Saturday 28 February 2015

காக்கி சட்டை -கொஞ்சம் கசங்கிய சட்டை( விமர்சனம் )


ருத்தபடாத வாலிபர் சங்கம் என்ற ஜனரஞ்சக வெற்றிப் படத்திற்குப் பிறகு ஒரு வருட இடைவெளியில் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்திருக்கிறது காக்கிச்சட்டை. ஆச்சர்யம் என்னவென்றால், நள்ளிரவுக்காட்சி என்றபோதிலும் ஆண்களைவிட பெண்கள் தலைகளே அதிகமாகத் தென்பட்டது. இன்னொரு பாக்யராஜா அல்லது ராமராஜனா அல்லது இளைய தளபதி விஜய்யா என்பதை இனி அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் தீர்மானிக்கும்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான மாப்பிள்ளை படத்தை ரீமேக் பண்ணுகிறேன் என்று கொத்து பரோட்டா போட்டு 'மாப்பிள்ளை' என்கிற சூப்பர் டைட்டிலையே சப்பையாக்கிய தனுஷ், இம்முறை கமலின் சூப்பர் ஹிட் படமான காக்கிச் சட்டை டைட்டிலை பதம் பார்க்க சிவகார்த்திகேயனை களமிறக்கியிருக்கிறார்.

சரி.. இந்தக் காக்கிச்சட்டை கஞ்சிப் போட்டு துவைத்த காட்டன் சட்டையா...அல்லது கசங்கிய அழுக்குச் சட்டையா என பார்ப்போம்.

ன்னை அறிந்தால் பட ரிலீஸ் சமயத்தில் காக்கிச்சட்டை படத்தின் கதையும், என்னை அறிந்தால் படத்தின் கதையும் ஒன்றுதான் என்பது போன்ற வதந்தி பரவியது. படம் வெளியான பிறகுதான் இரண்டும் வெவ்வேறு கதைகள் என உறுதியாயிற்று. ஆனால் இரண்டு படங்களின் கதைக்களம் ஒன்றுதான். இரண்டுமே சட்டத்துக்கு விரோதமாக அண்டர் கவர் தாதாவின் கண்காணிப்பில் நடக்கும் ஆர்கன் திருட்டைப் பற்றியது. ஆனால் சொல்லிய விதம் வேறு. என்னை அறிந்தால் படத்தில் சீரியஸாக சொன்ன கதையை இதில் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

குற்றப்பிரிவில் வேலைபார்க்கும் சிவகார்த்திகேயன் ஒரு கண்ணியமான,நேர்மையான போலிஸ்காரர். அவரது நேர்மைக்கு சவாலாக ஏதாவது கேஸ் பிடித்துவா என்கிறார் இன்ஸ்பெக்டர் பிரபு. மனித உடலுறுப்புகளை சட்டத்துக்குப் புறம்பாகக் கடத்தி விற்கும் ஒரு கும்பலைப் பற்றிய தகவல் அவருக்குக் கிடைக்கிறது. அக்கடத்தல் கும்பலை தகுந்த ஆதாரங்களோடு பிடிக்க புறப்படுகிறது சிவகார்த்திகேயன் டீம். அதனால் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், இழப்புகள் எல்லாவற்றையும் சமாளித்து இறுதியில் அக்கும்பலை எப்படி பிடித்தார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

என்னை அறிந்தால் படத்தில் ஆர்கன் திருட்டை செம சீரியஸாக காண்பித்திருப்பார்கள். ஒரு சீரியஸான மேட்டரை கொஞ்சம் சீரியஸாக சொன்னால்தானே அதிலுள்ள சீரியஸ்னஸ் நமக்கு விளங்கும். அந்த சீரியஸ்னஸ் தானே படத்தின் திரைக்கதையை பரபரவென இழுத்துச் செல்லும். ஆனால் காக்கிச்சட்டையில் சீரியஸாக நகர வேண்டிய நிறைய காட்சிகள் காமெடியாகவும், காமெடியாக வந்திருக்க வேண்டிய காட்சிகள் சீரியஸாகவும் போனதுதான் படத்தின் மிகப்பெரிய சறுக்கல்.

சிவா அறிமுகமாகும் ஆரம்பக்காட்சி 'துரைசிங்கம்' அளவுக்கு பில்டப் கொடுக்கப்படும்போது 'யூ டு சிவா' என கேட்கத் தோன்றியது. பிறகு அது வெறும் கனவுதான் எனத் தெரியவருகிற பொழுது இது அக்மார்க் சிவகார்த்திகேயன் படம் என்கிற பரவசம் நம்மை ஆரம்பத்திலேயே ஆட்கொள்கிறது. பிறகு அதே பில்டப்பை மனோபாலாவை வைத்து செய்கிறார்கள். சிவா நன்றாக ஆடுகிறார். ஒரு பாடல்காட்சியில் ஸ்ரீ திவ்யாவுடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்சன் ஹீரோவாகிறார். இதையெல்லாம் தாண்டி எதோ ஒன்று அவரிடம் குறைகிற மாதிரி தெரிகிறது.

ஆரம்பக்காட்சிகளில், போலீசாக இருந்தாலும் கிரைம் பிராஞ்ச் என்பதால் மப்டியில் வெவ்வேறு கெட்டப்பில் வேண்டாவெறுப்பாக சிவா வலம்வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புப் பட்டாசு. ஆனால் அதன்பிறகு மனோபாலா , மயில்சாமி ,சிரிச்சா போச்சி சகாக்களுடன் அவர் அடிக்கும் லூட்டி எல்லாமே காட்சிகளை நகர்த்த உதவியிருக்கிறதே தவிர ஒரு புன்னகையைக் கூட வரவழைக்கவில்லை.

ஸ்ரீதிவ்யா பொம்மைப் போல வருகிறார். நடிப்பிலும் பொம்மையாகத்தான் இருக்கிறார். குளோசப் காட்சிகளில் மட்டும் ஒரு கலைரசனைமிக்க  சிற்பி செதுக்கிய சிலை போல அவ்வளவு அழகு...! ஆனால் இதையே வைத்து எவ்வளவு காலம் ஓட்டிவிட முடியும்..?  வ.வா.சங்கம் படத்தில் ஓரளவாவது நடித்திருப்பார். இந்தப்படத்தில் முகத்தில் உணர்ச்சியும் இல்லை. நடிப்பில் முதிர்ச்சியும் இல்லை. கனவுக்கன்னியாக வருவதற்கான  'அமைப்பும்' அவ்வளவாக இல்லையென்பதால் 'கேர்ள் நெக்ஸ்ட் டோர்' என்பதை மட்டும் வைத்து  தமிழ் சினிமாவில் நீண்ட காலம் வண்டி ஓட்டிவிட முடியாது. அட்லீஸ்ட் கொஞ்சம் உணர்ச்சியோடு நடிங்க அம்மணி..


படத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் இமான் அண்ணாச்சியின் காமெடி. வடிவேல் விட்டுச் சென்ற வெற்றிடம் இன்னும் அப்படியே இருக்கிறது என்றும் முட்டிப் போட்டாலும் அந்த இடத்தை சூரியால் நெருங்க முடியாது என்றும் முன்பு எழுதியிருந்தேன். ஆனால் அந்த இடத்தை இமான் அண்ணாச்சி நிரப்பி விடுவரோ எனத் தோன்றுகிறது. நிறைய இடங்களில் சிரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் அதற்கு இவருதாம்ல காரணம்..!. முன்பெல்லாம் திருநெல்வேலி பாஷையை செய்தி வாசிப்பது போல பேசுவார். அந்த ஸ்லாங் தற்போது அவருக்கு சுதிசுத்தமாக வருகிறது.

வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர். சண்டமாருதம் போல வசனங்கள்  உறுத்தவில்லை. திவ்யாவின் வீட்டில் சிவாவின் அம்மா பெண் கேட்கும் காட்சி உட்பட சில இடங்களில் ஜொலிக்கிறார் பி.கே.பி.

படத்தின் முக்கியமான நெருடல் இசை. வெஸ்டர்ன் இசையை மட்டும் வைத்து ஒப்பேற்றிவிடலாம் என நினைக்கிறார் அனிருத். பின்னணி இசை இரைச்சலாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்களை அனிருத்தே பாடியிருக்கிறார்.  சிவாவுடன் இணைந்து பாடும் ' கொக்கி போட்டுத்தான் ' பாடல் மட்டும் பரவாயில்லை ரகம்.  இந்தப்படத்திற்கு போட்ட டியூனைத்தான் கத்திக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டார் அனிருத் என்று எங்கேயோ படித்த ஞாபகம். அது உண்மைதான் போலும்.

இது ஒரு ஜனரஞ்சகமான படமாக இருந்தால் பின்பாதியில் போடும் மொக்கையை சகித்துக் கொண்டு போய் விடலாம்.  ஆனால் மிகமிக  சென்சிடிவான ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக் கொண்டு அதைத் தற்குறித்தனமாக காட்சிப்படுத்தியிருப்பதால் இதிலுள்ள குறைகளை  சுட்டிக்காட்டாமல் போய்விட முடியாது.

முதலில் ஆர்கன் திருட்டைப் பற்றி சொல்லும்போது சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. எப்படி திருடுகிறார்கள், யாரையெல்லாம் தேர்ந்தெடுக்கிறார்கள், எங்கே விற்கிறார்கள் என்கிற 'டீடெயிலிங்' எந்தப் படத்திலும் சொல்லாதது. சட்டத்துக்கு புறம்பாக செய்யும் இந்தத் தொழிலில் ரகசியங்கள் எந்த அளவுக்கு பாதுக்கப்பட வேண்டியது ?.  இதை நடத்தும் வில்லன் வெளியுலகத்துக்கு வரவே மாட்டாராம். இன்டர்நேசனல் அளவில் வியாபாரம் செய்வாராம். செய்யட்டும். ஆனால் அவ்வளவு ரகசியமாக செய்யப்படும் இந்தத் தொழிலில், அதன் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் சர்வர் ரூமில் யார் வேண்டுமானாலும் நுழைய முடியுமா என்ன..?. அப்படி நுழைந்து அதிலுள்ள தகவல்கள் சுலபமாக எடுக்க முடிகிறதே அது எப்படி..?. பாஸ்வேர்டு கூடவா இல்லாமல் இருக்கும்...?. அவர்கள் ஆர்கன் திருட்டுதான் செய்கிறார்கள் என்பதை ஒரு சாதாரண கான்ஸ்டபிலும் ஒரு நர்சும் சேர்ந்து கண்டுபிடிப்பது செம காமெடி.   


சரி... நர்சாக வேலைப் பார்க்கும் ஒரு பெண்ணுக்கு சர்வர் ரூம் எங்கிருக்கு, எந்த சர்வரில் அதன் விவரங்கள் இருக்கு, அதை எப்படி திறப்பது ,அதிலிருந்து தகவல்களை எப்படி பெறுவது என்றெல்லாம் கூடவா தெரியும்?. இவ்வளவு விவரம் தெரிந்தவருக்கு அங்கே கேமரா இருக்கும் விஷயம் கூடவா தெரியாது?. ஆர்கன் திருட்டின் நெட்வொர்க்கை இவர்கள் கண்டுபிடிக்கும் விதம் சில்லறைத்தனமாக இருக்கிறது. சஸ்பென்ஸ், திருப்பம் எதுவுமே இல்லாமல் இரண்டாம் பாதி நகர்வதால் துள்ளிக் குதித்து ஓடவேண்டிய திரைக்கதை தவழ்ந்து சென்று கடைசியில் படுத்தே விடுகிறது.

வில்லனாக வரும் விஜய்ராஸ் உடல்மொழியிலும் தோற்றத்திலும் அப்படியே ரகுவரனை ஞாபகப்படுத்து- கிறார். தொழில் நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்து உள்ளங்கையில் உலகம் சுழலும் இந்த யுகத்தில், இவர் கையில் அவளோ பெரிய லேப்டாப்பை எதற்குக் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இவர் வரும் எல்லா காட்சிகளிலும் அந்த ஆப்பிள் லேப்டாப்பும் கூடவே வருகிறது. ஆரம்பத்தில் கொடூர தாதாவாக அறியப் பட்டவர் கடைசியில் சில்லறைத்தனமாக சிவாவுடன் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறார். அதெல்லாம் சரி... ஊரையே பயமுறுத்தும் ஒரு ரவுடி, ஹீரோவை சமாளிப்பதற்காகவும், தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ வாக நிற்பது போன்ற சீனை இன்னும் எத்தனைக் காலத்துக்கு தமிழ் சினிமாவில் காட்டப் போறீங்க?. இந்தப் புளிச்சிப் போன கிளிசே எல்லாம் கொஞ்சம் மாத்துங்கப்பா..

தன் ஆதரவாளன் ஒருத்தன் வேறு கட்சிக்கு மாறுவதற்கு பேச்சு வார்த்தை நடத்துகிறான் என தெரிந்தவுடன் அவனைப் போட்டுத்தள்ளுகிறார் வில்லன். தன் ரகசியங்களை போலீசிடம் போட்டுக் கொடுக்கப்போகும் தன் அப்பாவையே குண்டு வைத்து கொல்கிறார் அதே வில்லன். ஆனால் சர்வர் ரூமில் போய் எல்லா விவரங்களையும் திருடிய திவ்யாவையும் அதை வைத்து காய் நகர்த்தும் சிவாவையும் மட்டும் கொல்லாமல் பேச்சவார்த்தை நடத்துவாராம். என்னய்யா கதை விடுறீங்க..

வில்லனை சிக்க வைக்க அவர் லேப்டாப்பில் இருக்கும் தகவல் சிவாவுக்கு வேண்டும். அவளோப் பெரிய ரவுடியின் வீட்டுக்குள் எல்லா பாதுகாப்பையும் மீறி சிரிச்சா போச்சி குழுவுடன் உள்ளே போகிறார். சரி சின்னப் பசங்க.லாஜிக் பார்க்க வேண்டாம்,விட்டுடலாம். உள்ளே போனவுடன் லேப்டாப்பை கண்டுபிடிக்கிறார். லேப்டாப் தான் கிடைச்சாச்சே. அதை அப்படியே எடுத்துட்டு போகவேண்டியது தானே.. அதுக்குள்ளே சிடியை போட்டு காப்பி பண்ணுவாங்களாம். அது முடியும் முன்னே வில்லன் வந்து விடுவானாம். அதை வைத்து நமக்கு டென்சன் ஏத்துறாங்கலாமாம். முடியில..


மனோபாலாவை கவிழ்ப்பதற்கு சிவா ஒரு கதை விடுவார். முடியலடா சாமி. அதையெல்லாம்  காமெடிக் காட்சிகள் என்று எப்படி முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை.

உடலுறுப்பு திருட்டு என்பதே சட்டத்துக்கு புறம்பாக செய்வது. அதைச் செய்வது ஒரு அண்டர் வேர்டு தாதா. அவன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கடத்தி உடல்பாகங்களை எடுத்துக்கொண்டு அவர்களைக் கொன்று விடலாம். என்னை அறிந்தால் படத்தில் சொன்னது போல ஒரு குறிப்பிட்ட ரத்த வகையை சேர்ந்தவர்களின் ஆர்கன் வேண்டுமென்றால் மட்டுமே ரிஸ்க் எடுத்து அவர்களைக் கடத்த வேண்டும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி எதையும் சொல்லவில்லை. அப்படியிருக்க எதற்காக இவர்களே ஆக்சிடெண்ட்டை செட்டப் செய்து, இவர்களே ஆம்புலன்சை வைத்துக் கடத்தி, அவர்களுக்கு 'CO '  கொடுத்து, பிறகு  எல்லா ஃபார்மாலிட்டியும் செய்து... எதுக்கு இவ்வளவு  ரிஸ்க்..? . அப்படித்தான் காட்டுவோம் என்றால் அதற்குப் பின்னால் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள ஒருவர் இருக்கிறார் என காட்டியிருக்கவேண்டும். 

இப்படி எல்லாம் யோசிச்சி படம் பார்த்தால் எதையும் ரசிக்க முடியாதுதான். ஜாலியான படம் என்றால் விட்டுவிடலாம். ஆனால் சென்சிடிவான ஒரு விஷயத்தை காட்சிப்படுத்தும்போது அதை நேர்த்தியாக சொன்னால்தானே கடைநிலை ரசிகனையும் கவர முடியும்.

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களினால் அவர் மீது உருவாகியிருக்கும் இமேஜ் இந்தப் படத்தை எப்படியாவது கரை சேர்த்துவிடும். தவிரவும், விரசமான காட்சிகளோ வசனங்களோ இல்லாதது தாய்மார்கள் மத்தியில் அவருக்கிருக்கும் செல்வாக்கை(!) அதிகரிக்கவே செய்யும். இரண்டாம் பாதி திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி, தர்க்க பிழைகள் எல்லாம் தெரியாத அளவுக்கு செய்திருந்தால் 'என்னை அறிந்தால்' படத்தையே ஓவர் டேக் பண்ணியிருக்கும். நம்ம சிவகார்த்திகேயன்தானே.. படம் எப்படியும் ஓடிவிடும் என்கிற எண்ணத்தில் இதுபோல இன்னும் இரண்டு படங்கள் எடுங்க.. அப்புறம் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில அவரை லென்ஸ் வைத்துதான் தேடவேண்டியிருக்கும். 

மொத்தமாக பார்த்தால் முன்பாதி சுமார். பின்பாதி படு சுமார்.

காக்கி சட்டை கொஞ்சம் கசங்கிய சட்டைதான்.


Wednesday 25 February 2015

சண்டமாருதம்- சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா...

ம்மையாரை ஜெயிலுக்கு அனுப்பியாச்சி. அவருக்கு அடுத்த இடத்தில் பவரான ஆள் யாரும் கிடையாது. இந்த கேப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற நப்பாசையில் கொஞ்ச நாட்களாகவே முதல்வர் கனவில் நம்ம புரட்சித் திலகம் மிதந்து கொண்டிருக்கிறார்.

அந்த மிதப்பில், 'சார் அந்த குரங்கு பொம்மை என்ன விலை' என்று கேட்கிறார். பாவம், 'அது கண்ணாடி' என்று அவருக்கு யார் புரிய வைப்பார்களோ தெரியவில்லை. என் கட்சியினர் விரும்பினாலும் மக்கள் விரும்பினால் தான் நான் முதல்வர் ஆகமுடியும் என்று அதே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.முதல்ல அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ வாக நிற்பதற்கு அம்மையார் அனுமதிப்பாங்களா என்பதை யோசி சித்தப்பு.

அது என்ன புரட்சித் திலகம் ...? . புரட்சித்தலைவரின் ஈகைக் குணமும் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையும் கலந்து செய்த கலவை அவர் என்று எவனோ ஒருவன் ஏற்றி விட்டிருக்கிறான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலில் சாதித்த நடிகர்/நடிகைகள் என்றால் அது ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். அம்மூவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை பெயருக்கு முன்னால் இருக்கும் 'புரட்சி'. இப்ப புரியுதா எதுக்காக எங்க சித்தப்பு 'சுப்ரீம் ஸ்டார்' என்கிற பட்டத்தைத் துறந்து புரட்சித்திலகம் என மாற்றிகொண்டார் என்று..!

நம்ம புரட்சித் திலகத்தின் உலகப் படைப்பின் உச்சமான மண்டமாருதம்... ச்சீ.. சண்டமாருதம் எப்படியிருக்கு என்று பார்ப்போம்.

டடா.. எவ்வளவு நாளாச்சி இப்படியொரு மொக்கைப் படத்தை பார்த்து...! சரி,  விமர்சனம் எழுதுற நமக்கும் ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டாமா...?  மேட்டிமைத்தனத்தோடும் அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப் படும் தமிழ் சினிமா படைப்புகளுக்கு விமர்சனம் எழுதும்போது அதைவிட நுட்பமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து எழுதுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. அவ்வப்போது இது மாதிரி மொண்ணை படங்களும் வந்தால் தான் நமக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்..!


கதை, நம்ம புரட்சித் திலகத்தின் சொந்த சரக்காமாம். நான்கு வருடங்களுக்குப் பிறகு படம் எடுக்கிறார். ஒரு வேடத்தில் நடித்தால் இவ்வளவு நாட்கள்  தவமிருந்து காத்திருக்கும் ரசிகர்களின் கலைத்தாகத்திற்கு சரிவர தண்ணி காட்டாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் இரண்டு வேடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் புரட்சித் திலகம்.  டபுள் ஆக்ட் என்று முடிவு செய்தாயிற்று. அப்பா-மகன், அண்ணன்- தம்பி, தாத்தா -பேரன் என எல்லா காம்பினேசனிலும் நடித்தாயிற்று. தமிழ் சினிமா கண்டிராத ஒரு புது காம்பினேசனை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்கிற வெறிகொண்டு சித்தியோடு சேர்ந்து சீரியஸாக சிந்திக்கும் வேளையில்தான் நம்ம புரட்சித் திலகத்திற்கு இப்படி ஒரு ஐடியா உதித்திருக்க வேண்டும். ஒருவர் ஹீரோவாம் இன்னொருவர் வில்லனாம். அப்படி என்றால் இதற்கு முன் யாருமே அப்படி நடிக்கவில்லையா என்று தானே கேட்கிறீர்கள். அவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் புரட்சித் திலகம் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

படத்தோட கதை என்னான்னா....  இந்தியாவை அழிக்க நினைக்கும் ஒரு பயங்கரவாதியை ஒரு 'அண்டர் கவர் காப்' போட்டுத்தள்ளுவதே இந்த தண்டமாருதம்.. ச்சீ.. சண்டமாருதம் படத்தின் ஒன் லைன்.

பயங்கரவாதி - கும்பகோணத்தில் (அந்த ஊரு உங்களுக்கு என்னய்யா பாவம் பண்ணிச்சி..) பயங்கர தாதாவாக வலம்வரும் 'சர்வேஸ்வரன்' சரத்குமார்.

அண்டர் கவர் காப்- குடும்பத்துக்கே தெரியாம ரகசியமா ஓவர் நைட்டுல படிச்சி, ட்ரைனிங் எல்லாம் முடிச்சி சொந்த ஊரிலே மப்டியில் போலிசாக வலம் வரும் 'சூர்யா' சரத்குமார்.

இதில் வில்லனாக வரும் பயங்கரவாதி சர்வேஸ்வரன் முதல் முறையாக ஆஸ்கார் கதவை தட்டப்போவதாக, நான் இண்டெர்வலில் பாத்ரூம் கதவை தட்டிக்கொண்டிருக்கும் போது இருவர் பேசிக்கொண்டிருந்தனர். "சூர்யா ஹீரோன்னா..நான் யாரு..?  வில்லன்ன்ன்ன்.... ஹா..ஹா..." என்ற குதிரை கனைக்கும் சத்தத்தைக் கேட்டு பக்கத்து சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடிக்கிட்டு வீறிட்டது. அப்படியே லாலிபாப்பை சப்பிவிட்டு "ஐ ஆம் ஏ ஸ்வீட் வில்லன் " என்று பன்ச் அடிக்கும் அந்தக் காட்சிக்கு மட்டும் ஆறு ஆஸ்கார் தரலாம்.

ஒரு காட்சியில் சீரியஸ் வில்லனாக வருபவர் அடுத்தக் காட்சியிலேயே லாலிபாப், குச்சி மிட்டாய் சாப்பிடும் நான்கு வயது குழந்தையாக மாறி நடிப்பில் ஒரு வேரியேஷன் காண்பித்திருப்பது ஆஸ்கார் கமிட்டியையே குழப்பச்செய்யும் அற்புத நடிப்பு. சூரியன் சுள்ளென்று அடிக்கும் பகலில் தலையில் முண்டாசு மற்றும் கறுப்புக் கூலிங் கிளாசோடு வருபவர் நள்ளிரவிலும் அதே கறுப்புக் கூலிங் கிளாசோடு வருவது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத புதிய உத்தி மட்டுமல்ல 'கன்டினியுட்டி' மிஸ் ஆகிவிடக்கூடாது என்கிற அக்கறையும் கூட. 

"பாக்கு பாக்கு வெத்தல பாக்கு.. டாமு டூமு டையா... ஐத்தலக்கட்டி கும்தலக்கடி கும்பக்கோணம் பையா.. ஏ கும்பகோணம் பையா..." என்று அவர் வாயிலே வண்டி ஓட்டும் காட்சியில் பக்கத்தில் மிரண்டு போயிருந்த குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. வில்லன், ஹீரோ ரோல் மட்டுமல்ல காமெடியன் ரோல் கூட அவருக்கு  நன்றாக வருகிறது  என்பதை ஆஸ்கார் கமிட்டி கவனத்தில் கொள்ளவேண்டும் . இதைத் தன் பாடலின் ஆரம்பத்தில் பயன்படுத்திக்கொள்ள ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்கும் கடும் போட்டி ஏற்படும் என்பது திண்ணம்.

சர்வேஸ்வரன் சரத்குமாரும் சூர்யா சரத்குமாரும் மோதிக்கொள்ளும் அந்த இறுதிக்காட்சி, தசாவதாரம் ஜப்பான் கமலும் வெள்ளைக்கார கமலும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சிக்கு விடும் நேரடி சவால். இரண்டு சரத்குமார்களும் மோதிக்கொள்ளும் காட்சியை எப்படி தத்ரூபமாக எடுத்திருப்பார்கள் என்று படம் பார்க்கும் ரசிகன் சிந்தித்து சிரமப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில், சண்டைப் போடுவது ஒரு டூப்புதான் என்பதை கேமரா மிகத்தெளிவாக காட்டும்படி செய்திருப்பது இயக்குனரின் ரசிகன் மீதான அக்கறையை காட்டுகிறது.

ஒரே வீட்டில் மூன்று தலைமுறைகளுடன் கூட்டுக் குடும்பமாக 'சூர்யா' சரத்குமாரின் குடும்பம் வாழ்கிறது. நாயகியும் அதே வீட்டில் சிறுவயது முதல் வளர்கிறார். ஆனால் அவர் போலிஸ் என்பது அவரது அப்பாவைத் தவிர யாருக்கும் தெரியாது என்பது மட்டுமல்ல அவர் போலிசுக்கு படித்ததே யாருக்கும் தெரியாது என்பது இதுவரை  தமிழ் சினிமா கண்டிராத ட்விஸ்ட். அவர் போலிஸ் என்று வில்லன் 'சர்வேஸ்வரன்' சரத்குமார் சொல்லும்போது 'பெத்த தாய்' உட்பட மொத்தக் குடும்பமே உறைந்து நிற்கிறது. ஏம்பா.. 'அண்டர் கவர் காப்' என்பதை சீக்ரெட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் போலிஸ் என்பதைக் கூடவா சீக்ரட்டாக வைத்திருக்கணும்..?.  அதிலும் , கும்பகோணத்தில் பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னணியில் ரவுடிகளை டப்பு..டப்பு..சுட்டுத் தள்ளுகிறார் ரகசிய போலிஸ் புரட்சித் திலகம். இருந்தாலும் அவர் யார் என்பது யாருக்குமே தெரியாது என்பதில்தான் இயக்குனரின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

காமெடிக்கு தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி இருந்தும் தொய்வு விழுகிறது. அப்படி விழுந்த தொய்வை செங்குத்தா தூக்கி நிறுத்த வெண்ணிற ஆடை மூர்த்தி வருகிறார். ஆனால் மூன்று காமெடியன்கள் இருந்தாலும் கிளைமாக்சில் சர்வேஸ்வரன் சரத்குமார் செய்யும் காமெடிக்கு முன்பு இவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.

காசி சொம்புனு ஒன்னு காண்பிக்கிறாங்க. கேட்டா 'ஓஃ பாலஸீக்கா' னு கதை விடுறாங்க.. சரி..ஏதோ ஒரு புது விஷயம் சொல்ல வராங்கனு சீட் நுனிக்கு வந்து கேட்டா பத்தாம் வகுப்புல சயன்ஸ் வாத்தியார் பாடம் நடத்துற மாதிரி விளக்கம் கொடுக்கிறாங்க.. அதிலும் அந்த வின்சென்ட் அசோகன் இருக்கிறாரே.. ஏதோ ரிசர்ச் இன்ஸ்டிடியூட் வைவாவுல விளக்கம் சொல்றமாதிரி நின்னு நிதானமா விளக்கம் சொல்கிறார். அதை எல்லாம் கேட்டு நாங்க என்ன பரிட்சையா எழுதப் போகிறோம்.. இந்த இடத்தில் கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

நிறைய எழுத்தாளர்கள் சினிமாவில் வெற்றிகரமாக வளம் வந்திருக்கிறார்கள். மகேந்திரன், பாலுமகேந்திரா, வசந்த் உள்ளிட்ட நிறைய இயக்குனர்கள் கலைத்துறைக்கு வருவதற்கு முன் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள்தான். சுஜாதா, பாலகுமாரன், சுபா போன்றவர்கள் கதை, திரைக்கதை, வசனம் என்கிற எல்லையோடு தனது பயணத்தை சுருக்கிக் கொண்டாலும் பூவைச்சுற்றும் வண்டு போல முன்னணி இயக்குனர்கள் இவர்களை மொய்க்கும் அளவுக்கு சாதித்துக் காட்டியவர்கள். தமிழகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் மாத இதழின் நூலாசியர் ராஜேஷ்குமார் அவர்கள் ஏற்கனவே பட்டும் படாமல் வைத்தக் காலை தற்போது பலமாக சினிமா என்கிற மைதானத்தில் ஊன்றியிருக்கிறார். 

திரைக்கதை ,வசனம் என்கிற இரண்டு முக்கிய பொறுப்பு அவருக்கு. என்ன கொடுமை என்றால் அது இரண்டும்தான்  படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். சமீபத்திய படங்களில் எதிலுமே வசனங்கள் உறுத்தியதாகத் தெரியவில்லை. ஒன்று, அட போட வைக்கும் அல்லது படத்தின் ஓட்டத்தோடு அதுவும் போகும். இந்தப் படத்தில் கேரக்டர்கள் பேசும் வசனங்கள் நம்மிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கிறது. பேச்சுத்தமிழ் வேறு.. மேடைத்தமிழ் வேறு.  ஒரு வாக்கியம் பேசினால் அதில் பாதி வார்த்தைகள் சுந்தரத் தமிழில் இருக்கிறது. போலிஸ் ஆபீசர்கள் பேசிக்கொள்ளும்போது பள்ளியில் தமிழாசிரியர் இருவர் சந்தித்துக் கொண்டால் எப்படிப் பேசிக்கொள்வார்களோ அப்படி பேசுகிறார்கள். ஒன்று ஆங்கிலம் அல்லது சுந்தரத் தமிழ். படம் கும்பகோணத்தில் நடப்பதாக காண்பிக்கிறார்கள். தஞ்சை , கும்பகோணம் ,திருவாரூர் பகுதிகளுக்கென்று ஒரு தனி ஸ்லாங் இருக்கிறது. ஆனந்தம் படத்தைப் பாருங்கள். தெளிவாகப் புரியும்.

அதேப்போல் திரைக்கதையிலும் நிறைய ஓட்டைகள். எண்பதுகளில் வந்த எஸ்.பி. முத்துராமன் படங்களைப் பார்த்த உணர்வு. திரைக்கதை அமைப்பதில் தமிழ் சினிமா எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அவரது கிரைம் நாவல் படிக்கும் பொழுது ஏற்படும் பரபரப்பு இதில் கொஞ்சம் கூட இல்லை. படத்தில் இருக்கும் ட்விஸ்டும் மொக்கைத் தனமாக இருக்கிறது. எனது ஆதர்ஷ எழுத்தாளர். ஆனால் திரையுலகில் சாதிக்க இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் போல.. அடுத்தப் படத்தில் சாதிப்பார் என நம்புவோம்.


தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு போய்கிட்டு இருக்குனு எவன்யா சொன்னான்..? 80 -களில்  வெளிவந்த எஸ்.பி.முத்துராமன் படங்களை இப்போது தொலைகாட்சியில் பார்க்கும்போது அவ்வளவு கோபம் வருகிறது. படத்தில் சில தர்க்கப் பிழைகள் இருக்கலாம். படமே பிழையாக இருந்தால் எப்படி...? அவர் படங்கள் எல்லாம் அப்போது எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்ற கேள்விக்கு நேரடியான பதில் என்னிடம்இல்லை. ஆனால் அதே காலகட்டத்தில் வெளிவந்த மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை  இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகான சந்ததிகளும் சிலாகித்து ரசித்துப் பார்ப்பார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.

தேரை இழுத்து தெருவில் விடுவது போல அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை இதுபோல சில படங்கள்  திரும்பவும் 80 களின் காலகட்டத்திற்கு கொண்டு செல்லுமோ என்கிற அச்சம் தமிழ் சினிமா மீதான  நம்பிக்கையையே சிதறடிக்கச் செய்கிறது.

அதெல்லாம் சரி...  ஓவியாவை வைத்து  நம்ம புரட்சித் திலகம் ஏதோ அகழ்வாராய்ச்சி செய்யிற மாதிரி போஸ்டர் எல்லாம் வெளியிட்டீங்க. அதை நம்பித்தானய்யா நாங்க எல்லாம்  படம் பார்க்க வந்தோம். ஆனால் போஸ்டர்ல இருக்கிற சீனு ஒன்னு கூட படத்தில காணோமேய்யா... இவ்வளவு தானாய்யா உங்க டக்கு..?

படத்தின் கிளைமாக்ஸில் நம் ரத்தமே உரையச்செய்கிற அளவுக்கு ஒரு திகிலான காட்சி இருக்கு. இதுதான் படத்திற்கு மிகப்பெரிய டர்னிங் பாய்ன்ட். அதாவது படத்தில வருகிற  இரண்டு ஹீரோயின் உடம்பிலேயும் 'டைம் பாம் ' செட் பண்ணி சங்கிலியால் கட்டி வச்சிடுவாங்க. பாம் என்றால் அதில் பச்சை ஒயரும் சிவப்பு ஒயரும் கண்டிப்பாக இருக்கும் என்பதும் அந்த இரண்டு ஒயரில் ஒரு ஒயரை இரண்டு வினாடிகளே மீதம் இருக்கும் தருவாயில் ஹீரோ கட் பண்ணி பாம்மை டெஃப்யூஸ் செய்து விடுவார் என்பதும் காலங்காலமாக தமிழ் சினிமா பின்பற்றும் நடைமுறை ..

இதில் முதலில் ஓவியா உடம்பில் டைம் பாம் செட் பண்ணி வைக்கிறார் சர்வேஸ்வரன். அதை நம் போலிஸ் சித்தப்பு தெரிந்து கொள்கிறார். அருகில் சென்று அந்த பாமை உற்று நோக்குகிறார். என்ன ஆச்சர்யம்..! அதே பச்சை ஒயரு.. சிவப்பு ஒயரு.. (எத்தனை வருஷம் ஆனாலும் நாங்க கலர மட்டும் மாத்த மாட்டோம்டி..). இரண்டில் எந்த ஒயரை கட் பண்ணுவது என்று நம்மைப் போலவே சித்தப்புவும் குழம்பிப் போய்  நிற்கிறார். நமக்கும் மனது கிடந்து பக்..பக் என அடித்துக் கொள்கிறது. பச்சை ஒயரா.. சிவப்பு ஒயரா.? பச்சையா..சிவப்பா..? ப...சி...?. கடைசியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிவப்பு ஒயரை கட்டிங் பிளேயரால் கட் பண்ணி விடுகிறார் சித்தப்பு. (அந்த இடத்தில சித்தப்பு கையில கட்டிங் பிளேயர் எப்படி வந்தது என யாராவது கேள்வி கேட்டீங்க.. கொண்டே புடுவேன்). அதன் பிறகு திக் திக் நிமிடங்கள். நீங்கள் தள்ளிப்போய் விடுங்கள் என்று ஓவியா கெஞ்சுகிறார். நம்ம சித்தப்புவோ உன்னை விட்டால் நான் யாரை வைத்து அகழ்வாராச்சி செய்வது என்று கலங்கிய மனதுடன் அங்கிருந்து நகர மறுக்கிறார். வினாடிகள் குறைகிறது. துரதிஷ்டவசமாக பாம் வெடித்து விடுகிறது. அப்போது சர்வேஸ்வரன், " ஹ.ஹா...நீ கட் பண்ண வேண்டியது செவப்பு ஒயர் இல்ல... பச்சை ஒயரு.." என்று அடிக்கும் செம பன்ச்-க்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.  என்ன செய்வது . சித்தப்புவுக்கு ஒயர் கட் பன்றதுல முன் அனுபவம் இல்ல போலும் ..

அடுத்ததா இன்னொரு ஹீரோயின் உடம்பிலேயும் டைம் பாம் கட்டி வைத்துவிடுகிறார் வில்லன் சர்வேஸ்வரன். இதுவும் போயிடிச்சினா அகழ்வாராச்சி பண்ண ஆளே கிடைக்காது என்பதால் சித்தப்புவுக்கு  தவிப்பு இன்னும் அதிகமாகிறது. திரும்பவும் கட்டிங் பிளேயரோடு அருகில் செல்கிறார். இங்கேயும் அதே பச்சை ஒயரு.. சிவப்பு ஒயரு.. இங்கதான் ஒரு ட்விஸ்ட் வைக்கிறாங்க. அந்த டைம் பாமை நன்றாக உத்துப் பார்க்கிறார். என்ன ஆச்சர்யம். பச்சைக் கலரு,சிவப்புக் கலரு ஒயருக்கு பின்னால் மஞ்சள் கலரில் இன்னொரு ஒயரும் இருக்கிறது. வழக்கமாக இல்லாமல் மூன்றாவது ஒயரையும் காண்பித்திருப்பது நிச்சயம் தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒரு புதிய உத்தி. தற்போது அவருக்கு மூளை பரபரவென வேலை செய்கிறது. மற்ற இரண்டு ஒயரையும் விட்டுவிட்டு அந்த மூன்றாவது ஒயரை கட் பண்ணுகிறார். நல்லவேளையாக பாம் டெஃப்யூஸ் ஆகிறது. அதுவரை சீட்டின் நுனியில் உட்கார்ந்திருந்த நாம் ரிலாக்சாக பின்னால் சாய்கிறோம். பிறகு அந்த பாம் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை ஒரு தட்டு தட்டுவார். அது தனியாக கழண்டு விழும். அட கூறுகெட்ட சித்தப்பு... இத முன்னாடியே செஞ்சிருக்க வேண்டியதுதானே..ஓவியாவை காப்பாற்றி இருக்கலாமே . இப்போ பாருங்க அகழ்வாராச்சி பன்றதுக்கு ஆள் குறையுது.

எப்படியிருந்தாலும் கடைசி நேர இந்த திகில் அனுபவங்களை தியேட்டரில் சென்று காணத் தவறாதீர்கள்.

மொத்தத்தில் சண்டமாருதம்  ..................... ( வேணாம் விடுங்க...)


ப்ளஸ்
மைனஸ்
இன்டர்வெல்-லில் சாப்பிட்ட பாப்கார்ன். (வழக்கமாக சால்ட் பாப்கார்ன் தான் சாப்பிடுவேன். இந்த தடவை வித்தியாசமாக ஸ்வீட்  பாப்கார்ன் சாப்பிட்டேன். சுவை நன்றாக இருந்தது.)


Saturday 21 February 2015

அனேகன்

னேகன் என்கிற டைட்டில் ஜெகன் சொன்னதாம். னேகன் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவன் என்று பொருள். சிவபெருமானை ஏகன் அனேகன் என்று மணிவாசகர் பாடினாராம். ஏகன் என்றால் ஒருவன். அவன் இறைவன். அவனே பிற தெய்வங்களாக பல வடிவங்களில் இருப்பதால் அநேகன் என குறிப்பிடுகிறார்கள்.(ஜெகன்.. ஏகன்..அனேகன்.. ஒரு ரைம்ஸா  வருது இல்ல...?)

இதில் வெவ்வேறு ஜென்மங்களில் வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு குணவியல்புடன் வருகிறார்கள் 'அனேகன்' தனுஷும், 'அனேகள்' அமைரா தாஸ்தூரும்.

ஒரு நிமிஷம்.... படம் ரிலீசாகி, ஓபனிங் கலெக்சன் எல்லாம் முடிந்து, நெட்டுல கூட வர ஆரம்பிச்சிட்டு. இப்போ என்ன  FDFS பாத்த மாதிரி புதுசா விமர்சனம்..? ஹி..ஹி...அதாகப்பட்டது..ரிலீஸ் அன்னிக்கே படம் பார்த்து விமர்சனம் எழுதி வெளியிட்டுவிட்டேன் . ஆபிசில் அதிகபட்ச ஆணிகள் இருந்ததால் பிளாக் பக்கம் ஒருவாரம் வரமுடியவில்லை. இப்போ வந்து சண்டமாருதம் விமர்சனம் எழுதலாம்னு திறந்து பார்த்தால், 'என்னை அறிந்தால்' -லே நிக்குது. பதிவு draft-ல் கிடக்குது. கடலே வற்றிப் போனாலும் போகலாம். அடியேன் கடமை தவறியதாக சரித்திரம் இருக்கவே கூடாது. ஆதலால் வேறு வழியில்லை. போனவாரம் போட்ட டீ  யை இந்தவாரம் ஆத்த வேண்டியதுதான்..!

கிட்டத்தட்ட இரண்டாம் உலகத்தின் கதைக்களன். தன் அண்ணனுக்கு இதுவரையிருந்த திரையாளுமை பிம்பத்தை ஒட்டுமொத்தமாக ஒரே படத்தில் நொறுக்கியெடுத்த அதே கதைக்களத்தில் தைரியமாக தனுஷ் மீண்டும் களமாடியிருப்பது சவாலான விசயம்தான். அதில் சொதப்பிய, குழப்பிய அநேக விசயங்களை  னேகனில் நேர்த்தியாகவும் ஓரளவு புரியும் படியும் சொல்லிய வகையில் தனித்து நின்று அபார வெற்றி பெற்றிருக்கிறது அநேகன் டீம் .

இரண்டாம் உலகம் போல அநேகனும் mystical love -வை  அடிப்படையாக  கொண்டது. இரண்டு படங்களின் ஜீவ நாடியே காதல்தான். அது ஒன்றுதானே எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது..!. இரண்டாம் உலகத்தில் இன்னொரு உலகத்தைக் காண்பித்து குழப்பியிருப்பார்கள்.கற்பனைக் கதைதான் என்றாலும் அதைக் கச்சிதமாக சொன்னால்தானே ரசிகனைக் கவரமுடியும்..! இதில் அப்படியேதும் குழப்பியடிக்காமல் நேரடியாக தனித்தனி எபிசோடாகக் காண்பித்து அதனுள் இருக்கும் ஜீவப் பிணைப்பையும் அதன்மூலம் நிகழும் விபரீதங்களையும் தன் நேர்த்தியான திரைக்கதையினுள் புகுத்தி விறுவிறுப்பான ஒரு மசாலா படத்தை கொடுத்திருக்கிறார் கே.வி ஆனந்த்.

படத்தில் நான்கு ஜென்மங்கள் வருகிறது.


நடப்பு ஜென்மத்தில் அஸ்வினாக வரும் தனுசும் மதுமிதாவாக வரும் அமைரா தாஸ்தூரும் 'வீடியோ கேம்' மென்பொருள் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அவர்களின் பாஸ் கார்த்திக். இதில் மதுமிதாவுக்குத் தான் வெவ்வேறு ஜென்மங்களில் நடக்கும் சம்பவங்கள் கனவாக, கற்பனையாக வந்து போகின்றன. அவரது அறிதுயில் நிலையில் சொல்லப்படும் மற்ற மூன்று ஜென்மங்களில் நடக்கும் சம்பவங்களும், அதிலுள்ள மனிதர்களும், அவர்களின் பண்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது.

ஒரு ஜென்மம்,1962-ல் பர்மாவில் நடப்பதாக படம் ஆரம்பிக்கிறது. அங்கு கட்டுமானத் தொழில் செய்யும் தனுஷ், ஒரு ஆபத்திலிருந்து அமைராவைக் காப்பாற்றுகிறார்.அவர்களுக்குள் காதல் தீ பற்றிக்கொள்கிறது. அமைராவின் தந்தை பர்மா ராணுவ அதிகாரி. பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டு கலவரங்கள் வெடிக்க, அனைத்து தமிழர்- களும் தாயகம் திரும்புகிறார்கள். தன் காதலியை பிரிய மனமில்லாமல் அவளையும் உடன் கூட்டிச் செல்லும் போது, வில்லனாக மாறும் அவளது அப்பாவின் தோட்டாக்களுக்கு பலியாகிறார் தனுஷ்.

அமைரா சொல்லும் மற்றொரு ஜென்மத்தில் தனுஷ் இளவரசனாகவும், அமைரா இளவரசியாகவும் வருகிறார்கள். ஒரு பாடலிலே அதை சொல்லிவிடுவதால் 'அப்பாடா' என்கிற தப்பித்த உணர்வு ஏற்படுகிறது.

மூன்றாவதாக, 1987-ல் சென்னையில் காளி என்கிற ரவுடியாக வளம் வரும் தனுஷ், ஊரே நடுங்கும் ஒரு தாதாவைக் கொன்று, கல்யாணியாக வரும் அமைராவின் மனதில் இடம்பிடித்து, மணமுடிக்க விரும்புகிறான். ஆனால் தன் மகளை ஒரு கொலைகாரனுக்கு திருமணம் செய்துக்கொடுக்க விரும்பாத அவளது தந்தை, தொழிலதிபரான கார்த்திக்குக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மணநாளுக்கு முந்தைய இரவு இந்த விஷயம் கார்த்திக்குக் தெரியவர, தனுஷையும் அமிராவையும் சேர்த்து வைப்பதாக நம்பவைத்து நயவஞ்சக- மாக இருவரையும் கொலை செய்து புதைத்து விடுகிறார் கார்த்திக்.

அந்த மூன்று மணி நேரத்தில் அமைராவின் ஆழ்மனதிலிருந்து இந்த நான்கு ஜென்மங்கள் மட்டும் வந்ததால் அத்தோடு தப்பித்தோம். ஆனால் நிகழ் ஜென்மத்திற்கும் முந்தைய ஜென்மத்திற்கும் முடிச்சிப் போட்டதில் பளிச்சிடுகிறது  இயக்குனரின் சாமர்த்தியம்..! திரைக்கதை அமைப்பதிலும் அதுதான் சவாலாக இருந்திருக்கும். நான்கு ஜென்மங்களிலும் நாயகனும் நாயகியும் ஒருவரே.. அவர்களுக்குள் இருக்கும் காதலும் உண்மையே.. அதை எதிர்ப்பவர்கள் மட்டும் மாறுபடுகிறார்கள்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். அந்தந்த காலகட்டங்- களில் ஏதோவொரு சிறப்பியல்வு உடைய எவராவது ஒருவர் நம்மைப் பாதித்திருப்பார். பிறகு மற்றொரு காலகட்டத்தில் அதே இயல்புடைய ஒருவர், வேறொரு தோற்றத்தில் வேறொரு பெயரில் நம் வாழ்வில் கடந்து செல்லும் பொழுது அந்த முதலாமவர் நம் நினைவோடையில் சிறு சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். எல்லாக் கூட்டத்திலும் ராஜா என்கிற பெயரில் ஒருவர் இருப்பதைப் போல..! இதற்கு வெவ்வேறு ஜென்மங்கள் தேவையில்லை. அதையே சினிமா என்கிற விஷுவல் மீடியத்தில் ஒத்த சிறப்பியல்பு உடைய, வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்பவர்களை ஒரே நடிகரை வைத்து காட்சிப் படுத்துவதாக எண்ணிப் பார்த்தோமேயானால் அனேகன் படம் சொன்ன நுட்பமான விஷயத்தை புரிந்துக் கொள்ளலாம். (  இது அனேகன் படத்தைவிட குழப்பமாக இருந்தால் யோசிக்காமல் அடுத்த பத்திக்கு செல்லவும்...)


பர்மாவில் அப்பாவாக வந்தவர் ரியல் லைஃபில் (நிஜ)மாமாவாக வருகிறார். இருவருக்குமே காதலை எதிர்க்கும் ஒன்றுமை குணமுண்டு. அதேப்போல நண்பன்,தோழி என்று ஒவ்வொரு ஜென்மத்திற்கும் ஒரு முடிச்சு போடுகிறார் இயக்குனர். இதில் வேறொரு ஜென்மத்தில் வந்த நபர் அப்படியே நிகழ்ஜென்மத்தில் வந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனையே அனேகன் படத்தின் திரைக்கதையாக மாறியிருக்கிறது. ஐ படத்தில் மொக்கையாகிப் போன சுபா இதில் சக்கைப் போடு போட்டிருக்கிறார்.

நான்கு தோற்றங்களிலும் நம்மைப் பரவசப்படுத்துகிறார் தனுஷ். அவர் நன்றாக நடித்திருக்கிறார் என்பது சுறா மீன் நன்றாக நீந்துகிறதே என்று சொல்வது போல.நான்கு ஜென்மங்களிலும் அவருடன் பயணிக்கும் அமைராவும் தனுசுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் என்பது மறுக்கமுடியா ஆச்சர்யம். ஆனால் இவ்வளவு கனமான பாத்திரத்திற்கு இன்னும் ரம்மியமான ஃபிகரை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது  ரசிகர்கள் மனதிலிருக்கும் நெருடல்.

நவரசநாயகனை வில்லனாக்கியிருக்கிறார்கள். அதை அவர் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.ஆனால் இறுதிக் காட்சியில் தனுஷ் அவரைப்போல பேசிக் காண்பிக்க, அதை அவர் வெகு இயல்பாக புன்னகையோடு ரசிக்கும் போதுதான் அதுவரை அவர் மீதிருந்த வில்லன் என்கிற பிம்பம் உடைந்து தவிடுபொடியாகிறது. நிச்சயம் சத்யராஜ் போன்ற பிறவி வில்லன்கள் அந்தக் காட்சியை வேறு மாதிரியாகக் கையாண்டிருப்பார்கள். கார்த்திக் போன்ற மிகப்பெரிய நடிகர்களை வில்லனாக காட்சிப்படுத்தும் போது வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகளின் மூலமாகவோ அவர்களின் வில்லத்தன்மையை காட்சிப்படுத்த வேண்டுமே ஒழிய அவர்களும் ஸ்டண்ட் நடிகர்களைப் போல ஹீரோவிடம் மாறி மாறி அடிவாங்குவது போல காண்பிக்கக் கூடாது. அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற ஐயத்தைவிட அந்த நடிகர்கள் மீதான நேர்மறையான பிம்பத்தை தகர்ப்பதாக அமைந்துவிடும்.


ஜெகனை ஒரு காமெடியன் என்று கே.வி ஆனந்து மட்டும்தான் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்களை பேசும் நிறைய காமெடியன்களை தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால் நேரடியாகவே வக்கிரமாக பேசும் நடிகர் இவர் ஒருவர் மட்டும்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தணிக்கை விதிகளுக்கு கட்டுப்படாது என்கிற ஒரே காரணத்திற்காக நகைச்சுவை என்கிற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ வில் ஆபாசத்தை அள்ளித்தெளிக்கும் இவரின் சொந்த சரக்காகத்தான் ' சலவைக்காரன் ' வசனம் இருந்திருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். நல்லவேளை "சலவைக்காரனுக்கு பொண்டாட்டி மேல் ஆசை.. பொண்டாடிக்கு கழுதை மேல ஆசை..." என்று டிரைலரில் வந்த வசனம் திரையில், "ஆசை மாமனுக்கு முறைப்பொண்ணு மேல ஆசை .." என்றும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

படத்தின் முக்கிய பலம் பாடல்கள். அதிலும் 'டங்கா மாரி...' பாடலை ஒரு சென்ஸேஸ்னல் ஹிட் என்று சொல்லலாம். மன்மத ராசா... அப்படிப்போடு... ஓ போடு .. மதுரை வீரன் தானே .. வரிசையில் இந்தப் பாடலையும் வைக்கலாம். மற்றொரு பலம் பூர்வ ஜென்மம் பற்றிய கற்பனைக் கதைதானே என்று நினைக்காமல் அதனுள் வரலாற்று நிகழ்வுகளை நேர்த்தியாக சொன்னது.

படத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை லாவகமாக அடைத்து கேள்வி எழாமல் செய்திருப்பது சுபா- கே.வி ஆனந்து கூட்டணியின் சாமர்த்தியம்.

ஆக்கத்திலும் உணர்விலும் ஏகனுக்கு ஒரு படி மேலேதான் இந்த அனேகன்.


Friday 6 February 2015

என்னை அறிந்தால்...அல்டிமேட்..! -(விமர்சனம்)

காக்க...காக்க.., வேட்டையாடு விளையாடு பாணியில் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரியைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மீண்டும் ஒருமுறை அதே ஆட்டுகல்லில் வைத்து அரைத்தெடுத்திருக்கிறார் கவுதம் மேனன்.

கிட்டத்தட்ட படம் பார்த்த அனைவரும் விமர்சகர்களாக மாறி கதையை வெவ்வேறு வடிவங்களில் சொல்லி விட்டார்கள். என் பங்குக்கு நானும் கதையை சொல்லி ஆரம்பிக்கிறேன்.

நடந்தது என்னான்னா ...
அன்புச்செல்வன் ஐபிஎஸ்..., ராகவன் ஐபிஎஸ்..., வரிசையில் சத்யதேவ் ஐபிஎஸ்-ஸாக வரும் 'தல' ஒரு நேர்மையான, கண்ணியமான போலிஸ் அதிகாரி. இளம் வயதில் ரவுடி ஒருவனால் அவரது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மனதில் ஆழமாய்ப் பதிய, அதுபோன்ற கேங்ஸ்டர் கும்பல்களை அழித்தே தீருவேன் என்கிற சபதம் கொண்டு போலிஸ் ஆபிசராகிறார். சட்டத்துக்கு புறம்பாக கடத்தல் தொழில் செய்யும் அருண் விஜய்யோடு நட்பு பாராட்டி அந்தக் கும்பலில் நம்பிக்கையுள்ளவனாய் மாறி,சமயம் பார்த்து அக்கும்பலை தீர்த்து கட்டுகிறார். கோட்டுக்கு அந்தப் பக்கம் கெட்டவனாக  இருக்கும் அருண் விஜய்யை கோட்டுக்கு இந்தப் பக்கம் ஜம்ப் பண்ணி வர சொல்கிறார்.

இதற்கிடையில், கணவனைப் பிரிந்து குழந்தையோடு தனியாக வாழும் நாட்டியத் தாரகை திரிஷாவுடன் தலை-க்கு காதல் மலருகிறது. காதல், கல்யாணம் வரை செல்ல, திருமணத்திற்கு முதல்நாள் திரிஷாவும் அவளது பெற்றோரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். தன் காதலி இறந்த சோகத்தில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அக்குழந்தையுடன் பொழுதைக் கழிக்கிறார்.

தன் நண்பர் ஒருவரின் மகள், சிலரால் கடத்தப்பட, மீண்டும் தல-யின் காக்கிச் சட்டைக்கு வேலை வருகிறது. அக்கடத்தலின் பின்னணியில், மனிதர்களைக் கடத்தி அவர்களின் உடல் உள் உறுப்புகளை (Human organ transplantation) விற்பனை செய்யும் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பது தலைக்கு தெரிய வருகிறது. அக்கடத்தல் கும்பலின் தலைவன் 'கோட்டுக்கு அந்தப்பக்கம்' இருக்கும் அருண் விஜய்.

நகரின் பெரும்புள்ளியான சுமனுக்கு இதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அதே ரத்த வகையைச் சேர்ந்த அனுஷ்காவைக் கடத்தி அவரது இதயத்தைக் களவாடும் அவர்களின் அடுத்தத் திட்டம் தலைக்கு தெரிய வருகிறது. அதை முறியடிக்க அனுஷ்காவுடன் நட்போடு பழகி தன் கஸ்டடிக்குள் கொண்டு வருகிறார் தல. ஏற்கனவே பழைய பகை வேறு இருக்க, அஜித்தும் அருண் விஜய்யும் மோதிக்கொள்கிறார்கள். அடுத்தக் கட்டமாக அவரது வளர்ப்பு மகளை கடத்தி அதன் மூலம் அனுஷ்காவை அடைய திட்டம் போடுகிறார் அருண் விஜய். இறுதியில் அனுஷ்காவும் அந்தக் குழந்தையும் காப்பாற்றப் பட்டார்களா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அசத்தலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.


கவுதம் மேனன்... 
'தல' யின் அலட்டலில்லாத அறிமுகக் காட்சியே சொல்லிவிடுகிறது, இது கவுதம் மேனனின் படம் என்று.  இயக்குனர் இதில் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. அவரது முந்தைய போலிஸ் ஸ்டோரிகளான  காக்க காக்க , வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியாக உருவி புதிய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றியிருக்கிறார்.முன்பாதியில் ஒவ்வொரு சம்பவமும் கோர்வையாக இல்லாததால் பெரிய தாக்கத்தைக் கொடுக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் வெறுமனே வந்து போவது போல் உள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை ஜெட் வேகம் எடுக்கிறது. பரபரப்பாக செல்லும் கடைசி ஒரு மணிநேர துரத்தல்கள் முன்பாதி தொய்வை தூக்கி நிறுத்துகிறது. கவுதம் மேனனின் ஆக்சன் படங்களில் மென்மையான காதலையும் சரிவரக் கலந்து சொல்வார். இதில் அஜித்துக்கும் திரிஷாவுக்கும் இடையேயுள்ள காதல் வழக்கம்போல அழகான கவிதை..! தனது முந்தைய படங்களின் தோல்வியால் ஏற்பட்ட அவப்பெயரை தல உதவியுடன் இதில் போக்கிவிடுவார் இயக்குனர்.

அஜித்... 
படத்தின் மாஸ் ஓபனிங் 'தல' யால் தான் சாத்தியமானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. படத்திற்குப் படம் தலயின் அழகும் நடிப்பும் மெருகேறிக்கொண்டே போகிறது. அது என்னவோ தெரிவில்லை. திரிஷா, அனுஷ்கா என்ற இரண்டு ஜில்பான்சிகள் திரையில் தோன்றினாலும் தல வரும் சீன்களில் அவரைத் தான் கண்கள் அனிச்சையாக ரசிக்கிறது. இவ்வளவுக்கும் எவ்வித மேக்கப்பும் இல்லாமல் சால்ட் & பெப்பர் ஸ்டைலில் எளிமையாக இருக்கிறார். அளவான நடிப்பு..அலட்டலில்லாத பேச்சு....சண்டைகாட்சிகளில் மட்டும் அனல் பறக்கிறது. என்ன.., நடனத்திற்கும் மட்டும் கொஞ்சம் சிரமப்படுகிறார். முந்தைய மூன்று படங்களிலும் மாஸ் ஹீரோவாக கர்ஜித்த அல்டிமேட்டை இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வெரைட்டியான அனுபவம் கிடைக்கட்டுமே..!


அருண்விஜய்.
தான் ஹீரோவாக நடிக்கும் படம் ஜெயிக்கவேண்டும் என்று தவமிருப்பதைவிட, ஜெயிக்கும் படத்தில் தான் இருந்தால்தான் திரையுலகம் தன்னை கவனிக்கும் என்கிற சூட்சமம் மிகத் தாமதமாகப் புரிந்திருக்கிறது அருண்விஜய்க்கு.கவுதம்மேனனின் முந்தைய படங்களின் கொடூர வில்லன்கள் போலில்லாமல் ஹீரோவுக்கு இணையான ரோல். அஜீத்தோடு போனில் நடக்கும் வாக்குவாதத்தில் தலையையே ஓவர் டேக் செய்யும் அந்தக் காட்சிக்கு திரையரங்கில் செம அப்ளாஸ். காசி தியேட்டரில் முதல் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்தைக் கண்டு கண்கலங்கிய காணொளி பார்க்க நேர்ந்தது. இப்படத்திற்கு உழைத்த உழைப்பு அப்போது வியர்வையாக வராமல் தற்போது கண்ணீராக பெருக்கெடுக்கிறது போல. அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாராகி விட்டார். வாழ்த்துக்கள்...!

திரிஷா - அனுஷ்கா..
நாயகிகள் இருவருக்கும் தொட்டுக்க ஊறுகாய் போல் இல்லாமல் சமமான, நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம். இருவரது நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி(முகத்திலும் தான்). சிங்கம் படத்தைத் தவிர்த்து நடித்த நேரடித் தமிழ் படங்கள் எதுவும் கைக்கொடுக்காத நிலையில் அனுஷ்காவுக்கு இப்படம் கொஞ்சம் ஆறுதல். நல்லவேளை சால்ட்-பெப்பரில் தலையோடு இருவருக்கும் டூயட் இல்லை. இருந்திருந்தால் திருஷ்டியாக இருந்திருக்கும்.

"உனக்கென்ன வேணும் சொல்லு...", "இதயத்தை ஏதோ..." பாடல்களில் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் மிளிர்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு அவர் வந்திருப்பதை உணர்த்துகிறது. படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் டான் மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு ஃபிரேமும் மிகத்துல்லியமாக அழகாக இருக்கிறது.

படத்தின் முக்கியமான குறையாகத் தெரிவது முன்பாதி திரைக்கதை. ஒன்றோடொன்று தொடர்பில்லாத சம்பவங்கள் சுவாரஸ்யத்தை தரவில்லை. அனுஷ்காவை காரணமாகத்தான் அஜித் பின்தொடர்கிறார் என்று தெரியவருகிறபோது அவரைப்போல நமக்கும் பதட்டம் ஏற்படவில்லை. அதேப்போல அஜித்துக்கும் திரிஷா வுக்குமான காதல் காட்சிகள் ஆழமாகக் காட்டப்பட்டிருந்தாலும் அஜித் எதற்காக திரிஷாவை விரும்புகிறார் என்பதை அழுத்தமாக சொல்லவில்லை. வேட்டையாடு விளையாடு படத்தில் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த கமல், ஒரு குழந்தைக்கு தாயான ஜோதிகாவை திருமணம் செய்யவிரும்புவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. இதில் நேர்மையான, திருமணம் ஆகாத போலிஸ் அதிகாரி எதற்காக திரிஷாவுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்..?. தல ஒன்னும் 'ஆண்டி'களுக்கு வாழ்வளிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து விடவில்லையே .... என்று பக்கத்து சீட்டுல ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்..  :-)!.



பதினைந்து நிமிடக் காட்சிகளை இயக்குனரே கத்தரிப் போட்டுள்ளதாக செய்து வந்தது. அனேகமாக அது விவேக் போர்ஷனாக இருக்கலாம். அவர் வரும் ஒன்றிரண்டு காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை எழுந்தது. இன்னும் சொல்லபோனால் முன்பாதியில் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கும் ரசிகர்களை அவர் வரும் சில காட்சிகள் உற்சாகப் படுத்தின. விவேக்கை ஏன் இவ்வளவு சீரியஸாக காண்பித்தார் இயக்குனர் என்பது புரியவில்லை. முன்பாதி தொய்வை அவரை வைத்து சமாளித்திருக்கலாம். தல திரிஷாவிடம் காதலை சொல்லும் அந்த காட்சிவரை சவசவ என்றுதான் படம் நகர்ந்தது. அதன்பிறகுதான் படைப்பிற்குள் ரசிகனை இழுத்தார் இயக்குனர்.

எப்படிப்பார்த்தாலும் தலைக்கு இது இன்னொரு மாஸ் ஹிட். ஒரு படம் ஹிட் கொடுத்தால் அடுத்த நான்கு படங்கள் அவருக்கு சொதப்பும். ஆனால் தொடர்ந்து நான்கு படங்கள் ஹிட் என்பதே ஆச்சர்யம்தான்.

                        ப்ளஸ்                   மைனஸ்
அஜித்தின் Screen presence... மெதுவாக நகரும் முதல் பாதி.... 
அருண் விஜய்... விவேக்கை சரியாகப் பயன்படுத்தாதது.
விறுவிறு இரண்டாம்பாதி. முந்தைய படங்களிலிருந்து சில காட்சிகளை உருவியது.
மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு... சலித்துப் போன போலிஸ் ஸ்டோரி.
ஹாரிஸின் பின்னணி இசை... 
கவுதம்மேனனின் இயக்கம் (especially in the second half..)
திரிஷா,அனுஷ்காவை அழகாகக்
காட்டியது.



Monday 2 February 2015

இசை-விமர்சனம்

சை என்று google-லில் தட்டினால் நாயகனும் நாயகியும் பரவசநிலையில் இருக்கும் படங்கள் 'ஏ'ராளமாக வருகிறது. இது வழக்கமான S.J.சூர்யா படம் என நினைத்திருக்கையில், நண்பர்களின் விமரிசனங்கள் வேறு மாதிரியாக இருந்தது.சீனுவோ ஒருபடி மேலே சென்று இப்படியொரு படம் பார்த்து நீண்ட நாட்களாயிற்று என எழுதியிருந்தார். எப்படியாகினும் படத்தை பார்த்து விடுவது என்று கம்பெனி முடிவு செய்து விட்டது.

" வெற்றி ஒவ்வொரு மனிதனும் வேண்டி பெற இருக்கும் வரப்பிரசாதம். அதற்காக தாய், தந்தை, மனைவி, மக்கள் என அனைத்தையும் மனிதன் தூக்கி எறிய தயாராகிறான். ஏன் சிலநேரம் தன்னையே அந்த வெற்றிக்காக இழக்கத் தயாராகிறான். இப்படி தன்னையே இழந்து பெற்ற வெற்றியை இன்னொருவன் தட்டிப்பறித்து செல்லும் போது எவ்வளவு வலியாக இருக்கும்...?  அந்த வலிக்கு எந்த மருத்துவனும் மருந்து கொடுக்க முடியாது. எந்த மருந்து கடையிலும் இதற்கு மருந்து கிடையாது. தாமே அந்த வலியை அனுபவித்து ஜீரணித்து  சந்தோசமாக வாழவேண்டும். ஒரு வகையில் பார்த்தால் இது வலியல்ல வழி. இன்னொருவர் நமக்கு விட்டுக்கொடுத்த வலியை நாம் இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கிறோம். இப்படித்தான் நம் முன்னோர்கள் வெற்றிகளையும் தோல்விகளையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்..".

விமரிசனம் எழுத வந்தவன் தத்துவம் பேசுறான்னு பாக்குறீங்களா.. இது படத்தின் டைட்டிலில் S.J.சூர்யா கக்கின வாழ்க்கைத் தத்துவம். அதோட விடல... அன்பே ஆருயிர் போல கதையையும் சொல்லிவிடுகிறார்.

மேலே சொன்ன தத்துவத்தின் தொடர்ச்சியாக, ' இசை உலகத்தை, இசை சாம்ராஜ்ஜியத்தை 30 வருடங்கள் கட்டி ஆண்ட 'இசைவேந்தன்' வெற்றிச்செல்வனின்(சத்யராஜ் ) இடத்தை புதிதாக வந்த இசையமைப்பாளர் ஏ.கே.சிவா (S.J.சூர்யா) இரண்டே வருடத்தில் தட்டிப் பறித்து விடுகிறார். தான் இழந்த இடம் தனக்கு மீண்டும் வேண்டும் என்பதற்காக தவறான பாதையை வெற்றிச்செல்வன் தன் கையில் எடுத்ததன் மூலமாக என்னென்ன நிகழ்ந்தது என்கிற கற்பனை வடிவமே இந்தப் படத்தின் கதை.." என முடிக்கிறார். கடைசியில் சொன்னதை கவனமாகக் கேட்கவும். "கற்பனை வடிவமே..!". இதைக் கவனிக்காமல் விட்டவர்கள், படத்தின் இறுதியில் 'அஆ' படத்தின் இயக்குனர் S.J.சூர்யா உருட்டி வாயில் வைத்த அரை கிலோ அல்வாவை ஜீரணிப்பது கடினம்.

யார் கண்டது. பின்நவீனத்துவ இலக்கியம் போல இதை பிற்காலங்களில் திரைப்படங்களின் பின் நவீனத்துவ வடிவம் என்று கூட சொல்வார்கள். KTVI -ல் பார்த்திபன் படத்தின் முடிவை பார்வையாளர்களாகிய நம் கையில் கொடுத்திருந்தார். இசை படத்தில் இதுதான் முடிவு என யூகித்தால்,கடைசியில் அது முடிவல்ல என்கிறார்கள். ஒருவேளை அதுவா இருக்குமோ என்றால் அதுவும் இல்லை என்கிறார்கள். பின்ன என்னதான்யா சொல்ல வருகிறீர்கள் என்றால், ' யோவ்..இது படமே இல்லய்யா..' என்கிறார்கள். அதனால்தான் என்னவோ படத்தின் பிளஸும் மைனஸும் அதுவேயாகிறது. ஆனால் பாருங்கள்.. கடைசியில் S.J.சூர்யா உருட்டி திரட்டி வாயில் வைத்த அல்வாவை பெரும்பான்மையினர் சுவைக்கவே செய்கிறார்கள். இங்குதான் நிற்கிறது படத்தின் வெற்றி.

தலைக்கனம், கர்வம், ஈகோ என்பதின் ஒட்டு மொத்த வடிவமாக இசைக்கடல் சத்யராஜ். வில்லன் பாத்திரம் என்றாலே வெறும் வாயில் அல்வா விழுங்குவது போலல்லவா அவருக்கு. வில்லத்தனத்திற்கு உகந்த அதே நக்கல்,பகடி எல்லாம் அந்த கேரக்டரையே வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. கஞ்சாகருப்பை வைத்துக் கொண்டு அவரது ஈகோவை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் அப்ளாஸை அள்ளுகிறார்கள் இயக்குனரும் வில்லாதி வில்லனும். நீண்ட இடைவெளிக்குப் பின்னால் நிறைவான,கனமான பாத்திரம் அவருக்கு. இனி இப்படி நடித்தாலே இன்னொரு ரவுண்டு வரலாம்.

ஏ.கே.சிவாவாக வரும் S.J.சூர்யா மரம்,செடி,கொடி எல்லாவற்றிலும் இசையைத் தேடுகிறார்.இசை எங்கிருந்து வருகிறது தெரியுமா என்று வகுப்பெதுவும் எடுக்காமல் காட்சிகளின் மூலம் விளக்குவது சிறப்பு. இருக்கு, ஆனா இல்லை....இல்ல, ஆனா இருக்கு... போன்ற குழப்ப மனநிலை தாங்கிய பாத்திரம் இந்தப் படத்திலும். ஆனால் அந்த ஹெக்சகனல் மண்டைக்கு குளோசப் ஷாட் வைக்கும் போதுதான் பீதி கிளம்புகிறது.

ஜெனிபராக 'சுலக்ன பனிக்ராஹி'(தமிழில் சாவித்திரியாம்.மனசாட்சி இல்லையா உங்களுக்கு) முற்பாதியில் ஆள் பாதி ஆடை பாதியாக வருகிறார். அம்மாதிரி தாவணி எந்தூர்லய்யா கிடைக்குது.? அந்த உருட்டி வைத்த சப்பாத்தி மேனியில் கருப்பு நிற transparent தாவணியை தவழவிட்டு, உடன் தழுவிக்கொண்டு, அதை சூடேற்றி, அவரும் சூடேறியதுமில்லாமல்,ஏசி குளிரில் நம்மையும் சூடேற்றி விடுகிறார். இதுபோன்ற கலை ரசனைமிக்க விசயத்தில் S.J.சூர்யாவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

கதாநாயகன் ஆசையால் இருந்த சில்லறை வாய்ப்புகளையும் இழந்த காமெடியன்களின் ரீஎன்ட்ரி இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்துகிறது. சந்தானம், கருணாஸைத் தொடர்ந்து கஞ்சா கருப்பு. பவ்யமாக சத்யராஜிடம் நடித்துக் காண்பிக்கும் அந்தக் காட்சியில் தனது மறுபிரவேசத்தை ஆணி அடித்தாற் போல் அழுத்திச் சொல்கிறார். சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிய சூரி எல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கப்பா..!   

இந்த நான்கு கேரக்டர்களைத் தவிர்த்து படத்தின் அசுர பலம் வசனமும் ஒளிப்பதிவும். வசனங்களை இழைத்து இழைத்து கோர்த்திருக்கிறார். வசனங்களில் காமநெடி அதிகமில்லாதது ஓரளவு ஆறுதல். பிற்பாதியில் ஒவ்வொரு முடிச்சுகளையும் அடுத்தடுத்து அவிழ்ப்பது சுவாரஸ்யம்.


ஒரு இசை ஜாம்பவானின் ஈகோ தனத்தின் கோர வெளிப்பாடுதான் இசை திரைப்படம். அப்படியானால் இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்..?!.  30 ஆண்டுகள் தமிழ்த் திரையிசையில் கோலோச்சிய ஒருவர் இசை ஞானமே இல்லாதது போல் காண்பிக்கப்பட்டிருப்பது ஏன்..?  " த்தூ..த்துத்தூ.. த்துத்தூ.. த்தூ."  என்று மெட்டுப் போடுகிறார். வில்லத்தனத்திற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு இசை மேதையின் குரலில் வந்தது போல் இல்லையே.. அவருக்கு சூர்யா மேல்தான் ஈகோவே தவிர, இசை மீதல்ல..! அவர் இசைக்கருவிகளை மீட்டுவது போலவோ அல்லது இசைக் கச்சேரிகள் செய்வது போலவோ ஒரு நிமிடக் காட்சியாவது வைக்க வேண்டாமா..?. ஒரு தேர்ந்த இசைக்கலைஞன் தன் கோபம் ,சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் தான் நேசிக்கும் இசையோடு பகிர்ந்துக் கொள்வான். நான்தான் இசை, இசை என் உயிர் என் வாய் ஜம்பம் மட்டும் அடிக்கிறார் சத்யராஜ். அவர் இசையமைத்ததாய் ஒரு மென்மையான மெட்டு கூட மருந்துக்கும் காண்பிக்கப்படவில்லை.

S.J.சூர்யாவைச் சுற்றி சத்யராஜ் சதிவலைப் பின்னுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அது எப்படி உடம்பு முழுக்க வில்லத்தனம் உடைய ஒருவருக்கு அத்தனை விசுவாசிகள், எவ்வளவு அடித்தாலும் குட்டிப்போட்ட பூனைபோல காலைச் சுற்றிவரும் கஞ்சா கருப்பு போன்றவர்கள் இருக்க, சூர்யா அருகில் நம்பகமான ஒருவர் கூடவா இருக்க மாட்டார்...?. அட்லீஸ்ட் ஒரு நன்றியுள்ள நாய் கூடவா இருக்காது..?. சூர்யாவைத் தவிர அவரைச்சுற்றியுள்ள அத்தனையும் சத்யராஜின் செட்டப்புதான் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வித்தியாசமாக நடக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அவர்களை வெளியேற்றாமல் கூடவே வைத்திருந்து ஹீரோ குழம்புவது ஏனோ...?

ஒரு திறமையான ஆளுமையை கவிழ்க்க,நிர்மூலமாக்க மனைவி என்கிற பவர்புல் ஆயுதம் ஒன்று போதுமே. மனைவியின் டார்ச்சரால் கணவன்மார்கள் மெண்டலான கதை எவ்வளவு இருக்கிறது..!. அதற்காக ஒரு ஊரையே செட்டப் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா...? இப்படியெல்லாம் கேட்போம் என தெரிந்தே படத்தில் லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது என்று கடைசியில் 'அவர் வாயாலே ' சொல்கிறார்.

பாடல்கள் இரண்டு தேறுகிறது. ஒன்று திருச்சபையில் திருடியது போல் உள்ளது. இப்போதுதான் பியானோ கற்றுக்கொண்டிருக்கிறார் போல.. பின்னணி இசை பெரும்பாலும் பியானோவை வைத்தே சமாளிக்கிறார்.

S.J.சூர்யா படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்க முடியாத விரசக் காட்சிகள் நிறைய இருக்கும் என்கிற பொதுவான கருத்து நம் சமூகத்தில்(!) ஏற்கனவே நிலவுகிறது. அதை மாற்றிக் காட்டுவேன் என்று முன்பு சபதம் எடுத்தார். திரும்பவும் வேதாளம்....... .... .... !   முன்பாதியில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் 'ஏ' ரகம். அத்தனையும் குளோசப் காட்சிகள்.விரல் சப்புவதெல்லாம் ஓவர்..!. வரவர தம்பி ராமையாவும் போரடிக்கிறார். ஓவர் சவுண்டு அவருக்காகாது என்பதை யாராவது தெரியப்படுத்துங்கள்.

அதெல்லாம் சரி. இந்த வெற்றிச்செல்வம் கேரக்டர் யாரையோ பிரதிபலிக்கிற மாதிரி இருக்கிறதே. நேராகவே வருகிறேன். இளையராஜாவிடம் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்த கங்கை அமரனை இப்படியொரு கசப்பான சூழ்நிலையில் ஒருவர் இசையமைப்பாளராக்கினார். அதை பத்திரிகை செய்தி மூலம் தெரிந்துகொண்ட இளையராஜா, உனக்கு இசையைப் பற்றி என்ன தெரியும்..உன்னால் தனியாக இசையமைப்பாளராக முடியுமா என சவால் விட்டதாக கங்கை அமரனே சொல்லியிருக்கிறார். ஆனால் 'இசைக்கடல் ஏ.கே.சிவா' கேரக்டர் கங்கை அமரன் இல்லை, அது இசைப் புயலைக் குறிக்கிறது என்பதை சின்னக் குழந்தைக் கூட சொல்லிவிடும். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் ஆஸ்கார் மேடையில் சொன்னதை இன்னொரு மேடையில் 'புகழை நமக்கு அளிப்பவனே இறைவன்தான். அவன் கொடுத்த புகழை அவனுக்கே திருப்பிக் கொடுப்பது சரியா ' என்று  இளையராஜா நக்கலடித்தார். இன்னும் சில சம்பவங்களை  கோர்த்துத்தான் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறது. இசைஞானியிடம் இயக்குனர்கள் தவம் கிடந்தது, 20 வருடங்கள் கோலோச்சியது, அவரது இசைக்காகவே பல படங்கள் சூப்பர் ஹிட்டானது, தன்னை இசை அவதாரமாகவே அவர் நினைத்துக் கொள்வது ... இப்படி பல விசயங்கள்  படத்திற்கும் அவருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிற மாதிரியே தோன்றுகிறது.  என்னமோ போடா மாதவா..!

படத்தில் தர்க்கபிழைகளை கவனிப்பவர்களுக்கு கடைசியில் அவர் கொடுக்கும் அல்வா கசப்பாக இருக்கலாம். ஆனால் சாராசரி ரசிகர்களுக்கு அவர் சொந்த ஊரான திருநெல்வேலி அல்வாவை திகட்டத் திகட்டப் புகட்டியிருக்கிறார்.

படம் ஆஹா.. ஓஹோ.. என்றெல்லாம் சொல்ல முடியாது. இதுவும் ' ஒரு தடவை பார்க்கலாம் ' என்கிற category -யில் தான் வருகிறது.

                        ப்ளஸ்                   மைனஸ்
சத்யராஜ் வில்லத்தனம்
முன்பாதி விரசக் காட்சிகள்..
தொய்வில்லாத திரைக்கதை கடைசியில் கொடுத்த அல்வா..
வசனம், ஒளிப்பதிவு நம்பகத்தன்மையில்லாத சில காட்சிகள்.
S.J.சூர்யாவின் இயக்கம்