Tuesday 19 November 2013

சத்யத்தின் அயோக்கியத்தனமும் சச்சினின் ஆற்றமுடியா பிரிவின் வலியும் (சும்மா அடிச்சி விடுவோம்..-6 )


ஞ்சையில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக ஒரு டாஸ்மாக் குடிமகன் தமிழக முதல்வரையும், விஜயதரணி அவர்களையும் செம்மொழியில் அர்ச்சனை செய்த சம்பவம் இன்னமும் ஓயவில்லை என்று நினைக்கிறேன்.


நினைவு முற்றம் இடிக்கப்பட்டது பச்சை மொள்ளமாரித்தனம். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால் ஜெயாவின் ஈழ நிலைப்பாட்டை இன்னமும் புரிந்துகொள்ளாத நெடுமாறன், சீமான், வைகோ போன்றவர்களை நம்பி, பின்னால் இவ்வளவு பெரிய கூட்டம் செல்லத் தயாராக இருக்கிறது என்பதுதான் புரியாத மர்மம்.

கலைஞராவது ஆட்சியில் இருக்கும்போதும், எதிர்கட்சியாக இருக்கும்போதும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுப்பார். ஆனால் ஜெயாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். ஈழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் எல்லாமே எப்போதும் அவருக்கு கசப்பு வார்த்தைகள்தான். ஜெயாவின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் இதைத்தான் சொல்லும். அப்படியிருக்க, ஜெயா என்ன மாதிரியான பிரச்சனையைக் கொடுப்பார் என்று யோசிக்கும் அளவுக்கு சமயோசித புத்தி கூடவா இந்த ஈழ அரசியல்வாதி -களுக்கு இல்லை..?  மட்டுமில்லாமல், சுவர் எழுப்பிய இடம் குத்தகைக்கு விட்டது கலைஞர் ஆட்சியில். முற்றம் அமைந்துள்ளது நடராஜனுக்கு சொந்தமான இடத்தில். இது போதாதா இடிப்பதற்கு..?

தமிழர்களின் வரலாற்று நினைவு சின்னத்தையே இடித்துத் தள்ளும் இந்த ஜெயாதான் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தடுத்து நிறுத்தியிருப்பாராம்...ஈழத்தாயாம்...இலை மலர்ந்தால் ஈழம் மலருமாம்...!  அட போங்கப்பு... :-)

சரி... சத்யம் டிவி விவகாரத்துக்கு வருகிறேன். அந்த செம்மொழி ஆசாமி அப்போது குடித்திருந்தாராம். இருக்கட்டும். அம்மையார் ஆட்சியில் இது ஒன்றும் பெருங்குற்றமல்ல.  ஆனால் ஒரு நேரலை நிகழ்ச்சியில் முகம் தெரியாத யாரோ ஒரு நபரிடம் 'லைவ்' ஆக கருத்து கேட்கும் முன்பு அவர் என்ன சொல்லப்போகிறார், எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதைக்கூட அறிந்து கொள்ள மாட்டார்களா என்ன.. ?  பாடல் நிகழ்ச்சிகளில் கூட என்ன பாட்டு வேண்டும், என்ன பேசப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே கேட்டறிந்து கொள்வார்களே..

வெறும் டிஆர்பி ரேட்டுக்காக இவர்கள் செய்யும் அட்டூழியங்களை முடிவு கட்டுவதற்கு ஒரு விதத்தில் இப்படி ஒரு சம்பவம் தேவைதான். சத்யம் டிவியின் அயோக்கியத்தனத்தைப் பற்றி மனுஷ்யப் புத்திரன் தன் முகநூளில் ஒரு செய்தி பகிர்ந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.

எனக்கென்னவோ அந்த செம்மொழி ஆசாமியை அவர் பாட்டுக்கு பேசச்சொல்லியிருந்தால் இப்படி நடத்திருக்காது என நினைக்கிறேன். நிகழ்ச்சியை நடத்தும் அரவிந்தன் அவரிடம், "உங்கள் கருத்தை சுருக்கமா சொல்லுங்க...சுருக்கமா சொல்லுங்க... என திரும்பத்திரும்ப சொன்னதால்தான் ரத்தினச் சுருக்கமா அப்படி சொல்லிவிட்டார் போல... :-))

ஆனால் ஒன்னுங்க... அந்த ஆள் இவ்வளவு அசிங்கமாக பேசினப் பிறகும் கொஞ்சம் கூட அவர்மீது கோபப்படாமல் "உங்கள் அழைப்புக்கு நன்றி.." என சொன்னார் பாருங்க... அவரின் கடமையுணர்ச்சியைக் கண்டு நான் இன்னமும் வியக்கேன்..!



வில்லா படத்திற்கு  இணையத்தில் நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது. விமர்சனத்திற்கு விமர்சனம் கூட வந்திருக்கிறது. வெறுமனே நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு விமர்சனம் எழுதியவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அழுத்தமான, ஆழமான விமர்சனங்கள் நிறைய வந்திருக்கிறது. நான் நாடிப்பிடித்துப் பார்த்த விசயங்களோடு அவர்களின் விமர்சனமும் ஓரளவு ஒத்துப் போன வகையில் எனக்கு கொஞ்சம் திருப்தி.

நிஜமாகவே சொல்கிறேன், வில்லா என்னுள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை திரையரங்கின் கடைசி வரிசையில் உட்காந்து பார்த்ததால் அப்படி இருந்திருக்குமோ என்னவோ..! இனிமேல் இதுபோன்ற படங்களை திரைக்கு அருகில் இருந்துதான் பார்க்கவேண்டும் போல... போகட்டும்.

ஒரு பேய் படம் அல்லது திகில் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு தமிழ் சினிமாவிலே நிறைய உதாரணங்களை அடுக்கலாம். முதல் பாதியில் வரும் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளையும் பிற்பகுதியும் எப்படி லாஜிக்காக அவிழ்க்கிறார்கள் என்பதில்தான் திகில் படங்களின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த விதத்தில் 'யாவரும் நலம்' தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு காட்சியும் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது.

வில்லா படத்தின் முதல் பாதியில் வரும் காட்சிகள் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. அதன் பின்னணியில் உள்ள மர்மங்களை அறிந்துகொள்ளும்  ஆவலோடுதான் ஒவ்வொரு ரசிகனும் இருந்திருப்பான். அசோக் செல்வனின் நண்பராக வருபவர் வெவ்வேறு இடங்களில் சேகரித்த தகவலின் அடிப்படையில் அவரிடம் இப்படித்தான் விவரிப்பார். "ஐ ஹாவ் சீன் ஒன் பிளாக். அவர் பேரு தேவநேசன்.. தமிழ் ஆளுதான்.அவரு என்ன சொல்றார்னா, இந்த நெகடிவ் எனர்ஜிக்கு பியூச்சரை பிரெடிக்ட் பன்றதுக்கு தூண்டுதல் சக்தி இருக்கிறதா சொல்லியிருக்கார்.."

தேவநேசனிடம் போனபிறகு, அவரும் இப்படித்தான் ஆரம்பிப்பார். " பிளாக்மேஜிக் மூலமா பியூச்சரை பிரெடிக்ட் பண்ண முயற்சி பண்ணியிருக்கான்...  " .  ஒரு சாராசரி ரசிகன் இந்த இடத்தில்தான் பேந்தப் பேந்த முழித்திருப்பான். ஒருவேளை இங்கு எழுதியதால் இதன் அர்த்தம் தற்போது புரிந்திருக்கும். ஆனால் கதையின் அடிநாதமான இந்த விஷயம் படத்தில் போகிற போக்கில் வந்து போகும். எத்தனைப் பேர்  இதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்..?

ஆரம்பம் படத்தை வெகுவாக ரசித்தவர்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொள்வார்கள். படத்தில் முக்கியமான ஒரு காட்சியில்,  'தரமில்லாத புல்லட் புரூப்.' என்கிற வார்த்தையை நான்கைந்து தடவை அழுத்தி உச்சரிப்பார் தல. இந்த இடத்தில் 'தரமில்லாத' என்கிற வார்த்தை கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். தன் மேலதிகாரியிடம் புகார் செய்யும்போது, இதற்குப் பதிலாக வேறு ஆங்கில வார்த்தைகளை உபயோகித்திருக்கலாம். ஆனால் கதைக் கருவின் அடிநாதமே அதுதான் என்பதால் பாமரனுக்கும் விளங்கவேண்டும் என்பதற்காக அந்த வார்த்தையை உபயோகித்திருப்பார்கள்.

வில்லா படத்தில் இதுபோன்ற ஒரு முக்கிய காட்சியைத்தான் புரியாத மொழியில் ஜல்லியடித்திருக்கிரார்கள் என்று விமர்சித்திருந்தேன். அதேப்போல இறுதிக் காட்சி எத்தனைப் பேருக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. இதைத்தான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, மற்றபடி இந்த புண்ணாக்கு, பருத்திகொட்டை கிண்டுற வேலையெல்லாம் எனக்கு தெரியாது சாமீ....


சச்சின் டெண்டுல்கர்....

இதை எழுதும் போதே கண்களில் நீர் முட்டுகிறது. கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக இந்திய இளைஞர்கள் அதிகமாக உச்சரித்த சொல் இதுவாகத்தான் இருக்கும். அது ஏனோ தெரியவில்லை, உடன் பிறந்தவளை திருமணத்திற்குப் பின் பிரியும்போது ஏற்படும் வலிபோல துக்கம் நெஞ்சை அடைக்கிறது. சச்சின் அணியில் இருந்தபோது சரியாக விளையாடவில்லை என்று விமர்சித்த வாய்தான் இன்று வரண்டுபோய் கிடக்கிறது. எனக்கெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கபடியை விட்டால் வேறு எந்த விளையாட்டும் தெரியாது. எங்கள் கிராமப்புறங்களில் அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது. நாடே சச்சின்.. சச்சின் என்ற பொழுது நாங்களும் அந்த பொது நீரோட்டத்தில் ஐக்கியமானோம்.   

ஒரு விளையாட்டு வீரனுக்கு இவ்வளவு பில்டப் தேவையா....? சும்மா ஒன்னும் விளையாடவில்லையே, கோடி கோடியாக சம்பாதிக்கதானே செய்தார்.' பாரத் ரத்னா ' கொடுப்பதற்கு இவர் என்ன எல்லையில் போயி சண்டையா போட்டார்..? இப்படி அற்பத்தனமாகக் கேள்வி கேட்கிறது ஒரு பிரிவு.

பல லட்சம் கோடிகளை சர்வ சாதாரணமாக தின்று ஏப்பம் விடும் ஊழல் பெருச்சாளிகள் மலிந்திருக்கும் நம் நாட்டில், நாட்டுக்காக 20 வருடத்திற்கு மேல் விளையாடிய ஒரு வீரர், தன் திறமையின் மூலம் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிய தவறு இருக்கிறது...?  100 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை தன் தலைமீது சுமந்துகொண்டு விளையாடுவது மனரீதியாக எவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்..?. அதிலும் இருபது ஆண்டுகளாக இந்தியாவின் 'ஒரே நம்பிக்கை' சச்சின் போன்றவர்களுக்கு..?

நாட்டுக்காக விளையாடுவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமல்ல. இந்திய அணி வெற்றிபெற்றால், ' INDIA WON THE MATCH ' என்றுதான் சொல்கிறார்களே தவிர, ' INDIAN CRICKET TEAM WON THE MATCH ' என்று செல்வதில்லை. இந்தியா எத்தனை தடவை சச்சின் என்கிற தனிப்பட்ட ஒருவரால் ஜெயித்திருக்கிறது..!

சச்சின் எல்லையில் சென்று சண்டை போடவில்லை. ஆனால் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தானை சுருட்டி வீசியெறிந்த காட்சியைக் கண்டு முதலில் சந்தோசக் கூத்தாடுவது நம் எல்லை வீரர்கள்தான் என்பதை மறுக்க முடியுமா..?  இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு தடவை கூட பாகிஸ்தானை இந்தியா ஜெயிக்க விட்டதில்லை என்கிற சாதனையின் பின்னணியில் சச்சினின் பங்களிப்பு    மகத்தானது என்பதை நாம் அறிவோம்தானே...!

ராஜன் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

"கிரிக்கெட்டை இலக்கண சுத்தமாக விளையாண்ட ப்ளேயர்களெல்லாம் கிளம்பிய பிறகு, அந்த இலக்கணத்தை எழுதியவன் கிளம்புகிறான்..."

Good bye Sachin...!


கலாட்டூன் கார்னர்....

 எவன்டா இந்த வேலையை செஞ்சது...?

------------------------------------------------------X---------------------------------------------------

ஆனா, இது சத்தியமா நான் செஞ்ச வேலைதாங்க...





                                                                                                   - இன்னும் அடிச்சிவிடுவோம்...

17 comments:

  1. அருமை,எல்லாமே!///அந்த 'சத்தியம்' டீ.வீ நேரலையில் பார்க்கக் கிட்டியது.தவறு தான்.///"வில்லா"...ஹி!ஹி!!ஹீ!!!//சச்சின்............வருத்தம் தான்.///கலாட்டூன் கார்னர்.... குட்!///உங்க வேலை..ரொம்பப் பிரமாதம் போங்க!(சூதானமா இருங்க,நாளைக்கே ஆட்சியை புடிச்சுட்டாலும்?!.........)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  2. சும்மா நச்சுனு இருக்கு.
    சத்யம் டிவி நிகழ்ச்சி பார்த்தேன் பாஸ்....லைவ் ஷோன்னு சொன்னாலும் அரை மணி நேரம் முன்னாடியே ரெகார்ட் பண்ணி, அப்புறமா அதை எடிட் பண்ணி தான் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க. லைவ் கிரிக்கெட் மேட்ச் கூட ரெண்டு நிமிஷ டிலே Transmission தான். சத்யம் டிவி நினைச்சு இருந்தா இந்த நிகழ்ச்சியை நிறுத்தி இருக்கலாம். இல்லாட்டி விஜயதரணியே பப்ளிசிட்டிக்காக ஒளிபரப்ப சொல்லி இருக்கலாம்.
    தமிழ்ல நிறைய செய்தி சேனல் வந்துருச்சு. இது மாதிரி ஏதாவது புரட்சி செஞ்சா தான் பில்ட்ல நிக்க முடியும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்... இப்போ இருக்கிற போட்டியில அதுக்கெல்லாம் நேரம் இருக்காது போல.. இனிமேலாவது கொஞ்சம் உசாரா இருப்பானுக

      Delete
  3. ராஜன் அவர்களின் ஸ்டேட்டஸ் சூப்பர்... (அடிச்சி விட்ட படமும்)

    ReplyDelete
  4. ஆரம்பம் குறித்த தகவல் ரசித்தேன்.. இயக்குனரை பாராட்டுகிறேன். தளபதி குடும்பம் சித்திரம் அருமை.. ஹஹஹா..

    ReplyDelete
  5. சே குவேரா நம்ம ஆளுங்ககிட்ட படுற பாடு இருக்கே..பாவம்யா அந்தாளு

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... அவரு என்ன பாவன் செய்தாரோ..

      Delete
  6. ஈழத் தாயை நம்பாதீங்கன்னு சொன்னா எவன் கேட்டான்..!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது பாஸ்..மக்கள் யாரும் நம்பவில்லை ... ஆனா ஈழ அரசியலில் குளிர்காயும் அரசியல்வாதிகள்தான் அசைக்காத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

      Delete
  7. about sachin super boss

    ReplyDelete
  8. சுவாரஸ்யமான பகிர்வு! என்னை பொறுத்தவரையில் சச்சினுக்கு பாரத ரத்னா கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies

    1. நன்றி சுரேஷ்.... நீங்கள் சொல்வது ஓரளவு சரிதான். ஆனால் எம் ஜி யாருக்கு கொடுக்கும் போது சச்சினுக்கு கொடுக்கலாமே என்கிற எண்ணம் வருவது இயல்புதானே.

      Delete