Thursday 25 December 2014

கயல்- விமர்சனம்.

பிரபு சாலமனின் மலையும் மலை சார்ந்த இடங்கள்தான் கதைத் தளம்.

று மாதங்கள் வேலை மீதி ஆறு மாதங்கள் ஊரைச் சுற்றுவது என்கிற ஜாலி பாலிசியுடன் திரிகிறார்கள் ஹீரோ ஆரோன் மற்றும் அவரது நண்பர் சாக்ரடிஸ்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக ஊரைவிட்டு ஓடும் காதல் ஜோடியை அவர்கள் சந்திக்க நேர்கிறது. உண்மை நிலை தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்யப்போய், பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள் இருவரும். அங்கே அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்களும் கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை பெற கட்டி வைத்து நையப்புடைக்கிறது அந்த சாதி வெறிப்பிடித்த கும்பல். தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்தக் கும்பல் நம்ப மறுக்கிறது. அவ்விருவரிடமும் உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.

அதுவரை தனக்கு காதல் வரும்படி எந்தப்பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது. பெண்ணைக் காணாமல் வெறியில் திரியும் அந்தக் கும்பலின் முன்பாகவே கயலை காதலிப்பதாக சொல்கிறான் ஆரோன். ஏற்கனவே கொலைவெறியில் இருப்பவர்களுக்கு இது இன்னும் ஆத்திரமூட்ட, அவனை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அக்கட்டத்தில் ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.

இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்ன ஆரோன் மீது கயலுக்கு காதல் அரும்புகிறது. காதல் வலியால் துடிப்பவளை ஆசுவாசப்படுத்தி காதலனை தேடிச்செல்லுமாறு அவளது பாட்டி யோசனை சொல்ல, காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல்.

கயல் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் பிறகு தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத்தேட,காதல்கோட்டை பார்ட்-2 போல நீள்கிறது தேடும்படலம். இறுதியில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கயல் படத்தின் முடிவு.

முந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .

ரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. மைனா சித்தார்த்-அமலாபாலை ஞாபகப்படுத்துகிறார்கள். இருவரில் கயல் மட்டுமே நம் கண்களில் நிறைகிறார். துரு துரு கண்கள், வெள்ளந்திப் பார்வை, திருஷ்டியாய் உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம், மாநிறம் தோற்றம் என்று ஒரு கிராமத்து தேவதையை அச்சு வார்த்தது போல் இருக்கிறார். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் செமையாக ஸ்கோர் செய்கிறார். 

ஹீரோவின் நண்பரா.. கூப்பிடுங்கடா சூரியை என்கிற சமகால சினிமா ட்ரெண்டுக்கு இயக்குனர் செல்லாதது ஆறுதல். ஆனால் இதில் சாக்ரடிசாக வரும் நண்பர் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு அவ்வப்போது பேசும் வசனம் புரியவும் இல்லை, புரிந்த சில இடங்களில் சிரிப்பும் வரவில்லை. இயக்குனரின் ஆஸ்தான காமெடியன் தம்பி ராமையா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் பெருங்குறையாக நிறைய கேரக்டர்கள் பேசும் வசனங்கள் தெளிவாக இல்லை. கல்யாண வீட்டில் சித்தப்பாவாக வரும் அந்தப் பெரிசு செய்யும் ரவுசு ஓரளவு புன்னகைக்க வைத்தாலும் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவே சிறிது நேரமெடுக்கிறது. ஆர்த்தியும் அவரது மாணவிகளும் தங்கியிருக்கும் லாட்ஜ் ரூம்பாய், ஆர்த்தியை சார் என்று அழைக்கிறார். அதைக் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். சார் என்கிற வார்த்தையைத் தவிர அவர் பேசுவது எதுவுமே புரியவில்லை.அது நகைச்சுவைக்காக சேர்க்கப் பட்ட காட்சி என்றால் பேசுவது புரிந்தால் தானே சிரிக்க முடியும்...?

வில்லனாக வரும் யோகி தேவராஜ் முதல் போலிஸ், லாரி டிரைவர், கயல் பாட்டி என்று படத்தில் நிறையப் பேர் காதலில் phd முடித்தது போல் லெக்சர் எடுப்பது ஏனோ எரிச்சலைத் தருகிறது. வெளி உலகமே தெரியாத ஒரு இளம்பெண்ணை இப்படித்தான் ஒரு பாட்டி காதலனைத் தேடிப்போ என அனுப்பி விடுவாரா..?

ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். சீரியசான ஒரு விசயத்திற்காக போன்  செய்யும் போலிஸ்காரரிடம் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறார். அதைவிடக் கொடுமை அந்தப் போலீஸ்காரர்களிடம் ஆரோனும் சாக்ரடிசும் கக்கும் தத்துவார்த்த சிந்தனைகள். நறுக்கென்று நான்கு டயலாக்கில் முடித்திருக்கலாமே..

ஆரோன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதன் பின்னணியை அவனது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது செம டச்சிங். அதேப்போல் ஆரோனும் சாக்ரடிசும் ஒருவர் பெயரை மற்றொருவருக்கு இனிஷியலாக வைத்துக் கொள்வது 'நண்பேண்டா.. ' வுக்கு புது விளக்கம்.
படத்தில் முக்கிய பலம் என்று கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமாரி வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக பெரிய சபாஷ் போடலாம். தசாவதாரம் படத்தில் சொதப்பிய சுனாமி காட்சிகளை இதில் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார்கள். சுனாமியின் பின்னணிக்காக  டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை வடிவத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மிரட்டலாக இருக்கிறது.

அதெல்லாம் சரி, இந்த சுனாமி காட்சி எதற்காக வைக்கப்பட்டது..? மனிதன் உருவாக்கிக் கொண்ட செயற்கை சீரழிவான சாதியால் பிரித்து வைக்கப்பட்ட ஒரு காதல் ஜோடியை இயற்கை பேரழிவான சுனாமி சேர்த்து வைக்கிறது  என்பதற்காகவா..? அப்படியானால் சுனாமிக்கு முன்பாகவே அவர்கள் சேர்வதாக ஏன் காண்பிக்க வேண்டும்..?

குளோசப் ஷாட்களில் கண்களும் வாயும் தெரிந்தால் போதும் என்பது பிரபு சாலமன் உத்தியா.? அப்படியானால்  சத்தம் வாயிலிருந்து வருவதால் வாயை மட்டும் காண்பித்திருக்கலாமே. சில  குளோசப் கட்சிகள் பயமுறுத்துகிறதய்யா.. 

ஒரு மென்மையான காதலை முரட்டுத்தனமாக சொல்லும் பிரபு சாலமனின் அதே டெம்பிளேட் கதைதான். ஆனால் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை. முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றுகிறது.

சுனாமியை தத்ரூபமாக காட்டிய விதத்திற்காகவும், கயல்விழி ஆனந்திக்காகவும் வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம்.

                        ப்ளஸ்                   மைனஸ்

கயல்விழி

தெளிவில்லாத வசனங்கள்

சுனாமியை காட்டிய விதம்.

முதல் பாதி

ஒளிப்பதிவு
திரைக்கதை.

பாடல்கள்

சிலரது  செயற்கைத்தனமான நடிப்பு.


Saturday 20 December 2014

பிசாசு - செல்ல மிரட்டல்

து என்ன தமிழ்த் திரையுலகத்துக்கு பேய் வருடமா?.அம்மையாரின் இலவச அறிவிப்புகள் போல் வாரத்திற்கு ஓன்று ரிலீசாகிறது.  சில வாரங்களுக்கு முன்பு அரண்மனை, யாமிருக்க பயமேன் வந்து மிரட்டியது. பிறகு, 'இருக்கு ஆனா இல்ல ' வந்து கிச்சு கிச்சு மூட்டியது. சென்ற வாரம் 'ரா' பார்த்தேன். அதற்கு முதல் வாரம் 'ஆ..'.  நேற்று பிசாசு.  நைட் பாத்ரூம் எழுந்து போகக் கூட அச்சமாக இருக்கிறது. ஜன்னல் கதவு அசைந்தாலே மனது கலவரமாகிறது. 

பொதுவாக ஹாரர் படங்களில் உள்ள பிளஸ் என்னவென்றால் விறுவிறுப்பான திரைக்கதைக்கு  நிறைய யோசிக்க வேண்டியதில்லை. தானாகவே அமைந்துவிடும். எந்த நேரத்தில் என்ன நிகழும் என்கிற சிறு படபடப்பே மொக்கைப் படத்தையும் சுவாரஸ்யமாக்கிவிடும்.

அதிலும் சொதப்பிய படங்களும் இருக்கிறது . இருக்கு ஆனா இல்ல, ரா அந்த வகைப் படங்களே. இந்த வருடத்தின் கடைசி ஹாரர் படமான பிசாசு எப்படி இருக்கிறது..?

ணிரத்னம் , ஷங்கர் படங்களின் ஒவ்வொரு காட்சிகளிலும் அவர்களது தனித்துவமான முத்திரை தெரியும். மிஷ்கினும் அவர்கள் வரிசையில் இணையக் கூடிய ஆளுமைதான். சம கால இயக்குனர்களில் தனித்து தெரிபவர். எங்கிருந்து சுடுகிறார் எனத் தெரியாது. ஆனால் விஷுவல் மீடியாவான சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் திறமையாக கையாளக் கூடிய விற்பன்னர். அவரது வழக்கமான குறியீடுகளுடன் வந்திருக் கிறது பிசாசு.

ரொம்ப சிம்பிளான கதைதான்.

வயலின் கலைஞரான சித்தார்த் (புதுமுகம் நாகா), சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்ற போராடுகிறார். துரதிஷ்டவசமாக அவள் இறந்து விடுகிறாள்.

இறந்துபோன அப்பெண்ணின் ஆவி சித்தார்த் மீது காதல் கொண்டு அவர் வீட்டில் மையம் கொள்கிறது. அங்கு அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது.

ஆரம்பத்தில் அவனை அழிக்க வந்த கெட்ட ஆத்மா என நினைத்திருக்கையில் கடைசியில் அவனைக் காக்க வந்த நல்ல ஆத்மா என தெரியவருகிறது. அந்த ஆவி அவனை விட்டுச் செல்ல வேண்டுமானால் அவளை காரில் இடித்து கொன்றவனை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தரவேண்டும் என முடிவு செய்கிறார்கள் சித்தார்த்தும் அவரது நண்பர்களும் .

இதற்கிடையில், அப்பெண்ணின் தந்தையான ராதாரவியும் காரில் இடித்தவனை பழி தீர்க்க துடிக்கிறார். இவர்கள் எல்லோரும் அவனை கண்டுபிடித்தார்களா என்பதே மீதிப்படம்.
  
அந்த Color blind மேட்டர் எங்கிருந்து பிடித்தார் எனத் தெரியவில்லை. ஆனால் அதை கிளைமாக்ஸ் ட்விஸ்ட்-ல் வைத்திருப்பது தமிழ் சினிமாவில் புதிது. 
ஹீரோ நாகா ஒரு புரடியூஸரின் மகன் என மிஸ்கின் ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம். இந்தக் கதைக்கு சுமாரான ஃபேஸ் இருந்தால் போதும் என நினைத்திருக்கிறார். ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார். அதிர்ச்சியான காட்சிகளில் கண்களில் தெரியும்  பயம் பர்ஃபெக்ட். வாய்ஸ் மாடுலேஷன் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. அது என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல், ஒத்தக் கண்ணை மறைத்துக் கொண்டு...? மிஸ்கினின் எல்லா படங்களிலும் ஒருவர் இந்த வகை சிகை அலங்காரத்துடன் வருகிறாரே.

புதுமுக நாயகி கேரளத்து பைங்கிளி பிரயுகா செம கியூட் . ஆரம்பக் காட்சிகளோடு அவர் தரிசனத்திற்கு தடா போட்ட இயக்குனர் மிஸ்கினுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும். ராதாரவி சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிறைகிறார். தன் மகளை பேயாக பார்க்கும் அந்தத் தருணத்தில் மண்டியிட்டு தவழ்ந்துக் கதறும் அந்த ஒரு காட்சியே போதும்.

பாசத்துடன் தனது தந்தையான ராதாரவியின் கன்னங்களை தடவும் அந்தப் பிசாசு, 'உன்னைக் கொன்றவனை கொல்லாமல் விடமாட்டேன்' என்று ராதாரவி சொன்னவுடன் கோபத்துடன் கைகளை இழுத்துக்கொள்ளும். அந்த ஒரு சீனிலே யார் கொலையாளி என்பதை குறிப்பாக சொல்கிறார் இயக்குனர்.

படத்தில் கிளிசே வகை குறியீடுகள் ஆங்காங்கே வந்து சலிப்படைய வைத்தாலும் மறைமுகமாக அவர் சொல்லும் சில நல்ல மெசேஜ்கள் வரவேற்கப்படவேண்டியவை.குறிப்பாக செல்போனை நோண்டிக்கொண்டே கார் ஓட்டக்கூடாது. அதுதானே அவ்வளவு பெரிய பிரளயத்துக்கு காரணமாக அமைந்தது.

படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது. மணிரத்தினத்துடன் இணையும் போது மட்டும் ஒளிப்பதிவா- ளர்கள் தனித்து தெரிவார்கள். அதே மேஜிக் மிஸ்கினுடனும் ஒர்க்அவுட் ஆகிறது. முக்கியமாக கேமரா கோணங்கள் உலகத் தரம். சபாஷ் ரவி ராய்.

இந்தப் படத்திற்கு இளையராஜா தேவையில்லைதான். ஆனால் ராஜாவிடம் கேட்டு வாங்குவது போல் அரோல் குரேலியிடம் மிரட்டி வாங்கியிருக்கிறார் மிஸ்கின். நிறைய இடங்களில் மௌனமாக இருந்தாலும் தேவையான இடங்களில் பின்னணி இசை மிரட்டுகிறது . குறிப்பாக 'போகும் பாதை தூரமில்லை' பாடலில் வரும் வயலில் இசை செம்ம..!

பொதுவாக பேய் என்றால் நள்ளிரவு , அமாவாசை, நிறைந்த பௌர்ணமி இப்படிப்பட்ட நேரங்களில்தான் உலாவரும் என்கிற தமிழ் சினிமாவின் விதியை மாற்றி எழுதியிருக்கிறார் மிஸ்கின். தவிர, பேயை விஷுவலாக  காட்ட அவர் எடுத்திடுக்கும் சிரத்தையும் அதன் பெர்பெக்ஸனும் பாராட்டப்படவேண்டியது. முதல்முறையாக அந்த பேய் உருவத்தை காணும்போது உடம்பே சிலிர்க்கிறது. பிறகு அந்தரங்கத்தில் பறந்து வருவது எல்லாம் புளித்துப் போன பழைய ஐடியாதான்.
குறைவான கேரக்டர்கள். யாரிடமும் மிகை நடிப்பு இல்லை. பேயோட்ட வரும் அந்த பெண், நாகாவின் அம்மாவாக வரும் கல்யாணி, நாகாவின் நண்பர்கள், ஆட்டோகாரர்  உட்பட எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் ஆறு நிமிடங்கள் ஓடும் குறும்படத்திலே இப்படிப்பட்ட கதையை கலை நுணுக்கத்துடன் நேர்த்தியாக சொல்கிறார்கள். அதை இரண்டு மணி நேரத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர். அதனால் ஏனோ ஒரு குறும்படத்தை பார்த்த எஃபெக்ட் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. டெக்னிகல் சமாச்சாரங்களைத் தவிர்த்து படத்திற்கான செலவு மிகக் குறைவுதான்.

மற்றபடி வழக்கமான தமிழ்ப் பேய் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டுத்தான் நிற்கிறது பிசாசு. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.

                        ப்ளஸ்                   மைனஸ்
மிஸ்கின் இயக்கம் . குறும்பட எஃபெக்ட் .
இசை , ' போகும் பாதை தூரமில்லை ' பாடல் . புளித்துப்போன குறியீடுகள்.
ராதாரவி நடிப்பு .
ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்.

Thursday 18 December 2014

லிங்கா, பிம்பிளிக்கி பிளாப்பி ஆனது எப்படி..?



ரு ரஜினி ரசிகனாகத்தான் படம் பார்க்க சென்றேன். இன்னும் சொல்லப்போனால் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதவே கூடாது என எண்ணியிருந்தேன். ஏனென்றால் வலைப்பூவில் விமரிசனம் என்கிற பெயரில் கிறுக்க ஆரம்பித்தப் பிறகு தியேட்டரில் நான் பார்க்கும் முதல் ரஜினி படம். அதனால் தலைவர் படத்தை விமர்சனக் கண்களோடு தோண்டித் துருவி ஆராயக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இருப்பினும் FDFS என்பதில் மாற்றம் இல்லை. ஏனென்றால் வெளிநாடுகளில் அதற்கு அவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல, பாடாவதி படங்களையே முதல்நாள் பார்க்கும்போது தலைவரின் படம் அதுவும் ரசிகப் பட்டாளங்களோடு பார்க்கும் பாக்கியம் வேறு அல்லவா.. !

நான் பார்த்த தியேட்டரில் ஆன்லைன் புக்கிங் கிடையாது. ஆபிசில் 3 மணிக்கு எனக்கு லஞ்ச் பிரேக். அந்த இடைப்பட்ட நேரத்தில் சென்று டிக்கெட் எடுத்து விடலாம் என்று ஆபிசில் எவரிடமும் சொல்லாமல் புறப்பட்டு சென்றேன். அங்கே போனால் எனக்கு முன்பாக பெரிய கியூ . கடைசியாக நிற்பவரிடம் கேட்டேன்.

' எத்தன மணிக்கிங்க டிக்கெட் கொடுப்பாங்க.. '

' தெரியாதுங்க.. '

' படம் எத்தன மணிக்கி.. '

' தெரியாது.... '

' அப்புறம் எதுக்கு கியூல நிக்கிறீங்க.. '

' எப்படியும் இந்த கவுண்டர்லதான் டிக்கெட் கொடுப்பாங்க. நைட் எப்படியும் ஷோ போடுவாங்க. வாங்கிட்டுத் தான் போறதா இருக்கேன் .. '

நானும் நின்றுவிட்டேன். ஆபிசுக்கு போன் செய்து ஒரு அர்ஜெண்ட் மேட்டர். ஸெகண்ட் ஆஃப்  லீவ் எடுத்துக் கிறேன் என சொன்னேன். அது போகும்போது அல்லவா சொல்ல வேண்டும். போயிட்டு போன் பண்ணி சொன்னா எப்படி என்று கடிந்த மேனேஜரை ஒரு வழியாக சமாளித்தேன். அப்படி இப்படியென்று மூன்று மணி நேரம் இழுவைக்குப் பின் தலைவரின் லிங்கா டிக்கெட் கையில் கிடைத்தது.

இதெல்லாம் எதற்காக என்றால், லிங்காவை இணையத்தில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் நேற்று காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார். ஏதோ ரஜினி மீது வன்மத்தை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே இணையத்தில் லிங்காவுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஒரு விதத்தில் லிங்காவை 'மொக்கை' என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். முதல்நாள் காட்சியின் இடைவேளையின் போதே தல செங்கோவியின் போஸ்ட் ஒன்றில் 'படம் மொக்கைய்யா' என கமெண்டிட்டேன். பிறகு, நான்கு வருட தவத்திற்குப் பின் ஏக்கத்துடன் காத்திருந்த ஒரு ரசிகனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை  எப்படி பதிவு செய்வது..?

மூன்று நாட்களில் 100கோடி வசூல் சாதனை என்று விளம்பரப்படுத்துகிறீர்களே. அது எப்படி வந்தது..? எல்லாம் எங்கள் ரஜினிக்காக நாங்கள் கொடுத்த தட்சனையய்யா..! (நள்ளிரவு ரிலீஸ் என்பதால் எனக்கு மட்டுமே டாக்சி $50+டிக்கெட் $20. ஆக மொத்தம் இந்திய ரூபாயில் மூவாயிரத்துக்கு மேல் செலவுய்யா..). ஆனால் விமர்சனம் மட்டும் பண்ணக் கூடாது என்றால் எப்படி.? அப்படியே பெரிய இழப்பு என்றால் தலைவரிடம் போய் நில். தலைவர் தன் சம்பளத்தில் கால்வாசி  திருப்பிக் கொடுத்தாலே போதும். மொத்த இழப்பையும் சரிக்கட்டி விடலாம்.


ன்று படம் முடிந்து வெளியே வரும்போது கடும் மன உளைச்சல் அடைந்தேன். ரஜினி, தமிழ் சினிமாவின் எவ்வளவு பெரிய ஆளுமை. ஒட்டுமொத்த தமிழர்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக கலைஞன். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மார்க்கெட்டிங் உள்ள மகா சக்தி. அவரை வைத்து இப்படி பல்லாங்குழி விளையாடு கிறார்களே..!

ரஜினியின் இமேஜுக்கு தகுந்தாற்போல் கதையே பின்ன முடியாதா..? அவரது ஸ்டைலுக்கு தீனி போடுவது போல் திரைக்கதையை அமைக்க முடியாதா..? 25 வருடங்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரின் ரசிகர்களை  குறைந்தபட்ச அளவு கூட இவர்களால் திருப்திப்படுத்த முடியாதா..?  ரசிகர் மன்ற ஷோவில் ரசிகனையே தூங்க வைத்த கொடுமை எங்கேயாவது நடந்திருக்காய்யா..?

இதில் படைப்பு ரீதியாக லிங்கா அடைந்த தோல்வியை சில ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படம் மொக்கை என்று உதடு வரை வரும் வார்த்தையை அப்படியே விழுங்கி விடுகிறார்கள். சிலர் ' மூணு நாள்ல நூறு கோடி வசூல். அதுதான் சூப்பர்ஸ்டார் ' என்று ஸ்டேடஸ் போட்டு காயத்துக்கு களிம்பு தடவிக் கொள்கிறார்கள். ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன்... தலைவர் படம் மூணு நாள்ல 100 கோடி வசூல் ஆவதெல்லாம் ஒரு பெருமையா..? அஞ்சான் படத்தை முதல் நாளே ஒட்டுமொத்தமா ஊத்தி ஊத்தி கழுவின போதும் முதல் நாள் வசூல் 11 கோடி என்று லிங்குசாமி பீத்திக் கொண்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்..?

இப்போதெல்லாம் அச்சு ஊடகங்களில் வரும் விமர்சனங்களை விட இணையத்தில் சூட்டோடு சூடாக வரும் விமர்சனங்களைத்தான் தமிழ் சினிமா உலகம் உத்து உத்து பார்க்கிறது. ஏனென்றால் இவர்கள்தான் எந்தவித நீக்கு போக்கும் இல்லாமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்வார்கள். படம் மொக்கை என்றால் சுத்தி வளைக்காமல் நேரடியாக பாய்ண்ட்டுக்கு வருவார்கள். அப்படியிருக்க, தலைவர் படமாகவே இருந்தாலும் குறைகளை தைரியமாக சுட்டிக்காட்டினால்தான் அடுத்தப் படத்தில் இன்னும் கூடுதல் கவனம் எடுப்பார்கள். அதைவிடுத்து படம் செம்ம... சூப்பர்ரோ சூப்பர்... அப்படின்னு சொல்லிகிட்டே இருங்க.. அடுத்து இன்னொரு பாபாவோ அல்லது நாட்டுக்கொரு நல்லவனோத்தான் வரும்.  





லிங்கா படம் பார்த்தவர்கள் அனைவருமே விமர்சகர்களாக மாறி தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங் களில் கொட்டிவிட்டனர். ஒட்டுமொத்த விமர்சனங்களையும் படித்துப்பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படும். எல்லோருமே ரஜினியின் படத்தை ஆவலோடு எதிர்பார்த்தவர்கள். ஒரு பாட்சாவாகவோ அல்லது சிவாஜியாகவோ இல்லாவிட்டாலும் அருணாசலம் ரேஞ்சுக்காவது இருக்கும் என நம்பியிருந்தவர்கள்.ஆனால் பாபாவைவிட மொக்கையாகிப் போனதுதான் எல்லோரையும் இணையத்தில் பொங்க வைத்திருக்கிறது.

பாபா படத்திலும் குசேலன் படத்திலும் என்ன தவறுகள் செய்தார்களோ அதையேத்தான் லிங்காவிலும் செய்திருக்கிறார்கள். இரண்டுமே வித்தியாசமாக கதையமைப்பு உடையதுதான். ஆனால் ரஜினி என்கிற மெகா பிம்பத்தை மட்டும் காண்பித்து படத்தை ஓட்டிவிடலாம் என நினைத்ததின் வெளிப்பாடுதான் அவ்வளவு பெரிய தோல்வி. பாபாவை விடுங்கள், குசேலன் ஏற்கனவே கேரளாவில் சக்கைப்போடு போட்ட படத்தின் ரீமேக். ஆழமான கதையும் கூட. ஆனால் இங்கே என்ன செய்தார்கள்..? ரஜினி படமாச்சே. அவருக்கேற்ற மாதிரி எடுக்க வேண்டும் என்று தேவையில்லாத பில்டப் காட்சிகள் , கிராபிக்ஸ் பாடல் காட்சிகள், நிறைய கதா பாத்திரங்கள், வலிய திணிக்கப்பட்ட அரசியல் வசனங்கள் என்று கதையின் மையத்தையே சிதைத்து விட்டார்கள். வடிவேல் போர்சன் மட்டும் ஓரளவு சகிக்கும்படி இருந்தது.

ஆனால் பாருங்கள். பாபா, குசேலன், லிங்கா இந்த மூன்று படத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. மூன்று படத்தின் இயக்குனர்களும் ஒரு காலத்தில் ரஜினியை உச்சத்திற்கு கொண்டுவந்தவர்கள். மூன்று இயக்குநர்களுமே பீல்ட் அவுட்டாகி ஓய்வு பெரும் கட்டத்தை தாண்டியபிறகு ரஜினியே அழைத்து வாய்ப்புக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பதுதான் இங்கே டச்சிங். சூப்பர்ஸ்டாருடன் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாபா எப்படி கடைசி படமானதோ, பி.வாசுவுக்கு எப்படி குசேலன் கடைசிப் படமானதோ அதேப் போல் கே.எஸ்.ரவிக்குமாருக்கு லிங்கா கடைசிப் படம். 

லிங்கா எத்தனைக் கோடி வேண்டுமானாலும் வசூல் செய்யட்டும். படைப்பு ரீதியாக லிங்கா படுதோல்வி. இப்படி ஒரு கதையை எடுத்ததற்கே பாராட்ட வேண்டும் என்கிறார்கள். ஒரு வரலாற்று நிகழ்வை தவறாக பதிவு செய்துள்ளார்களே அது எவ்வளவு பெரிய துரோகம். இனி பென்னி குயிக்கின் வரலாற்றை யாருமே திரைப்படமாக எடுக்க முடியாதபடி செய்திருக்கிறார்களே அது நியாயமா...?

காரணமே இல்லாமல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட ஒரு அணையைப்பற்றிய கதையை ரஜினி ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...? அவர்கள் சொல்லாவிட்டாலும் அது தற்போது தமிழர்களால் அதிகம் பேசப்படுகிற முல்லைப் பெரியாறு அணையப் பற்றிய கதைதான் என்பது தானே நிதர்சனம். அந்த அணையைக் கட்ட பென்னி குயிக் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டார் என்பதை வரலாற்றின் மூலம் அறிவோம். பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது விபத்தில் சிக்கி இறந்த அவரது ஆறு வயது மகளை அங்கேயே புதைத்துவிட்டு  பணியைத் தொடர்ந்தார் என்றெல்லாம் படித்திருக்கிறோம். அது போலவே இதில் லிங்கேஸ்வரன் பல சவால்களை எதிர்கொள்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது பிரிட்டிஷ் அரசாங்கம். இதில் அவர்களை வில்லன்கள் போல் சித்தரிப்பதில் கூட லாஜிக் பார்க்கவில்லை. ஆனால் தமிழத்தின் மிக முக்கியமான ஒரு பிரச்னையை தொட்டுவிட்டு அதில் உள்ள அரசியலை துளி கூட பேசாமல் போனால் எப்படி..?

1979 ஆம் ஆண்டிலிருந்தே அணை திடமாக இல்லை, அதனால் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கும் கேரள அரசுக்கு, அணையின் ஸ்திரத்தன்மையை நிரூபிப்பதிலே தமிழக அரசின் தாவு தீர்ந்து போய்கொண்டிருக்கிறது. இதைத்தான் லிங்கா படத்தின் ஆரம்ப காட்சியில் காண்பிக் கிறார்கள். அணை திடமாக இல்லை என்று சர்டிஃபிகேட் கொடுக்கும்படி வில்லன் மிரட்டுகிறார். ஆனால் உண்மையிலேயே அணை திடமாகத்தான் உள்ளது என்கிறார் பொன்வண்ணன். இதில் வில்லனை கேரள அரசின் குறியீடாகத்தான் காண்பிக்கிறார் இயக்குனர். அப்படியே நூல் பிடித்தது போல் செல்ல வேண்டியது தானே...?

படத்தின் ஆரம்பத்தில் இந்தப்படம் முல்லைப் பெரியாறு கட்டிய பென்னி குயிக்கின் கதை என்று தைரியமாக சொல்ல வேண்டியதுதானே. அப்படி சொன்னால் கேரளாவை வில்லனாக சித்தரிப்பது போல் ஆகிவிடும். அங்கிருந்து வரும் 4 கோடி கலெக்சன் கட்டாகிவிடும். ஏன் மலையாளப் படத்தில் தமிழர்களை வில்லனாக சித்தரிக்க வில்லையா..? பெரும்பாலான மோகன்லால் படங்களில் வில்லன்கள் தமிழ் பேசுவார்களே.. இதே முல்லைப் பெரியாறு பிரச்சனையை மையமாக வைத்துத்தானே சோஹன் ராய் என்ற மலையாளி DAM999 என்ற படத்தை எடுத்து நாம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை எல்லாம் நக்கலடித்தார். அந்த தைரியம் கூட இவர்களுக்கு இல்லையே.

மீத்தேன் திட்டத்தைப் பற்றி காவிரி டெல்டா விவசாயிகளுக்கே சரியான புரிதல் கிடையாது. ஏன் அத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட திமுக அரசுக்கே அதிலுள்ள சாதக பாதங்களைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு அடிப்படை அறிவு கிடையாது. ஆனால் மீத்தேன் பற்றிய விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் பரப்பியது கத்தி படம் இல்லையா..? சுட்ட கதைதான் என்றாலும் அரசியல் ரீதியான எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் கதையில் எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளாமல் பிரச்சனையின் தீவிரத்தை உள்ளபடியே சொன்னதால்தானே தல ரசிகர்களும் அப்படத்தை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

நீங்கள் எடுத்தது தமிழ் படம்தானே. அதில் தமிழ் நாட்டுப் பிரச்சனையைப் பற்றி தைரியமாக பேச தில் இல்லை என்றால் என்னா ம@#$துக்கு இந்த டேம் கதையை எடுக்கனுங்கிறேன்..?

நம்ம தலைவரின் தைரியத்தை குசேலன் படத்தின் போதே பார்த்தாச்சு. ஒக்கேனக்கல் பிரச்சனை தொடர்பாக தமிழ்த் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தலைவர் உணர்ச்சி வசப்பட்டு வாட்டாள் நாகராஜனை மைக்கில் வெளுத்து வாங்கினார். பிறகு, குசேலன் படம் கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இழப்பு சில கோடிகள் தான், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார். கடைசியில் என்ன நடந்தது ..? கன்னட டிவிகளில் கதறிக் கதறி மன்னிப்பு கேட்டாரே ஞாபகம்  இருக்கா..?  

 ஒரு 'சின்ன மேட்டரை' சொல்லி ஒற்றுமையாக இருக்கும் இந்தியர்களை சாதிய ரீதியாக ஒருவரால் பிரிக்க முடிகிறது. அப்படி பிரிந்து கிடக்கும் இந்தியர்களை, முதலியார்கள் யாரும் வரவேண்டாம், நாயுடு, செட்டியார், கவுண்டர், கீழ் சாதி, மேல்சாதி, இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் யாரும் வரவேண்டாம். உடம்பில் இந்திய ரத்தம் ஓடுறவன் மட்டும் வாங்கடா என்கிறார் ரஜினி. ஒட்டு மொத்த சாதி வெறியையும் தூக்கி எறிந்துவிட்டு இந்தியன் என்கிற ஒரு புள்ளியில் எல்லோரும் இணைவதாகக் காட்டியிருக்கிறார்கள். இவ்வளவு சின்ன டயலாக்குல இவ்ளோப் பெரிய விஷயம் பொதிந்து கிடப்பது இப்பத்தான்யா தெரியுது. இது தெரியாமத்தான் பெரியார் அத்தனை வருஷம்  கஷ்டப்பட்டிருக்கிறார்.

லிங்கா படம் திரைக்கதை, காட்சியமைப்பு, இசை , நடிப்பு , வசனம், இயக்கம் என எல்லா வகைகளிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஒரு வரலாற்றுப் படம் என்று மட்டும் சொல்லாதீர்கள். கருத்தியல் ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் லிங்கா படு தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

Friday 12 December 2014

லிங்கா...

லிங்கா படத்தின் கதை சம்மந்தமாக நடந்துவந்த வழக்கின் நேற்றைய தீர்ப்புக்காக பட வெளியீட்டை சற்று தாமதப்படுத்தியிருக்கிறார்கள் போல. நேற்று மாலையே இங்கு வெளியாகவேண்டிய படம். பிற்பகல் நான்கு மணிக்கு ரிசர்வேசன் என்று ஒட்டியிருந்தார்கள். நான்கு மணியிலிருந்து வரிசை நீள ஆரம்பித்துவிட்டது. ஐந்து மணிக்குத்தான் டிக்கெட் என்றார்கள். இன்னும் இந்தியாவிலிருந்து பாஸ்வேர்டு வரவில்லை என்றார்கள். பிறகு ஆறு என்றார்கள். ஏழு மணியாகலாம் அதுவும் உறுதியாக சொல்லமுடியாது என்றார்கள். எப்படி இருந்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் ஷோ என்றார்கள். மறுநாள் வேலை. ஆனாலும் இவ்வளவு பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கிடையில் மூன்று மணிநேரம் பொறுமை காத்து கியூவில் நின்றார்கள். அதில் நிறையப்பேர் பெண்கள். எப்படியும் டிக்கெட் வாங்கிவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டு நகரப் போவதாகக் கங்கணம் கட்டி நின்றார்கள். எல்லாமே சூப்பர்ஸ்டார் என்கிற மந்திரச்சொல்லுக்காக. ஒரு நடிகரின் படத்தை முதல்நாள் முதல் ஷோவே பார்க்கவேண்டும் என்கிற ஆர்வ மிகுதியில் ஆண் ரசிகர்களுக்கு இணையாக பெண்களும் காத்திருந்த காட்சியை இப்போதுதான் காண்கிறேன்.

போகட்டும். இனி, தமிழ்த்திரையுலகின் ஒரே  சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா எப்படி..?

முதலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் கதையைத்தான் ரஜினியிடம் சொல்லியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். படம் நிகழ்காலத்தைத் தொட்டுச்செல்ல வேண்டும் என்பதால் தாத்தா -பேரன் என ஜல்லியடித்து, முத்து படத்தின் கதையை கொஞ்சம் டிங்கரிங் செய்து லிங்காவாக உருவாக்கி யிருக்கிறார் இயக்குநர்.

ரஜினி எதற்காக இந்த ' டேம் ' கதையை தேர்ந்தெடுத்திருப்பார்.? ஒருவேளை கத்தி படம் மீத்தேன் பிரச்சனை யைப்பற்றி பேசி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தமிழர்களின் மற்றொரு வாழ்வாதார பிரச்சனையான அண்டை மாநிலங்களுடான அணைப்பிரச்சனையைப் பற்றி பேச நினைத்திருக்கலாம். நல்ல விசயம்தான். ஆனால் அதில் உள்ள அரசியலைப் பற்றி கொஞ்சமாவது பேசவேண்டாமா..?

சரி பென்னிகுயிக்கின் கதை என்று முடிவாயிற்று. அந்த அணைக்கு ஒரு பெயர் வைக்க வேண்டாமா...? முல்லைப் பெரியாறு என வைத்தால் கேரளா கலெக்சன் போய்விடும்.காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதைப் பற்றி பேசினால் கர்நாடக கலெக்சன் படுத்துவிடும். பாலாற்றைப் பற்றி பேசினால் ஆந்திராவில் ஓடாது. அதனால் பட்டும் படாமல் பேசியதால் என்னவோ படமும் நம் மனதில் பட்டும் படாமல் நிற்கிறது.



சரி கதைக்கு வருவோம்.

சோலையூரில் உள்ள அணையின் ஸ்திரத்தன்மையை சோதிக்க வரும் அதிகாரி பொன்வண்ணனிடம் அணை மோசமாக இடியும் தருவாயிலில் உள்ளது என பொய் சான்று அளிக்கும்படி அந்த ஊர் எம்பியான ஜெகபதிபாபு மிரட்டுகிறார். அவர் மறுக்கவே கொலை செய்யப்படுகிறார்.சாகும் முன் ஊர் பெரியவரான கே.விஸ்வநாத்- திடம் அந்த அணைக்கு பக்கத்தில் இருக்கும் கோயிலை திறந்தால் மட்டுமே இவ்வூரை காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.

அந்தக் கோயிலைத் திறக்கவேண்டுமானால் அதைக் கட்டிய லிங்கேஷ்வரனின் பேரன்தான் வரவேண்டும் என அந்தப் பெரியவர் விரும்புகிறார்.  அந்தப் பேரன்தான் லிங்காவான ரஜினி. அவரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு தன் பேத்தி அனுஷ்காவிடம் ஒப்படைக்கிறார். ரஜினியோ தன் சகாக்களான சந்தானம், கருணாகரன், பாலாஜி இவர்களுடன் உலகமகா திருடர்களாக இருக்கிறார்.

அவர்களை ஒருவழியாக கண்டுபிடித்து கூட்டிவருகிறார் அனுஷ்கா. அவர்களோ அந்தக் கோயிலில் உள்ள மரகத லிங்கத்தை அபேஸ் பண்ண திட்டம் போட்டு மாட்டிக்கொள்கிறார்கள்.அப்புறமென்ன, லிங்காவான ரஜினி யார் என்பதை நீண்ட நெடிய பிளாஸ் பேக்கில் கே.விஸ்வநாத் விவரித்து சொல்ல வழக்கம் போல ஹீரோ திருந்துகிறார்.

அதில்தான் பென்னிகுயிக்கின் கதை வருகிறது. லிங்கேஸ்வரன் வெளிநாட்டில் சிவில் எஞ்சினியரிங் மற்றும் ஐசிஎஸ் படித்துவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கலெக்டராக நியமிக்கப் படுகிறார். அவர் ஆட்சிக்குற்பட்ட சோலையூரில் தண்ணீரைத் தேக்கும் அணையில்லாமல் வெள்ளத்தினாலும் கடும் வறட்சியினாலும் மக்கள் அவதிப்படுவதை கண்டு அங்கு அணை கட்ட முயற்சி செய்கிறார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ அதற்கு அனுமதியளிக்க மறுக்கவே தனது கலெக்டர் உத்தியோகத்தை ராஜினாமா செய்து தன் சொந்த செலவில் மக்கள் சக்தியைக் கொண்டு அந்த அணையைக் கட்டுகிறார் லிங்கேஸ்வரன்.

அந்த அணையைக் கட்டிவிட்டால் லிங்கேஸ்வரன் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக ஆகிவிடுவாரோ என்று அவருக்கு நிறைய இடையூறுகள் தருகிறது பிரிட்டிஷ் அரசாங்கம். அதையும் வெற்றிகரமாக சமாளித்து கட்டி முடிக்கிறார் லிங்கேஸ்வரன். இறுதியில் தன் நயவஞ்சகத்தால் அவ்வூர் மக்கள் மத்தியில் தவறான செய்தியைப் பரப்பி லிங்கேஷ்வரனை ஊரைவிட்டே துரத்துகிறார் ஒரு வெள்ளைகார துரை. பிறகு மக்கள் உண்மையை உணர்ந்து அவரை தெய்வமாக போற்றுகிறார்கள். இது பிளாஷ்பேக்

அந்த அணை தற்போது பழுதடைந்துள்ளது என சொல்லி பராமரிப்பு செலவாக பல கோடியை சுருட்ட திட்டமிடுகிறார் சமகால அரசியல்வாதியான ஜகபதி பாபு. அதை எவ்வாறு பேரன் லிங்கா முறியடிக்கிறார் என்பதை ரஜினிக்காக ஒரு தடவை தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.   


கதை என்னவோ ரஜினிக்கு சவாலானதுதான். ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதை விட்டு அவர் விலகும் போது அவர் ரசிகர்களே ஏற்றுக்கொள்ளாமல் படுதோல்வியை அளித்த வரலாறு நிறைய இருக்கிறது. இதுவும் அதுபோல ஒரு முயற்சிதான்.

60 வயதைக் கடந்த ரஜினியா அது..? ஓபனிங் சாங்கில் சும்மா விளையாண்டிருக்கிறார். ஆனால் சூப்பர் ஸ்டாரின் இளமை துள்ளல் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்திவிடுமா..?

படத்தின் முதல் சொதப்பல் திரைக்கதைதான். அதிலும் அந்த பிளாஷ்பேக். பொதுவாக பிளாஷ்பேக்கில் சொல்லவேண்டிய விஷயத்தை காட்சிகளால் சுருங்கச்சொல்லி மனதில் நிறையச்செய்வார்கள். இதில் அணைகட்டும் விஷயத்தை இவ்வளவு நீ.....ட்டி முழக்கி சொல்லவேண்டுமா..? 1939-ல் அந்த சம்பவங்கள் நடப்பதாக காண்பிக்கிறார்கள். அதற்கு நான்கைந்து பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் குதிரைகளை மட்டும் காண்பித்தால் போதுமா...? அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிகை அலங்காரம்,உடை , பேசும் மொழி எல்லாமே தற்போதைய காலகட்டத்தில் இருப்பது போல் உள்ளதே... சூப்பர் ஸ்டார் படம் என்பதால் காட்சிகளின் நம்பகத்தன்மை அவ்வளவு முக்கியமில்லையோ..?

லலிதா ஜுவல்லர்ஸ் கடையிலிருந்து மரகதம் பதித்த நெக்லசை ரஜினி திருடுவதாக ஒரு காட்சி. நகைச்சுவை கலந்து எடுத்திருக்கிறார்கள் போல. திடீர் செக்யூரிட்டியாக சந்தானம் அங்கு பணிபுரிபவர்களிடம் சகஜமாக பேசுகிறார். ஒருவருக்கும் சந்தேகம் இல்லை. 70 வருடங்கள் மூடப்பட்ட கோயிலினுள்ளே விளக்கு எரிய எண்ணெயும் பூஜிக்க பூக்களும் கிடைக்கிறது. ரஜினி படம் என்பதால் லாஜிக்கை பற்றி ஒரு பய கேள்வி கேட்கக் கூடாது என நினைத்திருக்கிறார்கள்.

பொதுவாக தலைவர் படங்களில் ஆரம்பத்தில் ஆட்டோகாரனாகவோ, பால்காரனாகவோ அல்லது கூலித் தொழிலாளியாகவோ இருந்து, பின்பு பெரிய தொழிலதிபராக உயருவதுபோல் கதையமைப்பு இருந்தால் இறுதிக் காட்சியில் மீண்டும் பழைய நிலையிலேயே இருப்பதுதான் தனக்கு திருப்தி என்பதுபோல காட்சி அமைத்துக் கொள்வார். அதற்காக இதில் திருடனாக இருந்து ராஜாவாக உயர்பவர் கடைசியில் கைதியாக செல்வதுபோல் காட்சியமைக்கவேண்டுமா..?

படத்தின் சண்டைக்காட்சிகள் இன்னொரு சொதப்பல். ரயிலில் நடக்கும் சண்டைகாட்சி கார்ட்டூன்(அனிமேசன்) ரகம். அதிலும் ஸ்லோ மோசனில் இன்னும் கொடுமையாக உள்ளது. இறுதிகாட்சியில் தெலுங்கு சினிமாவோ தோற்றுவிடும் அளவுக்கு ரஜினியை வைத்து காமெடி பண்ணியிருக்கிறார்கள்.

நண்பா பாடல் மட்டும் பரவாயில்லை. மற்ற பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. ரஜினி-ஏ.ஆர் ரகுமான் காம்பிநேசனில் பாடல்கள் சொதப்பியது இந்தப்படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக மனதில் நிற்பவர்கள் கலை இயக்குனரும் சந்தானமும்.அந்தக் கால அரண்மனை, பிரிட்ஷ்காரர்களின் பங்களா, பிரும்மாண்ட அணை என அனைத்தையும்  கலை நுணுக்கத்துடன் செதுக்கியிருக்கிறார் சாபு சிரில். அதேப்போல் ரத்னவேலுவின் ஒளிப்பதிவும். டாப் ஆங்கிளில் அணையையும் அதிலிருந்து சீறிப் பாயும் தண்ணீரையும் அட்டகாசமாக படம்பிடித்திருக்கிறார்.



பொதுவாக சூப்பர் ஸ்டாரின் படங்களில் ஒவ்வொரு பிரேமிலும் அவர் தனியாக மிளிர்வார். அதுதான் அவரது ரசிகர்களை உற்சாக கூத்தாட வைக்கும். இதில் ஒவ்வொரு பிரேமிலும் அவர் இருக்கிறாரே தவிர அவரது எனர்ஜி, மாஸ், ஸ்டைல் எதையும் காணோம். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு ஆளுமையை இயக்குநர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

படம் ஆரம்பிக்கும்போது எனது பக்கத்து சீட்டில் இரு ரசிகர்கள் விசிலடித்து சீட்டின் மேல் ஏறி நின்றெல்லாம் ஆடினார்கள். படம் முடிந்தவுடன் 'பாஸ் படம் முடிந்துவிட்டது எழுந்திரியுங்கள்' என எழுப்பிவிட்டு வந்தேன்.

தியேட்டருக்கு வெளியே சூப்பர் ஸ்டார் படத்திற்கு முன்பு கேக் வெட்டி சிலர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். படத்திலும் கோ இன்சிடென்ஸாக ரஜினி கேக் வெட்டும் காட்சி ஓன்று வருகிறது. தியேட்டரில் பாதிக்கும் மேற்பட்டோர் எழுந்து நின்று கைதட்டினார்கள். சூப்பர் ஸ்டார் மக்கள் மனங்களில் நிரந்தரமாக ஏற்படுத்திய பிம்பம் அப்படி. வாழ்த்துக்கள் தலைவா...!

ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காவும் ஒருதடவை பார்க்கலாம் (வேறென்ன..அப்படித்தான் முடிக்கணும்)

                        ப்ளஸ்                   மைனஸ்
 இளமை துள்ளலான ரஜினி நீட்டி முழக்கி சொன்ன பிளாஷ் பேக்
ஒளிப்பதிவு நம்பமுடியாத  சண்டைக்காட்சிகள்

கலை(சாபு சிரில் ) திரைக்கதை , பாடல்கள்

சந்தானம் டைரக்சன்


------------------------------------------------------------x --------------------------------------------------------

Monday 1 December 2014

சார்லஸ் டார்வினுக்கே சவால்விடும் தமிழக மங்குனிகள் (சும்மா அடிச்சு விடுவோம்..)

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ சயன்ஸ் வாத்தியார் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பாடம் நடத்திட்டு இருந்தாரு. குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதற்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

உடனே நான் எழுந்திருச்சி, 'குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதா சொல்றீங்களே சார்.. இப்போது ஏன் எந்த குரங்கிலிருந்தும் மனிதன் தோன்றவில்லை' என்று கேட்டேன். உடனே அடி பின்னி எடுத்திருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க.அதுதான் இல்லை. இதுபோல கிறுக்குத்தனமா கேள்வி கேட்டாலும் வாத்தியார் பையன் என்பதால் மன்னிச்சு விட்டுடுவாங்க.

" அது வந்து... அப்படியெல்லாம் யார் சொன்னது...நம்ம ஊர்ல இல்ல.. ஆனா ஆப்ரிக்கானு ஒரு நாடு இருக்கு. அங்க எல்லாம் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிகிட்டுதான் இருக்கான்.." என்று அளந்து விட்டாரு. அப்போ எல்லாம் கேரளாவே வெளிநாடுனு நம்பிகிட்டு இருந்த நேரம். நானும் 'அப்படியா சார்' என்று கேட்டுவிட்டு அமர்ந்துவிட்டேன்.

இப்போ அந்த வாத்தியாரை நேரில் பார்த்தேனா, 'சார்.. ஆறாப்பு படிக்கிறப்போ  குரங்கிலிருந்து ஏன் மனிதன் தோன்றவில்லை என கேள்வி கேட்டேன் தெரியுமா சார். அதுக்கான பதில் கிடைச்சிட்டு சார். வர்ற வழியில உங்க பையனை பார்த்தேன். என் சந்தேகம் தீர்ந்திடுச்சி' என சொல்லலாம்னு இருக்கேன்.

பிளஸ் 2 படிக்கும்போது விலங்கியல் ஆசிரியர் சரியான விளக்கம் கொடுத்தாரு. சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான் உட்பட அனைத்து குரங்கு வகைகளுக்கும் மனித இனத்திற்கும் சேர்த்து ஒரே மூதாதையர்தான். அந்த மூதாதையரிடமிருந்து வெவ்வேறு கிளைகளாக பிரிந்ததுதான் இவைகள். அதனால் பல நூற்றாண்டுகளு க்கு பிறகு வேண்டுமானால் தற்போதைய குரங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு அமைப்புடைய குரங்கு உருவாகுமே தவிர மனிதன் உருவாக மாட்டான் என்றார்.

அன்று அவர் சொன்ன விஷயத்தை முகநூலில் பாபு என்கிற நண்பர் படம் வரைந்து எளிமையாக விளக்கியிருந்தார்.
 
அப்படியானால் மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா..? அப்போது அடைந்த பரிணாம மாற்றங்கள் தற்போது ஏன் நிகழவில்லை. ஆதலால்,குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆதாம் ஏவாள் கோஷ்டி ஓன்று சண்டைக்கு வரும். இது எப்படி இருக்கிறது என்றால் உலகம் ஒரு உருண்டை. அதன் மேல்பரப்பில்தான் நாம் இருக்கிறோம் என்று முதலில் கேள்விப்பட்டபோது, "ஹை .. அப்படினா நாம வழுக்கி விழுந்துவிட மாட்டோமா.." என்று கேட்க தோன்றியது போல் இருக்கிறது.

பரிணாம மாற்றம் என்பது ஒரே இரவில் நடப்பது அல்ல. ஆயிரம் வருடங்கள் ஆகலாம் . பல மில்லியன் வருடங்கள் கூட ஆகலாம்.சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப படிப்படியாக மாற்றங்கள் நிகழும். ஒரு உயிரினத்தின் பண்புகள் தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலமாக கடத்திச்செல்லும் போது தேவை கருதியோ, சூழல் கருதியோ அல்லது மரபணுப் பிழைகள் மூலமாகவோ காலப்போக்கில் மாறுதல் ஏற்படும்.

பொதுவாக பரிணாம மாற்றம் என்பது இயற்கைத் தெரிவமைப்பு (Natural Selection), தகவமைவு (Adaptation) மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றம்(Mutation), மரபணுப் பிறழ்வு நகர்வு (Genetic Drift) மூலமாகவும் அமைவதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்து இங்குள்ள சில விலங்கினங் களை ராக்கெட் மூலம் அங்கே விட்டுவிட்டு வந்தால் சில நூறு வருடங்களில் வேறொரு வடிவத்தில் பரிணாம மாற்றம் அடையலாம். ஆனால் மனித இனத்துக்கு சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் மனிதன் எப்போதும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான்.மாறாக,அந்தச் சுற்றுச்சூழலையே தனக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்வான்.

அது கிடக்கட்டும். உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிற டார்வினின் பரிணாமக் கொள்கை தமிழ் நாட்டில் மட்டும் ரிவேர்சாகிப் போனதாக பேசிக்கொள்கிறார்களே.. அது உண்மைதானா...?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tribute to Maestro Ilayaraja

இப்படி ஒரு தலைப்பில் சென்னையில் உள்ள Muzik Lounge School Of Audio Technology என்ற இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் செய்து YOUTUBE -ல் பதிவேற்றியுள்ளனர். முத்துமணி மாலை..., கண்ணன் வந்து பாடுகிறான்.. என்று இரு பாடல்களைத்தான் கேட்டேன். கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூறு தடவையாவது கேட்டிருப்பேன் ..Wow..! Really it was mesmerising...! இசை, காலம் கடந்து நிற்கும் என்பார்கள். ராகதேவன் இளையராஜா பல யுகங்கள் கடந்து நிற்பார்.





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா....

"எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..."

இந்த இரு பாடல்களையும் கேட்டிருக்கிறீர்களா என எழுதினால் அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து வந்து உதைத்துவிட்டு போவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டுமே ராகதேவனின் மாஸ்டர் பீஸ். 

ஒன்று வாலி மற்றொன்று பஞ்சு அருணாசலம் எழுதியது என நினைக்கிறேன். இரண்டுமே மெலடிகளின் உச்சம். நான் இங்கே சொல்ல வருவது இசையைப் பற்றியல்ல. பாடல் வரிகளைப் பற்றியது.

இந்த வரிகளுக்கு இசையோடு சேர்ந்து அழகு சேர்ப்பது எந்தன் என்கிற வார்த்தை. எந்தன் என்றால் என்ன..? 

'எனது'.. 'என்னுடைய' என்று அர்த்தமா..? 

அதுதான் இல்லை. 'எந்தன்' என்ற வார்த்தையே தமிழில் கிடையாது என்கிறார்கள் தெரியுமா..? எனக்கும் தெரியாது. சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். அது எந்தன் கிடையாது. என்றன் என்பதே சரியான வார்த்தை.  

என் + தன் = என்றன்.
உன் + தன் = உன்றன்.  

"என்றன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா...." என்று பாடினால் அவ்வளவு மென்மையாக இருக்காது அல்லவா.. அதனால் என்றன் என்பதை எந்தன் என்று மாற்றிவிட்டார்கள் போலும்.  

காலங்காலமாக தமிழ் சினிமாவில் நமது மொழியை வளர்க்க(!) பாடலாசியர்கள் செய்துவரும் தமிழ்த் தொண்டுக்கு ஒரு சிறிய உதாரணம் து.  உடனே அதற்குக் காரணம் இளையராஜாதான்.  அவர்தான் பாடலாசிரியரை மெட்டுக்கு தகுந்த மாதிரி வார்த்தையை மாற்றச்சொல்லியிருக்கிறார் என்று பேஸ்புக் பேக் ஐடி மாதிரி திடீர் அறச்சீற்றம் அடைய வேண்டாம்.

 "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.." என்று எம்.எஸ்.வி இசையில் வாலியும்,   "என் வாழ்வில் நீ வந்தது விதியானால்.. நீ எந்தன் உயிர் அன்றோ...!" என்று கண்ணதாசனும்,'எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ..'என்று  T.ராஜேந்தரும்,  " நீ தானே எந்தன் பொன்வசந்தம்......" என்று வைரமுத்துவும் ஏற்கனவே எழுதிவிட்டு போயிருக்கிறார்கள். 

சரி..அதுக்கு இப்போ என்னனு கேட்கிறீங்களா.. ஒன்னுமில்ல.. ஆனா ஒரு விஷயம்.

" என்ற வீட்டு பொண்ணு உன்ற வீட்டு மருமவளா வர கொடுத்து வச்சிருக்கனும்ங்க...." என்று கோயம்பத்தூர் காரங்க பேசும் பாசையை இனி யாரும் கிண்டல் பண்ணாதீங்க.

" என்றன் வீட்டு பொண்ணு உன்றன் வீட்டு மருமவளா வர கொடுத்து
வச்சிருக்கனும்ங்க...." என்று சுத்தமான தமிழில்தான் அவர்கள் பேசுகிறார்கள்.