Saturday 21 February 2015

அனேகன்

னேகன் என்கிற டைட்டில் ஜெகன் சொன்னதாம். னேகன் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவன் என்று பொருள். சிவபெருமானை ஏகன் அனேகன் என்று மணிவாசகர் பாடினாராம். ஏகன் என்றால் ஒருவன். அவன் இறைவன். அவனே பிற தெய்வங்களாக பல வடிவங்களில் இருப்பதால் அநேகன் என குறிப்பிடுகிறார்கள்.(ஜெகன்.. ஏகன்..அனேகன்.. ஒரு ரைம்ஸா  வருது இல்ல...?)

இதில் வெவ்வேறு ஜென்மங்களில் வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு குணவியல்புடன் வருகிறார்கள் 'அனேகன்' தனுஷும், 'அனேகள்' அமைரா தாஸ்தூரும்.

ஒரு நிமிஷம்.... படம் ரிலீசாகி, ஓபனிங் கலெக்சன் எல்லாம் முடிந்து, நெட்டுல கூட வர ஆரம்பிச்சிட்டு. இப்போ என்ன  FDFS பாத்த மாதிரி புதுசா விமர்சனம்..? ஹி..ஹி...அதாகப்பட்டது..ரிலீஸ் அன்னிக்கே படம் பார்த்து விமர்சனம் எழுதி வெளியிட்டுவிட்டேன் . ஆபிசில் அதிகபட்ச ஆணிகள் இருந்ததால் பிளாக் பக்கம் ஒருவாரம் வரமுடியவில்லை. இப்போ வந்து சண்டமாருதம் விமர்சனம் எழுதலாம்னு திறந்து பார்த்தால், 'என்னை அறிந்தால்' -லே நிக்குது. பதிவு draft-ல் கிடக்குது. கடலே வற்றிப் போனாலும் போகலாம். அடியேன் கடமை தவறியதாக சரித்திரம் இருக்கவே கூடாது. ஆதலால் வேறு வழியில்லை. போனவாரம் போட்ட டீ  யை இந்தவாரம் ஆத்த வேண்டியதுதான்..!

கிட்டத்தட்ட இரண்டாம் உலகத்தின் கதைக்களன். தன் அண்ணனுக்கு இதுவரையிருந்த திரையாளுமை பிம்பத்தை ஒட்டுமொத்தமாக ஒரே படத்தில் நொறுக்கியெடுத்த அதே கதைக்களத்தில் தைரியமாக தனுஷ் மீண்டும் களமாடியிருப்பது சவாலான விசயம்தான். அதில் சொதப்பிய, குழப்பிய அநேக விசயங்களை  னேகனில் நேர்த்தியாகவும் ஓரளவு புரியும் படியும் சொல்லிய வகையில் தனித்து நின்று அபார வெற்றி பெற்றிருக்கிறது அநேகன் டீம் .

இரண்டாம் உலகம் போல அநேகனும் mystical love -வை  அடிப்படையாக  கொண்டது. இரண்டு படங்களின் ஜீவ நாடியே காதல்தான். அது ஒன்றுதானே எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது..!. இரண்டாம் உலகத்தில் இன்னொரு உலகத்தைக் காண்பித்து குழப்பியிருப்பார்கள்.கற்பனைக் கதைதான் என்றாலும் அதைக் கச்சிதமாக சொன்னால்தானே ரசிகனைக் கவரமுடியும்..! இதில் அப்படியேதும் குழப்பியடிக்காமல் நேரடியாக தனித்தனி எபிசோடாகக் காண்பித்து அதனுள் இருக்கும் ஜீவப் பிணைப்பையும் அதன்மூலம் நிகழும் விபரீதங்களையும் தன் நேர்த்தியான திரைக்கதையினுள் புகுத்தி விறுவிறுப்பான ஒரு மசாலா படத்தை கொடுத்திருக்கிறார் கே.வி ஆனந்த்.

படத்தில் நான்கு ஜென்மங்கள் வருகிறது.


நடப்பு ஜென்மத்தில் அஸ்வினாக வரும் தனுசும் மதுமிதாவாக வரும் அமைரா தாஸ்தூரும் 'வீடியோ கேம்' மென்பொருள் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அவர்களின் பாஸ் கார்த்திக். இதில் மதுமிதாவுக்குத் தான் வெவ்வேறு ஜென்மங்களில் நடக்கும் சம்பவங்கள் கனவாக, கற்பனையாக வந்து போகின்றன. அவரது அறிதுயில் நிலையில் சொல்லப்படும் மற்ற மூன்று ஜென்மங்களில் நடக்கும் சம்பவங்களும், அதிலுள்ள மனிதர்களும், அவர்களின் பண்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது.

ஒரு ஜென்மம்,1962-ல் பர்மாவில் நடப்பதாக படம் ஆரம்பிக்கிறது. அங்கு கட்டுமானத் தொழில் செய்யும் தனுஷ், ஒரு ஆபத்திலிருந்து அமைராவைக் காப்பாற்றுகிறார்.அவர்களுக்குள் காதல் தீ பற்றிக்கொள்கிறது. அமைராவின் தந்தை பர்மா ராணுவ அதிகாரி. பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டு கலவரங்கள் வெடிக்க, அனைத்து தமிழர்- களும் தாயகம் திரும்புகிறார்கள். தன் காதலியை பிரிய மனமில்லாமல் அவளையும் உடன் கூட்டிச் செல்லும் போது, வில்லனாக மாறும் அவளது அப்பாவின் தோட்டாக்களுக்கு பலியாகிறார் தனுஷ்.

அமைரா சொல்லும் மற்றொரு ஜென்மத்தில் தனுஷ் இளவரசனாகவும், அமைரா இளவரசியாகவும் வருகிறார்கள். ஒரு பாடலிலே அதை சொல்லிவிடுவதால் 'அப்பாடா' என்கிற தப்பித்த உணர்வு ஏற்படுகிறது.

மூன்றாவதாக, 1987-ல் சென்னையில் காளி என்கிற ரவுடியாக வளம் வரும் தனுஷ், ஊரே நடுங்கும் ஒரு தாதாவைக் கொன்று, கல்யாணியாக வரும் அமைராவின் மனதில் இடம்பிடித்து, மணமுடிக்க விரும்புகிறான். ஆனால் தன் மகளை ஒரு கொலைகாரனுக்கு திருமணம் செய்துக்கொடுக்க விரும்பாத அவளது தந்தை, தொழிலதிபரான கார்த்திக்குக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மணநாளுக்கு முந்தைய இரவு இந்த விஷயம் கார்த்திக்குக் தெரியவர, தனுஷையும் அமிராவையும் சேர்த்து வைப்பதாக நம்பவைத்து நயவஞ்சக- மாக இருவரையும் கொலை செய்து புதைத்து விடுகிறார் கார்த்திக்.

அந்த மூன்று மணி நேரத்தில் அமைராவின் ஆழ்மனதிலிருந்து இந்த நான்கு ஜென்மங்கள் மட்டும் வந்ததால் அத்தோடு தப்பித்தோம். ஆனால் நிகழ் ஜென்மத்திற்கும் முந்தைய ஜென்மத்திற்கும் முடிச்சிப் போட்டதில் பளிச்சிடுகிறது  இயக்குனரின் சாமர்த்தியம்..! திரைக்கதை அமைப்பதிலும் அதுதான் சவாலாக இருந்திருக்கும். நான்கு ஜென்மங்களிலும் நாயகனும் நாயகியும் ஒருவரே.. அவர்களுக்குள் இருக்கும் காதலும் உண்மையே.. அதை எதிர்ப்பவர்கள் மட்டும் மாறுபடுகிறார்கள்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். அந்தந்த காலகட்டங்- களில் ஏதோவொரு சிறப்பியல்வு உடைய எவராவது ஒருவர் நம்மைப் பாதித்திருப்பார். பிறகு மற்றொரு காலகட்டத்தில் அதே இயல்புடைய ஒருவர், வேறொரு தோற்றத்தில் வேறொரு பெயரில் நம் வாழ்வில் கடந்து செல்லும் பொழுது அந்த முதலாமவர் நம் நினைவோடையில் சிறு சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். எல்லாக் கூட்டத்திலும் ராஜா என்கிற பெயரில் ஒருவர் இருப்பதைப் போல..! இதற்கு வெவ்வேறு ஜென்மங்கள் தேவையில்லை. அதையே சினிமா என்கிற விஷுவல் மீடியத்தில் ஒத்த சிறப்பியல்பு உடைய, வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்பவர்களை ஒரே நடிகரை வைத்து காட்சிப் படுத்துவதாக எண்ணிப் பார்த்தோமேயானால் அனேகன் படம் சொன்ன நுட்பமான விஷயத்தை புரிந்துக் கொள்ளலாம். (  இது அனேகன் படத்தைவிட குழப்பமாக இருந்தால் யோசிக்காமல் அடுத்த பத்திக்கு செல்லவும்...)


பர்மாவில் அப்பாவாக வந்தவர் ரியல் லைஃபில் (நிஜ)மாமாவாக வருகிறார். இருவருக்குமே காதலை எதிர்க்கும் ஒன்றுமை குணமுண்டு. அதேப்போல நண்பன்,தோழி என்று ஒவ்வொரு ஜென்மத்திற்கும் ஒரு முடிச்சு போடுகிறார் இயக்குனர். இதில் வேறொரு ஜென்மத்தில் வந்த நபர் அப்படியே நிகழ்ஜென்மத்தில் வந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனையே அனேகன் படத்தின் திரைக்கதையாக மாறியிருக்கிறது. ஐ படத்தில் மொக்கையாகிப் போன சுபா இதில் சக்கைப் போடு போட்டிருக்கிறார்.

நான்கு தோற்றங்களிலும் நம்மைப் பரவசப்படுத்துகிறார் தனுஷ். அவர் நன்றாக நடித்திருக்கிறார் என்பது சுறா மீன் நன்றாக நீந்துகிறதே என்று சொல்வது போல.நான்கு ஜென்மங்களிலும் அவருடன் பயணிக்கும் அமைராவும் தனுசுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் என்பது மறுக்கமுடியா ஆச்சர்யம். ஆனால் இவ்வளவு கனமான பாத்திரத்திற்கு இன்னும் ரம்மியமான ஃபிகரை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது  ரசிகர்கள் மனதிலிருக்கும் நெருடல்.

நவரசநாயகனை வில்லனாக்கியிருக்கிறார்கள். அதை அவர் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.ஆனால் இறுதிக் காட்சியில் தனுஷ் அவரைப்போல பேசிக் காண்பிக்க, அதை அவர் வெகு இயல்பாக புன்னகையோடு ரசிக்கும் போதுதான் அதுவரை அவர் மீதிருந்த வில்லன் என்கிற பிம்பம் உடைந்து தவிடுபொடியாகிறது. நிச்சயம் சத்யராஜ் போன்ற பிறவி வில்லன்கள் அந்தக் காட்சியை வேறு மாதிரியாகக் கையாண்டிருப்பார்கள். கார்த்திக் போன்ற மிகப்பெரிய நடிகர்களை வில்லனாக காட்சிப்படுத்தும் போது வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகளின் மூலமாகவோ அவர்களின் வில்லத்தன்மையை காட்சிப்படுத்த வேண்டுமே ஒழிய அவர்களும் ஸ்டண்ட் நடிகர்களைப் போல ஹீரோவிடம் மாறி மாறி அடிவாங்குவது போல காண்பிக்கக் கூடாது. அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற ஐயத்தைவிட அந்த நடிகர்கள் மீதான நேர்மறையான பிம்பத்தை தகர்ப்பதாக அமைந்துவிடும்.


ஜெகனை ஒரு காமெடியன் என்று கே.வி ஆனந்து மட்டும்தான் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்களை பேசும் நிறைய காமெடியன்களை தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால் நேரடியாகவே வக்கிரமாக பேசும் நடிகர் இவர் ஒருவர் மட்டும்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தணிக்கை விதிகளுக்கு கட்டுப்படாது என்கிற ஒரே காரணத்திற்காக நகைச்சுவை என்கிற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ வில் ஆபாசத்தை அள்ளித்தெளிக்கும் இவரின் சொந்த சரக்காகத்தான் ' சலவைக்காரன் ' வசனம் இருந்திருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். நல்லவேளை "சலவைக்காரனுக்கு பொண்டாட்டி மேல் ஆசை.. பொண்டாடிக்கு கழுதை மேல ஆசை..." என்று டிரைலரில் வந்த வசனம் திரையில், "ஆசை மாமனுக்கு முறைப்பொண்ணு மேல ஆசை .." என்றும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

படத்தின் முக்கிய பலம் பாடல்கள். அதிலும் 'டங்கா மாரி...' பாடலை ஒரு சென்ஸேஸ்னல் ஹிட் என்று சொல்லலாம். மன்மத ராசா... அப்படிப்போடு... ஓ போடு .. மதுரை வீரன் தானே .. வரிசையில் இந்தப் பாடலையும் வைக்கலாம். மற்றொரு பலம் பூர்வ ஜென்மம் பற்றிய கற்பனைக் கதைதானே என்று நினைக்காமல் அதனுள் வரலாற்று நிகழ்வுகளை நேர்த்தியாக சொன்னது.

படத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை லாவகமாக அடைத்து கேள்வி எழாமல் செய்திருப்பது சுபா- கே.வி ஆனந்து கூட்டணியின் சாமர்த்தியம்.

ஆக்கத்திலும் உணர்விலும் ஏகனுக்கு ஒரு படி மேலேதான் இந்த அனேகன்.


6 comments:

  1. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்...

      Delete
  2. அந்த நுட்பமான விசயம் ஒவ்வொருத்தரின் வாழ்விலும் நடந்திருக்கலாம்... ஆனால்....

    மறதி நல்லது...(!)

    நேர்மறையான பிம்பம் ஏற்படும் என்பது சரி...! (எனக்கும்)

    ReplyDelete
  3. Replies
    1. மிக்க நன்றி சார் ..

      Delete