Thursday 26 September 2013

உலகமே வியக்கும் தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள்.

     உலகத்துக்கே குங்க்ஃபூ,கராத்தே போன்ற தற்காப்புக்கலைகளை அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என இவ்வளவு நாட்களாக முளைக்காத மீசையை முறுக்கி விட்டுக்கொண்டிருந்த சீனாவுக்கே, நம்ம ஊரு போதிதர்மர் தான் 'குரு' என்கிற வரலாற்று உண்மையையை சமீபத்தில்தான் உணர்த்தினோம்.

வெறும் முறத்தை வைத்தே காட்டில் சிங்கத்துக்கு அடுத்த பொசிசனில் இருக்கும் புலியை, நமது வீரத் தமிழ் பெண்கள் விரட்டியடித்தையும் நம் தமிழ் வாத்தியார் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல் ஊட்டியதை மறவோம்.அது முறத்தைக் கண்டு ஓடியதா அல்லது முறைத்ததைக் கண்டு ஓடியதா என்பது வேறு விஷயம்.!?

அப்படியொரு வீரம் விளைந்த மண்ணில் இதுவரை யாரும் அறிந்திராத சில தற்காப்புக் கலைகளை உலகறியச் செய்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.


1. இந்தத் தற்காப்புக் கலைக்கு பெயர் 'லிப்லாக் ரொமாண்டிக்கோ '

உங்களை யாராவது 'ஏய்...' னு சத்தம் போட்டுக்கொண்டே அரை கிலோமீட்டர் அப்பால் இருந்து ஒடிவந்து தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம்.கொஞ்சம் ரொமாண்டிக்காக முகத்தை வைத்துக்கொண்டு கீழுதட்டை லேசாக சுழித்த வேகத்தில் ஆட்காட்டி விரலால் ஒரு ‘யூ டர்ன்’ அடிக்கவேண்டும். இந்த எதிர்பாராத ரொமாண்டிக் தாக்குதலால் தாக்க வந்தவன் நிலைகுலைந்து போய் ஓடிவந்த வேகத்தில் அப்படியே பின்னோக்கி வீசப்படுவான். ஒரு முக்கியமான விஷயம் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டிருந்தால் அவன் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது.

பின்குறிப்பு: இது ஆண்களுக்கானது.. இதை பெண்கள் உபயோகித்து ஏதாவது ஏடாகூடமாகிவிட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.  


 2. இதுக்குப் பெயர் ' கரடிகத்தே... '

இதைக் கற்றுக்கொள்வது கொஞ்சம் சுலபம்தான் என்றாலும் ஹை பிட்ச்சில் கத்துவதற்கேற்ற குரலமைப்பு பெற்றிருத்தல் வேண்டும். கையில் மூன்றடி வீச்சரிவாளை வைத்துக்கொண்டு... "டாய்..... ஏய்.... வாடா...ஓய்... டேய்.... " என நின்ற இடத்திலிருந்தே கத்தவேண்டும். உங்களை தாக்க வந்த எதிராளியின் பொறுமையை முடிந்தளவு சோதிக்கு வேண்டும். அவன் பொறுமை இழந்து உங்கள் கையிலிருக்கும் அரிவாளை பிடிங்கி அவனே வெட்டிக்கொண்டு சாவதுதான் இந்தக்கலையின் முக்கிய அம்சம்.


3.இது பழம்பெரும் கலை.மிகக் கடினமானது.மிகவும் ஆபத்தானதும் கூட.இதற்கான குறிப்பு ஓலைச்சுவடியில் இருப்பதாக சொல்கிறார்கள்.அந்தக் காலத்தில் புருஸ்லீ -யும் ஜேம்ஸ்பாண்டும் தமிழ் நாட்டுக்கு வந்து இந்தக் கலையை கற்றுக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். ஆனால்..கடைசிவரை அவர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் புருஸ்லீ பயந்துபோய் பாதியிலே ஓடிவிட்டார்.இந்தக்கலையில் கடைசியாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு ஜெய்சங்கர் கைத்தேர்ந்தவராக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. அவரது மறைவுக்குப் பின் அந்தக்கலையும் அவரோடு அழிந்துவிட்டது.

அதாவது எதிராளி நல்ல 'பல்க்கா' இருந்தா இந்தக் கலையை உபயோகப்படுத்தாலாம்.'ஆத்தாடி... எத்தேந்தண்டி' என்கிற பயம் ஆழ்மனதில் இருந்தாலும் அது கண்ணில் தெரியாமல் மெய்ண்டைன் பண்ண வேண்டும்.இது போல பல்க்கான ஆட்களை அடித்தால் மட்டுமே திருப்பி அடிப்பார்கள் என்கிற முன் நவீனத்துவ அறிவு இதற்கு அடிப்படை. அதாவது அடிப்பது போல கையை ஓங்க வேண்டும்.ஆனால் அடிக்கக் கூடாது.உதைப்பது போல் காலைத் தூக்கவேண்டும்.ஆனால் உதைக்கக் கூடாது.முறைப்பதுபோல் முகத்தை வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் முறைக்கக் கூடாது. அவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு கடைசியில் இம்சை அரசனில் கரடி காரித்துப்பியது போல் " கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...த்தூதூ.." என துப்பிவிட்டு 'தொலைந்து போ சனியனே'னு போய்விடுவான்..  இதில் நமக்கு இழப்பு என்று பார்த்தால் ஒரு கர்சிப் அல்லது ஒரு டிஸ்யூ பேப்பர்.ஆனால் எதிராளி மனதொடிந்து போய் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம்.




4. இருப்பதிலே மிக நுட்பமான தற்காப்புக் கலை. எதிராளி பிஸ்டல், AK -47 போன்ற நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம். இதற்கென பிரத்யோகமான உபகரணங்கள் இருக்கிறது.இதில் முக்கியமானது 'ஜிகு ஜிகு ஸ்லீவ்லெஸ் புல்லட் புரூவ் ஜாக்கெட்'.

இதை அணிந்து கொண்டால் எதிராளி உங்கள் தலை,கை,கால் என எங்கு குறிவைத்து சுட்டாலும் அது நேராக உங்கள் மார்பை நோக்கித்தான் வரும். அப்படியே மோதிய வேகத்தில் திரும்பி, வந்த வழியே சென்று சுட்டவனையே போட்டுத்தள்ளிவிடும். இந்தக்கலையை நுட்பமாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெறும் டாலரையும், மோதிரத்தையும் வைத்தே சீறிவரும் புல்லட்டை சுக்கு நூறாக்கிவிடுவார்கள்.தமிழ்நாட்டில் கடைசியாக இந்த வித்தையை பயன்படுத்தித்தான் ஒருவர் பாகிஸ்தான் பார்டரில் பல தீவிரவாதிகளை பஸ்பமாக்கியிருக்கிறார். இவருக்கு அண்ணன் ஆந்திராவில் இருக்கிறார். அவர் ஒரே ஜம்பில் புல்லட்டை கவ்வி கடித்து துப்பிவிடுவார்.


5. அட் எ டைம் -ல ஐம்பது பேரு வந்தாலும் அசால்டாக அடிக்கக்கூடிய சாத்தியம் இந்தக்கலைக்கு உண்டு. இதற்கு கைவிரல்கள், மணிக்கட்டு பலமாக இருத்தல் அவசியம். பாட்டுபாடிக்கொண்டே பால் கறப்பவர்கள் இதில் விற்பன்னர்கள்.

உதாரணமா, உங்களை பத்து பேரு கும்பலா சேர்ந்து அடிக்க வராங்கனு வச்சிப்போம். உடனே ஹீரோயிசம் காட்டினா நீங்க சட்னிதான். அந்த இடத்தில இந்தக்கலையை எப்படி பயன்படுத்தறதுனு சொல்றேன்.. 

முதல்ல அந்த பத்து பேரு கையை காலைப் புடிச்சி வரிசையில நிக்க வைக்கணும்.ஒருத்தர் பின்னாடி ஒருவர் நிற்காம பக்கவாட்டில் நிற்கும்படி சொல்லணும்.முடியாதுனு சொன்னா காலில் விழக்கூட தயங்கக் கூடாது. அந்த நேரம் பார்த்து சைடுல ஒரு 'பிகர' நடக்க விடனும். எல்லோரும் அந்தப்பக்கம் ஜொள்ளுவிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உங்கள் தாக்குதலை ஆரம்பிக்கணும். 

ஓடிவந்து முஷ்டியை முறுக்கி ஒரே நேர்க்கோட்டில் தாக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் திரும்பவும் பழையபடி ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான். திரும்பவும் காலில் விழுந்து கதறி, கெஞ்சிக் கூத்தாடி வரிசையில் நிற்க வைக்கவேண்டும். இப்படியாக மூன்று நான்கு தடவை செய்தால் டென்சனாகி அவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். நம்ம வேலை சுலபமாக முடிந்திடும்.


சரி..சரி... தமிழ்நாட்டில் புதைந்து கிடந்த இந்தத் தற்காப்புக்கலைகளை வெளிக்கொண்டுவந்ததுமில்லாம ஃபீஸ்ஸே இல்லாம கத்துக்கொடுத்ததுக்காக சந்தோசத்துல கதறி அழுவது எனக்கு கேட்குது. இதுபோல இன்னும் பல கலைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.   


Thursday 19 September 2013

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா தங்கமீன்கள்...? விகடன் VS ராம்.



நேற்றுதான் தங்கமீன்கள் பார்த்தேன். மொக்கைப் படங்களை முதல்நாளே பார்க்கவும் சில நல்ல படங்களை பல நாட்கள் கழித்து பார்க்கும்படியும் சபிக்கப்பட்டிருக்கிறேன் போல. தங்கமீன்கள் தமிழ்சினிமாவின் மைல்கல் இல்லை என்றாலும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.

"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்...."  என்கிற மொண்ணை தத்துவத்தோடு விளம்பரப் படுத்தப்பட்டதால் என்னவோ படத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. நாடகத்தனமாக இருக்கிறது என்கிற விமர்சனமும் படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்பட்டது. சமூக வலைத்தளங்களில் சிறந்தப் படமாக கொண்டாடியவர்கள் எல்லோருமே மகளைப் பெற்ற அப்பாக்கள்..! முகநூலில் மழலையின் சேட்டைகளை படமெடுத்து அதில் கவித்துவமான சினிமா வரிகளைக் கோர்த்து மகளோடு தன்னையும் விளம்பரப் படுத்திக்கொள்ளும் சில அப்பாக்களுக்கு இந்தப்படம்  நிறையவே பிடித்திருந்தது.

நான் மகனைப் பெற்ற அப்பா. ஒருவேளை மகளைப் பெற்றிருந்தால் அந்த செண்டிமெண்ட் வளையத்துக்குள் நானும் சிக்கியிருப்பேன் போல.. :-)

நிற்க,

சென்றவாரம் விகடனில் வெளிவந்த விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட(?!)  தங்கமீன்கள் படத்தில் இயக்குனர் ராம், விகடன் அலுவலகத்திற்கே சென்று வாதிட்டதாக அறிந்தேன். அவர்கள் வழங்கிய மார்க், விமர்சனக்குழுவை நேரில் சந்தித்து வாக்குவாதம் செய்யத்தயார் என அறிவிக்கும் அளவுக்கு அவரின் மனதைக் காயப்படுத்தியிருக் -கிறது. விகடனில் ராமின் ஆதங்கக் கட்டுரையும் இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. விமர்சன குழுவினரை  சட்டையைப் பிடித்து கேள்விகேட்கும் அளவுக்கு தங்கமீன்கள் ஒன்றும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பல்ல.

அதேவேளையில் தலைவா போன்ற படு மொக்கைப் படத்துக்கு 42 மார்க் போட்டுவிட்டு, வணிக ரீதியாக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் மானிட உணர்வுகளை ஓரளவு நுட்பமாக பதிவுசெய்திருக்கும் தங்கமீன்களுக்கு 44 மார்க் கொடுப்பது சரியா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

அடுத்து எழும்பும் கேள்வி , ஆனந்தவிகடனின் மார்க்குக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்...? என்னதான் விமர்சனத்தில் வானளவு புகழ்ந்தாலும் அல்லது கழுவி ஊற்றினாலும் மனது என்னவோ மார்க்-ன் அடிப்படையில்தான் படத்தின் தரத்தை பதிவு செய்கிறது. ஏனெனில் மார்க் என்பது பிழிந்தெடுத்த எஸ்சென்ஸ் மாதிரி. ஒருகாலத்தில் விகடனைப்போல் ராணி வாரஇதழும் மதிப்பெண் கொடுத்து வந்தது ( தற்போது தெரிய வில்லை.படித்தே பல வருடங்கள் ஆகிறது). ராணி நிர்ணயித்த அதிக பட்ச மார்க் 100. 'நாயகன்' வாங்கியதாக ஞாபகம். இப்படி வாரி வழங்கியதால் என்னவோ, அவ்வளவாக எடுபடாமல் போய்விட்டது. 

ஆனால் விகடன், மார்க்-ல் காட்டும் கஞ்சத்தனம்தான் இன்னமும் அதை பேசவைக்கிறது. விகடனில் அதிக பட்சமாக 63 மார்க் ' பதினாறு வயதினிலே ' வாங்கியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் பிற்பாடு அது நிர்ணயித்த உச்சபட்ச மார்க் 60. இந்த பவுண்டரியை அவ்வப்போது தொடுவது கமல் படங்கள் மட்டுமே.  இதற்குக் காரணம் விமர்சனக் குழுவில் நீண்ட காலமாக இருந்து வந்த கார்டூனிஸ்ட் மதனாக இருக்கலாம். மகாநதி ,ஹேராம் உட்பட சில படங்கள் 60 மார்க் வாங்கியதாக ஞாபகம்.

மதன் விமர்சனக்குழுவில் இருந்த போது நல்ல படங்களே 40 மார்க் வாங்குவது கடினம். பாபாவுக்கு 38 / 39 என நினைக்கிறேன்.ரமணா,முத்து போன்ற பிளாக்பஸ்டர் படங்களே 45-ஐ தாண்டவில்லை.அந்தக் காலக்கட்டத்தில் ஒரு படம் விகடனில் 40 மார்க்கை தாண்டிவிட்டால் அது சிறந்த படமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் மகாநதியைவிட அதிகமாக இன்றளவும் கொண்டாடப்படும் 'அன்பே சிவம்' படத்திற்கு 46 மார்க்கு மட்டுமே விகடன் வழங்கியிருந்தது. இவ்வளவுக்கும் விமர்சனத்தில், சிவாஜிக்குப் பிறகு நடிப்பு சிம்மாசனம் கமலுக்குத் தான் என்கிற ரீதியில் புகழ்ந்திருந்தது. ஒருவேளை, மார்க் குறைவாகப் போடப்பட்டதற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்,-'வசனம் -மதன் '.

அன்பே சிவம் படத்திற்கு மதனின் மதிநுட்பமான வசனங்கள் எந்தளவுக்கு தரத்தை உயர்த்திப் பிடித்தது என்பதை படம் பார்த்தவர்கள் அறிவார்கள். அவர் வசனத்தில் வந்த முதல்படம் என்பதால், கணிசமான மார்க் போட்டால் தேவையில்லாத சர்ச்சை வந்துவிடுமோ என்று மார்க்கைக் குறைத்ததாக அப்போது பேசப்பட்டது. அப்படியொரு நேர்மை மதனுக்குப் பிறகு விகடனில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே தற்போதைய நிதர்சனம்.


சரி.. அப்படியென்றால் ராம் எதிர்பார்ப்பது விகடனின் உச்ச வரம்பான 60 மார்க்கா...? அந்த லாண்ட்மார்க்கை தொடுவதற்கு அப்படியென்ன யதார்த்தமான குறியீடுகள் தங்க மீன்கள் படத்தில் இருக்கு..?

பொதுவாகவே நாம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிற முட்டாள்கள்.அதை மூலதனமாக வைத்துதான் 'தமிழ் சினிமா' பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டுவருகிறது.ஒரே டெம்பிளேட் கதையோடு தங்கை செண்டிமெண்டை வைத்து T.ராஜேந்தரும்,தாலி செண்டிமெண்டை வைத்து பாக்கியராஜும் 80களில் நிலைத்து நின்று அடித்த சிக்சர்களை மறக்கமுடியாது.

தாய் செண்டிமெண்ட் இல்லாத சூப்பர் ஸ்டார் படங்களையும், குழந்தைகள் செண்டிமெண்ட் இல்லாத கமல் படங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.இப்படி உணர்வுகளுக்கு அடிமையாகிப் போன நம் தமிழ்ச் சமூகத்தில்,தந்தை-மகள் செண்டிமெண்டை மையப்படுத்தி எடுத்தப் படத்தை எப்படி குற்றம் சொல்லமுடியும்?. படத்தை குறை சொன்னால் உறவையே கொச்சைப்படுத்தின மாதிரி கொதிக்கிறார்கள் செண்டிமெண்ட் வியாபாரிகள்.

பிரச்சனை என்னவென்றால்...ஒரு குழந்தை (பத்து வயது தோற்றத்தில் இருப்பதால் சிறுமி என்றே வைத்துக் கொள்வோம் ), ஒரு சிறுமி பொதுவெளியில் இயல்பாக நடந்துகொள்ளும் விதத்தை எப்படிவேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். தர்க்க ரீதியாக அதில் குறை காணமுடியாத அளவுக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர் வயதிலிருக்கும் ஒரு சிறுமிக்கு 'தத்தெடுத்தல்' என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் முதல்முறை கேட்கும்போதே 25 வயது முதிர்ச்சியோடு முகபாவனையை காட்டுகிறது. நிறைய படங்களில் பேபி ஷாலினியும், பேபி ஷாமிலியும் பல பயில்வான்களை சிறு கழியைக் கொண்டே அடித்து வீழ்த்துவதைத் தர்க்க ரீதியாக சிந்திக்காமல் கைதட்டி ரசித்திருக்கிறோம். அதே மனோபாவத்துடன் தங்கமீன்கள் செல்லம்மாவையும் ரசித்தாக வேண்டும் (?!).

சினிமாவில் குழந்தைகள் என்றாலே சமூக வாழ்வியல் நடைமுறையிலிருந்து விலகி நிற்கும் மனப்பான்மை உடையவையாகத்தான் காட்டப்படுகிறது. இதிலும் அப்படித்தான். செல்லம்மா ஆட்டிசம் பாதிக்கப்பட்டவளா அல்லது மந்தமான அறிவுடையவளா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவளா என கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும் செல்லம்மாவுக்கு இருக்கும் அதேப்பிரச்சனை அப்பாவான கல்யாண சுந்தரத்திற்கும் இருக்கிறதோ என்கிற சந்தேகமும் வருகிறது. 'அவன்தான் கல்யாணி...அப்படித்தான் இருப்பான்' என இந்தவார விகடனில்  சர்வாதிகார விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம். அதே விளக்கத்தை செல்லம்மாவுக்கும் எடுத்துக் கொள்வோம். 

ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு என்றால் அது பார்வையாளனை அழவைக்க வேண்டும். குறைந்தபட்சம் இனம்புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதில் பல இடங்களில் வாய்விட்டு கதறி அழுகிறார் ராம். நம்மால் அதை வேடிக்கைத்தான் பார்க்க முடிகிறது. மகாநதியில் கமல் ஒரு காட்சியில்தான் உடைந்து அழுவார். அதனால்தான் அந்த அழுகைக்கு அவ்வளவு வலிமை...!

சரி... இதில் செண்டிமெண்டை தவிர்த்து வேறு ஏதோ குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார் இயக்குனர் ராம்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக தன் படைப்பில் பதிவு செய்திருப்பதாகக் கூறும் ராம் அப்படி என்ன சொல்லிவிட்டார் எனத் தெரியவில்லை. உங்கிட்டதான் பீஸ் கட்ட வசதி இல்லையே பேசாம கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டியதுதானே என நண்பன் அட்வைஸ் செய்யும்போது பொங்கி எழுகிறார். நல்லாசிரியராக இருந்த தன் அப்பா சொல்லும்போதும் பொங்குகிறார்.. தனியார் பள்ளியில்தான் நல்ல படிப்பு கிடைக்கும் என்று கடைசிக் காட்சிவரை தனியார் பள்ளி நிலையங்களை தூக்கிப் பிடித்துவிட்டு , ஒரே காட்சியில் அரசுப் பள்ளியின் சிறப்பை பதிவு செய்வதுதான் சிறந்த குறியீடா...? மந்தமான நிலையிலிருக்கும் ஒரு சிறுமி, அரசு பள்ளியில் அட்மிசன் போட்ட உடனையே முதல் மாணவியாக வந்துவிடுமா.....? எந்த விதத்தில் தனியார் கல்வி நிலையங்களைவிட அரசு பள்ளிகள் சிறந்தது என்பதை ஒரு காட்சியிலாவது விளக்க வேண்டாமா..?

மாதம் வெறும் 2000 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத அப்பாவை சினிமாவில்தான் பார்க்க முடியும். இந்தக் காலக்கட்டத்தில் மளிகைக்கடையில் வேலைப் பார்த்தால் கூட மாதம் குறைந்தது 5000 ரூபாய் அசால்ட்டாக கிடைக்கும். கட்டுமானத்துறையில் இருக்கும் கடைநிலை தொழிலாளிக்கே நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கிடைக்கும்போது மாதம் 2000 ரூபாய்க்கு அல்லோகலப்படுவதாகக் காண்பித்திருப்பது அபத்தமாகத் தெரிகிறது. ஆனால் இதற்கும் ஒரு குறியீடு சொல்கிறார் ராம். உலகமயமாக்கலின் விளைவாக தொழில்கள் நலிவடைந்து போய்விட்டது என்பதை உணர்த்தவே அவ்வாறு காண்பித்தாராம். தவமாய் தவமிருந்து படத்தில் கூட பொறியியல் படித்த சேரன் சென்னையில் தள்ளுவண்டி இழுத்து கஷ்டப்படுவதாக காண்பித்ததை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபோது, சேரனும் இப்படித்தான் பொங்கினார்... இவர்களின் குறியீடுகளை புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும் போல....

தன் மகள் விருப்பப்பட்டுக் கேட்ட ' வோடோஃபோன் ' நாய்க்குட்டியை வாங்குவதற்கு பணம் இல்லாததால், ரெயின் மேக்கர் என்ற கருவியை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் அதற்குரிய பணம் கிடைக்கும் என்பதால், தனிஆளாக பல மலைகளைத் தண்டி உயிரை பணயம் வைத்து மீட்டு வருகிறார். அவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்றால், அதற்கும் ஒரு குறியீடு வைத்திருக்கிறாராம். அதாவது மேற்கு தொடர்ச்சி மலையின் இந்தப்பக்கம் மகள் இருக்கிறாளாம். அந்தப்பக்கம் தந்தை இருக்கிறாராம். ' மேற்கு' என்கிற சொல் வெஸ்டர்ன் கலாச்சாரத்தின் குறியீடாம். இப்படி பல்வேறுப்பட்ட குறியீடுகள் பொதிந்த காட்சிப் படிமங்களாக தக தகவென ஜொலிக்கிறது  தங்கமீன்கள்...!  இனிமேல் இதுபோன்ற கலைப்படைப்புகளை காணும்போது அது என்ன வகையான குறியீடுகளை குறிக்கிறது என்பதை வேறு கவனிக்க வேண்டியிருக்கிறது.

எப்படிப்பார்த்தாலும் தங்கமீன்கள் சிறந்த படைப்புதான், சில நாடகத்தனமான காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால்...! ஆனால் இந்த குறியீடுகள்தான் என் மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது.

டிஸ்கி.
விகடன் விமர்சனம் தொடர்பாக பிரச்சனை எழுந்தபோது 'லக்கிலுக் யுவா' தன் முகநூலில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். மிருதங்க சக்ரவர்த்தி படம் வெளிவந்தபோது விகடனின் விமர்சனத்தில் சிவாஜியை கடுமையாக சாடியிருந்தார்களாம். கிளைமாக்ஸ் காட்சியில் 'காக்கா வலிப்பு' வந்ததுபோல் அவரது நடிப்பு இருந்ததாக எழுதியிருக்கிறார்கள். உடனே சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்துபோய் விகடனுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பவே, உடனடியாக நிஜ மிருதங்க வித்வான்களை அழைத்து கருத்து கேட்டிருக்கிறது விகடன் தரப்பு. அவர்கள், மிக கைத்தேர்ந்த வித்வான்களின் எக்ஸ்பிரஸன் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லவே, உடனே மன்னிப்பு கேட்டதும் இல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த படத்திற்கும் விமர்சனம் எழுதுவதில்லை என அறிவித்துவிட்டதாம்...

அந்த கிளைமாக்சை தற்போது பார்த்தால் ஒருவேளை விகடன் எழுதியது உண்மையோ என தோன்றுகிறது.. படம் 83-ல் வெளியாகியிருக்கிறது. மூன்றாம்பிறை கூட அந்தக் காலக்கட்டத்தில்தான் வெளியாகி கமலின் எதார்த்த நடிப்புக்கு தேசியவிருது பெற்றுத்தந்தது. மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற மனித உறவுகளின் எதார்த்தத்தை திரைக்காவியங்களாகப் படைத்த இயக்குனர்கள் கோலோச்சிய காலகட்டம் வேறு.அப்போது கூட சிவாஜி அவர்கள் தன் பழைய நடிப்பு பாணியிலிருந்து வெளிவரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.


( தேவர்மகனுக்கு முன்பு சிவாஜிக்கு ஏன் தேசியவிருது கொடுக்கப்படவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம். அதற்காக ரிக்ஷாகாரன் எம்ஜியாருக்கு கொடுத்ததெல்லாம் கொஞ்சம் ஓவருங்ண்ணா.. அப்படிப்பார்த்தால் சிவாஜிக்கு குறைந்தது பத்து விருதாவது கொடுத்திருக்கணும்.)

Friday 13 September 2013

சீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...?



      ' தேசிய துணைத்தலைவர் ' என்று எங்களைப்போன்ற தம்பிமார்களால் அன்போடு அழைக்கப்படுகிற செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் திருமணம் சென்ற வாரம் இனிதே நடந்தேறியது.அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு திருமண நிகழ்வு என்று கூட கருதாமல் இணையத்தில் உலாவும் சில உடன்பிறப்புக்கள் இதை கிண்டல் செய்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தா ஒரு உடன்பிறப்பு வந்திருக்காரு பாருங்க...ஒரு நிமிஷம் அப்படியே இருங்க. என்னைய்யா வேணும் உங்களுக்கு...?

அண்ணன் சீமான் அப்படியென்ன தவறிழைத்துவிட்டார் ..? தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்வது ஒரு குற்றமா....?

அப்படியென்றால்,ஒரு ஈழ அகதிக்குத்தான் வாழ்வு கொடுப்பேன் என  வீரமாக பேசினாரே..என்ன ஆயிற்று?  இதைத்தானே கேட்க வாறீங்க... என்னய்யா விவரம் புரியாத ஆட்களா இருக்கீங்க. அப்போதிருந்த பிரச்சனை உங்களுக்கு தெரியுமா..?

விஜயலட்சுமினு ஒரு பொண்ணு,"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா?. அதைப்பற்றிக் கூட அண்ணனிடம் பலர் கேட்டபோது," த..த..ப..அது..கஷ்டப்படுற பொண்ணுனு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினேன் " என சமாளித்தாரே. அந்த நேரத்தில தம்பிமார்களின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்க வேற வழியில்லாம அப்படி சொல்ல வேண்டியதாச்சு.

அதற்காக அதையே பிடித்து தொங்கினால் எப்படிப்பா...?  நாங்களும் கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண்டாமா?. அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே..! மனசாட்சியை கழட்டி தூர எறிந்துவிட்டு அம்மாவுக்கு "வீரமங்கை வேலுநாச்சியார்"  பட்டம் கொடுத்து, 'புரட்சித் தலைவி என ஏன் அழைக்கிறோம்' என்பதற்கு கோனார் நோட்ஸ் எல்லாம் போட வேண்டிய நிலைமையாச்சி....

சரி,அப்போ விஜயலட்சுமி சொன்னதெல்லாம் உண்மையானு கேட்க வாறீங்க. திரும்பவும் உங்களுக்கு விவரம் பத்தல. இதுமட்டுமல்ல,சிங்கள பொண்ணு பூஜாவை எப்படி ஹீரோயினானு கேட்டாலும் நாங்க ஒரே பதில்தான் வச்சிருக்கோம்.அப்போ அண்ணன் டைரக்டருங்க.. இப்போ எழுச்சித் தமிழன்ங்க. " வீழ்ந்து விடாத வீரம்....  மண்டியிடாத மானம் ".. இதெல்லாம் கேள்விபட்டதில்ல நீங்க..

அதற்காக,பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மையார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய பொழுது சட்டமன்ற சபாநாயகராக வீற்றிருந்த 'சொல்லின் செல்வர்' காளிமுத்து அவர்களின் புதல்வியை மணப்பது சரியா என கேட்க வாறீங்க..?.

உங்களுக்கு தெரியாது, தமிழ் இனத்திற்கு காளிமுத்து அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார் என்று. ஆரம்பம் காலந்தொட்டே கட்சியே மாறாமல்(!!!) கண்ணியம் காத்தவர் காளிமுத்து. "கருவாடு மீனாகாது... கறந்தபால் மடி ஏறாது...கழுவிவச்ச பாத்திரம் அழுக்காகாது.." போன்ற உவமைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தவர். அதுமட்டுமல்ல... எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு தெரியாமலே ரகசியமாக புலிகளுக்கு உதவியுள்ளார் அன்னார் காளிமுத்து.( எவன்டா அவன் வண்டலூர் ஜூ-விலானு கேக்குறது...)


போதும்.. போதும்... அடுத்தது என்ன கேட்க வரீங்கன்னு புரியுது. கடந்த தேர்தலில், கலைஞர் ஆட்சியை அகற்ற எவ்வித அழைப்புமில்லாமல் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது எங்க அண்ணனும் அணிலும் தான். "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என ஊர் ஊராக போயி ஓட்டுப்பிச்சை கேட்டதும் நாங்கள்தான்.அப்படிப்பட்ட எங்கள் அண்ணனின் கல்யாணத்துக்கு அதிமுகவிலிருந்து யாருமே வரவில்லைனு கேக்குறீங்க.. அந்த பீலிங் எங்களுக்கும் லைட்டா இருக்கு. அதானால என்ன, சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே.. அண்ணன் கூட டக்குனு காலில விழுந்துட்டாரே..

சரி வேறென்ன...? பெரியாரை தமிழினத் துரோகி என சொல்லிட்டு அவர் படத்தை கல்யாணப் பந்தலில் எப்படி வச்சீங்க... ? இந்த சந்தேகம் வந்திருக்குமே... அதான் எங்க அண்ணன் தெளிவா பேட்டி கொடுத்திட்டாரேப்பா. 'நான் கட்சி ஆரம்பித்ததே முதல்வர் ஆவதற்குத்தான் '. முதல்வர் ஆக வேண்டுமென்றால் கொள்கையிலேயும், நிலைப்பாட்டிலேயும் கொஞ்சம் நெளிவு சுளிவு வேணும்யா... இது என்ன... இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க..


ஓஹோ...  கல்யாணம் முடிந்த உடனையே தேனிலவுக்கு போகாம,மணம் முடித்த கையோடு நேரா இடிந்தகரை போனாங்களேனு சீன் போடுறீங்களே... தேனிலவு புதுமணத் தம்பதிகளுக்குத்தானே... உங்க அண்ணன் தான் ஒரு வருசமா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாரேனு கேட்க வரீங்க...? அதான..?

" இல்ல..."

"பின்ன..எதுக்குத்தான்யா வந்த ?"

"அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்."

"சீமானுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்."




Wednesday 11 September 2013

அமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம்...?



வ்வொரு தடவையும் கொடநாட்டிலிருந்து திரும்பியவுடன் ஆத்தாவின் ருத்ரதாண்டவம் முதலில் அமைச்சர்கள் மீதுதான் அரங்கேறும். அந்த துர்பாக்கியவான்கள் யார் என்று சசிகலா தரப்பே கணிக்க முடியாத கொடநாட்டு ரகசியம். இந்த முறை யாருமே எதிர்பார்க்காத 'இலக்கிய சொம்பு' வைகைச்செல்வன் மீது பாய்ந்திருப்பது ரந்தததின் ரத்தங்களுக்கே பேரதிர்ச்சி. 

போயஸ் தோட்டத்தில் சசி கும்பலுக்கு அடுத்ததாக அம்மாவின் அனுக்கிரகம் நேரடியாக அமையப் பெற்றவர் என்கிற பிம்பத்தோடு வளம் வந்தவர் வைகைச்செல்வன்.அதற்கேற்றார்போல் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகவும் கூடவே அதிமுகவின் 'இளம்பெண்கள்' மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளர் உட்பட 'கனமான' பதவிகளை வகித்து வந்தவர். ஆனால் பதவியேற்று ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத நிலையில் அனைத்துப் பதவிகளிலிருந்தும் அலேக்காக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.


அமைச்சரவை மாற்றம் என்பது அம்மாவின் ஆட்சியில் அன்ட்ராயரைக் கழட்டி மாட்டுவது போல். அப்போதை -க்கு எந்த அன்ட்ராயர் பிடிக்குதோ அதை எடுத்து மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

கல்வித்துறை ஒரு நாட்டுக்கு முதுகெலும்பு போன்றது. அதில் அரசியல் தலையீடு இல்லாதிருத்தல் அவசியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தில் இந்தியாவின் ஒரு பல்கலைக் கழகம் கூட இடம்பெறாதது வெட்கக்கேடு. ஆட்சியமைத்த இரண்டு வருடத்தில் நான்காவது முறையாக கல்வியமைச்சர் மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் மாணவர்களுக்கு கல்வியமைச்சர் யார் என்கிற குழப்பம் வருவது ஒருபுறம் இருக்கட்டும், கல்வியமைச்சரிடம் ஒரு தைரியமான திட்டமிடல் எப்படி இருக்கும் ?

சரி.. இதைப்பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. அடுத்து முக்கியமான சங்கதிக்கு வருவோம். எதற்காக வைகைச்செல்வன் மாற்றப்பட்டார்..?

இதற்கு பல்வேறு காரணங்கள் கசிந்த வண்ணம் உள்ளது.மற்ற அமைச்சர்களை மதிப்பதில்லை,இளம்பெண்கள் பாசறையில் சிலருடன் விளையாடிவிட்டார் என அதிமுக தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் மனுஷ்ய புத்திரனை பாராட்டிப் பேசியதால் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளானார் என்று ஜூவியில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மனுஷ்ய புத்திரனே தன் முகநூளில் பகிர்ந்திருக்கிறார்.

இதையெல்லாம் புறந்தள்ளுகிற ஒரு செய்தி முகநூலில் பரவியிருக்கிறது. அதைப்பற்றி எழுதி வம்பில் மாட்டிக்கொள்ள அடியேனுக்கு தைரியம் கிடையாது. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

முகநூலில் அதிமுகவின் மேல்மட்டத் தொடர்புடையவர் என்கிற பில்டப்போடு வளம்வருகிறவர் கிஷோர்சாமி. அவ்வப்போது அதிரடியாக ஸ்டேடஸ் பதிந்து பல பிரபலங்களை கலங்கடிப்பவர்.மனுஷ்யபுத்திரன்,கவின்மலர், யுவா உள்ளிட்ட பல ஜெயா எதிர்ப்பு நிலைப்பாடு உடையவர்களை தன் முகநூல் சுவரில் கிழித்தெடுத்தே பிரபலம் ஆனவர். அவரின் லேட்டஸ்ட் நிலைத்தகவல்தான் இது. இவர் அடிக்கடி ஞாபகப்படுத்தும் ஒரு விஷயம், 'நான் எந்த ஆதாரமும் இல்லாமல் இங்கே பதிவு போடமாட்டேன். அப்படி போட்ட பதிவை எந்த மிரட்டலுக்கு பணிந்து நீக்கவும் மாட்டேன். சட்ட ரீதியாக எதையும் சந்திப்பேன்.'

இவர் ஸ்டேடஸ் போட்ட சில மணி நேரத்திலேயே இந்தத் தகவல் பிரசன்னாவுக்கு இவரால் பாதிப்புக்குள்ளான யாராலையோ தெரிவிக்கப்பட்டுள்ளது( அதற்குள் ஏகப்பட்ட லைக் ,கமெண்ட்ஸ் விழுந்துவிட்டது). பிரசன்னா பொங்கி எழுந்துவிட்டார். பின்ன.. மூன்று முறை தாலிக் கட்டியவரல்லவா ...!

ஆனால் பாருங்க... அதன்பிறகு இவர் ஸ்டேடசை நீக்கவும் இல்லை... பிரசன்னாவிடம் எந்த ரியாக்சனும் இல்லை... அப்படினா என்ன அர்த்தம் என நீங்க கேட்க வருவது புரிகிறது..வெயிட்..வெயிட்... இன்றோ நாளையோ சினேகாவே நேரிடையாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இதற்கு பின்புலமாக கிஷோரால் மன உளைச்சலுக்கு ஆளான சில ஊடகத்துறையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது...

எது எப்படியோ..நமக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா பொழுதுபோகும்...  !


சற்று முன் அறிந்த செய்தி....


சென்னை போலீஸ் கமிஷர் அலுவலகத்தில் நடிகை சிநேகா புகார் கொடுக்க இன்று வருகிறார் என்ற தகவல் கேள்விபட்டு, இரு தரப்பிலும் பரஸ்பர சமரசம் செய்துகொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கிஷோர் சாமியும் தன் பதிவை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்..  (அப்படின்னு அவருதாங்க சொல்றாரு..)

என்னய்யா நடக்குது இங்க...?


(கிஷோர்சாமியைப் பற்றி இன்றைய கேப்டன் டிவியில்.)


Monday 9 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...ஜாலி பட்டாசு...!

மிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளைகளான கே.எஸ். ரவிக்குமார்,சுந்தர்.C ,ஹரி போன்ற கமர்சியல் இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்சஸ்புல் பார்முலா இருக்கும். அது  குறைந்தபட்ச உத்திரவாதத்தை எந்தக் காலக்கட்டத்திலும் தரத் தவறியதில்லை. அவர்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் ராஜேஷ்...

இந்தப்படத்தில் வசனம் மட்டுமே ராஜேசின் ஏரியா என்றாலும் இது முழுக்க முழுக்க அவர் பார்முலாதான். ராஜேஷிடம் பணிபுரிந்த பொன்ராம் தான் இந்தப்படத்தின் இயக்குனர். ஒரு கல் ஒரு கண்ணாடியை எப்படி கதை,லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் மூன்று மணிநேரம் பார்த்து சிரித்துவிட்டு வந்தோமோ, அதே எதிர்பார்ப்புடன் இதற்கு செல்லலாம்.

தனது மூணாவது மகளைச் சுட்டுக்கொன்றதாகக் கூறி ஊர் பெரியவரான சிவனாண்டியை(சத்யராஜ்) கைதுசெய்கிறது போலிஸ்.  உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை சிவனாண்டியின் பார்வையில் பிளாஸ்பேக்காக விரிகிறது மொத்தப் படமும்.ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸ் டைப் படம் போல தெரிந்தாலும் பிறகு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

திண்டுக்கல் அருகில் உள்ள சிலுக்குவார்பட்டி என்கிற ஊரில் கடமை,கண்ணியம்,கட்டுப்பாடை விட கவுரவம் தான் முக்கியம் என வாழும் பெரியவர் சிவனாண்டிக்கு(சத்யராஜ்) மூன்று பெண் குழந்தைகள் (கூடவே நான்கு அல்லக்கைகள்). மூன்றாவது பெண் குழந்தை பிறந்த சந்தோசத்தை ஊராருடன் பகிர்ந்து கொள்ளும்போது எதிர்த்த வீட்டு பங்காளியால் அவமானப் படுத்தப்படுகிறார். சினம் கொண்ட சத்தியராஜ் கோபத்தில் அவனது ஒரு பக்க காதை அறுத்துவிடுகிறார். எப்படியும் உன் பொண்ணு யாரையாவது இழுத்துகிட்டு ஓடும் அப்போ உன் காதை நான் அறுக்கிறேன் என சபதமிடுகிறார் காது அறுபட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன்.

இதற்காக முதல் இரண்டு பெண்களையும் இளவயதிலேயே அவசர அவசரமாக திருமணம் செய்துவைத்து விடுகிறார் சத்யராஜ். மூணாவது பெண்தான் +2 படிக்கும் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா.. ஆரம்பத்தில் இவரது டீச்சரான பிந்துமாதவியை ரூட் விடுகிறார் சிவகார்த்திகேயன்.  அதற்குத் தூதாக சிவா பயன்படுத்துவது ஸ்ரீதிவ்யாவை.  நன்றாக செட்டாகும் நேரத்தில் சிவாவுக்கு அல்வா கொடுத்துவிட்டு வேறொருவரை பிந்துமாதவி திருமணம் செய்துவிட...பிறகு என்ன, சிவாவின் கடைக்கண் பார்வை திவ்யாவை நோக்கி திரும்புகிறது. ஏற்கனவே திவ்யாவும் சிவாவை விரும்புவதால் இருவரின் காதல் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு போல் வேகமாக வளர்ந்துகொண்டே செல்கிறது.

ஒருகட்டத்தில் இவர்களது காதல் சத்தியராஜுக்கு தெரியவர, திவ்யாவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார்.  இதனால் திருமணம் நடக்கும் முதல் நாள் இரவு இருவரும் ஓடிப்போக தீர்மானிக்கின்றனர். அவர்கள் ஓடிப்போனார்களா..சத்தியராஜுக்கு காது அறுபட்டதா..என்பதை வெண்திரையில் காண்க என முடிக்க இதுஎன்ன வாரப்பத்திரிக்கை விமர்சனமா...?. விரிவாக சொல்கிறேன். இதன் பிறகு நடந்த கதையே வேறு..

ஓடிப்போகும் ஜோடியை துப்பாக்கியுடன் வழி மறைக்கிறார் சத்யராஜ். சுடத்தான் போகிறார் என்று நினைத்தால், கையைப்பிடித்து கெஞ்சுகிறார். தான் அவசரப்பட்டு திருமண செய்த இரு மகள்களும் தற்போது நன்றாக இல்லை. நீங்களாவது நன்றாக இருங்கள் என பணம், நகையோடு ஆசிர்வதித்து அவர்களை அவரே ஓட சொல்கிறார். இதுதான் கிளைமாக்ஸ் ட்விஸ்ட். அப்படியே ஊருக்கு வந்து கவுரவுத்திற்காக தன் சொந்த மகளை சுட்டுக்கொன்ற சிவனாண்டி என்கிற பில்டப்போடு வளம் வருகிறார்.

கடைசியில் இந்த விஷயம் ஊருக்கு தெரியவந்ததால்,தானே தன் ஒரு பக்க காதை அறுத்துக்கொள்ள(கொஞ்சம் ஓரமாத்தான்) , 'தன் கவுரவத்திற்காக தன் காதையே அறுத்துக்கொண்ட சிவனாண்டி வாழ்க' என அவரது அல்லக்கைகள் பிளேட்டை திருப்பிப்போட்டு கோஷம் போடுவது ஃபைனல் ஷாட்..!


புல்லட், துப்பாக்கி சகிதமாக சத்யராஜ் கொடுக்கும் அலப்பறை தௌசண்ட் வாலா பட்டாசு. வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவராக சிவகார்த்திகேயன்.  செயலாளராக பரோட்டோ சூரி...   இவர்கள் இருவரும் படம் நெடுக அடிக்கும் கூத்து சிரிப்பு சரவெடி. அதிலும் பரோட்டோ சூரிக்கு சிவாவுக்கு இணையான ரோல். ஜோடியும் உண்டு. ஆனால் ஏனோ நிறைய இடங்களில் வடிவேலுவை இமிடேட் பண்ண முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்த உன்னதக் கலைஞனின் இடத்தை அவரைத்தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது.

சமீபத்தில் சிவாவுடன் கிசு கிசுக்கப்பட்ட பிந்துமாதவி இதில் அவருக்கு அல்வா கொடுக்கும் டீச்சராக வந்து நம்மையும் கிறங்கடிக்கிறார். இவ்வளவு அழகான டீச்சர்களெல்லாம் சினிமாவில் மட்டும்தான் வருகிறார்களா... அல்லது அந்தப் பருவத்தில் ரசிக்க தெரியாத அப்பாவியாக இருந்து விட்டேனா...?

நாயகியாக வரும் ஸ்ரீதிவ்யா செம கியூட். கொஞ்சம் ஹோம்லியான கேரக்டர் பண்ணினால் இன்னொரு ரேவதியாக வர வாய்பிருக்கிறது. (ஆனால் இவர் சிரிக்கும்போது மட்டும் ஏனோ தலைவி ரேஷ்மா ஞாபகம் வந்து தொலைக்கிறது.)

இது முழுநீளக் காமெடிப்படம் என்பதால் எல்லோருக்குமே காமெடிக் காட்சிகள் வைத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். சாமியாடி குறிசொல்லி தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் சூரியின் அப்பா, திண்டுக்கல் ரீட்டாவுக்கு அலையும் பல்லுபோன தாத்தா, ஸ்ரீ திவ்யாவின் தோழியாக வரும் அந்த கருப்பழகி இப்படி மனிதில் நிற்கும் கேரக்டர்கள் நிறைய. அதிலும் ஏற்கனவே காதலுக்கு எதிராக நடித்து பிரபலமானவர்களை, காதலை எதிர்க்கும் சத்தியராஜை உசுப்பேத்திவிடும் நான்கு அல்லக்கைகலாக தேர்வு செய்திருப்பது இயக்குனரின் சூப்பர் ஐடியா. கொடூர வில்லனாக அறியப்பட்ட காதல் தண்டபாணி இதில் செம காமெடி பண்ணுகிறார்.கிளைமாக்சில் சிவா இவரை மிமிக்கிரி செய்து கிண்டல் செய்யும்போது வாய்விட்டு சிரிக்கலாம்..

படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் வரும் எல்லோருக்கும் ஒரு பிளாஸ்பேக் வைத்திருப்பது அழகிய கவிதை. தன் அப்பாவின் சமையலில் நொந்துபோய்,"அம்மா செத்தப்பிறகு இன்னொரு கல்யாணம் செஞ்சியிருந்தியினா இந்நேரம் வாய்க்கு ருசியா விதவிதமா சமைச்சிப் போட்டிருப்பாங்களே"  என சிவா சொல்ல...,  " நானாடா மாட்டேன்னேன். என்னை எங்கேடா  பண்ண விட்ட..?"  என சின்ன வயதில் சிவா செய்த சேட்டைகளை ஞாபகப்படுத்தும் அந்த பிளாஸ்பேக் சிரிப்பு வெடி...

ஸ்ரீதிவ்யாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க, 'காதல் என்பது பொது உடமை' என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க, காதல் தோல்வியில் சோகமாக உட்காந்திருக்கிறார் சிவா.  ஓடிப்போகும் பிளானை சொல்வதற்காக ஒரு சிறுமியை அனுப்பி சிவாவை கூட்டிவரச்சொல்கிறார் திவ்யா. அந்தச்சிறுமி சிவாவிடம் வந்து, "அக்கா உங்களை கூப்டாங்க.." என்றவுடன், "உங்க அக்காவா..பார்க்க நல்லாயிருக்குமா" என அந்த சூழலிலும் காமெடி பண்ணுவதற்கு சிவாவாலதான் முடியும்.

கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட 'ஆடலும் பாடலும்' என்கிற ஆபாச நடன நிகழ்ச்சி தற்போது மீண்டும் யூடியுபில் நிரம்பி வழிகிறது. அதையும் இந்தப்படத்தில் சேர்த்திருப்பது செம ஐடியா. அதிலும் திண்டுக்கல் ரீட்டா ஆ(ட்)டும் 'ஒட்டடை ஒட்டடை கம்பத்திலே' பாடலுக்கு எழுந்து விசில் அடிக்க தோனுகிறது(பாவிக ரெண்டு வரியோட மாத்திடாணுக).

இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனதால் அதைப்பற்றி எதுவும் சொல்லத்தேவையில்லை. "ஊதா கலர் ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?" என்கிற தத்துவப் பாடல் இன்னமும் முனுமுனுக்க வைக்கறது. தற்போதைய டிரென்ட் ,காதல் தோல்வி என்றால்,'அட பொன்னான மனசே.. பூவானே மனசே'.. என மரத்துக்கு கீழ உட்கார்ந்து சோக கீதம் பாடக்கூடாது போல. காதல் தோல்விக்கும் குத்து பாட்டுதான்.

இவ்வளவு நகைச்சுவையான திரைப்படத்தில் லாஜிக் மிஸ்டேக் என எதையும் தேட மனது வரவில்லை. இருந்தாலும் சில சந்தேகங்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தன் மகள்கள் காதலில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பருவம் எய்திய இளம்வயதிலேயே, சரியாக விசாரிக்காமல் முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்ததால், அவர்கள் சந்தோசமாக இல்லை என சிவாவிடம் சத்யராஜ் சொல்கிறார். ஆனால் அவரது கடைசி பெண்ணான ஸ்ரீதிவ்யாவுக்கு அப்படி அவசர அவசரமாக திருமணம் செய்யும்போது அவரது இரண்டு அக்காக்களும், நாங்களும் இப்படித்தான் பயந்தோம், இப்போ பாரு சந்தோசமா நல்ல நிலைமையில் இருக்கிறோம் என சொல்வது ஏன்..?

சிவகார்த்திகேயனைப் பற்றி தெரிந்து கொண்டு அவருக்குத்தான் திருமணம் செய்யவதாக முடிவெடுத்ததாக சொல்லும் சத்யராஜ்,ஒரு நாள் நைட் தெரியாமல் வீட்டிற்கு வந்துவிட்டார் என்கிற ஒரு அல்ப காரணத்திற்காக அதே தப்பை திரும்ப செய்வது ஏன்..?

இப்படி சில 'ஏன்'கள் இருந்தாலும் அதை யோசிக்கவிடாமல் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பதால் அவையெல்லாம் பெரிதாக கண்ணுக்குத் தெரியவில்லை..

சமீபத்திய சீரியஸ் படங்கள் எல்லாம் வரிசையாக ஊத்திக் கொண்ட நிலையில் அவைகள் ஏற்படுத்திய நஷ்டத்தை இந்தப்படம் நிரப்பிவிடும். சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் 'தலைவா' தூக்கப்பட்டு  'வபவாச' ரிலீஸ் செய்திருப்பதாக அறிந்தேன். முதல் மூன்று  நாட்களில் பாக்ஸ் ஆபிசில் 10 கோடியைத் தாண்டிவிட்டதாகத் தகவல்(பட்ஜெட் 5 கோடிதான்) .

எப்படிப்பார்த்தாலும் வ ப வா சங்கம் மூன்று மணிநேர சிரிப்புக்கு கியாரண்டி...




டிஸ்கி.


இந்த இடத்தில் சிவகார்த்திகேயனைப் பற்றி ஓன்று சொல்லவேண்டும். சிவாவுக்கு சென்ஸ் ஆஃப் ஹுமர் என்பது அவர் ரத்தத்தில் ஊறியது. ஆனால் டான்ஸ்,ஆக்டிங் என மற்ற துறைகளிலும் அவர் வெளுத்து வாங்குவதுதான் ஆச்சர்யம்.

விஜய் டிவியின் ஜோடிநம்பர்-1, சீசன்-3 என்று நினைக்கிறேன்.நடுவராக எஸ்.ஜே.சூர்யா பொறுப்பேற்றிருந்தார். அதில் ஒரு ஜோடியாக படவாகோபி தன் மனைவியுடன் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முக்கியமான இன்னொரு ஜோடி லொள்ளுசபா ஜீவா-ஐஸ்வர்யா. ஜீவாவும் மிமிக்கிரியில் யாருக்கும் சளைத்தவரல்ல. ஆரம்பத்தில் லொள்ளுசபாவில் ஒல்லிப் பிச்சானாக சில ரோல்களில் வந்தவர் பிறகு அத்தனை ஹீரோ ரோல்களையும் செய்தார். ரஜினி,பாக்யராஜ்,விசு என பல நடிகருக்கு கணக் கச்சிதமாகப் பொருந்துபவர். அந்த மிதப்பில் ஜோடி நம்பர் ஒன்னில் ரஜினி மாதிரி கையை மட்டும் ஆட்டி மூவ்மென்ட் கொடுக்க, S.J. சூர்யா கடுப்பாகிப் போனார். பின்னே...ஒரு டான்ஸ் காம்பெடிசனில், பிற்காலத்தில் ஹீரோவாக திரையில் ஜொலிக்க வேண்டும் என்கிற வெறியில் இருப்பவர் முழு ஈடுபாட்டோடு பிராக்டிஸ் செய்து ஆடவேண்டாமா...? தனது நடனத் திறமையை வளர்த்துக்கொள்ளும் மேடையாக இதைக் கருத வேண்டாமா..?

S.J.சூர்யா எதோ சொல்லிவிட்டார் போல...இனிமேல் ஆடமுடியாது என சொல்லிவிட்டு, அப்படியே கிளம்பி போய்விட்டார் ஜீவா. இதை எதற்கு தேவையில்லாமல் இங்கே சொல்கிறேன் என்கிறீர்களா...? அவர் இடத்தை நிரப்ப வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அப்போதுவரை அவர் ஒரு மிமிக்கிரி ஆர்டிஸ்ட்,க.போ.யாரு வின்னர் அவ்வளவுதான். அதற்கு முன்வரை சுத்தமாக டான்ஸ் ஆடியதில்லையாம். அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எல்லோரும் அறிவோம்.

விஜய் டிவியைப் பொறுத்தவரை ஜீவா, சிவாவுக்கு சீனியர். சிவாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர். படம் பெயர் 'மாப்பிள்ளை விநாயகர்' என்று நினைக்கிறேன். இன்னமும் அந்தப்படம் ரிலிசாகவில்லை. அதற்குள் சிவாவுக்கு மூன்று ஹிட்டுகள்...! அவரின் வெற்றிப்பாதை தொடர வாழ்த்துக்கள்.)





Wednesday 4 September 2013

நான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர்ந்த கதி-பார்ட்-2)


ங்கேயாவது சாதிக்கலவரம்,காதல் பிரச்சனை, ஈழம் தொடர்பான போராட்டங்கள் என எது  நடந்தாலும் உடனே பேஸ்புக்லயோ அல்லது ட்வீட்டர்லயோ முந்திக்கொண்டு கருத்து போடவேண்டியது. நாம எதிர்க்கேள்வி கேட்டா பதில் சொல்ல பயந்துகிட்டு,சொல்லாம கொள்ளாம 'பிளாக்' பண்ணிடவேண்டியது.  அப்படிப்பட்ட ஒரு டுமாங்லி கருத்து கந்தசாமிதான் நம்ம பிரபலபதிவர் வால்டேர் வீரபாகு...  

இப்படித்தான் ஒரு கருத்து சொல்லப்போயி ஒருத்தன்கிட்ட செமையா சிக்கிக்கிட்டாரு... பதில் சொல்லவும் முடியாம,பிளாக் பண்ணவும் தெரியாம அல்லோகலப்படுறாரு பாருங்க...

@ TWITTER...


@ GOOGLE +


@FACE BOOK

@BLOGSPOT