Thursday 7 November 2013

ஜெயமோ தந்திரம், எழுத்தே மந்திரம், தமிழே பத்திரம் சிவ சம்போ..!


Kaniyitai eriya sulaiyum -mutral 
kazhaiyitai eriya saarum,
panimalar eriya thenum- kaaichchup
paakitai eriya suvaiyum 
nanipasu pozhiyum paalum-thennai 
nalkiya kulirila neerum,
iniyana enpen eninum -thamizhai 
ennuyir enpen kanteer! 

ப்படி படிக்க  நல்லா இருக்குல்ல....

இதை எனது பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கிற பிலிப்பைன்ஸ்காரனிடம்( Pacey Averilla) கொடுத்து படிக்கச் சொன்னேன். அவனது தாய்மொழி 'டகாலூக்'. அதன் வரிவடிவம் லத்தின் (ஆங்கில) எழுத்துகள். (அதாவது ஜெமோ சொன்னது போல் அதை 'எழுத்துரு'னு சொல்லலாம்... வரிவடிவம்னு சொல்லலாம்... புய்ப்பம்னும் சொல்லலாம்.. புண்ணாக்குனும் சொல்லலாம்) 

அவன் முதல் வரியை படித்துப் பார்த்துவிட்டு, "எழுத்தெல்லாம் ஓகே. ஆனால் இது டகாலூக் இல்லையே " என்றான். "ஆமா இந்த லாங்குவேஜ்க்கு பேரு 'டகால்டி' . இப்பத்தான் எங்க ஊர்ல புதுசா கண்டுபுடிச்சிருகாங்க..  நீங்களெல்லாம் இப்படி எழுதித்தான் பெரிய ஆளா இருக்கீங்கன்னு எங்க ஊரு விஞ்சானி ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிருக்காரு. இப்ப நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டோம்... கொஞ்சம் படிச்சி மட்டும் காமி " னு சொன்னேன்.

கொஞ்சம் தட்டுத்தடுமாறி முதல்வரியைப் படித்தவன், இரண்டாம் வரியை இப்படி படித்தான்." கசையடி எரிய சாரும்.." .  நல்லவேளை கசையடியோட என் தமிழ் தப்பித்தது.

எதற்காக அவனைப் படிக்கச் சொன்னேன் என்றால், ஜெயமோகன் குறிப்பிட்ட 'டகாலூக்' -ஐ தாய்மொழியாகக் கொண்டவன் என்பதற்காக மட்டுமல்ல, ஒருவேளை ஜெயமோகன் சொன்னது போல தமிழ் வரிவடிவம் வழக்கொழிந்து ஆங்கில(லத்தின்) வரிவடிவம் மட்டும் நம் எதிர்கால சந்ததியினருக்கு புகட்டப்பட்டால், அவர்களின் மொழி உச்சரிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை சோதித்துப் பார்க்கத்தான்.ஆனால் சர்வ நிச்சயமாக,  ன-ண, ர-ற, ழ-ள-ல இவை எல்லாம் காலப்போக்கில் ஒரே ஒலிவடிவத்தில் மாற்றம் கண்டு,  தமிழ் மெல்ல செத்து போகும்.

ஜெயமோகன் உதாரணம் காட்டும் மற்றொரு மொழி மலாய். மலேசிய மக்கள் பேசும் இம்மொழி லத்தின் (ஆங்கில) வரிவடிவத்தை பயன்படுத்தி எழுதப்படுகிறது. மலாய் மொழிக்கு தனித்துவமான வரி வடிவம் கிடையாது என்பது மட்டுமல்ல, நிறைய பதத்திற்கு நேரடியான மலாய் வார்த்தைகளே கிடையாது.

உதாரணத்திற்கு,

Doctor என்பதற்கு தமிழில் மருத்துவர் என்ற பெயர் உண்டு. ஆனால் மாலாய் மொழியில் அதை' Doktor ' என்று சொல்வார்கள். நான் சிங்கை வந்த புதிதில் உடம்பு சரியில்லை என்றவுடன் ஒரு மலேசிய தமிழ் நண்பர் ' போயி டொக்டர பாருங்க' என்றார். ஒருவேளை டாக்டரைத்தான் அப்படி உச்சரிக்கிறார் என்று நினைத்தால் கடைசியில் அவர் மாலாய் மொழியில் அப்படி சொல்லியிருக்கிறார் எனப் புரிந்தது.

அதே போல் நிறைய வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகளையே  தழுவி வரும். biscuit  / biskut , coffee  / kopi,  lorry  / lori ..இப்படி நிறைய சொல்லலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், சுயமான வார்த்தைகளே இல்லாத மலாய் மொழியோடு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியை, அதுவும் ஒர் தமிழ் இலக்கியவாதி ஒப்பிட்டு பேசுகிறாரே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக..! 

நிற்க,

எத்தனையோ இடையிறாத எழுத்துப் பணிகளுக்கு மத்தியில் இந்த மகா சிந்தனை ஜெயமோகன் அவர்களுக்கு எப்படி தோன்றியது என்று மங்குனி அமைச்சர் போல மணிக்கொருமுறை உட்காந்து யோசித்துப் பார்க்கிறேன்.

அதாகப்பட்டது....

அவர் சென்னையில் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றை கடந்து செல்லும் வேளையில் அங்கு வாசலில் ஒட்டியிருந்த ஓர் அறிவிப்பு  அவரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஆங்கில நூல் ஒன்று வெளிவந்த முதல் நாளே 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்பதற்கான அறிவிப்புதான் அது.


விழுமியங்கள், தரிசனம், மனவெழுச்சி, புறமொழி, நனவிலி, நிகழ்வியல், படிமங்கள், குறியீடுகள் என்று தமிழில் புதிய அகராதியே எழுதுமளவுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாற்றிக்கொண்டிருக்கும் இலக்கியவாதியான எனது புத்தகங்களே வருடத்திற்கு 500 பிரதிகள் விற்பது குதிரைக் கொம்பாக இருக்கும் தமிழ்ச்சூழலில், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஒரே நாளில் 2,000 பிரதிகள் எப்படி விற்றது என்று அப்படியே ஓரமாக முட்டுச்சந்தில் உட்கார்ந்து முக்கி முக்கி யோசித்த பொழுதுதான் இப்படியொரு ‘தரிசனம்’ அவருக்குக் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது,ஜெமோ அவர்கள் பேனா பிடித்து எழுதி பதிமூன்று வருடங்களாகிறதாம். கணினி விசைப் பலகையில் ஆங்கில எழுத்துகளை தட்டச்சு செய்து தமிழில் எழுதுவது போரடித்துவிட்டதால், நேரடியாக ஆங்கில 'எழுத்துரு' வையே பயன்படுத்தலாமே என்கிற யோசனை வந்திருக்கிறது. 

வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால் வீட்டையே கொளுத்துவது எப்படி சரிவரும் ஜெமோ சார்?. தமிழ் இலக்கியப் பரப்பில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியவாதி மட்டுமல்ல, விஷ்ணு புரம், அறம் போன்ற அற்புதப் படைப்புகளை தமிழுக்கு அருளியவர் நீங்கள். அதற்காக தமிழ் இலக்கிய உலகமே உங்களைச்சுற்றி சுழலவேண்டும் என நினைப்பது எப்படி சரியாகும்..?  நீங்கள் எழுதிய நூல்கள் வருடத்திற்கு 500 பிரதிகள்தான் விற்கிறது என்றால் அதுதான் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பிற்கான வணிக வரையறையா..?  நீயா நானா கோபி, சோம வள்ளியப்பன் எழுதிய புத்தகங்கள் லட்சக் கணக்கான பிரதிகள் விற்றதாக சொல்கிறார்களே...? சுஜாதா, இறையன்பு எழுதிய புத்தகங்கள் பல்லாயிரக் கணக்கில் விற்றுள்ளதாக ஒரு பதிப்பாளர் சொல்கிறாரே.?

தமிழில் புத்தகங்கள் அதிகம் வாசிக்கப்படாததற்கு தமிழ் எழுத்துருவே காரணம் என்றால் இது மட்டும் எப்படி சாத்தியமானது.?. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகனுக்கு உங்கள் நாவல்களை வாசிக்கத் தடையாக இருப்பது உங்கள் மொழியின் கனமே அன்றி எழுத்துரு அல்ல. உங்களின் கட்டுரைக்கு வந்த எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் மீதான தனி மனித தாக்குதல் அல்ல. உங்களது கருத்துக்கான எதிர்வினைகள். எமது தாய்த் தமிழை சிறு களங்கமுமில்லாமல் எங்களின் அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியின் வெளிப்பாடு. அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைவிட எங்களுக்கு நிறையவே இருக்கிறது. 


டிஸ்கி

ஜெமோ-வின் கட்டுரை வெளியாகிய சில மணி நேரத்திலே அதற்கான எதிர்வினைகள் பேஸ்புக்கில் வெளியாகி, அவரது கருத்துக்கெதிராக பலரும் பொங்கித்தள்ளினர். இரண்டு நாட்கள் வரை விவாதங்கள் நடைபெற்றது. இறுதியாக சில தமிழார்வ அரசியல் தலைவர்கள்  'தி இந்து' அலுவலகத்திற்குச் சென்று எதிர்ப்பை நேரிடையாக பதிவு செய்தனர். ஏனோ தெரியவில்லை.... பிளாக்கரிலும் வலைத்தளத்திலும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிளாக்கர்கள் வெறுமனே சினிமா விமர்சனம் எழுதத்தான் லாயக்கு என சில பேஸ்புக் பதிவர்கள் கிண்டலடித்ததைப் படித்திருக்கிறேன்.. ஒருவேளை அதுதான் உண்மையோ...!     

16 comments:

  1. தமிழில் தேர்ந்த எழுத்தாளராகக் காட்டிக் கொள்ளும் ஜெயமோகன், எதோ சரக்கடித்துக் கிறுக்கியது போல் எழுதியதையும் தி இந்துவினர் வெளியிட்டு வாங்கிக் கட்டியுள்ளனர். ஐயா எழுதியது போல அவரின் பதிவில் உள்ள அபத்தங்களை எளிமையாக விளக்கியுள்ளீர்கள். அவற்றை விவரணமாய் விளக்க முடிவு செய்துள்ளேன். முதற்கட்டமாய் இன்றைய பதிவில் சிலவற்றை எடுத்து வைத்துள்ளேன் அடுத்த பதிவில் மேலும் சிலவற்றை விளக்கமளிக்க உள்ளேன், வாசித்து நிறை குறைகளை அறியத்தரவும். நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி விவரணன் நீலவண்ணன்
      உங்கள்தரப்பு கோபங்களையும் தைரியமாக வெளிப்படுத்துங்கள். நிச்சயமாக கண்டிக்கவேண்டிய கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

      Delete
  2. பிளாக்கர்கள் வெறுமனே சினிமா விமர்சனம் எழுதத்தான் லாயக்கு என சில பேஸ்புக் பதிவர்கள் கிண்டலடித்ததைப் படித்திருக்கிறேன்.. ஒருவேளை அதுதான் உண்மையோ...!
    ......இருக்கலாம் ஆனால் நான் அப்படியல்ல தொடர்ந்து மூன்று பதிவுகள் போட்டு இன்றுவரை தினமணியில் வலைப்பூவில் முதலிடத்தில் இருக்கின்றது ...
    ஆனால் தங்கள் பதிவு அருமையானது ...ஆய்வுக்கட்டுரை

    ReplyDelete
    Replies
    1. /// தொடர்ந்து மூன்று பதிவுகள் போட்டு இன்றுவரை தினமணியில் வலைப்பூவில் முதலிடத்தில் இருக்கின்றது ...// வாழ்த்துக்கள் பாஸ்...

      நான் பொதுவாக என் கருத்தை பதிவுசெய்தேன் பாஸ்.. :-))

      திரைவிமர்சனம் எழுதி ஹிட்ஸ் வாங்கவேண்டும் என்பதற்காக முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து ஓடும் நாம் (நான் உட்பட) , தமிழை சிதைக்க ஜெமோ எழுதியிருக்கும் முக்கியமான அந்த கட்டுரைக்கு தமிழ் பதிவர்கள் என்கிற முறையில் நாம் ஏன் கண்டனத்தை உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை என்கிற ஆதங்கத்தைத்தான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்...

      Delete
  3. மணிமாறன்,

    //பிளாக்கரிலும் வலைத்தளத்திலும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிளாக்கர்கள் வெறுமனே சினிமா விமர்சனம் எழுதத்தான் லாயக்கு என சில பேஸ்புக் பதிவர்கள் கிண்டலடித்ததைப் படித்திருக்கிறேன்.. ஒருவேளை அதுதான் உண்மையோ...! //

    ஒரு வேளை எல்லாம் உங்களைப்போல பொறுமையா சிந்தித்து கருத்து சொல்லலாம்னு வெயிட்டிங் போல அவ்வ்!

    ஹி...ஹி நாமலாம் அன்னிக்கே பொங்கல வச்சிட்டோம்ல, இன்னும் சொல்லப்போனால் ரொம்ப சீக்கிரமா எழுதின ஒரு பதிவு அதான் , வழக்கமா எனக்கு ஒரு பதிவுக்கு குறைந்த பட்சம் ஒருவாரம் தேவைப்படும்.

    நம்ம பொங்கல் இது,

    http://vovalpaarvai.blogspot.in/2013/11/blog-post.html


    #வரிவடிவம் மாத்தினால் தமிழ் இன்னும் பரவும்னு சொல்வதை ஒரு பேச்சுக்கு சரினே வச்சிக்கிட்டாலும் அதால் நமக்கு நன்மையை விட தீமையே அதிகம், தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல இலக்கணம் உள்ள மொழி, எழுத்திலக்கணம்,யாப்பிலக்கணம் என பொட்டு ,எல்லாத்துக்கும் விதியுள்ளது.

    உதாரணமா,

    திருக்குறள் என்றால் வெறும் ரெண்டடி பாட்டு, அல்லது டிவிட்டர் அல்ல, அதுக்குனு ஒரு யாப்பிலக்கணம் இருக்கு, அசை,சீர் தளைனு பார்த்து, 7 சீர்கள் கொண்ட ,இரண்டடியில் பாடப்பட்ட குறளாசிரியப்பா என வரையரை இருக்கு.

    எல்லாம் தமிங்கிலீஷ்ல எழுதிட்டா இந்தால் இந்த இலக்கணமே இல்லாமல் போயிடும்,அப்புறம் ரெண்டு வரி டிவிட்டர் போட்டவனெல்லாம் திருவள்ளுவர் தான் அவ்வ்!

    குறள்ப்பானு ஒன்னு இருக்கிறது எல்லா தமிழ்ப்புலவர்களுக்கும் தெரியும் ஏன் வள்ளுவருக்கு அப்புறம் அதே போல குறள் எழுதி ஃபேமஸ் ஆகலை என பார்த்தால் தான் வள்ளுவரின் சிறப்பே நமக்கு புரிய வரும்.

    இத்தனை இலக்கண விதிகளுக்கும் கட்டுப்பட்டு 1330 குறளை எளிமையாக, இனிமையாக, அதுவும் ஆழமான பொருளுடன் எழுதி இருக்கிறார் என்றால் அங்கே தான் வள்ளுவரின் மொழி ஆளுமை வெளிப்படுது.

    குத்துப்பாட்டு யார் வேண்டுமானாலும் எழுதலாம் குறட்பா எழுத ஒருத்தரால் தான் முடியும்,அதனால் தான் சிலை வைக்கிறாங்க..

    செமோ எல்லாரையும் குத்துப்பாட்டு எழுதினா போதும்னு ஒரேஅடியா தரைமட்டமாக்கி தமிழின் தொன்மையை இல்லாம செய்யப்பார்க்கிறார்!





    ReplyDelete
    Replies
    1. நன்றி வௌவால்...மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பிளாகரில் முதல் பொங்கலை வைத்தது நீங்கள்தான் என்று தெரியும். அன்றே அந்தப் பதிவைப் படித்தேன். ஆனால் ஏனோ பேஸ்புக்கில் பொங்கிய அளவுக்கு பதிவுலகில் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லையே என்கிற கோபம்தான் அந்த டிஸ்கி. பிரச்சனை ஆறிப்போன பிறகுதான் நானே பதிவு போட்டிருக்கிறேன்... :-))

      வலைப் பூவில் இதற்கு முன்பாக செங்கோவி, சீனு, உசி ரசிகன், இக்பால் செல்வன் இன்னும் சிலர் ஆற்றிய எதிர்வினைகள் ஓரளவு மகிழ்ச்சியளித்தது.

      Delete
  4. அப்படி இல்லை!இந்த மெத்தப் படித்த மேதாவிக்கு இலவச விளம்பரம் நாம் செய்ய வேண்டுமா? என்று யோசித்திருப்பார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி Subramaniam Yogarasa
      மெத்தப்படித்த தலைகனம்தான் மேதாவித்தனமாக இப்படி சிந்திக்க வைத்திருக்கிறது,

      Delete
  5. //அதற்காக தமிழ் இலக்கிய உலகமே உங்களைச்சுற்றி சுழலவேண்டும் என நினைப்பது எப்படி சரியாகும்..? // மிக சரியான கேள்வி

    ஜெமோ ஏன் அவ்வபோது இப்படியான கட்டுரைகள் எழுதி நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.. என்ன செய்வது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு. அவர் இன்னமும் எழுத்துரு னுதான் எழுதிகிட்டு இருக்காரு பாத்தீங்களா....

      Delete
  6. ஜெயமோகனின் லூசுத்தனமான எண்ணம் இது! கோபத்திற்கு பதில் சிரிப்புத்தான் வந்தது! விட்டுத்தள்ளுங்கள்!

    ReplyDelete
    Replies

    1. நன்றி சுரேஷ்... எதிர்வினைகனைக்கான பதில்கனை முன்னமே எழுதிவைத்துவிட்டு கட்டுரை எழுதிய ஒரே அறிவு ஜீவி அவர்தான் என நினைக்கிறேன்.

      Delete
  7. சார் நீங்க வேற இதெல்லாம் உண்மை இல்லை. ஜெமோவுக்கு தமிழ் டைப்பிங் அவ்வளவா வராது. அதனால அவரு இணையத்தில ஒரு ஆக்கம் எழுதனும் அப்படின்னா ஒரு வாரம் ஆகுது. தட்டுத் தடுமாறி தமிழ் டைப் பண்ணி முடிக்கிறதுக்குள்ள அடுத்தவன் எங்கேயோ போயிடுறான்.

    அதனாலதான் இந்நதளு இரவு பகலா யோசிச்சு இப்படி ஒரு யோசனையை கண்டுபுடிச்சாரு. பாரங்க தமிங்கிலீசா எழுத்துகளை மாத்தினா டைப் பண்ணுறது எவ்வளவு சுலபம். சும்மா கட்டுரைங்களை அடிச்சு விட்டுட்டே இருக்கலாம்... இது புரியாம இந்து பேப்பர்காரனுங்க அதை வெளியிட்டாங்கன்னா நீங்க வேற அதை உண்மைன்னு நம்பி.. அய்யோ அய்யோ..........

    -சுதா-

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... அப்படிக்கூட இருக்குமோ.... நன்றி சுதா..

      Delete
  8. எழுத்து விபச்சாரியோட சண்ட போட்டா நமக்குத்தான் கேவலம்...இவனோட போயி சுஜாதாவ ஒப்பிடுறத நான் வன்மையா கண்டிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக.... இவர் எழுதுறதுதான் இலக்கியம் என்கிற தலைகனம் இவருக்கு.

      Delete