Saturday 23 November 2013

இரண்டாம் உலகம்-விமர்சனம்...


ரண்டாம் உலகம் ஒரு mystical லவ் ஸ்டோரி.

"நாம் எவ்வளவு நாள் காதலிக்கிறோம், யாரைக் காதலிக்கிறோம், எப்படிக் காதலிக்கிறோம் என்பது முக்கிய -மில்லை. ஆனால் காதல் மட்டும் பரிசுத்தமாக, உண்மையாக இருக்கவேண்டும். ஏனெனில் உண்மையான காதலுக்குத்தான் இந்த உலகம் அசைந்து வழிவிடும்.நீங்கள் உண்மையாக காதலிக்கும் பொழுது, அப்பெண்ணின் நினைப்பு ரத்தமாக ஓடும் பொழுது, எதைப்பற்றியும் கவலைப் பட தேவையில்லை. உங்கள் காதல் நிச்சயமாக ஜெயிக்கும்". இதுதான் செல்வராகவன் சொல்லவரும் மெசேஜ்.

இதற்காக, காதல் வசப்பட்ட ஒரு கோழை, மாவீரனாகி சரித்திரம் படைத்த கதையைத்தான் இரண்டாம் உலகம் மூலம் கற்பனையாகத் தட்டிவிட்டிருக்கிறார் இயக்குனர். இது முழுக்க முழுக்க பேண்டசி வகை படைப்பு என்பதால் மில்லி கிராம் அளவுக்குக் கூட லாஜிக்கை தேடவேண்டியதில்லை.

நாம் வாழும் உலகத்திலும்,விசித்திரம் நிறைந்த இரண்டாம் உலகத்திலும் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தைக் கதையாக ஆர்யா சொல்வதாக விரிகிறது படம். முதல் ஐந்து நிமிடங்களில் அவர் சொல்லும் முன்னோட்டத்தை கவனிக்கத் தவறினால் மொத்தக் கதையும் புரியாமல் போவது நிச்சயம்.

இரண்டாம் உலகத்தை எப்படி நம் உலகத்தோடு முடிச்சு போடுகிறார் என்பதை தெரிந்துகொண்டாலே ஓரளவு கதை புரிந்துவிடும். இரண்டாம் உலகம் என்றால் என்ன என்பதை சிறு வயதில் பாட்டி கதை சொன்னதுபோல் சொன்னால்தான் விளங்கும். விமர்சனம் என்றால் மொத்தக் கதையும் சொல்லக்கூடாது என்கிற நியதி இருக்கிறது. ஆனால் இப்படத்தின் கதையை எப்படி சொன்னாலும் யாருக்கும் விளங்காது என்பதுதான் இங்க விசயமே.. :-))


நாம வாழ்ற பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில பூமி மாதிரியே ஒரு கிரகம் இருக்கு.அதுக்கு பேரு இரண்டாம் உலகம். அங்க விசித்திரமான விலங்குகள், பறவைகள் எல்லாம் இருக்கு. ஆனால் அங்க வாழ்கிற மக்கள் நம்ம மாதிரியே இருக்காங்க. நம்ம மாதிரியே தமிழ் பேசுறாங்க..நம்ம மாதிரியே டிரெஸ் போட்டுகிறாங்க... கோவப்படுறாங்க... சிரிக்கிறாங்க...சண்டைப்போடுறாங்க.. அடிச்சிகிறாங்க.. ஆனா நம்ம உலகத்தில இருக்கிற ஒரே ஒரு விஷயம் மட்டும் அங்க இல்ல. அது .. காதல்...!

அங்க பெண்கள் இருக்காங்க. ஆனா அவுங்க ஆண்களுக்கு அடிமையாக இருக்காங்க. அந்த தேசத்தில காதல் இல்லாததால பூக்களே பூப்பதில்லை. எங்கே பெண்கள் மதிக்கப்படலையோ அங்க தேசம் சீக்கிரமா அழிந்து போய்விடும். அங்கயும் அப்படித்தான். நோய்கள் , குற்றங்கள் எல்லாம் பெருகி கிடக்குது.

அந்த தேசத்தை ஒரு ராஜா ஆட்சி செய்யுறார். நம்ம நாட்ல இருந்த மாதிரியே  தளபதி, வீரர்கள் எல்லாம் இருக்காங்க. வர்களுக்கெல்லாம் ராஜகுரு மாதிரியும், மக்களைக் காக்கும் தெய்வம் மாதிரியும் ஒரு அம்மா இருக்காங்க. தம்மையும், தம் நாட்டையும் படைத்தது பெண் ரூபத்தில் இருக்கிற அந்த தெய்வம்தான்னு நம்புறாங்க. 

ராஜானா சண்டை, போர் எல்லாம் இருக்கணுமே...!  ஆமா அதுவும் இருக்கு. பக்கத்து ஊர்ல ஒரு அரக்கன் இருக்கான். அவன் அடிக்கடி தன் ஆட்களுடன் இங்க வந்து சண்டைபோட்டு, கொள்ளையடிச்சி, பெண்களை கடத்திட்டும் போறான். ஆனால் அவனுடைய ஒரே இலக்கு அந்த தெய்வத்தாய்தான். அவரை கடத்திக்கொண்டு போய்விட்டால் அந்த உலகத்தையே தம் காலடியில் கொண்டுவந்து ஒரே ராஜாவாக இருக்கலாம் என்பது அவனது திட்டம்.

அதைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கும் தன் நாட்டில் ஒரு மாவீரன் உருவாகனும்னு அந்த தெய்வத்தாய் நினைக்கிறாங்க. அப்படி ஒரு மாவீரன் உருவாகுனும்னா அவனுக்கு ஒரு பெண் துணை வேணும். அவனை அவள் காதலிக்க வேண்டும். அவனுக்குள்ளும் காதல் வரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அங்கிருக்கும் ஒரு விசித்திர சிங்கத்தைக் கொன்று தான் வீரன் என்பதை உணர்த்துகிறான் ஒருவன். அவன்தான் ஆர்யா. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். திருமணம் செய்ய முயல்கிறான். அவள் அனுஷ்கா. ஆனால் அவர்களுக்குள்  காதல் இல்லை. அவர்களுக்கு காதல் வந்துவிட்டால் அந்த தேசத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கி நந்தவனமாகிவிடும். அவன் மாவீரனாகிவிடுவான். ஆனால் காதல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அந்த தேசத்தில் அவர்களுக்குள்  எப்படி காதலை விதைப்பது ...?

இங்கேதான் நம் உலகத்துக்கும் இரண்டாம் உலகத்துக்கும் முடிச்சுப் போடுகிறார் இயக்குனர். காதலின் தேசமான நம் உலகத்திலிருந்து காதலில் கசிந்துருகும் ஒருவனை இரண்டாம்  உலகத்திற்குக் கொண்டுவந்து அங்கிருக்கும் ஆர்யா-அனுஷ்காவுக்கு காதலைப் போதித்தால்..?

அதற்கு பலிகடா ஆகிறார் நம் உலகத்து மதுபாலகிருஷ்ணன்(ஆர்யா). அவரின் காதலியான அனுஷ்காவை பலியிட்டு, இரண்டாம் உலகத்துக்கு அவனை இழுக்கிறார் தெய்வத்தாய். அங்கே அனுஷ்காவுக்கு காதல், வெட்கம், பீலிங்க்ஸ் என்றால் என்ன என்பதை கிளாஸ் எடுக்க, அனுஷ்காவுக்கு இரண்டாம் உலகத்து ஆர்யா மேல் காதல் தொற்றிக்கொள்கிறது. அதன் மூலம் ஆர்யா மிகப்பெரிய மாவீரனாகி அந்த அரக்கக் கூட்டத்தை கொன்றொழிக்கிறான். அங்கே பூக்கள் பூத்துக்குலுங்கி நந்தவனமாகிறது. இரண்டாம் உலகம் சுபிட்சமடைகிறது.

சரி.. இப்போ நம் உலகத்திலிருந்து அங்கு சென்ற ஆர்யா என்ன ஆவார்..? அவரைக் கொன்று மூன்றாம் உலகத்துக்கு அனுப்பிவிடுகிறார் தெய்வத்தாய். அங்கே இன்னொரு அனுஷ்கா இருக்க....அவர்களுக்கும் காதல்... (சரி..சரி  உங்க நிலைமை புரியுது..அது அடுத்த பார்ட்டாக வரக்கூடும்..)


இதுதான் இரண்டாம் உலகம் மூலம் செல்வராகவன் சொல்லவந்த கற்பனைக் கதை. இந்தக் கதையை நம் குழந்தைகளுக்கு சொன்னால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். " அவர்கள் உலகம் சுபிட்சமடையணும்னு நம்ம உலகத்து காதலை பிரித்து,காதலியைக் கொன்று, காதலனை அவுங்க உலகத்துக்கு அவுங்க தெய்வம் கொண்டு போனிச்சி சரி.அப்போ நம்ம உலகத்து கடவுள்களெல்லாம் என்ன பண்ணினாங்க?".  இப்படியாக எந்தக் கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இது ஒரு ஃபேண்டசி ஃபில்ம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்.

இப்படியொரு கதையை தமிழில் எடுக்க முயற்சி செய்ததற்காக செல்வராகவனை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். இக்கதையை நமக்குள் அடங்கும் பட்ஜெட்டில் எடுத்தாக வேண்டும் என்கிற பிரச்சனைதான் அவர் சந்தித்த முதல் சவாலாக இருக்கவேண்டும். இரண்டாம் உலகம் சம்மந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமே CG WORK  செய்துதான் ஒப்பேற்றவேண்டும் என்பதால் பட்ஜெட்டில் முக்கால்வாசி இதுவே விழுங்கியிருக்கும். இரண்டாம் உலகத்தைக் காட்டியவகையில் ஹாலிவுட்டுக்கு இணையாக செதுக்கியிருக்கிறார் என்பதே தமிழில் ஒரு சாதனைதான். எது எப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு கொண்டுசெல்லும் இயக்குனர்களில் செல்வராகவன் மிக முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை...

ஆனால்........   வெறுமனே இந்த ஜில்பான்சி கதையை வைத்து படமாக எடுத்ததின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். நம் உலகத்து ஆர்யா-அனுஷ்காவின் ஆரம்ப காதல் காட்சிகள் எல்லாம் செல்வராகவனின் அக்மார்க் முத்திரை. அதிலும் அனுஷ்கா தன் காதலை ஆர்யாவிடம் புரப்போஸ் பண்ணும் காட்சி அருமை. அதன் பின்புதான் வெறுப்பேற்றுகிறார். ஆர்யா தன் தாத்தா சீரியஸாக இருக்கிறார் என்று பொய் சொல்லி அனுஷ்காவுடன் கோவா செல்லும் காட்சியிலிருந்தே போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அனைத்தும் செயற்கைத்தனமாகவே இருக்கிறது. தனது காதலியையோ அல்லது காதலனையோ இம்ப்ரெஸ் பண்ண வேண்டுமென்றால் அவர்களது  பிறந்தநாளின் முதல் நாள் இரவு கேக்,மெழுகுவர்த்தி சகிதமாக "ஹாப்பி பர்த்டே டூ யூ.." என பாடும் காட்சியை இன்னும் எத்தனை வருசத்துக்கு காட்டப்போறீங்க யுவர் ஆனர்..? வேற ஏதாவது யுத்தி யோசிக்கக் கூடாதா...?


இது கற்பனைக்கதை என்பதால் அவர் இஷ்டத்திற்கு கதை விட்டிருக்கிறார். ஜெயமோகனின் டார்த்தீனியம் படிப்பது போல் இருந்தது. இரண்டாம் உலகத்து அனுஷ்கா இறந்து போனதால்தான் ஆர்யா பைத்தியம் மாதிரி திரிந்து அந்த சுவாமி மலையின் மீது ஏறி இன்னொரு ஆர்யாவைக் கூட்டிவருகிறார். பிறகு அனுஷ்கா திடீரென்று தோன்றுகிறார். கேட்டால் அவர் மட்டும் காட்டில் தனியாக வசிக்கிறாராம்.

படத்திற்கு நிச்சயம் வரிவிலக்கு கிடைத்துவிடும். இது நம் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் இல்லை என்றாலும், இரண்டாம் உலகத்தில் வரும் அந்தத் தெய்வத்தாய், நமது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அவர்களின் குறியீடுதான் என்பதைப் பச்சைக் குழந்தைக் கூட சொல்லிவிடும். அதிலும் இடைவேளைக்கு முன் இரட்டை இலை துளிர்ப்பது ஒரு குறியீடே அல்ல. அது, "கொஞ்சம் பார்த்து கவனித்து வரிவிலக்கு கொடுங்க தாயீ " என்பதின் நேரடிக் கெஞ்சல்...!

படத்தில் ஆறுதலான விஷயம் பாடல்கள். "கனிமொழியே...","மன்னவனே என் மன்னவனே..","பழங்கல்ல.."   பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் அப்பாடல்கள் வரும் காட்சி மட்டும் கொஞ்சம் உற்சாகப்படுத்தியது. மற்றபடி பின்னணி சிம்பொனி இசை அமைத்திருப்பதாக பீத்திக் கொண்டதெல்லாம் அவ்வளவாக இம்ப்ரெஸ் பண்ணவில்லை.

உலகத்தரம், உலக சினிமா எடுக்கவேண்டுமென்றால் ஹாலிவுட் படங்களைப் போல் கதைப்பின்னவேண்டும் என்கிற அவசியமில்லை. நம் மண் சார்த்த கதைகள் எவ்வளவோ இருக்கிறது. பொன்னியின் செல்வனை திரைக்காவியமாக எடுக்க முயன்றவர்களில் செல்வராகவனும் ஒருவர். அப்படியொரு காவியத்தை எடுத்து வணிக ரீதியாக தோற்றுப் போயிருந்தால் கூட இழப்பு வெறும் பணமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் அழுத்தமாகப் பெயர் பதிந்திருக்கும். தன் கற்பனையில் ஓடிய ஒரு கதையை  படமாக எடுத்து ரசிகனை இவ்வளவு அவஸ்தைக்குள்ளாக்க வேண்டுமா..? ஒருவேளை இந்தப்படத்தை 3D யில் முயற்சி செய்திருந்தால் (கொஞ்சம் பட்ஜெட் எகிறினாலும் ) அந்த பரவசத்திற்காகவாவது தியேட்டருக்கு கொஞ்சம் கூட்டம் வந்து போட்ட பணத்தை எடுத்திருக்கலாம்.   இவரது போதைக்கு பாவம் அந்த தயாரிப்பாளர்தான் ஊறுகாய் போல..!

18 comments:

  1. hmm unga vimarsanamtan vithayasama irunthathu sir. padam paarkkanum...

    ReplyDelete
  2. வணக்கம்
    பட விமர்சனம் அருமையாக எழுதியுள்ளிர்கள் படம் பார்த்ததுபோல ஒரு உணர்வு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பலமால்ல ஊத்திருக்கு படம் ? தயாரிப்பாளர் எங்கேயோ முறுக்கு விக்க போயிட்டதா சொன்னாயிங்க...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா உண்மையாகக் கூட இருக்கலாம் பாஸ்

      Delete
  4. படத்தைப் பார்க்கணும்னா ..உங்கள் வலைப்பூ தலைப்புதான் வேண்டும் போலிருக்கிறதே !
    த.ம 3

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... நிச்சயமாக அப்படித்தான்..

      Delete
  5. விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க மணிமாறன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளிதரன்

      Delete
  6. செல்வராகவன் எப்போதுமே, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதே வா(வே)டிக்கையாக
    கொண்ட இயக்குனர்...கஞ்சா பார்ட்டிகளின் சிந்தனை போல...

    ReplyDelete
    Replies

    1. நன்றி..
      குழப்புவது இருக்கட்டும்.... இதில் தயாரிப்பாளர் ஊறுகாய் ஆனதுதான் பெரிய சோகம்

      Delete
  7. பார்த்தாச்சா..நல்லவேளை நான் தப்பிச்சேன்.

    ReplyDelete
    Replies

    1. நன்றி பாஸ்..
      பெரிய திரையில் யாம் பெற்ற 'இன்பம்' சிறிய திரையில் நீங்களும் அடைவீராக...

      Delete
  8. 3டி-ன்னா அனுஷ்காவையாவது நல்லா பார்த்திருக்கலாம்..ஆனா புரடியூசர் செத்திருப்பாரேய்யா!

    ReplyDelete
    Replies
    1. பாஸ்... ஏற்கனவே அனுஷ்கா இதில 3D சைஸ்லதான் இருக்காங்க.. :-)))

      Delete
  9. மிக சரியான பார்வை...
    நீங்க சொல்லி இருப்பதை தான் செல்வா படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். ஆனால் திரையில் அதற்கு சரியான வடிவம் குடுக்கவில்லை.
    உங்க பதிவு என்னுடைய சில சந்தேகங்களை தீர்த்து இருக்கிறது.

    ReplyDelete
    Replies

    1. நன்றி ராஜ்... முகநூளில் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி....

      Delete