Friday 30 December 2011

சிதறல்கள்-3

  

 சரி.....மூணு நாளா கண்ணு முழிச்சி முல்லைப் பெரியாறுப் பற்றி எழுதினேனே ..நாலு  நண்பர்கள் கிட்ட      பகிர்ந்துகிட்டா தானே  நம்ம திறமை(சரி.... சரி... ) வெளிய தெரியும்  என்கிற நப்பாசையில..   முதல்ல  ஒரு நண்பருக்கு   .'.போன்   போட்டு, நேரா விசயத்துக்கு  வந்தேன்...

"நான் ஒரு ப்ளாக் ஓபன் பண்ணிருக்கேன்...அதுல முல்லைப் பெரியாறுப் பத்தி எழுதியிருக்கேன்.. . '.ப்ரீயா இருந்தா கொஞ்சம் படிச்சு பாருங்க..." 

"அவரப்பத்தி நீங்க என்ன புதுசா எழுதியிருக்கீங்க ?...." என்று நண்பரிடமிருந்து  பதில் வர, சற்றுக் குழம்பிய நான்....பிறகு சுதாரித்துக் கொண்டு,

"தந்தை பெரியாரு இல்லப்பா....முல்லைப் பெரியாறு...... " என்று அழுத்தமாக சொன்னவுடன்,

"ஓ....முல்லைப்பெரியாரா....."என்று நண்பர் கொஞ்சம் இழுக்க, அப்பாடா ஒரு வழியா நம் கொள்கை பரப்பும் வேலையை  கச்சிதமாக செஞ்சுட்டோமேனு  பட்ட சந்தோசம்  கொஞ்சம்    நேரம் கூட நிலைக்கல..     அடுத்ததா அங்கிருந்து ஒரு   வினா வந்தது..


" ஆமா .....இவரு யாரு?..."

(ப்ளாக் ல எழுதினோமா ...கம்ப்யூட்டர இழுத்து மூடினோமா   ...படுத்தோமா ... காலையில    ஆ.'.பிஸ்   போனோமான்னு இருக்கணும் அதவிட்டுட்டு இது மாதிரி அதிகப்பிரசங்கி வேலையெல்லாம் செய்யக்கூடாது.)

--------------------------------------((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))----------------------------


    ஒரு அழகான அசத்தலான சிறுகதை. அது...'எங்கள் கறுந் தமிழ்'   கவிப்பேரரசு  வைரமுத்துவின் சிந்தனையிலிருந்து வைரங்களாய் ....முத்துக்களாய் ...சிதறிய கவிதை .......
 

சிறுமியும் தேவதையும் -கவிப்பேரரசு வைரமுத்து

திடீரென்று 
மேகங்கள் கூடிப் 
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக் குடமாய்
உருண்டது பூமி 
மருண்டது மானுடம்

அப்போதுதான் 
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு 
வைரக்கோடு 

கோடு வளர்ந்தது
வெளிச்சமானது 

வெளிச்சம் விரிந்து 
சிறகு முளைத்த  தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது

'48 மணிநேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது
ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்'
 
இரண்டே இரண்டு 
நிபந்தனைகள் ;
'எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்கு பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்'

புஜவலிவுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான் 
அவன் கையில் 
இறந்த காதலியின் 
உடைந்த வளையல் 
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு 

'இன்னொரு  கிரகம் கொண்டான் 
என்றென்றும் வாழ்க '
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி 
தங்கக்கடிகாரம் கழற்றிஎரிந்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்
உள்ளே துடித்தது-
சுவிஸ் வங்கியின்
ரகசிய கணக்கு

இறந்துவிடவில்லையென்ற சோகத்தை 
இருமி இருமியே 
மெய்பித்துக் கொண்டிருக்கும் 
நோயாளி ஒருவர் 
ஜனத்திரள் பிதுக்கியதில் 
சிறகொதுங்கினார்
அவர் கையில் 
மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில் 
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள் 

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில்
அச்சுப்  பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை 

தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்
கைப்பையில் 
அமெரிக்கன் வங்கிக் கடன் அட்டை

கசங்காத காக்கிச் சட்டையில் 
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி 
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசி எறிந்தாள்- ஒரு 
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

ஒருவர் 
இன்னும் ஒரே ஒருவர்
என்றது தேவதை 

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய
சிறுமியொருத்தி
பூவில் ரத்த ஓட்டம் 
புகுந்தது போன்றவள் 
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் ஏறினாள்

'நாய்க்குட்டிஎன்பது
பொருள் அல்ல- உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை 

'நாய் இருக்கட்டும் 
நானிறங்கிக் கொள்கிறேன் '
என்றனள் சிறுமி 

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு 
சிலிர்த்த வேகத்தில் 
சிதறிவிழுந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை 
சிறுமியோடும் செல்ல நாயோடும்.

-------------------------------------------------((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))--------------------------

Thursday 29 December 2011

வட கொரியாவின் 'மகாத்மா'

                                                 வடகொரியா அதிபர் கிம்ஜொங் மரணம்:


          நம் ஆசிய கண்டத்தின் வளர்ச்சி அடைந்த, பலமிக்க நாடுகளில் ஒன்றான வடகொரியாவின்  அதிபர் கிம்ஜொங் மரணம் அடைந்துள்ளார் .

      இவர் உண்மையிலே மகாத்மாவா என்றெல்லாம்  தெரியவில்லை...ஆனால் இவரின் இறுதி ஊர்வலத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் கதறி அழுததைப் பார்த்து நம் கண்களும் கலங்கத்தான் செய்தன.('நான் செத்தப் பிறகு எனக்குக்   கூடும் கூட்டம் சொல்லும்... நான் யாரென்று!' என்று நம்ம தல அஜித்தே   சொல்லியிருக்கிறாரே.) 

       வட கொரியா, சீனா போன்று ஒரு கம்யுனிசிய-ராணுவ ஆட்சி நடைபெறும் நாடுதான்.இங்கு குடும்ப ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது.இந்த விசயத்தில் நமக்கு இவர்கள் அண்ணன்....இவருக்கு முன்பு கிம்ஜொங் வின் தந்தை கிம் சங் அதிபராக இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து கிம் ஜொங் அதிபரானார். 17 ஆண்டு காலம் அதிபராக பதவி வகித்துள்ளார். இவரும் தனது தந்தை வழியில் ராணுவ ஆட்சியை நடத்தினார். இவர் மிகவும் சக்திவாய்ந்தவராக திகழ்ந்தார். 
  
            யாருக்கும் புரியாத புதிராக இருந்தார். அணு ஆயுத கொள்கையின் மூலம் அமெரிக்காவுக்கே ஆப்பு வைத்தவர்.இதன் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பானின் வயிற்றில் புளியைக் கரைத்தவர். இவருக்கு  சீனா, ரஷியா  போன்ற நாடுகளின் ஆதரவு இருந்ததே இதற்கு முக்கிய காரணம். அண்டை நாடுகளுடன் மோதும் நோக்கில், வடகொரியா ஏராள மான ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளது. சமீபத்தில்  “டேபோடாங்-2′ என்ற செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.  “செயற்கைக்கோள் சோதனை’ என்ற பெயரில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரியாவும், ஜப்பானும் குற்றம் சாட்டியுள்ளன. இது அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கவல்லதாம்.இவர் மற்ற நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தாலும் வட கொரிய மக்களுக்கு இவர் மகாத்மாவாகத்தான் தெரிகிறார்.

      கடந்த இரண்டு வருடமாக  இவருக்கு பக்க வாதம் வந்து தனது உடல்நலம் மிகவும் குன்றியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டே (2010) தனது 3-வது மகன் கிம்ஜொங் அங் என்பவரை அடுத்த அதிபராக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரெயிலில் சென்று கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வீரர்களும் கதறி அழுததைப் பார்க்கும் போது 'சென்டிமென்டில்' நம்மை விஞ்சிவிட்டார்களோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.....

     
                                             (சொல்லி வைத்தாற்போல் அழுகிறார்களே!!!!!!!)


------------------------((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))---------------------------

Sunday 25 December 2011

சர்ச்சையில் சிக்கிய இசைப் புயல்..


    எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாத  நம் இசைப் புயல் A.R. ரஹ்மான்  தன் இசைத்துறையில் உள்ள ஒரு இசை அமைப்பாளரை பாராட்டிதால் தமிழ் அமைப்புகளின் அதிர்ப்தியை சம்பாதித்துள்ளார்.பாராட்டுவது   நல்ல  விஷயம்   தானே இதில் என்ன தவறு  இருக்கிறது என்று யோசிப்பவர்கள் மேலும் படிக்க....

    முல்லைப் பெரியாறு அணையை வேட்டு வைக்க வளைகுடா நாடுகளில் உள்ள மலையாளிகளைத் தூண்டி அவர்களின் நிதி உதவியால்கேரள அரசின் பூரண  ஆசியோடு தயாரிக்கப் பட்ட ஹாலிவுட் படம் தான் DAM999. இதில்  999   என்பது அவர்களோடு நாம் செய்துக் கொண்ட ஒப்பந்தக் காலத்தை  நக்கல்  செய்யும் உள்குத்து...ஆனால் இது முல்லைப் பெரியாறு சம்மந்தப்பட்ட  படமில்லை என்று படத்தின் இயக்குனர்    சோஹன் ராய் முழுப்  பூசணிக்காயை சோற்றில்  மறைத்தது  பழைய கதை. விஷயம் இதுவல்ல...  


முல்லைப் பெரியாறுப் பிரச்னையை பத்த வச்ச 'புண்ணியவான்' சோஹன் ராய் 

இந்தப்படத்திற்கு இசை அமைத்ததற்காக அதன் இசை அமைப்பாளர்  ஓஷிப்பச்சன் (பட்... காசு வாங்கிக்கிட்டுதான் மியூசிக் போட்டாராம்.)     ஆஸ்கார்  விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்.  இவறும்  மலையாளிதான். இந்தப்படத்தில்    உள்ள  மூன்று பாடல்கள்  பரிந்துரையில் உள்ளதால் எப்படியும்     ஒரு பாடலுக்காவது ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பப் படுகிறது. இசைப் புயலுக்கு அடுத்து ஆஸ்கார்  சிகரத்தைத் தொடப்போகும் மற்றொரு இந்தியர் என்பதால் எதாவது   சொல்லித்தானே  ஆகவேண்டும் (வயிற்றெரிச்சல்?.......ச்சே.. ச்சே ).


  
Music Director Ousephachan
 'அவருக்கு ஆஸ்கார் அவார்டு கிடைப்பதில்  எனக்கு கொஞ்சம் வருத்தம்  தான்' என்றா சொல்ல முடியும்?.       ஒரு பாடலுக்காவது அவருக்கு ஆஸ்கார் விருது  கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் னு சொல்லியிருக்கார்.(கவனிக்க..... ஒரு அவார்டு மட்டும்) இதை அவரைத்தவிர வேறு யாரும் சொல்ல  முடியாது   என்பதால் வேறு வழியில்லாமல் சொல்ல வேண்டியதாயிற்று

ஏ.ஆர்.ரகுமான் கேரளாவை பூர்வீகமாக்கொண்டவர் என்பதால்,அந்தப் பாசத்தில்  பேசுகிறார் என்று அவரை வம்புக்கு இழுப்பது எந்த விதத்தில் நியாயம்?.மேடையில் ஏறினாலே தமிழை மறந்துப்போகும் சினிமாக் காரர்கள்  மத்தியில் நம்ம இசைப் புயல் இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருதை வைத்துக்கொண்டு 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்லியபோது பூரிக்காத தமிழன் உண்டோ ?அவர் என்ன  மலையாளத்திலா பறஞ்சார் ? 

     உண்மையானப் பிரச்சனைய விட்டு விட்டு  'ஏ.ஆர்.ரகுமானை  எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்' என்பது சுத்த மடத்தனம்.......... 







Saturday 24 December 2011

மன்னார்குடி மா.'.பியா...ஊரப்பாக்க போவியா.....



     -  திரை விமர்சனம்  -     
       
   ஜெயாவின் அதிரடி ஆக்சன் கலந்த அடுத்த மசாலா  படம்  ரிலீஸ் ஆயிருக்கு. இவரே நடித்தும்  இயக்கியும் இருக்கிறாரு.சண்டைக் காட்சியில தனி ஆளா நின்னு பறந்து பறந்து அடிக்கிறாரு.  நேர்த்தியான  டைரக்சன். படத்தின் ஒப்பனிங்கும் நல்லாத்தான் இருக்கு. கதை  திரைக்கதை வசனம்  எல்லாமே  'சொம்பு சோ' எழுதனதா சொல்றாங்க. ஒரு சில பேர் 'கேடி மோடி' எழுதி யிருக்கலாம்னு     நம்புறாங்க.(விட்டா...அமெரிக்கவிலிருந்து ஒபாமா   எழுதனது...  ஜப்பானிலிருந்து ஜாக்கிசான் எழுதனதுன்னு  கதை கட்டுவாங்க  போல....) இதன்  பின்னணி  இசையை  வழக்கம்    போலவே   ஜெயாவுக்கு துதிபாடும் அவங்க ஆத்து பத்திரிக்கைகள்   கச்சிதமா  செஞ்சிருக்காங்க... இடை இடையே  ரத்தத்தின்  ரத்தங்கள்  செம குத்தாட்டம் வேற போடுறாங்க..   சீரியசான படத்தில   பி.எச்.பாண்டியன் கொஞ்ச நேரம் வந்து  காமெடி  பண்ணிட்டு போறாரு. 



                    கதை....வழக்கமான கொள்ளைக் கூட்ட கதை தான். ஆராம்பத்துல எல்லாரும் ஒன்னா சேர்ந்து தான்   கொள்ளையடிக்கிறாங்க.கொள்ளையடிச்சத  மொத்தக் கும்பலும் சமமா பங்கிட்டுகிறாங்க........     இதுல கொள்ளைக்கூட்ட பாஸ் மட்டும் கொஞ்சம் உஷாரா... தான் பேருல எதுவும் வச்சிக்காம தன் தோஸ்து  பேருல இருக்கிற மாதிரி செட்டப் பண்ணிடுறாரு. இங்கதான் ஆரம்பிக்குது பிரச்சனையே.....இதுல அந்த கும்பலுக்கு உள்ளேயே ஈகோ பிரச்சனையாயி அவங்களுக்குள்ளே அடிச்சிகிறாங்க....கடைசியில நாமெல்லாம் ஒரே குடும்பம் னு சமாதானமாயி இதற்கெல்லாம்  காரணமான அவங்க 'பாஸ'பழிவாங்க  ரகசியமா  ஒரு திட்டம் போடுறாங்க....... அது என்ன திட்டம் னு சொல்றதுக்குள்ள இடைவேளை வந்திடுது......




         படத்தின் ஆரம்பமே    படு   த்ரில் !!. படம் ஆரம்பித்த உடனே ஒரு குழந்தைபிறக்குது. என்ன ஒரு ஆச்சர்யம்!!!.அதுக்கு பெரிய்ய்ய...... மீசை முளைச்சிருக்கு..அத சோதிச்ச டாக்டர் 'வாட் எ மிராக்கில்! ..     இந்த   கொழந்தைக்கு இப்ப 26 வயசு ஆகுது...' னு சொல்ல, உடனே நம்ம பாஸ் அந்த குழந்தைய 'வளர்ப்பு மகனா' தத்தெடுக்கிறார். அப்போ .. ஒரு தாலாட்டு பாட்டு ஒன்னு வருது.  இதுதான் இந்த  வருஷ சூப்பர் ஹிட் ....

                            "நீ தான்டா என் வளர்ப்புப் பிள்ளை...
                              உன்னை விட்டா எனக்கு யாருமில்ல 
                             உங்க குடும்ப இம்சை தாங்க... முடிய வில்ல 
                             நான் கண் அசந்தா என்சொத்து எனக்கே இல்ல...." அப்படின்னு நம்ம பாஸ் பாட ..
                             
                           "அம்மா நீ படாதே கவல....
                            நாங்களெல்லாம் கிணத்து தவள....
                            உங்களை ஒழிக்கிறத விட எனக்கு வேறென்ன வேல....
                            அப்படி  செய்யலன்னா நான் வளர்ப்புப்பிள்ளையே இல்ல..." னு எசப்பாட்டு பாடுறார்...



பிறகு அந்த பாலகனுக்கு கல்யாணம் பண்ண முடிவுசெஞ்சு ஊரையே அமர்க்களப்படுத்திடுறாரு...அந்த கல்யாண ஊர்வலத்தில ஒரு ராப் சாங் வருது...

                "ஒரு யானை... யய்ய... யய்யா....
                 தன் தலையில....தன்னனன்னா ..... 
                 மண்ண வாரி.....யம்மா யம்மா
                 போட்டுகிச்சி....   அய்யய்யையோ ...." 
  
இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுதான் 'டாப் டென்' ல 'நெ ஒன்'.......
(கடைசியில அந்த மகனே இவருக்கு எமனா வர்ற மாதிரி கிளைமாக்ஸ்ல ஒரு  ட்விஸ்ட் இருக்கு. )


        பாஸ 'உள்ள' தள்ளிட்டு அந்த இடத்துக்கு இவங்க வர்றதா போட்ட திட்டம் கடைசியில பாஸுக்கே தெரியவர...பிறகு பாஸு பொறுத்தது போதும்னு பொங்கி எழ.....இங்கதான் படம் சூடு பிடிக்குது....கொதிச்சி போயி  அவர் ஒரு பாட்டு படுறாரு....அப்ப... தியேட்டருல விசில் பறக்குது....


            "நம்பி.. நம்பி.. வெம்பி.. வெம்பி.. ஒன்றுமில்லை
             என்றபின்பு உறவு கிடக்கு போடீ...
             இந்த உண்மையை  கண்டவள் மாமீ........."

      கடைசியில பாஸு  இவங்கள    அதகளம் பண்ணினாரா? அல்லது இந்த கும்பல் கூட்டத்தை விட்டே துரத்தப்பட்டதா என்பதை கலைஞர் கொடுத்த இலவச டிவி யில் ஜெயா டிவி நியூஸ்-ல் பார்த்து தெரிந்து கொள்க.....

.  
       இது ஜெயாவின் 'ஜெயேந்திரருக்கு காப்பு ' படம்  போல் வெள்ளி விழா  கொண்டாடுமா? அல்லது   'சமச்சீர் கல்விக்கு சங்கு ' , 'அண்ணா  நூலகத்துக்கு  ஆப்பு' படம் போல் அட்டர்  .'.பிளாப் ஆகுமா என்பதை அப்பாவி மக்கள் தான் முடிவு செய்வார்கள்.....     



    
            

Monday 19 December 2011

முல்லைப் பெரியாறும்..... தொடரும் அதன் தொல்லை வரலாறும்........


நீரின்றி அமையாது உலகு என்று சொன்னாலும் சொன்னார் வள்ளுவர், தமிழகம் தற்போது தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒருவேளை எதிர்கால  தமிழத்தை  நினைத்துதான் எழுதியிருப்பார் போலும். தமிழ் நாட்டிற்கு மட்டும் தண்ணீருக்காக ஏன் இப்படியொரு பிரச்சனை? 

தமிழ் நாட்டின் தலையாயப் பிரச்சனை காவிரி நீர்ப் பிரச்சனைதான். தமிழகத்தின் நெற்களஞ்சியங்கள் செழிக்க தண்ணீரை வேண்டி இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.. ஆனால் காவிரிப் பிரச்சனை தற்போது ஒய்ந்து இருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம் .கடந்த நான்கு வருடங்களாக காவிரி டெல்டா பகுதியில்  கடுமையான மழை. வெள்ள நிவாரண நிதி வாங்கும் அளவுக்கு  நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளின் கஷ்டங்களை நினைத்து அந்த வருண பகவானே கண்ணீர் விட்டுக் கதறி அழுதிருக்கிறான் போல!.




Origin of Cauvery River

காவிரி பிரச்சனைக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. காவிரியாறு, கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் தோன்றி அங்கிருந்து கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைந்து, பல்வேறு பயன்பாட்டிற்குப்பின்  தமிழகத்தின் மேட்டூர் நீர் தேக்கத்தில் வந்து சேர்கிறது. கர்நாடக மக்கள் பயன்படுத்தியப் பிறகு அதன் உபரி நீர் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

       ஆனால் முல்லைப் பெரியாறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில் உள்ள சிவகிரிமலையில் தான்.  பிறகு என்ன பிரச்சனை ?  தமிழத்தில் உருவானாலும் அதன் நீரோட்டத்தை மேற்கு நோக்கி திருப்பி விட்டானே அங்குதான் இருக்கிறது ஆண்டவனின்  சூட்சமம். தமிழர்களின் மீது உனக்கு கூடவா  ஓரவஞ்சனை ? 


  அப்படி என்னதான் பிரச்சனை முல்லைப் பெரியாறு அணையில் ?

    அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவேண்டும் என்று நாம் சொல்ல,இருக்கிற அளவைவிட இன்னும் குறைக்க வேண்டுமென அவர்கள் அடம்பிடித்து இன்னும் ஒரு படி மேலே போய் அணை உடையும் நிலைமையில் உள்ளது அதனால் புது அணை கட்டப்போறோம் என்று எதிவாதம் செய்ய,புது அணை கூடவே கூடாது என்று நாம் மல்லுக்க நிக்க...சற்று குழப்பமடைந்தவர்களுக்கு சிறிய விளக்கம். 



      மேற்குத் தொடர்ச்சிமலையில்(சிவகிரி மலை) உருவாகி,மேற்கு நோக்கிப் பாயும் முல்லைப் பெரியாற்றின் அபரிமிதமான நீரோட்டத்தைத் தடுத்து, கிழக்கே(தென் தமிழகத்திற்கு) திருப்பி விடுவதற்காக குறுக்கேக் கட்டப்பட்ட ஒரு தடுப்பு சுவர் தான் இந்த முல்லைப் பெரியாறு அணை. இது நீரியல் விதிப்படிதான் செயல்படுகிறது. மேட்டூர்அணை, கல்லணை போன்று நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்டது அல்ல. அதன் நீரோட்டத்தைத் திருப்பிவிடுவதற்காக கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் மட்டம் 104அடி வரும் வரை 'ஒரு சொட்டுத் தண்ணீர்' கூட நமக்குக் கிடைக்காது. இதற்கு மேலே உயரும் போது,திருப்பிவிடப்படும் தண்ணீர் வெட்டப்பட்ட கால்வாய் மூலம் தமிழகத்தின் சுருளி ஆற்றில் கலக்கிறது. இதைக்கருத்தில் கொண்டுதான், 152அடி வரையில் தண்ணீரைத் தேக்கிவைப்பதற்கு   ஏதுவாக     இந்த  அணைக்கட்டப்பட்டது. பிறகு அவர்களின்      சூழ்ச்சியால் 136  அடியாகக் குறைக்கப் பட்டது.

    தற்போது இதை 120அடியாக மீண்டும் குறைக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் சுயநலமான வாதம். இதை ஏற்க நீதிமன்றம் மறுத்ததால் அணைக்கு அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக புரளியைக் கிளப்பி,அணை உடைந்து விடும், இதனால் பாதி கேரளாவே அழிந்து விடும் என்பது  போல மாயையை உருவாக்க ஒரு  'டுபாக்கூர்' படத்தை  எடுத்து, மக்களைத் தூண்டி விட்டிருக்கிரார்கள்.அதான் புது அணை கட்டித் தருகிறேன் என்கிறார்களே என்று வெகுளியாக கேட்பவரா நீங்கள்?.அப்படியென்றால் அவர்களின் சாதூர்யத்தையும்,சூட்சமயத்தையும் நீங்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்வேன்.   

 முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கியில் சுமார் 50 கிலோமீட்டர் கீழே, 1976ஆம் ஆண்டு கேரளஅரசு  மிகப்பெரிய இடுக்கிஅணை யைக் கட்டியது. இது முழுவதுமாக நீர்மின்சக்தியை தயாரிப்பதற்காக கட்டப்பட்ட அணை. இது முல்லைப் பெரியாறு அணையை வேட்டுவைக்க கட்டப்பட்ட அணை என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
   
           பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் நாம் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .) ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. ஆனால் "கடை விரித்தேன்  கொள்வாரில்லை” என்பது போல் பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம்.

         3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு அணை வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.அப்போது அவர்கள் மூளை (??)யில் உதித்தது 'ஒரு தில்லாலங்கடி யோசனை' அதனால்  போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற கூக்குரல்-சுயநலக் குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35லட்சம் மக்கள் செத்துப்போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு! என்று புதிய திரைக்கதை எழுத ஆரம்பித்தார்கள்.

         சரி....புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து  அத்தனை  நீரும் நேராக இடுக்கிக்கு  வந்து அதை நிரப்பும். 'சரி  நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே'என்று மீண்டும் நீங்கள் அப்பாவியானால்......அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய  அணையை  கட்டப்போவது  1853அடி உயரத்தில். இந்த அணை கட்டப்படும்  உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட சாத்தியமே இல்லை.நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு  பிறகு  5704அடி  நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக  திசை மாறி சுருளி ஆற்றில் விடப்பட்டு பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டியபிறகு, இவர்கள் உண்மையாகவே(??) விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது.மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது. புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை.இப்பப் புரியுதா?அவர்களது சுயநலமும் சூட்சமமும்!!!.இதனால் தென் தமிழகம் பாலைவனமாக மாறுவதை யாராலும்  தடுக்க முடியாது. 
   
 சரி... தமிழகம் பாலைவனமாகும் என்கிறீர்கள்...ஆனால் அணை உடைந்து பலலட்சம் பேர் மாண்டு போவார்கள்  என்று அவர்கள் சொல்கிறார்களே? என்று நீங்கள் வினா எழுப்பும்  பட்சத்தில், அதற்கான விளக்கத்தை அளிக்குமுன் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு,அது யாருக்குச் சொந்தம்  என்பதை முதலில் பார்க்கலாம்.  
       

முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு :
                                             அணையும்   ஆறும்  கேரளாவில் உள்ளது.அதில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது ? என்பதை அறிய அதன் பழைய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு தெளிவு பெறும்.

                              17 ஆம் நூற்றாண்டின் முடிவில் தமிழத்தின்   தென்பகுதிகளில் கடுமையான வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்துத் தாண்டவமாட, அப்போதைய  ராமநாதபுரத்து  அரசருக்கு  தோன்றிய யோசனை  தான்  இதற்கு முதல் வித்து.கேரளாவில் 44வற்றாத ஜீவநதிகள் மேற்கு நோக்கிப்பாய்ந்து  வீணாக  அரபிக்கடலில் கலந்தது. இதில் முல்லை, பெரியாறு நதிகளை ஒன்றாக இணைத்து அணைகட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை,ராமநாதபுர பகுதிக்குத் திருப்பிவிட எதாவது சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதைப்பற்றி ஆராய  1778ஆம் ஆண்டு  ஒரு  நிபுணர் குழுவை அனுப்பினார். அவர்களும் சாத்தியமே என்று சொல்ல ,பிறகு பண நெருக்கடியால்  தற்காலிகமாக கைவிடப்பட்டது.இதில் இன்னொரு முக்கியமான விஷயம்,அன்றைய மதுரை நாடு என்பது மதுரை ராமநாதபுரம், சேலம், திருச்சி, நெல்லை, தேனி மாவட்டங்களும் மற்றும் திருவாங்கூர் சமஸ்தானம் உள்ளடக்கிய பகுதியே ஆகும்
                 
                 பிறகு 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அறுபது லட்சரூபாயில் தொடங்கப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை.1887ல் தொடங்கி 1895ஆம் ஆண்டு கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.  ('ஓவர் நைட்'ல உலகப் புகழ்ஆயிட்டியேதலைவா!!!!   உன்  சொத்து    பத்து எல்லாத்தையும்  வித்துக் கட்டினீயாமே?... பின்ன ஏன் உங்களை துரத்தி விட்டார்கள்?..)

        இவரைப்பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்!. இந்த அணை கட்டும்  சமயத்தில்   இவர் அங்குள்ள மக்களோடு நெருக்கமாக அன்போடு பழகியதால்,இன்று கூட தேனி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சிலர் பென்னி குயிக் என்றுதான் பெயர் வைக்கிறார்களாம்.   

          கர்னல் பென்னி குயிக் தென் தமிழ் நாட்டின் கடவுளாக வணங்கப் படுகிறார்.பொங்கல்   முடிந்து மறு நாளில் அவருடைய படத்திற்கு இப்போதும் தேனி மாவட்டங்களில் பூஜை  செய்கின்றனர்.இவரைப்பற்றி ஒருநெகிழ்ச்சியான செய்தி..........பென்னிகுயிக் அவர்களின் 6வயது பெண் குழந்தை, கட்டுமான பணியில் வெடி   வைத்து பாறையை தகர்க்கும் போது கல் விழுந்து அங்கேயே இறந்து விட்டது.  இறந்த மகளை புதைத்து விட்டு கம்பீரத்துடன் கட்டுமான பணியை ஆரம்பித்து விட்டார் அன்று அந்த மாமனிதர் பென்னி குயிக் அவர்கள். 

      

இந்த அணை கேரளா மாநிலம்,இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீளமேடு தாலுக்காவில் உள்ளது.ஆனால் இந்தப் பகுதி கிபி 12  ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் கட்டுப்பாட்டிலும் பிறகு சேர மன்னனின் ஆட்சியின் கீழும்  இருந்தது.     முல்லைப் பெரியாறு அமைந்திருக்கும் இடம்  பூஞ்சார் சமஸ்தானம் - பூனையாற்று தம்பிரானுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது..இதில் இன்னொரு சுவாரஸ்யம்  இவர் ஒரு தமிழர். (A.R.முருகதாஸ் -சூர்யா  கவனிக்க......'எட்டாவது அறிவு'க்கு கதை ரெடி )

    ஆனால் அப்போதைய ஆங்கிலேய அரசு, இது திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு சொந்தமானது எனக் கருதி அவர்களுடன் அணை கட்டுமுன் 1886 ஆம் ஆண்டு  ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இது ஓன்று தான் நம்மிடம் இருக்கும் ஒரே பிரம்மாஸ்திரம்....அந்த ஒப்பந்தத்தில்,
     
           1.      ஒப்பந்தக் காலம்  999 வருடங்கள் .

           2.        8000 ஏக்கர் நிலத்திற்கு, ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம்  வருடத்திற்கு ரூபாய் 40,000 அளிக்கப்படும் 

           3.       நிலத்தின் வழியாக வரக்கூடிய  அனைத்து நீருக்கும் உரிமை.

          4 .      அணை மற்றும் பாசனவேலை செய்ய உரிமை.

          5 .       நீர் பிடி பகுதியில் மீன் பிடிக்க உரிமை,அங்குள்ள கல்,மரம்,செடி அனைத்திற்கும் உரிமை

         6.        அணை பராமரிப்பு வேலை செய்ய சுமார் 100 ஏக்கர் நிலத்தின் உரிமை

 என்று கூறப்பட்டுள்ளது.

 ( பிறகு ,கேரளாவின் வேண்டுகோளின்படி1970-ம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி,ஆண்டிற்கு 5ரூபாய் என்றிருந்த குத்தகைத் தொகையை 30ரூபாய் என்று உயர்த்தப்பட்டது.அணையிலும் அதைச் சார்ந்த  நீர்ப்பிடிப்பு மற்றும் குளம் குட்டை போன்ற நீர் நிலைகளிலும் வளரும் மீன்களை பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து கேரள எழுதி வாங்கிக் கொண்டது.இது ஒரு தனிக்கதை...)




                முல்லை பெரியாரில் தேக்கிவைக்கப்படும் நீர்  சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வெட்டப்பட்ட கால்வாய் மூலம் தேக்கடி கொண்டுவரப்பட்டு பின் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து கட்டப்பட்ட குகை (TUNNEL) மூலம்  தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின் சுருளி ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மதுரை, தேனீ, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப் படுகிறது.   
    
                      
       1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள்  பிரிக்கப் பட்டபோது ,திருவாங்கூர் சமஸ்தானமும்,முல்லைப் பெரியாறு அணையும் கேரளாவோடு சேர்க்கப்பட்டது.  தமிழக எல்லை கம்பம் குமிழியோடு முடிவடைந்து விடுகிறது.ஆனால் குமிழியிலிருந்து  சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த அணை உள்ளது.இதன் இயக்கமும் பராமரிப்பும் தமிழக பொறியாளர்களால் தான்  மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் சுமார் பத்து லட்சம் விவசாயிகளுக்கு  வாழ்வாதாரமாகவும், அறுபது லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும்  உள்ளது. அணை கட்டி 85வருடமாக எந்த பிரச்சனையும் இல்லை.பிறகு தான் ஆரம்பித்தது இவர்களின திருவிளையாடல்.. அது  இடுக்கி அணை  கட்டி முடிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டுக்குப்  பிறகு......

       இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா('ஆச்சி'பேர வச்சுகிட்டு சூழ்ச்சி பண்றீங்களே) பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது.பிறகு தமிழக அரசு இந்த அணையைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் 1981ல் ஆரம்பிக்கப்பட்டு 1994ஆம் ஆண்டுவரை  இந்த  அணை  புதுப்பிக்கப்பட்டது.ஆனால் அணைப் புதிப்பிக்கப்பட்டால் மீண்டும் 152 அடிக்கே தண்ணீர் உயர்த்தப்படநேரிடலாம்  என்று, முடியும் தருவாயில் அவர்கள் பிரச்சனை செய்ய, கடைசியில் இது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

            2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. பல்வேறு சோதனைக்குப் பின் தன் அறிக்கையை இந்தக்குழு  சமர்ப்பித்தது. உச்ச நீதி மன்றம் 27 -02 -2006  அன்று  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு   தீர்ப்பை  அளித்தது.அது கண்ணீரோடு காத்திருந்த நம் மக்களின் வாயில்  கற்கண்டைப் போட்ட மாதிரி இருந்தது.
 
அந்தத் தீர்ப்பில்,
    .     தமிழக அரசு நீரின் மட்டத்தினை 136  அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்.
    .    இந்த அணை புதுப்பிக்கும் பணி முடியும் வரையில் யாரும் எந்த இடையூறும் செய்யக் கூடாது.
    .   மேலும் இந்த அணை புதிப்பிக்கப்பட்டவுடன்,இதன் நீர் மட்டத்தை 152  அடியாக உயர்த்திக்கொள்ளவும்    அனுமதி.

        என்று தெரிவிக்க...விடுவார்களா?...உடனே கேரள சட்டமன்றத்தைக் கூட்டி, கேரளாவில் உள்ள  22அணைகளின் கொள்ளளவை தீர்மானிக்கும் அதிகாரம் கேரள அரசுக்குத்தான் உள்ளது,இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றதுடன்,இதில் முதல் அணையாக முல்லைப்பெரியாறு அணையைச் சேர்த்து ஒரு சட்டம் இயற்றினார்கள்.இது உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கிய விஷயம்தான்.

                    இதற்குப்பிறகு ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் இரு மாநிலங்களும்,பேச்சுவார்த்தை -நிபுணர் குழு -உச்ச நீதிமன்றம்  என்று பிரச்சனை நீண்டு கொண்டேதான் செல்கிறது.

அணையின் நம்பகத்தன்மை
    
     “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? இந்த அணையின் அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது,இது உடைந்தால்   கேரளாவின் ஒரு பகுதியே அழிந்துவிடும் என்ற புரளியை நம்புகிறவர்களுக்கு, அணையின் உறுதியைப் பற்றி சில தகவல்கள்........

        கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே  முதல் தடவையாக 1933ல் 40டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது. 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட்சென்ற பிறகு நிபுணர் குழுவின்    ஆலோசனைப்படி லேடஸ்ட் தொழில்நுட்பங்களைப்   பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது. இந்த  அணை,  நீரின் அழுத்தம்,நில அதிர்வு ஆகியவற்றைத் தன் எடையால் தாங்கும்   ஒரு புவிஈர்ப்பு அணை (Gravity  Dam ). இந்த RCC  கான்க்ரீட்டால் சுமார் 12,000டன் இதன் எடை கூட்டப்பட்டுள்ளது.சுமார் 150வருடம் பழமை வாய்ந்த கரிகாற்சோழன் கட்டிய கல்லணையே இப்போதும் கம்பீரமாகத்தான் காட்சி அளிக்கிறது. அதனால் முல்லைப் பெரியாறு அணை உடைவதற்கு சாத்தியமே இல்லை.



    முதலாவதாக, பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து,நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும்,வெளியேறும் நீர் பெரியாறு அணை யிலிருந்து இடுக்கி வந்து சேர 4மணி நேரம் ஆகும்.அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும்! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

கேரள அரசின் பித்தலாட்டங்கள்

     அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே ! 

 அணைக்குஆபத்து-புதியஅணை கட்ட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது.

    தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்று ஒருபுறம் கூறும் கேரள அரசு நீதியரசர் ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிடம்   செப்டம்பர் மாதம் அளித்துள்ள மனுவின் 37-ம் பக்கத்தில்    "முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்துக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இது இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே, அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது''  என்றும்,  அந்த அறிக்கையின் 23-ம் பக்கத்தில் ""தமிழகத்துக்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தது ஆகும்''என்று தன் வஞ்சகத்தன்மையை அள்ளித்தெளித்துள்ளது. அதாவது கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகம் எப்படித் தர மறுக்கிறதோ அதைப்போல கேரளமும் எதிர்காலத்தில் செய்யும் என்பதுதான் இதன் உட்கருத்து.
 
           திருவாங்கூர்  சமஸ்தானமாக இருந்த போது அதில் குமரி மாவட்டம் இணைந்திருந்தது.  அப்போது நெய்யாறு என்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது.இந்த அணையின் இடதுபுற கால்வாயின் மூலம் திருவாங்கூர் பகுதிக்கு 19,100ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி அளிக்கப்பட்டது. இதில் 9,200 ஏக்கர் நிலம் 1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட போது தமிழகத்தின் பகுதியாயிற்று. ஆனால்,இது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக இந்த நிலத்துக்கு அளிக்க வேண்டிய நீரைத் தர கேரள அரசு பிடிவாதமாக மறுக்கிறது.இந்தக் கேரளமா புதிய அணைகட்டி பெரியாற்று நீரை நமக்குத் தரப்போகிறது?
         

முல்லைப் பெரியாறு பிரச்னையை தற்போது கேரள அரசியல்வாதிகள் கையில் எடுப்பதற்கான காரணம் என்ன ?.  

    அரசியல் எனும் சாக்கடை சகதியில் புரளுபவர்களில் அவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? 

      பொதுவாகவே இந்தியாவில் இடைத்தேர்தல் என்றால் ஏதோ இடையில் ஒரு தேர்தல் என்றுதான் எண்ணுவோம்.ஆனால் கேரளாவில் அடுத்து நடக்கப்போகும் இடைத்தேர்தல்,ஆளும் காங்கிரஸ் தலைமையிலான UDF  க்கும்  CPM தலைமையிலான  LDF இடதுசாரிகளுக்கும்  வாழ்வா  சாவா போட்டி !!

 140 இடங்களைக்கொண்ட கேரள சட்டமன்றத்தில், தற்போது  UDF(காங்கிரஸ்)ல்- 71 MLA வும்,  இடது சாரிகளிடம் 68 MLA வும் உள்ளனர். சட்டமன்றத்தில் ஏதேனும் ஒரு வாக்கெடுப்பு என்றால்...இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக காங்கிரஸ் கூட்டணியின் ஓட்டு பலம் இப்போது 70 என்றாகிறது அல்லவா..? 
 
  வரக்கூடிய இடைத்தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடதுசாரிகளின் பலம் சட்டமன்றத்தில் 69ஆகிவிடும். ஆளும் கூட்டணியில் யாராவது ஒருத்தர் லீவு போட்டாலும் எதிரணியினர் சமபலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறார் கேரள முதல்வர் உம்மண் சாண்டி. DAM-999 படத்தில் "அணை உடைந்தால் கேரளாவின் ஒரு பகுதியே கடலில் மூழ்கி அழிந்துவிடும்"என்று எந்தப்பகுதியை காட்டி மக்களை பயமுறுத்துகிறார்களோ அந்த பகுதியில் தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறும்  பிரவோம் (PIRAVOM) தொகுதியும் இருக்கிறது. 

 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக எப்படி ஒக்கேனக்கல் பிரச்சனை அரசியலாக்கப்பட்டு, 'எடியுரப்பா' நமக்கு 'இடையுரப்பா'வாக மாறினாரோ (மனுஷன் இப்ப ஊழல் வழக்குல மாட்டி,"குருவாயுரப்பா,புள்ளையாரப்பா என்னக்காப்பாத்துப்பா"னு  புலம்பிகிட்டிருக்கிறார் )அதேபோல் இந்த உம்மன் சண்டி முல்லைப் பெரியாறு பிரச்சனையக் கையில் எடுத்திருக்கிறார்.


            இந்தியா ஜனநாயக நாடுதான் . உலகில் நம்  அளவுக்கு வேறு எவரும் சுதந்திரக் காற்றை   சுவாசிப்பது  கிடையாது. நம் தேசத்தில் மண்,மலை, வனம்,நீர்,ஆறு உட்பட அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான். எந்தஒரு மாநிலஅரசும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.மத்தியில் ஆட்சியில் இருப்பது எப்போதும் தேசியக் கட்சிதான் அல்லது அவர்களின் ஆதரவில்.இதில் எந்த மாநிலத்துக்கும் சாதகமாக முடிவு எடுக்க முடியாது .ஒரு கண்ணில் வெண்ணையும் மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைக்க முடியாது. இதை மக்களும் அறிவர்.

     ஆனால் என்று இது அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டதோ  அன்று ஆரம்பித்ததுதான் மக்களிடையே பகை உணர்வு. தன் அரசியல் சுய லாபத்துக்காக மக்களைத் தூண்டிவிட்டு அந்தச்சூட்டில் குளிர்காய நினைக்கிறார்கள்.
               தமிழத்தில் அனைத்துக்கட்சிகளும் இந்தப் பிரச்சனைக்காக கடுமையாக போராடிவரும் நிலையில்,காங்கிரசும் மார்க்சிஸ்ட்களும் மௌனம் சாதிக்கிறார்கள்.அவர்களுக்கு தமிழக அரசியலை விட தேசிய அரசியல் ரொம்ப முக்கியம் போல.(நேற்று (18 -12 -2011 )நம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ,'கேரள அரசு இடைத் தேர்தலுக்காகத்தான் இப்படி பிரச்சனை செய்கிறது என்று உண்மையை உளறிவிட்டு, இன்று 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அது வேற வாய்,இது நாற வாய்'னு டகால்டி அடிக்கிறார்.)

   மற்ற மாநிலத்தினரைவிட மலையாளிகள் நம்மோடு சகோதர உணர்வோடு பழகக் கூடியவர்கள் தான்.வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் மலையாளிகளும் 'நாம்இந்தியர்கள்' என்ற ஒரே உணர்வோடு தான்   பழகுகிறார்கள். கேரளாவின்  பெரும்பாலான  எல்லைப் பகுதி தமிழ் நாட்டை  ஒட்டியே வருகிறது. தொழில், விவசாயம், வியாபாரம், சினிமா உள்பட அனைத்திலுமே இருவருக்குள்ளும் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு உண்டு. தெற்கே குமரியும் வடக்கே அம்பத்தூரும் 'குட்டிக் கேரளா' என்றுதான்  சொல்கிறார்கள். டீகடை சேட்டாவும்,  இட்லிக்கடை நாயரும் இன்றும் நமக்கு நண்பர்கள்தான்.       அங்குள்ள நயன்தாராக்களும்,அசின்களும் இங்கு வந்துதான் கொடிகட்டிப்பறக்கிறார்கள்....  ('அதுக்குதான் உங்க ஊரு 'ஷகீலா'வ அனுப்பி இங்குள்ள  மொத்த சூப்பர் ஸ்டார்களையும் காலி பண்ணிடீங்களே' னு ஒரு குரல் அங்கிருந்து  கேட்குது ....) 

               ஆனால்இன்று....கேரள எல்லையிலே நம் பஸ் தடுத்து நிறுத்தப்படுகிறது. மீறினால்,   அதன் கண்ணாடி அடித்து உடைக்கப்படுகிறது. அய்யப்பனுக்கு   இருமுடி கட்டிச்  சென்றவர்களுக்கு அங்கே தடியடி அபிஷேகம்   நடக்கிறது. கூழித்தொழிலாளர்கள் அடித்து விரட்டப் படுகிறார்கள்.

   இங்கே அவர்களது .'.பைனான்ஸ்கம்பெனி, ஜுவல்லர்ஸ் கடை,ஹோட்டல் என்று தேடிப்பிடித்து அடிக்கிறார்கள்.கேரளாவை நோக்கி ஆயிரம் பேர்  சென்ற பேரணி பின்பு பத்தாயிரமாகி... இப்போது லட்சத்தை தாண்டுகிறது. போதாக்குறைக்கு 'இடுக்கி' மாவட்டத்தை  தமிழ்நாட்டுடன்  இணைக்க வேண்டும்  என கிடுக்கிபிடி போடுகிறார்கள்.

           அரசியல்வாதிகள் எல்லோரும் 'ஆண்டிகள்'தான் (முழுசாக்கேளுங்க.)....சும்மாக் கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பார்கள்................

      நேசத்தோடு பழகிய இருவர்களது   நெஞ்சிலும்  நஞ்சை கலந்து   விட்டார்கள் நயவஞ்சகக்காரர்கள்... நாசமாப்  போவார்கள் (ஒரு .'.ப்ளோவுல வந்திடுச்சி விடுங்க..)

 -----------------------(((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))-------------------------