Wednesday 26 June 2013

சீனியர் வீரர்களுக்கு ஆப்பு... தோனி முடிவு சரியா..?


 லைமைத்துவத்தில் தான் ஒரு விற்பன்னர் என்பதை மீண்டும் ஒரு முறை 
அனாயசமாக ஜெயித்து நிருபித்திருக்கிறார் நம் ' தோனி '. இன்னும் அழுத்திச் சொன்னால் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளத்தில் கட்டுக்கோப்புடன் அணியை சுமந்து வெற்றிக்கரையைக் கடந்திருக்கிறது இந்த சூப்பர் சிங்கத் ' தோணி '.



எவ்வளவு  பெரிய  திறமைசாலியாக  இருந்தாலும்  வெற்றி  தோல்வியைப் பொறுத்தே அவர்களின் சாதூர்யமும்  நுண்ணறிவும்  மெச்சப்படுகிறது. அதன் நிர்ணயம்  அவரவர்  அதிஷ்டத்தைப்  பொறுத்தது என்றாலும் மிகச்சிக்கலான தருணங்களில் சமயோசித புத்திக் கூர்மையால் எடுக்கப்படும் முடிவுகள் கூட அதிஷ்டத்தைத்  தாண்டி  வெற்றியை  மிகச் சுலபமாக்குகிறது.

அந்த வகையில் சமகாலத்திய கிரிக்கெட் கேப்டன்களில் சமீபத்திய வெளிச்சம் மகேந்திர சிங் தோனி. கிரான்ட் மாஸ்டரின் மாஸ்டரே  வந்தாலும் உத்தேசிக்கவே  முடியாத  உலக ஆச்சர்யம்  ' தோனி மனசில என்ன '  என்பது தான். தோனி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ரஸ்க்கை மீறிய ரிஸ்க்.  அது சரியானதுதானா  என  யோசிப்பதற்குள் அதை வென்று
அடுத்தப் பாய்ச்சலுக்கே தயாராகிவிடுகிறார்.

சாம்பியன் கோப்பைக்கு தேர்வாகியிருந்த அணியைப்  பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.  இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் வெற்றியை தூக்கி நிறுத்திய அநேக தூண்கள் மிஸ்ஸிங்.  இவ்வளவு பெரிய வெற்றிக்குப் பின் இவ்வளவு சிறிய காலத்திற்குள் எந்த நாட்டு வீரர்களும் இப்படி பந்தாடப்பட்டிருக்க மாட்டார்கள்.  சச்சின் ஓய்வுப் பெற்றதால் அந்த  இடம் மட்டுமே காலியாகயிருக்க வேண்டும்.ஆனால் 'டாப்ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் அப்படியே அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். என்னதான் சீனியர் வீரர்கள் என்றாலும் 'கன்சிஸ்டன்சி' இல்லை என்றால் மூட்டைக்கட்ட வேண்டியதுதான் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்து சொன்னதுபோல் இருந்தது தோனி மற்றும் தேர்வாளர்களின் முடிவு.

சச்சின் போனதால் ' நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்' என அலப்பரை கொடுத்த சேவாக்-க்கு வைக்கப்பட்டது முதல் ஆப்பு.  அணியின் உள்ளே தோனியுடன் தகராறு,  வெளியே கிரிக்கெட் போர்ட்டுடன் தள்ளு முள்ளு. ஆனால் பத்து மேட்ச்சில்  ஒரே ஒரு மேட்ச் மட்டும் அடித்துவிட்டு மற்றவற்றில் வெகு நேக்காக 'டக் அவுட்' ஆவார். உலக சாதனை வச்சிருக்கோம்ல,அசைச்சிக்க முடியாது என்ற மிதப்பில் இருந்த சேவாக்கை மண்ணோடு பெயர்த்துச் சாய்க்க தோனி பயன்படுத்திய கடப்பாரைதான் 'சிகார் தவான்'. முதல் இரண்டு போட்டியிலும் தொடர் சதம் அடித்த தவான் எடுத்த மொத்த ரன்கள் 363. (தவான் தம்பி.. தங்க ' பேட் 'டை நல்லா தூக்கி பிடி.அதுவும் அந்த சேவாக் கண்ல படுற மாதிரி...)

யு டியூப்-ல் கிரிக்கெட் ஃபைட்டிங் என தேடினால் நிறைய கவுதம் காம்பீரோட வீடியோ தான் வருகிறது.ஆனால் அந்த ஆக்ரோசம் பேட்டிங் பண்ணும்போது மட்டும் சமீபத்திய போட்டிகளில் சுத்தமாக தென்படவில்லை. ஒரு FLUKE -ல ரோகித் சர்மாவை தவானுடன் களமிறக்க, நான்கு போட்டிகளிலுமே வெற்றிக்கான அடித்தளத்தை இந்த ஜோடி கச்சிதமாக அமைத்துக் கொடுத்தது.(அப்புறமென்ன... நீ பேசாம டெல்லிக்கே  போய்டு காம்பீரு..)

அடுத்த விக்கெட் நம்ம ஆல்ரவுண்டர் யுவராஜ்தான். கடுமையான நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்ததால் என்னவோ அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும்,தொடர் சொதப்பல் IPL போட்டிகள் வரை தொடர்ந்தது. ஆல்ரவுண்டராச்சே...கருணைக் காட்டப்படாதா என கண்கள் பனிக்க காத்திருந்தவரின் விக்கட்டை வீழ்த்தியது நம்ம சர் ஜடேஜாஜீ தான். (ஆறு பால்... ஆறு சிக்ஸர்.. கண்ணு முன்னால வந்து வந்து போகுது....என்ன பன்றது தம்பி. பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு,ஆனால் பில்டிங் புட்டுகிச்சேப்பா ... )


 
 அப்படியே, ஜாகிர்கானும் நெஹ்ராவும் முறையே புவனேஷ்குமார்,யாதவின் யார்க்கரில் கிளீன் போல்டாக, நான் இருக்கிற வரையில நீ உள்ள வர முடியாது மச்சி என ஹர்பஜனைப் பார்த்து செம தில்லாக கூறுகிறார் நம்ம ஊரு அஸ்வின்.இவை எல்லாவற்றையும் விட மிடில் ஆர்டரில் பீஷ்மனைப் போல் நிற்கிறார் நம்மூரு சிங்கம் தினேஷ் கார்த்திக்( ' வார்ம் அப் ' மேட்ச் எல்லாம் ரெக்கார்டுல வாராதுனு யாருச்சும் இவர் கிட்ட சொல்லுங்கப்பா)   

எந்த தைரியத்தில இப்படி ஒரு டீமை செலெக்ட் பண்ணினார் தோனி என 'டிவீட்' போட ஏற்கனவே தயாராக வைத்திருந்ததை அரக்கப் பறக்க அழித்திருக்கிறது பல கிரிக்கெட் பழங்கள். அணித்தேர்வில் இன்னொரு நெருடலும் இருந்தது. முரளி விஜய்,ரெய்னா, அஸ்வின்,ஜடேஜா இவர்களுடன் தோனி என ஐந்து பேர் CSK -ல் விளையாடியவர்கள். இந்த சலசலப்பு கூட வெற்றியின் ஆர்ப்பரிப்பால் அடங்கிப் போனது.

உலகக் கோப்பையை வென்றெடுத்த ஒரு அணியை பிரிப்பதில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதை தோனி உணராமல் இருந்திருக்க மாட்டார். அப்படி கழட்டி விடப்படும் வீரர்களின் இடத்தை நிரப்ப அவரை விட திறமையானவரை நியமிப்பதில்தான் ஒரு கேப்டனின் சவாலே இருக்கிறது.அதில் நூறு சதவித வெற்றி யடை
ந்திருக்கிறார் தோனி என்றே சொல்லலாம்.

சாம்பியன் கோப்பை இறுதிப் போட்டியின் 18 வது ஓவர். இங்கிலாந்து வெற்றி பெற 18 பந்துகளில் 28 ரன்கள் இலக்கு.ஆறு விக்கெட் அவர்களிடம் கைவசம் இருக்கிறது.மோர்கனும் போபராவும் இரும்புத்தூண்களாக இருபுறமும்.அடுத்த 19 மற்றும் 20-வது ஓவர் பவர் ப்ளே.கண்டிப்பாக அடித்து நொறுக்குவார்கள். இந்த ஓவர் தான் கோப்பை யாருக்கென்று நிர்ணயிக்கப் போகிறது. இந்த ஓவரில் இரண்டு தூண்களில் ஒன்றை சாய்த்தாக வேண்டும். என்ன முடிவெடுக்கப் போகிறார் தோனி என நூறு கோடி இந்திய உள்ளங்களும் படபடக்க, தோனி பந்து வீச அழைத்தது இசாந்த் சர்மாவை.


அதுவரையில் அதிக ரன்களை விட்டுகொடுத்திருந்த இசாந்த் சர்மாவை அழைத்தது சரியா என யோசித்துக் கொண்டிருக்கையில், இரண்டாவது பந்தில் சிக்சர் பறக்கிறது.அந்த நொடியில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட ஒரே நபர் தோனியாகத்தான் இருக்கும்.ஆனால் அதற்கான பதிலடி அடுத்த இரண்டு பந்துகளில் கொடுக்கப்பட்டதுதான் மேட்சிக்கான பெரிய ட்விஸ்ட்.இரண்டு தூண்களும் அடுத்தடுத்து தகர்க்கப் பட்டது. இதை 'லக் ' என்ற வரையறையில் கொண்டுவர முடியாது. சமீபத்திய IPL -ல் CSK விளையாடிய நிறைய போட்டிகளில் கடைசி பந்து வரை டென்சன் எகிற,முடிவில் அது CSK  க்கு சாதகமாக அமைந்ததை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும் 'லக்'கையும் மீறி தோனி எடுக்கும் நுட்பமான முடிவுகளாலே சாத்தியமானது என்று.

' கேப்டன் ' தோனியிடம் எல்லோருமே வியக்கும் ஒரு குணாதிசயம் உண்டு.அது, எவ்வளவு நெருக்கடியான  சூழ்நிலையிலும் பதட்டப்படாமல் முடிவெடுக்கும் ஆளுமைத் திறன்...!.  அதனால் தான்  என்னவோ தோல்வியையும் வெற்றியையும் சம தூரத்தில் வைத்து இவரால் பார்க்கமுடிகிறது. இதே இங்கிலாந்தில் 324 ரன்களை  இந்தியா சேஸிங் -ல் ஜெயித்தபோது சட்டையைக் கழட்டி கங்குலி போட்ட ஆட்டம் நினைவுக்கு வருகிறது. உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பை ,T20 உலகக் கோப்பை என்கிற மூன்று மைல்கல்லை எட்டிய ஒரே கேப்டன் என்ற போதிலும் அந்த வெற்றிக்குப் பின் தோனியிடமிருந்து வெளிப்பட்ட நிதானம், கிரிக்கெட்டை விட்டு வெளியே இருப்பவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம்.ஊழல் கரை படிந்த IPL -ல் CSK வுக்கு போட்டதைவிட இன்னும் தம்பிடித்து சத்தமாக தோனிக்கு ஒரு விசில் போடலாம்...



 --------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))))))))--------------------------------------------

9 comments:

  1. சோதனைகள் பல அவருக்கு மேலும் நம்பிக்கையையும் புதுப்புது வழிகளைக் கொடுக்கிறது... அலசலுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே...

      Delete
  2. தல.... தோணி பற்றி என் எண்ணத்தை பதிவுல அப்படியே எழுதிடிங்க....

    மற்ற வீரர்களுக்கு மாற்றாக புதிய வீரர்கள் வந்தாச்சு...
    ஆனால் இன்னும் மூன்று நான்கு வருடங்கள் கழித்து தோனிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப போவது யார்???

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ்...தோனிக்கு மாற்று கஷ்டம்தான்...பார்க்கலாம் அவரைவிட திறமையானவர் கூட வர வாய்ப்பிருக்கிறது.

      Delete
  3. நான் கிரிகெட் பார்க்க மாட்டேன், என்றாலும் தோணி பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.. இந்திய டீம் பற்றி நல்ல அலசல் சார்

    ReplyDelete
  4. இஷாந்த் ஷர்மாவுக்கு 48 வது ஓவர் பவுலிங் கொடுத்தது சூதாட்டம், மற்றும் அதன் வெற்றி ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். இருக்கும் ஓவரில் இங்கிலாந்தை கட்டுப்படுத்துவது கடினம். ஆதலால் விக்கெட்டுக்கள் எடுப்பது அவசியம் என்பதை உணர்ந்தே இஷாந்த் ஷர்மாவுக்கு பவுலிங் கொடுத்திருக்கிறார் தோனி. நிச்சயம் அந்த தீர்மானம் சூதாட்டமே. ஆனால் அதுவே அந்த நிலைமையில் ஆகச்சிறந்த decision.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஐ பி எல்-ல் சூதாட்டப் புகாரிலிருந்து எப்படி வெளிவருவது என பல வீரர்கள் தவிக்கும் சூழலில் மீண்டும் இங்கே சூதாட்டம் நடைபெறுவது சாத்தியமில்லை... அப்போதைய சூழலில் விக்கெட் எடுப்பதே வெற்றிக்கான ஒரே வழி என்பதால் இசாந்தை தோனி பந்து வீச பணித்திருக்கலாம்...

      Delete