறார்.

அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுபோல் காண்பித்தால், சொல்ல வந்த விஷயம் இன்னும் வீரியமாக இருக்கும், படமும் விறுவிறுப்பாக இருக்கும். ரமணா படத்தின் திரைக்கதையும் கிட்டத்தட்ட அப்படிப் பட்டதுதானே..


ஒரு ஏழ்மையான குடும்பம். அவர்கள் படிக்கும் காலத்தில் வசதிகள் இல்லாததால் படிப்பறிவு இல்லாமல் கூலிவேலை செய்துவருகின்றனர் . அதனால் தன் ஒரே மகளை எப்படியாவது கஷ்டப்பட்டு தனியார் பள்ளியில் படிக்க வைத்து பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பவேண்டும் என்று அக்குழந்தையின் அப்பா ஆசைப்படுகிறார். அதற்காக கண்டவன் காலில் விழுந்து (LKG அட்மிசனுக்காக!) பணம் புரட்டுகிறார். பணப் பற்றாக்குறையால் தன்  கிட்னியையே விற்கிறார்.அப்படியும் பணம் பற்றாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். (அந்தக் குழந்தை பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைத்தால்தான் படிப்பேன் என அடம்பிடித்ததா என்ன..அதை எதுக்குய்யா கொல்லனும்..?.) ஜென்டில்மேன் படத்தின் பிளாஸ்பேக் ஞாபகம் வருது இல்லையா..? 

இந்தப் படத்தில் அர்ஜுன் சொல்லும் அந்த 'கான்செப்ட்' ,  நடைமுறை சாத்தியமில்லை. அதனால் அதை விட்டுவிடுவோம். ஆனால் அந்த சோக சம்பவம் மூலம் அர்ஜுன் என்ன சொல்ல வருகிறார்..?. தனியார் பள்ளியில்தான் நல்ல கல்வி கிடைக்கிறது. சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்காமல் தனியார் பள்ளியில் சேர்த்தால்தான் உயர்ந்த உத்தியோகத்துக்கு போக முடியும். அதற்காக கிட்னியைக் கூட விற்கலாம்.

ஒருவேளை, அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோர் இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்...? பிரைவேட் ஸ்கூல் LKG  சீட்டுக்காக ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது என்றால் நாமதான் அறிவுகெட்ட தனமா நம்ம பிள்ளையை கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைத்துவிட்டோம் போல என நினைக்கத் தோன்றாதா ?

இப்படி ஒரு மொக்கை கான்செப்ட் உள்ள படத்தைப் போட்டுக் காட்டுறேன் என்று  பிரதமர் ஆபிஸ் பக்கம் போனால் செக்யூரிட்டியே காரித்துப்பிடுவான்.



Monday 17 November 2014

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா தலித் சமூகத்தினர்...?


சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் புரட்சி கார்டூனிஸ்ட் என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டு இணைய ரவுடியாக வலம்வரும் கார்டூனிஸ்ட் பாலா என்பவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலைஞரின் காலைப் பிடித்துத் தொங்குவது போல கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார்...

இங்கு 'இணைய ரவுடி' என்கிற பதத்தை எதற்காக பயன்படுத்தியிருக்கிறேன் என்பது  அவரின் பேஸ்புக் டைம்லைனோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  பேஸ்புக் உள்ளிட்ட இணைய சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களை நக்கடித்து நிறைய நிலைத்தகவல்கள், போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அது இணையம் உருவாக்கிக் கொடுத்திருக்கும் கட்டற்ற எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு.  

வெளிநாட்டில் இருந்துகொண்டு தன் சுய விவரங்கள் எதையும் வெளிப்படுத்தாத இணையப் போராளிகள்  இதில் கைத்தேர்ந்தவர்கள். இந்திய அரசியல் தலைவர்களை 'மிக மிக நாகரிகமான' முறையில் அவர்கள் விமர்சிக்கும் முறை, எதையும் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லும் நம்மையே சில நேரங்களில் சூடேற்றிவிடும். அவர்களுக்கென்று தனி கூட்டமே இருக்கும். " நெத்தியடி... அருமை நண்பரே... எவ்வளவு கழுவி ஊத்தினாலும் அவங்களுக்கு புத்தி வராது தலைவா ...." இது மாதிரி கமெண்டுகள் பொங்கி வழியும். சரி நம் தரப்பு நியாயங்களை சொல்லலாம் என்று சில நாகரிகமான எதிர்வினைகளை மேற்கொண்டால் அவ்வளவுதான். ஏழு தலைமுறையை இழுத்து திட்டுவார்கள். அந்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்து கொள்ளும். அதையும் சமாளித்துத் தொடர்ந்தால் உடனே நம்மை பிளாக் செய்து விடுவார்கள். எதிர்கருத்துகளை ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ளத் தயங்கும் அவ்வகையான இணையப் போராளிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை இந்த கார்டூனிஸ்ட் பாலா .

தமிழ் பேஸ்புக்கை பொறுத்த வரையில் அதிகம் பேரை பிளாக் செய்தவர்களில் முதலில் இருப்பவர் இந்த பாலாவாகத்தான் இருக்கும். பிளாக் செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நியாயமான எதிர்கருத்துகளை நாகரிகமான முறையில் மேற்கொண்டவர்கள். பிளாக் செய்யப்பட பிறகு " இதைத்தான் பாலாவிடம் கேட்டேன்.. உடனே என்னை பிளாக் செய்துவிட்டார்.." என்று பலர் நிலைத்தகவல் பதிந்ததை ஆரம்பத்திலிருந்து பேஸ்புக்கை கவனித்து வருபவர்கள் உணரமுடியும். அவர் பணிபுரியும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் அந்த பிளாக் லிஸ்டில் உள்ளடக்கம் என்பது பாலாவின் நேர்மைக்கு மற்றொரு சான்று.

ஊடக செய்தி வடிவங்களில் கார்ட்டூன் மிகப் பலம் வாய்ந்தது. நூறு பேர் சேர்ந்து உரக்கச்சொல்லி புரியவைக்கும் ஓர் செய்தியை ஒரே ஒரு கார்ட்டூன் தெளிவாகச் சொல்லிவிடும். அதன் பலமே இவரை இணைய ரவுடியாக வளம் வர செய்திருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு என்று ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. அதை தனக்கான எல்லையாக அவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, என் எல்லையை யாரும் நிர்ணயிக்க முடியாது என்கிற திமிர்த்தனத்தில் நாகரிகத்தின் எல்லையை கடந்துவிடுபவர்களைத்தான் இணைய ரவுடி என குறிப்பிட்டுள்ளேன்.

சரி விசயத்திற்கு வருவோம்.

திருமாவை கலைஞரின் காலைப்பிடித்துத் தொங்குவது போல் கார்ட்டூன் போட்டு கேவலப் படுத்துகிறார் இந்த பாலா. உடனே அவர் நட்பில் இருக்கும் சிலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். அதற்கெல்லாம் மதிப்பளிப்பவாரா இந்த பாலா..? பிறகு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொறுப்பில் இருக்கும், பேஸ்புக்கிலும் ஊடகங்களிலும் இயங்கி வரும் ஆளூர் ஷானவாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த கார்ட்டூனை நீக்கும்படி கேட்கிறார். இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகியிருக்கும் பாலா இதெற்கெல்லாம் செவி சாய்ப்பவரா என்ன .? உடனே அவர் டைம் லைனில் ஆளூர் ஷானவாஸ்-சை தன் வழக்கமான நக்கல் பாணியில் கண்டித்து ஒரு நிலைத்தகவல் பதிகிறார். அதனைத் தொடர்ந்து கண்டனங்களும் வசவுகளும் அவர் டைம்லைனில் வரிசை கட்டுகிறது.



அதன் பிறகுதான் அவருள்ளே ஒளிந்திருக்கும் சாதிப்பூனை எட்டிப் பார்க்கிறது. "தலித் என்றால் விமர்சனம் செய்யக்கூடாதா..தலித்தை விமர்சனம் செய்தால் மட்டும் இவர்களுக்கு எதற்கு கோபம் வருகிறது...  தலித் கேடயத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இவர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கப்படாதா .." என்று வரிசையாக நிலைத்தகவல்கள் பதிந்து ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான தன் வக்கிர கணைகளை வீசிக்கொண்டிருக்கிறார்.

அய்யா இணைய ரவுடியே... தலித் மக்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று யார் சொன்னது...?  தலித் சமூகத்தினர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா..? அல்லது எதிர்வினையாற்றுபவர்கள் யாராவது ஒருவர், ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று கேட்டார்களா..? அப்படி இல்லாதபோது தலித் தலித் என்று வரிக்கு வரி எழுதி எதற்காக அச்சமூகத்தின் வெந்த புண்களில் வேல் பாய்ச்ச வேண்டும்..?

உங்கள் வழிக்கே வருகிறேன்.  ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் ஒரு தலித் தான். தலைவர் கூட ராசா தலித் என்பதால் தான் அவர்மீது வழக்கு போடுகிறார்கள் என்று அறிக்கைவிட்டு பின்பு வாங்கிக் கட்டிக்கொண்டது நாடே அறியும். அப்படிப்பட்ட ராசாவுக்கு எதிராக இணையத்தில் எவ்வளவு கேவலமான விமர்சனங்கள் வந்தன..!. அருவருக்கத்தக்க போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் வந்தன...! ஏன் நீங்களே எவ்வளவு நக்கலடித்து கார்ட்டூன்கள் வரைந்து கலைஞர் எதிர்ப்பாளர்களின் லைக்கை லம்பாக அள்ளினீர்கள். அப்போது எவராவது வந்து ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று உங்களுடன் வாதம் செய்தார்கள்..?

இதே திருமாவளவன் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் இணையத்தில் வரவில்லையா..? கலைஞரின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைக்குலுக்கிவிட்டு பிறகு தமிழ்நாடு திரும்பியவுடன் ராஜபக்சேவை எதிர்த்து அறிக்கை விட்டபோது இணையத்தில் திருமாவளவனை துவைத்து எடுக்கவில்லையா...? அப்போதெல்லாம் ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வரிந்துக் கட்டிக்கொண்டு வந்தார்களா...?

அதற்கெல்லாம் வராத எதிர்வினைகள் இந்தக் கார்ட்டூனுக்கு வருகிறது என்றால், அச்சமூகத்தின் வலியை புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நீயெல்லாம் என்னய்யா பிரபல கார்டூனிஸ்ட்.?.

அவர்கள் எதிர்வினையாற்றிய விதம் தவறுதான். ஆனால் அவர்கள் கோபத்தின் பின்னால் உள்ள வலியைப் புரிந்துகொள்ளாத உம்மைப் போன்றவர்கள் சமூகக் கருத்தைப் பரப்புகிறேன் என கிளம்புவது வேடிக்கையாக இல்லையா..? குறைந்த பட்சம், நான் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்று ஒரு விளக்கப் பதிவாவது உன்னால் போடமுடிகிறதா...?

தலித்தையோ அல்லது சிறுபார்மையினரையோ விமர்சிக்கும் முன்,கொஞ்சம் சென்சிடிவான விசயமாச்சே.. அரசியல் ரீதியான விமர்சனமாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதை உணராத நீயெல்லாம் என்னய்யா ஜெர்னலிஸ்ட்..?

ஒரு தலைமுறைக்கு முன்பு விழிப்புணர்வும் படிப்பறிவும் மட்டுமல்லாது  அதற்கான வழிகாட்டுதலும் தலைவனும் இல்லாமல் ஒடுங்கி வாழ்ந்த சமூகம் அது. பெரியார், அம்பேத்கார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் சீரிய முயற்சியினால் ஏதோ இப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைத்து உயரிய பதவிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களில் பெரும்பகுதியினர் இன்னமும் ஆதிக்கசாதியினரின் அச்சுறுத்தலுக்கு அடங்கித்தான் வாழவேண்டிய சூழலில் இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஓர் இயக்கத்தை உருவாக்கி அதற்கு தலைவனாக திருமாவளவன் இருக்கிறார். அவரின் தலைமையை ஒட்டுமொத்த தலித் சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சில அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி அவர் மீதுள்ள மரியாதை எவரிடத்திலும் குறையவில்லை.

மீண்டும் அந்த இணைய ரவுடியைப் பார்த்து கேட்கிறேன். திருமாவளவன் கலைஞரின் காலைப் பிடிப்பது போல வரைந்த உனது கார்ட்டூன் எந்த உள்நோக்கமும் இல்லாதது என்றால், அதற்கு வரும் எதிர்வினைகளை அவரது கட்சி சார்ந்த கண்டனங்களாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.. அதை விடுத்து தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாதா... தலித் என்றால் பெரிய கொம்பா என்கிற ரீதியில் தொடரும் உமது பதிவுகள், உண்மையிலேயே அச்சமூகத்தினரை கேவலப்படுத்தும் நோக்கிலே அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறதே..!

இன்னமும் அவர்களின் உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் ஒரு தலித்தாகப் பிறந்து பாருங்கள். அப்போதாவது அவர்களின் வலி உங்களுக்குப் புரியும்.

ஒரு பின் குறிப்பு.

பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் புலம்பித்தள்ளிய அந்தப் பதிவில் சென்று.." தலித்..தலித் என்று வரிக்கு இரண்டுதடவை நீங்கதானே சார் சொல்றீங்க..தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாது என்று யார் சொன்னது.. ஆ. ராசா மீது வராத விமர்சனமா..? அப்போது எத்தனை தலித்துகள் கண்டனம் தெரிவித்தனர்....." என்கிற ரீதியில் மிகுந்த மரியாதையாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். இந்தப் பதிவு எழுதுவதற்கு முன்பு வரை அவருடன் தொடர்பில் இருந்தேன். எழுதி முடிக்கும் தருவாயில் சென்று பார்த்தால் அன்போடு என்னை பிளாக் செய்திருக்கிறார். மிகுந்த மரியாதையுடன் கமெண்ட் போட்டால் அவருக்கு பிடிக்காது போல.. என்னை எல்லாம் அடிச்சி நீங்க இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது பாலா சார்.

Saturday 15 November 2014

திருடன் - போலிஸ்

 
ன் அப்பாவை கொலை செய்தவர்களை பழிவாங்கும் ஒரு ஹீரோவின் கதைதான்  திருடன் போலிஸ். அப்படியானால் துப்பாக்கி,அரிவாள், ரத்தம் ,வெறி ,பழிக்கு பழி என படம் முழுவதும் சீரியஸாக போகும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. இது வேறு மாதிரி. சீரியசான விசயத்தை  நகைச்சுவை கலந்து  சொல்லியிருக்கிறார்கள்.

கடமை தவறாத, கண்ணியமான,நேர்மையான ஹெட் கான்ஸ்டபில் ராஜேஷ்-ரேணுகா தம்பதியின் ஒரே மகன் தினேஷ். படித்து முடித்துவிட்டு வேலைக்கு போகாத வெட்டி ஆபிசர். இவர்கள் குடியிருக்கும் போலிஸ் காலனியில் ராஜேசின் உயர் அதிகாரியான ஏ.சி யின் குடும்பமும் வசிக்கிறது. அவர்களின் ஒரே மகன் நிதின் சத்யா. இவரும் வெட்டி ஆபிசர்தான். ஆனால் கடத்தல், ரேப் என அத்தனை பொரிக்கித்தனத்தையும் தன் அப்பாவின் அதிகாரத்தை பயன்படுத்தி செய்து வருபவர்.

இரண்டு வெட்டி ஆபிசர்களும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். அதனால் அப்பாக்களுக்குள்ளும் மோதல் வருகிறது. ஒரு கட்டத்தில் நிதின் சத்யாவின் அப்பா, ராஜேசை மோசமாக திட்டிவிட, பதிலுக்கு அவரும் நிதின் சத்யாவின் அனைத்து குற்றங்களுக்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் மிரட்டுகிறார்.

அதனால் தனக்கு கீழே வேலைப்பார்க்கும் ராஜேசை கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுகிறார் ஏ.சி. கொலையுண்ட ராஜேசின் வேலை, மகனான தினேசுக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் வேலைபார்க்கும் தினேஷ் ஒரு கட்டத்தில் தன் அப்பாவின் அருமையை உணர்கிறார். தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறார். அதுவும் கத்தியின்றி ரத்தமின்றி அவர் எப்படி பழிவாங்கினார் என்பதே படத்தின் முடிவு.

ஒரு காலனி குடியிருப்பு ,ஒரு போலிஸ் நிலையம், இரண்டு வீதிகள், கொடைக்கானலில் ஒருபாட்டு, VGP யில் ஒரு பாட்டு  என முடிந்தவரை அடக்கி வாசித்திருக்கிறார் தயாரிப்பாளர் SP.சரண். கலைப்படங்கள் எடுத்து கையை சுட்டுக்கொண்ட அனுபவம் போல ..:-)

ஹீரோவின் கேரக்டர் அரட்டல், உருட்டல், மிரட்டல் எதுவும் இல்லாததால் அப்படியே அட்டகத்தி தினேசுக்கு ஒத்துப் போகிறது. இன்னும் குக்கூ படத்தின் தாக்கம் அவரிடமிருந்து போகவில்லை போல.. சில இடங்களில் அதே மேனரிசம். கோபம், சோகம், சந்தோசம் என்பதற்கான முகபாவனைகள் இன்னும் அவருக்கு தெளிவாக வரவில்லை. ஆனால் இந்தப்படத்தில் அதற்கான அவசியங்கள் அவ்வளவாக இல்லாததால் அது அவ்வளவு பெரிய குறையாக தெரியவில்லை.

தினேசின் நண்பனாக கனா காணும் காலங்கள் பால சரவணன். இவர்தான் இந்தப்படத்தில் காமெடியனா என ஆரம்பத்தில் நினைக்கத் தோன்றினாலும் போகப்போக நம்மோடு ஒன்றிவிடுகிறார். உண்மையிலேயே ஓவர் சவுண்டு விடாமல், மொக்கைப் போடாமல் இயல்பாக இருக்கிறது இவரது காமெடி.( ஆத்தாடி...  நல்லவேளை இந்தப் படத்தில் சூரி இல்லை...).    ஒரு டிபிகல் கான்ஸ்டபில் மேலதிகாரிகளால் என்னவெல்லாம் கொடுமை அனுபவிக்க வேண்டியிருக்கியது என்பதை இவர் மூலம் நகைச்சுவையாக காட்டியிருப்பது அருமை.


படத்தில் எல்லோரையும் ஓவர் டேக் செய்பவர்  நான் கடவுள் ராஜேந்திரன் (இனி இவர் திருடன் போலிஸ் ராஜேந்திரன் என அழைக்கப்படுபவராக.!). பொதுவாக வில்லனை காமெடியனாக காட்டும் விபரீத முயற்சியை சுந்தர்.சி. தான் செய்வார். இதில் இதுவரை கொடூர வில்லனாக நடித்து வந்த ராஜேந்திரனை காமெடியனாக காட்ட முயற்சித்து அதில் முழு வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். இவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும், பேசும் வசனத்திற்கும் தியேட்டரே குலுங்குவது அதற்கு சாட்சி. அதிலும் பெண் வேடமிட்டு வரும் சில காட்சிகளில் எந்த ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.

ஐஸ்வர்யாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. 'என்னோடு வா' பாடலுக்கு திடீரென்று விஜய் சேதுபதி வந்து செம ஆட்டம் போடுகிறார். கமிசனராக ஆடுகளம் நரேன். மிடுக்கான போலிஸ் அதிகாரி வேடம் அப்படியே பொருந்துகிறது.

என்கவுண்டர் செய்வதை ஏதோ டிபன் ஆர்டர் பண்ணுவது போல் பேசிக்கொள்வது, அதிலும் இறுதியில் கமிசனர்,ஏ.சி யையே அசால்டாக என்கவுண்டர் பண்ண சொல்வது என்று ஒரு சில அபத்தங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறக்கடித்து விடுகிறது படம் நெடுக விரவியிருக்கும் மெல்லிய நகைச்சுவை.


ராஜேந்திரன் சகாக்கள் செல்லும் இடமெல்லாம் எதேச்சையாக தினேஷ் என்ட்ரி கொடுப்பது, அதை அவர்கள் தங்களைத்தான் பாலோ பண்ணி வருகிறான் என்று ஓடி ஒளிவது, இரவானால் அப்பாவின் நினைவால் தினேஷ் புலப்புவது அதனால் பாலா தெறித்து ஓடுவது, க்ளைமாக்சில் மூவரையும் கட்டிவைத்துவிட்டு தினேஷ் செய்யும் அலப்பரைகள் என்று சிரிப்பதற்கு நிறைய கட்சிகள் இருக்கிறது.

லாஜிக் எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு  ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.   



Saturday 8 November 2014

ஒரு ஊர்ல ரெண்டு கூஜா

க்சுவலா என்ன நடந்திருக்கும் என்றால், இயக்குநர் ஆர்.கண்ணன் கிண்டி அல்லது அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட் பக்கமா போயிருப்பார் . அங்கே யாரோ ஒருத்தர் அழுக்கு சட்டையோடு சொறிபிடித்த கையோடு எதிரில் வந்திருப்பார். என்ன ஆச்சு.. எங்க வேலை பாக்குறீங்க என கேட்டிருப்பார் . அதற்கு அவர் பிளேட்டிங் பன்ற கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லியிருப்பார் . அப்படி என்றால் உன் கரங்கள் சொறிபிடிக்க காரணம் அந்த பிளேட்டிங் ப்ராசஸ் தானா.. இது போதும் எனக்கு. இதை வச்சு கதையை டெவலப் பண்ணி சமூகத்தில மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துறேன் பார் என்று கிளம்பி கடைசியில் நம்மை வெறிபிடிக்க வைத்திருக்கார் இயக்குநர் .

'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' என்கிற டைட்டிலுக்கு கீழே விமலும் சூரியும் கைக்கோர்த்து போஸ் கொடுக்கும் போதே உசாராயிருக்கணும். அதில் ரெண்டாவது ராஜா சூரியாகத்தான் இருக்கும் என்கிற டவுட் மைல்டா ஆரம்பத்திலேயே இருக்கத்தான் செய்தது. ஏற்கனவே பட்டையை கெளப்பனும் பாண்டியாவில் சட்டையைக் கிழிக்காத குறையாக வெளியே வந்த அனுபவம் இருந்தாலும், போஸ்டரின் மொத்தப் பிரதேசத்தையும்  பிரியா ஆனந்தின் மத்திய பிரதேசம் கவர் பண்ணியிருந்ததால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை.

ஒரு ஹீரோவுக்கு இணையாக சூரியை களமிறக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதா என்ன ..? வடிவேலுவும் சந்தானமும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து தொலைவதனால் என்னவோ கூட்டத்தோடு வருபவர்கள் எல்லாம் சோலோ காமெடி பண்ணுவதை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. வடிவேல்,சந்தானம் அளவுக்கு படத்தின் மொத்த காமெடியையும் சுமக்கும் அளவுக்கு சூரி எல்லாம் ஒர்த் கிடையாதுய்யா.. அதிலும் அவர் பேசுவது மதுரை பாசையாம்( யார் சொன்னா..? பூஜை படத்தில் அவரே சொல்லிக்கொள்வார்). கஞ்சா கருப்பு அளவுக்கு கூட பேசவரவில்லை. நகைச்சுவை நடிகர்களுக்கு பாடி லாங்குவேஜ் மிக முக்கியம். அல்லது டைமிங் காமடியாவது வரவேண்டும். எதுவேமே இல்லாமல் எந்த தைரியத்தில் இதுபோன்ற காமெடியன்களை நம்பி களம் இறங்குகிறார்களோ தெரியவில்லை..

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தில் சமகால தமிழ் சினிமாவின் டெம்பிளேட்  வெட்டி ஆபிசர்களாக விமலும் சூரியும். சூரியின் காதலியை ரயிலில் கடத்திக்கொண்டு செல்ல விமலும் சூரியும் திட்டம் போடுகிறார்கள். கடைசியில் கடத்தல் கைகூடாமல் இருவர் மட்டும் ரயிலில் தப்பிக்கிறார்கள். டாக்டரான பிரியா ஆனந்தை ரயில் பயணத்தில் சந்தித்து காதல் கொள்கிறார் விமல். எதிர்பாராத விதமாக பிரியா ஆனந்தை ஒருவன் கொல்ல முயற்சிக்க, விமல் அவரைக் காப்பாற்றுகிறார்.

அவன் எதற்காக கொல்ல வந்தான் என்பது பிளாஸ்பேக்காக விரிகிறது. மருத்துவ முகாமிற்காக கிராமத்திற்கு செல்லும் டாக்டர் பிரியா ஆனந்த், அவரது தோழி வேலைபார்க்கும் ஸ்டீல் இண்டஸ்ட்ரியில் போதுமான பாதுகாப்பு, தற்காப்பு வசதிகள் இல்லாமல் அங்கு வேலைபார்ப்பவர்கள் ஒவ்வொருவராக நோய் தாக்கி இறந்து போகின்றனர் என்பதை கண்டறிகிறார். அதில் உச்சமாக தன் தோழியே அத்தொழிற்சாலையில் நடக்கும் விபத்து ஒன்றில் இறந்துவிட வெகுண்டெழுகிறார் பிரியா ஆனந்த். தனி மனுசியாக அனைத்து ஆதாரங்களையும் திரட்டி அத்தொழிற்சாலையின் முதலாளி நாசருக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். இறுதியில் யார் வென்றார்கள்...தொழிலாளிகளுக்கு நீதி கிடைத்ததா ... என்பதே முடிவு.  

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கியவரா இந்த கண்ணன்...? இரண்டு படங்களிலும் சந்தானம் காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்குமே.. ஏன் இந்தப் படத்தில் இப்படியொரு வறட்சி..? காட்சியமைப்பு, வசனம், நடிப்பு எதிலுமே காமெடி எடுபடவில்லை சாரே.. அதிலும் முதல் பாதி முழுவதும் சூரியை நம்பியே நகர்கிறது .அவர் முகத்திலோ காமடிக்கான எந்த ரியாக்சனையும் காணோம். இவர் காமெடியாக எதையாவது முயற்சி பண்ணும்போது சும்மா இருடா என்று அதையும் தடுத்து விடுகிறார் விமல். தம்பி ராமையா , சிங்கமுத்து இருந்தும் கூட காமெடிப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்தப்படத்தில் இயக்குனர் சொல்ல வந்த விஷயம் என்னவோ சமூக அக்கறை நிறைந்ததுதான். ஆனால் அதை எப்படி சொல்வது என்பதில்தான் குழம்பியிருக்கிறார். தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, மாசுபடும் சுற்றுச்சூழல் இவைகளைப் பற்றிப் பேச நம் கண் முன்னே கூடங்குளம் அணுமின் நிலையம் என்கிற உயிர்ப்பறிக்கும் உதாரணம் இருக்கிறதே. மீத்தேன் எதிர்ப்பு அரசியலை விட அணுமின் எதிர்ப்பு பல மடங்கு வீரியம் உள்ள விசயமாச்சே..

அதைவிட்டுவிட்டு ஸ்டீல் ரோல் மில்லை காண்பிக்கிறார்கள் . நாலைந்து துருப்பிடித்த லேத் மெசினை காண்பிக்கிறார்கள். அதில் எதிலும் நம்பகத் தன்மை இல்லை. துருப்பிடித்த ஒரு மேனுவல் லேத் மெசின் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு என்கிறார்கள். பிரியா ஆனந்தின் தோழியின் கை ஒரு பழைய லேத் மெசினுள் மாட்டிக் கொள்கிறது. உடனே பிரியா ஆனந்து அந்த மெசினை உடைத்து எடுங்கள் என்கிறார். உடைப்பதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை. ஒவ்வொன்றாக கழட்டித்தான் எடுக்க முடியும் என்கிறார் மேனேஜர். ஏனுங்க உடைத்தெடுப்பதற்கு  அது என்ன மரத்திலேயா செய்திருக்கிறார்கள்...?

கெமிக்கல் பாக்டரியினால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி பேச முயன்றிருக்கிறார்கள். போபால் விசவாயு தாக்குதல்களை எல்லாம் அலசுபவர்கள் அதேப்போல் ரசாயன சம்மந்தப்பட்ட விசயங்களை அலசியிருந்தால் இன்னும் வீரியமாக இருந்திருக்கும். அதைவிடுத்து உலோகங்களுக்கு எவர்சில்வர் முலாம் பூசும் குரோம் பிளேட்டிங்-கை ஏதோ அணுஉலை அளவுக்கு சீரியசாக காண்பித்திருப்பது ஏற்கமுடியவில்லை.

சில வகை தொழிற்சாலைகளில் இயந்திர சப்தங்களை தவிர்க்கவே முடியாது. அப்படிப்பட்ட சூழல் உள்ள இடங்களில் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில பாதுகாப்பு சாதங்களை அணிந்துகொள்ள தொழிலாளர்கள் கட்டாயப் படுத்தப்படுவார்கள். இங்கு அதைப்பற்றிப் பேசக் காணோம். முதலில் ஸ்டீல் ரோல் மில்லைக் காண்பித்து விட்டு கடைசியில் CNC லேத் மெசினைக் காண்பிக்கிறார்கள். அப்படியானால் ஸ்டீல்ரோல் இண்டஸ்ட்ரியே இருக்கக்கூடாதா..? இப்படி தொழிற்சாலைகளைப் பற்றி அடிப்படை புரிதலும் அறிவும் இல்லாமல் எப்படி இந்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தார்களோ தெரியவில்லை.

கதைக்கருவில் கோட்டைவிட்டாலும் திரைக்கதையிலாவது புதுமை புகுத்தி சுவாரஸ்யப் படுத்தியிருக்கலாம். விறுவிறுப்பே இல்லாமல் நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள். இவ்வளவு சொத்தையான கூலிப்படையை இந்தப் படத்தில்தான் பார்க்கிறேன். அவர்கள் பிரியா ஆனந்தை மிரட்டும்போது சிரிப்புதான் வருகிறது.ஸ்டன்ட் சில்வா கூட ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமாகி கடைசியில் சப்பையாகிவிடுகிறார்.


பிரியா ஆனந்தை இந்தப் படத்தில் செம அழகாக காட்டியிருப்பது இவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு. அவரது தோழியுடன் கருப்புப் பாவாடை தாவணியில் கடல் தண்ணீரில் போடும் ஆட்டம் ஜூப்பரு. அதேப்போல் குக்குரு குக்குரு பாடல். லட்சுமிமேனன் குரலில் செம கிக் ஆட்டம் அது.

அது சரி ரெண்டு ராஜான்னாங்களே..அது யாரு...? பிரியா ஆனந்தை காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு காட்சியிலும் பயந்து சாகிறார் ஹீரோ விமல். ஸ்டன்ட் சில்வாவிடம் மாறி மாறி அடிவாங்கு கிறார்கள் விமலும் சூரியும். கூலிப்படைக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பேசாம ஒரு ஊர்ல ரெண்டு கூஜான்னு பெயர் வைத்திருக்கலாம்.