Saturday 20 June 2015

பொறியில் சிக்கிய எலி...

முதலில் வடிவேலு இம்சை அரசனின் வெற்றி மமதையிலிருந்து வெளியே வரவேண்டும். அது தமிழ் சினிமாவில் அரிதாக நடந்த வித்தியாசமான முயற்சி. மட்டுமில்லாமல், காமெடி கார்ட்டூன்ஸ் வரைந்து மதனையே பின்னுக்குத்தள்ளி ஆனந்த விகடனை அலங்கரித்த சிம்புதேவன், தான் கற்றுக்கொண்ட ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிவைத்தப் படம். அதன் பிறகு அவரெடுத்த அத்தனைப் படங்களும் பாக்ஸ் ஆபிசில் பல்லிளிக்க, தனது யுத்தியை மாற்றிக்கொண்டு அடுத்து புலிவேட்டைக்கு தயாராகிவிட்டார். ஒரு படைப்பாளியாக தனது ரூட்டை அவர் மாற்றிக்கொள்ள, அதில் நடித்த வடிவேல் மட்டும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் வெற்றி எப்படி சாத்தியமாகும்...?

அரசர் காலத்துக் கதை, இந்திரலோகத்துக் கதை என்று நமது வாழ்வியல் எல்லைக்கு அப்பால் சென்றவர் கொஞ்சம் முன்னேறி தற்போதுதான் 60 -களுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து இரு தோல்விகளுக்குப் பிறகும் அதே ஃபார்முலா-வைப் பிடித்துத் தொங்கினால் எப்படி வைகைப்புயல் சார்..?

பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டம் என்பதால் இயக்குநரின் கற்பனைத் திறனும் அந்தக் காலகட்டம் போலவே இருக்கிறது. மொக்கையான கதை. புகைப் பிடிப்பதற்கு(குறிப்பாக சிகரெட்) தடை செய்யப்பட்ட காலகட்டமாக 1960-ஐ கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். புகைப் பிடிப்பது தீங்கானது என்பதை ஆரம்பத்தில் விளக்குகிறார்கள்( மெஸேஜ் சொல்றாங்களாமாம்..).

இவ்வளவுதான் கதை.....

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்கிறது பிரதீப் ராவத் கும்பல். அந்தக் கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பொறி வைத்துப் பிடிக்க திட்டமிடுகிறார் கமிஷனர் ஆதித்யா. கள்ளக் கடத்தலுக்கு காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியும் உடந்தையாக இருக்கக் கூடும் எனக் கணிக்கிறார். ஒட்டுமொத்தக் கும்பலையும் பிடிக்க ஒரு போலிசை உளவாளியாக அனுப்பும் 'ஆபரேசன்' -க்கு திட்டமிடுகிறார் அவர்.

தனது சகாக்களின் துணையுடன் நூதனமான முறையில் சின்னச்சின்ன திருட்டுகளை செய்கிறார் எலிச்சாமி (வடிவேல்). ஒரு போலிஸ் ஆபிஸரின் வீட்டிலே தனது கைவரிசையை காண்பித்து தப்பிக்கிறார். திருடனைப் பிடிக்கும் போலீஸ் மூளையைவிட போலீசிடமிருந்து தப்பிக்கும் திருடனின் மூளையே சிறந்தது என்கிற முடிவுக்கு வரும் ஆதித்யா, அந்தக் கள்ளக் கடத்தல் கும்பலுக்குள் போலீஸ் உளவாளியாக வடிவேலுவை அனுப்புகிறார்.

போலீஸ் ஆகும் தனது கனவை நிறைவேற்றுவதாக ஆதித்யா உறுதி தருவதால் அந்த ஆபரேஷனுக்கு வடிவேல் சம்மதிக்கிறார். இறுதியில் அக்கும்பலை பிடித்தார்களா என்பதே மீதிக்கதை.

இனிமேல்....

வைகைப்புயலின் பழைய மிடுக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. வார்த்தைப் பிரவாகமாகட்டும் உடல் மொழியாகட்டும் முன்பைவிட இன்னமும் மெருகேறியிருக்கிறார் என்பதே திண்ணம். ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு கொஞ்சமும் ஒத்துப்போகாத கதை மற்றும் திரைக்கதையமைப்பால் அவரது ஒட்டுமொத்த உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராகிப் போயிருக்கிறது.

நல்ல மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார்கள்; பாராட்டுவோம். அதற்கு1960 காலகட்டத்திற்கு ஏன் செல்ல வேண்டும்..? ஒருவேளை வித்தியாசமான முயற்சி என்றால் திரைக்கதையை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மாற்றியமைக்க வேண்டாமா..?   விறுவிறுப்பே இல்லாமல் நகைச்சுவை என்கிற பெயரில் சுவாரஸ்யமின்றி  நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.

பேங்கில் திருடப் போகும் அந்த ஒரு காட்சி மட்டும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. மற்றவை எல்லாம் பழைய மொந்தையில் அதே பழைய கள்..!. கதைக்காக ஒன்றும் பெரிதாக யோசிக்கவில்லை. வைகைப் புயலை திரையில் காண்பித்தாலே போதும் என நினைத்திருக்கிறது போலும் 'எலி டீம்'.  சூப்பர் ஸ்டாரே 'தண்ணி குடிக்கும்' காலகட்டமய்யா இது...!  ஒரு 'டெக்னிக்' திருடனை போலீஸ் அணுகி உதவி கேட்பது... போலிஸ் ஆசையைக் காட்டி கொள்ளைக் கூட்டத்தில் உளவாளியாக அனுப்புவது... இது போன்ற கதை எல்லாம் ருத்ரா, காக்கிச்சட்டை உட்பட நிறைய படங்களில் பார்த்தாயிற்று.

ராகதேவனுக்குப் பிறகு நான் ரசிக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர்.  பிளாக் அண்ட் ஒயிட் காலகட்ட பின்னணி இசையை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பாடல்களும் பின்னணியும் வித்யா 'டக்கராக' இல்லை.. வித்யா மக்கர்..!

தோட்டாதரணிக்கு வாய்ப்பளித்ததற்காக பாராட்டலாம். உள்ளரங்க அமைப்பு எல்லாம் அட்டகாசம். ஆனால் வெளிப்புற காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணியில் செல்ஃபோன் டவரெல்லாம் தெரிகிறது. 60 களில் ஏதுய்யா செல்ஃபோன் டவர்..?

சதா இந்தளவுக்கு கீழே 'இற(க்)ங்கி' வரவேண்டுமா என்கிற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் பாலைவன நீர் வேட்கைக்கு பதநீர் குடித்தது போல குளுகுளுவென இருந்தது அம்மணியின் பிரவேசம்.... (   ஹி.... ஹி.... பிரதேசமும்...! ).  ஏற்கனவே ஷங்கரின் சிவாஜி நாயகியை ஒரு பாட்டுக்கு ஜோடியாக்கி சின்றின்பம் அடைந்த வைகைப்புயல், தற்போது அந்நியன் நாயகியுடன் ஆட்டம்போட்டு ஆசையை (நடிப்பாசையைத்தான்) தீர்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தப் படத்தில் ஐட்டம் சாங்குக்கு ஐஸ்வர்யாராயுடன் ஆடி தனது பிறவிப் பயனை அடைவார்.

சம்மந்தமே இல்லாமல் ஒரு இந்திப்பாடல் வருகிறது. ஒருவேளை வைகைப்புயல் அபிநயா நடனக் குழுவில் சேரப் போகிறாரோ என்னவோ.. இருக்கிற 'போர்' ரில் இது வேறு..!  தியேட்டரில் அமர்ந்திருப்பவர்களை வலுக்கட்டாயமாக எழுப்பி ' பாத்ரூம் போயிட்டு.. அப்படியே ஒரு தம் போட்டுட்டு வாங்க பாஸ்..' என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதத்தால் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் தனது சீட்டுக்கு அடியில் தானே வெடிவைத்துக் கொள்கிறாரே என்று கடந்த வாரம் புலம்பியதைத்தான் இந்தவாரமும் தொடர வேண்டியிருக்கிறது. நடிகர் சூரி முன்னணி நடிகர்கள் நடிக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிற செய்தி வேறு பீதியை கிளப்புகிறது.

தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் தமிழ்திரை நகைச்சுவை உலகில் தனி அடையாளமாக விளங்கிய வைகைப்புயலின் இடத்தை அவரைத் தவிர வேறுயாராலும் நிரப்ப முடியாது. சந்தானமும் வைகைப்புயலும் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வரவேண்டும்..!

அதெல்லாம் சரி.. படம் எப்படி இருக்கு..?



18 comments:

  1. "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்யமே..." கருடன் சொன்னது - அதில்
    அர்த்தம் உள்ளது...!

    ReplyDelete
    Replies
    1. அதை அவர் புரிந்து கொண்டால் நல்லது.. நன்றி DD

      Delete
  2. Final punch (photo comment) super.

    ReplyDelete
  3. வடிவேலு உணர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அவரது எதிர் கால வெற்றி அவரை அவர் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.. மிக்க நன்றி அய்யா..

      Delete
  4. நேத்து கூட அலுவலகத்தில் இதைப்பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தோம். இம்சை அரசன் இம்சை பலமடங்கு அதிகமாகிவிட்டது என....

    எல்லாம் ஒகே, இருந்தாலும் அந்த போட்டோ கமென்ட் தான் டாப்பு... வச்சிடீன்களே ஆப்பு..

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி... நன்றி சீனு. விமர்சனம் செய்கிறவர்கள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என இன்று வடிவேல் பேட்டியளித்திருந்தார். அவரது ரசிகர்கள் செய்யும் விமர்சனத்தை கவனித்தாலே போதும். எங்கே கோட்டை விடுகிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். தவறை திருத்திக் கொள்ளாமல் ரசிகர்கள் மேல் கோபப்பட்டால் எத்தனை எலிகள் வந்தாலும் பொறியில் சிக்கத்தான் செய்யும்.

      Delete
  5. வடிவேலுக்கு புரிந்தால் நமக்கெல்லாம் நல்ல காமெடியன் கிடைப்பார்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்... மிக்க நன்றி

      Delete
  6. அவரவரக்கு..எப்படியோ.....

    ReplyDelete
  7. அவரவரக்கு..எப்படியோ.....

    ReplyDelete