Friday 15 November 2013

வில்லா...நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை ..(விமர்சனம் )

நீண்ட காலமாக திறக்கப்படாமல் கிடக்கும் ஒரு பழைய பங்களா, நிறைய இருட்டு, இரைச்சலான பின்னணி இசை, வித்தியாசமான கேமரா கோணங்கள், இறுக்கமான முகத்தோடு கதாபாத்திரங்கள் இவைகள் இருந்தாலே போதும், பார்வையாளனை மிரட்டிவிடலாம் என்கிற தட்டையான சிந்தனையிலிருந்து நம் கோடம்பாக்கத்து மேதைகள் எப்போதுதான் வெளிவரப்போகிறார்களோ தெரியவில்லை... இதை மட்டுமே வைத்து ஒரு சராசரி ரசிகனை திருப்திபடுத்தி விடமுடியுமா....?

பில்லி சூனியம்,மாந்திரீகம் போன்ற நம்மவூர் சமாச்சாரங்களை வைத்துதான் கதையைப் பின்னியிருக் -கிறார்கள். அதையே BLOCK MAGIC, WITCHCRAFT, FUTURE PREDICTION என மேல்தட்டு மக்களுக்கு மட்டும் விளங்கும் மொழியில் ஜல்லியடித்திருக்கிறார். இதில் பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி, J.J தாம்சன் எபெக்ட் போன்ற அறிவியல் பூர்வமான விளக்கங்கள் வேறு. படம் பார்ப்பவர்கள் எல்லாம் வாரத்திற்கு இரண்டு ஹாலிவுட் படங்களை பார்ப்பவர்கள் என்கிற நினைப்பிலேயே எடுத்திருக்கிறார்கள். படத்தின் முக்கிய பகுதியே இப்படி விளங்காத மொழியில் இருந்தால், ஓர் சாமானிய ரசிகனை எப்படி கதையினூடே பயணிக்கச்செய்யும்...?

கதையில் ஒன்றும் வித்தியாசமில்லை.ஹாரர் படத்திற்கே உரித்தான அதே டெம்பிளேட் கதைதான்.

கிரைம் எழுத்தாளரான கதாநாயகன் அசோக் செல்வனின் அப்பாவான நாசர், கோமா நிலையிலிருந்தே இறந்து போகிறார். அவர் இறந்த பிறகுதான் அசோக்செல்வனின் பெயரில் பாண்டிச்சேரியில் ஒரு வில்லா இருக்கும் விஷயம் தெரியவருகிறது. நாசர் எதற்காக மறைக்கவேண்டும் என்ற கேள்வியிலிருந்தே யூகிக்கலாம், அது அமானுஷ்யம் நிறைந்த பாழடைந்த வில்லா. அதில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன... அதிலிருந்து விடுபட்டாரா என்பதே மீதிக்கதை.

அந்த வில்லாவின் பின்னணி கொஞ்சம் சுவாரஸ்யமானது.

பாண்டிச்சேரியில் அமைந்துள்ள அந்த வில்லா ஒரு பிரெஞ்சுகாரரால் கட்டப்பட்டது. பில்லி சூனியம்(அதைத் தான் BLOCK MAGIC, WITCHCRAFT என்று பில்டப் கொடுக்கிறார்கள்) போன்ற வித்தைகளில் கைத்தேர்ந்தவரான அந்த பிரெஞ்சு ஆசாமி, FUTURE PREDICTION எனப்படும் எதிர்காலத்தை கணிக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள ஒரு குழந்தையை நரபலியிடுகிறார். அச்சம்பவத்துக்குப் பிறகு அந்த வில்லா நெகடிவ் எனர்ஜி எனப்படும் பில்லி சூனியத்தால் முழுவதுமாக சூழப்படுகிறது.

அதன் பிறகுதான் சுவாரஸ்யம். அங்கு வசித்தவர்கள்/வசிப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு சக்தியினால் அழுத்தப்பட்டு எதிர்காலத்தைக் கணிக்கும் வல்லமை பெற்றுவிடுகிறார்கள். அக்கணிப்பை கவிதையாகவோ, ஓவியமாகவோ, கதையாகவோ ஏதோ ஒரு கலைவடிவத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அக்கணிப்புகள் அடுத்தடுத்து உண்மையாகி விடுவதுதான்  திரைக்கதையில் திகிலூட்டும் திருப்பங்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு பிரெஞ்சுகாரரிடமிருந்து அரசாங்கம் கையகப்படுத்தி ஏலம் விடுகையில், அந்த வில்லா ஜமீன்தாரரான வீர சந்தானம் கைக்கு மாறியிருக்கிறது. அதன் பின்னர் அந்தக் குடும்பம் நொடித்துப் போய்விட, பிற்பாடு  நாசர் அந்த வில்லாவை வாங்கியிருக்கிறார்.

வீர சந்தானம் தன் குடும்பத்தினருக்கு எதிர்காலத்தில் நிகழும் சம்பவங்களை கவிதையின் மூலம் தெரியப் படுத்தி பின்பு மனநிலை பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார். அது போலவே பெயின்டிங் வரைவதில் ஈடுபாடுள்ள நாசர், தனக்கும் தன் மனைவி மற்றும் மகனுக்கும் நடக்கப் போகும் விபரீதங்களை ஓவியங்களாக வண்ணம் தீட்டுகிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த அமானுஷ்யங்கள் அவர்களுக்குத் தெரியாமலே அந்த வீட்டில் இருக்கும் நெகடிவ் எனர்ஜியால் நடப்பவை.

பேய், அமானுஷ்யப் படம் என்றால் பீதி நிறைந்த ஒரு பங்களாவில் நீண்ட காலமாக பூட்டியே கிடக்கின்ற மர்ம அறை ஒன்று இருக்கவேண்டும். அதை கதாநாயகன் வந்துதான் ரிப்பன் வெட்டி திறக்க வேண்டும் என்கிற விதி இதிலும் பின்பற்றப்படுகிறது. அங்கு ஏதோ ஒரு மர்மப் பொருள் இருக்கப்போகிறது என்று மனது படபடக்க, அந்த அறைக்குள்தான் நாசர் வரைந்த பெயிண்டிங் இருக்கிறது. இதை எதற்கு இவ்வளவு ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று யோசிக்கும் போதுதான் இந்த FUTURE PREDICTION பற்றி தெரியவருகிறது. அதன் பிறகு அவர் தேடி அறிந்த விசயங்கள் தான் மேலே உள்ள பத்திகளில் சொல்லப்பட்டிருக்கிறது.


நாயகனாக வரும் அசோக் செல்வம் சிரமமில்லாமல் நடித்திருக்கிறார். படம் முழுக்க இறுக்கமான முகத்தோடு வருகிறார். பேய் படம் என்றால் இந்த ஒரே எக்ஸ்ப்ரஸன் தானே...! ஆரம்பத்திலேயே நாசர் இறந்து விடுவது போல் காட்டப்படுவதால், பின்னர் அழுத்தமான பிளாஸ்பேக் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறது. கருப்பு கண்ணாடி போட்ட நாசரின் அந்த பிளாக் ஒயிட் புகைப்படம் அருமை.

நாயகியாக வரும் சஞ்சிதா கொஞ்சம் அஞ்சலி சாயலில் இருந்தாலும், தமிழ்ப் பேய் படங்களில் வழக்கமாக வரும் மேற்படி கில்மா காட்சிகள் எதுவும் இல்லாததால் மனதில் ஒட்ட மறுக்கிறார். படத்தில் அழுத்தமாக மனதில் பதிந்த கேரக்டர் என்றால், அது பொன்ராஜாக வரும் அந்த வெள்ளந்தி மனிதர். மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் திகிலூட்டும் காட்சி என்று எதையும் பெரிதாக சொல்லமுடியவில்லை. வெறும் சவுண்டு எபெக்ட் மட்டுமே சில காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. மற்றபடி காதிரண்டையும் பொத்திக்கொண்டால் 'நாகா' சீரியல் பார்த்த உணர்வுதான்.

பேய், பில்லி சூனியம்,அமானுஷ்யங்கள் எல்லாமே நம் சமூகத்தில் விரவிக்கிடக்கும் மிகப்பெரிய லாஜிக் மீறல்கள் என்பதால், அதை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக லென்ஸ் வைத்து தேடவேண்டியதில்லை.

படத்தில் சிரிப்பதற்கு ஒரே ஒரு காட்சி மட்டும் இருக்கிறது.மூடநம்பிக்கைகளால் மூழ்கிப்போன நம் சமூகத்தில் பின்பற்றும் சில மரபுகளை விஞ்ஞான ரீதியாக விளக்கம் சொல்லி முட்டுக் கொடுப்பார்கள் பாருங்கள்.. அதற்கு சிரிக்காமல் என்ன செய்ய..?

கடவுளின் சக்தியை இதில் பாசிடிவ் எனர்ஜி என அவதானிக்கிறார்கள். அதாவது நம்ம ஊர்ல இருக்கிற கோயில்களின் கற்பகிரகத்தை ஐம்பொன்னாலான காந்தம் போன்ற பொருளை வைத்துதான் கட்டுறாங்க இல்லையா... அதனால் அதிலிருந்து பாசிடிவ் எனர்ஜி புரடியூஸ் ஆகுதுனு நம்புறாங்க. நம்ம முடிக்கு பாசிடிவ் எனர்ஜியை அப்சர்வ் பண்ணுகிற திறன் இருக்காமாம்.அதனாலதான் கோயிலுக்கு வருகிற ஆண்களை சட்டையைக் கழட்ட சொல்லியும், கையெடுத்துக் கும்பிடவும் சொல்றாங்க. ஏன்னா அக்குளில், மார்பில் இருக்கும் முடிகள் அந்த சக்தியை உட்கிரகித்துக் கொள்ளுமாம் ( ஏன் சாமி... இந்த தாழ்த்தப்பட்டவர்களை யெல்லாம் கோயிலுக்குள்ள அனுமதிக்க மாட்டேங்குறாங்களே.. அவுங்க முடிக்கெல்லாம் இந்த எனர்ஜியை அப்சர்வ் பன்ற திறன் இல்லையோ..?). பெண்களை அதிக நகைகளை போட்டு வர சொல்றதும் இதுதான் காரணமாம். தங்கம் பாசிடிவ் எனர்ஜியை அப்செர்வ் பண்ணுமாம்.(காஞ்சிபுரம் தேவனாதனை எந்த எனர்ஜி 'உசுப்பி' விட்டிருக்கும்...?)

இதை வெறுமனே 'வில்லா' என்ற பெயரில் எடுத்திருக்கலாம். தமிழில் இன்னுமோர் புதியமுயற்சி என்கிற ரீதியில் புன்முறுவலோடு சகித்துக்கொள்ளலாம். ஆனால் பீட்சா-2 என்று விளம்பரப் படுத்தப்பட்டதாலோ என்னவோ பீட்சா தந்த தாக்கத்தில் கால்வாசிகூட இந்தப்படம் தரவில்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது. படம் முடிந்து வெளிவரும்போது, நல்லவேளை இந்தப் படத்தின் ரிசல்ட்டால் பீட்சா-3 என்கிற அடுத்த விபரீதத்திற்கு தயாராக மாட்டார்கள் என்கிற நம்பிக்கை மட்டும் சற்று ஆறுதலை தந்தது.





8 comments:

  1. பீட்சா-2 என்று சொன்னதால், கொஞ்சம் ஏமாற்றப்பட்ட ஃபீலிங் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பாஸ்... நன்றி,

      Delete

  2. நமக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம் அதனால உங்க விமர்சனத்திற்கு ஒரு வோட்டு போட்டு போகிறேன் tha.ma 2

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை. ஓட்டு போட்டதற்கு நன்றி பாஸ்

      Delete
  3. விமர்சனத்துக்கு நன்றி!ஒவ்வொருவர் பார்வையில் வேறு,வேறு கோணங்கள்.மக்களை இணைப்பதற்கு/மோத விடுவதற்கு சமூக வலை அமைப்புக்கள் அவசியம் தான்!

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி பாஸ்.. விமர்சனம் என்பதே அவரவர் பார்வையில் தோன்றுவதை வெளிப்படுத்துவதுதானே.

      Delete
  4. படம் மோசமில்லை ரகம் தான்.. ஹீரோயின் பற்றிய தெளிவு கடைசியில் இல்லை.. படத்தில் சஸ்பென்ஸ் பச்னு போனதுக்கு அது கூட காரணமா இருக்கலாம். (என்னோட கருத்து இது)

    ReplyDelete
    Replies
    1. நன்றி.படம் மொக்கையில்லைதான் ஹாரி... ஆனால் B ,C செண்டர் மக்களுக்கும் ரீச் ஆகிறமாதிரி இன்னும் தெளிவாக எடுத்திருக்கலாம் என்பதைத்தான் சொன்னேன்.

      Delete