Showing posts with label முகப்பு. Show all posts
Showing posts with label முகப்பு. Show all posts

Monday, 17 November 2014

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா தலித் சமூகத்தினர்...?


சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் புரட்சி கார்டூனிஸ்ட் என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டு இணைய ரவுடியாக வலம்வரும் கார்டூனிஸ்ட் பாலா என்பவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலைஞரின் காலைப் பிடித்துத் தொங்குவது போல கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார்...

இங்கு 'இணைய ரவுடி' என்கிற பதத்தை எதற்காக பயன்படுத்தியிருக்கிறேன் என்பது  அவரின் பேஸ்புக் டைம்லைனோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  பேஸ்புக் உள்ளிட்ட இணைய சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களை நக்கடித்து நிறைய நிலைத்தகவல்கள், போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அது இணையம் உருவாக்கிக் கொடுத்திருக்கும் கட்டற்ற எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு.  

வெளிநாட்டில் இருந்துகொண்டு தன் சுய விவரங்கள் எதையும் வெளிப்படுத்தாத இணையப் போராளிகள்  இதில் கைத்தேர்ந்தவர்கள். இந்திய அரசியல் தலைவர்களை 'மிக மிக நாகரிகமான' முறையில் அவர்கள் விமர்சிக்கும் முறை, எதையும் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லும் நம்மையே சில நேரங்களில் சூடேற்றிவிடும். அவர்களுக்கென்று தனி கூட்டமே இருக்கும். " நெத்தியடி... அருமை நண்பரே... எவ்வளவு கழுவி ஊத்தினாலும் அவங்களுக்கு புத்தி வராது தலைவா ...." இது மாதிரி கமெண்டுகள் பொங்கி வழியும். சரி நம் தரப்பு நியாயங்களை சொல்லலாம் என்று சில நாகரிகமான எதிர்வினைகளை மேற்கொண்டால் அவ்வளவுதான். ஏழு தலைமுறையை இழுத்து திட்டுவார்கள். அந்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்து கொள்ளும். அதையும் சமாளித்துத் தொடர்ந்தால் உடனே நம்மை பிளாக் செய்து விடுவார்கள். எதிர்கருத்துகளை ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ளத் தயங்கும் அவ்வகையான இணையப் போராளிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை இந்த கார்டூனிஸ்ட் பாலா .

தமிழ் பேஸ்புக்கை பொறுத்த வரையில் அதிகம் பேரை பிளாக் செய்தவர்களில் முதலில் இருப்பவர் இந்த பாலாவாகத்தான் இருக்கும். பிளாக் செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நியாயமான எதிர்கருத்துகளை நாகரிகமான முறையில் மேற்கொண்டவர்கள். பிளாக் செய்யப்பட பிறகு " இதைத்தான் பாலாவிடம் கேட்டேன்.. உடனே என்னை பிளாக் செய்துவிட்டார்.." என்று பலர் நிலைத்தகவல் பதிந்ததை ஆரம்பத்திலிருந்து பேஸ்புக்கை கவனித்து வருபவர்கள் உணரமுடியும். அவர் பணிபுரியும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் அந்த பிளாக் லிஸ்டில் உள்ளடக்கம் என்பது பாலாவின் நேர்மைக்கு மற்றொரு சான்று.

ஊடக செய்தி வடிவங்களில் கார்ட்டூன் மிகப் பலம் வாய்ந்தது. நூறு பேர் சேர்ந்து உரக்கச்சொல்லி புரியவைக்கும் ஓர் செய்தியை ஒரே ஒரு கார்ட்டூன் தெளிவாகச் சொல்லிவிடும். அதன் பலமே இவரை இணைய ரவுடியாக வளம் வர செய்திருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு என்று ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. அதை தனக்கான எல்லையாக அவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, என் எல்லையை யாரும் நிர்ணயிக்க முடியாது என்கிற திமிர்த்தனத்தில் நாகரிகத்தின் எல்லையை கடந்துவிடுபவர்களைத்தான் இணைய ரவுடி என குறிப்பிட்டுள்ளேன்.

சரி விசயத்திற்கு வருவோம்.

திருமாவை கலைஞரின் காலைப்பிடித்துத் தொங்குவது போல் கார்ட்டூன் போட்டு கேவலப் படுத்துகிறார் இந்த பாலா. உடனே அவர் நட்பில் இருக்கும் சிலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். அதற்கெல்லாம் மதிப்பளிப்பவாரா இந்த பாலா..? பிறகு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொறுப்பில் இருக்கும், பேஸ்புக்கிலும் ஊடகங்களிலும் இயங்கி வரும் ஆளூர் ஷானவாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த கார்ட்டூனை நீக்கும்படி கேட்கிறார். இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகியிருக்கும் பாலா இதெற்கெல்லாம் செவி சாய்ப்பவரா என்ன .? உடனே அவர் டைம் லைனில் ஆளூர் ஷானவாஸ்-சை தன் வழக்கமான நக்கல் பாணியில் கண்டித்து ஒரு நிலைத்தகவல் பதிகிறார். அதனைத் தொடர்ந்து கண்டனங்களும் வசவுகளும் அவர் டைம்லைனில் வரிசை கட்டுகிறது.



அதன் பிறகுதான் அவருள்ளே ஒளிந்திருக்கும் சாதிப்பூனை எட்டிப் பார்க்கிறது. "தலித் என்றால் விமர்சனம் செய்யக்கூடாதா..தலித்தை விமர்சனம் செய்தால் மட்டும் இவர்களுக்கு எதற்கு கோபம் வருகிறது...  தலித் கேடயத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இவர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கப்படாதா .." என்று வரிசையாக நிலைத்தகவல்கள் பதிந்து ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான தன் வக்கிர கணைகளை வீசிக்கொண்டிருக்கிறார்.

அய்யா இணைய ரவுடியே... தலித் மக்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று யார் சொன்னது...?  தலித் சமூகத்தினர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா..? அல்லது எதிர்வினையாற்றுபவர்கள் யாராவது ஒருவர், ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று கேட்டார்களா..? அப்படி இல்லாதபோது தலித் தலித் என்று வரிக்கு வரி எழுதி எதற்காக அச்சமூகத்தின் வெந்த புண்களில் வேல் பாய்ச்ச வேண்டும்..?

உங்கள் வழிக்கே வருகிறேன்.  ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் ஒரு தலித் தான். தலைவர் கூட ராசா தலித் என்பதால் தான் அவர்மீது வழக்கு போடுகிறார்கள் என்று அறிக்கைவிட்டு பின்பு வாங்கிக் கட்டிக்கொண்டது நாடே அறியும். அப்படிப்பட்ட ராசாவுக்கு எதிராக இணையத்தில் எவ்வளவு கேவலமான விமர்சனங்கள் வந்தன..!. அருவருக்கத்தக்க போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் வந்தன...! ஏன் நீங்களே எவ்வளவு நக்கலடித்து கார்ட்டூன்கள் வரைந்து கலைஞர் எதிர்ப்பாளர்களின் லைக்கை லம்பாக அள்ளினீர்கள். அப்போது எவராவது வந்து ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று உங்களுடன் வாதம் செய்தார்கள்..?

இதே திருமாவளவன் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் இணையத்தில் வரவில்லையா..? கலைஞரின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைக்குலுக்கிவிட்டு பிறகு தமிழ்நாடு திரும்பியவுடன் ராஜபக்சேவை எதிர்த்து அறிக்கை விட்டபோது இணையத்தில் திருமாவளவனை துவைத்து எடுக்கவில்லையா...? அப்போதெல்லாம் ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வரிந்துக் கட்டிக்கொண்டு வந்தார்களா...?

அதற்கெல்லாம் வராத எதிர்வினைகள் இந்தக் கார்ட்டூனுக்கு வருகிறது என்றால், அச்சமூகத்தின் வலியை புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நீயெல்லாம் என்னய்யா பிரபல கார்டூனிஸ்ட்.?.

அவர்கள் எதிர்வினையாற்றிய விதம் தவறுதான். ஆனால் அவர்கள் கோபத்தின் பின்னால் உள்ள வலியைப் புரிந்துகொள்ளாத உம்மைப் போன்றவர்கள் சமூகக் கருத்தைப் பரப்புகிறேன் என கிளம்புவது வேடிக்கையாக இல்லையா..? குறைந்த பட்சம், நான் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்று ஒரு விளக்கப் பதிவாவது உன்னால் போடமுடிகிறதா...?

தலித்தையோ அல்லது சிறுபார்மையினரையோ விமர்சிக்கும் முன்,கொஞ்சம் சென்சிடிவான விசயமாச்சே.. அரசியல் ரீதியான விமர்சனமாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதை உணராத நீயெல்லாம் என்னய்யா ஜெர்னலிஸ்ட்..?

ஒரு தலைமுறைக்கு முன்பு விழிப்புணர்வும் படிப்பறிவும் மட்டுமல்லாது  அதற்கான வழிகாட்டுதலும் தலைவனும் இல்லாமல் ஒடுங்கி வாழ்ந்த சமூகம் அது. பெரியார், அம்பேத்கார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் சீரிய முயற்சியினால் ஏதோ இப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைத்து உயரிய பதவிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களில் பெரும்பகுதியினர் இன்னமும் ஆதிக்கசாதியினரின் அச்சுறுத்தலுக்கு அடங்கித்தான் வாழவேண்டிய சூழலில் இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஓர் இயக்கத்தை உருவாக்கி அதற்கு தலைவனாக திருமாவளவன் இருக்கிறார். அவரின் தலைமையை ஒட்டுமொத்த தலித் சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சில அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி அவர் மீதுள்ள மரியாதை எவரிடத்திலும் குறையவில்லை.

மீண்டும் அந்த இணைய ரவுடியைப் பார்த்து கேட்கிறேன். திருமாவளவன் கலைஞரின் காலைப் பிடிப்பது போல வரைந்த உனது கார்ட்டூன் எந்த உள்நோக்கமும் இல்லாதது என்றால், அதற்கு வரும் எதிர்வினைகளை அவரது கட்சி சார்ந்த கண்டனங்களாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.. அதை விடுத்து தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாதா... தலித் என்றால் பெரிய கொம்பா என்கிற ரீதியில் தொடரும் உமது பதிவுகள், உண்மையிலேயே அச்சமூகத்தினரை கேவலப்படுத்தும் நோக்கிலே அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறதே..!

இன்னமும் அவர்களின் உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் ஒரு தலித்தாகப் பிறந்து பாருங்கள். அப்போதாவது அவர்களின் வலி உங்களுக்குப் புரியும்.

ஒரு பின் குறிப்பு.

பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் புலம்பித்தள்ளிய அந்தப் பதிவில் சென்று.." தலித்..தலித் என்று வரிக்கு இரண்டுதடவை நீங்கதானே சார் சொல்றீங்க..தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாது என்று யார் சொன்னது.. ஆ. ராசா மீது வராத விமர்சனமா..? அப்போது எத்தனை தலித்துகள் கண்டனம் தெரிவித்தனர்....." என்கிற ரீதியில் மிகுந்த மரியாதையாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். இந்தப் பதிவு எழுதுவதற்கு முன்பு வரை அவருடன் தொடர்பில் இருந்தேன். எழுதி முடிக்கும் தருவாயில் சென்று பார்த்தால் அன்போடு என்னை பிளாக் செய்திருக்கிறார். மிகுந்த மரியாதையுடன் கமெண்ட் போட்டால் அவருக்கு பிடிக்காது போல.. என்னை எல்லாம் அடிச்சி நீங்க இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது பாலா சார்.

Wednesday, 11 December 2013

சிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...

லவரத்தின் ஆரம்பப்புள்ளி எதுவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே  கலவரத்தின் பின்னணி தெரியவருகிறது.


விபத்துக்கான சூழல்.....

சிங்கப்பூரில் இயங்கும் பேருந்துகளில் விபத்துகள் நடப்பது மிகமிகக் குறைவு.இங்கு இருபெரும் போக்குவரத்து கழகங்கள் உள்ளது.  ஒன்று SBS TRANSIT ,  மற்றொன்று SMRT BUS SERVICES.  இரண்டுமே பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் தரும் நிறுவனம்தான். இந்த இரண்டு நிறுவனங்களில் பேருந்துகள் மோதி பயணிகள் இறந்ததாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அதேபோல் மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதும் மிகக் குறைவே. இவ்வளவுக்கும் இப்பேருந்துகளில்  நடத்துனர் என்று ஒருவர் கிடையவே கிடையாது. ஓட்டுனர் மட்டும்தான். அவர்தான் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் வழியாக பயணிகள் இறக்கிவிட்டனரா என்பதை கவனித்துவிட்டு தானியங்கி கதவை மூடுவார்.

ஆனால், அன்று நடந்த விபத்து தனியார் பேருந்தினால் நிகழ்த்தப்பட்டது. சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும் துறையில் வேலை பார்ப்பவர்கள் மொத்தமாக Dormitory எனப்படும் விடுதியில் தங்கவைக்கப் படுவர். சிங்கையில் நிறைய  Dormitory உள்ளது. காலையில் லாரிகளில் வேலைக்கு அழைத்துச்செல்லப்படும் இவர்கள், வேலைமுடிந்து இரவுதான் வீடு திரும்புவார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதோ அல்லது சினிமா உள்ளிட்ட மற்ற கேளிக்கை இடங்களுக்கு செல்வதோ சாத்தியமில்லை.

வார இறுதியான ஞாயிறு மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் எல்லோரும் ' லிட்டில் இந்தியா ' எனப்படும் அப்பகுதியில் கூடுவார்கள். ஒருவேளை ஞாயிறு வேலையிருந்தாலும் மாலை கூடிவிடுவார்கள். இதுதான் அவர்களுக்கு மீட்டிங் பாயிண்ட். ஒருவார உடல்ரீதியான கடுமையான வேலைப்பழுவுக்கு அதுதான் ரிலாக்சிங் ஏரியா.பிறகு சரக்கு,அரட்டை என்று அந்த ஏரியாவே களைகட்டும்.அப்படி அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்கும். தீபாவளி நேரங்களில் ரங்கநாதன் தெருவில் நுழைந்து விட்ட உணர்வு ஏற்படும். கடைசியாக அந்த வாரத்திற்கு தேவையான மளிகை, காய்கறிகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு பிரியா விடைபெறுவார்கள். இது இன்று நேற்றல்ல, பட வருடங்களாக நம்மவர்கள் பின்பற்றும் நடைமுறை.

அவர்கள் தங்கியிருக்கும் Dormitory யிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் கிடையாது. அந்த வாய்ப்பை தான் இதுபோன்ற பல தனியார் பேருந்துகள் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை அழைத்து செல்லும் இப்பேருந்துகளுக்கு வார இறுதியில் வேலையிருக்காது என்பதால் , இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டு துட்டு பார்க்கும். தலைக்கு $2 வீதம் வசூலித்து கும்பல் கும்பலாக ஏற்றிச்சென்று லிட்டில் இந்தியா பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் அவர்களை ஏற்றிக்கொண்டு அதே Dormitory யில் விட்டுவிடும்.

இதுபோன்ற ஒரு தனியார் பேருந்தில்தான் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அன்று நடந்தது......

லிட்டில் இந்தியாவின் பரபரப்பான செராங்கூன் சாலைக்கு இணையாக அமைந்திருக்கிறது ரேஸ்கோர்ஸ் சாலை.  இந்தச் சாலையில்தான் அஞ்சப்பர், அப்பல்லோ பனானா லீஃப், முத்து கறீஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹோட்டல்கள் உள்ளன.

ரேஸ் கோர்ஸ் சாலை,ஹேம்­­­ஷி­­­யர் சாலைச் சந்­­­திப்­­­பில் ஞாயிறு இ­­­ரவு கிட்டத்­­­தட்ட 9.23 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. அந்தப் பேருந்தை இயக்கியது 55 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் வாசி. பேருந்துக்கு வெளியே கட்டணம் வசூலித்தது ஒரு பெண்மணி என்று சொல்கிறார்கள். அவரும் சிங்கப்பூர் வாசிதான்.

அந்தப் பேருந்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்கிற நபரும் ஏற முயன்றுள்ளார். அவர் மிக அதிகமாகக் குடித்திருந்தார் என சொல்லப்படுகிறது. அதனால் அவரை ஏற அனுமதிக்கவில்லை. அப்போது நடந்த தள்ளுமுள்ளில் சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதைக் கவனிக்காத ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயற்சிக்க, ஏதோ சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தியிருக்கிறார். பேருந்தின் கீழே சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் சக்திவேல். உடனடியாக அங்கு கூடியிருந்த தமிழர்கள் குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னருக்கு( Singapore Civil Defence Force ) தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வரும்வரை எந்த அசம்பாவிதமும் அங்கு நடைபெறவில்லை.

 9.31 PM க்கு முதல் ஆம்புலன்ஸ் வருகிறது. 9.37 மணியளவில் குடிமை தற்காப்புப்படை அந்த இடத்திற்கு வந்தடைகிறது. கூடவே தீயணைப்பு வண்டியும். அங்கு கூட்டம் அதிகமாகக் கூடியதால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக அதிகமான போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 9.41 க்கு அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது 400 பேருக்கு மேல் கூடிவிடுகிறார்கள். 9.56 க்கு சக்திவேலின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட தருணத்தில்தான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி வைக்கப் பட்டிருக்கவேண்டும்.

முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்து பிறகுதான் கலவரம் வெடித்திருக்கிறது. முதலில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு அந்தத் தனியார் பேருந்து,  குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னர், அவர்கள் வந்த வாகனம், ஆம்புலன்ஸ் என தாக்குதல் தொடர, பின்பு கலவரமாக வெடித்துள்ளது.

இன்னொரு செய்தி, பேருந்து பின்நோக்கி நகரும்போது முன் சக்கரத்தில் சக்திவேல் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும், பெண் நடத்துனரும் சம்பவ இடத்தில் தான் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த குடிமைத் தற்காப்பு படையினர், விபத்தில் சிக்கிய நபர் இறந்துவிட்டார் என்று தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட ஓட்டுனரையும்,நடத்துனரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு சென்றதால்தான் கலவரம் வெடித்தது என்றும் சொல்லப்படுகிறது



தாக்குதலில் மொத்தம் 400 பேர் ஈடுபட்டதாக உள்ளூர் செய்திகளில் படிக்க நேர்ந்தது. அடுத்து அங்கு விரைந்த போலீசாரின் 16 வாகனங்கள், 9 சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்களை, கான்கிரிட் துண்டுகள், கற்கள், பீர் பாட்டிகள், இரும்புக் கழிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் கைகளில் கிடைத்த அனைத்துப் பொருட்களைக் கொண்டும் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் ஆறு போலிஸ் ஆபீசர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கலவரத்தின் உச்சகட்டமாக ஐந்து வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு மேலான சிங்கப்பூர் வரலாற்றில் இப்படியொரு கலவரம் நடந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் சிறு அசம்பாவிதம் கூட நிகழ்ந்ததில்லை. யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று நடந்த  இந்தக் கலவரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து நின்றிருக்கிறது சிங்கப்பூர் போலிஸ்.

இவ்வளவு கலவரத்திலும் அவர்கள் அங்கு குழுமியிருந்த தமிழர்கள் மீது சிறிய லத்தி சார்ஜ் கூட செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிங்கப்பூரை ஓர் அமைதிப் பூங்காவாக மாற்ற நாங்கள் நிறைய இழந்திருக்கிறோம். இதுபோல கலவரங்களை துளிகூட அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஒருவர் வேதனையுடன் கலந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கலவரத்திற்கான அடிப்படைக் காரணம்...

கலவரத்திற்கு காரணமே நம்மவர்களின் குடிவெறிதான் என்று சமூக ஊடகங்களில் பல தமிழர்கள் பொங்குவதைக் காண முடிகிறது. இத்தனை வருடங்கள் அதே இடத்தில் நம்மவர்கள் குடித்துவிட்டு, பிறகு அமைதியாக தங்கள் இருப்பிடத்துக்கு சென்றார்களே... சிறு அசம்பாவிதம் நடந்ததாக வரலாறு இருக்கிறதா..? சிங்கப்பூரில் இந்தியத்தமிழர்கள் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட முடியுமா...?

இந்த இடத்தில் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர் திரு ஈஸ்வரன் அவர்கள் சுட்டிகாட்டிய ஒரு விஷயத்தை  நினைவு படுத்த விரும்புகிறேன் ..  "இச்சம்பவத்திற்குக் காரணம் நடந்த விபத்தே தவிர, குடிபோதை அல்ல.. அவர்களின் ஆக்ரோசத்தை குடிபோதை இன்னும் அதிகப்படுத்தி கலவரமாக மாற்றியிருக்கிறது." தற்போது சம்பவம் நடந்த ரேஸ்கோர்ஸ் சாலையில் மதுபானங்கள் விற்பதற்கான அனுமதி வார இறுதி நாட்களில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போதைய நிலவரம்....

கலவரம் நடந்த அன்று இரவே 27 பேரை சுற்றிவளைத்து கைது செய்தது சிங்கப்பூர் போலிஸ். அதில் 25 பேர் இந்தியத் தமிழர்கள், இருவர் பங்களாதேஷ் ஆடவர்கள். அதில் ஒரு இந்தியர் மற்றும் இரு பங்களாதேஷ் காரர்களும் சம்மந்தப்படவில்லை என தெரிந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கலவரம் நடந்த மறுநாள் இறந்துபோன சக்திவேல் குமாரவேலு தங்கியிருந்த விடுதியில், இரவு 10 மணிக்குப் பிறகு வந்தவர்களை தனித்தனியாக விசாரித்தது போலிஸ். பிறகு மற்ற விடுதிகளிலும் விசாரணைகள் மேற்கொண்டு, இன்று(11-12-2013) காலை மேலும் 8 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அதில் மூன்று பேர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் , தற்போது கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஒருவேளை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

சிங்கப்பூரில் குற்றத்திற்கான தண்டனைகள் மிக வெளிப்படையானவை. இந்தந்த குற்றத்திற்கு இன்னென்ன தண்டனைகள் என வகைப்பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் எந்த நெளிவு சுளிவும் இருக்காது. குற்றம் நிரூபணமானால் தயவு தட்சனையின்றி தண்டனை வழங்கப்படும். இந்தியா , பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மலேசியா,பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மார் , சீனா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிருந்தும் இங்கு வேலை பார்க்கிறார்கள்.இத்தனை விதமான மனிதர்களை வைத்துக்கொண்டு குற்றங்களே இல்லாத நாடாக கட்டமைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் , சமரசமே செய்யமுடியாத அவர்களின் தண்டனை அமைப்புகள்தான். ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளி கூட தப்பித்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

கடைசியாக குற்றம் சாட்டப்பட்ட 27 தமிழர்களுக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என சொல்கிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டதால் பிரம்படியும் கிடைக்கலாம். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததற்காக அபராதமும் விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்டவர்களில் எத்தனைப்பேர் திருமணமானவர்கள் எனத் தெரியவில்லை. ஊரில் லோன் போட்டு வீடு கட்டிக்கொண்டிருக்கலாம். தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கலாம். தம்பி, தங்கைகளின் படிப்புக்காக மாதந்தோறும் பணம் அனுப்புபவராக இருக்கலாம். திருமண வயதில் மாமன்பெண் காத்திருக்கலாம்.  குடும்பத்தின் அன்றாட செலவுக்கே இவர்கள் பணம் அனுப்பித்தான் பிழைப்பு நடக்கலாம். எல்லாமே பாழாய்ப் போய்விட்டது. மொத்தத்தில் அவர்களின் எதிர்கால வாழ்க்கை இருண்டு போனதுதான் மிச்சம்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் கீழே உள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் 8 பேர்.. ஒருவேளை இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கலாம்... அப்படி இருக்கும் பட்சத்தில், குடும்பத்தின் எதிர்காலம்..?


சன் டிவியின் உள்குத்து....

இக்கலவரம் முழுவதும் இந்திய தமிழர்களால், குறிப்பாக கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும்துறையில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவிரவும்,  இது அந்த விபத்தின் எதிரொலியாக நடந்ததே ஒழிய, மத, இன ரீதியான கலவரம் (RACIAL  RIOT) கிடையாது. சீன இன மக்களுக்கும் இதற்கும் துளி அளவுகூட சம்பந்தம் கிடையாது.

இப்படியிருக்க, சன் டிவிக்கு யாரோ தவறான தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள் போல... இது சீனர்களுக்கும் தமிழர்களுக்கும்  நடந்த இன மோதல் மாதிரியும், இங்கே தமிழர்கள் வெளியேவர அச்சப்பட்டு வீட்டினுள்ளே முடங்கியுள்ள மாதிரியும் தவறான தகவல்களை சன் டிவி தனது செய்தியில் வாசித்திருக்கிறது.


சம்பவம் நடந்த மறுநாளே இங்கே அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. இயல்பு வாழ்க்கை துளிகூட பாதிக்கப்படவில்லை.

சன் டிவியின் இந்த தவறான செய்தியை  சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் கண்டித்திருப்பதுடன், ஸ்ட்ரைட் டைம்ஸ் மூலமாக விளக்கமும் கோரப்பட்டிருக்கிறது.

 (டெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சன் டிவிக்கு அனுப்பிய கண்டனக் கடிதம் )
கலவரத்தின் மூல காரணம்...


இக்கலவரத்தின் மூல காரணமான அந்த விபத்தில் இறந்த சக்திவேல் முருகவேலு, புதுக்கோட்டை மாவட்டம், அரிமலத்தில் உள்ள ஓணான்குடி கிராமத்தை சேர்ந்தவர். ITI படிப்பை முடித்துவிட்டு சில வருடங்கள் துபாயில் பணிபுரிந்தவர். கடந்த இரண்டு வருடமாகத்தான் சிங்கையில் பணிபுரிகிறாராம்.

இங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில், கேரளாவில் தமது கணவருடன் தங்கியிருந்த இவரது தங்கை கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்ட துயரமும் நடந்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பப் போவதாக தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தவர், இன்று காலை சடலமாக சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்திருக்கிறார்.

கலவரத்திலும் மனிதாபிமானம்... 


மேலே இருக்கும் வீடியோ ஒரு முக்கியமான நிகழ்வு. கலவரம் நடந்துக்கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள, அங்கு நின்றிருந்த ஆம்புலன்சில் ஏறி கதவை மூடிக்கொண்டனர். அப்போது அந்த ஆம்புலன்சுக்கு மிக அருகிலே இன்னொரு வாகனம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த வாகனமும் தீக்கிரையாகும் சூழலில், அங்கு நின்றிருந்த சில தமிழ் நல் உள்ளங்கள் ஓடிச்சென்று ஆம்புலன்சின் கதவைத்திறந்து போலீசாரை விடுவித்துக் காப்பாற்றினார்கள்.

ரோட்டில் கிடக்கும் பர்சை எடுத்துச்சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்தாலே பாராட்டுப் பத்திரம் வழக்கும் சிங்கப்பூர் அரசு, பல போலீசாரின் உயிரைக் காப்பாற்றிய அவர்களை கௌரவிக்காமல் விடுமா...? ஆனால் அவர்களைக் காப்பாற்றியவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் தெரியவில்லை.

 "If you know any of the men who approached the ambulance to help, we would like to hear from you. Call us at 6319-6397 or e-mail us at stnewsdesk@sph.com.sg " என்று இன்றைய செய்தித்தாளில் அறிவித்திருக்கிறது.

இவ்வளவு கலவரத்திலும் இவர்களை பாராட்டவேண்டும் என்கிற எண்ணம், இந்த அரசின் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் காட்டுகிறது.

என்னத்த சொல்ல...?

நான் சிங்கை வந்த புதிதில்,வார இறுதியில் என் நண்பன் லிட்டில் இந்தியாவுக்கு என்னை அழைத்துச் சென்றான். அப்போது எனக்கு எல்லாமே புதுசு. தி நகர், ரங்கநாதன் தெரு போல சின்னச் சின்ன வீதிகள். எங்குமே நடக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நெரிசல். எல்லோருமே நம்மவர்கள்.

அப்போது ஒரு வீதியில் நடந்து கொண்டிருந்தபொழுது, திடீரென்று ஒரே சலசலப்பு. பார்த்தால், நாங்கள் வந்த வீதியின் இருபுறமும் போலிஸ் ரவுண்டப் பண்ணியிருக்கிறது. இடையில்  இருக்கும் சிறு சிறு சந்துகளைக்கூட மப்டியில் வந்த சிங்கப்பூர் போலிஸ் கவர் செய்துவிட்டது. உடனே, "எல்லோரும் இருந்த இடத்தில் அப்படியே உட்காருங்கள் " என போலிஸ் மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தது. எனக்கு அல்லு இல்ல.. என்ன இது என்று நண்பனிடம் கேட்டபோது,"இது சும்மா செக்கப் தான்... யாராவது சட்ட விரோதமா (ILLEGAL ) தங்கி இருந்தா அவர்களை பிடிப்பதற்கு" என்று சொன்னார்.

ஒவ்வொருவரிடமும் ஐசி அல்லது பாஸ்போர்ட் இருக்கிறதா என சோதித்தார்கள். அவர்களின் சோதனை பலனளித்தது. மூன்று பேர் சிக்கினார்கள். அவர்களின் கைகளை பின் பக்கமாக விலங்கிட்டு வேனில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
 
அப்போதெல்லாம், லிட்டில் இந்தியா அமைந்திருக்கும் செரங்கூன் ரோடில் நடந்து சென்றால், திடீரென்று ஒருவர் எதிர்கொண்டு,"ஐயம் போலிஸ்.. ஷோ மீ யுவர் ஐசி." என்பார்.அவ்வளவு கட்டுப்பாடுகள் முன்பிருந்தது. என்னவோ தெரியவில்லை,சில வருடங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, எங்கும் சுற்றலாம், தண்ணியடிக்கலாம், கூட்டம் போடலாம் என்று சிங்கப்பூர்வாசிகளைப்போல அனைத்து உரிமைகளையும் இந்தியாவிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கி யிருந்தது. அச்சுதந்திரத்தை தற்போது மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் நம்மவர்கள்.

எனக்குத்தெரிந்து வெளிநாடுகளில் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கும். இங்கு என்ன இல்லை...? தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கும்பாபிஷேகம் அல்லது கோயில் விசேசம் என்றால்,அதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையையே தடுத்து வசதி செய்து கொடுக்கிறது. வேலை வாய்ப்புகளில் கூட பிரித்துப் பார்ப்பதில்லை. பல ஆண்டுகள் இளமையைத் தொலைத்த இளைஞர்களுக்கு ' வடிகால் ' கூட அரசின் அனுமதியோடு நடக்கிறது.

மிக முக்கியமாக தமிழுக்கு இங்கு ஆட்சிமொழி அங்கீகாரம் வழங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். எட்டாம் வகுப்பு படித்தவரிலிருந்து, எஞ்சினியரிங் படித்தவர்கள் வரை வேலைக்கு எடுக்கும் ஒரே டாலர் தேசம் சிங்கப்பூர்தான் என்பதை மறுக்க முடியுமா...?

'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்' என்பதுபோல சிங்கப்பூர் தமிழர் களுக்கு வழக்கப்படும் சலுகைகளை இந்தியத் தமிழர்களும் இதுவரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கும் இனி ஆப்பு...

சம்பவம் நடந்த அன்று சமூக வலைத்தளங்களில் சிங்கப்பூர்வாசிகள் பொங்கிய பொங்கு இருக்கே...! அவர்கள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. பார்த்துப் பார்த்து கண்ணாடி மாளிகை போல செதுக்கி வைத்திருக்கும்  ஓர் அமைதிப் பூங்காவின் மேல் சிறு கல் எறிந்தாலே தாங்க மாட்டார்கள். தமிழர்கள் ஆடியது கொடூர ருத்ரதாண்டவம் அல்லவா...! இனி கடுமையானக் கட்டுப்பாடுகளை இங்கிருக்கும் இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளலாம்.


ஒரு கசப்பான உண்மையை சொல்கிறேன். மனைவியுடன் வெளியே செல்லும்போது, 10 சீனர்களோ அல்லது 10 மலாய்காரர்களோ குழுமியிருக்கும் ஓர் இடத்தை எவ்வித சங்கடமும் இன்றி கடந்து சென்றுவிடலாம். ஆனால் 10 இந்தியத் தமிழர்கள் கூடிநிற்கும் இடத்தை கடந்து செல்வது எவ்வளவு சங்கடமானது என்பதை இங்கு குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனக்கு இந்த அனுபவம் நிறைய...நிறைய... நிறையவே இருக்கிறது.

கூட வரும் நம்மைப் பொருட்படுத்தாமல் உடன் வருபவளை காலிலிருந்து தலைவரை  அளவெடுத்துப் பார்க்கும் அவர்களின் பார்வை அருவருக்கத்தக்கது. இது இனப்பற்றால் பார்க்கும் பார்வை என்றெல்லாம் சொல்ல முடியாது.  எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. பத்தில் நான்கு பேர் அப்படியிருப்பார்கள். அதிலும் பங்களாதேஷ் பசங்க இன்னும் கொடுமை. ஆனால் இவர்களின் லிமிட் இவ்வளவுதான். அதைத்தாண்டி போகமாட்டார்கள்.

ஊரிலிருந்து கிளம்பும்போதே சாம்பாதிப்பது ஒன்று மட்டுமே நமது குறிக்கோள் என்கிற மனநிலையில்தான் இருக்கிறோம். எவரும் மாட மாளிகையில் சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்பவர் கிடையாது. வேறு வழியில்லாமல்தான் வெளிநாடுகளுக்கு பணி செய்யவருகிறோம். குடும்பத்தின் மொத்தப் பொறுப்பையும் தன் தலைமேல் சுமந்துகொண்டுதான் சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் கால் வைக்கிறோம். எப்போது வெளிநாட்டில் கால் வைக்கிறோமோ அப்போதே நமது கோபம், வீரம், புரட்சி எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி அந்த ஏர்போர்ட்டின் வாயிலில் வைத்துவிட்டு வரவேண்டும். திரும்பிப் போகும்போது அந்த மூட்டை அப்படியே இருக்கப்போகிறது. அப்போது எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே... !

   கலவரம் நடந்த மறுநாளே இயல்பு நிலைக்கு திரும்பிய ரேஸ்கோர்ஸ் ரோடு
இக்கலவரத்தின் மூலமாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இரண்டு விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஓன்று,இதுவரை இங்கே போராட்டம் என்றால் சிறு குழுக்களாக நின்று உரிமையை நியாயப்படி கேட்டுப் பெறுவது என்றிருந்த நிலையில், தமிழர்கள் கலவரம் செய்து அதற்கு தவறான வழியைக் காட்டியது . மற்றொன்று, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடத்தால், அதற்காகக் கலவரம் கூட செய்யக்கூடிய மனநிலையில் நிறைய ஊழியர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது.

இனி சிங்கப்பூர் அரசாங்கம் என்ன மாதிரியான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. குறிப்பாக இந்திய தமிழர்கள் மீதான  கட்டுப்பாடுகள். இங்கிருக்கும் மற்ற இந்தியத் தமிழர்கள் போல நானும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

---------------------------------X--------------------------------
Updated news (12-12-2013)
இன்றைய (12-12-2013) சிங்கப்பூர் ஊடகங்களில் தமிழர்களுக்கு சாதகமான சில செய்திகள் வந்திருக்கிறது. இந்தப்பதிவில் இருக்கும் முதல் கானொளியில் இரண்டு நபர்கள் தனியார் பேருந்தை கண்மூடித்தனமாகத் தாக்கிக்கொண்டிருக்க ஒருவர் அதைத் தடுக்க முயல்கிறார். அவர்தான் அந்த சம்பவத்தின் ஹீரோ... அவரையும் தேடிப்பிடித்து கௌரவிக்க காத்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.


அவரைப்பற்றிய தகவல்களை அருகில் உள்ள காபி ஷாப் களில் விசாரித்த வகையில் அவருக்கு வயது சுமாராக 35 , இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், மிகவும் அமைதியானவர், பண்பானவர் என்றும் அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக இன்றைய CNA -வில் செய்தி வந்திருக்கிறது. அவரை ' Good Samaritan ' என்று பாராட்டியிருக்கிறது அந்த வெகுஜன ஊடகம். அதுமட்டுமல்ல அந்த வீடியோவைப் பார்த்து நிறைய சிங்கப்பூர்வாசிகளே சமூக வலைத்தளங்களில் அந்த நபரை பாராட்டி யிருக்கிறார்கள்.

மேலும், கலவரம் மூளும் சூழலில் அங்கு நின்றிருந்த நிறைய தமிழர்கள் அருகிலிருந்த உணவகங்களின் வெளியே போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகளை அவர்கள் சொல்லாமலே தூக்கிச்சென்று உள்ளே பத்திரப் படுத்தினார்களாம். அதையும் இன்றைய செய்தியில் குறிப்பிட்டு அந்நபர்களை பாராட்டியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.

ஒரு கலவரம் நடந்தால், மொத்த கும்பலையும் கொத்தாக அள்ளிச்சென்று உள்ளே வைத்து குமுற வேண்டும் என்கிற தட்டையான சிந்தனையை தவிர்த்து, அச்சம்பவ இடத்தில் இருந்தவர்களை தனித் தனியாகப் பிரித்து விசாரணையை மேற்கொள்ளும் சிங்கப்பூர் அரசாங்கம் மிக நேர்மையானது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் சொல்லவேண்டும்..?

தவிர, இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நேற்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் நேரடியாக தமிழர்கள் தங்கியிருக்கும் அனைத்து Dormitory க்கும் சென்று, அங்கிருக்கும் இந்திய தமிழர்களை நேரில் சந்தித்து, என்ன மாதிரியான பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது என விசாரித்திருக்கிறார். அவர்கள், "எங்களுக்கு எந்த சங்கடங்களும் இங்கு இல்லை. மிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். அவர்களின் செயல்களைக் கண்டு நாங்கள் வெக்கப்படுகிறோம்  " எனத் தெரிவித்திருக்கிறார்கள்...

இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்...?

Friday, 29 November 2013

தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனார் சங்கரராமன்..

(மு.கு: ஆனந்தவிகடனின் 3D கண்ணாடியைப் பயன்படுத்தி 20 வினாடிகள் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் இரண்டு திருடர்கள் திரிடியில் 'எழுந்தருளி' காட்சித் தருவார்கள். அப்படியே காறித்துப்பிவிட்டு அடுத்தப் படத்திற்கு செல்லவும். கடைசியாக சின்னவா-லின் கனவுக்கன்னி உங்களுக்காக கவர்ச்சி விருந்து படைக்கக் காத்திருக்கிறாள். )

மிழ் சினிமாவில் வழமையான ஒரு கிளைமாக்ஸ் காட்சியமைப்பு உண்டு. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஹீரோ, நிரபராதி என்று தெரிந்தவுடன், தீர்ப்பின் முடிவில் "ஜட்ஜ் அய்யா" இப்படித்தான் சொல்வார்,
 "........ .... .....  ஆகவே இந்தக்கொலையை ராஜா செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கொலையை யார் செய்தது என்பதை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது ".

இப்படிக்கூட சொல்லவில்லை.குற்றவாளிகள் எனத்தெரிந்திருந்தும்,மொத்தமாக விடுதலை செய்யப்பட்டிருக் -கிறது ஒரு மொள்ளமாரிக் கும்பல்.

கைப்புள்ள அரிவாளோட கிளம்பிடிச்சி...
ஆக,செத்தவனே நேரில் வந்து, "சத்தியமா இவன்தான் சாமி என்னை வெட்டிக்கொன்றான்" என்று சொன்னாலும் "ஏய்  நீ வாயை மூடுல... நாங்கத்தான் பெரியவங்க சொல்றோம்ல, சரியான சாட்சி இல்லன்னு... எல்லாம் சட்டப்படிதாம்ல செய்யுறோம். உன்னை யார் கொன்னதுனு நீ சொல்லக்கூடாது. பின்ன சட்டம் படிச்ச நாங்க எதுக்கு இருக்கோம் " அப்படின்னு செத்தவன்கிட்டேயே வகுப்பு எடுப்பாய்ங்க நம் நாட்டு சட்ட மேதைகள்.

துருப்பிடித்த, ஓட்டைவிழுந்த, ஒத்தப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நம் தேசத்து சட்ட அமைப்புகளை வைத்து ஒரு ம#&%*ம் புடுங்க முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.

சரி....., வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்திருந்த சங்கரராமனை ஜெயேந்திரன், விஜேயேந்திரன் ( ' ர் ' போடும் அளவுக்கு இவனுளுக்கு தகுதி இல்லீங்க ஆபிசர்) குரூப் கொலை செய்யவில்லை. அதைத்தான் நம் சட்டம் தெளிவுபட சொல்லிவிட்டது. அதனால்தானே எந்தக்குற்றமும் செய்யாத இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சங்கரராமன் எப்படி செத்திருப்பார்..?

இது ஒரு புறமிருக்க, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சங்கரராமனின் மகன் அறிவித்திருக்கிறாராம். அந்தத் தம்பிக்கு நம்ம நாட்டு சட்டங்களைப் பற்றிய அடிப்படையறிவும், நீதி அமைப்புகளின் நெளிவு சுளிவுகளும் சரியாகத் தெரியவில்லை போல. தற்போதாவது சங்கரராமன் கொலை செய்யப்பட்டார் என்று சொல்கிறார்கள். ஒருவேளை மேல்முறையீடு செய்தால், அவர்களின் தீர்ப்பு இப்படியாகத்தான் இருக்கும்..

# சங்கரராமனே அரிவாளை எடுத்து தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்துப் போயிருக்க வேண்டும். அதை மறைக்க,செத்துப்போனபிறகு அவர் பயன்படுத்திய அந்த அரிவாளை, யார் கண்ணுக்கும் தெரியாமல் அவரே மறைத்திருக்க வேண்டும்.

#  பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும் ஏழாம் உலகத்து மக்களுக்கு அவசரமாக ஒரு அர்ச்சகர் தேவைப்பட்டிருக்கலாம். அங்கு நம்மவூர் சங்கரராமனைப் போல் தோற்றம் உடைய ஒரு மக்கு மட சாம்பிராணிக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு, நமது உலகத்தில் இருக்கும் சங்கரராமனை கொன்று அந்த உலகத்திற்கு தெய்வத்தாய் அழைத்து சென்றிருக்கலாம்.

# நடிகர் முத்துக்காளையின் நெருங்கிய உறவினரான சங்கரராமன், ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு ரவுடிக் கும்பலைக் கூப்பிட்டு அவர்களுடன் 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை விளையாடும் பொழுது, ஒருவேளை செத்துப் போயிருக்கலாம்.

# (இது முகநூளில் ஒரு நண்பர் போட்டது) வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்து தக்காளிச் சட்டினியுடன் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்த சங்கரராமன், கால் மேல் கால் போட ஆசைப்பட்டு வலது காலைத் தூக்கிய போது பேலன்ஸ் தவறி, பின் பக்கமாக விழுந்ததில் பின்னந்தலை அடிபட்டு ரத்தம் வெளியேறியிருப்பதாகவும், அவர் முகத்தில் இருப்பது தக்காளி சட்னியே தவிர, ரத்தம் அல்ல என்று 9 வருடங்களுக்குப் பிறகு அதை நக்கிப் பார்த்தவர் சொன்னதாகவும் கேள்விப்பட்டதை ஒட்டி, அப்பாவிகள் 25 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


இதுபோலத்தான் முன்பு, தா.கிருட்டிணன் ரோட்டில் வாங்கிங் செய்துகொண்டிருந்த பொழுது, முதுகு அரிக்கிறது என்று அரிவாளை எடுத்து சொறியப்போய், அது தவறுதலாக கை, கால், கழுத்து, தலை என்று சரமாரியாக வெட்டிவிட, அந்த இடத்திலேயே அவர் செத்துப்போனார்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் கொசுவர்த்திச்சுருள் பத்தவைக்கப் போய்,அதிலிருந்து கிளப்பிய தீப்பிழம்பால் மூன்று பேர் உடல்கருகி 'தற்கொலை' செய்து கொண்டார்கள்.

திருச்சி ராமஜெயத்தை கொலை செய்தது பறக்கும் தட்டில் வந்த வேற்றுக்கிரகவாசிகள்தான் என்பதை தமிழக அரசு ஆணித்தரமாக நம்புவதாக அறியநேர்கிறது .

இதுபோல தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனவர்கள் நம் தேசத்தில் ஏராளம்.முன்பு சாட்சியளித்த -வர்கள் தற்போது பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்களாம். ஒரு வழக்கை ஒன்பது வருடத்திற்கு இழுத்தடித்தால் ஏன் பிறழ் சாட்சியம் அளிக்க மாட்டார்கள் ?. "செத்துப்போனவன் உசுரோடவா வரப்போறான்... ஆனால் அவன் உசுரோட இருந்தா உங்களுக்கு என்ன செஞ்சியிருப்பானோ அதைவிட பல மடங்கு நாங்க செய்யுறோம்.." என்று ஆரம்பிக்கும் பேரத்தில் முக்கிய சாட்சியே பல்டி அடிக்கும் பொழுது , மற்ற சாட்சிகள் என்ன செய்யும்..?  

ஒரு ஆட்சியில் நெருக்கிப் பிடிக்கப்படும் கழுத்து, அடுத்த ஆட்சியில் தளர்த்தப் படுகிறது. குற்றத்தின் அடிப்படையில் வழக்கின் ஸ்திரத்தன்மை இங்கே பேணப்படுவதில்லை. எந்த ஆட்சியில் போடப்பட்டது என்பதைப் பொறுத்தே அவ்வழக்கின் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இவ்வழக்கு, அடுத்து கலைஞர் ஆட்சியில் நீர்த்துப்போகும்படி செய்யப்பட்டது. எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கப்பட்ட கொடுமையெல்லாம் அப்போதுதான் நடந்தது. வெறுமனே தீர்ப்பு மட்டும் தற்போது வாசித்திருக்கிறார்கள்.

அடுத்த சில வருடங்களில் நாம் இன்னொரு உண்மையை உணரவேண்டிவரும்..." நமது முன்னாள் பாரதப் பிரதமர், தன்னைத்தானே வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததால்தான் செத்துப்போனார் ".


(ஸ்சொர்ணக்கா ......" ச்வீட் எடு..கொண்டாடு..")


Saturday, 31 August 2013

லட்சம் ஹிட்சை நோக்கி ஒரு லட்சியப்பெண்ணும்.. பதிவரின் குறும்படமும்...

                    நாளை இந்நேரம் இரண்டாம் தமிழ் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும். வெளிநாடுகளில் வசிப்பதால் நெருங்கிய உறவினர்களின் விஷேசங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஆதங்கமும் வருத்தமும் முன்பு இருக்கும்.தற்போது அதோடு பதிவர் மாநாடும் சேர்ந்துவிட்டது. தன் ரசனைமிக்க எழுத்துகளால் வாசிப்பவர்களை வசியம் செய்த பதிவர்களையும் ஊடகவியலார்களையும் நேரில் சந்திப்பதென்பது நெகிழ்ச்சியான நிகழ்வல்லவா...!  அந்தக் கொடுப்பினைக்கும் கொஞ்சம் அதிஷ்டம் வேண்டும் போல...

இணையத்தில் முகம் காட்டாமல் எழுத்தின் மூலம் பரிட்சையமான பதிவர்கள் பலர்.  அவர்களை வெளிக் கொணரும் நிகழ்வாகவும் இந்தப் பதிவர் திருவிழா அமைவது அதன் தனிச்சிறப்பு. சிலர் தன் எழுத்தின் மூலம் பலரது மனதில் குடிகொண்டுவிட்டு பின்பு முகத்தைக் காண்பித்து பரவசப்பட வைப்பார்கள். சமீபத்தில் செங்கோவி, மாத்தியோசி மணி போன்றவர்களின் நிஜ முகத்தைப் பார்க்கும் பாக்கியம்(போட்டோவில்தான்) கிட்டியது.

சென்ற ஆண்டு பதிவர் திருவிழாவில் நகைச்சுவைச்செம்மல் சேட்டைக்காரனின் தரிசனம் கிடைத்தது. இந்த ஆண்டு மங்குனி அமைச்சர்,பன்னிக்குட்டி ராமசாமி உட்பட சில பிரபல பதிவர்கள் வரக்கூடும் என்கிற தகவல் மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. நேரில் பார்க்க முடியாவிட்டாலும் 'லைவ் டெலிகாஸ்ட்' இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு பதிவராக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...


லட்சம் ஹிட்ஸ் என்கிற லட்சியத்தை நோக்கி போலந்து அம்மணி...

மிழ் வலைப்பூவில் முதன்முதலில் ஒரு லட்சம் ஹிட்சை எட்டியது கேபிள்ஜி என நினைக்கிறேன்.வலைப்பூ எழுதுவதற்கு முன் அவரது பதிவுகளை ஒரு வாசகனாக தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். லட்சம் ஹிட்சை வாரிவழங்கிய வாசகர்களுக்கு நன்றி அப்படின்னு ஒரு பதிவு போட்டார்.   அடேங்கப்பா லட்சம் ஹிட்சா என அன்று வாயைப் பிளந்தேன். பிறகு நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது லட்சம் ஹிட்ஸ் என்பதை ஒரு லட்சியமாக கொண்டு பதிவெழுத ஆரம்பித்தேன்.எப்படியோ அந்த மைல் கல்லை தாண்டிவிட்டேன்னு வச்சுக்குங்க.. இப்போ எதுக்கு இந்த வெட்டி டீடைல்ஸ்னு கேட்குறீங்களா...

நம்மைப்போலவே போலந்து நாட்டு அம்மணி ஒன்னு, லட்சம் ஹிட்சை அடைந்தே தீருவேன் என வெறியோடு கிளம்பியிருக்கு. இதுவரை 284 ஹிட்சை தாண்டிவிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது...அந்த அம்மணியோட வலைப்பூ என்ன... நானும் ஒரு ஹிட்சை போட்டுட்டு வந்துடுறேன் என உள்ளங்கை லேசாக நமைச்சல் எடுத்தால், அடுத்து சொல்லப்போகும் சங்கதியைக் கேட்டுவிட்டு பின்பு முடிவு செய்யவும்...

அந்த போலந்து நாட்டு பெண்ணின் பெயர் அனியா. 21 வயதே நிரம்பிய இவருக்கு ஒரு வினோத ஆசை. அதை ஆசை என்பதைவிட லட்சியம்(!) என்றே சொல்லலாம். உலகம் முழுவதும் சுற்றி ஒரு லட்சம் ஆண்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் இவருடைய தனியாத தாகம்.இது என்ன பெரிய விசயம்னு கேக்க தோணுமே..

இவர் சொல்கிற ''சந்திப்பு'' வேற.. சினிமாவில் 'நான் சந்தித்ததில நீ ஒருத்தன்தான் ஆம்பளை' என மேட்டரா வர்ற வில்லிக்கு ஒரு டெம்ப்ளேட் டயலாக் வச்சிருப்பாங்களே.. அதே சந்திப்புதான். லட்சம் பேரை 'சந்தித்து' கின்னஸில் இடம்பெறப்போவதாக வேற சொல்லியிருக்கு... என்ன ஒரு லட்சியம்..!


இதுவரையில 284 பேர 'சந்திச்சிருக்கிறதா' தன்னோட முகநூல் பக்கத்தில தெரிவிச்சிருக்கு.  இதற்காக தனி முகநூல் பக்கமே  இருக்கிறதாம்... அங்க சில பயபுள்ளைக WE WILL MEET IN SRILANKA..THAILAND..INDIA..என அட்வான்ஸ் புக்கிங் வேற பண்ணியிருக்காணுவ. (நல்லா வருவீங்கடா...)

பாவம் அந்த பொண்ணுக்கு சரியா விவரம் பத்தல. எதுக்கு அம்மணி உலகம் பூரா சுத்தணும்...? எங்க தலைநகர் டெல்லி, பம்பாய் ..அப்படியே கொஞ்சம பீகார்,ஆந்திரா வழியா தமிழ் நாட்டை ஒரு ரவுண்டு அடிச்சா பத்தாது..? உங்க லட்சியத்தை சொல்லாமலே நிறைவேற்றி வைப்பானுக..

சிறுமிகளைக் கூட விட்டுவைக்காத வெறிப்பிடித்த மிருகங்கள் இங்க நிறைய இருக்கு அம்மணி... உங்க லட்சியத்தை நிறைவேற்றின மாதிரியும் இருக்கும்... எங்க பிஞ்சுகளை காப்பாற்றின மாதிரியும் இருக்கும்.

துலைக்கோ போறியள்..... 
லையுலகில் நீண்ட காலமாக எழுதிவரும் சில பதிவர்கள்  தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறார்கள். கேபிள் சங்கர், கருந்தேள்.. என இந்த பட்டியல் நீளும். இதில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஈழத்திலிருந்து எழுதும் மதியோடை மதிசுதா..

தன் சொந்த முயற்சியில் "துலைக்கோ போறியள்" என்கிற குறும்படத்தை எடுத்துள்ளார். இதற்கு திரைக்கதை, வசனம், இயக்கம் என்கிற மூன்று பொறுப்புகளையும் ஏற்று, மண்மணம் கமழ ஒரு குறுங்காவியத்தை படைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

தெனாலி படத்தில் கமலும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சில கதாபாத்திரங்களும் பேசியதைத்தான் ஈழத்தமிழ் என இவ்வளவு நாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன்.அவர்கள் மிமிக்கிரி செய்ய முயற்சித்திருக் கிறார்கள் என்பதை இந்தக் குறும்படத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.

விளிம்புநிலை மனிதர்களின் சின்னச்சின்ன உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். பின்னணி இசை அபாரம்.முதல் படைப்பு என்பதால் சிறு தவறுகள் இருக்கலாம். அதைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் ஈழப் பதிவர்கள் மத்தியில் இது ஒரு மைல் கல். மென்மேலும் வளர சக பதிவர் என்கிற வகையில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



(துலைக்கோ போறியள்--->எங்கே போகிறீர்கள்)






Saturday, 10 August 2013

தலைவா படத்தை ரிலீஸ் செய்வது எப்படி..?


ன்றைக்கு தமிழ் நாட்டோட தலையாய பிரச்சனையே(!?)  தலைவா படம் ரிலீஸ் ஆகுமா என்பது தான்... சில செய்திகள் நாளை ரிலீஸ் எனவும் சிலர் ஆக-15 னும் சொல்றாங்க...

சரி அப்படியென்ன இந்தப்படத்தில வில்லங்கமான காட்சிகள் இருக்கு...? படம் பார்த்தவங்கள கேட்டீங்னா நாலு நாளைக்கு ரூம் போட்டு சிரிப்பாங்க. படத்துக்கு பில்டப் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குங்ண்ணா...

முதல்ல தலைவா தரப்பு ஒரு விஷயத்தை சரியா புரிந்து கொள்ளவில்லை. எல்லா படமும் விஸ்வரூபம் ஆகிவிட முடியாது. எல்லா நடிகரும் கமல்ஹாசனாகவும்  முடியாது. 'விஸ்வரூப பார்மலா'வை அதற்கு பின் வந்த சில படங்கள் முயற்சி செய்து பார்த்தது.ஆனால் தோல்வியில் தானே முடிந்தது.கடலும் அன்னக்கொடி யும் கடலில் கரைத்த பெருங்காயமானதே  ...

விஸ்வரூப பிரச்சனையே வேறு. அவர் சில அமைப்புகளை அழைத்து படத்தை திரையிட்டுக் காண்பித்தார். நிச்சயம் கமல் என்ன சொல்ல வந்தார் என்பதை முழுவதும் புரிந்திருக்க மாட்டார்கள். ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி ஏதாவது ஏடாகூடமான எதிர்வினைகள் வந்துவிட்டால், அனுமதித்த நம் அமைப்பின் மீதுதானே குற்றம் சொல்வார்கள் என்கிற அச்சத்தில் குருட்டாம் போக்கில் தடை கோரப்பட்டது.பிறகு இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி கமல் என்கிற கலைஞானி மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அதுவே அந்தப்படத்திற்கு ஒத்த பைசா செலவில்லாமல் விளம்பரமாகிப் போனது.

அது மட்டுமல்லாது, வெளிநாடுகளில் முதலில் திரையிட்டபோது படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவாகத்தான் வந்தது. சிலர் ஆகா ஓகோ என புகழ்ந்திருந்தனர். அதுகூட படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ஆனால் தலைவா பிரச்சனை வேறு. எதிர்ப்பு என்கிறார்கள். யார்னு கேட்டா தெரியாதாம். தியேட்டரில் 'பாம்' வைப்பதாக மிரட்டல் வந்தாக சொல்கிறார்கள். அது யார்னு கேட்டா, புரட்சி மாணவர் படையாம். திடீர்னு அது எங்கிருந்துய்யா வந்தது..? விட்டா, ரமணா படத்தில் வந்த ACF குரூப்னு சொன்னாலும் சொல்வாய்ங்க.

சரி...கமல் செய்தது போல யாருக்காவது படத்தை போட்டுக் காண்பித்தாவது பிரச்னையை முடிக்கலாம்னு பாத்தா..அது யாருக்கு போட்டுக் காமிக்கிறதுனு தெரியில.. அப்படியே ரோட்ல போற யாரோ பத்து பேரை வலுக் கட்டாயமா இழுத்து வந்து படத்தை போட்டுக் காமிச்சாலும், இடைவேளையின் போது 'நம்பர் ஒன்' போறதா பொய் சொல்லிட்டு சுவரேறி குதிச்சி தப்பிச்சி போகமாட்டாங்கனு என்னய்யா நிச்சயம்..?

முதல்வரை சந்திக்க கொடநாடு போனாங்களாம்.. அனுமதி கிடைக்கவில்லையாம்.. அப்படின்னு தலைவா தரப்புதான் சொல்லுது. அரசு தரப்பிலிருந்து எந்த ரியாக்சனும் காணோம்.

ஒருவேளை படத்தை ரிலீஸ் செய்ய விடாவிட்டால் நான் வேறு தேசம் நோக்கி சென்றுவிடுவேன் என விஜய் சொன்னா என்ன ஆகும்..?  " ங்ண்ணா இதைத்தாங்ண்ணா எதிர்பாத்தேன்...ஃபிளைட் டிக்கெட் வேணும்னா எடுத்து தரவாங்ண்ணா.." னு சொல்லிட்டா என்ன பண்றது ...?

சரி இந்த சிக்கலிலிருந்து வெளியேறி படத்தை ரிலீஸ் பண்ண என்னால் முடிந்த சில யோசனைகளை சொல்றேன்...

1. டிவி ரைட்சை சன் டிவிக்கு வித்துட்டதா எங்கேயோ படிச்சேன்...என்னங்ண்ணா நீங்க... சன் பிக்சர்ஸ்தான் தமிழ் சினிமாவையே அழிச்சிடிச்சினு சொல்லித்தானே அம்மாவுக்கு அனிலா மாறி பிரச்சாரம் செஞ்சீங்க... திரும்ப சன் டிவிக்கே வித்தா எப்படிங்ண்ணா...? உடனே அக்ரிமெண்டை கேன்சல் பண்ணி, ஜெயா டிவிக்கு 90 பர்சென்ட் தள்ளுபடில வித்துடுங்ண்ணா.

2. தலைப்புதான் ஆத்தாவை கோபப்படுத்திடுச்சினா அதுக்கு பரிகாரமா நான் சொல்றத செஞ்சிடுங்ண்ணா.....
     

தலைவா டைட்டிலுக்கு கீழ 'TIME TO LEAD 'னு இருக்கிறது தூக்கிட்டு இதுல ஏதாச்சும் ஒன்ன வச்சிடுங்க.

             " சத்தியமா நான் இல்லீங்க
ண்ணா...."
             "என்கிற நெனப்பே வரக்கூடாது "
             " அப்படினு எவண்டா சொன்னான்.." 
             " 2095 க்கு மேல் "
             " தலைவி இருக்குபோதா.."



3. படத்தில் டைட்டிலின் போது பேக்ரவுண்டில் மகாத்மா காந்தி,சேகுவாரா, நெல்சன் மண்டேலா,ஹோசி மின், பிடல் காஸ்ட்ரோ, லெனின், லீ குவான் யு, தலாய்லாமா என வரிசையா வருது . ஆனா...... ஆனா....... அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரி, தங்கத்தாரகை, பொன்மனச்செல்வி, காவிரித்தாய், பாரதமாதா, பன்னியின்..ச்சீ பொன்னியின் செல்வி, வீரமங்கை வேலு நாச்சியார், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் போட்டோவை விட்டுடீங்கலய்யா....மொதல்ல எல்லா படத்தையும் தூக்கிட்டு அம்மா சின்ன வயசுலேருந்து இப்ப வரைக்கும் எடுத்த போட்டோவை வரிசையா காமிச்சிங்கனு வையுங்க வரிச்சளுகைக்கு நான் கேரண்டி தாறேன்.

4. படத்தில முதல்ல வர்ற அப்பா வில்லனோட பேர கருணாநிதினோ அல்லது தெட்சனா மூர்த்தினோ மாத்தணும். அந்த பையன் வில்லன் பெயரை குஞ்சாநெஞ்சன் கொலைகிரி வைக்கணும்...அப்படியே கூட இருக்கிற அல்லக்கைகள் பேரோட கடைசில 'நிதி' யை சேர்த்து விட்டுடுங்க.ஆத்தாவை ஓரளவு சாத்தப்படுத்த இது உதவும். 


5. படத்தில சத்யராஜ் பேரு 'அண்ணா'... அப்படினா விஜய் என்ன எம்ஜியாரா....? யோவ் முதல்ல அத  மாத்துங்கய்யா..

6. படத்தோட ஓபனிங் சாங்க்சை கட் பண்ணிட்டு  "அடி கோமாதா ..நீ இந்த ஊரு காக்கிற குல மாதா.." பாட்டை ரீமிக்ஸ் பண்ணி " கொடநாட்டு கோமாதா... நீ எங்க ஊரு காக்கிற குல மாதா" னு மாத்திடனும்..


7. படத்தில விஜய் ஆஸ்திரேலியவில குடி தண்ணீர் பிசினெஸ் பன்ற மாதிரி காமிக்கிறாங்க... அதை மாத்தி டாஸ்மாக் தண்ணி பிசினெஸ் பன்ற மாதிரி காமிச்சா,
த்தாவின் புகழ் உலக அளவில ரீச் ஆகங்கிறதால உடனே அனுமதி கெடச்சிடும்.
 

8. சண்டைக்காட்சிகளில அடிக்கடி டிவி பெட்டி உடையுற மாதிரி காமிக்கணும்.அது கலைஞர் கொடுத்த இலவச டிவி மாதிரி தெரியனும்..
 
9. ஆஸ்திரேலியவில சுரேஷ் ரெஸ்டாரென்ட் நடத்துவார். அங்க தயிர் சாதம் மட்டுமே போடுவதாக காண்பிக்கணும். அப்படியே அந்த தயிர் சாதத்தை அடிக்கடி ZOOOOOM பண்ணி காமிக்கணும். அதுல ரெட்டை இலை ஷேஃப்புல கறிவேப்பிலை எப்போதும் கிடக்கிற மாதிரி பாத்துக்கணும்.

இப்படியெல்லாம் மாத்தினா படம் ஓடுமானு கேக்க கூடாது. அது வேற டிபார்ட்மென்ட். இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆகணும்னா இப்படி ஏதாவது செஞ்சுதான் ஆகணுங்ண்ணா..


Friday, 9 August 2013

தலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)


சிங்கையின் மிகப்பெரிய திரையரங்கம். 1500 பேருக்கு மேல் கொள்ளளவு கொண்டது. நான்கு நாட்களுக்கு ஹவுஸ் புல். நிறைய எதிர்பார்ப்புகளுடன் அரங்கமே நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்கு ஒரே விசில்,ஆர்பாட்டம்,சப்தம் என வசனங்களே காதில் விழாத அளவுக்கு ரசிகர்களின் கொண்டாட்டம். பதினைந்தாவது நிமிடத்தில் வருகிறார் இளைய தளபதி விஜய். அடுத்த ஐந்து நிமிடங்களில் அரங்கத்தில் 'பின்ட்ராப்' சைலண்ட். பிறகு மெல்ல மெல்ல சப்தங்கள் கூடி ஒரு கட்டத்தில் 'டேய் படத்தை போடுங்கடா' என்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் பொறுமையை மொத்தமாக சோதித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

படத்திற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல்,திரையிட மாட்டோம் என வாண்டேடாக வண்டியில் ஏறும்போதே தெரியும். படம் மொக்கை என்று..ஆனால் இப்படி ஒரு மரண மொக்கையை எதிர்பார்க்கவில்லை.இன்னும் ஒரு வார காலத்திற்கு இணையத்தில் அடித்துத் துவைத்துத் தொங்கவிடப் போகும் தலைவா-விற்கு முதலில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

இயக்குனர் விஜயிடம் எஸ்.ஏ.சி இப்படி சொல்லியிருப்பார். நாயகனையும் பாட்சாவையும் கலந்து கட்டி விஜய்க்கு ஏற்றவாறு எடுங்கள் என்று. மனுஷன் சாதாரணமாவே அட்ட காப்பி அடிக்கிறவரு.இப்படி சொன்னா கேக்கவா வேணும். நாயகன்ல ஒரு சீன்,பாட்சாவில ஒரு சீன்,திரும்பவும் நாயகனில் ஒரு சீன்..பாட்சாவில ஒரு சீன்...என அப்படியே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார். சரி எல்லோரும் கதையையும் காட்சியையும் தான் காப்பி அடிப்பாங்க.இந்த ஆளு லொகேசனையும் காப்பி அடிச்சிருக்கான்யா.. நாயகனில் வரும் அதே தாராவி, அதே ஆலமரம் ,மேடை என எல்லாம் அப்படியே....

வேலுநாயக்கர் கேரக்டர்தான் விஜயின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு. பெயர் மட்டும் மாறியிருக்கிறது 'அண்ணா' என்று.

மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் கட்டம் கட்டப்பட்டு சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார்( சரண்யா கேரக்டராம்). சினம் கொண்ட சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்ட்ரேலியா அனுப்பி விடுகிறார்.

பிறகு வேலுநாயக்க....ச்சே.. 'அண்ணா'வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவில் விஜய் தண்ணி பிசினெஸ்(குடிக்கிற தண்ணிதான்) செய்கிறார். 'தமிழ் நாட்டுக்கு தண்ணி கொண்டுவர முடியவில்லை...ஆனால் நீ ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி கொண்டு வந்துட்டியே' என்கிற பன்ச் டயலாக் வேற இருக்கிறது. அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் பிடிவாதம் பிடிக்க,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். ஏன்னா இருவரும் சிபிஐயாம்.  

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேக்க தோணுமே...முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை போட்டுத்தள்ளினார் அல்லவா...அவரோட மகன்தான்.அப்புறமென்ன அப்பா விட்டுவிட்டுப் போன அந்த அற்புத பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, கடைசியில் அப்பாவைக் கொன்ன அந்த வில்லனை கொல்கிறார்.

அம்புட்டுதேன் கதை. ரஜினியை பாட்சா பாய்..பாட்சா பாய் என்று அழைத்தது போல இதில் விஜயை விஸ்வா பாய் என்கிறார்கள். எங்கிருந்து பாய் வந்தது என்பதுதான் தெரியவில்லை.தலைவா என்று டைட்டில் இருப்பதால் ஏதோ விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இந்தப்படம் இருக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏன்னா இதில் தமிழ்நாட்டை துளி அளவு கூட காண்பிக்கவில்லை.முற்பகுதி ஆஸ்ட்ரேலியா ..பிற்பகுதி முழுவதும் மும்பை.

முதல் பாதி செம ஜவ்வு... சந்தானம் காமெடியும் செம போர். இப்படியே போனால் விவேக் மாதிரி ஓரங்கட்டப் படுவார். இண்டர்வலுக்கு முன்பு படம் லேசாக சூடுபிடித்தது போல் இருந்தாலும் பிறகு தலை குப்புற படுத்து விடுகிறது. அது என்னப்பா சீரியசான காட்சிகளில் எல்லாம் எல்லோரும் முகத்தைப் பார்த்து பேசாமல் மோட்டு வளையை பாத்து பேசுறாங்க.. ஒருவேளை ஓலகத்தரத்தில் முயற்சி பண்ணி இருக்காங்களோ..

விஜயின் அட்டர்பிளாப் படங்களில் கூட அவரின் அறிமுக காட்சி அற்புதமாக இருக்கும். படத்தின் முதல் சொதப்பலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அறிமுகப் பாடலும் வெறுப்பேற்றுகிறது.துப்பாக்கி என்கிற முழு நீள ஆக்சன் படத்திற்கு அடுத்தாக வரும் இதில் இடைவேளை வரை ஒரு பைட் சீன் கூட இல்லை. ஜோடி நம்பர் ஒன்னில் ஆடிய சில்லரைப் பசங்களை வைத்துக்கொண்டு 'தமிழ் பசங்க' என்கிற டான்ஸ் குருப்பை நடத்துகிறார் விஜய். அடடே.. அப்போ டான்ஸில் பின்னி எடுத்திருப்பார் என கேக்க தோணுமே... அந்தக் கொடுமையை தியேட்டரில் பாருங்க..சுறா தோத்துடும். அதிலும் புன்னகை மன்னன் கமல் ரேவதி மாதிரி விஜய் அமலாபால் ஒரு BGM க்கு ஆடுவாங்க பாருங்க... கண்கொள்ளா காட்சி.

அமலாபாலிடம் முகத்தைத் தவிர காட்டுவதற்கு வேறொன்றும் இல்லையென நினைத்திருப்பார் போல இயக்குனர். நல்லவேளை இருக்கிற வெறுப்பில் அப்படி எந்த விபரீத முயற்சியும் இயக்குனர் எடுக்காதது பாராட்டுக்குரியது.

 

படத்தில் மற்றொரு மைனஸ் இசை.ஒரு பாட்டு கூட ரசிக்கும்படி இல்லை.மும்பையில் நடக்கும் கலவரத்தின் போது இந்தியன் படத்தில் வரும் பின்னணி இசை ஒலிக்கிறது.இதில் விஜய் பாடும் ஒரு பாடலில் G.V.பிரகாஷ் அவருடன் ஒரு சீன் ஆடுகிறார்(இது வேறயா..)

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக எதுவும் கிடையாது.ஏன்னா லாஜிக்கே இல்லாத படத்தில் எங்கே போயி லாஜிக் மிஸ்டேக்கை தேடுறது. படத்தில் வில்லன்கள் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ டேப் யார் கையிலும் கிடைக்காமல் ஒருவனால் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது.அது பிக்பாக்கெட்டுதான் அடிக்கப் பட்டிருக்கும் என்பதை வில்லனும் விஜயும் ஒரு சேர கணிப்பது எட்டாவது அதிசயம்.அந்த பிக்பாக்கெட் காரனைத் தேடி விஜயும் வில்லனும் ஒரே நேரத்தில் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் போன் பண்ணுகிறார்கள். மைக்ரோ செகன்ட் வித்தியாத்தில் விஜயின் போனை எடுத்துவிடுகிறார் அந்த பிக்பாக்கெட் ஆசாமி. அடுத்த முனையில் வில்லன் டயல் செய்து கொண்டே இருக்கிறான். அதைத் தெரிந்து கொண்ட விஜய் போனை கட் செய்தால் வில்லனின் போனை அட்டென்ட் பண்ணி விடுவானோ என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நமக்கு டென்சன் ஏத்துராங்கலாமாம்.. அட பக்கிகளா அவன்கிட்ட,இந்த போனை கட் பண்ண உடனையே ஒருத்தன் போன் பண்ணுவான் அத எடுக்காதனு சொல்லிட்டா பிரச்சனை முடிந்தது.காதுல பூ வைக்கிறதுக்கு பதிலா புய்ப்பமே வைப்பீங்க போல..

படத்தில் ஒரே ஆறுதல் 'ரைசிங் ஸ்டார்' சாம் ஆண்டர்சன். மனுஷன் ஒரு நிமிஷம் வந்தாலும் தியேட்டரை அதிரவைக்கிறார். அதிலும் ராசாத்தி பாடலுக்கு ஷோல்டரை குலுக்கி ஒரு மூவ்மென்ட் போடுவார் பாருங்க... சோர்ந்து உட்காந்தவங்க எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வச்சிட்டாரய்யா..

இந்தப்படம் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏதாவது போட்டி வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணுகிறபோது அவர் ரசிகர்களை குஷிப்படுத்த எந்த மாதிரியான காட்சியமைப்பு வைக்க வேண்டும் என்பதில் மெகா கோட்டை விட்டிருருக்கிறார் இயக்குனர். 

கண்டிப்பாக இந்தப்படத்தை ஒரு தடவையாவது பாருங்கள். இவ்வளவு நாள் கழுவி ஊத்திய ஆதி, சுறா, வில்லு வேட்டைக்காரன் எல்லாம் காவியமாக தெரியும்..

தலைவா... மூணு மணிநேரம் கதறக் கதற.....முடியில.



Friday, 2 August 2013

எழுச்சித் தலைவியிடம் சிக்கி கடைசியில் பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு..

நம்ம திடங்கொண்டு போராடு சீனு காதல் கடிதம் போட்டி வச்சாலும் வச்சார்.. நிறைய பேர் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதையா எழுதி தள்ளிட்டாங்க.. இருந்தாலும் பாருங்க  நம்ம சீனு ஏனோ முழு திருப்தி ஆகல... இந்த தீபாவளி பொங்கலுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாத சினிமா நடிகைங்ககிட்ட போய் பொங்கல் கொண்டாடுன அனுபவத்தை சொல்லுங்கன்னு டிவிகாரங்க பேட்டி எடுத்து,டிஆர்பியை ஏத்துற மாதிரி நாமளும் ஏதாவது செய்யனும்னு என்கிட்டே வந்து கேட்டப்போ,முதலில் எனக்கு எதுவுமே தோனல.

அப்புறம்தான் எனக்கு எழுச்சித் தலைவி பேரவை ஞாபகம் வந்திச்சி. ஆனா எழுச்சித் தலைவி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்குனு ரொம்ப பிசியா இருக்கிறதால....(சரி..சரி..இதுக்கெல்லாம் லாங்குவேஜ் முக்கியமானு கேக்க வர்றது புரியுது.ஆனாலும் பாருங்க தேசிய அளவில கட்சியின் வேர் அடிஆழம் வரையில பாயனும்னா இது போல சமூக சேவைகள் செய்துதானே ஆகணும்)

பல பிசியான ஷெட்யூல்களுக்கு மத்தியில நம்ம பேரவை வேண்டி விரும்பி கேட்டுகிட்டதால இளைஞர்களின் 'எழுச்சி'த்தலைவி,வருங்கால பாரதம், மானமிகு செல்வி பாபிலோனா அவர்களை சந்திக்க அனுமதி கிட்டியது. இனி சீனுவாச்சு...தலைவியாச்சு...
சீனு : வணக்கம் மேடம். (நேரடியாக விசயத்திற்கு வருகிறார்) காதல் கடிதங்கள் என்கிற தலைப்பில ஒரு போட்டி வச்சிருக்கோம். உங்களோட அனுபவங்களை என்கிட்டே பகிர்ந்துகிட்டீங்கனா உங்களையும் எங்க போட்டியில சேத்துப்போம்.

எழுச்சித் தலைவி: எக்ஸ்பீரியன்ஸ்தான ...? எனுக்கு நிறையா இருக்குது. இந்த காதல்ங்கிறது ரெண்டு பேரும் ஒன்னா கட்டிப்.....

சீனு : மேடம்..மேடம் ..நான் சொல்றது வேற...ஐ மீன் காதல்... அதாவது ஃபீலிங்ஸ்... 

எ.த:  ஓ அதுவா... (உதட்டை சுழிக்கிறார்) ஆ...ஆ.... ஏய்...ம்ம்..... . இந்த ஃபீலிங்ஸ்தான சீனு .?

சீனு : அந்த ஃபீலிங் இல்ல மேடம்..இது வேற.அப்படியே அடி வயித்திலேருந்து வரணும்..

எ.த:  புரிஞ்சி போச்சி.. ச்சீ... நாட்டி...

சீனு : மேடம் தப்பு  தப்பா புரிஞ்சிக்கக் கூடாது.. இந்த அன்பு, பாசம், நேசம்னு சொல்வாங்கல...அதே மாதிரிதான் காதல்...அதாவது லவ்...பியார்...

எ.த: சீனு என்னை  கன்பியூஸ் பண்ணாதிங்க ..  லவ்வுனா ஆம்பளையும் பொம்பளையும் பண்ணுவாங்களே அதான...?

சீனு :அதேதான். வெல்டன். (முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு)..இப்ப சொல்லுங்க...எங்க பாத்தீங்க அவர....? எப்படி உங்க காதல சொன்னீங்க....? அப்ப உங்களுக்கு எப்படி இருந்துச்சி..? 

எ.த: மொகத்த எல்லாம் யார் பாக்குறா சீனு.. இருட்டு அறை ..லைட்டா வெளிச்சம் இருக்கும். பேச வேற கூடாதாம். ஸ்டார்ட் கேமரா ஆக்சன்-னு சொன்னவுடனே ஆரம்பிக்கணும்...கட்-னு சொன்னவுடனே முடிக்கணும்..  

சீனு :  ஆ...ஆ...அய்யோ...அம்மா... (எங்கேயோ ரேடியாவில் 'தென்பாண்டி சீமையில..தேரோடும் வீதியில...' பாடல் ஒலிக்கிறது..)

எ.த: என்னாச்சி சீனு.. நீங்க ரொம்ப ஃபீலிங்கா ஆயிட்டா...?

சீனு : இல்ல உங்க கிட்ட கேட்டா விதவிதமா அனுபவங்கள் கிடைக்கும்னு அனுப்பிவிட்ட ஆள் மட்டும் இப்ப என் கையில கிடைச்சா....

ங்கிருந்து ஒரு வழியா தப்பித்து வெளியே வர எதிரே 'மிரட்சித் தலைவி' நமீதா வருகிறார். "ஏதாவது பாக்கக் கூடாதத பாத்தது மாதிரி மச்சான்ஸ் சீனு ரொம்ப பதட்டமா இருக்குது.." என நமீதா வினவ , எழுச்சித் தலைவி யிடம் சிக்கி சின்னாபின்னமான கதையை சொல்கிறார்.

நமீதா : காதல் அனுபவம் தானே.. கவலைப் படாத சீனு..நான் கவிதை சொல்லுது......

சீனு. : நீங்களா..சரி...சொல்லுது...சொல்லுது...

நமீதா :
கவிதை சொல்லுது நானு..
கேக்குது மச்சான்ஸ் சீனு..

நானு இஸ்கூல் படிக்குது..-அங்க 
பத்து மச்சான்ஸ் இருக்குது.

நாலு மச்சான்ஸ் என்ன பாக்குது -அதுல
மூணு மச்சான்ஸ் லெட்டர் கொடுக்குது.

ரெண்டு மச்சான்ஸ் காதல் சொல்லுது 
ஒரு மச்சான்ஸ் கடன் கேக்குது.

கடன் கேட்ட மச்சான  கல்லால் அடிக்குது..
காரு வச்சிருந்த மச்சான்ஸ லவ் பண்ணுது. 

ஊரு சுத்துது...
வாங்கி துண்ணுது...
என்ஜாய் பண்ணுது..
மச்சான்ஸ் பர்சு காலியாவுது.  

காரை விக்குது...
வீட்டை விக்குது...
தாடி வளக்குது-கடைசில
மச்சான்ஸ் பிச்சை எடுக்குது..

நானு ஆக்ட்டு குடுக்குது...
இப்போ ஆள தேடுது..

நானு சீனு பாக்குது..
சீனு என்னை பாக்குது...

சீனு. : ஐயோ....ஞான் ஓடிப்போவுது....

அங்கிருந்து தலைதெறிக்க ஓட, பின்னால் ஒரு அபலக் குரல் ... .திரும்பிப் பார்த்தால் பிரபல காப்பி பேஸ்ட் பதிவர். 

( தொடரும்....அடுத்தப் பதிவில்...)
 

Monday, 8 July 2013

சிங்க(ம்) வேட்டை..-விமர்சனம்



இந்த பார்ட்-1 ,பார்ட்-2  சமாச்சாரம் எல்லாம் ஹாலிவுட்டிலும்,பாலிவுட்டிலும் தான் வொர்க்அவுட் ஆகும் என்கிற விதியை உடைத்த வெகு சில தமிழ்ப்படங்களின் வரிசையில் சிங்கமும் இணைந்திருக்கிறது. தமிழில் வந்த ஒரிஜினல் சிங்கத்தை விட தெலுங்கில் ' டப்' பண்ணப்பட்ட 'யமுடு ' சக்கைப் போடு போட்டதால் என்னவோ சிங்கம்-2 தெலுங்கு ரசிகர்களை குறிவைத்தே படம் முழுவதும் சில்லி-பெப்பர் கலந்த மசாலா செமையாகத் தூவப்பட்டுள்ளது. 

படம் முடிந்து வெளியே வரும்போது " தோ..டிக்கெட் கொடுக்கிறானே இவன தூக்கி உள்ளே போடு..." ," தோ.. பப்ஸ் விக்கிறானே அவன தூக்கி லாக்கப்புல போடு..","படம் பாத்துட்டு வர்றவங்க ஒருத்தர் விடாம எல்லோர் மேலயும் லத்திசார்ஜ் பண்ணு....பாக்கிறிய..பாக்கிறியா..ஓ....ய்ய்.." னு கத்தனும் போல இருக்கு.படம் முழுவதுமே சூர்யா இதைத்தான் செய்திருக்கிறார்.

வில்லனை விட்டுவிட்டு, சிவனேன்னு வேடிக்கை பாத்துகிட்டு நிக்கிற ஒரு அப்பாவியை  ' ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா...' என ஒரே அடியில் சாய்த்த பழைய சிங்கத்தோடு படம் ஆரம்பிக்கிறது.சிங்கம் 1-ல் விட்ட கதையை,இதில் ஆரம்பம் முதலே சூர்யா பைனாகுலர் வைத்து தேடுகிறார்.அடுத்த பார்ட்டிலாவது கதையை கண்டுபிடிக்கட்டும்.

சிங்கம்-1 ல் பிரகாஷ்ராஜை என்கவுண்டரில் போட்டுவிட்டு, அத்தோடு வேலையை ராஜினாமா செய்துவிட்டு மளிகைக்கடை வைக்கப் போவதாக முடிவு செய்திருப்பார்
சூர்யா.வழியில் ஹோம் மினிஸ்டர் விஜயகுமார் மறித்து அடுத்த அசைன்மென்டாக தூத்துக்குடி ஹார்பரில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்டுபிடிக்கும் படி கட்டளையிடுவார்.ஆனால் அதுவரை மளிகைக்கடைக்காரராகவே இருக்குமாறு சொல்லியிருப்பார்.அதன் தொடர்ச்சிதான் சிங்கம் -2.. 

சூர்யா ஒருவேளை ஸ்கூல் யூனிபார்மில் ஹன்சிகாவை பார்த்திருப்பார் போல.பார்ட்-2 வில் ஹன்சிகா படிக்கும் பள்ளியில் NCC மாஸ்டராக இருப்பது போல் கதைத் தொடங்குகிறது.ஒத்த பைனாகுலர் வைத்தே மொத்த நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்கிறார் சூர்யா. சூர்யாவுடன் ஆலோசிப்பதைத் தவிர வேறு வேலை யில்லாத விஜயகுமாருடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசுகிறார்.ஒரு கட்டத்தில் அந்த பைனாகுலரை வைத்தே அது ஆயுதக் கடத்தலல்ல,ஹெராயின் கடத்தல் என்கிற அதிர்ச்சி உண்மையைக் கண்டுபிடிக்கிறார். பிறகு அதன் தலைவன் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் 'டானி' தான் என்பதையும் அதே பைனாகுலர் வழியாக அறிகிறார் சூர்யா.இதற்கிடையில் இரண்டு குரூப்புக்கு இடையே சாதிக்கலவரம் மூள,மீண்டும் டிஎஸ்பியாக சார்ஜ் எடுக்கிறார்.பிறகு அந்த கடத்தல் நெட்வொர்க்கைப் பிடித்தாரா..சாதிக் கலவரத்தைத் தடுத்தாரா என்பதுதான் மீதிக் கதை..

படம் முடிந்து வெளிவரும்போது, தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து சாதிப் பிரச்சனைகளுக்கும்,ஸ்மக்லிங்க் குற்றத்திற்கும் காரணமே ஒவ்வொரு போலீசுக்கும் சொந்தமாக பைனாகுலர் வழங்காததே காரணமென நம்மால் உணர முடிகிறது.

 
படத்தில் அஞ்சலி,அனுஷ்கா,ஹன்சிகா என மூன்று குல்ஃபிகள் வருகிறார்கள்.ஆரம்பத்தில் வரும் குத்தாட்டப் பாடலுடன் அஞ்சலியின் சேவை முடிகிறது. உரிச்ச வச்ச பிராய்லர் கோழி போல அஞ்சலி சூர்யாவுடன் செம குத்து போட, அந்த நேரத்திலும் அஞ்சலியை ரசிக்காமல் பைனாகுலரில் நோட்டமிடும் சூர்யாவின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

ஹன்சிகா +2 மாணவியாம். இம்மாம்பெரிய +2 ஸ்டுடென்ட் எந்த ஊர்லப்பா இருக்காங்க..? சரி ஒவ்வொரு வகுப்பிலும் பட்டறையை பலமாக போட்டிருக்கும் என்று சந்தேகித்தாலும்,அவர் நன்றாகப் படிக்கும் மாணவியாம். இந்த ஆராய்ச்சி நமக்கெதுக்கு.அடுத்தது வருவோம். அவர் சூர்யாவை லவ் பண்ணுவதாக சொல்கிறார். ஆனால் சூர்யாவுக்கு ஏற்கனவே காவ்யா(அனுஷ்கா ) உடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே சூர்யா உத்தமனாக இருந்தால் என்ன செய்திருக்கணும்..? முதலில் லவ் யு சொல்லும் போதே அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயமாகியிருக்கிறது என சொல்லியிருக்க வேண்டாமா.? கடைசியில் அதை சொல்லும் போதுதானே அவர் திருந்துகிறார்.அதைவிட்டுவிட்டு ஸ்டுடென்ட் மாஸ்டரைக் காதலிக்கக் கூடாது..உனக்கு வந்திருக்கிறது இன்பாக்சுவேசன்...இது அறியாத வயசு...என எதுக்கு அட்வைஸ் பண்ணனும்..?  இப்ப புரியுதா.. எதுக்கு மளிகைக்கடை வைக்கிறேன்னு சொல்லிட்டு போனவரு NCC மாஸ்டரானாருனு..ஒருவேளை அனுஷ்கா புட்டுகிச்சினா.!?.சூர்யாவின் மாஸ்டர் பிரைன் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. 


கடத்தல்காரர்களாக வரும் ரகுமானும்,முகேஷ் ரிசியும் உண்மையிலேயே நண்பர்கள்.ஆனால் போலிசுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக எதிரிகள் போல் நடிக்கிறார்கள். தமிழ் நாட்டுப் போலிசின் அனைத்து உயர் அதிகாரிகளும் அவர்களின் கைக்குள்ள இருக்க,தூத்துக்குடியில் நாங்கதான் டான் எனக் கொக்கரிப்பவர்கள் எதற்காக இந்த நாடகம் போடவேண்டும்..?  நடுக்கடலில் இருக்கும் முகேஷ் ரிசியை பார்க்க ரகுமான் அவசரமாக போட்டை எடுத்துக்கொண்டு தன் சகாக்களுடன் விரைகிறார்.அவரை சொற்ப தூர இடைவெளி யில் சூர்யா ஃபாலோ செய்கிறார். பாவம் அவர்களுக்கு திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லை போல. வழக்கம் போல பைனாகுலரில் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதை மட்டும் கண்டுகொண்டு திரும்பிவிடுகிறார்.(தக்காளி...முதல்ல அந்த பைனாகுலர் எங்க கிடைக்குதுன்னு விசாரிச்சி வாங்கணும்  ) 


இன்டர்நேசனல் ஸ்மக்ளர் ' டானி 'தான் அது என தெரியாமல் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார் சூர்யா. விஷயம் வெளியே தெரிந்து எம்பி,எம்எல்ஏ ஆரம்பித்து பல முனைகளிலிருந்தும் சூர்யாவுக்கு தொல்லைகள் வர, திக்குமுக்காடிப்போன சூர்யா டானியை தப்பிக்க விட்டு விடுகிறார். இது ஒரு சாதா டிஎஸ்பி என்றால் நம்பிவிடலாம். முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சரின் நேரடி தொடர்பில் இருக்கும் 'ஸ்பெசல்' டிஎஸ்பியான சூர்யா,ஏன் அவருக்கு ஒரு போன் போட்டு நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது..? 
    
சரி..சூர்யா என்ன யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் தீவிரவாதியா அல்லது அவரை யாரும் நெருங்க முடியாதா...? அவரைக் கொல் எதுக்கு இலங்கையிலிருந்து சிங்களவனைக் கொண்டு வரணும். அதிலும் மறைந்திருந்து சுடவேண்டுமா...? அப்படிக்கூட ஒழுங்கா சுட்டுச்சா அந்த சிங்கள நாயி...? அதுவும் இல்லை. ஒருவேளை இதன்மூலம் சிங்களப் பிரச்னைக்கு ஏதாவது தீர்வு சொல்ல வருகிறாரா இயக்குனர்.ஒரு எழவும் புரியல...ஆனா பாருங்க இவரையும் பைனாகுலர் வச்சிதான் சூர்யா கண்டுபிடிக்கிறார்.

டானியை கைது செய்வதற்காக சவுத்ஆப்ரிக்கா புறப்படுகிறார் சூர்யா.அதற்கு முன் ஆபரேசன் ' D ' கேன்சல் செய்யப்பட, அந்த லெட்டர் வாங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் புறப்பட்டு விடுகிறார்.பிறகு அவர் ஆப்ரிக்கா சென்றது தெரியவர அப்படியே விட்டுவிட்டு இந்தியா திரும்ப கட்டாயப் படுத்தப் படுகிறார். ஏனென்றால் டானி அவ்வளவு பவர்புல் ஆசாமியாம். சென்ட்ரல் மினிஸ்டர் வரையில் லிங்க் இருக்கிறது. இதெல்லாம் சரி...டானியை வெளுத்தெடுத்த அடுத்த காட்சியிலேயே தூத்துக்குடி சிறையில் அடைக்கப் படுவதாகக் காட்டப் படுகிறதே... ஆபரேசன் கேன்சல் செய்திருக்கையில்  எல்லோர் கண்ணிலேயும் விரலை விட்டு ஆட்டிவிட்டு 'ஜீபூம்பா...' பண்ணி தூத்துக்குடிக்கு கொண்டு வந்திருப்பாரோ...?

இப்படி படம் நெடுக லாஜிக்-ல் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுகிறது ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதை.. ஒரு படத்தில் பன்ச் டயலாக் இருக்கலாம்.படமே பன்ச் டயலாக்காக இருந்தால் எப்படி இருக்கும்...? அப்படித்தான் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார் சூர்யா.. 'வயசுப் பசங்களுக்கு பிகர் வர்றதும் வயசான பிறகு சுகர் வர்றதும் சகஜம் தானே' போன்ற சந்தானத்தின் பன்ச் வேறு..விவேக்கை விட சந்தானத்திற்கு நிறைய காட்சிகள்.
 
 
பள்ளியில் பிரேயரில் தேசியகீதம் பாடும்போது லோக்கல் ரவுடிகள் 'யாருடா என் புள்ளையை அடிச்சது' ன்னு ஆயுதங்களுடன்  உள்ளே வர, தேசியகீதம் முடியும் வரையில் விறைப்பாக நின்றுவிட்டு பிறகு பின்னி யெடுக்கிறார் சூர்யா.அவர் அடித்ததை விட, கடைசியில் பன்ச் டயலாக் பேசும் போதுதான் அடிவாங்கியவன் வலியில் துடிப்பதை நம்மால் உணரமுடிகிறது. 'த்தா... பன்ச் டயலாக்கை ஆரம்பத்திலேயே பேசியிருந்தா அப்பவே வந்த வழியே ஓடிப்போயிருப்போமடா..' என்கிற அவர்களின் மைண்ட் வாய்ஸ் நமக்கு தெளிவாக கேட்கிறது.

பார்ட்-2 வின் கண்டினியுடிக்காக விவேக்,நாசர்,ராதாரவி,மனோரமா,அனுஷ்கா,,,என பழைய ஆட்கள் இதிலும் தொடர்ந்தாலும் அனுஷ்கா மட்டும் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த தக்காளிபோல் ஃபிர
ஷாக இருக்கிறார்...அவர் தங்கையாக வரும் பிரியாவும் அப்படியே...ஹி..ஹி..

படத்தில் கேமராமேனின் உழைப்பு மட்டும் பிரமாண்டமாகத் தெரிகிறது. இசை DSP என்கிறார்கள். எந்தப் பாட்டிலும் தெரியவில்லை.பின்னணி இசையைவிட கர்ர்ர்..புர்ர்ர் என கார் கிரீச்சிடும் சவு
ண்ட் படம் நெடுக காதைக் கிழிக்கிறது. 

இரண்டரை மணிநேரம் ஒரு ரசிகனை தியேட்டரின் சீட்டில் கட்டிப்போட வைப்பதே சமகாலத்திய சினிமாவில் ஒரு சவாலான விசயமாக இருக்கையில்,அந்த சவாலை வென்றேடுத்திருக்கிறது சிங்கம் -2 என்றே சொல்லலாம். 

படத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்ட பிறகு வந்த அனைத்து நக்கல் நையாண்டிகளும் தற்போது காணவில்லை. ஜெட் வேகத்தில் சீறும் திரைக்கதையில்அங்கங்கே தெரியும் லாஜிக் ஓட்டைகள் சூர்யாவின் பைனாகுலரில் நோட்டமிட்டால் மட்டுமே புலப்படும் என்பதால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் சூர்யாவுக்கு இதுவும் ஒரு வெற்றிப்படம்தான்.

 சிங்கம்- ஒரு தூத்துக்குடி (துரை)சிங்கத்தின் வேட்டை..