Thursday 26 September 2013

உலகமே வியக்கும் தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள்.

     உலகத்துக்கே குங்க்ஃபூ,கராத்தே போன்ற தற்காப்புக்கலைகளை அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என இவ்வளவு நாட்களாக முளைக்காத மீசையை முறுக்கி விட்டுக்கொண்டிருந்த சீனாவுக்கே, நம்ம ஊரு போதிதர்மர் தான் 'குரு' என்கிற வரலாற்று உண்மையையை சமீபத்தில்தான் உணர்த்தினோம்.

வெறும் முறத்தை வைத்தே காட்டில் சிங்கத்துக்கு அடுத்த பொசிசனில் இருக்கும் புலியை, நமது வீரத் தமிழ் பெண்கள் விரட்டியடித்தையும் நம் தமிழ் வாத்தியார் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல் ஊட்டியதை மறவோம்.அது முறத்தைக் கண்டு ஓடியதா அல்லது முறைத்ததைக் கண்டு ஓடியதா என்பது வேறு விஷயம்.!?

அப்படியொரு வீரம் விளைந்த மண்ணில் இதுவரை யாரும் அறிந்திராத சில தற்காப்புக் கலைகளை உலகறியச் செய்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.


1. இந்தத் தற்காப்புக் கலைக்கு பெயர் 'லிப்லாக் ரொமாண்டிக்கோ '

உங்களை யாராவது 'ஏய்...' னு சத்தம் போட்டுக்கொண்டே அரை கிலோமீட்டர் அப்பால் இருந்து ஒடிவந்து தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம்.கொஞ்சம் ரொமாண்டிக்காக முகத்தை வைத்துக்கொண்டு கீழுதட்டை லேசாக சுழித்த வேகத்தில் ஆட்காட்டி விரலால் ஒரு ‘யூ டர்ன்’ அடிக்கவேண்டும். இந்த எதிர்பாராத ரொமாண்டிக் தாக்குதலால் தாக்க வந்தவன் நிலைகுலைந்து போய் ஓடிவந்த வேகத்தில் அப்படியே பின்னோக்கி வீசப்படுவான். ஒரு முக்கியமான விஷயம் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டிருந்தால் அவன் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது.

பின்குறிப்பு: இது ஆண்களுக்கானது.. இதை பெண்கள் உபயோகித்து ஏதாவது ஏடாகூடமாகிவிட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.  


 2. இதுக்குப் பெயர் ' கரடிகத்தே... '

இதைக் கற்றுக்கொள்வது கொஞ்சம் சுலபம்தான் என்றாலும் ஹை பிட்ச்சில் கத்துவதற்கேற்ற குரலமைப்பு பெற்றிருத்தல் வேண்டும். கையில் மூன்றடி வீச்சரிவாளை வைத்துக்கொண்டு... "டாய்..... ஏய்.... வாடா...ஓய்... டேய்.... " என நின்ற இடத்திலிருந்தே கத்தவேண்டும். உங்களை தாக்க வந்த எதிராளியின் பொறுமையை முடிந்தளவு சோதிக்கு வேண்டும். அவன் பொறுமை இழந்து உங்கள் கையிலிருக்கும் அரிவாளை பிடிங்கி அவனே வெட்டிக்கொண்டு சாவதுதான் இந்தக்கலையின் முக்கிய அம்சம்.


3.இது பழம்பெரும் கலை.மிகக் கடினமானது.மிகவும் ஆபத்தானதும் கூட.இதற்கான குறிப்பு ஓலைச்சுவடியில் இருப்பதாக சொல்கிறார்கள்.அந்தக் காலத்தில் புருஸ்லீ -யும் ஜேம்ஸ்பாண்டும் தமிழ் நாட்டுக்கு வந்து இந்தக் கலையை கற்றுக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். ஆனால்..கடைசிவரை அவர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் புருஸ்லீ பயந்துபோய் பாதியிலே ஓடிவிட்டார்.இந்தக்கலையில் கடைசியாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு ஜெய்சங்கர் கைத்தேர்ந்தவராக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. அவரது மறைவுக்குப் பின் அந்தக்கலையும் அவரோடு அழிந்துவிட்டது.

அதாவது எதிராளி நல்ல 'பல்க்கா' இருந்தா இந்தக் கலையை உபயோகப்படுத்தாலாம்.'ஆத்தாடி... எத்தேந்தண்டி' என்கிற பயம் ஆழ்மனதில் இருந்தாலும் அது கண்ணில் தெரியாமல் மெய்ண்டைன் பண்ண வேண்டும்.இது போல பல்க்கான ஆட்களை அடித்தால் மட்டுமே திருப்பி அடிப்பார்கள் என்கிற முன் நவீனத்துவ அறிவு இதற்கு அடிப்படை. அதாவது அடிப்பது போல கையை ஓங்க வேண்டும்.ஆனால் அடிக்கக் கூடாது.உதைப்பது போல் காலைத் தூக்கவேண்டும்.ஆனால் உதைக்கக் கூடாது.முறைப்பதுபோல் முகத்தை வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் முறைக்கக் கூடாது. அவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு கடைசியில் இம்சை அரசனில் கரடி காரித்துப்பியது போல் " கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...த்தூதூ.." என துப்பிவிட்டு 'தொலைந்து போ சனியனே'னு போய்விடுவான்..  இதில் நமக்கு இழப்பு என்று பார்த்தால் ஒரு கர்சிப் அல்லது ஒரு டிஸ்யூ பேப்பர்.ஆனால் எதிராளி மனதொடிந்து போய் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம்.




4. இருப்பதிலே மிக நுட்பமான தற்காப்புக் கலை. எதிராளி பிஸ்டல், AK -47 போன்ற நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம். இதற்கென பிரத்யோகமான உபகரணங்கள் இருக்கிறது.இதில் முக்கியமானது 'ஜிகு ஜிகு ஸ்லீவ்லெஸ் புல்லட் புரூவ் ஜாக்கெட்'.

இதை அணிந்து கொண்டால் எதிராளி உங்கள் தலை,கை,கால் என எங்கு குறிவைத்து சுட்டாலும் அது நேராக உங்கள் மார்பை நோக்கித்தான் வரும். அப்படியே மோதிய வேகத்தில் திரும்பி, வந்த வழியே சென்று சுட்டவனையே போட்டுத்தள்ளிவிடும். இந்தக்கலையை நுட்பமாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெறும் டாலரையும், மோதிரத்தையும் வைத்தே சீறிவரும் புல்லட்டை சுக்கு நூறாக்கிவிடுவார்கள்.தமிழ்நாட்டில் கடைசியாக இந்த வித்தையை பயன்படுத்தித்தான் ஒருவர் பாகிஸ்தான் பார்டரில் பல தீவிரவாதிகளை பஸ்பமாக்கியிருக்கிறார். இவருக்கு அண்ணன் ஆந்திராவில் இருக்கிறார். அவர் ஒரே ஜம்பில் புல்லட்டை கவ்வி கடித்து துப்பிவிடுவார்.


5. அட் எ டைம் -ல ஐம்பது பேரு வந்தாலும் அசால்டாக அடிக்கக்கூடிய சாத்தியம் இந்தக்கலைக்கு உண்டு. இதற்கு கைவிரல்கள், மணிக்கட்டு பலமாக இருத்தல் அவசியம். பாட்டுபாடிக்கொண்டே பால் கறப்பவர்கள் இதில் விற்பன்னர்கள்.

உதாரணமா, உங்களை பத்து பேரு கும்பலா சேர்ந்து அடிக்க வராங்கனு வச்சிப்போம். உடனே ஹீரோயிசம் காட்டினா நீங்க சட்னிதான். அந்த இடத்தில இந்தக்கலையை எப்படி பயன்படுத்தறதுனு சொல்றேன்.. 

முதல்ல அந்த பத்து பேரு கையை காலைப் புடிச்சி வரிசையில நிக்க வைக்கணும்.ஒருத்தர் பின்னாடி ஒருவர் நிற்காம பக்கவாட்டில் நிற்கும்படி சொல்லணும்.முடியாதுனு சொன்னா காலில் விழக்கூட தயங்கக் கூடாது. அந்த நேரம் பார்த்து சைடுல ஒரு 'பிகர' நடக்க விடனும். எல்லோரும் அந்தப்பக்கம் ஜொள்ளுவிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உங்கள் தாக்குதலை ஆரம்பிக்கணும். 

ஓடிவந்து முஷ்டியை முறுக்கி ஒரே நேர்க்கோட்டில் தாக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் திரும்பவும் பழையபடி ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான். திரும்பவும் காலில் விழுந்து கதறி, கெஞ்சிக் கூத்தாடி வரிசையில் நிற்க வைக்கவேண்டும். இப்படியாக மூன்று நான்கு தடவை செய்தால் டென்சனாகி அவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். நம்ம வேலை சுலபமாக முடிந்திடும்.


சரி..சரி... தமிழ்நாட்டில் புதைந்து கிடந்த இந்தத் தற்காப்புக்கலைகளை வெளிக்கொண்டுவந்ததுமில்லாம ஃபீஸ்ஸே இல்லாம கத்துக்கொடுத்ததுக்காக சந்தோசத்துல கதறி அழுவது எனக்கு கேட்குது. இதுபோல இன்னும் பல கலைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.   


26 comments:

  1. எனக்கு மான் கராத்தே தெரியும் . எப்படி ஓடுறேன்னு பாருங்க ...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. எஸ்கேப் ஆயிடீங்களா ...

      Delete
  2. ஹஹா இதற்கு பயிற்சி வகுப்புகள் உண்டா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..சக்கர கட்டி

      இதற்கு பயிற்சி எடுக்க வேண்டுமானால் ஏழு மண்டலம் தவம் இருந்து, விரதம் எல்லாம் இருக்கணும்... பிறகு சோமா பயில்வானிடம் போய் (ஞாபகம் இருக்கா..) தலை கீழ நின்னுதான் பயிற்சி எடுக்கணும். :-)

      Delete
  3. haaa haa.....

    nalla karpanai..

    nantri!

    ReplyDelete
  4. அடடா... எத்தனை கலைகள்... அதற்கேற்ப காணொளி காட்சிகள்...

    கரடிகத்தே + அட் எ டைம் அசால்டாக அடி - இரண்டும் செம கலக்கல்...

    ReplyDelete
  5. அய்யோ.. அப்பா... வயிறு போச்சுடா...சிரிச்சு தலையே வெடிச்சுடும் போலருக்குய்யா..
    R Chandrasekaran

    ReplyDelete
  6. பார்க்கும் போதே கிறுகிறுன்னு வருதே ...கத்துக்கிட்டா எதிரியை கிறுக்கு பிடிக்க வைச்சுஓட விட்டுறலாம்போல இருக்கே !
    இந்த கலைகளுக்கு 65 abcdன்னு நம்பர் கொடுங்க பாஸ் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி Bagawanjee KA
      பாஸ்.. இது வர்மக்கலையை விட கடினமானது :-)

      Delete
  7. சரியான ஆராய்ச்சி..இந்த மாதிரி சிரிச்சி ரொம்ப நாளாச்சு..நன்றி..நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சக்தி முருகேசன்..

      Delete
  8. தேர்வு செய்த படங்கள் கலக்கல்... சூப்பர் மணி அண்ணே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்...

      Delete
  9. சிரிச்சு சிரிச்சு சில்லறையே வாரிட்டேன்...!!

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி சார்..

      Delete
  10. ஒரே சிப்பு சிப்பா வந்துச்சு..ஆமாண்ணே கரடிகத்தே ல ஆக்குரோஷமா சண்டை போடும்போது வேட்டி அவுந்துச்சுன்னா என்ன பண்றது ???

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Robert...

      //ஆக்குரோஷமா சண்டை போடும்போது வேட்டி அவுந்துச்சுன்னா என்ன பண்றது ???//

      அது ஒரு தனி கலை... இவ்வளவு மிரட்டியும் எதிராளி பயப்படலனா... கடைசி ஆயுதமா அதைத்தான் செய்யணும்... :-)

      Delete
  11. இத்தனையும் எனக்கு இப்பதானே தெரியுது...அடடா... இவ்வளவு நாளா சொல்லாம விட்டுட்டீங்களேண்ணே..!!!!

    (இந்த போஸ்ட்க்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பீங்கன்னு புரியுது)

    உங்களோட உழைப்பு எங்களுக்கு சிரிப்பு வரவழைச்சது.. அருமை.. அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கம் பழனி...

      //(இந்த போஸ்ட்க்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பீங்கன்னு புரியுது)// கரெக்ட்தான் ..

      Delete