Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, 15 January 2016

ரஜினி முருகன்- கதகளி விமர்சனம்


ரஜினி முருகன்...

தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கலுக்கு தீபாவளி சாப்பிடமுடியுமா..? சாப்பிடமுடியாது. ஆனால் கொண்டாடலாம். ரஜினி முருகன் பாருங்கள். சரவெடி வெடித்து பொங்கலுக்கு தீபாவளி கொண்டாடியிருக்- கிறார்கள்.

படம் ஆரம்பித்து சிவா என்ட்ரி ஆன பின்பு அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு காமெடிப் பட்டாசு கொளுத்தி- யிருக்கிறது ரஜினி முருகன் டீம். என்ன செய்வீங்களோ தெரியாது... ஆனால் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை சிரித்தே ஆகவேண்டும் பாஸ் என்று கங்கணம் கட்டி அடித்திருக்கிறார்கள். அதிலும் அந்த வாழைப்பழ காமெடியில் தியேட்டரே அதிர்கிறது.

எப்போதும் சோலோ காமெடியில் சூர மொக்கைப் போடும் சூரி, சிவாவுடன் சேரும்போது மட்டும் பூவோடு சேர்ந்த நாராக மணக்கிறார்.. இருவரும் சேர்ந்து அடிக்கும் கூத்துதான் படத்தின் முக்கிய பிளஸ்.

கீர்த்தி சுரேஷின் அந்த சிரிப்புக்கு தியேட்டரையே எழுதிவைக்கலாம் (ஓனர்தான் ஒத்துக்க மாட்டார்). தமிழில் முதல்படம் போல.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஸ்ரீதிவ்யாவின் இடத்தைக் கண்டிப்பாக காலி செய்துவிடுவார்.

இமான் இசையில் அனைத்து பாடல்களும் தாளம்போட வைக்கின்றன.

வெளிநாட்டில் வசிக்கும் மகன்களை வரவழைக்க இறந்தது போல நடிக்கும் ராஜ்கிரண் வழக்கம்போல கிளாஸ்..! நான் செத்தா எல்லோரும் வந்து பார்ப்பீங்க.. ஆனா நான் எப்படிப்பா உங்களை எல்லாம் பார்க்கிறது என்று அதற்கு விளக்கம் சொல்லும் இடம் நச்...!. " என் பேரனுக்கு தமிழே சொல்லிக் கொடுக்கல... பிறகு என்னைப்பத்தி எங்கே சொல்லியிருக்கப் போறீங்க.." என்று ஆதங்கப்படும் இடம் பளார்..பளார்...

வில்லனாக சமுத்திரக்கனி ஆரம்பத்தில் செம கெத்து காட்டுகிறார். கடைசியில் அவர் காமெடிப் பீஸாகப் போவார் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும் அவர் கொடுக்கும் அலப்பறை ரசிக்க வைக்கிறது.

ஒரு முழுநீள நகைச்சுவையில் இடையிடையே கொஞ்சம் செண்டிமெண்ட், குடும்பப் பாசம், பூர்வீக சொத்து, கொஞ்சம் அடிதடி, கொஞ்சம் கவர்ச்சி, கடைசியில் வில்லனே காமெடியனாக மாறுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் சுந்தர்.சி சொல்லியடிக்கும் சக்சஸ் பார்முலா... அதை அச்சு பிசகாமல் செய்திருக்கிறது ரஜினி முருகன்.

படத்தில் கதையென்று எதுவும் இல்லாவிட்டாலும் இரண்டரை மணிநேரம் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்து ரசிகர்களைப் பரவசப் படுத்தியிருக்கிறார்கள்.


கதகளி....

சம்பாவை போட்டது யாரு...?  இதுதான் கதகளி.

சம்பா கடலூர் மீனவ சங்கத்தலைவர். கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என்று கடலூரையே தன் கட்டுக்குள் வைத்து தனி ராஜ்ஜியம் நடத்தும் தாதா..

சம்பாவை கூலிப்படை ஒன்று ஸ்கெட்ச் போட்டு ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்கிறது. ஏற்கனவே சம்பாவுடன் முன் விரோதத்தில் இருக்கும் விஷால் குடும்பத்தின் மீது அந்தக் கொலைப்பழி விழுகிறது. தன் மீது விழுந்த பழியைப் போக்கவும், தன் குடும்பத்தை அந்தக் கும்பலிடமிருந்து காக்கவும் சம்பாவை போட்டது யாரு என்று விஷால் தேடி அலைவதுதான் கதகளி.

முதல் பாதி செம மொக்கை. விஷால்-கேத்தரினா தெரேசா காதல் காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமே இல்லாமல் படத்தை நகர்த்த மட்டுமே பயன்படுகிறது. மெட்ராஸ் படத்தில் 'கலை'யாக வந்து கலக்கியவர் இதில் அசடுவழிகிறார்.

பேஸ்புக் புகழ் கவிக்குயில் கல்பனா அக்கா பாத்திரத்தில் கருணாஸின் மனைவி. கல்பனா அக்காவைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அவரது கேரக்டரும் மொக்கையாகத்தான் தெரியும்.

முன்பாதியில் கோட்டை விட்டவர்கள் பின்பாதியில் கொடியை நட்டுயிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வழக்கமான விறுவிறு விஷால் பார்முலா. சும்மா ஜிவ்வென்று தெறித்து ஓடுகிறது திரைக்கதை. வழக்கமாக மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு காளையாக சீறும் விஷால், இதில் கடலூர் மண்ணில் கதகளி ஆடியிருக்கிறார்.

கடைசியில் சம்பாவை கொன்னது இவர்தான்... இல்லையில்லை அவர்தான்.. அவரும் இல்லை இவர்தான் என்று ஏகப்பட்ட ட்விஸ்ட் வைக்கிறார்கள். அதுவே ஒருவித சலிப்பை எற்படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் நேரம் தியேட்டரில் இருந்தால் சம்பாவை கொன்னது நாம்தான் என்று இன்னொரு ட்விஸ்ட் வைத்துவிடுவார்- களோ என்ற பீதியிலே அடித்துப் பிடித்து வெளியேற வேண்டியதாயிற்று..

முன்பாதி இழுவையை தவிர்த்திருந்தால் இன்னொரு பாண்டிய நாடாக வந்திருக்கும். இருந்தாலும் அலட்டல் இல்லாத அறிமுகத்தோடு, இழுவையான சண்டைக்காட்சிகள், பறக்கும் சுமோ , ஓவர் செண்டிமெண்ட் போன்ற பில்டப்புகள் எதுவும் இல்லாததால் கதகளி பாஸ் ஆகியிருக்கிறது.


பின்குறிப்பு: 

# தாரை தப்பட்டை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் தலை தெறிக்க ஓடுவதாக செய்தி வருகிறது. ராகதேவனின் ஆயிரமாவது படத்திற்கா இந்த நிலைமை..!?

# கெத்து படத்தின் ரிசல்ட்டும் ஒருமுறை பார்க்கலாம் என்கிற ரீதியில்தான் விமர்சனம் வந்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் பொங்கல் ரேஸில் முதலிடத்தில் வருவது இவ்வளவுநாள் ஆறப்போட்டு அடித்த ரஜினி முருகனேதான்....!

Saturday, 14 November 2015

வேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....!



டத்தில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஏற்கனவே பார்த்துப் பார்த்து புளித்துப் போன பாட்சா சாயலில் உள்ள கதைதான். அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார்கள். காமெடி சுத்த மோசம். பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. புதுமைகள் எதுவும் இல்லை. புதிதாக எதுவும் சொல்லவுமில்லை.

ஆனால்......

இரண்டு மணிநேரம் தெறிக்க விட்டிருக்கிறார்கள்...  ரசிகர்களை தெளிய வைத்து தெளிய வைத்து சூடேற்றி அடித்திருக்கிறார்கள். தியேட்டரையே திருவிழாக்கோலமாக்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊக்க மருந்தின் பெயர் அஜித்குமார்.

என்னா ஸ்க்ரீன் பிரஸென்ஸ் ..! இந்த வார்த்தையை கடந்த ஐந்து அஜித் படங்களின் விமர்சனங்களில் அடித்து அடித்து எனது விசைப் பலகையே தேய்ந்துவிட்டது. சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு ஒத்த ஆளாக மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கும் சக்திமான் திறன் அஜித்துக்குத்தான் இருக்கிறது.

அந்த 'பல்க்'கான உடம்பை வைத்து அஜித் பறந்து பறந்து அடிக்கவில்லை. ஆனால் சண்டைக் காட்சியில் பொறி பறக்கிறது. கோபப்படும் பொழுது கண்களில் தெரியும் தீ எரிமலையைவிட உக்கிரமாக இருக்கிறது. அந்த இண்டர்வெல் பிளாக்குக்கு முன்பு வரும் சண்டைக் காட்சிக்காக மட்டும் ஸ்டண்ட் சில்வாவின் கையில் அஜித் தங்கக்காப்பு மாட்ட வேண்டும்.

பெரிய எதிர்பார்ப்பில் போகவில்லை. சிவா- அஜித் - ஸ்டண்ட் சில்வா கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்து நிரூபித்து விட்டார்கள். நிச்சயம் அறிவுஜீவித் தனமான கதையாகவோ அல்லது உலக சினிமாவாகவோ இருக்கப்போவதில்லை. நூறு சதவிகித மசாலா என்டர்டெயின்மென்டாக இருக்கும் என நினைத்துதான் போயிருந்தேன். அதை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறது வேதாளம்.

கரணம் தப்பினாலும் இன்னொரு ஜனா, ரெட் படமாக வேதாளம் வந்திருக்கும். தனிநபர் துதியை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு திரைக்கதை என்கிற மந்திரக்கோலை கையிலெடுத்து மிகத் தந்திரமாக சுழற்றி புகுந்து விளையாடியிருக்கார் இயக்குனர் சிவா. அஜித் ரசிகர்களின் நாடித்துடிப்பை மைக்ரான் அளவு கூட தவறவிடாமல் உள்வாங்கி அவர்களின் யானைப் பசிக்கு சோளக் கொல்லையையே தீனியாக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமா ஹீரோயிசத்தை பாட்சாவுக்கு முன், பாட்சாவுக்கு பின் என வகைப்படுத்தலாம். பாட்சாவுக்கு முன்பு பெரும்பாலும் வில்லன்கள்தான் ரவுடி. அவர்களை அடக்கி வெல்லும் இடத்தில்தான் தமிழ் சினிமா ஹீரோக்கள் இருப்பார்கள். பாட்சாவுக்குப் பின்புதான் கல்லுக்குள் ஈரம் போல ரவுடிக்குள்ளும் ஒரு பாசமான மென்மையான ஃபிளாஷ்பேக் இருக்கும் என்கிற புது ட்ரென்ட் உருவானது.  அந்த வகைமைக்குள் வேதாளமும், ஏய் படமும் வருமே ஒழிய, எந்தவிதத்திலும் வேதாளம் பாட்சா , ஏய் படத்தின் ரீமேக் என்று சொல்லிவிட முடியாது.

தல-க்கு அடுத்து நினைவில் நிற்பது லக்ஷ்மி மேனனும் தம்பி ராமையாவும். ஆக்சன் என்கிற அசைவம் திகட்டாமல் இருக்க, கொஞ்சம் சைவ செண்டிமெண்ட்டாக தங்கச்சி மற்றும் பார்வை குறைபாடுடைய  அவளது பெற்றோர்கள் என்கிற பாத்திரங்களை உள் நுழைத்திருக்கிறார் இயக்குனர். கதையின் ஜீவனே இவர்கள்தான். ஒரு ஃபேமிலி என்டர்டெயினராகவும் வேதாளம் விஸ்வரூபமெடுத்து நிற்பதற்கு இதுவும் காரணம்.

வேதாளம் படத்தின் மிகப்பெரிய நெருடல் காமெடி. கடந்த ஒரு வருடமாக சூரி நடிக்கும் படங்களின் விமர்சனம் எழுதும்பொழுது தொடர்ந்து புலம்பித் தீர்த்திருக்கிறேன். சூரி எல்லாம் சோலோ காமெடியனாக போடும் அளவுக்கு 'வொர்த்' கிடையாது என்று. காமெடி நடிகர்களுக்கு வாய்ஸ் மாடுலேஷன் மிக முக்கியம். டைமிங் சென்ஸ் அதைவிட முக்கியம். இயக்குனர் சொல்வதை மட்டும் செய்யாமல் சொந்த சரக்கையும் அவ்வப்போது அவிழ்த்து விடவேண்டும். ஆனால் இது எதுவுமே சுட்டுபோட்டாலும் வராத சூரி, வையாபுரி அளவுக்குக் கூட வொர்த் கிடையாது. சந்தானமும் வடிவேலும் ஒதுங்கிப் போனதால் இங்கே வண்டி ஓடுகிறது. சூரிக்குப் பதில் சந்தானமோ விவேக்கோ நடித்திருந்தால் முதல் முக்கால்மணி நேரம் இவ்வளவு தொய்வு விழுந்திருக்காது.

அடுத்து ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கா பஞ்சம்..? நல்லவேளை அஜித்தோட டூயட் எதுவும் இல்லை.  இருந்திருந்தா நாங்க தெறிச்சி ஓடியிருப்போம்.

அனிருத் பாடல்களில் ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அதேப்போல் ஒளிப்பதிவும்.

எதை எல்லாம் எதிர்பார்த்து சென்றேனோ அவை எல்லாம் ஓரளவு எமக்குப் படைக்கப்பட்டதால் திருப்தியோடு தியேட்டரிலிருந்து எழுந்து வந்தேன்.

டிஸ்கி.

ஒலக படமாக வந்திருக்கும் தூங்காவனத்தை அடித்து துவைத்துவிட்டு பக்கா மசாலாவாக வந்திருக்கும் வேதாளத்தை எப்படி தூக்கி வைத்து எழுதலாம் என கொதிக்கும் என்னைபோன்ற உலக நாயகனில் உயிர் ரசிகர்களுக்கு, தூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

Tuesday, 10 November 2015

தூங்காவனம் ..(விமர்சனம் )



தாவது ஒரு நைட் கிளப் இருக்கு. அதன் ஓனர் பிரகாஷ் ராஜ். அவர் கமல் மூஞ்சில ஒரு டிச் விடுறாரு. அடுத்ததா கமல், மூக்குல வழியிற ரத்தத்தை நடுவிரல்ல தொட்டு அப்படியே கையை திருப்பி ஆடியன்ஸ் கிட்ட காமிக்கிற சீன் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். சென்ஸார்ல கடுப்பாகி கட் பண்ணிட்டாங்க போல... 

அப்புறம் அதே நைட் கிளப்புல கமலும் திரிஷாவும் கட்டிப்புடிச்சி, உருண்டு புரண்டு, தூக்கி அடிச்சி, பல்டியடிச்சி சண்டைப் போட்டுகிறாங்க.அதுக்கப்புறம் கிஷோரும் கமலும் மாறி மாறி குத்து விட்டுக்கிறாங்க... முதல்ல கமல் சுருண்டு கீழ விழுந்திடுறாரு.. அவர் ஹீரோ என்பதால் திரும்பவும் எழுந்துவந்து ஒரே குத்துல கிஷோர சுருண்டு விழ வச்சிடுராறு..

இந்த கேப்புல ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயற்சி செய்யும் அவ பாய் ஃபிரண்டை  பாத்ரூம்ல வச்சி நங்கு நங்குன்னு போட்டு மிதிச்சி வக்கிறாரு ஹீரோ கமலு. பிறகு அடுத்த சீனிலே பேத்தி வயசு இருக்கிற அந்த பாப்பாவுக்கு ஃபிரெஞ்சு கிஸ் கொடுக்கிறாரு நம்ம ஹீரோ.அந்த பாப்பாவும் வஞ்சனையில்லாம வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுக்குது..( என்ன கருமம்டா இது..)

அப்புறம் கமல் நடந்து போறப்போ ஒருத்தன் மேல இடிச்சிடுறாரு. அப்படினா லாஜிக்படி அவனும் கமல் மூஞ்சியில ஒரு குத்து விட்டுருக்கனுமே..? இல்லாம பின்ன.. ! அப்புறம் லாஜிக் ஓட்டை அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டீங்கனா..

இப்படி படத்துல வர்ற எல்லா கேரக்டரும் கமல்கிட்ட குத்து வாங்குது இல்லனா மிதி வாங்குது. சும்மா வந்துபோற சந்தான பாரதி, ஜெகன், உமா ரியாஸ் கூட..

எதுக்காக இப்படி மாறி மாறி குத்துவிட்டுக்கிறாங்க..? அதன் பின்னணிதான் படத்தில் கதை. இது எல்லாம் நடப்பது ஒரு நாள் இரவில். அதுவும் அந்த நைட் கிளப்பில்..

sleepless night என்கிற ஃபிரெஞ்ச் படத்தை பார்த்தவர்கள் டோமர் சிஸ்லேவுக்குப் பதில் கமலையும், Serge Riaboukine க்கு பதில் பிரகாஷ்ராஜையும்,Joeystarr க்குப் பதில் சம்பத்தையும் , Julien Boisselier  க்குப் பதில் கிஷோரையும் , Lizzie Brocheré க்குப் பதில் திரிஷாவையும் கற்பனை செய்து பார்த்தால் போதும். ஏன்னா , சீன் பை சீன் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.

கதைன்னு பார்தீங்கனா... கமல் ஒரு அன்டர்கவர் போலிஸ் ஆபீசர்...  தனது டிபார்ட்மெண்டில் இருக்கும் ஒரு கருப்பு ஆடைக் கண்டுபிடிக்க அவரும் கடத்தல் செய்வது போல் நாடகம் ஆடுகிறார். போதைப் பொருள் கடத்தல் செய்யும் பிரகாஷ் ராஜுக்கு சொந்தமான 10 கிலோ கோகைனை கமலும் யூகிசேதுவும் சேர்ந்து ஆட்டையை போடுகின்றனர். அதைத் தெரிந்துகொண்ட பிரகாஷ்ராஜ், கமலின் மகனைக் கடத்தி பிளாக் மெயில் செய்கிறார்.

கோகைனை விட மகனே முக்கியம் என முடிவெடுத்து அந்த கோகைன் உள்ள  பையைக் கொடுத்து மகனை மீட்பதற்காக பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான நைட் கிளப்புக்கு செல்கிறார் கமல் .. கமலை சக அதிகாரிகளான திரிஷாவும் கிஷோரும் பின் தொடர்ந்து அந்த கோகைன் அடங்கிய பையை கமலுக்குத் தெரியாமல் ஆட்டையை போடுகின்றனர்.

கோகைன் கடத்தல் கும்பலின் தலைவனான சம்பத், 'பேக் ' எங்கே என்று பிரகாஷ் ராஜை டார்ச்சர் பண்ண, கோகைன் கொடு... இல்லனா உன் பிள்ளையை கொன்று விடுவேன் என்று பிரகாஷ்ராஜ் கமலை மிரட்ட, தொலைந்து போன கோகைனை கமல் அந்த நைட் கிளப்புக்குள் தேட, அவரை திரிஷாவும் கிஷோரும் பின் தொடர .. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் பிபியை எகிற விட்டிருக்கிறார்கள்.

கமலுக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை.. தன் மகன் கடத்தப்பட்ட செய்தி கேட்டவுடன் முகத்தில் அதிர்ச்சியை அவ்வளவாக காட்டாததால் நமக்கும் பெரிய வருத்தமும் ஒட்டுதலும் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் கமலும் அவரது மகனும் தங்களது அன்பை  ஃபோனில் பரிமாறிக்கொள்ளும் அந்தக் காட்சி அழுத்தம் இல்லாமல் போய்விடுகிறது.

பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர்  மூவருமே நடிப்புத் திமிங்கிலங்கள். இவர்களுக்கு நீந்தவா சொல்லிக் கொடுக்கவேண்டும்...? திரிஷாவுக்கு போலிஸ் ஆபிஷருக்கான மிடுக்கு அப்படியே இருக்கிறது.. ஆனால் கமலுடன் அவர் போடும் 'கட்டிப்புடி' சண்டை தமிழ் சினிமாவுக்கு ஒத்துவருமா என்பது தெரியவில்லை.

மகனைக் காணாமல் தவிக்கும் அதே அம்மாவின் பாத்திரம் ஆஷா சரத்- க்கு..  பாபநாசம் படத்தில் வரும் இரண்டு வசனங்களை இதிலும் பேசிவிட்டு போகிறார்.

ஸ்லீப்லெஸ் நைட் படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் பல வசனங்களும் அப்படியே வருவது படத்தின் முக்கிய மைனஸ். ஒருவேளை மாற்றி எடுத்திருந்தால் இன்னமும் கேவலமாக போயிருக்கும் என நினைத்திருக்கக்கூடும். படத்தில் மைய இழையே போலிஸ் அதிகாரியின் மகனைக் கடத்தும் நிகழ்வுதான். அதை இன்னும் அழுத்தமாக, கொஞ்சம் உணர்ச்சிகரமாக  சொல்லியிருக்கலாம்..  யாரை பார்த்தாலும் ஒன்னு மூஞ்சியில குத்துறது.. இல்லனா அடியில உதைக்கிறது. இதெல்லாம் புதுமையாக தெரியவில்லை. பொறுமையை சோதிக்கிறது.

ஆனால் இதையெல்லாம் மீறி, நம்மை இரண்டு மணிநேரம் தியேட்டரில் கட்டிப்போடுகிறது இதன் விறுவிறுப்பான திரைக்கதை. டைட்டிலில் திரைக்கதை கமல்ஹாசன் எனப் போடுகிறார்கள்.. சீன் பை சீன் காப்பியடித்துவிட்டு எதற்கு இந்த டைட்டில்..?

டைட்டிலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வரும்போது மைக்ரோ செகண்டில் எதோ ஒன்று வந்து செல்கிறது  . அனேகமாக அது sleepless night படத்திற்கான கிரெடிட்டாக இருக்கலாம்.

தூங்காவனம் - ஒரிஜினலைப் பார்க்காதவர்கள் ஒருமுறைப் பார்க்கலாம்..

Monday, 3 August 2015

ஆரஞ்சு மிட்டாய்... -கொஞ்சம் இனிப்பு..நிறைய புளிப்பு


ரஞ்சு மிட்டாய் என்றொரு படம் வந்திருக்கிறது.

ஒரே நேர்கோட்டில் எவ்வித இலக்கும் இல்லாமல் தட்டையாக பயணம் செய்யும் தமிழ் சினிமாவின் வழித்தடத்தை அவ்வப்போது வேறொரு திசை நோக்கி திருப்ப முயற்சிக்கும் வெகு சில படைப்பாளிகளில் விஜய் சேதுபதியும் ஒருவர். அவருக்காகத்தான் இந்தப் படத்தைக் காண சென்றிருந்தேன்.

காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் எந்தக் கலையையும் அடக்கிவிடக் கூடாது. அதன் இலக்கணங்களும் கட்டமைப்பும் அவ்வப்போது உடைக்கப் படவேண்டும். அதன் வெவ்வேறு பரிமாணங்கள் வெளிப்பபட வேண்டும். ஒரு கலையின் பரிணாம வளர்ச்சி அதைப் பொருத்துதான் அமைகிறது.

தமிழ் சினிமாவுக்கும் சில இலக்கணங்கள் இருக்கிறது. சமீபத்திய சில படைப்புகள் அதை உடைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விசயம்தான். காக்கா முட்டை அதில் அசுர வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு புதிய முயற்சிதான் ஆரஞ்சு மிட்டாய்..

இரண்டுமே வணிக சினிமா இல்லை. இரண்டு தலைப்புகளும் விளிம்பு நிலை மக்களுக்கு நன்கு பரிச்சயம். இரண்டிலுமே படத்தின் மையக் கருவுக்கும் படத்தலைப்புக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாது. ஆனால் ஆழமாக யோசித்தால் அவ்விரண்டு படங்களின் தலைப்பு சொல்லும் செய்தி, கதைக் கருவைவிட தத்துவார்த்தமாக இருக்கும்.

காக்கா முட்டை திரைப்படம் ஒரு விவரிக்க முடியாத பரவசத்தைக் கொடுத்தது. அதன் வணிக ரீதியான வெற்றி பல மசாலா படைப்பாளிகளை திரும்பிப் பார்க்கச் செய்தது . அந்த ஜெனரில் வந்திருக்கும் படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..


மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான்.

108 மருத்துவ விரைவு ஊர்தி ஓட்டுநர் ஆறுமுகம் பாலா, அதில் வேலைபார்க்கும் அவசர மருத்துவ சேவகன் ரமேஷ் திலக், வயதான தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி மற்றும் படம் முழுவதும் இவர்களை சுமந்து செல்லும் அந்த TN -31 G3669 ஆம்புலன்ஸ்.. இந்த நான்கு பாத்திரங்களுக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே ஆரஞ்சு மிட்டாய்.

சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாகிடும் என்பார்கள். தனது சாகுற நாளை குத்துமதிப்பாக தெரிந்து கொண்ட ஒரு முதியவர், வாழும் கொஞ்ச நாட்களை ஜாலியாக கடக்க நினைக்கிறார். தனது ஒரே மகனிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் சொந்த கிராமத்தில் தனிமையில் வாழ்கிறார் அந்த முதியவர். தனிமை அளிக்கும் நரக வேதனையிலிருந்து விடுபட அவ்வப்போது 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டு வரவழைத்து அவர்களை ஒரு நாள் முழுக்க டார்ச்சர் செய்வது அவரது பொழுதுபோக்கு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் ஆறுமுக பாலாவும், ரமேஷ் திலக்கும். இம்மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களின் கோர்வைதான் ஆரஞ்சு மிட்டாய்.

ஐம்பது வயதைக் கடந்த முதியவர் தோற்றத்தில் விஜய் சேதுபதி. மஞ்சள் கறைபடிந்த பற்கள், நரைத்த முடி மற்றும் தளர்ந்த கண்களுடன் வாழ்க்கைப் பயணத்தின் கடைசி தருவாயிலில் நிற்கும் ஒரு முதியவரின் தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார். உண்மையிலேயே இப்படி வரும் தில்லு, தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து விஜய் சேதுபதிக்குத்தான் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் எந்த தயவு தாட்சண்யமும் காட்டக் கூடாது.

ஆனால், தமிழ் சினிமாவில் இவர் ஜெயித்த படங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தையே தொட்டிராத நிலையில், சமீபத்திய இவரது படங்கள் எதுவும் பெரிதாக கல்லா கட்டாத நிலையில், இவரின் போட்டியாகப் பேசப்பட்ட சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக நிலைத்துவிட்ட நிலையில், பொழுதுபோக்கான அதே நேரத்தில் கருத்தாழமிக்க வித்தியாசமான படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு இப்படியொரு சோதனை முயற்சி தேவையா..?

வித்தியாசமாக முயன்றது சரிதான்.. ஆனால் அதை நிறைவாகச் செய்திருக்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். சிகைக்கு வெள்ளைநிற டை அடித்து தொப்பையை கூட்டிவிட்டால் முதியவர் தோற்றம் வந்து விடுமா..?  நடையில் தளர்ச்சி இல்லை.. கண்களில் முதிர்ச்சி இல்லை.. ஒரு பெரிய மனுஷன்  செய்யிற வேலையா இது என நிறைய காட்சிகளில் நம்மையே கேட்க வைக்கிறார்.. இந்தியன் படத்தில் கிழவனாக வரும் கமல், கடைசிவரை முழுக்கை சட்டையோடுதான் வருவார். வேட்டியை மடித்துக் கட்டும் காட்சியே அந்தப் படத்தில் இருக்காது. தசைகள் தளர்ந்த தோற்றத்தைக் காண்பிக்கவேண்டும் அல்லது அதை முற்றிலுமாக மறைக்க வேண்டும். ஆனால் இதில் வேட்டியை மடித்துக் கட்டும்போது மாறுவேடம் போட்ட முதியவராகத்தான் விஜய் சேதுபதி தெரிகிறார்..

தோற்றத்தில் கோட்டைவிட்டவர் நடிப்பின் ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல். நள்ளிரவில் குத்தாட்டம் போடுவது... ஆட்டோவில் எவ்வித சலனமுமில்லாமல் திடீரென்று கண்விழித்து அதிர்ச்சி ஏற்படுத்துவது... ஸ்ட்ரெட்ச்சரில் ஜாலியாக உட்கார்ந்துகொண்டு வழியில் செல்பவரிடம் சினிமாவைப் பற்றி பேசுவது... பெற்ற மகனிடமே வீராப்பு காட்டுவது என்று நிறையக் காட்சிகளில் கைதட்டு வாங்குகிறார் விஜய் சேதுபதி.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் மினிபஸ் டிரைவராக வந்த ஆறுமுகம் பாலாவுக்கு இதில் ஆம்புலன்ஸ் டிரைவராக புரமோஷன். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகல.. ரமேஷ் திலக்கின் காதலியை உனக்குப் பிடிக்குமா என விஜய் சேதுபதி கேட்கும்போது ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்க.. செம்ம.. ! நல்ல கேரக்டராக தேர்ந்தெடுத்து நடித்தால் பெரிய காமெடியனாக வலம் வரலாம்.

படத்தில் அத்தனை கேரக்டர்களையும் மிஞ்சுவது ரமேஷ் திலக்தான். ஒரு பக்கம் காதலியிடமிருந்து டார்ச்சர்.. இன்னொரு பக்கம் சூப்பர்வைஷரிடமிருந்து குடைச்சல்.... இதற்கிடையில், கூட இருந்தே குடையும் கைலாசப் பெரியவரையும் சமாளிக்க வேண்டும்.. அத்தனைப் பேரையும் அவரவர் போக்கிலே சென்று சமாளிக்கும் திறமை ஒரு தேர்ந்த நடிகனுக்கு மட்டுமே இருக்கும். உண்மையிலேயே நீ நடிகன்ய்யா..!  ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை. ஒரு இடத்தில் கூட மிகை நடிப்பு இல்லை. ஒருவேளை இந்த வருடத்திற்கான  ' பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் '  விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

ஒரு உணர்வுப் பூர்வமான பத்து நிமிட குறும்படத்திற்கான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸில் ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றினால் எப்படி இருக்கும்...? நாயகன் விஜய் சேதுபதியை லொள்ளு பிடித்த ஆசாமியாக காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். அதை இன்னும் கலகலப்பாக செய்திருக்கலாம். திடீரென்று டென்சன் ஆகிறார். அட்வைஸ் செய்கிறார். அப்புறம் மஞ்சள் பல் தெரிய 'ஈ 'என்கிறார்.

படம் முடிந்து வெளிவரும்போது ஒரு பெண்மணி, ' கடைசியிலாவது கதையிருக்கும்னு நெனச்சிருந்தேன். ஆனா ஒன்னுமேயில்லை ' என்று வேறொருவரிடம் புலம்பிக்கொண்டு வந்தார். அனேகமாக அவர் விஜய் சேதுபதிக்கு ஏதாவது பிளாஸ்பேக் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்திருக்கலாம். சஸ்பென்ஸ், ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நகரும் திரைக்கதைக்கு வலுசேர்க்க அழுத்தமான பிளாஸ்பேக் வைத்திருந்தால் முடிவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

என்னைப் போன்ற காக்கா முட்டைப் பிரியர்களுக்கு வேண்டுமானால் இந்தப் படம் பிடித்திருக்கலாம்.. மற்றவர்களுக்கு..?

ஆரஞ்சு மிட்டாய்... நிறைய புளிப்பு + கொஞ்சம் இனிப்பு..

என் பார்வையில் முதல் இடத்தை ரமேஷ் திலக் தட்டிக்கொண்டு போகிறார்

Monday, 20 July 2015

மாரி.. ஐயாம் வெரி சாரி..!



நேற்றுதான் மாரி பார்த்தேன்..

விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து சிரிப்புக் காட்டிக்கொண்டிருந்த சிவகார்த்தியகேயனை காமெடியனாக அறிமுகப்படுத்தி, பிறகு மாஸ் ஹீரோவாக்கி எப்படி தெருமுக்குல கிடந்த ஆப்பை எடுத்து தெனாவெட்டாக செருகிக் கொண்டாரோ, அதேப்போல் விஜய் டிவி புகழ் ரோபோ சங்கரை திரும்பவும் சோலோ காமெடியனாக வாய்ப்பளித்து அடுத்தாக ஹீரோவாக்கி இன்னொரு ஆப்பையும் செருகிக்கொள்ள தனுஷ் எடுத்திருக்கும் மற்றொரு முயற்சியே இந்த மாரி.

புறாப் பந்தயம்தான் படத்தின் மையம். அதன் மூலம் இரு குழுவுக்குள் நடக்கும் அடிதடியே படத்தின் ஒன் லைன். இதில் சம்மந்தமில்லாமல் சமீபத்திய பரபரப்பு நிகழ்வான செம்மரக் கடத்தலை இடைச்செருகியிருக் கிறார்கள்.

திருவில்லிக்கேணி பகுதியின் ' ஒன் மேன் தாதா ' மாரி. தொழில்- மார்கெட்டில் கட்டாய வசூல் & அடிதடி. பொழுதுபோக்கு- புறாப் பந்தயம். மாரியின் இடத்தைப் பிடிக்க முயல்கிறான் இன்னொரு தாதா ' பேர்ட் ' ரவி. இந்நிலையில் அப்பகுதிக்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன், பேர்ட் ரவியை கையில் போட்டுக் கொண்டு மாரியை ' உள்ளே ' தள்ளி அந்த இடத்தைக் கைப்பற்றுகிறார். இழந்த தனது இடத்தையும் அடையாளத்தையும் திரும்பவும் அடைந்தானா மாரி என்பதே படத்தின் கதை.. 

வித்தியாசமான கதைக்களம் என்று கூட சொல்ல முடியாது. சேவல் சண்டையை மையப்படுத்தி அதன் மூலம் மானிட உணர்வுகளிலிருந்து வெடித்துக் கிளம்பும் வன்மம், ஈகோ, துரோகம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தாக்கங்களை நேர்த்தியாக சொல்லி தேசிய அளவில் பாராட்டை அள்ளிய ஆடுகளம் போல இதில் புறாப் பந்தயத்தைக் கையிலெடுத்திருக்கிறார் தனுஷ்.

தன் உடல் வாகுக்கும் தனக்கிருக்கும் ' நம்ம வீட்டு பிள்ளை ' இமேஜுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாத 'தாதா' கேரக்டர் தனுசுக்கு. ஹீரோ ஒரு லோக்கல் தாதா. அவரோட கெட்டப் எப்படி இருக்கணும்..? தமிழ் சினிமாவில் அவரை எப்படி அடையாளப்படுத்தணும் ..? இது கூடவா தெரியாது. எத்தனை தமிழ் சினிமா பாத்திருக்கோம்.. சின்னக் குழந்தைகிட்ட கேட்டா கூட சொல்லிடுமே..!

சைக்கிள் செயின் சைஸில் கழுத்து நிறைய ஜொலிக்கும் தங்கம், லோக்கல் கூலிங் கிளாஸ், தடதடக்கும் புல்லட், முண்டா பனியன் முக்கால் வாசி தெரியும்படி பட்டன் இல்லாத ஜிகுஜிகு சட்டை, கூட ரெண்டு அல்லக்கைகள்.. இது வெளிப்புற அடையாளம். ரொம்ப கெட்டவன்தான்; ஆனால் கொஞ்சம் நல்லவன், முரடன்தான்; ஆனால் கல்லுக்குள் ஈரம்போல காதல், கருணை இருக்கும், அடிச்சிப் புடுங்கனும்; ஆனா யாருக்கும் தெரியாம படிப்பு செலவுக்கு உதவி பண்ணனும், இதை அப்படியே காப்பி பண்ணி யாரெல்லாம் ரவுடி கெட்டப்புல ஹீரோவா நடிக்கிறாங்களோ அவுங்க மேல பேஸ்ட் பண்ணி போடணும்..

அஜித் மேல பேஸ்ட் பண்ணினா அது ரெட்,  விக்ரம் மேல பண்ணினா ஜெமினி, சிம்புவுக்கு காளை, சூர்யாவுக்கு ஸ்ரீ...இந்த வரிசையில கடைசியா ஒல்லிபிச்சான் தனுஷ் மேல பேஸ்ட் பண்ணியிருக்காங்க.. கூட கொஞ்சம் 'ஹேய்.... செஞ்சிடுவேன்..." என்ற பஞ்ச டயலாக்கை சேர்த்துவிட்டால், முடிந்தது மாரி கெட்டப்.

' செஞ்சிடுவேன்....' என்றால் எங்கூர் பக்கம் வேறொரு அர்த்தம். அதுவும் பொண்ணுங்க கிட்ட சொன்னா தோலை உரிச்சி தொங்க போட்டுடுவாங்க.. 

ஒரு தாதாவுக்குரிய மிரட்டலான குரலும், பாடி லாங்குவேஜும் திரையில் வருவதற்கு நிறையவே மெனக் கெட்டிருக்கிறார் தனுஷ். அவரைப் போன்ற பிறவி நடிகனுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர். ஆனால் அதை மட்டும் வைத்துகொண்டு அவரை ஏரியாவுக்கே தாதா என்று சொன்னால் அந்த ஏரியா பிச்சைக்காரன் கூட நம்பமாட்டான் ஸாரே.. 

ரோபோ ஷங்கருக்கு இவ்ளோ ' வெயிட் ' கொடுத்ததற்கான காரணம் புரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் ரோபோ சங்கரின் 'பன்ச்' சோடுதான் முடிகிறது. பாரில் தண்ணியடிக்கும் காட்சியும், வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் ரோபோ. மற்ற இடங்களில் மொக்கை போடுகிறார்.


காஜல் அகர்வால் நடத்தும் பேஷன் டிசைன் கடையில் தனுஷ் பார்ட்னராக சேர்ந்து அவருக்கு தனுஷும் ரோபோ ஷங்கரும் குடைச்சல் கொடுப்பது போல நிறைய காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குனர். கொடுமை என்னவென்றால் அதெல்லாம் காமெடியாம். ஸ்ஸ்ஸப்பா..முடியில. நிலக்கடல வேர்க்கடல பொட்டுக்கடல..  இதுக்கெல்லாம் எனக்கு சிரிப்பே வரல..

போலீஸே பொறுக்கியாக மாறும் வில்லன் கேரக்டர் விஜய் யேசுதாசுக்கு. வெட்டு சங்கராக 'தில்' காட்ட வேண்டியவர் அமுல் பேபியாக அசடு வழிகிறார். வாட்ட சாட்டமான உடல்வாகுதான். ஆனால் ஒரு பொறுக்கி போலிஸுக்கான விறைப்பு, திமிரு, அதட்டல், மிரட்டல் கொஞ்சமாவது வேண்டாமா..?  

ஓபனிங் சாங்கில் ஆண்ட்ரியா புகழ் அனிருத் என்ட்ரி கொடுக்கிறார். ஹீரோவுடன் டான்ஸ் வேற. சகிக்கல பாஸ்.... 

ஓபனிங் சாங்கில் தனுசின் ஆட்டம், ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ரோபோ, புறாப் பந்தய சுவாரஸ்யம், இறுதி சண்டைக்காட்சி, தனுசுக்கும் காஜல் அகர்வாலுக்கும் டூயட் சாங் இல்லாதது என்று சில பிளஸ்கள் இருந்தாலும், சப்பையான கதைக்கு மொக்கையான திரைக்கதையானதால் இன்னொரு சுள்ளானாக வந்திருக்கிறது இந்த மாரி. 

மாரி..  ஐயாம் வெரி சாரி..! 


Saturday, 11 July 2015

பாகுபலி...பலே பலி..!

ன்னர்கள் காலத்துக் கதை. ஒரு ஊர்ல... என ஆரம்பிக்கலாம் என்றுதான் ஆசை. ஆனால் என்ன செய்வது, கதை மாந்தர்களை மட்டும் சொல்லிவிட்டு மீதியை அப்புறம் சொல்கிறேன் என்றால் எப்படி இருக்கும்...?

நள்ளிரவுக்காட்சி என்பதால் இடைவேளை விடாமல் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். போர்க்கள காட்சிகளு- க்குப் பிறகு சத்தியராஜ் முக்கியமான ட்விஸ்ட் ஒன்றை சொல்கிறார்... அட என்று நிமிர்த்து உட்கார்ந்த நேரத்தில் தியேட்டரில் மின் விளக்கை போட்டார்கள். இண்டர்வல் பிளாக் சூப்பர்ரா இருக்குப்பா என நினைத்துக் கொண்டிருந்தால், படம் முடிந்துவிட்டது கிளம்புங்க என்கிறார்கள்.

கதையில் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்காமல், தத்ரூப காட்சிகளாலும் பிரமிப்பூட்டும் போர்க்கள பிரும்மாண்டத்தினாலும் மட்டுமே என்னைப் போன்ற ஓர் சராசரி சினிமா ரசிகனை திருப்தி படுத்திவிட முடியுமா என்கிற கேள்வி, படம் முடிந்தவுடன் என்னைப் போல் நிறைய பேரின் மனத்துக்குள் எழுந்திருக்- கலாம்.

பொதுவாக இரண்டாம் பாகம் என்று வருகிறபொழுது , முதல் பாகத்தில் ஒரு கதையை சொல்லி , அதன் திரைக்கதையில் நிறைய முடிச்சுகளை வைத்து அதே பாகத்தில் அம்முடிச்சுகளை அவிழ்த்து சுபம் என்று முடிப்பார்கள். இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான ஒரே ஒரு 'லீட்' மட்டும் வைத்து படத்தை ' தொடரும் ' என்றும் முடிப்பார்கள். ஆனால் பாகுபலியில் இடைவேளையோடு எழுந்து வந்தது போன்ற உணர்வு . 

பொதுவாக விமர்சனம் எழுதும்போது கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திவிட்டு, பாதி கதையை சொல்லி, முக்கிய திருப்பங்களை சொல்லாமல் ' மீதியை திரையில் காண்க ' என முடிப்பது தொன்று தொட்டு திரை விமர்சகர்களால் பின்பற்றப்படும் நடைமுறை..  ஆனால் இதில் அவர்கள் சொன்னதே பாதி கதைதான் என்பதால் அதை அப்படியே சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

பாகுபலி பாகம் 1-ன் மையக்கதை " 25 வருடங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு, அடிமைப்போல சிறைவைக்கப் பட்டிருக்கும் ஒரு அரசியை அவளது மகன் மீட்டு வருவது..." . கிட்டத்தட்ட எம்ஜியாரின் அடிமைப்பெண் படத்தின் ஒன் லைன்.

# ரம்யாகிருஷ்ணன் தனது முதுகில் பாய்ந்த அம்பைப் பொருட்படுத்தாமல் ஒரு குழந்தையைக் காப்பற்ற தப்பித்து ஓடுகிறார். இறுதியில் குழந்தையை பழங்குடி மக்களிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறார். அக்குழந்தை வளர்ந்து பிரபாஸ் ஆகிறது.

# நாட்டுக்கு எதிராக போராடும் ஒரு போராளிக்குழுவில் தமன்னா இருக்கிறார். அரசி தேவசேனாவை மீட்க வேண்டும் என்பது அவர்களது லட்சியம்.

# அரண்மனை வளாகத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு அடிமைப் பெண்ணாக முடங்கிக் கிடக்கிறார் அனுஷ்கா. அவரது அடிமைத்தளையை உடைத்தெறிய தைரியமில்லாத குற்ற உணர்ச்சியில் சத்யராஜ்.

இம்மூன்றுக்கும் முடிச்சி போடவேண்டும். பிறகு அம்முடிச்சிகளை அவிழ்க்க வேண்டும். இதுதான் பாகுபலி படத்தின் கதை.

தமன்னா மீது கொண்ட காதலால் யாரென்றே தெரியாமல் அனுஷ்காவை மீட்டு வருகிறார் பிரபாஸ்.. பிறகு அவர்தான் பிரபாஸின் அம்மா எனத் தெரியவருகிறது. அப்படியானால் பிரபாஸ்...?. பிளாஷ்பேக் விரிகிறது...


லைகளுக்கு உச்சியில் மகிழ்மதி என்றொரு தேசம்.

மகேந்திரன் என்னும் பேரரசன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவர் பிங்கால தேவன்(நாசர்) கை ஊனமான மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சிவகாமி தேவி (ரம்யா கிருஷ்ணன்).  இளையவர் மதிகூர்மையும், வீரமும் செறிந்த தீரேந்திரன்(பிரபாஸ்).

அரசரின் மறைவுக்குப் பின்னர் , மூத்தவர் பிங்கால தேவருக்கு கிடைக்க வேண்டிய அரசர் பட்டம், மதிகூர்மை உடைய இளையவர் தீரேந்திரனுக்குக் கிடைக்கிறது. தனது ஊனத்தினால் தான் அரசாட்சி செய்யும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்கிற தவறான சிந்தனை, மூத்தவர் பிங்கால தேவனின் மனதில் வஞ்சத்தை விதைக்கிறது. அரசர் பதவி தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனது வாரிசு அரியணையில் அமரவேண்டும் என்கிற வெறி, நயவஞ்சக சூழ்ச்சி செய்ய அவரைத் தூண்டுகிறது.

இதற்கிடையில் எதிர்பாராத விதமாக அரசர் தீரேந்திரன் இறந்துவிடுகிறார். அந்த நேரத்தில் மூத்தவரின் மனைவி சிவகாமி தேவிக்கும் இளையவரின் மனைவிக்கும் குழந்தை பிறக்கிறது. இரண்டும் ஆண் குழந்தைகள். இளையவரின் மனைவி பிரசவிக்கும் போது இறந்து விட்டதாக செவிலித்தாய் சொல்கிறாள்.

மன்னர் இறந்த துயரத்தில் அரண்மனையே பொலிவிழந்து துக்கத்தில் மூழ்கிவிட, ஆட்சியைக் கைப்பற்ற உள்ளடி வேலைகள் நடக்கிறது. அதை ஆயுதங்களை நிர்வகிக்கும் தனது விசுவாசி கட்டப்பா (சத்யராஜ்) உதவியுடன் முறியடிக்கிறார்  சிவகாமிதேவி. வேறுவழியில்லாமல் அவரே அரியணையில் ஏறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.ஆனால் அவர் ஆட்சி செய்யாமல் இளையவாரிசை இளவரசனாக்க முடிவு செய்கிறார். இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பிங்காலதேவன், தமது மகனை இளவரசனாக்கும் படி கேட்டுக் கொள்கிறார்.

ஆனால், இதை சிவகாமி தேவி மறுக்கிறார். இரண்டு புதல்வருக்கும் அரியணையில் ஏறும் தகுதி இருக்கிறது. பிற்காலத்தில் இருவரில் வீரத்தில் சிறந்தவன் எவனோ..மக்கள் மனதில் நிற்பவன் எவனோ.., அவனே ஆட்சிக் கட்டிலில் அமரட்டும்.. இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம் என்று ஆணையிடுகிறார்.

மூத்தவர் பிங்கால தேவனின் மகன்தான் பல்வாள் தேவன்(ரானா). இறந்துபோன அரசன் தீரேந்திரனின் மகன் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்). இருவருமே சிறுவயதிலிருந்தே வீரத்தில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் விவேகம் என வருகிறபோது பல்வாள் தேவனைவிட பாகுபலி ஒரு படி மேலே நிற்கிறார்.

இருவரும் வீரமிக்க ஆண்மகனாக வளர்ந்து நிற்கும் வேளையில் காலகேயர்கள் என்கிற அரக்கர்கள் போர் தொடுத்து வரப் போவதாக செய்தி வருகிறது. மகிழ்மதி தேசத்தையும் அதன் மானத்தையும் காக்கும் பொறுப்பு இருவருக்கும் வருகிறது. இருவரில் யார் மிகப்பெரிய வீரன் என்று சோதனை செய்யும் சந்தர்ப்பமாகவும் அது அமைகிறது.

தன் மகனுக்கு முடிசூடுவதற்கு சரியான தருணத்திற்காக காத்திருந்த பிங்காலதேவன் 'முடியை முடிப்பவன் முடி. காலகேய தலைவனை எவன் கொல்கிறானோ அவனுக்கே மகிழ்மதியின் அரியாசனம்' என சொல்கிறார். அதை சிவகாமிதேவியும் ஆமோதித்து படைகளை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்துத் தருமாறு உத்தரவு இடுகிறார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிங்கால தேவன் தனது மகனுக்கு நவீன ஆயுதங்களையும், பாகுபலிக்கு கோட்டையைத் தகர்க்கும் கலன்களை மட்டும் கொடுக்கிறார்.

போர் ஆரம்பமாகிறது. நவீன ஆயுதங்களைக் கொண்டு எதிரிகளை பல்வாள்தேவன் துவம்சம் செய்ய, தனது சாதூர்யத்தால் புதிய யுத்தியை பயன்படுத்தி எதிரி படைவீரர்களை வீழ்த்துகிறார் பாகுபலி. ஒரு கட்டத்தில் காலகேய படைகள் மகிழ்மதி படைகளைப் பின்வாங்க செய்து கோட்டையை நோக்கி முன்னேறி வருகிறது. தோல்வியின் விளிம்பில் மகிழ்மதி படை. கடைசியாக தங்களது பிரம்மாஸ்திரம்மான திரிசூல வியூகத்தை கையில் எடுக்கிறார்கள் பல்வாள்தேவனும் பாகுபலியும்.

காலகேய படைத்தலைவனை வீழ்த்த, பல்வாள்தேவனும் பாகுபலியும் இருமுனைத் தாக்குதலைத் தொடுக்கின்றனர். திரிசூல வியூகத்தால் நிலைகுலைந்துபோன காலகேய தலைவன், மகிழ்மதி நாட்டு மக்களை மனிதக் கேடையங்களாக நிறுத்துகிறான். எப்படியாவது காலகேய தலைவனின் தலையை எடுத்துவிட்டு அரியணையில் ஏறவேண்டும் என்கிற வெறியில் தனது நாட்டு மக்களின் உயிரை துச்சமாக மதித்து முன்னேறுகிறான் பல்வாள்தேவன். ஆனால், தன் மக்களைக் காப்பாற்றிய பிறகே காலகேய தலைவனை வீழ்த்தவேண்டும் என்று புதுயுத்தி வகுக்கிறான் பாகுபலி. இறுதியில் காலகேய தலைவனுக்கும் பாகுபலிக்கும் கடுமையான நேரடியுத்தம் நடக்கிறது. இதில் காலகேய தலைவன் தோல்வியடைந்து சாகும் தருவாயிலில், பல்வாள்தேவன் முந்திக்கொண்டு கடைசி அடியை அடித்து காலகேய தலைவனை கொன்றுவிடுகிறான்.

காலகேய தலைவனை கொன்றது தன் மகன்தான் என்று சொல்லி அரசனாக கட்டளையிடும்படி தன் மனைவி சிவகாமி தேவியை கேட்கிறான் பிங்கால தேவன். ஆனால் சிவகாமியோ, " எதிரிகளை வீழ்த்துபவன் போர்ப் படைத் தலைவன், ஆனால் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுபவன் தான் நாட்டின் அரசன். அதனால் பாகுபலியே இந்நாட்டின் அரசன் " என்று ஆணையிடுகிறார்.

இது ஃபிளாஷ்பேக்..

இதில் நான்கு தலைமுறை வருகிறது. குழம்பியவர்களுக்காக (நான் உட்பட) ஒரு சமூக சேவை. :-)
ஃபிளாஷ்பேக்கை சொல்வது பாகுபலியின் விசுவாசியான கட்டப்பா.. அப்படியானால் பாகுபலியைக் கொன்றது யார் என்று கேட்க, ' நான் தான்...! ' என்கிறார் கட்டப்பா. படம் முடிகிறது.

தேவசேனாவை  எதற்காக சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்கள் ..?

பல்வாள்தேவன் எப்படி அரசனானான் ..?

சிவகாமி தேவி எதற்காக குழந்தையைக் காப்பாற்ற போராடவேண்டும்..? அவர் மீது அம்பெய்தியது யார்..?

தமன்னா யார்..? எதற்காக போராளியானார் ..?   இப்படி நிறைய புதிர்களுக்கு விடை சொல்லாமல் அடுத்தப் பாகத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.

குழப்பத்தோடு நாமும் வெளிவருகிறோம். பொதுவாக இதுபோன்ற விடையில்லா புதிர்களை தொலைக்காட்சி தொடர்களில்தான் வைப்பார்கள், அடுத்த எபிசோடை பார்க்க வேண்டும் என்பதற்காக. பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் போல.


டத்தின் கதையை உருவாக்கும் போதே அதன் காட்சிப் பிம்பங்களை கற்பனையில் ஓடவிட்டு பார்த்திருப்பார் இயக்குனர் ராஜ்மௌலி. ஏற்கனவே ட்ரிபிள் ஹாட்ரிக் அடித்தவர். சினிமா உலகில் யாருமே செய்யாத மகத்தான சாதனை இது. அந்த நம்பிக்கைதான் இப்படியொரு பிரும்மாண்டமான படத்தை எடுக்கும் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. சோழர்களின் மிச்ச எச்சத்தை கண்டுபிடிக்கிறேன், வேறு ஒரு உலகத்தை காண்பிக்கிறேன் என்று வெறும் ஜிகினா வேலைப்பாட்டை செய்துவிட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரசனை போதவில்லை என்று ஜல்லியடிக்கும் தற்குறி ராகவன்கள் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

இத்தனை வருடம் உழைப்பு என்று புலம்புகிறார்கள். ஆனால் அந்த உழைப்பினால் வெளிவந்த வியர்வை சரியான தளத்தின் மீது சித்தப்பட்டிருக்கிறதா என்பதுதான் இங்கு முக்கியம். ராஜ்மௌலியின் உழைப்பு வீணாகப் போகவில்லை. இந்தியாவே ஒரு தென்னிந்திய மொழி திரைப்படத்திற்காக காத்துக் கிடந்தது பாகுபலிக்காகத்தான். எனக்குத் தெரிந்தவகையில் சிங்கையில் எந்திரனுக்கு அடுத்து அதிக திரைகளில் வெளியிடப்பட்டது பாகுபலிதான்..

ஆரம்பத்தில் வெள்ளுடை தரித்த தேவதை போல அறிமுகமாகும் அந்த அருவிக்காட்சியே இது உள்ளூர் சினிமா அல்ல, உலக சினிமா என்பதை உணர்த்துகிறது. அருவிக்காட்சி, அரண்மனை, காட்டெருமை, பிரும்மாண்ட சிலை, போர்க்களக் காட்சிகள் என எல்லாவற்றிலும் 'CG' புகுந்து விளையாடியிருக்கிறது. இந்திய சினிமாவில் இந்தளவுக்கு தத்ரூபமான நேர்த்தியான 'CG' யை இதுவரைப் பார்த்ததில்லை.

கதாபாத்திரத் தேர்வு கூட அமர்க்களம். யாரிடமும் மிகை நடிப்பு இல்லை. பிரபாஸ்- ரானா இருவரும் அப்படியே பொருந்திப் போகிறார்கள். ஆனால் இவர்களை விட அமர்க்களப் படுத்தியிருப்பது சத்யராஜும் ரம்யா கிருஸ்ணனும். கட்டாப்பா என்று ரம்யாகிருஷ்ணன் கர்ஜிக்கும் போது மின்னல் வேகத்தில் வாளோடு பாய்ந்து வரும் அந்த ஒரு காட்சி மெய் சிலிரிக்க வைத்தது. வாள் சண்டையில் பின்னி எடுக்கிறார். அரசிக்கே உள்ள கம்பீரம் ரம்யா கிருஷ்ணனின் குரலிலும் முகத்திலும்." இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்.." என்று சொல்கிறபோது 'உத்தரவு அரசியாரே' என்று நம்மையே சொல்ல வைக்கிறது. வசனங்கள் நச் என்றெல்லாம் சொல்லமுடியாது... ஆனால், உறுத்தாத வசனங்களுக்கு உத்திரவாதம் கார்க்கி வைரமுத்து.

இறுதியில் நடக்கும் போர்க்கள காட்சி, அதற்கான வியூகம் எல்லாமே இந்திய சினிமாவுக்கு புதிது. அவ்வளவு பேரை கட்டி மேய்ப்பதே பெரிய சவாலான விசயம்தான். ஒரு நிஜப் போர் எப்படியிருக்கும் என்பதை கண்முன் காட்டிய அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் ராயல் சல்யூட். குறிப்பாக ஸ்டண்ட் பீட்டர் ஹெயின், ஒளிப்பதிவாளர் கே.செந்தில்குமார், விஷுவல் எஃபெக்ட் ஸ்ரீநிவாஸ் மோகன்..

இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று கேட்க வைக்கிறது, தமன்னாவை பெண் போராளியாகப் பார்க்கும் போது. நிச்சயம் நடிப்பில் அவருக்கு இது அடுத்தக்கட்டம். கிளாமராக கிளுகிளுப்பேற்றியவரை வாள் ஏந்தும் போராளியாகப் பார்க்கும் பொழுது ஆச்சர்யம் வரத்தானே செய்யும்..!

இப்படி நிறைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனாலும் குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இரண்டு பாகங்களாக வெளியிடும் திட்டம் ஆரம்பத்தில் இருந்திருக்காது என நினைக்கிறேன். ஒருவேளை பட்ஜெட் எகிறிப்போனதால் எடுத்த முடிவாக இருக்கலாம். அதற்காகத்தான் முதல் பாதியை முடிந்தவரை இழுத்திருக்கிறார்கள்.

படத்தில் முக்கியமான குறை மரகதமணி. ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் ஒரு படைப்புக்கு இசை எவ்வாறு இருக்கவேண்டும்..? பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பெரிய இடையூறு. பின்னணி இசைகூட முதல் பாதியில் சொதப்பல்தான். இரண்டாம் பாதியில் சமாளித்திருக்கிறார்.

பிரபாஸ்- ரானா இருவரையும் ஒப்பிட்டால் ரானாவே முந்துகிறார். அவர் பாத்திரத்திற்கேற்ற வில்லத்தனம், வெறி, கோபம் எல்லாம் அச்சு அசலாக கண்களில் தெரிகிறது. பிரபாஸ் , ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ஈர்ப்பும் போர்க்கள காட்சிகளில் கொஞ்சம் விறைப்பும் காட்டியிருக்கலாம்.

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி அனுஷ்காவை இந்தக் கோலத்திலா பார்க்கவேண்டும்.. அய்யகோ.. ! மேக்கப் போடாமலே அழகாக இருக்கும் தலைவியின் முகத்தில் எதையோ ஒட்டி அவரை கிழவியாக்க முயற்சி செய்த ராஜ்மவுலிக்கு தமிழக அனுஷ்கா பேரவையின் சார்பாக கடும் கண்டனங்கள். அடுத்த பாகத்தில் அனேகமாக அனுஷ்காவைச் சுற்றிதான் கதை நகரும் போல தெரிகிறது.

மற்ற குறைகள் என்றால் முதலில் சொல்லியதுதான்.. கதை முடிவில்லாமல் அந்தரங்கத்தில் தொங்குகிறது.. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

பாகுபலி -கொண்டாடப்பட வேண்டிய படம்..!

Friday, 3 July 2015

பாபநாசம்..- பாசப்போராட்டம்..!

கொலைக்குற்றத்தில் சிக்கிக் கொண்ட தன் மகளைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தந்தையின் பாசப்போராட்டம் தான் பாபநாசம். ஏற்கனவே த்ரிஷ்யம் படம் பார்த்தவர்களுக்கு பாபநாசம் படத்தின் கதையை திரும்பவும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் கடமை என்று ஒன்று இருப்பதால்......

பாபநாசம் என்கிற கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டராக சுயதொழில் செய்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). மனைவி ராணி (கவுதமி) மற்றும் இரு மகள்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை. தொழில் தவிர, தொலைக் காட்சியில் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது அவரின் பொழுதுபோக்கு.

பள்ளியில் நடக்கும் கேம்ப் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அவரது மூத்த மகளை, குளிக்கும்போது ஒருவன் செல்போனில் வீடியோ எடுத்து விடுகிறான். அதை வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி அவர்கள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான்.

இந்த விஷயம் சுயம்புவின் மனைவிக்கு தெரியவர, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றுகிறது. இதில் அவன் கொல்லப்படுகிறான். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தை மறைக்க அவர்கள் வீட்டு தோட்டத்திலே குழி தோண்டி அவனைப் புதைத்து விடுகிறார் சுயம்புவின் மனைவி.

மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பும் சுயம்புவிடம் நடந்ததை சொல்கிறார்கள். கொல்லப்பட்டவன் ஐ.ஜி யின் மகன் எனத் தெரியவர, ஒட்டுமொத்தக் குடும்பமே உடைந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் பரிதவிக்கிறது.

பிறகு சுதாகரித்துக் கொள்ளும் சுயம்பு, சட்டப்படி இது கொலையல்ல என்பதை விளக்கி அவர்களைத் தேற்றி ஆறுதல் சொல்கிறார். அதன்பின்பு ஒவ்வொரு தடையமாக அழிக்கிறார். ஆனால் விதி, அவர்களைக் காட்டிக் கொடுக்கிறது. கடைசியில் அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

 
சல் த்ரிஷ்யத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால் இதன் ஒவ்வொரு காட்சியையும் அசலோடு மனம் ஒப்பீடு செய்துக்கொண்டே வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  மலையாள த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தின் இயக்குனர். கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளையும் அப்படியே நகல் எடுத்திருக்- கிறார். மலையாள த்ரிஷ்யத்தில் குளியல் வீடியோவை வைத்து மிரட்டும் ஐ.ஜி யின் மகனை இரும்புக் கம்பியால் தாக்குவார் ஜார்ஜ் குட்டியின் மகள். இதில் அவன் வைத்திருக்கும் செல்போனைத் தாக்க முற்படும் போது அந்தக் கம்பி தவறுதலாக தலையை தட்டிவிடுவதாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். தன் அம்மாவையே இச்சைக்கு அழைக்கும் ஒருவனை மகள் கொலை செய்ய முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது..? பின்னே எதற்கு தமிழில் இந்த சமரசம்..?

வெகு இயல்பாக அறிமுகமாகிறார் உலகநாயகன். படத்தில் ஒரு இடத்தில் கூட ஹீரோயிசம் இல்லை. இப்படி ஒரு கதையில் நடிக்க சம்மதித்ததிற்கே அவரைப் பாராட்டலாம்.இரு குழந்தைகளுக்கு அப்பா என்கிற பாத்திரம் கமலுக்கு புதிதல்ல. அப்பா- மகள் கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது. கமல் பேசும் பாபநாச பாசையை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுக்கிறது. என்றாலும் எல்லாவற்றிலும் பெர்பெக்சன் எதிர்பார்க்கும் ஒரு கலைஞனின் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும்.

மோகன்லால்-கமல் ஒப்பீடு தேவையில்லைதான். ஆனால் ஜார்ஜ் குட்டி என்கிற பாத்திரத்தினுள் தெரிந்த ஒரு அக்மார்க் கேபிள்டிவி ஆபரேட்டர், அன்பான அதே நேரத்தில் கண்டிப்பான அப்பா, பிரியமான கணவன், பாசமான மருமகன் எல்லாம் சுயம்புலிங்கத்தின் பாத்திரத்தில் ஏனோ தெரியவில்லை. ஆனால் இறுதியில் கொலை செய்யப்பட்ட ரோஷன் பஷீர் பெற்றோரிடம் கமல் உருகிப் பேசும் அந்த ஒரு காட்சியில் ஜார்ஜ் குட்டியையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் சுயம்பு லிங்கமான கமல். உலக நாயகன் உக்கிரமாக ஜொலிக்கும் இடமது.

நிஜத்தில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் திரையில் கமல்- கவுதமியை தம்பதியினராகப் பார்க்கும் போது ஏதோ ஒன்று நெருடுகிறது. பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியின் தாய் இந்தளவுக்கா டொக்கு விழுந்து போயிருப்பார்..?.ஒருவேளை நிஜத்தில் இருக்கலாம். சினிமா என வருகிற பொழுது ஒரு முன்னணி  நடிகரின் மனைவியாக நடிப்பவர் என்பதால் கொஞ்சம் 'வெயிட்டான' அம்மாவைப் போட்டிருக்கலாமே..?  கமல்-கவுதமி ரொமான்ஸ் காட்சிகள் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை...

படத்தின் முதல்பாதி ஜவ்வாக இழுக்கிறது. டீக்கடையில், போலீசாக வரும் கலாபவன்மணியை கமல் கலாய்ப்பது, கமல்-கவுதமி உரையாடல்கள் , பாடல்கள் என்று சுவாரஸ்யமில்லாமல் முன்பாதி நகர்கிறது. ஆனால் பின்பாதியில்தான் திரைக்கதை வேகமெடுக்கிறது. கொலையை மறைக்கும் கமலின் தந்திரங்கள், விசாரணையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மகள்களுக்கு கமல் எடுக்கும் வகுப்பு, போலிஸ் புலன் விசாரணை என்று தடதடவென்று சிக்கல் இல்லாமல் சீறிப்பாய்கிறது திரைக்கதை.

படத்தில் பாராட்டப்படவேண்டிய மற்றொரு கதாபாத்திரம், கொலை செய்யப்பட்டவனின் அம்மாவாக வரும் ஐ,ஜி. கீதா பிரபாகர் (ஆசா சரத்). புலன்விசாரணை செய்யும் காவல் உயரதிகாரியாக அவர் காட்டும் கம்பீரமாகட்டும், தன் மகனுக்கு என்ன ஆயிற்று என்பதே தெரியாமல் ஒரு அம்மாவிடமிருந்து வெளிப்படும் தவிப்பாகட்டும், கமலுக்கு அடுத்து செம்மையாக ஸ்கோர் செய்வது இவர்தான்.

படம் முழுவதும் பச்சை பசேலென இருக்கும் ரம்மியமான மலைப்பிரதேசங்களைப் பளிச்சென பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ். ஜிப்ரனின் பின்னணி இசை அவ்வளவாக காட்சிகளோடு பொருந்தவில்லை. பாடல்கள் சுத்தம்..!

முன்பாதியில் கோட்டைவிட்டு பின்பாதியில் கொடியை நட்டு இருக்கிறார்கள். மலையாள த்ரிஷ்யம் ஒரு வருடம் ஓடியதாக சொல்கிறார்கள். ஆனால் பாபநாசம் படத்திற்கு 'ரிப்பீட் ஆடியன்ஸ்' வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருமுறை பார்க்கும்படி தான் உள்ளது.


                        ப்ளஸ்                   மைனஸ்
சிக்கலில்லாமல் சீறிப்பாயும் பின்பாதி திரைக்கதை.                                        சுவாரஸ்யமில்லாமல் நகரும் முதல் பாதி.... 
உலக நாயகனின் எதார்த்த நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள்.
காவல் உயரதிகாரியாக வரும் ஆசா சரத் நடிப்பு  விசாரணையின் போது  நடக்கும் வன்முறைக் காட்சி.
சுஜித் வாசுதேவ்வின் ஒளிப்பதிவு  கவுதமி.  ( சிம்ரன், அபிராமி,நதியா எல்லாம் பரிசீலனையில் இருந்தார்களாம். கமலின் தேர்வுதான் கவுதமி)
இறுதிக் காட்சியில் ஜெயமோகனின் வசனம்.
ஹீரோயிசம் இல்லாத இயக்கம்




Wednesday, 1 July 2015

இன்று நேற்று நாளை - கொண்டாடும் இணையவாசிகள்..!



 சமீப காலங்களில் இணையவாசிகளால் அதிகம் புகழப்பட்ட, கொண்டாடப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் என்றால் தொட்டால் தொடரும், காக்கா முட்டை, மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய மூன்று படங்களை சொல்லலாம்.

இதில் காக்கா முட்டை, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் மட்டுமல்ல திரையுலக ஜாம்பவான்களாலும்  மெச்சப்பட்ட படைப்பு.. அதனால் அதை விட்டுவிடுவோம்.

'தொட்டால் தொடரும்' படம் தமிழ் கூறும் இணைய வாசிப்பாளர்கள் நன்கறிந்த பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கரின் முதல் படைப்பு. தவிரவும், வலைப்பூ சினிமா விமர்சகர் வட்டத்திலிருந்து வெளிவந்த முதல் திரைப்படம். படம் வெளிவந்த நாளில் பேஸ்புக்கில் வாழ்த்துகள் நிரம்பி வழிந்தன. சிலர் FDFS பார்த்து விட்டு 'கலக்கிவிட்டார் காப்பி' என்கிற ரீதியில் அண்ணன் கேபிளாருக்கு ஜன்னியே வருமளவுக்கு ஐஸ் வைக்கும் வைபோகத்தை நடத்தினர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படம் பப்பரப்பா ஆன சங்கதி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தது.

கடந்த வாரம் வெளியான 'இன்று நேற்று நாளை' படத்திற்கும் செம ஒப்பனிங் பேஸ்புக்கில். சினிமா வாடையே ஆகாதவர்கள் எல்லாம் சினிமா விமர்சனம் எழுதினர். சிலர் தியேட்டரிலிருந்து இடைவேளையின் போது 'லைவ் ரிவியூ' எல்லாம் கொடுத்தனர். எல்லா பேஸ்புக் விமரிசனங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. படத்தை ஆகா..ஓகோ..என்று புகழ்ந்துவிட்டு கடைசியில் 'with Rajesh Da Scorp.'  என்று 'டாக்' கை தட்டி விட்டிருந்தனர். பொதுவாக யாருக்கும் லைக் போடும் பழக்கமில்லாத கருந்தேள் ராஜேஷ், வளைச்சி வளைச்சி எல்லோருக்கும் லைக் போட்டுக் கொண்டிருந்தார். பார்க்கவே சந்தோசமாக இருந்தது.

அதில் ஒரு பெரியவர், படத்தையும் கருந்தேளையும் வானளாவ புகழ்ந்துவிட்டு, படத்தில் ஒரே ஒரு குறை இருக்கிறது என கொஞ்சம் இழுத்திருந்தார்.. அடேங்கப்பா.. TAG போட்டு குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு பேஸ்புக் சமூகம் வளர்ந்து விட்டதா என்று ஆச்சர்யம் கொண்டேன்.  படத்தில் டைம் மெசினை வைத்துக் கொண்டு தங்கம் வாங்க செல்வார்கள் விஷ்ணுவும் கருணாகரனும். அங்கே கடைக்காரரிடம் பேசும்போது எனக்குப் பிடித்த நடிகர் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்பார்.  அதெப்படி லிங்கா படம் வெளிவந்து படு தோல்வியடைந்த நிலையில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்..? விஜய் அல்லது அஜித்தை அல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும்... இதை எப்படி வசனம் எழுதுபவர்கள் கவனிக்காமல் விட்டார்கள் என்று அறிவுப்பூர்வமான வினாவை எழுப்பி, அது ஒன்றே படத்தில் உள்ள குறையென சுட்டிக் காட்டியிருந்தார்.

அதைவிட பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அதற்கு மெனக்கெட்டு கருந்தேள் சொன்ன பதில்தான். 'ஐயா நாங்கள் கதை டிஸ்கஷன் செய்யும் போது லிங்கா படம் வெளிவரவில்லை. அப்போதே எடுக்கப்பட்ட காட்சியது. அதற்குப் பிறகுதான் லிங்கா படம் வெளியானது' என்கிற தர்க்க ரீதியான பதிலை அவரது பதிவில் எழுதியிருந்தார். அதாவது லிங்கா படம் தோல்வியடைந்ததால் சூப்பர் ஸ்டார் என்கிற 'பதவி'யிலிருந்து ரஜினிகாந்த் தூக்கியடிக்கப்பட்டாராம். அய்யா... சூப்பர் ஸ்டார் என்பது பதவியல்ல..; பட்டம்..!.  ரஜினிக்கென்றே உருவாக்கப்பட்ட பட்டம். எப்படி மக்கள் திலகம் என்றால் எம்ஜியாரை மட்டும் குறிக்கிறதோ.. எப்படி நடிகர் திலகம் என்றால் சிவாஜியை மட்டும் குறிக்கிறதோ.. அதேப்போல சூப்பர் ஸ்டார் என்றால் இந்தியாவில் ரஜினியை மட்டும் தான் குறிக்கும். அவர் காலத்திற்குப் பிறகும் கூட...

பரவாயில்லை.. எனக்குத் தெரிந்து கே.என்.சிவராமன், யுவாவை அடுத்து படத்தில் உள்ள 'குறை' என்கிற வார்த்தையை தமிழ் பேஸ்புக் உலகில் அவர்தான் உபயோகித்திருந்தார். அந்த நேர்மையை பாராட்டுகிறேன்...!

படத்தைப் பார்த்த சிலர் தமிழ் சினிமாவையே புரட்டிப்போடும் புதிய யுத்தி என்கிற ரீதியில் பாராட்டி எழுதியிருந்தார்கள். அவர்களின் உணர்ச்சிப் பீறிடலுக்கு 'TAG ' க்கும் ஒரு காரணமாக இருக்கலாம். 'சினிமாவா... வீக் எண்டில் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்வோம் அவ்வளவுதான்...' என்கிற அளவிலே இருப்பவர்களுக்கு இணையத்தில் சினிமாவின் நுணுக்கங்களை பலர் அலசுவதைப் படித்தவுடன் ஆச்சர்யம். குறிப்பாக 'திரைக்கதை' என்கிற வார்த்தையும் சினிமாவில் அது குறித்த அவசியத்தையும் மாறி மாறி வகுப்பெடுத்தவர்களில் கருந்தேள் ராஜேசும் ஒருவர். அதிலும் ஏதாவதொரு ஆங்கில சினிமாவை எடுத்துக் கொண்டு சினிமாவின் இலக்கணமே இதுதான் என்று புரியாத படத்தைப் பற்றி புரியாத மொழியில் புரியாத ஒன்றை அவர் விளக்கும்போது ஸ்கூலில் இங்கிலீஸ் டீச்சர் வகுப்பெடுக்கும்போது 'பேந்த பேந்த முழிக்கும்' மாணவனின் நிலைதான் நமக்கு.

பொதுவாக, சினிமாவுக்கான சூத்திரங்கள் வெற்றிபெற்ற படங்களிலிருந்துதான் உருவப்படுகிறது. கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு எந்த வரையறையும் கிடையாது. ஆனால் அதன் திரைக்கதைக்கு வரையறை, அளவுகோல், வடிவமைப்பு எல்லாம் இருக்கிறது. கதையை நகர்த்தும் சம்பவங்களின் கோர்வையே திரைக்கதை. திரைக்கதையைப் பற்றி வகுப்பெடுக்கும் ஜாம்பவான்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களைத்தான் அளவுகோலாக எடுக்கிறார்கள். ஏன் இந்திய சினிமாவுக்கு அந்தத் தகுதி இல்லையா..?

பொறியியல்,மருத்துவம் மாதிரி சினிமாவும் ஒரு துறை. மற்றத் துறைகளில் எப்படி ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதோ அதேப்போலதான் திரைப்படத்துறையிலும். இங்கும் அனுபவமே சிறந்த ஆசான். வெளிநாடு- களில் கட்டடம் கட்டும் முறைக்கும் இங்குள்ள முறைக்கும் நிறைய வேறுபாடுள்ளது. மண், தட்பவெட்பம் இதையெல்லாம் பொறுத்து மாறுபடும். சினிமாவும் அப்படித்தான். எந்த வெளிநாட்டு படங்களையும் ஒப்பிட்டு இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவை குப்பை என்று சொல்லிவிட முடியாது. தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் ஹாலிவுட் படங்கள் முன்மாதிரியாக இருக்கலாம். அதற்காக சினிமாவின் இலக்கணத்தையே அந்தப் படங்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என சொல்வது அபத்தம்.

தமிழில் சக்கைப்போடு போட்ட கரகாட்டக்காரனும் சின்னதம்பியும் எந்த இலக்கணத்தை பின்பற்றி எடுக்கப்பட்டது..? வேண்டுமானால் இதுபோன்ற படங்களிலிருந்து தமிழ் சினிமாவுக்கான சூத்திரத்தையும் இலக்கணத்தையும் வகுத்துக் கொள்ளலாம். இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர் என்று புகழப்படும் கே.பாக்யராஜ் எந்த ஹாலிவுட் படத்தைப் பார்த்து திரைக்கதை சூத்திரத்தைக் கற்றுக்கொண்டார்..?



இன்று நேற்று நாளை படத்திற்கு வருவோம்..

மூன்று நாட்களில் மூன்று கோடி.. திரையரங்குகள் அதிகரிப்பு... வசூலில் சாதனை.. போன்ற செய்திகள் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான முயற்சிகள் எல்லாமே தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது. கால இயந்திரம் என்னும் விஷயம் தமிழ் சினிமாவில் புதிதுதான். அதை வைத்து எப்படி சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, குழப்பமில்லாத ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்பதில் திரையனுபவமே இல்லாத இந்த 'டீம்' சவாலான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி, முண்டாசுபட்டி, எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமானப் படங்களை மட்டுமே தயாரிக்கும் பிடிவாத தயாரிப்பாளர் சி.வி. குமாருடன் இணைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார். இயக்குநருக்கு முதல்படம். குறும்பட அனுபவம் இருந்தாலும் வெண்திரை என வருகிறபோது வணிக வெற்றிக்காக நிறைய உழைக்க வேண்டும். புதிய சிந்தனை.. வித்தியாசமான கதைக் களம் என்று நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும்.. தன் ஒருவனின் கையில் மட்டும் வண்டியின் 'ஸ்டீரிங்' இருக்கக்கூடாது என்பதையுணர்ந்து, அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரோடு ராஜன், கருந்தேள் போன்ற தியரிடிகல் ஜாம்பவன்களுடன் இணைந்தது படத்தின் முதல் வெற்றி.. கேபிள் சங்கர் இந்த இடத்தில்தான் தோற்றுப்போனார். தன்னைச் சுற்றி சினிமாவை ஆர்வமாக பயிலும் நண்பர்கள் இருந்தும், தனது விநியோக அனுபவம் மட்டுமே போதும் என நினைத்த கேபிளாரின் எண்ணத்தில் விழுந்த அடிதான் தொட்டால் தொடரும்.

தமிழ்த்திரையில் முதன்முதலாக டைம் மெசினை அறிமுகப்படுத்தியுள்ளதால் அதைப்பற்றிய விளக்கத்தை ஆரம்ப பாடசாலையில் வகுப்பெடுப்பது போல் விளக்க வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. ஆனால் 'ஏ' செண்டர் ரசிகனுக்கு மட்டும் புரியும்படி சொல்லியிருப்பது முதல் சறுக்கல்.

படத்தின் ஹீரோ டைம் மெசின். அதைச்சுற்றித்தான் கதைப் பின்னப்படவேண்டும். முதல் பாதியில் ஹீரோவாக  ராஜநடைபோடும் டைம் மெசின் பிறகு காமடிப் பீசாக மாறிவிடுகிறது. பிற்பாதியில் டைம் மெசினை வைத்து விறுவிறுப்பாக பின்னப்படவேண்டிய திரைக்கதை 'கொழந்த' என்கிற வில்லனை சுற்றி நொண்டியடிக்கிறது. அதனால் ' ஆர்யா ஒரு டைம் மெசினைக் கண்டுபிடிக்கிறார்.... என ஆரம்பிக்க வேண்டிய இந்தப் படத்தின் கதையை,"விஷ்ணு ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பொறுப்பில்லாமல் அவன் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பதால் அப்பெண்ணின் அப்பா ஜெயபிரகாஷ் அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவனுக்கு ஒரு டைம் மெசின் கிடைக்கிறது. அதைவைத்து தான் புத்திசாலி என்று அவளது அப்பாவை நம்பவைத்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறான். இதற்கிடையில் அவளது அப்பாவுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு ரவுடியை போலீஸ் என்கவுண்டர் செய்கிறது. விஷ்ணு, வேற ஒரு சம்பவத்துக்காக அந்த டைம் மெசினின் மூலம் இறந்தகாலம் செல்லும்போது, தவறுதலாக  அந்த ரவுடியை காப்பாற்றிவிடுகிறான். பிறகு அந்த ரவுடி ஜெயபிரகாஷையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய துரத்த, அவர்களை விஷ்ணு எப்படி காப்பாற்றுகிறான் என்பதே இப்படத்தில் கதை.." என முடிக்க வேண்டியதாயிற்று. இதில் டைம் மெசின் ஒரு கேரக்டராக வந்து செல்கிறது. ஒருவேளை தமிழ் சினிமா என்பதால் வணிக வெற்றிக்காக திரைக்கதையை இப்படி மாற்றம் செய்திருப்பார்கள்.

படத்தின் திரைக்கதையை செதுக்குவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்களாம். நிறைய காட்சிகளில் அவர்களின் உழைப்பு பளிச்சிடுகிறது. முக்கியமான திருப்பங்களை வசனங்களில் சொன்னால் அழுத்தம் இருக்காது என்பதால் காட்சிகளால் உணர்த்தியிருக்கிறார்கள். உதாரணமாக, காணாமல் போன அம்மாவின் கண்ணாடியை கண்டுபிடிக்கும் காட்சி. டைம் மெசினை வைத்துக்கொண்டு காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கலாம் என்பதை வெறும் வசனங்களால் விளக்காமல், டைம் மெசினில் தவறுதலாக ஒரு மாதத்திற்கு முன்பான நேரத்தை செட் பண்ணிவிட, அந்த நேரத்தில் ஒரு சிறுவன் அம்மாவின் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஓடுவதாகவும்,அதை விஷ்ணு பிடுங்கி வைத்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு வரும்போது,' ஒரு மாதத்துக்கு முன்பே காணாமல் போன கண்ணாடியை நீதான் வச்சிருக்கியா..' என விஷ்ணுவின் அம்மா கேட்கும் காட்சி.

படத்தில் செம்மையான ஒரு காட்சி இருக்கிறது. டைம் மெசினில் தனது காதலியை அவளது பிரசவிக்கும் காலத்திற்கு அழைத்து செல்கிறார் விஷ்ணு. தன்னை பிரசவிக்க தன் அம்மா படும் வேதனையை நேரில் பார்க்கிறாள் அவள். தன் அம்மாவுக்கு பிரசவ வலி வந்தவுடன் தானே அவளைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனை செல்ல நேருகிறது. அங்கு அவள் பிறக்கிறாள். அவள் பிறந்த பொழுது எப்படி இருந்தாள் என்பதை நேரில் பார்க்கிறாள். அந்தக் காட்சியின் உச்சமாக, அவளே அவளைத் தன் கைகளில் தாங்கி உச்சி முகந்து பூரிப்படைகிறாள். அதை செல்ஃபோனில் போட்டோவும் எடுத்துக் கொள்கிறார்கள். என்னவொரு அட்டகாசமாக கற்பனை..!!! ஹாட்ஸ் ஆஃப் டு யூ கைஸ் ....! 

எனக்கிருக்கும் சில சந்தேகங்கள்....

2065 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக காண்பிக்கப்படும் டைம் மெசினைப்பற்றி, 2015-ல் ஒரு சாதாரண எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டெஷன் படித்த ஒரு எஞ்சினியர் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது எப்படி..? அதை ஏதோ மிக்சி கிரைண்டர் ரிபேர் பண்ணுவது போல சரி செய்கிறாரே எப்படி..?

டைம் மெசினை முதன்முதலாக பார்க்கும் அந்த விஞ்ஞானி(!) அதில் ஏறி பயணம் செய்து, அது டைம் மெசின் தான் என்பதை நொடிப்பொழிதில் உறுதி செய்கிறார் சரி... பிறகு அவருக்கு கரண்ட் ஷாக் ஆகி கோமா நிலையிலிருந்து திரும்பும் போது பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறார். அந்த நேரத்தில் விஷ்ணுவும் கருணாவும் கொடுக்கும் அந்த கருப்பு பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு இது 'டைம் டிராவல் டிவைஸ்' என்கிறாரே... அது எப்படி..?

ஷேர் மார்கெட்டைப் பற்றி துளியும் அறியாத ஒருவனால், எந்த ஷேர் எவ்வளவு போகும் என்கிற எதிர்கால முடிவை மட்டும் வைத்துக் கொண்டு அத்தனை தொழில் வல்லுனர்களையும் ஏமாற்றுவது சாத்தியமா..? ஒருவருக்குக் கூட அவன் மேல் சந்தேகம் வரவில்லையே ஏன்..?

ருணாகரன் ஜோதிடனாக வருகிறார். அந்தத் தொழிலுக்கான உடல்மொழி, பேச்சு வழக்கு என எதுவுமே அவரிடம் இல்லை. அவர் போலியான ஜோதிடர் என நம்ப வைப்பதற்காக காண்பிக்கப்படும் அந்த தேர்வு முறை கொட்டாவியை வரவைக்கிறது.

வில்லனை, டைம் மெசினை விட பலசாலியாக பில்டப் செய்தது எதற்காக என்பது விளங்கவில்லை. அவரை சிக்க வைக்கத்தான் ஜெயபிரகாஷ் மூலமாக போலீஸ் கன்னி வைக்கிறது. ஆனால் அந்த சம்பவத்துப் பிறகு சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றுகிறார்.... ஜவுளிக்கடையில் என்கவுண்டர் செய்கிறார்... காரில் துரத்துகிறார்.

டைம் மெசினை வைத்து எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். அப்படியானால் அந்த ரவுடியால் அந்தக் குடும்பத்துக்கு என்ன ஆகும்... ஒருவேளை திரும்பவும் அவன் என்கவுண்டர் செய்யப்படுவானா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்தானே..அதையேன் அவர்கள் முயற்சி செய்து பார்க்கவில்லை...(ஒருவேளை டைம் மெசினில் பயணம் செய்பவர் எதிர்காலத்தில் இறக்க நேரிட்டால், திரும்பவும் நிகழ்காலத்திற்கு திரும்ப முடியாது என்பதால் இருக்குமோ..?)

டைம் மெசினை வைத்துக் கொண்டு காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்துத் தருவதின் மூலம் ஹீரோவும் அவனது நண்பனும் பணம் சம்பாதிப்பதாக காட்டப்படுவது கொஞ்சம் திராபையான கற்பனைதான். வேறு ஏதாவது யோசித்திருக்கலாம். காணாமல் போன இடம், நேரத்தைக் கேட்டுக்கொண்டு, அந்தக் காலகட்டத்திற்குப் போய், அது தவறும் பொழுது எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, இந்த இடத்தில் உங்கள் பொருள் இருக்கிறது என்று சொல்வார்களாம். எடுத்து ஒளித்து வைக்கும் பொழுது யாரும் பார்க்காமலா இருப்பார்கள்..?  உதாரணமாக, காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்துத் தரும் காட்சி.. அந்தக் குழந்தை காணாமல் போன காலகட்டத்திற்குச் சென்று அக்குழந்தையை மீட்டு அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு நிகழ் காலத்திற்கு வந்து விடுவார் விஷ்ணு. பிறகு அக்குழந்தையின் பெற்றோர் அங்கு சென்று மீட்டுக் கொள்வார்களாம். அந்த இல்லக் காப்பாளர், 'அந்த ஜோசியக்காரனோட ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தானே... அவன்தான் வந்து குழந்தையை விட்டுட்டு போனான்..' என சொல்லிவிட்டால், இவர்களே கடத்தி இவர்களே கண்டுபிடித்துத் தருவது போல ஆகாதா..?

இப்படியாக சிலருக்கு நிறைய கேள்விகள் எழலாம்.. டைம் மெசின் என்பதே கற்பனைக் கதாபாத்திரம் என்பதால் நமக்கிருக்கும் சந்தேகங்களை டீலில் விட்டுவிடலாம்.

எப்படிப் பார்த்தாலும் இனி தமிழில் வரப்போகும் பல ' சயின்ஸ் ஃபிக்‌ஷன் ' படங்களுக்கு இந்தப்படம் ஒரு முன்னோடி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. பொதுவாக டைம் ட்ராவல் கதை என்பதே ஒரு குழப்பமான விசயம்தான். திரைக்கதையும், எடிட்டிங்கும் நேர்த்தியாக இல்லை என்றால் படம் பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்துவிடும். இதில் இரண்டுமே மிகச்சரியாக அமைந்திருப்பது வெற்றிக்கான அடித்தளம்.

அடுத்தப் படைப்பை இன்னும் நேர்த்தியாகக் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது...


Saturday, 27 June 2015

காவல் - டம்மி துப்பாக்கி.


காவல்ன்னு ஒரு படம் வந்திருக்கு...

வாரக்கடைசி.. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த வாரம் ரிலீஸ் ஆகாததால் வழக்கம்போல ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம்னு போனேன். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எதார்த்தமாக பார்த்த நிறைய படங்கள் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு...ராஜதந்திரம்.. டிமாண்டி காலனி... காக்கா முட்டை என பெரிய லிஸ்டே இருக்கு..! 

அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்திற்கு போனேன். படத்தின் போஸ்டரில் 'புன்னகைப்பூ கீதா' கஷ்டப்பட்டு புன்னைகைத்துக் கொண்டிருந்தாங்க. இவரைப்பற்றி நம்மூர் மக்களுக்கு அவ்வளவா தெரியாது. சிங்கையிலும் மலேசியாவிலும் புன்னகைப்பூ கீதா என்றால் புன்னகைக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.. அம்மணி அந்தளவுக்கு பிரபலம்...!

10 வருடங்களுக்கு முன்பு , ஒரு தயாரிப்பாளராக 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் தடம் பதித்தாங்க.. அதில் கலெக்டராக ஒரு ' கெஸ்ட் ரோல் '  கூட பண்ணியிருப்பாங்க.. அப்போ ஹீரோயினா நடிக்க அம்மணிக்கு நிறைய ஆஃபர் வந்தது. 'குளோசப் ஷாட்' ல கொஞ்சம் டொக்காக இருந்தாலும் 'லாங் ஷாட்' ல சிக்குன்னு இருப்பாங்க.. அதுமட்டுமல்ல, வெளிநாட்டு கரன்சியும் ஒரு முக்கிய காரணம். ஓர் திரைவிழா மேடையில் நடிகர் பார்த்திபன், ஹீரோயினாக நடிக்க பகிரங்க அழைப்பு விடுத்தார் அம்மணிக்கு.. வெறும் புன்னகையை மட்டும் அப்போது பதிலாக உதிர்த்துவிட்டு, பார்த்திபனின் உள்நோக்க அழைப்பை அன்போடு நிராகரித்துவிட்டாங்க...

அப்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்து வந்தவருக்கு இப்போது மட்டும் எப்படி மனது வந்தது என்பதுதான் மில்லியன் ரிங்கட் கேள்வி..!

அது சரி.. படம் பார்த்தால் விமர்சனம் செய்தே ஆகவேண்டுமா...?. ம்ம்ம்ம்... கட்டாயம் இல்லைதான். ஆனால் கடுமையான வேலைப்பளுவுக்கிடையில் வாரம் ஒரு முறையாவது எனது வலைப்பூவை தூசி தட்ட இந்த விமரிசனங்கள் எனக்கு உதவி புரிகின்றன.  

அது போகட்டும் படம் எப்படி இருக்கு..?

காவல்துறையின் அருமை பெருமைகளைச் சொல்லும் படங்களின் வரிசையில் பத்தாயிரத்து ஒன்றாவதாக (..ஆஆஆ...வ்...) வந்திருக்கும் தமிழ்ப் படம்தான் இந்தக் காவல்.  ' நீ எல்லாம் நல்லா வருவடா..'  என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு காவலாக மாறி வந்திருக்கிறது.

பொதுவாக காவல்துறை சம்மந்தப்பட்ட படங்கள் எப்படி இருக்கும்..? ஹீரோ ஒரு போலிஸ். நகரத்தில் ஒரு சமூக விரோதி இருப்பான். அவனது பின்னணியில் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருப்பார்கள். அத்தனைப் பின்னணியையும் உடைத்து, அந்தச் சமூக விரோதியை போட்டுத்தள்ளுவான் ஹீரோ... இந்த கிளிசே வகை கருமத்தை வைத்துதான் பல வருடங்களாக ' போலிஸ் ஸ்டோரி ' என நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா...

தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக நடந்த கொலைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு அதற்குக் காரணம் கூலிப்படைதான் என்கிற அறிய கண்டுபிடிப்புடன் படம் தொடங்குகிறது. அத்தனை சம்பவங்களுக்கும் காரணம் கர்ணா என்கிற கூலிப்படைத் தலைவன். சென்னையில் கொலை,கடத்தல்,கட்டப் பஞ்சாயத்து என்று தனி ராஜ்யமே நடத்துகிறான் கர்ணா. இந்தக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போக, கர்ணாவை என்கவுண்டர் செய்ய முதல்வர் ரகசிய உத்தரவை பிறப்பிக்கிறார். அந்த அசைன்மெண்டை செய்து முடிக்க நியமிக்கப்பட்டவர்தான் 'இன்ஸ்பெக்டர்' சமுத்திரகனி..

வசூல் ராஜாக்களாக வலம்வரும் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து உட்பட சில 'கடமை தவறாத கண்ணியமிக்க' காவலர்களின் புதல்வராக விமல், அஸ்வின் ராஜா மற்றும் இருவர். தந்தைகள் காக்கிச் சட்டை போட்டு செய்யும் வசூலை மகன்கள் காக்கிச்சட்டை இல்லாமலே செய்கிறார்கள். தந்தையின் செல்வாக்கினால் இவர்களுக்கு கருணாவுடன் நட்பு கிடைக்கிறது.

கர்ணாவை என்கவுண்டர் வலையில் சிக்கவைக்க, விமல் மற்றும் அவரது நண்பர்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் சமுத்திரக்கனி. கர்ணாவுக்கு வைத்த கண்ணியில் அவனது தம்பி சிக்கி பலியாக, கர்ணாவின் கோபத்துக்கு ஆளாகிறார்கள் விமலும் அவரது நண்பர்களும். தன் தம்பி சாவுக்கு காரணமான விமல் மற்றும் அவரது நண்பர்களை கர்ணா பழிவாங்கத் துரத்த, அவர்களைக் காப்பாற்றி கர்ணாவை என்கவுண்டரில் போட துரத்துகிறார் சமுத்திரக் கனி... இறுதியில் யார் பலியாகினார்கள் என்பதே மீதிக்கதை.

ஆரம்பத்தில் விமலை ஹீரோவாக காண்பிக்கிறார்கள். பாவம்; இதில் அவர்  டம்மி பீசு.  நன்றாக ஆடுகிறார்.... ஹீரோயினிடம் வழிகிறார்... அத்தோடு முடிந்தது அவரது வேலை. இப்படியே போனால் யோகிபாபு கேரக்டர் கூட கிடைக்காது அவருக்கு.

நிகழ்ச்சிகளை வடிவமைத்துத்தரும் 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நடத்துகிறார் புன்னகைப்பூ கீதா.. இவரது மந்திரப் புன்னகையில்(!) மயங்கி காதலில் விழுகிறார் விமல். ஆனால் அம்மணி முகத்தில் புன்னகைப்பூக்கும் போதுதான் விமலுக்கு ஒண்ணுவிட்ட அக்கா போல தெரிகிறார். மிஸ்டர் ஏகாம்பரம் (ஒளிப்பதிவாளர்).... எந்த தைரியத்தில் சார் அக்காவுக்கு குளோசப் ஷாட் வச்சீங்க..?. முன்பு ரேடியோ மிர்ச்சியாக இருந்தவர். ஆனால் வாய்ஸ் கூட பிசிறு தட்டுகிறது.  நல்லவேளை அக்காவை ஆடவைக்கவோ அல்லது பாடவைக்கவோ இயக்குநர் முயற்சிக்கவில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது விபரீத முயற்சியில் அவர் இறங்கியிருந்தால், 'பேஸ்புக் புகழ் ' கவிக்குயில் கல்பனா அக்காவுக்கு போட்டியாக வந்திருப்பார்.

அக்கா புன்னகைப்பூ கீதா...

ஸ்ட்ரிக்ட் போலிஸ் இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி. இந்த விறைப்பு, மொறைப்பு எல்லாம் ஏற்கனவே ஏகப்பட்ட படங்களில் கேப்டனிடம் பார்த்தாச்சு.. இவரை பீச்சில் பலூன் விற்பவராக காண்பிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது உளவு பார்க்க வந்திருக்கிறார் என்று. பிறகு தொப்பியை மாட்டிக் கொண்டு விறைப்பாக சல்யூட் அடிக்கும்போது, "அட போங்கப்பு..... இதெல்லாம் ஒரு ட்விஸ்டா....' என்றுதான் கேட்க தோன்றுகிறது.

காவல்துறையினர் வசூல் சக்ரவர்த்திகளாக இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க அவர்களை இந்தளவுக்கு மட்டம்  தட்டியிருக்க வேண்டாம். பொதுமக்களிடம் ரவுடிகள் போல கட்டாய வசூல் செய்வது, பிறகு அதை காவல் நிலையத்தில் வைத்து வெளிப்படையாகப் பங்கிட்டுக் கொள்வது என்று ஒரு அரசு இயந்திரத்தை அப்பட்டமாக வெளுத்துவாங்குவது கொஞ்சம் ஓவர். அதனாலையோ என்னவோ இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் காமெடிக்கு எல்லாம் சிரிப்பு வரவில்லை. ' செய்கூலி உண்டு.. ஆனால் சேதாரம் இல்லை ' என்று சிங்கமுத்து தனது மகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடும்போது மட்டும் தியேட்டரில் சிரிப்பொலி. அதையே அடிக்கடி சொல்வதனால் கடைசியில் ஏதாவது சுவாரஸ்யமாக நடக்கும் என்று எதிர்பார்த்தால்..நத்திங்.. :-(

புளித்துப் போன கதைதான். ஆனால் காட்சிகளிலும் திரைக்கதையிலும் ஏதேனும் புதுமை புகுத்தி சுவாரஸ்யமாக்கியிருக்கலாம். எந்த புது முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் ஏதாவது மெஸேஜ் சொல்லவருகிறார் என்றால் அதுவுமில்லை.. ஆரம்பத்தில் இயக்குநர் கவுதம்மேனன் கரகர தொண்டையில் கதையை சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்.. ஒருவேளை இதுதான் புதுமையோ..!. கூலிப் படைத்தலைவன் பெயர் கர்ணா... அவனது கூட்டத்தில் இருக்கும் ஒருவனின் பெயர் அழகிரி... இதில் ஏதாவது குறியீடு இருக்கா..?

மொத்தத்தில்.... காவல் - டம்மி துப்பாக்கி.

Saturday, 20 June 2015

பொறியில் சிக்கிய எலி...

முதலில் வடிவேலு இம்சை அரசனின் வெற்றி மமதையிலிருந்து வெளியே வரவேண்டும். அது தமிழ் சினிமாவில் அரிதாக நடந்த வித்தியாசமான முயற்சி. மட்டுமில்லாமல், காமெடி கார்ட்டூன்ஸ் வரைந்து மதனையே பின்னுக்குத்தள்ளி ஆனந்த விகடனை அலங்கரித்த சிம்புதேவன், தான் கற்றுக்கொண்ட ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிவைத்தப் படம். அதன் பிறகு அவரெடுத்த அத்தனைப் படங்களும் பாக்ஸ் ஆபிசில் பல்லிளிக்க, தனது யுத்தியை மாற்றிக்கொண்டு அடுத்து புலிவேட்டைக்கு தயாராகிவிட்டார். ஒரு படைப்பாளியாக தனது ரூட்டை அவர் மாற்றிக்கொள்ள, அதில் நடித்த வடிவேல் மட்டும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் வெற்றி எப்படி சாத்தியமாகும்...?

அரசர் காலத்துக் கதை, இந்திரலோகத்துக் கதை என்று நமது வாழ்வியல் எல்லைக்கு அப்பால் சென்றவர் கொஞ்சம் முன்னேறி தற்போதுதான் 60 -களுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து இரு தோல்விகளுக்குப் பிறகும் அதே ஃபார்முலா-வைப் பிடித்துத் தொங்கினால் எப்படி வைகைப்புயல் சார்..?

பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டம் என்பதால் இயக்குநரின் கற்பனைத் திறனும் அந்தக் காலகட்டம் போலவே இருக்கிறது. மொக்கையான கதை. புகைப் பிடிப்பதற்கு(குறிப்பாக சிகரெட்) தடை செய்யப்பட்ட காலகட்டமாக 1960-ஐ கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். புகைப் பிடிப்பது தீங்கானது என்பதை ஆரம்பத்தில் விளக்குகிறார்கள்( மெஸேஜ் சொல்றாங்களாமாம்..).

இவ்வளவுதான் கதை.....

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்கிறது பிரதீப் ராவத் கும்பல். அந்தக் கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பொறி வைத்துப் பிடிக்க திட்டமிடுகிறார் கமிஷனர் ஆதித்யா. கள்ளக் கடத்தலுக்கு காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியும் உடந்தையாக இருக்கக் கூடும் எனக் கணிக்கிறார். ஒட்டுமொத்தக் கும்பலையும் பிடிக்க ஒரு போலிசை உளவாளியாக அனுப்பும் 'ஆபரேசன்' -க்கு திட்டமிடுகிறார் அவர்.

தனது சகாக்களின் துணையுடன் நூதனமான முறையில் சின்னச்சின்ன திருட்டுகளை செய்கிறார் எலிச்சாமி (வடிவேல்). ஒரு போலிஸ் ஆபிஸரின் வீட்டிலே தனது கைவரிசையை காண்பித்து தப்பிக்கிறார். திருடனைப் பிடிக்கும் போலீஸ் மூளையைவிட போலீசிடமிருந்து தப்பிக்கும் திருடனின் மூளையே சிறந்தது என்கிற முடிவுக்கு வரும் ஆதித்யா, அந்தக் கள்ளக் கடத்தல் கும்பலுக்குள் போலீஸ் உளவாளியாக வடிவேலுவை அனுப்புகிறார்.

போலீஸ் ஆகும் தனது கனவை நிறைவேற்றுவதாக ஆதித்யா உறுதி தருவதால் அந்த ஆபரேஷனுக்கு வடிவேல் சம்மதிக்கிறார். இறுதியில் அக்கும்பலை பிடித்தார்களா என்பதே மீதிக்கதை.

இனிமேல்....

வைகைப்புயலின் பழைய மிடுக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. வார்த்தைப் பிரவாகமாகட்டும் உடல் மொழியாகட்டும் முன்பைவிட இன்னமும் மெருகேறியிருக்கிறார் என்பதே திண்ணம். ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு கொஞ்சமும் ஒத்துப்போகாத கதை மற்றும் திரைக்கதையமைப்பால் அவரது ஒட்டுமொத்த உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராகிப் போயிருக்கிறது.

நல்ல மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார்கள்; பாராட்டுவோம். அதற்கு1960 காலகட்டத்திற்கு ஏன் செல்ல வேண்டும்..? ஒருவேளை வித்தியாசமான முயற்சி என்றால் திரைக்கதையை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மாற்றியமைக்க வேண்டாமா..?   விறுவிறுப்பே இல்லாமல் நகைச்சுவை என்கிற பெயரில் சுவாரஸ்யமின்றி  நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.

பேங்கில் திருடப் போகும் அந்த ஒரு காட்சி மட்டும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. மற்றவை எல்லாம் பழைய மொந்தையில் அதே பழைய கள்..!. கதைக்காக ஒன்றும் பெரிதாக யோசிக்கவில்லை. வைகைப் புயலை திரையில் காண்பித்தாலே போதும் என நினைத்திருக்கிறது போலும் 'எலி டீம்'.  சூப்பர் ஸ்டாரே 'தண்ணி குடிக்கும்' காலகட்டமய்யா இது...!  ஒரு 'டெக்னிக்' திருடனை போலீஸ் அணுகி உதவி கேட்பது... போலிஸ் ஆசையைக் காட்டி கொள்ளைக் கூட்டத்தில் உளவாளியாக அனுப்புவது... இது போன்ற கதை எல்லாம் ருத்ரா, காக்கிச்சட்டை உட்பட நிறைய படங்களில் பார்த்தாயிற்று.

ராகதேவனுக்குப் பிறகு நான் ரசிக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர்.  பிளாக் அண்ட் ஒயிட் காலகட்ட பின்னணி இசையை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பாடல்களும் பின்னணியும் வித்யா 'டக்கராக' இல்லை.. வித்யா மக்கர்..!

தோட்டாதரணிக்கு வாய்ப்பளித்ததற்காக பாராட்டலாம். உள்ளரங்க அமைப்பு எல்லாம் அட்டகாசம். ஆனால் வெளிப்புற காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணியில் செல்ஃபோன் டவரெல்லாம் தெரிகிறது. 60 களில் ஏதுய்யா செல்ஃபோன் டவர்..?

சதா இந்தளவுக்கு கீழே 'இற(க்)ங்கி' வரவேண்டுமா என்கிற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் பாலைவன நீர் வேட்கைக்கு பதநீர் குடித்தது போல குளுகுளுவென இருந்தது அம்மணியின் பிரவேசம்.... (   ஹி.... ஹி.... பிரதேசமும்...! ).  ஏற்கனவே ஷங்கரின் சிவாஜி நாயகியை ஒரு பாட்டுக்கு ஜோடியாக்கி சின்றின்பம் அடைந்த வைகைப்புயல், தற்போது அந்நியன் நாயகியுடன் ஆட்டம்போட்டு ஆசையை (நடிப்பாசையைத்தான்) தீர்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தப் படத்தில் ஐட்டம் சாங்குக்கு ஐஸ்வர்யாராயுடன் ஆடி தனது பிறவிப் பயனை அடைவார்.

சம்மந்தமே இல்லாமல் ஒரு இந்திப்பாடல் வருகிறது. ஒருவேளை வைகைப்புயல் அபிநயா நடனக் குழுவில் சேரப் போகிறாரோ என்னவோ.. இருக்கிற 'போர்' ரில் இது வேறு..!  தியேட்டரில் அமர்ந்திருப்பவர்களை வலுக்கட்டாயமாக எழுப்பி ' பாத்ரூம் போயிட்டு.. அப்படியே ஒரு தம் போட்டுட்டு வாங்க பாஸ்..' என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதத்தால் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் தனது சீட்டுக்கு அடியில் தானே வெடிவைத்துக் கொள்கிறாரே என்று கடந்த வாரம் புலம்பியதைத்தான் இந்தவாரமும் தொடர வேண்டியிருக்கிறது. நடிகர் சூரி முன்னணி நடிகர்கள் நடிக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிற செய்தி வேறு பீதியை கிளப்புகிறது.

தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் தமிழ்திரை நகைச்சுவை உலகில் தனி அடையாளமாக விளங்கிய வைகைப்புயலின் இடத்தை அவரைத் தவிர வேறுயாராலும் நிரப்ப முடியாது. சந்தானமும் வைகைப்புயலும் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வரவேண்டும்..!

அதெல்லாம் சரி.. படம் எப்படி இருக்கு..?



Saturday, 13 June 2015

சந்தானம் இனிமேல் இப்படித்தானா..?



 இனிமேல் இப்படித்தான் படத்தின் ஒலித்தகடு வெளியீட்டு விழாவில் அப்படத்தின் கதையை எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொன்னார் சந்தானம். அவரது லொள்ளு சபா சகாக்கள் அவரிடம் ' ஒன் லைன் ' ஒன்றை சொன்னார்களாம். 'எந்த விசயத்திற்கும்' ஆப்ஷன் வேண்டுமென்று கேட்கும் சந்தானம் இதற்கும் ஆப்ஷன் கேட்க, நிறைய ஒன் லைன்களை ஊதித் தள்ளினார்களாம் அவரது அடிபொடிகள் . இறுதியில் இக்கதையத்தான் தேர்வு செய்தாராம் சந்தானம்.

ஹீரோ ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிக்கிறான்; அவளும் கூட. சந்தர்ப்ப சூழலால் வீட்டில் பார்க்கும் பெண்ணை நிச்சயம் செய்யும்படி ஆகிறது. காதலியா.. அல்லது நிச்சயம் செய்த பெண்ணா.. என்கிற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறான் ஹீரோ. ஒருபுறம் காதலனாகவும் மறுபுறம் மாப்பிள்ளையாகவும் நடிக்கிறான். ஒருகட்டத்தில் குட்டு வெளிப்படுகிறது. இறுதியில் யாருடன் சேர்கிறான் என்பதை ஒரு திருப்பத்துடன் சொல்லவேண்டும்.

அவ்வளவு கதைகளை அலசி ஆராய்ந்து இறுதியில் தமிழ் கூறும் திரையுலகில் இதுவரை சொல்லப்படாத(!) இக்கதையைத்தான் தேர்ந்தெடுத்தார்களாம். ஆனால் இதே கதையமைப்பில் 'வீரா' என்ற ஒரு படம் வந்தது அவர்களுக்கு நினைவில்லை போலும்.  அதுசரி... 'இன்று போய் நாளை வா..' படத்தை அப்படியே சுட்டு க.ல.தி.ஆசையா என்று பெயரில் திருட்டு ரீமேக் செய்து உண்மையான படைப்பாளி கே.பாக்யராஜ்-க்கு எந்த கிரடிட்டும் கொடுக்காதவராச்சே நம்ம சந்தானம்..!

வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் படங்களில் அவர்களுக்கு இணையான பாத்திரம் வேண்டுமென்று அடம்பிடித்து, தன்னையையும் ஒரு ஹீரோவாக 'பில்டப்' செய்துகொண்ட சந்தானம், வ.பு.ஆயுதம் படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். முதல் அடியே சறுக்கியது. அதில் கற்ற பாடத்தை முன் அனுபவமாகக் கொண்டு அடுத்தப் படத்தில் பட்டையைக் கிளப்புவார் எனப் பார்த்தால், நான் இனிமே அப்படித்தான் என்று குழப்பிய அதே குட்டையில் மீன் பிடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகரை... திரையில் பார்த்தாலே சிரிக்கத்தோன்றும் முக அமைப்பு உடைய ஒரு நடிகரை..  ஒரு ரொமான்ஸ் அமுல் பேபியாகக் காண்பித்தால் எப்படியிருக்கும்..?  நாயகி பின்னால் காதலைச் சொல்ல அலைவது.... காதலை நிரூபித்து அவளைக் கவர விபரீத செயல்களை செய்வது... காதல் கை கூடியவுடன் விதவிதமான காஸ்டியூமில் டூயட் பாடுவது... தமிழ்சினிமாவின் இது போன்ற  கிளிசே வகை காட்சிகளில் நடிக்க சந்தானம் எதற்கு..? இளம் ஹீரோக்கள் யாரையாவது போட்டு எடுத்திருக்கலாமே..

படம் முழுக்க கலர்கலரான டீஷர்ட்' , விதவிதமான ஜீன்ஸ் பேன்ட், உயர்ரக சப்பாத்து என ஒரு 'ஹைகிளாஸ்' இளைஞனாக வருகிறார் சந்தானம். சமையலறைக்குக் கூட அதே 'ஷு ' வுடன்தான் செல்கிறார். தன் காதலி கொடுத்த பரிசைத் தேடும்போது அதே 'ஷு 'வுடன் தான் படுக்கும் கட்டிலின் மேலே ஏறித் தேடுகிறார். தனது தாய் மாமாவை(தம்பி ராமையா) சர்வ சாதாரணமாக வாடா போடா என அழைக்கிறார். வழக்கமான நக்கலும் உடல்மொழியும் அவரிடம் இல்லை. அவர் பேச்சில் அந்தத் தொனியும் இல்லை. ரொமான்ஸ் காட்சிகளில் வழிகிறார். மொத்தத்தில் 'நம்ம சந்தானம்' நம்மிடமிருந்து கொஞ்சம் விலகியே நிற்கிறார் . எங்கு தேடினாலும் நல்லதம்பியும் பார்த்தசாரதியும் கிடைக்கவே இல்லை.

ஒரு நகைச்சுவை நடிகர் ஒரே பாய்ச்சலில் நாயகனாக பதவி உயர்வு அடையும் போது தனது பழைய பாணியை கைவிட்டு புதிய பாணியில் நடிப்பதில் என்ன தவறு.?. நல்ல கேள்விதான். ஆரம்பத்தில் வில்லனாக தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய நிறைய நடிகர்கள் பிற்காலத்தில் ஹீரோவாக சக்கைப்போடு போடுவது நிகழ்கால தமிழ்ச்சினிமா வரலாறு. ஆனால் ஒன்றை யோசித்துக் பாருங்கள். நகைச்சுவை நாயகர்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு..?. அவர்களை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நம்மிடம் இல்லையா..?.  காரணம் அதுவல்ல.

வில்லனாக அறிமுகமாகி முத்திரைப் பதித்து பின்பு கதாநாயக அந்தஸ்தை அடைந்தவர்களைப் பட்டியலிட்டு பாருங்கள்; புரியும். வில்லனாக நடிக்கும்பொழுது தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டவர்கள் ஹீரோவான பின்பும் அதே ஸ்டைலை பின்பற்ற செய்வார்கள். நிரம்ப கெட்டவனாக நடித்த ஒரு நடிகர், திடீரென்று நிரம்ப நல்லவனாக நடித்தால் நமது சினிமா புத்தி ஏற்றுக்கொள்ளாது. சத்யராஜ், ரஜினி,கமல்,பிரபு போன்ற நடிகர்கள் வில்லனிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தப் போதும் தனது பழைய வில்லத்தனம் அடுத்தடுத்து வந்தப் படங்களில் சிறிதளவாவது இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள்.

அதேப்போல நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுக்கும்பொழுது  தனது பழைய பாணியை மொத்தமாக மாற்றாமல் நகைச்சுவையோடு பின்னிப் பிணைந்த கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கதையில் காமெடி வரக் கூடாது. காமெடியில் கதைவர வேண்டும். இம்சை அரசனின் மெகா வெற்றியும், நான் தான் பாலாவின் படுதோல்வியும் அதைத்தான் உணர்த்துகிறது.  தனது காமெடி இமேஜை மொத்தமாக தூக்கி எறிந்துவிட்டு ரொமான்ஸ் அல்லது ஆக்சன் ஹீரோவாக மட்டும்தான் இனிமேல் நடிப்பேன் என்கிற முடிவுக்கு சந்தானம் வருவார் எனில் , அவரது சீட்டின் அடியில் அவரே வெடிவைத்துக் கொள்கிறார் என்று அர்த்தம்.

இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க என கேட்பது புரியுது. சந்தானத்தை ஒரு ரொமான்ஸ் ஹீரோவா ஏத்துக்க முடியல பாஸ்.. அவர் டூயட் ஆடுவதையும் பைட் பண்ணுவதையும் பார்க்கவா நாங்க தியேட்டருக்கு போறோம்..?அதைத்தான் இப்போ வருகிற எல்லா ஹீரோக்களும் செய்கிறார்களே...!


அதெல்லாம் விடுங்க.. படம் எப்படி இருக்கு...?
டத்தில் மொக்கை காமெடியா சொல்லி வெறுப்பேத்துவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பத்து நிமிடத்திற்கு ஒரு பாட்டை போட்டு கொலையா கொல்றாங்க. அத்தனைப் பாட்டுக்கும் சந்தானம் டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ணுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அடுத்த பிரபுதேவா ஆவதுதான் அவரது அடுத்த இலக்கு போல..

" டே.... ய். மெகா சீரியல் பாத்து அழுவாத பொம்பளையும் கிடையாது.. மேரேஜ் சிடி பாத்து அழுவாத ஆம்பளையும் கிடையாது.."

"பொண்ணு லட்டு மாதிரி இருக்கும் தம்பி.." ..  "லட்டு மாதிரினா.. மூஞ்சில திராட்சை, முந்திரி எல்லாம் ஒட்டியிருக்குமா.."

இதற்கெல்லாம் நம்மை சிரிக்க சொல்றாங்க பாஸ். கட்டாயம் சிரித்தே ஆகவேண்டும் என்றால், விஜய் டிவி சிரிச்சா போச்சி ரவுண்டுல இப்போ நேரா வந்து கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறாங்களாம். அதுமாதிரி யாராவது ஒரு ஆளை செட் பண்ணி படம் பார்க்க வருகிறவர்களை கிச்சு கிச்சு மூட்டினால் தான் உண்டு. என்னை விட்டால் இதே மாதிரி மொக்கை வசனங்கள் பக்கம் பக்கமா எழுதுவேன். இதைத் தவிர்த்து காட்சியமைப்பில் நகைச்சுவை வைத்திருக்கலாம்.

இதில என்ன கொடுமை என்றால் இந்த மொக்கை ஜோக்குக்கு எல்லாம் பின்னாடி உட்கார்ந்திருந்த ஒருத்தர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். படம் முடிந்த பிறகு, கள்ளங்கபடமில்லா அந்த பிஞ்சு முகத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். படம் முடிந்து பார்த்தால் அவர் கொஞ்சம் வயதான ஆள். அவருக்கு உடம்பு சரியில்லை போல. ஏசி காற்று ஒத்துக் கொள்ளாமல் இருமிக்கிட்டு இருந்திருக்காரு.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சந்தானத்துக்கு மாறி மாறி முத்தம் கொடுப்பதற்கே இருவருக்கும் நேரம் போதவில்லை. VTV கணேஷ் மற்றும் தம்பி ராமையா இருக்கிறார்கள்... இருக்கிறார்கள்...! தவளை புகுந்த தொண்டையை வச்சி இவர் பேசுறத கேட்பதற்கு இனிமேல் நமக்கு சக்தி கிடையாது. "இங்க என்ன சொல்லுது.." என்கிற ஒற்றை டயலாக்கில் நம் நெஞ்சாங்கூட்டை தொட்டவர், இதில் தொட்டதுக்கெல்லாம் பேசிக்கொண்டே இருக்கிறார். 'தம்பி' ராமையா.. மொதல்ல உங்க பெயரை 'அண்ணன்' ராமையா என மாற்றுங்கள். இந்த வயசான காலத்துல பேரன் வயதில் இருக்கும் ஒருவர் உங்களை 'வாடா.. போடா..' என்று அழைப்பது எங்களுக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. " நேசனல் அவார்டு எல்லாம் வாங்கியிருக்கேன். வாங்கடா..போங்கடானாவது பேசுயா.." என சொல்லியிருக்க வேண்டாமா..?

லாஜிக் மிஸ்டேக் பத்தியெல்லாம் எதுவும் சொல்லப் போறதில்லை. ஹீரோயின் எத்தனை நைட்டீஸ் வச்சிருக்கார்... எத்தனை பேண்டீஸ் வச்சியிருக்கார்.. அதை இப்போ யார்யார் போட்டிருக்காங்க என்பதை பற்றியெல்லாம் ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்கிறவர், 'அவளுக்கு ஒரு அக்கா இருக்கா..' என அவளது தோழியிடம் அப்பாவியாய் கேட்கும்போது லாஜிக் பல்லிளிக்கிறது.

படத்துக்கு பட்ஜெட் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் பட்ஜெட்ல பாதி சந்தானத்துக்கு டீஷர்ட் வாங்குவதிலே செலவாகியிருக்கும். ஒரு ஃபிரேமுக்கு ஒரு டீஷர்ட்-ல் வருகிறார். ஆர்யா இடத்தை பிடிக்காமல் விடமாட்டார் போல.. :​- ).

முன்பாதி மசமச வென்று நகர்கிறது. பின்பாதி சவசவ என என்று செல்கிறது. கடைசி 15 நிமிடங்களில் வரும் திருப்பங்கள் ஓரளவு படத்தைக் காப்பற்றுகிறது. அந்த கிளைமாக்ஸ் எதிர்பாராதுதான். இரண்டே கால் மணிநேர படத்தில் அது ஒன்று மட்டுமே ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுத்துவிடுமா..?  

வீக் எண்டுல வீட்ல இருந்தா வேலை செய்ய சொல்லிடுவாங்களா என்கிற அச்சத்தில் இருப்பவர்களும், அக்னி வெய்யிலின் அனலை தாங்க முடியாம 2 மணி நேரம் ஏசியில் உக்கார்ந்தா தேவல.. என்று ஃபீல் பண்ணுகிறவர்களும் இந்தப் படத்திற்கு போய்விட்டு வரலாம்.