Thursday 8 March 2012

உத்திரப்பிரதேசத் தேர்தல்...ஒரு உத்தேசத் தேர்தல்?






       ரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகக்  கருதப்பட்ட இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், ஒட்டு மொத்த இந்திய மக்களின் மன நிலையை அப்படியே பிரதிபலித்திருப்பதாகக் கருதலாம்.நடந்து முடிந்த உத்திர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்திரகான்ட்  ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் மணிப்பூரில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துள்ளது.உத்திரகான்ட் மாநிலத்தில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இழுபறியில் உள்ளது.இவைகள் எல்லாமே சிறு மாநிலங்கள் என்பதால் இதன் முடிவுகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தைக் கொடுக்காது என்பது யாவரும் அறிந்ததே.

      இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். நரசிம்மராவ், தேவகவுடா தவிர்த்து அனைத்து பிரதமர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய உத்திர பிரதேசத்தின் தேர்தல் முடிவு தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையே நடக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான  'செமி பைனல்'-ஆகத்தான் கருதப்பட்டது.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராகுலின் கடுமையான பிரச்சாரத்தால் மாயாவதிக்கு எதிரான வாக்குகள் காங்கிரசுக்கு விழ,காங்கிரஸ் 22  தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்ட மன்றத்தேர்தலிலும் அதே .'.பார்முலாவை பயன்படுத்த,இந்த முறை எடுபடாமல் போனதுதான் ராகுலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.இதற்காக அவர், சோனியாகாந்தி,பிரியங்கா,அவர் கணவர்,மகன்கள் என்று ஒட்டுமொத்த நேரு குடும்பத்தையும் களத்தில் இறக்க,மக்கள் அவர்கள் முகத்தில் மொத்தமாக கரியை பூசியிருக்கிறார்கள்.பிரச்சாரத்தில்,மாயாவதிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை  ராகுல் வைத்தபோது மக்கள் அதை ரசிக்கத்தான் செய்தார்கள்.ஆனால் மாயாவதிக்கு மாற்றாக மக்கள் காங்கிரசையோ அல்லது பிஜேபியையோ கருதாமல் முலயாம்சிங்யாதவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத்தலைவரும் முலயாமின் புதல்வருமான அகிலேஷ்சிங் யாதவ் தான் என்றாலும்,ஒட்டு மொத்த சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் இவர்களுக்கே விழுந்ததுதான் இந்தத் தனிப் பெருன்பான்மையான வெற்றிக்கு காரணம்.இதை முன்னால் முதல்வர் செல்வி மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார்.



        ஒரு ஜாதிக்கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தப் பெருமை இந்தியாவிலே மாயாவதியின் பகுஜன் சமாஜ்க்கு மட்டும் உண்டு.ஆனால் சுயவிளம்பரமும்,வீண் செலவும்,கட்சி எம்எல்ஏ-க்களின் அட்டகாசமும்(பல எம்எல்ஏ-க்கள் மீது கற்பழிப்பு புகார் கூட உள்ளதாம்) தான் இவருக்கு இப்படியொரு தோல்வியைக் கொடுத்திருக்கிறது.ஆனால் திமுகா-வைப் போல் படுதோல்வி என்றில்லாமல் கௌரவமாக 80 தொகுதிகளில்  ஜெயித்திருக்கிறார்.இது அவரின் தலித் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது என்பதைத்தான்  காட்டுகிறது.


  பிஜேபியின் பிரச்சார 'ஐகான்' என்று கருதப்படும் ராமர் கோவில் இங்குதான் உள்ளது.இந்தத் தோல்வி அவர்களையும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது   

    சரி.... இந்தியாவின் அடுத்தப் பிரதமர் என்று எல்லோராலும்(?!)அறியப்பட்ட ராகுல் காந்தியின் பிரச்சாரம் எடுபடாமல் போனதன் காரணம்  என்ன?  



                    கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்து,ராகுல்காந்தியை இந்தியாவின் அனைத்து ஊடகமும் ஆஹா ஒஹோ வென்று புகழ்ந்து தள்ளிய நேரம். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியில் ராகுல்கந்தியுடன் அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.ராகுலும் அப்துல்கலாம் ரேஞ்சுக்கு அள்ளி விட வெறுப்பான மாணவர்கள் அரசியல் ரீதியான கேள்விக் கணைகளை தொடுத்துள்ளனர். JNU மாணவர்கள்தான் அதிபுத்திசாலிகளாச்சே...அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதலளிக்க முடியாமல் திணறிய ராகுல்,நான் தலித்  மக்கள் வீட்டில் போய் சாப்பிடுகிறேன்,அவர்கள் வீட்டில் போய் தங்கியிருக்கிறேன்,வேறு யாராவது இது போல் செய்கிறார்களா?.இதைப் பற்றி  ஏன் யாரும் கேட்க மாட்டேங்கிறீங்க-னு மாணவர்களைப் பார்த்து கேட்டாராம். அதாவது இவர் தலித் வீட்டில் சாப்பிட்டதை ஒரு பிரச்சாரமாகவே சொல்லித் திரிவது தலித் மக்களை இன்னும் மட்டம் தட்டுவது போல் அல்லவா உள்ளது. உத்திரபிரதேசத்தில் தேர்தலுக்காக இவர் போட்ட 'சீன்' நம்ம ஊர் நடிகர்-கம்- அரசியல்வாதிகளின் நடிப்பையே மிஞ்சிவிட்டது என்று கூட சொல்லலாம். மண்சட்டி தூக்குவது(காலில் 'ஷு ' போட்டுக்கொண்டு),தோளில் கைபோட்டு பேசுவது, தலித் வீட்டில் சாப்பிடுவது,சாக்கடை சகதியில் நடந்து சென்று ஓட்டு கேட்பது(அப்படியே இவை எல்லாவற்றையும் .'.போட்டோ எடுத்து சுடச்சுட பத்திரிக்கையில் போடுவது)  என்று எல்லா யுத்திகளையும் பயன்படுத்தினார். ஆனால் இந்த 'பப்பு' நம்ம ஊரில் வேண்டுமானால் வேகலாம்.அங்கு அடித்து விட்டார்கள் மொத்தமாக ஆப்பு.காங்கிரசின் கோட்டையான அமேதியிலும், ரேபரெலியிலும் ஒரு தொகுதி கூட கிடைக்காதது மிகப்பெரிய கேவலம். இதிலிருந்து காங்கிரசின் சரிவு ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் நிதர்சன உண்மை.


        
    பொதுவாகவே உத்திரபிரதேச தேர்தலை ஒத்தே பாரளுமன்ற தேர்தலின் முடிவும் இருக்கும் என்பது ஓரளவு உண்மையே.அந்தக் கண்ணோட்டத்தில் வைத்துப் பார்த்தால் 2014-ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல்,மீண்டும் மாநிலக் கட்சியின் கைகளே ஓங்கியிருக்கும் என்பது நமக்கு புலப்படும் உண்மை.இது நிச்சயமாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாகவே  அமையும். 




---------------------------------------((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))---------------------

1 comment:

  1. உத்தர பிரதேசத்தில் ஓட்டுகள் ஜாதி வாரியாகவும் இஸ்லாமியர்களை அடிப்படையாகக் கொண்டும் பிரிந்துள்ளது. 2007 சட்டமன்ற தேர்தலில் தலித் மற்றும் பிராமணர் ஓட்டுகள் மொத்தமாக மாயாவதிக்குக் கிடைத்தன. இம்முறை பிராமணர் ஒட்டு பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு சென்று விட்டது. இஸ்லாமியர்கள் மற்றும் யாதவர்கள் ஓட்டு வங்கியே முலாயமின் பலம்.

    சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன் முலாயம் இஸ்லாமிய எதிரியாகக் கருதப்படும் கல்யாண்சிங்கை கட்சியில் சேர்த்துக் கொண்டதால்
    இஸ்லாமியர் ஓட்டு காங்கிரசுக்குப் பெயர்ந்தது. இதன் பலனாக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. கல்யாண்சிங் கட்சியை விட்டு நீக்கப் பட்டதால் இப்பொழுது இஸ்லாமியர்கள் ஓட்டு மறுபடி கிடைத்துள்ளது.


    இம்முறை முலாயமிற்கும் மாயாவதிக்கும் வாக்கு விகிதத்தில் வித்தியாசம் 3 விழுக்காடுதான். இது பாராளுமன்ற தேர்தலுக்குள் தலைகீழாக மாறக் கூட வாய்ப்புண்டு.

    காங்கிரஸ் இங்கே பலவீனமானதுடன் ஆந்திராவிலும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளதால் மிகுந்த சிக்கலில் உள்ளது. பா.ஜ.க வலுவான கூட்டணி அமைக்காவிட்டால் 2014 இல் அரைவேக்காடு மூன்றாவது அணி அரசாங்கம் அமைவதற்கே
    வாய்ப்புண்டு.

    ReplyDelete