Wednesday 11 December 2013

சிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...

லவரத்தின் ஆரம்பப்புள்ளி எதுவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே  கலவரத்தின் பின்னணி தெரியவருகிறது.


விபத்துக்கான சூழல்.....

சிங்கப்பூரில் இயங்கும் பேருந்துகளில் விபத்துகள் நடப்பது மிகமிகக் குறைவு.இங்கு இருபெரும் போக்குவரத்து கழகங்கள் உள்ளது.  ஒன்று SBS TRANSIT ,  மற்றொன்று SMRT BUS SERVICES.  இரண்டுமே பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் தரும் நிறுவனம்தான். இந்த இரண்டு நிறுவனங்களில் பேருந்துகள் மோதி பயணிகள் இறந்ததாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அதேபோல் மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதும் மிகக் குறைவே. இவ்வளவுக்கும் இப்பேருந்துகளில்  நடத்துனர் என்று ஒருவர் கிடையவே கிடையாது. ஓட்டுனர் மட்டும்தான். அவர்தான் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் வழியாக பயணிகள் இறக்கிவிட்டனரா என்பதை கவனித்துவிட்டு தானியங்கி கதவை மூடுவார்.

ஆனால், அன்று நடந்த விபத்து தனியார் பேருந்தினால் நிகழ்த்தப்பட்டது. சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும் துறையில் வேலை பார்ப்பவர்கள் மொத்தமாக Dormitory எனப்படும் விடுதியில் தங்கவைக்கப் படுவர். சிங்கையில் நிறைய  Dormitory உள்ளது. காலையில் லாரிகளில் வேலைக்கு அழைத்துச்செல்லப்படும் இவர்கள், வேலைமுடிந்து இரவுதான் வீடு திரும்புவார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதோ அல்லது சினிமா உள்ளிட்ட மற்ற கேளிக்கை இடங்களுக்கு செல்வதோ சாத்தியமில்லை.

வார இறுதியான ஞாயிறு மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் எல்லோரும் ' லிட்டில் இந்தியா ' எனப்படும் அப்பகுதியில் கூடுவார்கள். ஒருவேளை ஞாயிறு வேலையிருந்தாலும் மாலை கூடிவிடுவார்கள். இதுதான் அவர்களுக்கு மீட்டிங் பாயிண்ட். ஒருவார உடல்ரீதியான கடுமையான வேலைப்பழுவுக்கு அதுதான் ரிலாக்சிங் ஏரியா.பிறகு சரக்கு,அரட்டை என்று அந்த ஏரியாவே களைகட்டும்.அப்படி அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்கும். தீபாவளி நேரங்களில் ரங்கநாதன் தெருவில் நுழைந்து விட்ட உணர்வு ஏற்படும். கடைசியாக அந்த வாரத்திற்கு தேவையான மளிகை, காய்கறிகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு பிரியா விடைபெறுவார்கள். இது இன்று நேற்றல்ல, பட வருடங்களாக நம்மவர்கள் பின்பற்றும் நடைமுறை.

அவர்கள் தங்கியிருக்கும் Dormitory யிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் கிடையாது. அந்த வாய்ப்பை தான் இதுபோன்ற பல தனியார் பேருந்துகள் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை அழைத்து செல்லும் இப்பேருந்துகளுக்கு வார இறுதியில் வேலையிருக்காது என்பதால் , இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டு துட்டு பார்க்கும். தலைக்கு $2 வீதம் வசூலித்து கும்பல் கும்பலாக ஏற்றிச்சென்று லிட்டில் இந்தியா பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் அவர்களை ஏற்றிக்கொண்டு அதே Dormitory யில் விட்டுவிடும்.

இதுபோன்ற ஒரு தனியார் பேருந்தில்தான் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அன்று நடந்தது......

லிட்டில் இந்தியாவின் பரபரப்பான செராங்கூன் சாலைக்கு இணையாக அமைந்திருக்கிறது ரேஸ்கோர்ஸ் சாலை.  இந்தச் சாலையில்தான் அஞ்சப்பர், அப்பல்லோ பனானா லீஃப், முத்து கறீஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹோட்டல்கள் உள்ளன.

ரேஸ் கோர்ஸ் சாலை,ஹேம்­­­ஷி­­­யர் சாலைச் சந்­­­திப்­­­பில் ஞாயிறு இ­­­ரவு கிட்டத்­­­தட்ட 9.23 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. அந்தப் பேருந்தை இயக்கியது 55 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் வாசி. பேருந்துக்கு வெளியே கட்டணம் வசூலித்தது ஒரு பெண்மணி என்று சொல்கிறார்கள். அவரும் சிங்கப்பூர் வாசிதான்.

அந்தப் பேருந்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்கிற நபரும் ஏற முயன்றுள்ளார். அவர் மிக அதிகமாகக் குடித்திருந்தார் என சொல்லப்படுகிறது. அதனால் அவரை ஏற அனுமதிக்கவில்லை. அப்போது நடந்த தள்ளுமுள்ளில் சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதைக் கவனிக்காத ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயற்சிக்க, ஏதோ சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தியிருக்கிறார். பேருந்தின் கீழே சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் சக்திவேல். உடனடியாக அங்கு கூடியிருந்த தமிழர்கள் குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னருக்கு( Singapore Civil Defence Force ) தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வரும்வரை எந்த அசம்பாவிதமும் அங்கு நடைபெறவில்லை.

 9.31 PM க்கு முதல் ஆம்புலன்ஸ் வருகிறது. 9.37 மணியளவில் குடிமை தற்காப்புப்படை அந்த இடத்திற்கு வந்தடைகிறது. கூடவே தீயணைப்பு வண்டியும். அங்கு கூட்டம் அதிகமாகக் கூடியதால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக அதிகமான போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 9.41 க்கு அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது 400 பேருக்கு மேல் கூடிவிடுகிறார்கள். 9.56 க்கு சக்திவேலின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட தருணத்தில்தான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி வைக்கப் பட்டிருக்கவேண்டும்.

முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்து பிறகுதான் கலவரம் வெடித்திருக்கிறது. முதலில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு அந்தத் தனியார் பேருந்து,  குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னர், அவர்கள் வந்த வாகனம், ஆம்புலன்ஸ் என தாக்குதல் தொடர, பின்பு கலவரமாக வெடித்துள்ளது.

இன்னொரு செய்தி, பேருந்து பின்நோக்கி நகரும்போது முன் சக்கரத்தில் சக்திவேல் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும், பெண் நடத்துனரும் சம்பவ இடத்தில் தான் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த குடிமைத் தற்காப்பு படையினர், விபத்தில் சிக்கிய நபர் இறந்துவிட்டார் என்று தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட ஓட்டுனரையும்,நடத்துனரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு சென்றதால்தான் கலவரம் வெடித்தது என்றும் சொல்லப்படுகிறது



தாக்குதலில் மொத்தம் 400 பேர் ஈடுபட்டதாக உள்ளூர் செய்திகளில் படிக்க நேர்ந்தது. அடுத்து அங்கு விரைந்த போலீசாரின் 16 வாகனங்கள், 9 சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்களை, கான்கிரிட் துண்டுகள், கற்கள், பீர் பாட்டிகள், இரும்புக் கழிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் கைகளில் கிடைத்த அனைத்துப் பொருட்களைக் கொண்டும் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் ஆறு போலிஸ் ஆபீசர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கலவரத்தின் உச்சகட்டமாக ஐந்து வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு மேலான சிங்கப்பூர் வரலாற்றில் இப்படியொரு கலவரம் நடந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் சிறு அசம்பாவிதம் கூட நிகழ்ந்ததில்லை. யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று நடந்த  இந்தக் கலவரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து நின்றிருக்கிறது சிங்கப்பூர் போலிஸ்.

இவ்வளவு கலவரத்திலும் அவர்கள் அங்கு குழுமியிருந்த தமிழர்கள் மீது சிறிய லத்தி சார்ஜ் கூட செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிங்கப்பூரை ஓர் அமைதிப் பூங்காவாக மாற்ற நாங்கள் நிறைய இழந்திருக்கிறோம். இதுபோல கலவரங்களை துளிகூட அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஒருவர் வேதனையுடன் கலந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கலவரத்திற்கான அடிப்படைக் காரணம்...

கலவரத்திற்கு காரணமே நம்மவர்களின் குடிவெறிதான் என்று சமூக ஊடகங்களில் பல தமிழர்கள் பொங்குவதைக் காண முடிகிறது. இத்தனை வருடங்கள் அதே இடத்தில் நம்மவர்கள் குடித்துவிட்டு, பிறகு அமைதியாக தங்கள் இருப்பிடத்துக்கு சென்றார்களே... சிறு அசம்பாவிதம் நடந்ததாக வரலாறு இருக்கிறதா..? சிங்கப்பூரில் இந்தியத்தமிழர்கள் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட முடியுமா...?

இந்த இடத்தில் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர் திரு ஈஸ்வரன் அவர்கள் சுட்டிகாட்டிய ஒரு விஷயத்தை  நினைவு படுத்த விரும்புகிறேன் ..  "இச்சம்பவத்திற்குக் காரணம் நடந்த விபத்தே தவிர, குடிபோதை அல்ல.. அவர்களின் ஆக்ரோசத்தை குடிபோதை இன்னும் அதிகப்படுத்தி கலவரமாக மாற்றியிருக்கிறது." தற்போது சம்பவம் நடந்த ரேஸ்கோர்ஸ் சாலையில் மதுபானங்கள் விற்பதற்கான அனுமதி வார இறுதி நாட்களில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போதைய நிலவரம்....

கலவரம் நடந்த அன்று இரவே 27 பேரை சுற்றிவளைத்து கைது செய்தது சிங்கப்பூர் போலிஸ். அதில் 25 பேர் இந்தியத் தமிழர்கள், இருவர் பங்களாதேஷ் ஆடவர்கள். அதில் ஒரு இந்தியர் மற்றும் இரு பங்களாதேஷ் காரர்களும் சம்மந்தப்படவில்லை என தெரிந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கலவரம் நடந்த மறுநாள் இறந்துபோன சக்திவேல் குமாரவேலு தங்கியிருந்த விடுதியில், இரவு 10 மணிக்குப் பிறகு வந்தவர்களை தனித்தனியாக விசாரித்தது போலிஸ். பிறகு மற்ற விடுதிகளிலும் விசாரணைகள் மேற்கொண்டு, இன்று(11-12-2013) காலை மேலும் 8 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அதில் மூன்று பேர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் , தற்போது கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஒருவேளை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

சிங்கப்பூரில் குற்றத்திற்கான தண்டனைகள் மிக வெளிப்படையானவை. இந்தந்த குற்றத்திற்கு இன்னென்ன தண்டனைகள் என வகைப்பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் எந்த நெளிவு சுளிவும் இருக்காது. குற்றம் நிரூபணமானால் தயவு தட்சனையின்றி தண்டனை வழங்கப்படும். இந்தியா , பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மலேசியா,பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மார் , சீனா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிருந்தும் இங்கு வேலை பார்க்கிறார்கள்.இத்தனை விதமான மனிதர்களை வைத்துக்கொண்டு குற்றங்களே இல்லாத நாடாக கட்டமைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் , சமரசமே செய்யமுடியாத அவர்களின் தண்டனை அமைப்புகள்தான். ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளி கூட தப்பித்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

கடைசியாக குற்றம் சாட்டப்பட்ட 27 தமிழர்களுக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என சொல்கிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டதால் பிரம்படியும் கிடைக்கலாம். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததற்காக அபராதமும் விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்டவர்களில் எத்தனைப்பேர் திருமணமானவர்கள் எனத் தெரியவில்லை. ஊரில் லோன் போட்டு வீடு கட்டிக்கொண்டிருக்கலாம். தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கலாம். தம்பி, தங்கைகளின் படிப்புக்காக மாதந்தோறும் பணம் அனுப்புபவராக இருக்கலாம். திருமண வயதில் மாமன்பெண் காத்திருக்கலாம்.  குடும்பத்தின் அன்றாட செலவுக்கே இவர்கள் பணம் அனுப்பித்தான் பிழைப்பு நடக்கலாம். எல்லாமே பாழாய்ப் போய்விட்டது. மொத்தத்தில் அவர்களின் எதிர்கால வாழ்க்கை இருண்டு போனதுதான் மிச்சம்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் கீழே உள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் 8 பேர்.. ஒருவேளை இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கலாம்... அப்படி இருக்கும் பட்சத்தில், குடும்பத்தின் எதிர்காலம்..?


சன் டிவியின் உள்குத்து....

இக்கலவரம் முழுவதும் இந்திய தமிழர்களால், குறிப்பாக கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும்துறையில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவிரவும்,  இது அந்த விபத்தின் எதிரொலியாக நடந்ததே ஒழிய, மத, இன ரீதியான கலவரம் (RACIAL  RIOT) கிடையாது. சீன இன மக்களுக்கும் இதற்கும் துளி அளவுகூட சம்பந்தம் கிடையாது.

இப்படியிருக்க, சன் டிவிக்கு யாரோ தவறான தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள் போல... இது சீனர்களுக்கும் தமிழர்களுக்கும்  நடந்த இன மோதல் மாதிரியும், இங்கே தமிழர்கள் வெளியேவர அச்சப்பட்டு வீட்டினுள்ளே முடங்கியுள்ள மாதிரியும் தவறான தகவல்களை சன் டிவி தனது செய்தியில் வாசித்திருக்கிறது.


சம்பவம் நடந்த மறுநாளே இங்கே அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. இயல்பு வாழ்க்கை துளிகூட பாதிக்கப்படவில்லை.

சன் டிவியின் இந்த தவறான செய்தியை  சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் கண்டித்திருப்பதுடன், ஸ்ட்ரைட் டைம்ஸ் மூலமாக விளக்கமும் கோரப்பட்டிருக்கிறது.

 (டெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சன் டிவிக்கு அனுப்பிய கண்டனக் கடிதம் )
கலவரத்தின் மூல காரணம்...


இக்கலவரத்தின் மூல காரணமான அந்த விபத்தில் இறந்த சக்திவேல் முருகவேலு, புதுக்கோட்டை மாவட்டம், அரிமலத்தில் உள்ள ஓணான்குடி கிராமத்தை சேர்ந்தவர். ITI படிப்பை முடித்துவிட்டு சில வருடங்கள் துபாயில் பணிபுரிந்தவர். கடந்த இரண்டு வருடமாகத்தான் சிங்கையில் பணிபுரிகிறாராம்.

இங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில், கேரளாவில் தமது கணவருடன் தங்கியிருந்த இவரது தங்கை கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்ட துயரமும் நடந்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பப் போவதாக தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தவர், இன்று காலை சடலமாக சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்திருக்கிறார்.

கலவரத்திலும் மனிதாபிமானம்... 


மேலே இருக்கும் வீடியோ ஒரு முக்கியமான நிகழ்வு. கலவரம் நடந்துக்கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள, அங்கு நின்றிருந்த ஆம்புலன்சில் ஏறி கதவை மூடிக்கொண்டனர். அப்போது அந்த ஆம்புலன்சுக்கு மிக அருகிலே இன்னொரு வாகனம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த வாகனமும் தீக்கிரையாகும் சூழலில், அங்கு நின்றிருந்த சில தமிழ் நல் உள்ளங்கள் ஓடிச்சென்று ஆம்புலன்சின் கதவைத்திறந்து போலீசாரை விடுவித்துக் காப்பாற்றினார்கள்.

ரோட்டில் கிடக்கும் பர்சை எடுத்துச்சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்தாலே பாராட்டுப் பத்திரம் வழக்கும் சிங்கப்பூர் அரசு, பல போலீசாரின் உயிரைக் காப்பாற்றிய அவர்களை கௌரவிக்காமல் விடுமா...? ஆனால் அவர்களைக் காப்பாற்றியவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் தெரியவில்லை.

 "If you know any of the men who approached the ambulance to help, we would like to hear from you. Call us at 6319-6397 or e-mail us at stnewsdesk@sph.com.sg " என்று இன்றைய செய்தித்தாளில் அறிவித்திருக்கிறது.

இவ்வளவு கலவரத்திலும் இவர்களை பாராட்டவேண்டும் என்கிற எண்ணம், இந்த அரசின் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் காட்டுகிறது.

என்னத்த சொல்ல...?

நான் சிங்கை வந்த புதிதில்,வார இறுதியில் என் நண்பன் லிட்டில் இந்தியாவுக்கு என்னை அழைத்துச் சென்றான். அப்போது எனக்கு எல்லாமே புதுசு. தி நகர், ரங்கநாதன் தெரு போல சின்னச் சின்ன வீதிகள். எங்குமே நடக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நெரிசல். எல்லோருமே நம்மவர்கள்.

அப்போது ஒரு வீதியில் நடந்து கொண்டிருந்தபொழுது, திடீரென்று ஒரே சலசலப்பு. பார்த்தால், நாங்கள் வந்த வீதியின் இருபுறமும் போலிஸ் ரவுண்டப் பண்ணியிருக்கிறது. இடையில்  இருக்கும் சிறு சிறு சந்துகளைக்கூட மப்டியில் வந்த சிங்கப்பூர் போலிஸ் கவர் செய்துவிட்டது. உடனே, "எல்லோரும் இருந்த இடத்தில் அப்படியே உட்காருங்கள் " என போலிஸ் மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தது. எனக்கு அல்லு இல்ல.. என்ன இது என்று நண்பனிடம் கேட்டபோது,"இது சும்மா செக்கப் தான்... யாராவது சட்ட விரோதமா (ILLEGAL ) தங்கி இருந்தா அவர்களை பிடிப்பதற்கு" என்று சொன்னார்.

ஒவ்வொருவரிடமும் ஐசி அல்லது பாஸ்போர்ட் இருக்கிறதா என சோதித்தார்கள். அவர்களின் சோதனை பலனளித்தது. மூன்று பேர் சிக்கினார்கள். அவர்களின் கைகளை பின் பக்கமாக விலங்கிட்டு வேனில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
 
அப்போதெல்லாம், லிட்டில் இந்தியா அமைந்திருக்கும் செரங்கூன் ரோடில் நடந்து சென்றால், திடீரென்று ஒருவர் எதிர்கொண்டு,"ஐயம் போலிஸ்.. ஷோ மீ யுவர் ஐசி." என்பார்.அவ்வளவு கட்டுப்பாடுகள் முன்பிருந்தது. என்னவோ தெரியவில்லை,சில வருடங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, எங்கும் சுற்றலாம், தண்ணியடிக்கலாம், கூட்டம் போடலாம் என்று சிங்கப்பூர்வாசிகளைப்போல அனைத்து உரிமைகளையும் இந்தியாவிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கி யிருந்தது. அச்சுதந்திரத்தை தற்போது மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் நம்மவர்கள்.

எனக்குத்தெரிந்து வெளிநாடுகளில் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கும். இங்கு என்ன இல்லை...? தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கும்பாபிஷேகம் அல்லது கோயில் விசேசம் என்றால்,அதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையையே தடுத்து வசதி செய்து கொடுக்கிறது. வேலை வாய்ப்புகளில் கூட பிரித்துப் பார்ப்பதில்லை. பல ஆண்டுகள் இளமையைத் தொலைத்த இளைஞர்களுக்கு ' வடிகால் ' கூட அரசின் அனுமதியோடு நடக்கிறது.

மிக முக்கியமாக தமிழுக்கு இங்கு ஆட்சிமொழி அங்கீகாரம் வழங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். எட்டாம் வகுப்பு படித்தவரிலிருந்து, எஞ்சினியரிங் படித்தவர்கள் வரை வேலைக்கு எடுக்கும் ஒரே டாலர் தேசம் சிங்கப்பூர்தான் என்பதை மறுக்க முடியுமா...?

'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்' என்பதுபோல சிங்கப்பூர் தமிழர் களுக்கு வழக்கப்படும் சலுகைகளை இந்தியத் தமிழர்களும் இதுவரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கும் இனி ஆப்பு...

சம்பவம் நடந்த அன்று சமூக வலைத்தளங்களில் சிங்கப்பூர்வாசிகள் பொங்கிய பொங்கு இருக்கே...! அவர்கள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. பார்த்துப் பார்த்து கண்ணாடி மாளிகை போல செதுக்கி வைத்திருக்கும்  ஓர் அமைதிப் பூங்காவின் மேல் சிறு கல் எறிந்தாலே தாங்க மாட்டார்கள். தமிழர்கள் ஆடியது கொடூர ருத்ரதாண்டவம் அல்லவா...! இனி கடுமையானக் கட்டுப்பாடுகளை இங்கிருக்கும் இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளலாம்.


ஒரு கசப்பான உண்மையை சொல்கிறேன். மனைவியுடன் வெளியே செல்லும்போது, 10 சீனர்களோ அல்லது 10 மலாய்காரர்களோ குழுமியிருக்கும் ஓர் இடத்தை எவ்வித சங்கடமும் இன்றி கடந்து சென்றுவிடலாம். ஆனால் 10 இந்தியத் தமிழர்கள் கூடிநிற்கும் இடத்தை கடந்து செல்வது எவ்வளவு சங்கடமானது என்பதை இங்கு குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனக்கு இந்த அனுபவம் நிறைய...நிறைய... நிறையவே இருக்கிறது.

கூட வரும் நம்மைப் பொருட்படுத்தாமல் உடன் வருபவளை காலிலிருந்து தலைவரை  அளவெடுத்துப் பார்க்கும் அவர்களின் பார்வை அருவருக்கத்தக்கது. இது இனப்பற்றால் பார்க்கும் பார்வை என்றெல்லாம் சொல்ல முடியாது.  எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. பத்தில் நான்கு பேர் அப்படியிருப்பார்கள். அதிலும் பங்களாதேஷ் பசங்க இன்னும் கொடுமை. ஆனால் இவர்களின் லிமிட் இவ்வளவுதான். அதைத்தாண்டி போகமாட்டார்கள்.

ஊரிலிருந்து கிளம்பும்போதே சாம்பாதிப்பது ஒன்று மட்டுமே நமது குறிக்கோள் என்கிற மனநிலையில்தான் இருக்கிறோம். எவரும் மாட மாளிகையில் சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்பவர் கிடையாது. வேறு வழியில்லாமல்தான் வெளிநாடுகளுக்கு பணி செய்யவருகிறோம். குடும்பத்தின் மொத்தப் பொறுப்பையும் தன் தலைமேல் சுமந்துகொண்டுதான் சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் கால் வைக்கிறோம். எப்போது வெளிநாட்டில் கால் வைக்கிறோமோ அப்போதே நமது கோபம், வீரம், புரட்சி எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி அந்த ஏர்போர்ட்டின் வாயிலில் வைத்துவிட்டு வரவேண்டும். திரும்பிப் போகும்போது அந்த மூட்டை அப்படியே இருக்கப்போகிறது. அப்போது எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே... !

   கலவரம் நடந்த மறுநாளே இயல்பு நிலைக்கு திரும்பிய ரேஸ்கோர்ஸ் ரோடு
இக்கலவரத்தின் மூலமாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இரண்டு விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஓன்று,இதுவரை இங்கே போராட்டம் என்றால் சிறு குழுக்களாக நின்று உரிமையை நியாயப்படி கேட்டுப் பெறுவது என்றிருந்த நிலையில், தமிழர்கள் கலவரம் செய்து அதற்கு தவறான வழியைக் காட்டியது . மற்றொன்று, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடத்தால், அதற்காகக் கலவரம் கூட செய்யக்கூடிய மனநிலையில் நிறைய ஊழியர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது.

இனி சிங்கப்பூர் அரசாங்கம் என்ன மாதிரியான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. குறிப்பாக இந்திய தமிழர்கள் மீதான  கட்டுப்பாடுகள். இங்கிருக்கும் மற்ற இந்தியத் தமிழர்கள் போல நானும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

---------------------------------X--------------------------------
Updated news (12-12-2013)
இன்றைய (12-12-2013) சிங்கப்பூர் ஊடகங்களில் தமிழர்களுக்கு சாதகமான சில செய்திகள் வந்திருக்கிறது. இந்தப்பதிவில் இருக்கும் முதல் கானொளியில் இரண்டு நபர்கள் தனியார் பேருந்தை கண்மூடித்தனமாகத் தாக்கிக்கொண்டிருக்க ஒருவர் அதைத் தடுக்க முயல்கிறார். அவர்தான் அந்த சம்பவத்தின் ஹீரோ... அவரையும் தேடிப்பிடித்து கௌரவிக்க காத்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.


அவரைப்பற்றிய தகவல்களை அருகில் உள்ள காபி ஷாப் களில் விசாரித்த வகையில் அவருக்கு வயது சுமாராக 35 , இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், மிகவும் அமைதியானவர், பண்பானவர் என்றும் அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக இன்றைய CNA -வில் செய்தி வந்திருக்கிறது. அவரை ' Good Samaritan ' என்று பாராட்டியிருக்கிறது அந்த வெகுஜன ஊடகம். அதுமட்டுமல்ல அந்த வீடியோவைப் பார்த்து நிறைய சிங்கப்பூர்வாசிகளே சமூக வலைத்தளங்களில் அந்த நபரை பாராட்டி யிருக்கிறார்கள்.

மேலும், கலவரம் மூளும் சூழலில் அங்கு நின்றிருந்த நிறைய தமிழர்கள் அருகிலிருந்த உணவகங்களின் வெளியே போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகளை அவர்கள் சொல்லாமலே தூக்கிச்சென்று உள்ளே பத்திரப் படுத்தினார்களாம். அதையும் இன்றைய செய்தியில் குறிப்பிட்டு அந்நபர்களை பாராட்டியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.

ஒரு கலவரம் நடந்தால், மொத்த கும்பலையும் கொத்தாக அள்ளிச்சென்று உள்ளே வைத்து குமுற வேண்டும் என்கிற தட்டையான சிந்தனையை தவிர்த்து, அச்சம்பவ இடத்தில் இருந்தவர்களை தனித் தனியாகப் பிரித்து விசாரணையை மேற்கொள்ளும் சிங்கப்பூர் அரசாங்கம் மிக நேர்மையானது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் சொல்லவேண்டும்..?

தவிர, இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நேற்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் நேரடியாக தமிழர்கள் தங்கியிருக்கும் அனைத்து Dormitory க்கும் சென்று, அங்கிருக்கும் இந்திய தமிழர்களை நேரில் சந்தித்து, என்ன மாதிரியான பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது என விசாரித்திருக்கிறார். அவர்கள், "எங்களுக்கு எந்த சங்கடங்களும் இங்கு இல்லை. மிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். அவர்களின் செயல்களைக் கண்டு நாங்கள் வெக்கப்படுகிறோம்  " எனத் தெரிவித்திருக்கிறார்கள்...

இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்...?

47 comments:

  1. Replies
    1. நன்றி சீனி... அது சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள்..

      Delete
  2. நமக்கு எதிரி நாம் தானோ ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்கரகட்டி... நம் முதல் எதிரியே உணர்ச்சி வசப்படுதல்தான்

      Delete
  3. சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. படங்களுடன். நன்கு விவரமாகச் சொன்னீர்கள்.

    தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து கொள்ளடா! என்று சிங்கப்பூர் சென்ற தமிழர்களுக்கு ஒருவித சங்கடத்தை செய்து விட்டார்கள். வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies

    1. நன்றி சார்.. மிகுந்த அவமானகரமான நிகழ்வு அது...

      Delete
  4. நல்ல பதிவு! நீங்கள் கூறியது உண்மை என்றால்...பாதிக்கப்படுவது எல்லா தமிழர்களுமே; அங்கு வரும் சுற்றுலாவாசிகளும் தான்!

    ஒரு விபத்து நடந்தால்.....அதன் பெயர் accident! இல்லாவிட்டால் அது incident!

    இங்கு நடந்த accident-ஐ incident-ஆக மாற்றிய பெருமை நம் தமிழர்களுக்கு உரியது!

    நூற்றுக்கு 80 விழுக்காடு குற்றங்களில் குடி சம்பந்தப்பட்டு இருக்கும்.
    குடி இல்லையென்றால்? யாரும் போலீஸ் மீது கைவைத்து இருக்கமாட்டர்கள்.

    இங்கு போலீஸ் மீது கை வைத்தால்...கை வைக்கிறோம் என்று சொன்னாலும் நீங்க அவுட்.
    விரலை நீட்டி துப்பாக்கி மாதிரி காட்டினால்...அது விரலா பொம்மை துப்பாக்கியா இல்லை நிஜ துப்பாக்கியா என்ற ஆராய்ச்சி இல்லை.
    தமிழ்மணம் +2

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்பள்கி.. சரியாகச் சொன்னீங்க.. குடி மட்டும் இல்லைஎன்றால் இவ்வளவு பெரிய அளவில் நடந்திருக்காது

      Delete
  5. நண்பர்கள் மூலம் இந்த செய்தி ஒவ்வொருவிதமாக அறிந்தது. இப்போ மிக விபரமாக உங்களிடமிருந்து அறிந்து கொண்டேன். இது சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த இன மோதல் மாதிரி என்று சொன்னா தமிழகத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கும் என்று சன் டிவி நினைச்சிருக்கலாம்.
    //இந்தியத் தமிழர்கள் கூடிநிற்கும் இடத்தை கடந்து செல்வது எவ்வளவு சங்கடமானது என்பதை இங்கு குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள்.//
    ரொம்ப அவமானமாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேகநரி... இங்கே வசிக்கும் அனைத்து தமிழர்கள் வீட்டிலும் சன் டிவி இணைப்பு உள்ளது. ஒரு சென்சிடிவான செய்தியை வெளியிடும்போது சரியாக விசாரிக்க வேண்டாமா...? தக்க பதிலை எதிர் பார்க்கிறது சிங்கை அரசு.

      Delete
  6. நடந்தது என்ன என்று விளக்கமாக,அதே சமயம் ஏற்படப் போகும் பலாபலன்கள் என்ன என்பதும் உங்கள் பகிர்விலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்பது சரியாகத் தான் இருக்கும் போலிருக்கிறது.

    ReplyDelete
  7. உள்ளதை உள்ளபடி எழுதி உள்ளீர்கள்.மிகவும் அருமையான கட்டுரை..................

    ReplyDelete
  8. உள்ளதை உள்ளபடி எழுதி உள்ளீர்கள்.மிகவும் அருமையான கட்டுரை..................

    ReplyDelete
  9. நானும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//கனவைச்சுமக்கும் பலரின் ஆதங்கம் இதுவாகத்தான் இருக்கும் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனிமரம்.உண்மைதான்... குடிநுழைவு சம்மந்தமாகத்தான் எல்லோரும் கவலைப் படுகிறார்கள்..

      Delete
  10. Mannan evazi makkai avvazi. Thanks to Tamilnadu Politicians for making tamilians addict to alcohol.

    ReplyDelete
  11. நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது.:(

    தெளிவான, விரிவான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  12. virivana, thelivana oru pathivu sir. enna nadanthu irukkirathu singapoore l therinthu kolla mudikirathu unga pathivin mulam sir.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேஷ்...

      Delete
  13. வெட்கப்பட வேண்டிய சம்பவம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி DD ... என்ன செய்வது...? :-(

      Delete
  14. NANBA
    YOU HAVE REGISTERED THE INCIDENT IN PROPER AND DETAILED WAY....LIKE A PRESSMAN

    ReplyDelete
  15. சரியாக கூறி உள்ளீர்கள் தோழரே நானும் சிங்கையில் தான் பணி புரிகின்றேன், நம்ம ஊர் விசாரணை போல அல்லாமல் மிகவும் நேர்மையாக நடக்கின்றது அதுவும் பாராட்ட வேண்டியவர்களை தேடி கண்டு பிடித்து பாராட்ட வேண்டும் என்று நினைக்கும் இவர்களின் எண்ணமே ஆகச் சிறந்தது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா... வழக்கு விசாரணைகள் சுமூகமாக நேர்மையாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், நம்மூரில் எவரும் புரட்சி , போராட்டம் என்று ஆரம்பித்து கெடுக்காமல் இருக்க வேண்டும்

      Delete
  16. அண்டை நாடான மலேசியாவில் இருக்கின்ற நாங்கள் பத்திரிகைகளை புரட்டோ புரட்டு என்று புரட்டினாலும் அங்கே என்ன நடந்தது நடக்கிறது என்கிற செய்திகளை முழுமையாக திரட்டமுடியாமல் திண்டாடினோம்.

    நண்பர்கள் உறவுகள் என்று முகநூல் வாயிலாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு கேட்கின்றபோது.. `என்னமோ சண்டையாம்.. ஒரு குடிகார தமிழ்நாட்டுக்காரனை பஸில் இருந்து கீழே தள்ளிவிட்டார்களாம்.. அவன் செத்தானாம்.. ‘ என பட்டும் படாமல்தான் பதில் வந்தது. சிலர் தெரியவில்லை என்றே சொல்லிவிட்டார்கள்.

    சிங்கப்பூரும் நாட்டின் நற்பெயர் களங்கப்பட்டுவிடக்கூடாதென்று பல செய்திகளை கண்துடைப்பு செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

    ஆனால் சகோ.. salute.. உங்களின் விரிவான தகவல்கள் கொண்ட இந்தப்பதிவு அற்புதம். முழுமையாக வாசித்து அறிந்துகொண்டேன். தவித்திருக்கும் உலகத்தமிழர்களுக்கு நல்லதொரு விளக்கமாக இருந்தது. நன்றி.

    //எப்போது வெளிநாட்டில் கால் வைக்கிறோமோ அப்போதே நமது கோபம், வீரம், புரட்சி எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி அந்த ஏர்போர்ட்டின் வாயிலில் வைத்துவிட்டு வரவேண்டும். திரும்பிப் போகும்போது அந்த மூட்டை அப்படியே இருக்கப்போகிறது. அப்போது எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே... !// அதுசரி. அங்கேயும் காட்டவேண்டாம். பொதுமக்களுக்கு இடைஞ்சல். :)

    ReplyDelete
  17. //அதுசரி. அங்கேயும் காட்டவேண்டாம். பொதுமக்களுக்கு இடைஞ்சல். :)// மிகச் சரியாக சொன்னீங்க சகோ..மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. Perumal Goundar Natarajan12 December 2013 at 12:58

      tks for safe country

      Delete
  18. கலவரத்தின் உண்மை நிலையை சரியாக எடுத்து சொல்லியுள்ளீர்கள். வெள்ளிக்கிழமைகளில் அரபு நாடுகள் பலவற்றிலும் இவ்வாறான கூட்டம் கூடுவதுண்டு. ஆனால் கலவரம் எதுவும் நடந்ததில்லை. குறிப்பாக மது தடை இருப்பதால் எல்லோருக்கும் கொஞ்சம் பயமே.

    ReplyDelete
  19. Thanks Brother for this post.....

    ReplyDelete
  20. thanks for updating the full story about those 'black' incident, what i have to say about 'sun network' they are black sheep!

    =Va Su=

    ReplyDelete
  21. இதற்கு பெயரே மோப் பிகேவியர் என்று உளவியலில் குறிப்பிடுவார்கள்...தனியாக இருக்கும் போது எலியாகவும் கூட்டத்திலே இருந்தால் புலியாகவும் மாறும் மனோ நிலை . அநீதிக்காக பொங்கும் தமிழனாக இல்லாமல் அடிச்ச பீருக்காக பொங்கும் அம்மாஞ்சி தமிழர்களின் நிலை கடைசி வரை இதுதான். சொந்த நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை பொறுத்துக் கொள்வார்களாம்; பிழைக்க வந்த இடத்தில் பின்னி எடுப்பார்களாம். (அடிமையாக இருந்தாலும் எங்க ஊரில் மட்டும் அடிமையாக இருப்பேன் என்னும் உயரிய மனநிலைதான் இது!!). ஊழலில் திளைக்கும் கழக அரசுகளின் இலவசத்தில் பிழைப்பு நடத்தும் நாயினும் கேவலமான வாழ்கையுடையோரை சிங்கை மக்களும் அரசாங்கமும் ஒழுங்கா நடத்தினாலும் தாங்கள் மேலும் தற்குறிகள்தான் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது இந்த நிகழ்வு...சும்மாவா சொன்னார்கள் "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்.........." A Karthikeyan

    ReplyDelete
  22. உங்களுடைய விரிவான பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  23. நடுநிலையான பதிவு . நடந்தது கசப்பான ஒரு நிகழ்வானாலும் எல்லோருக்குமே நல்லதொரு பாடம் .

    ReplyDelete
  24. நம் தலையில் நாமே மண்ணை வாரி இறைத்துக் கொண்டுவிட்டோம்! அயலூரில் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் அடக்கம் தேவைதான்! 27 தமிழர் குடும்பங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது! விரிவான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  25. சரியாக கூறி உள்ளீர்கள் தோழரே நானும் சிங்கையில் தான் பணி புரிகின்றேன்,

    ReplyDelete
  26. Me too have worked 4 years in singapore..!! It was shocking. But come to know the right information by your blog.
    Thanks...!! :)

    ReplyDelete
  27. ரொம்ப தெளிவா அழகா விவரிச்சுச் சொல்லிட்டீங்க..கடுமையான, அதே நேரத்தில் மனிதநேயத்துடன் கூடிய சட்டம் உள்ள இடம் அது..லிட்டில் இண்டியா ஏரியாவிற்கு போனபோது, நானும் டி.நகர் மாதிரியே உணர்ந்திருக்கிறேன்..நம் ஆட்களின் அவசர புத்தி கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  28. சிங்கப்பூர் அரசாங்கம் கவனக்குறைவாக நடந்து கொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீதும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். இவர்கள்தான் மூலக்கூறு. தனி மனித மனநிலை ஒரு குழுவாக உருவாகும் போது மாறுபடுகிறது. நான் மூன்று முறை விடுமுறைக்காக சிங்கப்பூர் வந்துள்ளேன். ஓட்டுநர்கள் பெரும்பாலும் எல்லாரும் இறங்கி ஏறிய பிறகே வண்டியை எடுக்கிறார்கள். அவர்கள் யாரையும் அவசரப்படுத்துவதில்லை. சென்னையில் வயதான பெரியவர்கள் கூட சற்று மெதுவாக ஏறினால் எப்படி நடத்துநர் கேள்வி கேட்பார் என்பதை பலர் அறிவீர்கள். அந்த மாதிரி அல்லாமல் ஒழுக்கத்தோடு உள்ள ஒரு நாட்டில் ஒரு மனித உயிரை அலட்சியப் படுத்திய அவர்களின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத் தக்கது. அவர்கள் இருவருமே முக்கிய குற்றவாளிகள்

    ReplyDelete

  29. வருகை தந்து கருத்துரைத்த நட்புகள் manjoorraja, வரலாற்று சுவடுகள்,srinivasan,ஜீவன் சுப்பு,s suresh,Siva,தெம்மாங்குப் பாட்டு....!!,செங்கோவி மற்றும் அனானிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  30. வருந்தததக்க விடயம்.அந்நிலையிலும் போலீசாரைக் காப்பாற்றிய தமிழர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்

    ReplyDelete
  31. வலைச்சரம் மூலம் தங்கள் பதிவு அறிந்து வந்தேன். மிக நன்றாக உள்ளது. தங்கள் பிற பதிவுகளையும் படிக்க தூண்டுகிறது. படித்த பின் எழுதுகிறேன்.

    ReplyDelete