Saturday 1 August 2015

கலாம் ஏற்படுத்திய கலகம்...



ரண்டு நாட்களாக பேஸ்புக்கை திறந்தாலே ஒரே எரிச்சல். அதையும் மீறி அங்கிருந்திருந்தால் மூளை குழம்பி போய் ஸ்ட்ரைட்டா கீழ்பாக்கத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு நானே போயி அட்மிட் ஆகிடும் நிலை வந்திருக்கும்.

ஒரேயொரு இறப்பு... ஒரு தனி மனிதனின் மறைவு... எத்தனை எத்தனை மனிதர்களின் நிறங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது..! எத்தனைக் குபீர் போராளிகளை இணையத்தில் சந்திக்க வேண்டியுள்ளது...!

நேற்று வரைக்கும் கூடங்குளம் பிரச்சனைக்காக அப்துல்கலாமை கழுவி ஊற்றிய ஒரு குரூப், இப்போது அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்த அவர் வரவில்லை.. இவர் வரவில்லை என திட்டிக் கொண்டிருக்கிறது. (அவர்கள் வருவது இருக்கட்டும்.. முதல்ல நீ போனாயா ..?)

இன்னொரு பக்கம் மெழுகுவர்த்தி குரூப். அவரொரு கார்பரேட் கைக்கூலி, அணு உலை ஆதரவாளர். ஆதலால் கலாமின் இறப்பு எங்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று வழக்கமான புலம்பல்களை அவிழ்த்து விடுகிறது. (ஏண்டா டேய்.. ஒரு அணு விஞ்ஞானி மக்களுக்கு அணு உலை குறித்த பயத்தை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு பயமுறுத்துவா செய்வார்..? )

சந்தடி சாக்குல நம்ம காமெடி டம்பளர் பாய்ஸ், ' ஈழத்தில் உறவுகள் செத்து மடிந்த பொழுது அமைதியாக இருந்தாயே' என்று எழவு வீட்டில் இனப்பீரிடலை காண்பிக்கிறது . அந்த நேரத்தில் அப்துல்கலாம் அவர்கள் பதவியில் இல்லை என்கிற விஷயம் கூட அந்த அரைவேக்காடுகளுக்கு தெரியாது. அப்படி சிந்திக்கும் அளவுக்கு அவைகளுக்கு அறிவும் கிடையாது.

இவர்களையெல்லாம் விட மிகவும் ஆபத்தானவர்கள் 'குபீர் போராளிகள்'. பொதுவாக இவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். சமூக அக்கறை எந்தக் கடையில் கிடைக்கும் என்பார்கள். ஆனால் யாராவது இறந்து போனாலோ அல்லது ஏதாவது பரபரப்பான செய்தி வந்தாலோ போதும்,குபீர் போராளிகளாக மாறிவிடுவார்கள். உலகத்தையே உருட்டிப் போட கிளம்பி விடுவார்கள். இவர்களுக்கு சுயபுத்தி சுத்தமாகக் கிடையாது. எவனாவது எதையாவது கிளப்பிவிட்டால் அதைப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தத் தகவல் உண்மையானதா, நம்பகத்தன்மையானதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். கையில் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராயிடு ஃபோன் இருந்தால் போதும்.. காசா பணமா... தட்டிவிடு share -ஐ . நிமிஷத்துக்கு ஒன்றாக வதவதவென வரும்.

மிழகத்தைப் பொருத்தவரையில் 'சம்பவம்' என்று ஒன்று நடந்தால் முதலில் உருள்வது கலைஞரின் தலை என்பது எழுதப் படாத நியதி. அதுதானே தமிழ் இணையவாசிகளின் தலையாய முதற்கடமை. அப்படி செய்யா விட்டால் அவர்களின் குபீர் போராட்டம் நிறைவைப் பெறாமல் போய்விடும் அல்லவா..!.

அப்துல்கலாம் மரணத்திலும் முதல் அம்பு கலைஞர் மீதுதான் எய்யப்பட்டது. 'கலாம் என்றால் கலகம்' என்று எப்போதோ கலைஞர் சொன்னதைத் தற்போது மேற்கோள் காட்டி 'அவரை செருப்பால் அடியுங்கள் ' என்கிறான் கல்யாணராமன் என்கிற காவி நாய். அதைத்தொடர்ந்து அந்நிலைத்தகவல் பேஸ்புக்கில் நிறைய பகிரச்செய்து, தனது கலைஞர் எதிர்ப்பு அரிப்பைத் தீர்த்துக் கொண்டது சில அரைவேக்காட்டு முண்டங்கள்..

கலைஞர் எந்த மாதிரியான சூழலில், எதற்காக அப்படி சொன்னார் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு அறிவும் தெளிவும் அவர்களுக்கு இருந்திருந்தால் இங்கே எதற்கு குப்பைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..? . வார்டன் என்றால் அடிப்போம். கலைஞர் என்றால் கலாய்ப்போம். அவ்வளவுதான்.

இந்திய அரசியலில் ராஜேந்திரபிரசாத்துக் குப் பிறகு ஒருவர் இருமுறை ஜனாதிபதி- யாகும் நடைமுறை முடிந்தவரை தவிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தியத் திருநாட்டில் ரப்பர் ஸ்டாம்ப் வேலை செய்ய ஆட்களுக்கா பஞ்சம்..!. அப்துல் கலாம் அவர்கள் தனது பதவிகாலம் முடியும் முன்பே தனக்கு மீண்டும் போட்டியிட ஆர்வமில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். சந்திரபாபு நாயுடு அப்போது விடுத்த அழைப்பையும் நிராகரித்து விட்டார். காரணம்; கலாம் ஓய்வை விருப்பினார். அரசியல் அவரது தொழிலல்ல. ஆதலால் தனது புனிதமான ஆசிரியப் பணியை மீண்டும் தொடர விரும்பினார்.

அந்த சமயத்தில், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பிரதிபா பாட்டிலை  ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அதை ஆமோதிக்க, சுலபமாக வென்று நாட்டின் பன்னிரெண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் பிரதிபா. அதன் பின்பு நடந்த 2012 தேர்தலில் மத்தியில் பலமிக்க கூட்டணியாக இருந்த காங்கிரஸ், தமது வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை முன்நிறுத்தியது.

பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன்தான் சிக்கலே எழுகிறது.  அதுவரை அமைதியாக இருந்த மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தின் அரசியல் எதிரியான பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் அப்துல் கலாம் பெயரைப் பரிந்துரைக்கிறார். அது அப்துல் கலாம் மீது கொண்ட அபிப்பிராயத்தால் அல்ல, பிரணாப் மீது கொண்ட வெறுப்பினால். அதற்கு மம்தா பயன்படுத்திய பகடைக்காய்தான் அப்துல்கலாம்.

ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப்பை தேர்ந்தெடுத்து, அதை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் முன்மொழிந்திருந்த நிலையில், மம்தாவின் அறிவிப்பு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்துல்கலாம் தான் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தால், அதை வழிமொழியும் முதல் கட்சியாக தி.மு.க இருந்திருக்கும். ஆனால் மிகப் பெரிய கட்சியான காங்கிரசே பிரணாப்பை முன் நிறுத்திய பிறகு, அதை எதிர்த்து கலாமை திமுக ஆதரித்தாலும் கலாம் படு தோல்வியைத்தான் தழுவியிருப்பார்.

இப்படியொரு சூழலில், 'அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் நான் தேர்தலில் நிற்கத் தயார்' என்று கலாம் அறிவிக்கிறார். நிச்சயம் அவருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்காது. அப்படியானால் அப்துல் கலாமின் தோல்வி உறுதியானதுதான். அப்படியிருக்க எதற்காக இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டு புதுக்குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்...?  அப்படி நிற்கும் ஆர்வம் இருந்தால் முன் கூட்டியே அல்லவா அறிவித்திருக்க வேண்டும்... இக்குழப்பத்தைப் பற்றி செய்தியாளர்கள் கலைஞரிடம் கேட்டபோதுதான் தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் 'கலாம் என்றால் கலகம் என்றொரு பொருளும் இருக்கிறது' என்றார். இது அவர்மீது கொண்ட வெறுப்பால் சொல்லவில்லை. அப்போதிருந்த சூழலை விளக்கவே அப்படி சொன்னார்..

ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மையெல்லாம் இந்த குபீர் போராளிகளுக்கு முக்கியமில்லை. கலைஞரை கழுவி ஊற்றணும். அதற்கு ஏதாவதொரு காரணம் கிடைக்கணும். அப்படி கிடைத்த காரணம்தான் 'கலாம் என்றால் கலகம்' .

லைஞரை அடுத்து இந்த குபீர் போராளிகளின் தாக்குதலுக்கு இலக்கானது மனுஷ்யபுத்திரன்.

மனுஷ்யபுத்திரன் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ' அப்துல்கலாம் ஒரு Scientist அல்ல. அவர் ஒரு Technocrat ' என்று சொன்னார்.

அதாவது அவரை 'விஞ்ஞானி' என்பதைவிட 'சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்' என்றுதான் சொல்ல வேண்டும் என்பது அவரது வாதம். இதில் கலாம் அவர்களை எந்த விதத்திலும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை.


ஆனால் டெக்னோக்ராட் என்கிற வார்த்தையை அறியாத எவனோ அதை 'ஸ்கூட்டர் மெக்கானிக்' என தவறாக புரிந்துகொண்டு இணையத்தில் அவருக்கு எதிரான தாக்குதலுக்கு விதையை தூவிவிட்டு போயிருக்கிறான்..
அதைப் பிடித்துக் கொண்டு அப்துல்கலாமை ஸ்கூட்டர் மெக்கானிக் என்று சொல்லிவிட்டார் என்று ஒரு நாள் முழுவதும் அவரை கழுவி ஊற்றினார்கள். அவர்கள் தூவிய விதைகள் மரமாகி தற்போது இப்படி வளர்ந்து நிற்கிறது... 

தைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால் சுருட்டை முடி வச்சிருந்தவன் எல்லாம் சுருளிராஜன் என்கிற மாதிரி அப்துல் கலாமின் சிகை அலங்காரத் தோற்றத்தை ஒத்த எந்தப் புகைப்படம் கிடைத்தாலும், 'இது மாமேதை அப்துல் கலாமின் இளமை காலத்து அரிய புகைப்படம் ' என்கிற புரளியை ஒரு குரூப் பரப்பிக் கொண்டிருந்தது. அதை நமது குபீர் போராளிகள் உணர்ச்சிப் பெருக்கெடுத்துப் பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

பத்து வயது கலாமின் புகைப்படம் என்று ஒரு துல்லியமான வண்ணப் புகைப்படம் ஒன்று நிறைய பேரால் இணையத்தில் பகிரப்பட்டது. 1931-ல் கலாம் பிறந்தார். அப்படியானால் அப்புகைப்படம் 1940 வாக்கில் எடுக்கப் பட்டதாக இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் ஏதய்யா இவ்வளவு துல்லியமான வண்ணப் புகைப்படக் கருவி..? 

கலாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது எடுக்கப்பட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் கிடைத்தது. அது 1953-ல் எடுக்கப்பட்டது. அதுவே பழைய கருப்பு வெள்ளையில் இருக்கும்போது இவர்களுக்கு 10 வயது வண்ணப் புகைப்படம் எங்கிருந்து கிடைத்தது..? தவிரவும் கல்லூரியில் படிக்கும்போதே ஒட்ட வெட்டிய சிகையலங்காரத்தோடு இருக்கும் அப்துல் கலாம் பள்ளிப் பருவத்திலா இப்படி இருந்திருப்பார்..?

ஒருவேளை டைம் மெசினில் பயணம் செய்து அப்துல் கலாம் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திற்கு சென்று அப்புகைப்படத்தை எடுத்து வந்திருப்பார்களோ..! சத்தியமாக உங்களையெல்லாம் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காதுய்யா...

ன்னும் நிறைய கூத்துக்கள்  நடந்தது..

# அப்துல் கலாம் பிறந்த தினத்தை அகில உலக மாணவர்கள்  தினமாக ஐ.நா அறிவித்தது. 

# அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.. (இன்னும் சில பேர் பிரிட்டன், ஆஸ்திரேலியா , கனடா என புருடா விட்டுக் கொண்டிருந்தனர்.)

# அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாமுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் வருகிறார்.

 # இத்தாலி நாட்டில் பிறந்த சோனியாவை இந்திய பிரதமர் ஆகாமல் தடுத்ததே அப்துல்கலாம் தான்..

 # வானத்தில் ஒரு அபூர்வ உருவம் தோன்றி கலாமுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உடனே மறைந்துவிட்டது.

# கலாம் 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்ததாக சொல்லப்படுவது பொய். அது குறித்த எந்த கானொளியும் இன்னும் வரவில்லை. அப்படியானால் கலாம் கொலை செய்யப்பட்டாரா...?

இன்னும் நிறைய புதுப்புது தகவலை கண்டுபிடித்து ஒரு குரூப் பரப்பிக் கொண்டிருக்க, அத்தனை செய்திகளும் பல்லாயிரக்கணக்கில் இந்த குபீர் போராளிகளால் பேஸ்புக்கில் பகிரப்பட்டது.

வை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளியது கேப்டனின் அழுகை. அப்துல் கலாமின் மரணத்தில் சிக்சர் அடித்த ஒரே ஆள் நம்ம கேப்டன்தான். அதற்கு முன்பு வரை இணையவாசிகளால் சகட்டுமேனிக்கு கலாய்க்கப் பட்டவர், அதே வாய்களால் 'பச்ச மண்ணுய்யா நம்ம கேப்டன்..' என அச்சம்பவத்துக்குப் பிறகு சொல்ல வைத்து விட்டார். அதுசரி... கேப்டனுக்கும் கலாமுக்கும் அப்படி என்ன பெரிய பிணைப்பு ..?  

கேப்டன் டெல்லி சென்று மன்மோகன் சிங்கையும், மோடியையும் தான் சந்தித்து விட்டு வந்திருக்காரே தவிர, இங்கிருக்கும் அப்துல் கலாமை ஒருமுறையாவது சந்தித்து சமுதாய முன்னேற்றத்தைப் பற்றி ஆலோசனை செய்திருக்காரா ..?.. இந்தியா வல்லரசு ஆகணும் என தனது திரைப்படங்களில் காட்சிக்கு ஒரு முறை சொல்லும் கேப்டன், உண்மையிலேயே அதற்கு செயல்வடிவம் கொடுத்த அப்துல்கலாமை சந்தித்து ஒருமுறையாவது பாராட்டியிருப்பாரா..?

" கருப்பு நிறமென்பதால் ஆரம்பத்தில் கோடம்பாக்கத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது, ' நானிருக்கிறேன் நண்பா..  உன்னை ஹீரோவாக்கிக் காட்டுகிறேன்.. ' என்று சூளுரைத்த 'அந்த ஆருயிர் நண்பர்..."

"ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல், சொந்த ஊருக்கே திரும்பிப் போய் அரிசிமில் வேலையைப் பார்க்கப் போகிறேன் என்று மதுரைக்கு ரயிலேற கிளம்பிய கேப்டனை தடுத்து நிறுத்தி, மீண்டும் பிஸியான ஹீரோவாக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு, வாய்ப்புக்காக ஒவ்வொரு கம்பெனியின் படியேறி மறுவாழ்வு அளித்த அந்த ஆருயிர் நண்பர்...."

"திருமணம் செய்துகொண்டால் நட்பில் விரிசல் வந்துவிடும் என்பதால் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் நண்பனுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த அந்த ஆருயிர் நண்பர்..."

"ஏற்கனவே விவாகரத்து வாங்கின, உடன் நடிக்கும் எல்லா நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த அந்த விவகார நடிகையுடன் காதலில் விழுந்தபொழுது, அவரிடமிருந்து பிரித்து, பிரேமலதாவை பெண் பார்த்து மணமுடித்து அழகு பார்த்த அந்த ஆருயிர் நண்பர்.... ,"

"அந்த ஆருயிர் நண்பர்" கண்ணாடிப் பெட்டிக்குள் அடக்கமாகிக் கிடந்த பொழுது, வரும் அழுகையை அடக்க முடியாமல் உடைந்து அழுவார் கேப்டன் என நினைத்திருந்தேன். ஆனால் அண்ணியாரோடு அமைதியாக அஞ்சலி செலுத்திவிட்டு கடமை முடிந்தது என்று கிளம்பிப் போனார் கேப்டன். அப்படிப்பட்ட கேப்டனும், அண்ணியாரும் கலாமின் உடலைப் பார்த்து கலங்கி அழுதார்கள் என்பதுதான் எங்கேயோ இடிக்கிறது....! அதுசரி, ஒரு நடிகனால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அழுகையைக் கூடவா கட்டுப்படுத்த முடியாது..?

துபோன்ற கொடுமைகள் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பார்த்துவிட்டு எப்படி சுலபமாகக் கடந்து செல்ல முடியும்...? "இரண்டு நாட்களாக பேஸ்புக்கை திறந்தாலே ஒரே எரிச்சல்" என்று முதலில் எழுதியதற்கு இதுதான் காரணம்.

எது எப்படியோ... 'கலாம் என்றால் கலகம் என்றொரு அர்த்தம் இருக்கிறது...' என்று கலைஞர் சொன்னது கலாமின் இறுதிச்சடங்கிலும் பொய்க்கவில்லை என்பதுதான் இங்கே ஆச்சர்யம்..!

29 comments:

  1. எரிச்சல், கோபம், அழுகை, சிரிப்பு என அனைத்தும் ஒருவார காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம்... http://amudhavan.blogspot.com/2015/07/blog-post_30.html - இந்தப் பதிவையும் நேரம் இருப்பின் வாசிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD கண்டிப்பாக வாசிக்கிறேன்..

      Delete
  2. ஸ்ஸப்ப்பாஆ படிக்கவே முடியல...
    பாவம்தான் நீங்க சார்
    உங்களுக்கு ஏற்பட்ட எரிச்சல் சரிதான்!
    கூல்:-)

    ReplyDelete
    Replies
    1. ஓவர் அலம்பல் விட்டு கலாம் மீது வெறுப்பு வருமளவுக்கு பில்டப் கொடுத்துவிட்டார்கள்..

      Delete
  3. Vandhuttan Kattumarathoda Sombu

    ReplyDelete
    Replies
    1. ஒட்டுமொத்த பதிவுல உனக்கு இதுமட்டும்தான் கண்ணுக்கு தெரிந்ததா ..?

      Delete
  4. {சந்தடி சாக்குல நம்ம காமெடி டம்பளர் பாய்ஸ், ' ஈழத்தில் உறவுகள் செத்து மடிந்த பொழுது அமைதியாக இருந்தாயே' என்று எழவு வீட்டில் இனப்பீரிடலை காண்பிக்கிறது . அந்த நேரத்தில் அப்துல்கலாம் அவர்கள் பதவியில் இல்லை என்கிற விஷயம் கூட அந்த அரைவேக்காடுகளுக்கு தெரியாது.} பதவியில் இல்லாதபோது கருத்துகளைச் சொல்லக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? இந்த அரைவேக்காட்டுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. சில டம்ளர்கள் அந்த நேரத்தில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தார் என்பது போல எழுதியிருந்தார்கள்.. அந்த அரைவேக்காடுகளை விட்டுவிடுங்கள்.

      //பதவியில் இல்லாதபோது கருத்துகளைச் சொல்லக்கூடாது // அவர் என்ன மாதிரியான கருத்துக்களை சொல்லவேண்டும் என எதிர்பார்கிறீர்கள்..?

      Delete

    2. முதலில் ஒன்றைத் தெளிவு பெறுங்கள்.. கலாம் அரசியல்வாதி கிடையாது. அவர் இந்திய இறையாண்மையை மதிக்கும் அரசாங்கத்தின் ஊழியர். இன்னும் சொல்லப்போனால் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய தொழில்நுட்ப ரகசியங்களையும் அணுஆயுதங்கள் தொடர்பான தகவல்களையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்.. அப்படியிருப்பவரிடமிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட நாம் வாங்க முடியாது.

      அப்படியானால் மனிதாபிமான அடிப்படையில் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் குரல்கொடுத்திருக்கலாமே என கேட்கலாம்.. ஈழப் பிரச்சனை என்பது இன்று நேற்று நடக்கும் மனித உரிமை மீறல் கிடையாது.. தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டுமென்றால், அம்மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கும் பிரபாகரனையும் புலிகளையும் முதலில் விமர்சிக்க வேண்டும். 30 ஆண்டு கால ஈழ வரலாற்றில் என்னென்ன அரசியல் யுத்தங்கள் சகோதர யுத்தங்கள் துரோகங்கள் நடந்ததோ அத்தனையும் விமர்சிக்க வேண்டும்..

      வெறும் இலங்கை அரசை மட்டும் அவர் கண்டித்து அறிக்கை விட்டால் அதற்கு பின்னால் எழும் விமர்சனங்களுக்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும். அது அவரது வேலை அல்ல... திரும்பவும் சொல்கிறேன் இலங்கை பிரச்னையை கையில் எடுத்து அரசியல் செய்ய அவர் சீமான், திருமுருககாந்தியல்ல..

      Delete
    3. -------------//கலாம் கருத்துக்கள் சொல்லியிருந்தால் என்ன ஆகும்? அவரை ஃபேஸ்புக்கில் கும்மியடித்து கோமாளியாக ஆக்கியிருப்போம். ஒருநாளும் சோர்வுறாது கடைசிக்கணம் வரை அவர் செய்த பணிகளை செய்யவிடாமல் ஆக்கியிருப்போம்.கலாம் கருத்துச்சொல்லவில்லை என்று சொல்லும் சில்லுண்டிகள் தாங்கள் ஃபேஸ்புக்கில் எல்லாவற்றுக்கும் பொங்கி வெடிப்பதனால் கலாமைவிட ஒருபடி மேலானவர்கள் என்று நம்மிடம் சொல்லவிரும்புகிறார்கள்.//----------------------------- ஜெயமோகன்

      கலாமைப் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைப் படியுங்கள் . தெளிவு கிடைக்கும்( http://www.jeyamohan.in/77432#.Vbw-XPkrZ9u)

      Delete
  5. பதிவும் பின்னூட்டத்திற்கு கொடுத்த
    பதிலும் அருமை.
    நன்றி

    ReplyDelete
  6. கலாமை கருணாநிதி என்ற ஆளுக்கு ஏன் பிடிக்காது?

    ReplyDelete
    Replies
    1. யாரு சொன்னது.. சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. யாருக்குத்தான் இல்லை... கலாம் மறைந்த அன்று கலைஞர் எழுதிய பதிவு..

      இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், "பாரத ரத்னா", மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ‪#‎AbdulKalam‬ அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு, அவருடன் எனக்கிருந்த தொடர்பு பற்றி அடுக்கடுக்கான எண்ணங்கள் எழுந்தன.

      சென்னை - கலைவாணர் அரங்கில் 4-9-2006 அன்று ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் "தொல்காப்பியர் விருது" எனக்கு வழங்கப்பட்ட போது,
      அந்த விருதை எனக்கு வழங்கியவரே அப்துல் கலாம் அவர்கள்தான். அப்போது அவர் ஆற்றிய உரையும், என்னைப் பாராட்டிக்கூறிய வார்த்தைகளும் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை. ஏன் அதற்கு
      முன்பே நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலினை மேதகு அப்துல் கலாம் அவர்கள் படித்து விட்டு, எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார்.

      அது பற்றியும் கலைவாணர் அரங்கில் அவர் பேசும்போது குறிப்பிட்டார். குடந்தையில் நடந்த ஒரு தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலர் மாண்டு மடிந்த போது நான் எழுதிய கவிதை ஒன்றையும் கண்களில் கண்ணீர் மல்கப்
      படித்ததாக எனக்கு எழுதியிருந்தார்.

      அப்துல் கலாம் அவர்களைப் பற்றி நான் 13-6-2002 அன்று எழுதிய கவிதையின் ஒருசில வரிகளை இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

      "கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து
      மடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க;
      மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின்
      மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று!
      அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல்
      அமைதிகாக்கும் கேடயமாய் ஆவதற்கும்
      ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை
      அண்டைநாட்டுத் தூதராக மாறுதற்கும்
      மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு
      மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும்.
      அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே
      அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே
      அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து
      அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும். "

      இத்தகைய உயர்வுக்கும் புகழுக்கும் உரிய அப்துல் கலாம் அவர்களை இந்தியத் திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  7. கடையெல்லாம் எப்படி போகுது?

    ReplyDelete
  8. மிகவும் அருமையான பதிவு! இறந்த மனிதரைக் கூட நிம்மதியாக விடவில்லை முகநூல், வாட்சப் போராளிகள்! பின்னூட்ட பதிலும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  9. கலகம் மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரிந்ததா...
    வேறு எதுவுமே தெரியவில்லையா...
    அதுவம் கலைஞர் சொன்ன மாறி நடந்துடுத்து என்று சொல்லி கட்டுரையை முடித்திருகிறீர்கள்.
    கலகம் செய்வது கலாம் அல்ல தோழர்...

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவு 'கலாம் செய்த கலகம்' இல்லை பாஸ்... கலாம் என்கிற பெயர் ஏற்படுத்திய கலகம். கலாம் என்கிற புனிதர் மறைந்தததால் குபீர் போராளிகளின் மனதில் ஏற்பட்ட கலகம்.

      Delete
  10. கலாம் என்ற மாமனிதர் மறைந்ததும் தோன்றிய குபீர் போராளிகளால் தாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டீர்கள் என்பதை பதிவு சொல்லுது...

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா.. மூளையே குழம்பிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்

      Delete
  11. இரவும் பகலும் நாட்டு முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தித்த கலாமையும் விமர்சிக்கும் சாருநிவேதிதா, மானுஷ்யபுத்திரன் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்!
    தமிழ் மொழியைப் பயிற்று மொழியாய் ஆக்க அவர் ஆக்கபூர்வமாய் எதுவும் செய்யவில்லயாம்!
    குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது அவர்களுக்காகக் குரல் கொடுக்க வில்லையாம்!
    ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லையாம்!
    கூடங்குளத்தில் போராடியவர்களுக்கு எதுவும் செய்யவில்லயாம்!
    இதையெல்லாம் செய்பவன் சராசரி அரசியல்வாதி!
    அவர் அரசியல் வாதியல்லர்!
    முஸ்லீம்களுக்குக் குரல் கொடுத்திருந்தால் அவர் முஸ்லீம் தலைவராகமட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பார்!
    தமிழுக்குப் பரிந்துரைத்திருந்தால் மொழிவெறியனாய் இனம்கானப் பெற்றிருப்பார்!
    ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்திருந்தால் ஈழ்ப்பிரச்சினையை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் எண்ணற்றவர்களில் ஒருவராகியிருப்பார்!
    இவர்களிடமிருந்து விலகித் தனித்தன்மை கொண்ட தன்னலமற்ற ஒருவராக இருந்ததால்தான், அவர் இன்றைய இளைய சமுதாயத்தை உற்சாகப்படுத்தி நாளைய இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்!

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம் .நன்றி

      Delete
  12. சாதாரண மக்களுக்கு கொடுக்கப்படும் இலவசங்களைக் கிண்டலடிக்கும் இவர்களுக்கு, ஜிமெயில், ப்ளாக்கர், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் – எல்லாவற்றிற்கும் கட்டணம் உண்டு என்று அறிவிப்பு வெளியாகட்டும். நாளைக்கே முக்கால்வாசிப் பேர் காணாமல் போய் விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பேக் ஐடியில் வீரத்தைக் காட்டும் இந்த குபீர் போராளிகளின் தொல்லை குறையும்.. மிக்க நன்றி சார்..

      Delete
  13. நல்லதொரு பதிவு. அணு ஆதரவு,கூடங்குளம் என்று பெரியவரை கண்டிக்க ஆரம்பித்து இப்போ இலங்கை தமிழர்கள் போர் என்று காமெடி போகின்றது. உங்க விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்..

      Delete
  14. அப்துல்கலாம் இலங்கை தமிழர்களின் யாழ்பாணத்துக்க வந்து போது போது மிக பெரிய வரவேற்பு கொடுக்கபட்டது.அப்படி இருக்க இலங்கை தமிழரை இங்கே இழுப்பது வேடிக்கை.

    ReplyDelete