Friday 1 February 2013

உலகத்தரத்தில் விஸ்வரூபம் -கமல் செய்த வரலாற்று பிழை..


மிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு நகர்த்தும் கலைஞானி கமல்ஹாசனின் மற்றுமொரு விஸ்வரூப முயற்சி.படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு பிரேமிலும் உலகநாயகனின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

அல்-குவைதா தீவிரவாத அமைப்பின் நியுக்ளியர் தாக்குதலிலிருந்து அமெரிக்காவை காப்பதற்காக கமல் எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் ஒன் லைன்.அந்நிய சக்தியிடமிருந்து காலங்காலமாக கேப்டனும் அர்ஜுனும் மாறி மாறி போராடி இந்தியாவை மீட்டுக்கொடுத்துவிட்டதால், இதில் கமலுக்கு அமெரிக்காவை மீட்கும் வேலை. வழக்கமாக அமெரிக்க FBI க்கும் ரஷ்ய உளவாளிக்கும் இடையே நடக்கும் மோதலை காண்பித்தே ஜல்லியடித்திக் கொண்டிருந்த ஹாலிவுட் பட பாணியிலிருந்து அல்-குவைதா-இந்திய உளவாளி என வேறு கோணத்தில் சிந்தித்திருக்கிறார்.

சரி.... அமெரிக்காவுக்கு மட்டும்தான் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா..இந்தியாவில் இல்லையா....? இந்தியாவை காப்பது போல் எடுக்கக் கூடாதா...என 'லாஜிக் மிஸ்டேக் அண்ணன்'
விமர்சனத்தில் ஏதாவது கேள்விகேட்டு விடுவாரோ என்று பயந்து(!?) இறுதியில்  Comming soon...VISHWAROOPAM-II...ln India...என முடிக்கிறார்.

இதில் கமலுக்கு  விஸ்வநாத்,விஸாம், தா.'.பிக்(ஏதோ ஒன்னு..வாயில நுழையில ) என மூன்று அவதாரம். முதல் பகுதி அமெரிக்காவில் விரிகிறது.கமலின் நிஜ வாழ்க்கையில் வாழ நினைத்த 'லிவிங் டுகெதர்' பாலிசியில் பூஜா குமாருடன் வாழ்வதாகக் காட்டப்படுகிறது.அச்சு அசலான கதக் டான்ஸ் மாஸ்டராக வரும் விஸ்வநாத் கமலின் நடிப்பு அபாரம்.பெண்ணின் நளினங்கள்,நடன மாடும் கண்கள்,பேச்சில் தெறிக்கும் பெண்மை என இம்மி பிசகினாலும் வேறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் ரிஸ்கான பாத்திரப்படைப்பு.


 ப்ப்ப்பா....பூஜா குமாரா இது....???!!! 'இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது'  என காதல் ரோஜாவில் கசிந்துருகச் செய்த கொழு பொம்மையா இது.வயசு ஆக ஆக பெண்களின் அழகும் வசீகரமும் குறைந்து விடும்னு எவன் சொன்னான்..? முப்பத்தாறு வயது கொஞ்சம் கூட முகத்தில் தெரியவில்லை.கமலைப்பற்றி ஒவ்வொரு விசயமும் தெரியவரும் போது ஆச்சர்யத்தில் அவர் கண்களில் காட்டும் உணர்ச்சிகள் அடடா...! அவ்வளவு அழகு..!!! அடியேனை அவரின் அடி மட்ட ரசிகனாக்கி விட்டது... :-))  அவ்வப்போது முன்னழகை முடிந்தவரையில் காட்ட முயற்சிப்பதால் கோயில் கட்டும் அளவுக்கு இல்லாவிட்டாலும் கோஷம் போடும் அளவுக்காவது ரசிகர்கள் அமைவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

ஆரம்பத்தில் 'அவா' பாசையுடன் மை.ம.கா.ராஜன் போல கலகலப்பாக படம் செல்வதால் எங்கே.. எப்போது... என்ன.. வெடிக்கப்போகிறதோ என்ற திகிளுணர்வு மனதுக்குள் எழுந்துகொண்டே வருகிறது. அவா கமல் திடீரென அல்லாஹு அக்பர் என மசூதிக்குள் தொழும் போது தான் படம் மின்னல் வேகம் எடுக்கிறது.

கமலும் அவரது மனைவியும் அல்கொய்தா தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொள்ள,தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் தான் யாரென்று தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் கமல் எடுக்கும் அந்த மகா விஸ்வரூபம்...ஹாலிவுட் படங்களையே மிஞ்சிவிடுகிறது! .அந்தத் தருணத்தில் படம் பார்க்கும் அனைவரும் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க ஒட்டு மொத்தத் திரையரங்கமே அதிர்கிறது.இந்த ஒரு காட்சிக்காகவே மீண்டும் ஒருமுறை படம் பார்க்கும் ஆவலில் உள்ளேன்.

கமல் உண்மையிலே யார் என்ற பிளாஷ்பேக் தாலிபான்களின் ரத்த பூமியான ஆப்கானிஸ்தானில் விரிகிறது. பாலைவனப்பகுதியும்,ஆங்காங்கே சிறு மலைகள்,குகைகள்,மணல் படிந்த வீடுகள் என ஊடகங்களில் பார்த்த அதே ஆப்கானிஸ்தானை கண் முன்னே நிறுத்துகிறார்கள். கேமராமேன் சானுவர்கீஸ் மற்றும் கலை இயக்குனருக்கும் ராயல் சல்யுட். 

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த கமல் இந்தியாவின் உளவாளியாக ஆப்கானிஸ்தான் அனுப்பி வைக்கப்படுகிறார்.அல்-குவைதாயுடன் இணைந்து அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போல் நடித்து அவர்களையே சிக்க வைக்கிறார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை 'நியுக்ளியர் பாம்' மூலம் தகர்க்கும் திட்டத்தைக் கண்டறிகிறார்.அதை எப்படித் தடுக்கிறார் என்பதே மீதிக்கதை.

அல்-கைதாவின் தலைவனாக உமர் வேடத்தில் வில்லன் ராகுல் போஸ்.உடனிருக்கும் கமலிடம் அவ்வப்போது செமையாக பல்பு வாங்குகிறார்.கமலின் சாதூர்யத்தைப் பார்த்து "அப்பன் இல்லாதவன் எல்லாம் இப்படித்தான் ஷார்ப்பா இருப்பாங்க...உன்னை மாதிரி.." என உமர் கலாய்க்க,பதிலுக்கு "அப்பன் யாருனே தெரியாதவன் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க..உன்னை மாதிரி" என கமல் திருப்பித்தாக்க தியேட்டரில் செம விசில். கமலின் இது போன்ற வசனங்கள் படம் முழுக்க பட்டையைக் கிளப்புகிறது.
 

கமல் படம்.. ஹாலிவுட் பாணி என்று வேறு சொல்லிவிட்டார்கள்.கண்டிப்பாக ரெண்டு மூணு இடத்திலாவது 'அது' இருக்கும்னு பார்த்தால் பெருத்த ஏமாற்றம் :-(( . சும்மா சாஸ்திரத்திற்காவது ஒன்னாவது இருக்க வேண்டாமா... 'அனிருத் ஆண்ட்ரியா' இருந்தும் அதுக்கு கடும் பஞ்சம்.கடைசி சீனில் கூட அது இல்லை.(இப்படியே போனால் கமலின் அடுத்தப் படத்தை கமல் ரசிகர்களாகிய எங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும்.'அது' இல்லாத பட்சத்தில் எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கமல் மீது  கேஸ் போடுவோம்.. )     
  
சுடச்சுட சிக்கனை எடுத்து " பாப்பாத்தியமா...நீ பார்த்து சொல்லு உப்பு காரம் சரியா இருக்கானு..." என கமல் ஆண்ட்ரியாவிடம் கேட்கும்போதே,கமலின் 'அக்மார்க் நக்கல்' படம் முழுவதும் விரவி இருக்கும் என்ற ஆர்வம் ஆரம்பத்திலேயே துளிர்விடுகிறது( நியாயப்படி பார்த்தால் இதுபோன்ற வசனங்களுக்காக 'நாம கோபாலன்' தான் கேஸ் போட்டிருக்கணும்....)

கமலின் வழக்கமான செண்டிமெண்ட் ஸீன் இதிலும் உண்டு.அது என்னவோ தெரியவில்லை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் உடலில் பல பாகங்கள் இருக்கும்போது அந்த இடத்தில் மட்டும் காலைத்தூக்கி அடிக்கும் பழக்கத்தை எப்போ விடப்போகிறார்களோ தெரியவில்லை.(அது என்ன .'.புட் பாலா ..?)

ஆங்கிலம் பேசுவதையே குற்றமாக நினைப்பது,குழந்தைகளை தீவிரவாதியாக மாற்றுவது,பொது இடத்தில் மரணதண்டனை என தாலிபான்களின் பிற்போக்குத் தன்மையை காட்சிகளாக நம் கண்முன்னே நிறுத்தினாலும், பெண் அடிமைத்தனம்,பெண்கள்-சிறுவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளை இன்னமும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கலாம்.

ஹேராம் படத்தில் அதுல்குல்கர்னி பேசும் வங்காள மொழியில் லயித்து பாதியிலேயே குறட்டை விட்டு தூங்கிவிட்டேன்.காந்தியை கொள்வதற்காக கமலை மூளைச்சலவை செய்யும் முக்கியமான வசனங்கள் அது.அதற்கு தமிழில் சப்-டைட்டில் போட்டிருக்கலாமே என்ற ஆதங்கம் அப்போது இருந்தது.ஆனால் அப்படி ஒரு சங்கடம் இதில் இல்லை.அல்-கைதாவினர் பேசுவதை கீழே ஆங்கிலத்தில் போடுகிறார்கள்.ஓரளவு(!?) புரிகிறது.ஆனால் ஆங்கிலத்தில் பேசும் வசனங்களை எப்படி 'சி' சென்டரில் பார்க்கும் மக்கள் புரிந்து கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.

 எது எப்படியிருந்தாலும் இது உலக நாயகனுக்கு இன்னொரு மணிமகுடம்...!!
 

தெல்லாம் சரி... இதில் இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகள் எங்கே வருகிறது..? படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை உன்னிப்பாக கவனிக்க எத்தனித்தது இந்த விசயத்தைதான்.வழக்கமான மணிரத்னம்,கேப்டன்,அர்ஜுன் படங்களில் வந்த அளவுக்குக் கூட வசனங்களோ,எந்தவொரு காட்சியமைப்போ இஸ்லாத்துக்கு எதிராக இல்லை.

பிரதான வில்லன் உமர் தமிழ் பேசுகிறார்.(இல்லாட்டி இந்தப் படத்திலேயும் குறட்டை விட்டிருப்பேன்...).எப்படி தமிழ் தெரியும் என்று கமல் கேட்க,மதுரையிலேயும்,கோயம்புத்தூரிலும் கொஞ்சநாள் தங்கியிருந்தேன்னு சொல்றார்.இதுக்கு போயி போராட்டம் செய்வாங்கன்னு தெரிந்திருந்தா,"மூன்று மாதத்தில் தமிழ் சரளமாக பேசுவது எப்படி...?"என்ற புத்தகம் படிச்சேன்னு டயலாக்க மாற்றி எழுதியிருப்பாரு.

கமலை தங்களுடன் இணைத்து கொள்ள பிரதான தீவிரவாதி உமர் சொல்லும் காரணம், ”தமிழ் ஜிகாதிகள் கிடைப்பது மிகவும் கடினம்” என்பதுதான். இதற்கு தமிழில் அர்த்தம் , தமிழ் இஸ்லாமிய தீவிரவாதிகள் மிகவும் அரிது என்பதுதான்.அப்படிஎன்றால் தமிழகத்தில் தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களே கிடையாது என்றுதானே அர்த்தம்...!

இந்தப்படத்திற்கு தமிழ் இஸ்லாமிய இயக்கங்கள் கடும் ஆட்சோபம் தெரிவிப்பதற்கு வேறு என்ன ஆணித்தரமான காரணங்கள் இருக்கிறது எனப்புரியவில்லை.மத ரீதியாக மனதைப் புண்படுத்துகிறது என்றால் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக முஸ்லிம் நாடான மலேசியாவிலும்,கடுமையான சட்ட திட்டம் உள்ள நான் வசிக்கும் சிங்கப்பூரிலும் எப்படி வெளியிட அனுமதியளித்தார்கள்...?

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.கமல் ஒரு வரலாற்று பிழையை செய்துவிட்டார்.தணிக்கை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தன் படத்தை வேறு யாருக்கும் போட்டுக் காட்டியிருக்கக் கூடாது.தமிழ் சினிமாவில் பல தொழில்நுட்பங்கள் வேருன்ற காரணமாயிருந்த பத்மஸ்ரீ கமல்ஹாசன் இந்த விசயத்தில் தவறான ஒரு விதையை விதைத்து விட்டார்.

ஒரு திரைப்படத்தால் ஒட்டு மொத்த மனித குலத்தையும் திருப்தி படுத்திவிட முடியாது.எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடும்,ஒத்தக் கருத்தும் அமைந்துவிடாது.ஒரு செயலை நியா
ப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு எதிர் மறையான செயலை தவறு என்று நிருபித்ததாக வேண்டும்.அப்படி நிருபிக்கும் பட்சத்தில் எதிர் கருத்துகளும் கண்டனங்களும் வரத்தானே செய்யும்.

இஸ்லாமிய இயக்கங்களை அழைத்துக் காண்பித்தது மூலமாக அவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் கமல் என்று தான் சொல்லவேண்டும்.ஏனென்றால் படம் வெளிவந்த பிறகு முளைக்கும் புதுப்புது விமர்சனங்களுக்கு இவர்களும் பொறுப்பாகத்தானே வேண்டும்.கமலின் கூர்மையான வசனங்களும் காட்சிப்படுத்தலும் அவரின் பரம ரசிகர்களாகிய எங்களுக்கே சில நேரங்களில் புரியாமல் போகும் போது,அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு தெளிவான புரிதல் இருக்கும்...? " படம் புரியுதே இல்லையோ..கமல் ஒரு வில்லங்கமான ஆளு.. எப்படியும் பொடி வச்சுத்தான் படம் எடுத்திருப்பாரு.. அதனால போட்டுவுடு ஒரு கேசை...வாங்கிப்போடு ஒரு தடையை.."னு போட்டுட்டாங்க...

இப்படி எல்லாப்படத்தையும் எங்களுக்கும் போட்டுக்காட்டனும்னு எல்லோரும் கிளம்பிட்டா அப்புறம் என்ன பன்றது.கடைசியா..... பாம்பு படம் எடுத்தாலும் 'எங்கே கொஞ்சம் போட்டுக் காமி...அப்பத்தான் நம்புவோம்'னு அது கிட்ட கையை நீட்டினாலும் நீட்டுவாங்க..     
  

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்றாலும், கமல் என்ற ஒரு மகா கலைஞனின் உழைப்பு,பணம்,திறமை என மொத்தமாக இந்தப்படத்தில் விதைக்கப்பட்டுள்ளது.தன் மகளோடு தன்னை இணைத்து இழிவாகப் பேசியதையும் கேட்டுவிட்டார்.அவரது புதிய முயற்சிகளுக்கு நிறைய தடவை பொருளாதார ரீதியாக மரண அடி விழுந்திருக்கிறது.இருந்தாலும் நான் வீழ்ந்ததே எழுவதற்காகத்தான் என சினிமாவிற்காகவே தன்னை அர்பணிக்கும் அந்த மகா கலைஞனுக்கு ஆதரவு கொடுப்போம்..!  

வணக்கங்களுடன்....
மணிமாறன் 

----------------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))))))))-------------------------------

15 comments:

  1. இங்கு எப்போ படம் வருகிறது...?

    ReplyDelete
    Replies
    1. முற்றிலுமாக தடை நீங்கிவிட்டது என நினைக்கிறேன்..விரையில் அந்த பாக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள்..இங்கு நேற்றே ரிலீஸ் ஆகிவிட்டது.

      Delete
  2. அன்பே சிவம் படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை அவருக்கே உரிய விதத்தில் அழகாக படம் எடுத்து சொன்ன அவருக்கு இப்போது அமெரிக்க கை கூலி, அடிவருடி என்று பல பட்டங்களை கொடுகிறார்கள்... மிக கொடுமை ...

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்

    ReplyDelete
  4. நண்பரே...
    படத்தை இஸ்லாமிய அமைப்புகளுக்கு போட்டுக்காட்டச்சொல்லி தமிழக அரசுதான் கமலுக்கு உத்தரவிட்டது.
    வேறு வழியில்லாமல் கமல் போட்டுக்காட்டினார்.

    ReplyDelete
  5. படம் பார்க்கிற ஆவலைத்தூண்டுறீங்க...எங்கே...? இங்கதான் ஜான் ஏறுனா, முழம் சறுக்குதே!

    ReplyDelete
  6. பாஸ்... நல்ல விமர்சனம்...

    ஆனா, நாங்க எப்ப படம் பாக்க போறோம்னு தெரியல...

    ReplyDelete
  7. மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

    >>>>>> Click to Read
    விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.


    .

    ReplyDelete
  8. திண்டுக்கல் தனபாலன்,UNMAIKAL ,தமிழ்வாசி பிரகாஷ்,மனக்குதிரை,Kumar ,ezilmaran ,Raj ,உலக சினிமா ரசிகன்,அனானி உள்ளிட்ட அனைவரின் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

    பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

    அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

    கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே . இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.

    ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.

    மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

    இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

    இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

    ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

    எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும்

    ReplyDelete
  10. நிசாம்
    //அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.//Anonymous//
    அந்த வசனத்தை உமர் சொல்லி முடிய அமரிக்கன் போடும் குண்டில்அத்தனை அப்பாவிகளும் கொல்லப்படுகின்றார்கள். இந்தக் காட்சியின்அர்த்தம் "அமரிக்காவின் எதிரிகள் நினைப்பதைவிட அமரிக்கா மோசமாக நடந்து கொள்ளும்" என்பதையே
    அம்புலிமாமாக் கதை படிக்கவேண்டியவர்கள் எல்லாம் ஏன் படம் பார்க்கிறீங்க?

    ReplyDelete
  11. Nizaam
    //அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.//

    அந்த வசனத்தை உமர் சொல்லி முடிய அமரிக்கன் போடும் குண்டில்அத்தனை அப்பாவிகளும் கொல்லப்படுகின்றார்கள். இந்தக் காட்சியின்அர்த்தம் "அமரிக்காவின் எதிரிகள்அமரிக்காவைப் பற்றி நினைப்பதைவிட அமரிக்கா மோசமாக நடந்து கொள்ளும்" என்பதையே
    அம்புலிமாமாக் கதை படிக்கவேண்டியவர்கள் எல்லாம் ஏன் படம் பார்க்கிறீங்க?
    அமரிக்காவூக்கு ஆதரவாக படத்தில் எங்கே காட்சியமைக்கப்பட்டிருக்கின்றது.?

    ReplyDelete