Monday 25 June 2012

மனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி...பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா?

சில நாட்களுக்கு முன்பு கவிஞரும் உயிர்மை இதழின் ஆசிரியருமான திரு மனுஷ்ய புத்திரன் அவர்கள் பாடல் எழுதிய கலியுகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.தற்போதெல்லாம் பாடல் வெளியீட்டு விழா என்றாலே புதுப்பாடல்களுடன் சச்சரவும் வாக்குவாதமும் சேர்த்தே வெளியிடப்படும் என்பது எழுதாத விதியாக உள்ளது.திரைத்துறையினர்  தங்கள் மனக்குமறலை வீசி இறைக்கும் இடமாகத்தான் பாடல் வெளியீட்டு விழா மேடையை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சன உண்மை.

    அப்படி ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் நடந்தது.சமீபத்தில் வெளியான குங்குமம் இதழில் 'வழக்கு
எண்' படத்தைப் பற்றி திரு மனுஷ்யப் புத்திரன் அவர்கள், அவரின் எண்ண ஓட்டத்தில் உள்ள கருத்துகளை அவருடைய பார்வையில் எழுதியிருந்தார்.இந்த விமர்சனம்தான் கலியுகம் பாடல் வெளியீட்டு மேடையில் வாக்குவாதமாக முடிந்தது.அவரின் விமர்சனத்தை கண்டித்த கவிஞர் அறிவுமதி,எங்களை கை காட்ட உங்களுக்கு அருகதை இல்லை என்ற ரீதியில் பேசியிருந்தார்.அதற்கான காணொளியையும் அதன் தொடர்பான விளக்கங்களும் கீழே...



 ( நன்றி-நக்கீரன் )



வழக்கு எண் 18/9 பற்றி திரு.மனுஷ்யபுத்திரன் அவர்கள்  குங்குமத்தில் எழுதியது இதுதான்.

ஏழை படும் பாடு

    கொஞ்ச நாளாக ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். தலைப்பு. ’ஏழை படும் பாடு’ ஒன்லைனர் சொல்லி விடுகிறேன்.ஏழைகள் ஏழைகளைக் காதலிப்பார்கள். பிளாட்பாரத்திலேயே வசிப்பார்கள். ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள். பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள்.சமூகம் எப்போதும் ஏழைகளைக் கொடுமைப்படுத்தும்.ஏழைகள் கொடுமை தாங்காமல் செத்துப்போவார்கள் அல்லது யாராவது ஒரு ஏழை ஒரு பணக்காரனையோ அரசியல்வாதியையோ போலீஸ்காரனையோ கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவான். ஆடியன்ஸ் பாப்கார்ன்,ஐஸ்க்ரீம்,ஏ.சி சகிதமாக குற்ற உணர்வுடன் கைதட்டி ஆரவாரிப்பார்கள். வசூலும் அவார்டுகளும் பாராட்டுகளும் நிச்சயம்.

ஏழைகளுக்கும் நிறைய சுக துக்கங்கள் இருக்கின்றன.அவர்களுக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது.வறுமையைத் தவிரவும் அவர்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.அதிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.நாம் அதையெல்லாம் எப்போது பார்க்கப் போகிறோம்? எதற்கு அந்தப் போலி மனிதாபிமான நாடகம்? வாழ்க்கை என்பதும் கலை என்பதும் பணம்,வறுமை என்கிற ஒற்றைப்டையான கறுப்பு- வெள்ளை சித்திரமல்ல. நமது குற்ற உணர்வை சொரிந்துகொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் அவர்களுக்காக செய்யப் போவதுமில்லை.

வழக்கு எண் 18/9 இந்த ஆண்டின் சிறந்த படமாகக் கருதப்படுகிறது...

  
  சினிமாவும் பத்திரிக்கையும் கலைத்தாயின் தவப்புதல்வர்கள்.சினிமாவுக்கு முன் பத்திரிகை தோன்றிற்று. அந்த வகையில் சினிமாவுக்கு பத்திரிக்கைகள் அண்ணன்கள்.தம்பி தவறு செய்யும் போது அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தவறை சுட்டிகாட்டுவது எந்தவிதத்தில் குற்றமாயிற்று?

    சினிமாவை பற்றி ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை சமூக நோக்கோடு இருக்க வேண்டும்.அது சொல்லிய விசயத்தை விட சொல்ல வந்த விஷயம் என்ன என்பதை ஆராயும் பொறுப்பு பத்திரிக்கையாளனுக்கு கண்டிப்பாக இருக்கிறது.புரியவில்லை என்றால்..பல வருடங்களுக்கு முன் ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இங்கே ஒரு உதாரணமாக தெரியப்படுத்த விழைகிறேன்.
 
    1996 -97  ல் வந்த படம் என்று நினைக்கிறேன்.கார்த்திக் நடித்திருந்த அந்தப் படத்தின் பெயர் கிழக்குமுகம். 'உள்ளத்தை அள்ளித்தா' படமும் இதுவும் ஒரே நாளில் வெளியாக,இரண்டு படத்தயாரிப்பாளர்களும் கோர்ட் படியேறி, கடைசியில் உள்ளத்தை அள்ளித்தா முதலில் வெளிவர,அதற்கடுத்த வாரம் இந்தப்படம் வெளியானது.பிரச்சனை
இதுல்ல....
 
      நான் சொல்லப்போவது கிழக்குமுகம் படத்தின் கதையைப் பற்றிதான்.இந்தப் படத்தின் கதைக்கரு தீண்டாமை ஒழிப்புப் பற்றியது.தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமூகம் எவ்வாறு ஒதுக்கி வைக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டுவதுடன்,தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒருவன் உயர்சாதிப் பெண்ணை ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுவதுடன் அதற்கான தீர்வையும் இந்தப் படம் மக்களுக்கு ஒரு பாடமாகக் கற்பிக்கிறது. இந்தப் படத்தை இயக்கிய டைரக்டரை கேட்டிருந்தால் இப்படி
த்தான் விளக்கியிருப்பார்.

      இந்தப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தொலைக்கட்சியில் ஒரு காட்சியை தொடர்ந்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.கல்லூரியில் படிக்கும் கார்த்திக்-ன் தங்கையை,உடன் படிக்கும் சக மாணவர்கள் ஜாதியைச் சொல்லி கேலிசெய்து விடுவார்கள்.கல்லூரிக்குச் செல்லமாட்டேன் என்று தன் அண்ணனான கார்த்திக்கிடம் தெரிவிக்க,அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட கார்த்திக், அவரை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்கு செல்வார்.அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை நிறுத்தச்சொல்லிவிட்டு,தன் தங்கையுடன் மேடை ஏறுவார் கார்த்திக்.அங்கே உள்ள கரும்பலகையின் மேலே"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."எனத் தொடங்கும் பாரதியின் புரட்சி வரிகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் காண்பித்து ஒரு உபதேசம் கொடுப்பார் கார்த்திக்.இறுதியில் அந்த மாணவர்கள் தலைகுனிவதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.அந்தக்
காட்சி அவ்வளவு உணர்ச்சி மயமாய் இருக்காது.ஆனால் ஏதோ ஒரு சமுதாய பிரச்னையை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அந்தப் படத்திற்கு சென்றேன்.

  அந்தப்படத்தின் கதை இதுதான்.படத்தின் நாயகன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவன்.பிணம் எரிக்கும் வெட்டியான் தொழில் செய்பவன்.அவனின் தங்கை படிக்கும் கல்லூரியில்தான் படத்தின் நாயகியும் படிக்கிறாள்.தன் தங்கை அவளால் 'ஈவ்டீசிங்' செய்யப்பட,அதன் மூலம் நாயகனுக்கும் நாயகிக்கும் மோதல் வந்து கடைசியில் காதலாக மாறிவிடுகிறது.அந்த நாயகி,உயர் சாதிக் குடும்பத்தை சேர்ந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகள்.

  இந்த விஷயம் அவருக்கு தெரிய வர,ஒரு தாழ்த்தப்பட்டவனா தனக்கு மாப்பிளையாக வருவது என்று கடும் சினம் கொண்டு,அவர் சாதியை சேர்ந்த இன்னொருவருக்கு நிச்சயம் செய்து விடுகிறார்.இதற்குப் பிறகுதான் கதையில் திருப்புமுனை.நாயகியின் தாய் மாமனுக்கும் நாயகனுக்கும் வேறொரு விசயத்தில் பிரச்சனையாகி பஞ்சாயத்து வரை செல்ல,அப்போதுதான் நாயகனின் பிளாஷ்பேக் சொல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது..அது அவர் ரத்தத்தில் சமஸ்கிருதம் 'ஊறி' இருப்பதாக தெரிய வரும் போது.......

      பிளாஷ்பேக்கில் அவர் ஒரு பிராமணர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தன் தாய் தந்தையை இழந்து விட,ஒரு அரிஜன பெண்ணால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன்தான் நம் நாயகன்.இந்த விஷயம் பஞ்சாயத்து தலைவருக்கு தெரிய வர,பிறப்பால் பிராமணான நாயகனுக்கு தன மகளை கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறார்.இதற்கிடையே நாயகனின் தங்கையை நாயகியின் தாய்மாமன் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட அந்த அரிசனப் பெண் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இறுதியில் நாயகனு
க்கும் நாயகிக்கும் திருமணம் நடக்கிறது.சுபம்.

     இந்தப் படத்தைப் பார்த்தபிறகு என்னுள் எழும்பிய ஆதங்கம் இதுதான்... இவர்கள் சொல்ல வந்த கருத்து என்ன?..

     ஹரிஜன் என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒருவன் பிறப்பால் பிராமிணன் என்றால் அவர் உயர்சாதிக்காரன்...அல்லது  உன்னை ஹரிஜன் என்று நினைத்தேன் ஆனால் உன் உடம்பில் ஓடுவது பிராமின ரத்தம் அதனால் நீ உயர்ந்தவன் என்றா?... ஒருவேளை இயக்குனர் கதை சொல்லும்போது இப்படி சொல்லியிருப்பார்."முதல்ல நம்ம ஹீரோவை ஒரு ஹரிஜனா காண்பிக்கிறோம்.அப்ப ஆடியன்சுக்கு நம்ம ஹீரோமேல வெறுப்பு வரும். கிளைமாக்சில நம்ம ஹீரோ ஹரிஜன் அல்ல அவன் ஒரு பிராமின் என்று 'டிவிஸ்ட்'வைக்கிறோம்.அப்போ ஆடியன்சுக்கு நம்ம ஹீரோ மேல நல்ல மதிப்பு வந்திடும்".இது தாழ்த்தப்பட்டவர்களை இன்னும் அடிமட்டதிற்கு கொண்டு செல்லும் கதைக் கருவல்லவா? அவர்கள் இடத்திலிருந்து இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா? தாழ்த்தப் பட்டவர்களை இதைவிடக் கேவலப்படுத்தி  யாரும் கதை எழுத முடியாது.பிறப்பால் தான் ஒரு பிராமிணன் என்று தெரிந்தப்பிறகும் ஒரு ஹரிஜனப் பெண்ணை மணந்தால்,அதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்...

 இந்தப்படம் வெளிவந்தபிறகு பிரபல பத்திரிகைகளில் இதைப்பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்களா என்று தேடினேன்.வழக்கம் போலவே..பாடல்கள் நன்றாக வந்திருக்கலாம்...ஹீரோயின் முதிர்ச்சியாக தெரிகிறார்...ஹீரோவின் தங்கையின் ஜாக்கெட்டில் ஒரு பட்டன் மிஸ்ஸிங்..காமெடியில் சுவாரஸ்யம் இல்லை என்ற ரீதியிலே இருந்தது.
 
   ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிப்பது தணிக்கை அதிகாரிகள் அல்ல. அவர்களின் நோக்கமே,இரட்டை அர்த்த வசனம் வருகிறதா,தாவணி விலகுகிறதா,சரச சல்லாப கட்சிகள் இருக்கிறதா என்பதை கவனிப்பதில் இருக்குமேத் தவிர,அந்தப் படத்தின் கதைக்கரு மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கும் வகையில் இருக்காது. அவர்கள் விட்ட அந்தப் பணியைத்தான் பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள்.

    தற்போதுள்ள காலகட்டத்தில்,படம் வெளியாகி அடுத்த சில மணித்துளிகளில் கடுமையான விமர்சனங்கள் பதிவுலகில் பதிவேற்றப்படுகிறது.அதில் ஒரு சில அறிவுஜீவிகளின் விமர்சனங்கள் இவ்வாறாகத்தான் இருக்
கிறது."படம் செம மொக்க","உலக மகா கடி","ஒரு முழம் கயிறு இருந்தா அங்கேயே மாட்டிருப்பேன்". அதற்கு வரும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும்  "நல்லவேளை..படத்திற்கு போலாம்னு இருந்தேன்.. என்னைக் காப்பாற்றிடீரே.." .இது போல விமர்சனங்கள் வேண்டுமானால் அந்தப் படத்தை பாதிக்கலாம்.

    ஆனால் இந்த மூன்றாந்தர வார்த்தைகள் எதுவும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாகத்தான் திரு மனுஷ் அவர்களின் விமர்சனம் இருக்கிறது. வழக்கு எண்- சமீபத்திய தமிழ் சினிமாவின் ஆச்சர்யம். போற்றிக் கொண்டாடப் படவேண்டிய படம்தான்.அதற்காக அதை விமர்சிக்கவே கூடாது என்பது உலகத் தரம் வாய்ந்த தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விசயமா?.. உண்மையச் சொல்லப்போனால்..படம் நன்றாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னாலும் பணிச்சுமை காரணமாக படம் பார்ப்பதை தள்ளி வைத்த நான், திரு மனுஷ் அவர்களின் விமர்சனத்தைப் படித்தப் பிறகுதான் அன்று இரவே அந்தப் படத்தைப் பார்த்து முடித்தேன்.ஒரு நல்ல,ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனம் எந்த ஒரு சினிமாவின் வெற்றியையும் கண்டிப்பாக பாதிக்காது என்பதே  என் கருத்து.... 



 -----------------------------------(((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))-------------------------













13 comments:

  1. அருமையாய் துவங்கி நச்சென்று முடித்துவிட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூடத்திற்கு நன்றி நண்பா

      Delete
  2. விமர்சிக்க தகுதி இருக்கா என சொல்ல யாருக்கும் தகுதி இல்லை, கடவுள் என்ற வஸ்த்து உட்பட அனைத்தும் விமர்சனத்திற்குட்பட்டவையே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.கருத்துக்கு நன்றி.

      Delete
  3. இந்த மனுஷ்யபுத்திரனின் புலம்பல் தான் ஒரு படத்தின் வெற்றியை பாதிக்கப்போகிறதா என்ன ?

    மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பிரச்சினை என்றால் அவர் இப்போது ஒரு கம்பெனிக்கு முதலாளி. முதலாளி யார் மாதிரி சிந்திக்க முடியும் ? முதலாளிகள் மாதிரி தான் சிந்திக்க முடியும் !

    ’ஒவ்வொரு சொல்லுக்கு செயலுக்கும் பின்னல் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது’ என்று மார்க்ஸ் சொன்னாரே அது இதைத் தான்.

    பாலாஜி சக்திவேல் என்கிற நேர்மையான மனிதன் இந்த கேடுகெட்ட தமிழ் சினிமாவிற்குள்ளிருந்து கொண்டு சமூகத்திலுள்ள வர்க்க முரண்பாட்டை பிரச்சார நெடியின்றி அழகான ஒரு கலைப் படைப்பாக்கியிருப்பது இந்த ’முதலாளி’க்கு பிடிக்கவில்லை. இவருடைய புலம்பலுக்கு அது தான் காரணம்.

    ஏழைகள் என்றால் நல்லவர்கள் பணக்காரர்கள் என்றால் கெட்டவர்களா என்று கேட்கிறார் மனுஷ். ஆம் எழுத்தாளரே ஏழைகள் என்றால் நல்லவர்கள் தான். பெரும்பான்மை ஏழை மக்கள் நேர்மையாக உழைத்து வாழும் நல்லவர்கள் தான். சிறுபான்மை ஏழைகள் தவறானவர்களாக இருப்பதற்கும் பணக்கார கூட்டம் தான் காரணம். பணக்காரர்களின் நலன்களைக் காப்பதற்காகவே இருக்கும் இந்த முதலாளித்துவ சமூகம் தான் அந்த சிறுபான்மை ஏழைகளையும் தவறான வழிகளில் தள்ளிவிடுகிறது.

    அதே போல பணக்காரர்கள் மோசமானவர்கள் தான் ஏமாற்றுப்பேர்வழிகள் தான் அதில் என்ன உங்களுக்கு சந்தேகம். சோற்றுக்காக ஏழைகள் உழைத்துத் தின்கிறார்கள். எந்த பணக்காரன் உழைக்கிறான். ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி தான் தின்கிறான். உழைப்பைச் சுரண்டுபவன் உங்களுக்கு நல்லவனாக தெரிகிறானா ?

    இவர் பணக்காரர்களுக்காக பரிந்து பேச காரணம் இவரும் ஒரு பணக்காரர் என்பதே.

    இவரும் ஏழை மக்களை பற்றி ஒன்றும் எழுத மாட்டார், பேசவும் மாட்டார். மாறாக சூக்கும கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பார்.பாலாஜி சக்திவேல் போன்ற சில அரிய படைப்பாளிகள் இது போன்ற சிறந்த படைப்புகளை செய்துவிட்டால் அதைப்பற்றியும் புலம்புகிறார் என்றால் அதற்கு பின்னால் இருப்பது இவருடைய பணக்காரத்தனமும், பணக்கார வர்க்கத்திற்கே உரிய ‘பயமும்’ தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. இது போன்ற கலைப்படைப்புகள் ஏழைகளை பற்றிக்கொண்டால் அடுத்து என்னவாகும் என்கிற ஆளும் வர்க்கத்தின் ’பயம்’ அது !

    வழக்கு எண் பற்றிய ஒரு சரியான பார்வை
    http://www.vinavu.com/2012/06/13/vazhakku-enn-18-9-movie-review/#comments

    ReplyDelete
    Replies
    1. உங்களின் உலகளாவிய பின்னூடத்திற்கு நன்றி...இங்கு நான் வழக்கு எண்-ப்பற்றி பேசவில்லை.அது சமீபத்திய தமிழ் சினிமாவின் உச்சம்.அதில் மாற்றுக்கருத்தேதுமில்லை.அதேபோல் திரு மனுஷ் அவர்களின் தனிப்பட்ட விஷயம் எதையும் நான் ஆராய விரும்பவில்லை.அவர் ஏழையோ பணக்காரரோ அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.அவர் மீதான என் பார்வை ஒரு பத்திரிக்கையாளர்-எழுத்தாளர் என்பது மட்டுமே.சினிமாவைப் பற்றிய பத்திரிக்கையாளர்களின் பார்வை எப்படியிருக்க வேண்டும் என்பதைத்தான் நான் உதாரணத்தோடு விளக்கியிருந்தேன்.

      தணிக்கை குழு என்பது நம் நாட்டில் சம்பிரதாயம்தான்.சென்னையில் தணிக்கை அதிகாரிகளால் ஏற்கப்படாத ஒரு படம் பாம்பேயில் ஏற்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடப்படுகிறது.தணிக்கைக் குழுவின் வேலையே அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு,அவர்களின் கொள்கைக்கு ஒவ்வாத காட்சிகளையும் வசனங்களையும் வெட்டி எறிவதுதான்.ஆனால் அதையும் தாண்டி அந்தப் படம் மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி சிந்தித்து தெரியப்படுத்த வேண்டியது ஒரு பத்திரிக்கையாளரின் தலையாய கடமை.சத்யஜித்ரே படங்கள் கூட விமர்சனத்துக்கு ஆட்பட்டதுதான்.வழக்கு எண்-ஐ விட்டு விடுங்கள்.திரு மனுஷ அவர்களையும் மறந்து விடுங்கள்."ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு உனக்கு அருகதை இல்லை" என்ற அந்த வாக்கியத்திற்காகத்தான் இந்தப் பதிவேத் தவிர திரு மனுஷ்ய புத்திரன் அவர்களை தூக்கிப் பிடிக்க அல்ல...

      Delete
    2. ///ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு உனக்கு அருகதை இல்லை" என்ற அந்த வாக்கியத்திற்காகத்தான் இந்தப் பதிவேத் தவிர திரு மனுஷ்ய புத்திரன் அவர்களை தூக்கிப் பிடிக்க அல்ல...///



      ஓ அறிவுமதி அப்படியா பேசியிருக்கிறார் ? அப்படி பேசுவது தவறு தான். அதற்கு பதிலாக அந்த மேடையிலேயே மனுஷ்யபுத்திரனையும் அவருடைய விமர்சனம் என்கிற புலம்பலையும் அம்பலப்படுத்திருக்க வேண்டும். அறிவுமதி சற்று தடுமாறியிருக்கிறார் போலும். மற்றபடி நீங்கள் மனுஷ்யபுத்திரனை தூக்கிப்பிடிக்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை மணிமாறன் தவறாக பொருள்படும் படும்படி ஏதும் கூறியிருப்பின் மன்னிக்கவும்.

      நன்றி.

      Delete
  4. சில நேரம் விமர்சனங்களும் விமர்சனத்திற்குள்ளாகிறதே....

    விஷயங்கள் சொல்லிய விதம் ஓகே.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ்...

      Delete
  5. தங்கள் கருத்துக்கு நன்றி ....

    ReplyDelete
  6. மனுஷ்ய புத்திரன்னு ஒருத்தரு..அவரு வழக்கு எண் 18 /9 ..படத்த பத்தி மட்டமா விமர்சனம் செய்தருனு ஒரு பெரிய issue போச்சு ..சரி நடுநிலையான விமர்சகர்னு நினச்சு அவர் பாடல் எழுதிய கலியுகம் படத்தை promote செய்த face book லிங்க் கில் என் விமர்சனம் எழுதினேன் ..மனிதர் என்னை ப்ளாக் செய்து விட்டார் என்ன ஒரு நிலைப்பாடு. பாவம் பாலாஜி சக்தி வேல்கு இவரை போல கமுக்கமாய் பிளாக் செய்யும் வழி இல்லையே ...அது சரி எங்கங்க அவரு அந்த "கலிகாலம்" படம் வந்து (!?) சூப்பர் டூபர் ஹிட் ஆகி பொட்டிக்குள்ள போயிடுச்சு அத விமர்சனம் பண்ணவே இல்ல அவரு ..ஒருவேளை payment ஏதும் பெண்டிங் இருக்கும் போல செட்டில் ஆனப்புறம் பண்ணுவாரு ...

    ReplyDelete
  7. அப்புடியே இதையும் கொஞ்சம் பார்த்திடுங்க ..http://www.eppoodi.blogspot.in/2012/04/blog-post.html

    ReplyDelete