Friday 11 May 2012

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமா ?-ஒரு முற்போக்கான சிந்தனை

 
  ' வேற்றுமையில் ஒற்றுமை ' என்கிற காலாவதியான மந்திரத்தை வேத வாக்காக பின்பற்றும் நம் இந்தியா முழுமையும் தற்போது சாதிவாரியாக மக்கட்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுவிட்டது.சாதி சம்மந்தப்பட்ட விடயமாயிற்றே இதைக் கையிலெடுத்து கால் காசு பார்த்துவிடலாம் என்று அறச்சீற்றத்தோடு வெகுண்டெழுந்த கட்சிகளெல்லாம் கடைசியில் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலையில் படுத்துக்கொண்டது.

        இதில் இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர்.ஆனால் ஜாதி இருக்க வேண்டும் அதனை ஒழிக்கவே கூடாது என்று காலங்காலமாக கடைப்பிடித்து வரும் சில மேல் ஜாதி ஆதிக்க சக்திகளோ இத்தகைய கணக்கெடுப்புக் கூடாது என்று வரிந்து கட்டினர்.மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதி பற்றிய விவரங்களையும் (உள் ஜாதி உட்பட)சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்தும் குரல் ஓங்கியது.இதிலிருந்து இதற்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்கும் தருணமிது.

   ஜாதி ஒன்றும் சட்டப்படி ஒழிக்கப்படவில்லை.மத ரீதியாகவும்,சாஸ்திரங்கள் அடிப்படையிலும் ஜாதி,இந்து சமூக அமைப்பில் கெட்டியாக பாதுகாக்கப்பட்டுள்ளது.இந்திய அரசமைப்புச் சட்டமும் தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசுகிறதே தவிர,அதற்கு மூலவித்தான ஜாதி ஒழிக என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

    இன்னும் சொல்லப்போனால் அரசு பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்தது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்பது உட்பட ஏழு பொருள்களைக் கொண்டது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415). இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).ஆனாலும் இன்றளவுக்கும் ஜாதி பாதுகாப்போடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது.இந்த ஜாதி முறையால்தான் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது.பிறப்பில் என்ன ஜாதியோ,அதுதான் சுடுகாடுவரை என்ற நிலை இருந்து வருகிறது.இந்த நிலையில் ஜாதியின் காரணமாக பல வகைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்களைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பதன் மூலம் அத்தகையவர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும். அரசின் நல்வாழ்வுத் திட்டங்கள் இத்தகையவர்களுக்கும் போய்ச் சேர சரியான புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

 நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும்போது நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி-எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் (Criteria) இத்தனை சதவிகிதம் என்ற வினாவைத்தான் முன் வைக்கின்றது. அதற்காகவும் இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

        ஓர் அரசுக்கு குடிமக்களின் சமூக,கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்பு நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு அடிப்படைப் புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட-கீழ்ஜாதியாக ஆக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கு நூறு படித்தாக வேண்டும்.(சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிக முக்கியம்).அதற்கு ஜாதி பற்றிய புள்ளி விவரம் தேவைப்படுகிறது.இன்னும் சொல்லப் போனால் ஜாதியை ஒழிக்க,இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை.

       ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒரு முக்கிய அம்சம் விடுபட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஜாதியில் உள் ஜாதி பற்றிய விவரம் கேட்கப்படுவதில்லை என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று தொடங்கப்பட்ட பிறகு -அதில் ஏன் இந்த விடுபடல்?

   முதலியார் என்றால் அதில் இடஒதுக்கீடு பெறாத சைவ முதலியார்களும் உண்டு.இடஒதுக்கீடு பெறும் செங்குந்த முதலியார்களும் உண்டு.இதில் வெறும் முதலியார் என்றால்,புள்ளி விவரம் சேகரிப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறதே.அதில் எது B.C யோ,அதைக் குறிப்பிட்டுப் பதிவு செய்ய வற்புறுத்திடல் வேண்டும்.

     தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது.இந்த நிலையில் பொதுவாக தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்? இத்தகைய தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும். இந்த வாய்ப்பை வீணாக்கி,விழலுக்கிறைத்த நீராக்கி விடக் கூடாது!

     ஆனால் இந்தக் கணக்கெடுப்பின் புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு சில 'மருத்துவமணி'கள் அரசியல் ஆதாயம் தேட முற்படலாம்.சிலபல அல்லக்கைகளின் உசுப்பேற்றலால் புதுப்புது அரசியல் கட்சிகள் கூட முளைக்கலாம்.அதற்கு 'பாரம்பரியமிக்க' கட்சிகள் பல்லக்கு தூக்கலாம். ஆனால் இது போன்ற காளான்களை ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் சம்மட்டிஅடி கொடுத்து சாகடித்து விடுகிறார்கள் என்பதால் இதை நாம் எதிர் விளைவாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

   இன்னமும் கிராமப்புறங்களில் சாதிய ரீதியிலான சமூக புறக்கணிப்பு இருக்கத்தான் செய்கிறது.இது இந்த சமூகம் நம் மனதில் விதைத்துவிட்டுப் போன விஷச்செடி.இதை வேரோடு வேரடி மண்ணோடு வெட்டி வீழ்த்த எத்தனையாயிரம் ஈரோட்டுப்பெரியவர்கள் வந்தாலும் இயலாத ஓன்று. கீழ்சாதியினர் என்று இன்னமும் நம் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட-ஒடுக்கப்பட்ட இனம்,சமகால மக்களுடன் இணைந்து வாழவேண்டுமானால்,கல்வி- பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே சாத்தியம். இதற்கு இவர்களை  ஏற்றிவிடுகிற ஏணியாக இந்த இடஒதுக்கீடு இருக்கின்றது என்பது நிதர்சன உண்மை.இது நூறு சதவீதம் முழுமை பெற வேண்டுமானால் சாதிரீதியான மக்கட்தொகை கணக்கெடுப்பு இங்கு மிக அவசியமே எனத் தோன்றுகிறது.    


 
புள்ளி விவரம் :நன்றி விடுதலை.

4 comments:

  1. சாதிரீதியான மக்கட்தொகை கணக்கெடுப்பு என்பது அமானமானது. கண்டிக்க தக்கது.
    மனிதர்கள் சாதி மறுப்போம்!
    http://aatralarasau.blogspot.de/2012/04/blog-post_15.html

    ReplyDelete
  2. சாதிரீதியான மக்கட்தொகை கணக்கெடுப்பு என்பது மிக அவசியமானது. வரவேற்க தக்கது.
    மனிதர்கள் மனிதனாக சாதி ஏற்றத்தாழ்வுகள் களைவோம்!

    சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா?

    http://arulgreen.blogspot.com/2012/04/blog-post_16.html

    சாதிவாரிக் கணக்கெடுப்பு: முற்போக்கு வேடதாரிகளின் மூக்கை உடைக்கிறார் கி.வீரமணி!

    http://arulgreen.blogspot.com/2012/04/blog-post_24.html

    சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?

    http://arulgreen.blogspot.com/2012/04/23.html

    ReplyDelete
  3. முற்போக்குப் பதிவு தான். பல புதிய நல்ல விசயங்களைத் தெரிந்து கொண்டேன். கருத்தாழம் உள்ள பதிவு.


    இதையும் படித்துப் பாருங்களேன்
    சென்னையில் வாங்கலாம் வாங்க

    ReplyDelete
  4. பல நுணுக்கமான விடயம் தெரிந்து கொண்டேன்.

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete