Thursday 12 April 2012

சார்... உங்களுக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு.


"ஹலோ.. மிஸ்டர் ஏமாந்தவாயன்...."

"அமாங்க...  நான் தான்."

"வி ஆர் காலிங் .'.ப்ரம்   பிரான்ஸ்....."

 "?!?!?!?!?!?! ..."

 "ஹலோ மிஸ்டர்.... ஆர் யு தேர்?"

"யாருய்யா நீங்க?"

"ஐ ஆம் ஜேம்ஸ் கிரே. டுபாக்கூர்  லாட்டரியில இருந்து பேசுறோம்.நீங்க தானே மிஸ்டர் ஏமாந்த வாயன்"

"ஆ.ஆ...ஆமாங்க....."

"மொதல்ல ஒரு கிலோ சக்கரையை வாங்கி உங்க வாயில கொட்டிக்கீங்க.."

"எதுக்குங்க..? ஒன்னும் வெளங்கலியே ...."

"கரக்ட்... எங்களுக்கு அதுதான் வேணும்...நீங்க ரொம்ப அதிஷ்டசாலிங்க. சார்.."

"எல்லாம் சரிதான்...மொதல்ல விசயத்த சொல்லுங்க."

"சார்... உங்க வீட்டத் தேடி லட்சுமி வந்திருக்குங்க"

"எந்த லட்சுமி????"

"ம்ம்....ஜோதிலட்சுமி....நீங்க கோடீஸ்வரன் ஆயிட்டீங்கனு சொல்லவறேன் சார்" 

"ஐ  திங் யு ஆர் ராங் நம்பர்..."

"சார்.. சார்...வச்சிடாதிங்க. ஒரு நிமிஷம்.நம்பர் 111,இளிச்சவாயன் காலனி,வெகுளி காரத்தெரு, அப்பாவி நகரில் உள்ள ஏமாந்தவாயன் நீங்க தானே..."
    
 "ஆ.ஆ..ஆமாங்க.....ஆனா..ஒன்னும் மட்டுப் படலியே..."

"இப்பப் படுத்துறோம்  பாருங்க...உங்களுக்கு டுபாக்கூர் லாட்டரியில ஆறு கோடி ரூபாய் விழுந்திருக்கு சார்...."

"என்னது... ஆறு கோடியா...ஆஆஆ"

"(அப்பாடா...இது போதும்..) ஆமா சார் ஆறு கோடி!"

"சார்.. இது நெசமா?!?!?!?!?!?!"

"ஆமா சார்... யு வொன் ஒன் மில்லியன் யுரோ-டாலர்ஸ்...."

"சார் ஆனா.. நான் ஏதும் லாட்டரி ..வாங்கின... மாதிரி... ஞாபகம்... இல்லையே.."

"(அது எங்களுக்கும் தெரியும்) என்ன சார்..நல்லா ஞாபகப் படுத்திப் பாருங்க."

"ம்ம்ம்ம்..ஒரே  கொழப்பமா இருக்கே..."

"நல்லா யோசிச்சிப் பாருங்க சார்.ஆறு கோடி!!!!."

"இல்ல... வாங்கின மாதிரியும் இருக்கு ..வாங்காத மாதிரியும் இருக்கு."

"(இதத் தான் நாங்க எதிர் பார்த்தோம்.....)நல்ல யோசிச்சி பாருங்க சார்...இப்ப நீங்க ஷாப்பிங் பண்ணப் போறிங்க.மீதி சில்லறை இல்லனா எதாவது லாட்டரி எடுத்துக் கொடுப்பாங்க.."

"ஒரு வேலை இருக்குமோ?..."

"இல்ல இன்டர்நெட்ல ஒக்காந்து பலான பலான மேட்டர் பாத்துக்கிட்டு, தன்நிலை மறந்து இருக்கிறப்போ ஏதாவது கிளிக் பண்ணி வாங்கியிருப்பீங்க..."

"ஆங்........கரக்ட் சார். திடீர்னு 'நீங்க 99999 ஆவது ஆள்...யு வொன் தி ப்ரைஸ்' னு வர்றத  பாத்திருக்கேன் சார்."

"(எலி சிக்கிருச்சி....)அதே தான்...அதுல தான் சார் நீங்க வாங்கியிருக்கீங்க....."

"ஆனா நான் ஏதும் 'பே' பண்ணலையே  சார்..."

"யாருக்குங்க தெரியும்...கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வருது.. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டுப் போடுது...இதெல்லாம் நீங்க கேட்டதில்லையா. அது போல இப்ப அந்த தெய்வத்துக்கு உங்க மேல கரிசனம் போல சார்..."

"இருக்கலாம்....இருக்கலாம்...ஆனா எப்படி சார்  இத  உறுதியா நம்புறது?"

"ஹலோ... வி ஆர் காலிங் .'.ப்ரம்  பிரான்ஸ்.....யு செக் திஸ் நம்பர்..யு சஸ்பெக்ட் அன்ட் டிஸ்டர்ப் அன்ட்  நாட் ரெஸ்பெக்ட் அன்ட் இன்சல்ட் மீ (அப்பாடா ...ஒரு கோர்வையா வந்துடுச்சி..)"

"சார்....சார்...ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுகுங்க சார்."

"தென்... ஹொவ் டேர் யு ஆஸ்க் திஸ் சில்லி கொஸ்டின்?...யு டோன்ட் வான்ட் சிக்ஸ் குரோர்ஸ் ???"

"அய்யய்யோ....எதோ பதட்டுத்துல வந்துட்டு சார்."

"பதட்டுத்துல உச்சாதான் வரணும்..இது மாதிரி டவுட் எல்லாம் வரக்கூடாது. சரி.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன்..நீங்க வாங்கின (?!) லாட்டரி யோட நம்பர் தாரேன்.அதை WWW.DUPAKKURLOTTARY.COM ல போயி செக் பண்ணி பாருங்க.அதிலேயும் நம்பிக்கை இல்லனா..."
"சார்..சார் ..உங்களை நம்புறேன்   சார்."


(அப்படி வா மவனே வழிக்கு ....) ம்ம்ம்...அது!

"அப்பறம் சார் ஒரு விஷயம்..இந்த விசயத்த யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க சார்.தெரிஞ்சா... என் வீட்டு வாசலில கியூ கட்டி நிப்பாய்ங்க.."

"( இது நாங்க சொல்ல வேண்டிய டயலாக் ஆச்சே...) வெரி குட்.இத ரெண்டு பேரும் மெயின்டைன் பண்ணுவோம்.சும்மாவா... ஆறு கோடியாச்சே..."  

"சார் இந்தப் பணத்த  எப்பத் தருவீங்க..."

"(ஐ...அஸ்கு..புஸ்கு ...) கண்டிப்பா உங்களுக்கு மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணி விடுவோம்.அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்... உங்களுக்கு பேங்குல அக்கவுன்ட் இருக்கா?"

"ஆங்....இருக்கு சார்.."

"(அப்பாடா..)..சரி...இனிமே எதைப்பத்தியும்  கவலை படாதீங்க. எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்.உடனே  எங்களுக்கு உங்க பாஸ்புக்,செக்புக்,ஏடிஎம் கார்டு,வேற எதெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் கொரியர்ல அனுப்பி வையுங்க."

"இதெல்லாம் எதுக்கு சார்?"

"யோவ்....ஆறு கோடியை போயி ஆத்துலையா போடமுடியும்? உன் அக்கவுண்டுல போடனுமையா...இப்படியெல்லாம் கேள்வி கேட்டா அப்பறம் ஆறு கோடியும் ஆசிரமத்துக்கு எழுதிவச்சி புடுவேன் ஆமா..."

"அய்யய்யோ...அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க சார்...இத வச்சி என்னெல்லாம் பிளான் பண்ணியிருக்கேன்...உடனே அனுப்பி வச்சிடுறேன் சார்."

"(நாங்களும்  இத வச்சி என்னெல்லாம் பிளான் பண்ணிருக்கோம் ) அது இருக்கட்டும். அக்கவுண்ட்ல அமௌண்டு  இருக்குல.?"

"அதெல்லாம் இருக்கு சார்.கரெக்டா மினிமம் பேலன்ஸ் ஐநூறு ரூபாய் மெய்ண்டைன் பண்ணிட்டு வர்றேன் தெரியுங்களா... "

"வாட்... பைவ் ஹன்ரடு ருபீஸ் ஒன்லி?...நோ..நோ...யு ஆர் ரிஜெக்டெடு."

"என்ன சார் ஆசைய காட்டி ஆப்பு வைக்கிறீங்க.எனக்கு பணம் கொடுக்கிறதுக்கு என் அக்கவுண்ட்ல எதுக்கு சார் பணம் இருக்கணும்?"

"இது என்ன சாதாரண விசயமா ஆறு கோடி மேட்டர்...இதுல பல புராசசிங் இருக்கு....."
 
"அப்படீன்னா?.."

"அப்படீன்னானா....மொதல்ல பணம் அடிக்கணும் ச்சீ...அடுக்கனும். அப்பறம் சூட்கேசுல வச்சி பேக் பண்ணனும்.அப்பறம் இன்னும் எவ்ளோவோ இருக்கு. இதுக்கெல்லாம் மொதல்ல பணம் கட்டினாத்தான் அந்த ஆறு கோடி கைல கிடைக்கும்.ஆறுகோடி.....ஆசிரமம்....அப்புறம் உங்க இஷ்டம்."

"எனக்கு புரிஞ்சி போச்சி சார்...கொஞ்சம் வெவரமா எவ்வளோ ஆகும்னு சொன்னீங்கனா,இருக்கிற தோட்டம் தொரவ வித்தாவது பணம் ரெடி பண்ணிடுறேன் சார்."

"கரக்ட்...யு கேட்ச் மை பாய்ன்ட்..மொதல்ல எங்க லாட்டரி நிறுவனத்துக்கு பத்து பர்சன்ட் கமிசன் கட்டனும்."

"அப்படீன்னா..அறுபது லட்சம்.சரி..அதுக்கு தென்னந்தோப்ப வித்துடலாம்."

"அடுத்ததா ...போக்குவரத்து செலவு..."

"யாரு போக்குவரத்து சார்?"

"யோவ்....எங்க போக்குவரத்துக்குயா...ஆறு கோடி...கொண்டு வந்து சேக்கரதுனா சும்மாவா... அதுக்கு ஒரு அஞ்சு லட்சம் ஆகும்."

"சரிங்க சார்..இதுக்கு பொண்டாட்டி நகையெல்லாம் வித்துடலாம்."

"அப்பறம்...வரி..."

"யு  மீன் டாக்ஸ்?"

"அதே தான்யா....என்கிட்டே பேசி பேசி நீ ரொம்ப விவரமாயிட்ட."

"அதுக்கு  எம்புட்டுங்க ஆகும்..."

"அதுக்கு....நிறைய ஆகும்.சுங்கவரி,கலால்வரி,சொத்துவரி,சேவைவரி, மதிப்புகூட்டு வரி,ஆக்ட்ராய்  வரி,நில வரி,கேளிக்கை வரி,கொல வெறி இப்படி நெறைய இருக்கு.இது எல்லாத்தையும் கூட்டி நாளால பெருக்கி அஞ்சால வகுத்தோமுனா,கடைசில நாற்பத்தாறு லட்சம் வருது.. உங்களுக்காக எங்க இன்கம்டாக்ஸ் ஆபிசருகிட்ட பேசி ஸ்பெஷல் டிஸ்கௌன்ட் வாங்கி வச்சிருக்கேன்.நீங்க இதுக்கு வெறும் நாப்பது லட்சம் கட்டினாப் போதும்."

"அப்படீங்களா..அப்ப குடியிருக்கிற வீட்ட வித்துட வேண்டியதுதான்."

"அப்பறம்........."

"வெயிட்...கடைசியா என்கிட்டே ஒரு ஸ்கூட்டரும்  என் பொண்டாட்டி தாலி மட்டும் தான் இருக்கு.இத ரெண்டையும் வித்தா...ஒரு மூணு லட்சம் தேறும்."

"என்ன சார் நீங்க..ஆறு கோடி ...விட்டத எல்லாத்தையும் புடிச்சிரலாம். கடைசியா இந்தியன் கவர்மெண்டுக்கு 'கருப்புப்பணம் சுருட்டும்வரி' வேற கட்ட வேண்டியிருக்கு.அதுவும் நாங்கதான் கட்டுவோம்.ஒன்னு பண்ணுங்க சார். எவன் காலிலாவது விழுந்து,எவன் வீட்டு தாலியாவது அறுத்துதாவது ஏழு  லட்சம் புரட்டி,மொத்தப் பணத்தையும் எங்களுக்கு  டிடி எடுத்து அனுப்பினீங்கனா ..அடுத்த  வாரமே  நீங்க தெருக்கோடிக்கு.. ச்சீ...ஆறு கோடிக்கு அதிபதி சார்!!!.

"ஏன் சார்...கடைசியா ஒரு கேள்வி....."

"கேளுங்க..மிஸ்டர் ஏமாந்தவாயன்.."

"நீங்க கேட்ட எல்லாப் பணத்தையும், நான் ஜெயிச்ச பணத்திலிருந்து கழிச்சுட்டு... பேலன்ஸ மட்டும் எனக்கு கொடுக்கலாமே...."

"வாட் டு யு மீன்?.."

"ஐ  மீன்....எங்க ஊர்ல வெள்ள நிவாரண நிதி,புயல் நிவாரண நிதி,லோன் இதெல்லாம் கொடுக்கும் போது அதிகாரிகளெல்லாம் கமிஷன் எடுத்துகிட்டு பேலன்ஸ எங்களுக்கு தருவாங்களே...அதுமாதிரி நீங்களும் செய்யலாமே சார்...."

"என்ன மேன்...புத்திசாலித்தனமா பேசுறதா நெனப்பா?...."

"ச்சே..ச்சே..நாங்களெல்லாம் உங்க அளவுக்கு படிக்காதவங்க சார்... அடுத்தவங்க வயித்தில அடிச்செல்லாம் பழக்கமில்லை...."

"அப்ப...அந்த ஆறு கோடி வேண்டாமா? பிற்பாடு ஆசிரமத்திற்கு கொடுத்திடுவேன்..."

"எனக்கு ஒரு வெங்காயமும் வேணாம்டா வென்ட்ரு!.போடா போ.....நீ கேக்கிற பணத்த கொடுத்தா,நாங்க தான் குடும்பத்தோட ஆசிரமம் போகணும்."

"மிஸ்டர் ஏமாந்தவாயன்..ஆர் யு சீரியஸ்?.."

"அதே தாண்டா என் அப்பாடக்கறு...பேரப்பாத்து எங்க ஊர்ல யாரையும் எடை போடாத..செவ செவனு இருப்பன்...அவனுக்கு கருப்பையன்னு பேரு வைப்போம்.கருவாயனுக்கு வெள்ளைச்சாமினு பேரு வைப்போம்.ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோ..நாங்க ஏமாந்தாலும் ஏமாத்தினாலும் அது.. எங்க ஊருகாரங்க கிட்ட மட்டும்தான்! .(இதுல ஒரு பெருமை!!!). நல்லாக் கேட்டுக்க...எங்கள யாரும் ஏமாத்த முடியாது...எங்களைத்தவிர"
 
  

-----------------------------------------------((((((((((((((((()))))))))))))))))))))))))))--------------------------
  





9 comments:

  1. ஏமாளிப்பயல்கள் படிக்க வேண்டிய மிக அருமையான பதிவு. ஆனால் ஏமாளிகள் இதையெல்லாம் படிக்காமல் ஏமாறுவதுதான் வழக்கம்

    ஒரு விஷயத்தை நீங்கள் நகைச்சுவையாக அழகாக தந்து இருக்கிறிர்கள் வாழத்துக்கள்.

    உங்கள் வலைதளத்தை இன்று முதல் தொடர ஆரம்பிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி

      Delete
  2. ஹி..ஹி..நல்ல நகைச்சுவையான விழிப்புணர்வு பதிவு..இப்படிதாங்க கின்னஸ், கோகோ கோலா இந்த மாதிரி கம்பனிகளில் இருந்து அடிக்கடி எனக்கும் மெயில் வருது இவ்ளோ பவுண்ட் ஜெயிச்சு இருக்கீங்க என்று ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க..வணக்கம்.பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா.

      Delete
  3. இதையெல்லாம் படிச்சு நாங்க ஏமாந்துருவோம்னு நெனைக்கிறீங்களா? நாங்க எல்லாம் அப்படிப்பட்ட இளிச்சவாயங்க இல்லை. அடுத்த ஈமெயில் வந்தவுடன் வீட்டை வித்து பணம் அனுப்புவோமில்ல? அப்புறம் போலீசுக்கு போவோமில்ல. எங்களை என்ன கேனையன்னு நெனச்சீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி...ரொம்ப உஷாருதான் சார் நீங்க...ரொம்ப நன்றி சார்.

      Delete
  4. இந்த மாதிரி மெயில்கள் அதிகம் வரும் - இப்ப கொஞ்சம் கொறஞ்சிருக்கு.

    நகைசுவையுடன் பகிர்வு அருமை

    //..நாங்க ஏமாந்தாலும் ஏமாத்தினாலும் அது.. எங்க ஊருகாரங்க கிட்ட மட்டும்தான்! .நல்லாக் கேட்டுக்க...எங்கள யாரும் ஏமாத்த முடியாது...எங்களைத்தவிர"//

    செம செம

    ReplyDelete
  5. நன்றி நண்பரே.இதில் என் சொந்த அனுபவமும் கொஞ்சம் இருக்கு.

    ReplyDelete