Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, 6 July 2013

சண்டைக்காரி..(சிறுகதை மாதிரி)


பிஸ் முடிந்து,வீட்டு வாசலில் பைக்கை அணைத்தபோது வழக்கமாக வரவேற்கும் உமாவைக் காண வில்லை.வழக்கமாக என்பது வாரத்திற்கு மூன்று நாட்களாகக் கூட இருக்கலாம். மதியம் கூட சந்தோசமாகத் தான் பேசினாள். அதற்குள் என்ன ஆயிற்று..?

அவள் விருப்பப்படியே திருமணம் முடித்த கையோடு தனிக்குடித்தனம் வந்தாயிற்று."நமக்குள்ள நல்ல அன்டர்ஸ்டேன்டிங் வரவேண்டாமா " என்கிற பொய்யான அவள் வாதத்திற்கு செவி சாய்த்தது முதல் தவறு. பிறகு அதுவே இருவருக்குள்ளும் விடை தெரியா குழப்பங்களை உருவாக்கி,தொட்டதுக்கெல்லாம் ஒரு விவாதம், பட்டதுக்கெல்லாம் ஒரு சண்டை என முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

பெற்றோர்களுடன் சேர்ந்து வசிக்கும் போது அவர்களின் அறிவுரைகள் அலுப்புத்தட்டினாலும் ,பெரியவர்கள் முன்னால்  சண்டை போடக்கூடாது என்கிற குறைந்த பட்ச அறிவும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கும். கணவன்- மனைவி விவாதத்தில்,சுதியை ஏற்றிக்கொண்டே சென்றால் தன் கருத்து ஏற்கப்படும் தவறான சிந்தனைதான் கை ஓங்கும் அளவுக்கு சில நேரங்களில் கொண்டுசெல்கிறது. பரஸ்பர கை ஓங்குதல்(!) கூட சாத்தியமாகிறது.

எதிலும் அவளுக்கு குறை வைக்கவில்லை. தன் பெற்றோர்களும் திருமணமான புதிதில் கஷ்டப்பட்டு பிறகு நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் தான் என்பதை எந்தப்பெண்ணும் உணர்வதில்லை. கடைசியாக தன் பிறந்த வீட்டில் எந்த சுகவாசத்தை அனுபவித்தோமோ ,அதையே திருமணமான புதுதில் கணவனிடம் எதிர்பார்க்கும் பொழுது தான் பிரச்சனைக்கான ஆரம்ப
ப்புள்ளி இடப்படுகிறது.

இந்த ஆறுமாத திருமண வாழ்க்கையில் உமாவின் கோபம், கேட் வாசலிலேயே எனக்கு உணர்த்திவிடும். அதுதான் கோபத்தை வெளிக்காட்ட அவள் கையாளும் முதல் உத்தி.பைக்கை நிறுத்திவிட்டு ஹாலில் நுழைந்தேன். வந்ததை கவனித்திருப்பாள் போல. நொடிக்கொருமுறை டிவியில் சானல் மாறிக்கொண்டு இருந்தது. இது இரண்டாவது உத்தி.  நல்லவேளை அந்த ரிமோட்டுக்கு வாயில்லை.

அடுத்தடுத்த உத்தி இன்னும் அகோரமாக இருக்கும் என்பதால் உடனடியாக யுத்தக்களத்தில் நிராயுத பாணியாகக் குதிக்க முடிவு செய்தேன்...

"என்ன... மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க போல..." அவளின் முகத்தை பார்க்காமல், சட்டையை ஹாங்கரில் மாட்டியவாறு கேட்டேன்.

பதில் இல்லை. மாறாக சானல் வேகமாக மாறிக்கொண்டிருந்தது.கொஞ்சம் பொறுமை காத்தேன்.சிறிது இடைவெளிக்குப் பின் அந்த வார்த்தை வந்து விழுந்தது..

"கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு..."  கடைசியில் 'உங்களுக்கு' என முடித்ததால் ஓரளவு மரியாதையாகவே உணர்ந்தேன்.

'கரெக்ட்..உன்னை கல்யாணம் பண்ணின பிறகுதான் எனக்கு அந்த சந்தேகம் வர ஆரம்பிச்சிருக்கு ..' என சொல்ல வாயெடுத்து உதட்டோடு நின்றுவிட, மீண்டும் பொறுமை காத்தேன்..

"ஆமா..காலையில கந்தசாமி மாமாகிட்ட என்ன பேசுனீங்க..." நேராக விசயத்திற்கு வந்தாள்.

இப்பொழுதுதான் உணர்ந்தது எனக்கு. காலையில் வாக்கிங் செல்லும்போது இரண்டு வீடு தள்ளியிருக்கும் கந்தசாமி சாரும் என் கூட வருவார். ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவ்வப்போது வீட்டில் நடக்கும் சண்டைகளைப் பற்றி அவரிடம்  சொல்வேன்.இதை யாரோ ஒட்டுக்கேட்டு நான் இல்லாத நேரத்தில் உமாவிடம் வத்தி வைத்திருக்கிறார்கள்.

" நான் என்ன சொன்னேன்..? "

"அதெல்லாம் எனக்குத் தெரியாது..நமக்குள்ள நடக்கிற சண்டையைப் பத்தி அவர்கிட்ட சொன்னதா கேள்விப் பட்டேன்.. உண்மையா..? "

" ஆமா எப்பவாச்சும் சொல்வேன்..அதில என்ன தப்பு..?

"என்ன தப்பா..? கால்யாணம் ஆனா புதுசில என்ன சொன்னீங்க..நமக்குள்ள எந்த சண்டை வந்தாலும் வெளிய யார்கிட்டேயும் சொல்லக் கூடாது.குறிப்பா ரெண்டு வீட்டுக்கும் தெரியக்கூடாது. நாமே பிரச்சனையைப் பேசித் தீத்துக்கனும்னு சொன்னீங்களா இல்லையா...? "

"ஆமா சொன்னேன்.."

" அப்புறம் எப்படி நீங்க மட்டும் வெளிய சொல்றீங்க.. நீங்க மட்டும் ரொம்ப  நல்லவரு.நான் சண்டை
க்காரி அப்படித்தானே...? அப்போ..அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட இனிமே நானும் சொல்றேன்..உங்களுக்கு ஒருத்தர் இருக்கார்னா எனக்கு நாலு பேர் இருக்காங்க.."

" புரியாம பேசாத உமா..நான் கந்தசாமி சார்கிட்ட சொல்றேனா,அவர் நம்ம மீது எப்போதும் ரொம்ப அக்கறையா இருக்கிறவரு.அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் அப்படியா.."

" சரிங்க அவர் நல்லவராகவே இருக்கட்டும்..அதுக்காக நம்ம குடும்ப சங்கதியெல்லாம் அவர்கிட்ட ஏன் டிஸ்கஸ் பண்ணனும்.."

" உமா..கல்யாணம் முடிஞ்ச கையோட நாம தனிக்குடித்தனம் வந்துட்டோம்.. நமக்குள்ள நடக்கிற சண்டையில் சமாதானம் பண்ண கூட யாரும் கிடையாது.கோபத்தில, யார் மேல தப்புனு தெரியாம நிறைய நாள் சண்டைப் போட்டிருக்கோம்.அப்படியே தப்பு யார் மேலனு தெரிந்தாலும் ரெண்டு பேருக்குமே ஒத்துக்க மனசு வரமாட்டேங்குது. கந்தசாமி சாரோட நாலு மகன்களுக்கும் கல்யாணம் பண்ணிவச்சி எல்லோரும் நல்ல நிலைமையில இருக்காங்க.. அவர்கிட்ட நம்ம பிரச்சனையைப் பத்தி சொன்னா,அனுபவ முதிர்ச்சியால நல்ல அறிவுரை சொல்றாரு.."

"சரிங்க.. அவரை மட்டும் எப்படி ரொம்ப....."

" நல்லவர்னு நம்புறேன்னு சொல்ல வர்றியா..? . கரெக்ட்டுதான். முத
ன் முதல்ல ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்கன்னு அவர் என்கிட்டே கேட்டப்போ, அப்போதைக்கு நடந்த ஒரு பிரச்சனையை நான் சொன்னேன். அவர் நெனச்சிருந்தா நீங்க செஞ்சதுதான் சரி..உங்க ஒஃய்ப் கிட்டதான் தப்பு இருக்குனு சொல்லியிருப்பார். எல்லோரும் அப்படித்தான் சொல்வாங்க.ஆனா டக்குனு என் மேலதான் தப்புனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. எனக்கு ஆரம்பத்தில கோபம் வந்தது. ஆனா அவர், 'தம்பி..இவ்வளவு நாள் பாசத்தோட வளர்த்த பெத்தவங்களை விட்டுட்டு நீயே கதின்னு அந்த பொண்ணு வந்திருக்கு. ஆரம்பத்தில புது சூழல் அவுங்களுக்கு பிடிக்காம போகலாம்.நிறைய குழப்பங்கள் வரலாம்.அதுமாதிரியான நேரங்களில நாம அவுங்களை அரவனைச்சுதான் போகனுமே தவிர இன்னும் கோபம் வருகிற மாதிரி சண்டையிடக் கூடாது 'னு சொன்னார். மொத தடவை  உங்க வீட்டுக்கு வந்தப்போ,உங்க அப்பா அம்மா என்னை சரியா கவனிக்கலன்னு உன்கிட்ட சண்டைப் போட்டேன். ஆனா போன தடவை வந்தப்போ அமைதியா இருந்துட்டு வந்தேனே அதுக்கு காரணம் கந்தசாமி சார்தான்...." சொல்லிகொண்டே போக, டிவியில் கொஞ்ச நேரமாக ஒரே சானல் ஓடுவதை அப்போதுதான் கவனித்தேன்..

" சரி...டெய்லி வாக்கிங் போறீங்க..நம்ம வீட்டு வழியா போனீங்கனா,தினமும் ரெண்டு பேரும் காப்பி சாப்பிட்டு அப்படியே வாங்கிங் போகலாமே..."  மொத்தமாக சமாதானம் அடைந்திருந்தாள் உமா..!



 ஹி.. ஹி.. அம்புட்டுதேன் ..கதை முடிஞ்சது..
 - மணிமாறன் 




Saturday, 29 June 2013

கல்யாணம் பண்ணிப்பார்...(வைரமுத்து எழுத மறந்த கவிதை..)



கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம் புரியும்..


உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர்,மிக்சி
கண்டுபிடித்தவன் தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்...
காத்திருந்தால்....'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்...
வந்துவிட்டால்....'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்....


வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது  -ஆனால்
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...


கார் வாங்கச்சொல்லி
கட்டியவள் வயிற்றில் மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடி
க்க,
வயிற்றுக்கும் தொண்டைக்
குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...


இந்த மானம்,  இந்த வெக்கம் ,
இந்த சூடு,  இந்த சொரணை,
எல்லாம் கட்டிய நாளோடு
கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்...


கல்யாணம் பண்ணிப்பார்...

இருதயம் அடிக்கடி
எதிர்த்துப் பேசத் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில் மட்டுமே
உனது குரல் ஒலிக்கும்...
உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே
வெறியேற்றி விடும்...  
எதிரில் எது கிடந்தாலும்
கோபத்தில் உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதிக் கொதித்து எரிமலையாய்
வெடிக்கக் காத்திருக்கும்... -ஆனால்        
உதடுகள் மட்டும் ஃபெவிகாலைவிட
அழுத்தமாக ஒட்டியிருக்கும்...
பிறகு....
"என்ன அங்க சத்தம்..." என்கிற
ஒத்த சவுண்டில் சப்த நாடியும் அடங்கிவிடும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

சப்பை பிகர் கூட செட்டாக விட்டாலும் ,
சாதி சனம் கூட சட்டை செய்யா விட்டாலும்..
உறவுகள் கூட உதவாக்கரை என்றாலும்....
செட்டான ஒரு பிகரும் முதல் நாள் நைட்டு லெட்டர் எழுதிவைத்து ஓடிப்போனாலும்...
நீ நம்பிய அவனோ அவளோ உன்னை நட்டாத்துல விட்டுவிட்டு போனாலும்...
விழித்து பார்க்கையில் சரக்கடித்த போதையில் தெருவில் கிடந்தாலும்...


கல்யாணம் பண்ணிப்பார்...

மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம்
இதில் ஏதேனும் ஒன்று
இங்கேயே நிச்சயம்


கல்யாணம் பண்ணிப்பார்...


 ( திடங்கொண்டு போராடு சீனுவுக்கு 'காதல் கடிதம் ' எழுதலாம்னு யோசிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இதெல்லாம் வந்து போகுது...:-) அடுத்து அதை எப்படி எழுதப்போறேன்னு தெரியல..?)



--------------------------------------------------------((((((((((()))))))))))))))))))))))------------------------------------------------

Friday, 29 March 2013

நவீனத்துவ போராளி... (சிறுகதை)

   

              ப்பொழுதுதான் கவனித்தான்.அவனையறியாமலே அவன் விரல்கள் லேசாக நடுக்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது. இருந்தாலும்,அந்தப் பரபரப்பான சாலையில் வேகத்தை அதிகப்படுத்தி வண்டியை மிகக் கவனமாக செலுத்தினான்.

நீண்ட நாட்களாக அவன் நெஞ்சாங்கூட்டில் அழுத்திக் கொண்டிருந்த பாரம்..... அக்னிக் குழம்பாய் உள்ளுக்குள் கொதித்த புரட்சிகர வேட்கை இன்று எரிமலையாய் வெடிக்கப் போவதற்கான அறிகுறிகள் லேசாகத் தென்பட்டது.

இன்று  தன்னைப் போராளியாக அடையாளபடுத்திக் கொள்ளப் போகிறான் என்பது மட்டும் தெளிவாக
ப் புரிந்தது.

ஒன்றல்ல.. இரண்டல்ல... கிட்டத்தட்ட முப்பது நாட்கள் இதற்கான தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டான். அதுவும் தன் வீட்டுக்கே தெரியாமல்..! தன் நெருங்கிய நண்பன் மூலம் தான் அவர்களின் நட்பு கிடைத்தது. அதிலும் தன் எண்ணத்தோடு அவர்களும் ஒத்துப் போயிருந்தனர். அவர்களும் ஏற்கனவே போராளிகளாக இருந்தனர்.தன் நண்பனும் சமீபத்தில்தான் போராளியாக மாறினான்.நண்பன் தேர்ந்தெடுத்த அதே வழியைத் தான் இவனும் தேர்ந்தெடுத்தான்.

தீவிரவாத தாக்குதல்களை நடத்திவிட்டு அதற்கு ஏதோ ஒரு அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளுமே அதேப் போல் நாம் எதையாவது செய்துதான் போராளியாக மாறவேண்டும் என நண்பன் நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னது ஞாபகம் வந்தது. காரல் மார்க்ஸ்,சேகுவாரா,பிடல் காஸ்ட்ரோ சமீபத்தில் மறைந்த சாவேஸ் உட்பட அனைவரின் வாழ்க்கை வரலாற்றை வரி விடாமல் படித்து முடித்தாயிற்று.அவர்கள் லேசாக தட்டி எழுப்பியதை விட நண்பன் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றி மொத்தமாக எழுப்பிவிட்டான்.

" நம் நிலைப்பாடோடு ஒத்துப் போகாதார் யாரா இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி..." கழுத்து நரம்பு
ப் புடைக்கப் பேசினான் நண்பன்.

" சரிடா.. போலிஸ்...கேஸ்...ஏதாச்சும் ஆயிட்டா ...."

" எதானா என்ன ..? " இடைமறித்தான் நண்பன்..."எல்லாத்தையும் நம் போராளி குழுக்கள் பார்த்துக்கும். அப்படியே ஏதாச்சும் நடந்தா..... நம் போராட்டக் களத்தில் போராளிகளின் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்..." 


நண்பனின் வார்த்தை வீச்சு, இவன் நெஞ்சை நிஜமாகவே  பதம் பார்த்திருந்தது.

இதற்காகத்தான் சனி, ஞாயிறுகளில் நண்பன் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு ஒரு மாதமாக பயிற்சி எடுத்துக் கொண்டான்.

அதை செயல்படுத்தும் நாளாக இன்றையத் தேதியை ஏற்கனவே குறித்து வைத்திருந்தான்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்ற புரட்சிக் குழுவின் யோசனைகளை கவனமாகப் பின்பற்றினான்.குறிப்பாக தான் புரட்சி செய்யப்போகும் அந்த இடத்திற்கு தினமும் வந்து போனான். அங்குள்ளவர்களிடம் சந்தேகம் வராதவாறு தினமும் பழகினான்.குறிப்பாக தன் சொந்தப் பெயரை மறைத்து விட்டான்.ஒருவேளை மாட்டிகொண்டால் தப்பிப்பதற்கு.

ந்த இடத்தை நெருங்க..நெருங்க..கொஞ்சம்
பயம் கலந்த பீதி ஒருபுறம் தொற்றிக் கொண்டாலும்,மறுபுறம் புரட்சி...போராளி...திருப்பி அடி...நையப்புடை... ங்கொய்யால பொளந்து கட்டு... தக்காளி எட்டி உதை...சாய்ந்து விடாத சாரம்... கிண்டிவிடாத சாதம் ... என மனது உத்தரவிட்டுக் கொண்டிருந்தது.

போன் சத்தமாக ஒலிக்க, வெளியே எடுத்து பார்த்தான். போராளி நண்பன்.

" சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல.... பேணிக் ஆகாத... இது ஆரம்ப கட்டம்.கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். உன்னை நீ போராளியா காட்டிக்கணும்னா வேற வழியில்ல..இத செஞ்சிதான் ஆகணும்.."  நண்பனின் தைரியம் அவன் தயக்கத்தை முற்றிலுமாகப் போக்கியது.

பரபரப்புடன் களத்தில் இறங்கிவிட்டான்.

ரோட்டோரத்தில் இருந்த அந்த பிரவுசிங் சென்டருக்குள் நுழைந்து கணினியைத் திறந்தான்.
தான் பயிற்சி எடுத்த PHOTOSHOP -ஐ திறந்து அதில் அந்த மூத்த தலைவரையும்,அந்தக் கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகையையும் இணைத்து அதன் கீழே அவர்களின் உறவைக் கொச்சைப் படுத்தி அசிங்கமாக எழுதினான்.  பிறகு பேக் ஐடியைப் பயன்படுத்தி தன் போராட்ட களமான FACEBOOK -ஐ லாக்கின் செய்து அந்தப் படத்தை அப்லோடு செய்தான்.

அவ்வளவுதான். அடுத்த சில நிமிடங்களில் லைக்குகளும்,கமெண்டுகளும்,ஷேர்களும் குவியத் தொடங்கின. குறிப்பாக ஏற்கனவே இப்படி போராளியான நண்பர்களிடமிருந்து..lol, non stop rofl,haa..haa...,  :-)))), இன துரொகி,  இதோல்லாம் ஒரு பொலப்பா .., தலீவருக்கு இந்த வாயசுல இப்பாடி ஒரு அசை, தொலைவரே இது ஞாயாம.., மானாட மர்பாட பார்த்தது பெல் இருந்தது...., கிழவானுக்கு இது எத்திநியவாது ...? தாமில் நட்டை விட்டு தோரதுனும்..  என புரட்சி வாசகங்களை அள்ளித் தெளிக்கலாயினர்.

அவன் நண்பன் கூட பேக் ஐடியில் வந்து " டேய்...நீ போரளியா அயிட்ட.. வழ்த்துக்காள்..!  " என வாழ்த்தினான்.   

அவனின் உணர்ச்சித் தீ எரிமலையாக வெடிக்க ஆரம்பித்திருப்பதை உணர்ந்தான். அங்கிருந்து வெளியேறி பின்னால் உள்ள மூத்திர சந்துக்கு ஓடினான். " நான் போராளியா ஆயிட்டேன்...நான் போராளியாயிட்டேன்..." எனக் கத்தத் தொடங்கினான்,பின்னால் 'நம்பர் ஒன்' போயிட்டிருந்த இஸ்திரிக் கடை அண்ணாச்சி ஏழு தலைமுறையை இழுத்து வச்சி அசிங்க அசிங்கமா திட்டுவதைக் கூட பொருள்படுத்தாமல். 




--------------------------------------(((((((((((((((((((())))))))))))))-------------------------------------- 





Wednesday, 12 December 2012

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

(சிறுகதை)


நிர்மலா ஹாஸ்பிடல். 

பரபரப்புடன் காணப்பட்டாள் சுமதி. 

"டாக்டர்... இப்போ எப்படி இருக்கார்.?" 

"கொஞ்சம் சிவியர் அட்டாக்தாம்மா...நிறைய பிளட் கிலாட் இருக்கு.ஹெவியான இன்ஜெக்சன் போட்டிருக்கோம்.மானிடரிங் நடக்குது." 

 "ரொம்ப சீரியஸா டாக்டர்,,?" 

 "ம்ம்ம்...இதுக்கு முன்னாடி இதுபோல வந்திருக்கா..?" 

 "இதுதான் பர்ஸ்ட் டாக்டர்.காலையில ஆபிஸ் போறதுக்கு பைக்க எடுத்தாரு.அப்படியே நெஞ்சு வலிக்குதுன்னு உட்கார்த்து விட்டார்."

 "சரி.நான் மாத்திரை எழுதித் தாறேன் .டெய்லி சாப்ட சொல்லணும்..." 

"மாத்திரையில சரியாகிடுமா டாக்டர்."

 "ஆகலாம்.ஆகாமலும் போகலாம்..." 

"அப்படினா ஆபரேசன் செஞ்சிடுங்க டாக்டர். " தாமதிக்காமல் சொன்னாள். 

"நீங்கள் அவருடைய மனைவியா..? வாரிசு இருக்காங்களா..?"

 தயக்கத்துடன், "ஆமா டாக்டர்.இரண்டாவது மனைவி.வாரிசு எதுவும் இல்லை.முறைப்படி விவாகரத்து வாங்கிட்டுதான் திருமணம் செய்தார்."

 "ஆபரேசன் -னா நிறைய செலவாகுமேம்மா..." 

 "அதைப்பற்றி கவலையில்லை டாக்டர்.நீங்கள் உடனே ஆபரேசன் செய்யுங்கள்.முடிந்தவுடன் பணம் கட்டுகிறேன்." 

"சாரிம்மா..இங்கே ஆபரேசன் செய்யும் முன்பே மொத்தப் பணத்தையும் கட்டவேண்டும்." 

"இப்போ கையில ஏதும் பணமில்லையே டாக்டர்.." 

"ஆபரேசன் முடிந்த பிறகு மட்டும் எங்கிருந்து பணம் வரும்...? "

 "அவரை நான் பத்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ்யூர் செய்திருக்கேன்..."

 (டாக்டர் மைன்ட் வாய்ஸ்.. "அடி நாசமத்துப்போறவ...என் 'கைராசி'யைப் பத்தி நாலு பேருகிட்ட விசாரித்துட்டுதான் வந்திருக்கா..." )

 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 அஸ்வின் ராக்ஸ்...(சும்மா அள்ளிவிடுவோம்..)





வணக்கங்களுடன்...
மணிமாறன்.  

--------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------------------------

Tuesday, 11 December 2012

மனித உரிமை என்னும் மண்ணாங்கட்டி...

னித உரிமைகள் தினம் நேற்று நம் நாட்டில் கடைப் பிடிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.குறைந்த பட்சம் இப்படியொரு நாள் இருப்பது நம் மக்களுக்கு தெரிந்திருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

  நம் ' நட்பு' நாட்டில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களின் வக்கிரமான கோரமுகத்தை ஐநாவே தற்போது உணர்ந்து வருந்தும் வேளையில்,நம் தொப்புள் கொடி உறவுகளின் மரணக் கதறல்களைக் கண்டும் காணாதது போல கைகட்டி வேடிக்கைப் பார்த்த நம் மைய அரசின் கையாலாகாத்தனம் தான்,இந்த நூற்றாண்டில் மனித உரிமைக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி. 

 மனித உரிமை மீறலுக்கும்  நமக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது.சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்வு. இணையத்தில் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.


இது அன்றாடம் நம் வாழ்க்கைச் சூழலில் பார்த்துப் பழகிப்போன விசயம்தான்.காணொளியை உற்று நோக்கினால் நன்றாகப் புலப்படும்.தவறு செய்த தன் மகனை கன்னத்தில் அறைந்து தண்டித்து நல்வழிப் படுத்துகிறார்,பொறுப்புள்ள தந்தை ஸ்தானத்தில் உள்ள ஒரு மக்கள் பிரதிநிதி.இதை அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.அதை விடுத்து மனித உரிமை,மனிதாபிமானம்,மண்ணாங்கட்டி என்று பிதற்றிக்கொண்டு திரிந்தால்,66A என்கிற சட்டப்பிரிவு உங்கள் சட்டையைப் பிடித்து இழுத்து,கொலைக் குற்றவாளிகளுக்கு இணையாக சட்டத்தின் முன் நிறுத்தி விடும்.

சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வு.அந்த 'மகனின்' பெயர் D.G. Patil.வயது வெறும் 65 தான்.தனியார் ஒப்பந்தக்காரர்.தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய கொஞ்சம் தாமதமாகிவிட்டதாம்.அந்தக் கோபத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் இது.அவரை அறைபவர்,இனவெறி ஆதிக்கசாதி கும்பலின் இளையத்தலைவன் ராஜ்தாக்கரேயின் 'மகாராஷ்டிரா  நவநிர்மான் சேனா' கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் 'நிதின் நிகம்'.

ஒரு பொதுவெளியில் தன் தந்தை வயதையொத்த ஒரு முதியவரை,கடுங்குற்றம் புரிந்தவராக இருந்தாலும் கூட,கைநீட்டி அடிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது.? தண்டிக்கும் உரிமையை தன் கையிலெடுக்கும் சுதந்திரம் யார் தந்தது.?.

ஒருவிதத்தில் பார்த்தால் இதுவொன்றும் அதிசய நிகழ்வல்ல..ஊருக்கு ஊர்,தெருவுக்கு தெரு,வீதிக்கு வீதி அன்றாடம் நம் வாழ்வியல் சூழலோடு பழகிப்போன சாதாரண சம்பவம்தான்.அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த தேசத்தில் மரணதண்டனையையும்,என்கவுண்டர்களையும் கொண்டாடி மகிழும் நமக்கு மனித உரிமையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது?   




வணக்கங்களுடன்...
மணிமாறன். 

Wednesday, 12 September 2012

ஹைடெக் நரகம்..... ( சிறுகதை )


காலை 9.30 மணி.

வழக்கம் போலவே
கொஞ்சம் கொஞ்சமாக அந்த பள்ளி பரபரப்பாகிக்கொண்டிருந்தது.

பள்ளியைச் சுற்றி வானுயரக் கட்டிடங்களும் ஷாப்பிங் மால்களும் கம்பீரமாக காட்சியளித்தது.மெட்ரோ ரயில்களில் வழக்கமான காலைநேர பரபரப்பு.

புகை கக்கும் பெட்ரோலிய வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு எலெக்ட்ரிக் பைக்,எலெக்ட்ரிக் கார்,எலெக்ட்ரிக் பஸ் என சப்தமில்லா வாகனங்களின் 'ஹார்ன்' சப்தம் காதைக்கிழித்தது.

சூரியன் தன் வருகையை உறுதிப்படுத்தி மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் தெரு விளக்குகள்  சூரியனைவிட பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. தேனீர்கடை விளம்பரப்பலகைக் கூட வண்ண நியான் விளக்குகளால் ஜொலித்தது.

வீடுகளில் மட்டுமில்லாமல் ஹோட்டல்களில் கூட மின்சார அடுப்பில்தான் சமையல்.வீட்டிற்கு வரும் குடிதண்ணீர் குழாய்களில் குளிர் நீர்,வெந்நீர் என இ
டண்டாகப் பிரிக்கப்பட்டு 24 மணி நேர சேவை இருந்தது.ஏசி,லிப்ட், எஸ்கலேட்டர் பொருத்தப்படாத வீடுகளே அங்கில்லை.

புத்தகக்கடையின் வெளியே அன்றைய எலெக்ட்ரானிக் தினத்தந்தியில்,"வீடுகளைத் தொடர்ந்து அடுத்து ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கும் இலவச மின்சாரம் வழக்குவதைப்பற்றி அமைச்சர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை" என்ற தலைப்பு செய்திகளுடன் தொங்கிக் கொண்டிருந்தது.

மாணவர்களும் ஆசிரியர்களும் இரண்டு/மூன்று/நான்கு சக்கர மின்சார வாகனங்களில் வரிசைகட்டி நின்றனர்.வாகனங்களில் இருந்தவாறே பள்ளியின் நுழைவாயிலில் உள்ள ஸ்கேனர் மெசினில் தங்கள் ஐடென்டிடி கார்டை தட்ட,தானியக்கி கதவு திறந்து ஒவ்வொருவரையும் உள்ளே செல்ல அனுமதித்தது.

இறைவணக்கம் முடிந்து மாணவ மாணவிகள் தத்தமது வகுப்புக்குச் செல்லத்தொடங்கினர்.பள்ளி தலைமையாசிரியர் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பத்தாம் வகுப்பை நோக்கி நடந்தார்.

"இன்னும் இரண்டு மாதங்களில் உங்களுக்கு பொதுத்தேர்வு வருகிறது.மாற்றுச் சான்றிதழில் உங்களின் அங்க அடையாளங்களை குறிப்பிட வேண்டியிருக்கிறது.அதனால் வரிசையில் வந்து காண்பித்துவிட்டுச் செல்லவும்" தலைமை ஆசிரியரி
ன் கட்டளையைத்தொடர்ந்து அகர வரிசைப்படி ஒவ்வொருவராய் எழுந்து வந்தனர்.

"உன் பேரு என்னடா?.. "

"ச.அழகேசன் சார்..."

"உன்கிட்ட என்ன அடையாளம் இருக்கு?"

" இடது கையில மூணு விரல் ஒட்டியே இருக்கும் சார்..."

" ம்ம்ம்...அடுத்தது..."

" க.அன்புக்கரசன் சார்.... இடது பக்க காதுமடலே இல்லசார்..ஓட்டை மட்டும்தான் இருக்கு
ம்..."
 
" ப.புகழேந்தி சார்... வலது கால் கொஞ்சம் கட்டையா இருக்கும் சார்.."

" ச.தம்பித்துரை சார்...எனக்கு ஒரு பக்க இமையும் புருவமும் ஒட்டியே இருக்கும் சார்......பின்னாடி நிக்கிறவன் பேரு பாலமுருகன் சார்.அவனுக்கு பேச வராது சார்.. ஊமை.. "

"அதெல்லாம் எழுத முடியாது வேற ஏதாவது இருக்கா" கண்டிப்புடன் கேட்டார் தலைமையாசிரியர்.

" அவனுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும்னு அவுங்க அம்மா சொல்வாங்க சார் ..ம்ம்ம்ம்ம்ம்...சார்....அவனுக்கு இடது காலில எட்டு விரல் இருக்கும் சார்.."

"என் பெயர் விஜயலட்சுமி சார்...எனக்கு ராத்திரி ஆனா சரியா கண்ணு தெரியாது சார்."

"வேற ஏதாவது இருக்காமா?.." கொஞ்சம் பரிதாபத்துடன் கேட்டார்.

தன் பாவாடையை சிறிது தூக்கி," சார் இதை யானைக்கால்னு எங்கம்மா சொல்வாங்க சார்.."

எல்லோருடைய அடையாளங்களையும் குறித்துக்கொண்ட தலைமையாசிரியர்,தன் பார்வை -25 க்குமேல் போனதால் தயாரிக்கப்பட்ட அவரின் பிரத்தியோக மூக்குக் கண்ணாடியை கழட்டி மேசைமீது வைத்தார். அனைத்து தகவல்களையும் 'பிரின்ட்' எடுத்து அடியில் கையெழுத்திட்டு அதன் கீழே 12-03-2032 என தேதிக் குறிப்பிட்டார்.அதன் வலது புறத்தில் ரப்பர் ஸ்டாம்பிலுள்ள பள்ளியின் பெயரையும் பதிந்தார்.அதில் "அரசு உயர்நிலைப் பள்ளி.இடிந்தகரை " என்றிருந்தது. 







வணக்கங்களுடன் ..
மணிமாறன்.

-------------------------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))))))))----------------------------------

Wednesday, 16 May 2012

திருப்பியடி-சிறுகதை

"ஏண்டி...சனியம்புடிச்ச நாயே...எத்தன தடவ சொல்றது...மீன் கொழம்பு காரமா வையுன்னு..எடுத்து மூஞ்சிலே ஊத்துறம்பாரு.." கோபத்தின் உச்சத்திற்கே சென்றான் கோவிந்தன்.அவன் வாயிலிருந்து தெறித்த எச்சியில் அழுகிய பழ நாற்றம் அடித்தது.அந்த மதிய நேரத்திலும் குடித்திருந்தான்.
     
கோவிந்தன் கார்பெண்டர் வேளையில் கைதேர்ந்தவன்.ஆனால் அந்தத் தொழிலை  தொடர்ச்சியாகச் செய்ய இன்னும் தேரவில்லை.

"இல்லப்பா...உனக்கு வாயில புண்ணு வந்திருக்கிறதா கோமதி சொன்னா.. அதான் காரம் கம்மியா வச்சேன்.." தன் ஒரே செல்ல மகனின் கோபத்தை சாந்தப்படுத்தினாள் அந்தத் தாய்.

கோபத்தில் எதுவேண்டுமானாலும் செய்வான் கோவிந்தன் என்பதை உணர்ந்த அவனின் ஐந்து வயது மகன் மாதவன்,தன் பாட்டியின் மடியின் தஞ்சமடைந்திருந்தான்.

போகாத பொழுதை ராணிமுத்து புத்தகத்தைப் படித்துப் போக்கிக்கொண்டிருந்தாள் கோவிந்தனின் மனைவி கோமதி.

இரண்டு வருடமாக காச நோயால் அவதிப்பட்டுவரும் கோவிந்தனின் அப்பா அந்தக் குடிசையின் ஒரு மூலையில் கிடந்த கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தார்.மகனின் கோபத்தை ஒருபுறம் உணர்ந்திருந்தாலும் தனக்கு தேவையானதின் அவசியத்தைத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

"தம்பி...மாத்திரை வாங்கியாரச்சொன்னேனே...வாங்கியாந்...க்..க்.. " அதற்கு மேல் வெளிவந்த வார்த்தைகள், அவரின் கடுமையான இருமலுக்குக் கட்டுப்பட்டது.

"ஏன்...மாத்திரை சப்டலனா செத்தாப் போயிடப் போற?...ஒனக்கு ஒரு எழவு வர மாட்டேங்குதே..." எரிச்சலோடு கத்தினான் கோவிந்தான்.

"ஏம்மா...இந்தாள வெளியத்தான படுக்கச்சொன்னேன்...சாப்டர நேரத்தில லொக்கு..லொக்கு னு இருமிக்கிட்டே கெடக்கு சனியன்"  தன் தாயிடம் மீண்டும் எரிந்து விழுந்தான்.

        தவு திறக்கப்படும் சத்தம் கேட்டு பழைய நினைவிகளிலிருந்து மீண்டு வந்தார் கோவிந்தன்.வேகமாக உள்ளே வந்த மாதவன் தன் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு சாப்பிட உட்காந்தான்.அந்த வீட்டின் மூலையில் அதே கட்டிலில் கோவிந்தன்.சில வருடங்களுக்கு  முன் குடி போதையில் தச்சுவேலை செய்து கொண்டிருந்தபோது பெரிய ஆணி ஓன்று இவரின் வலது காலை பதம் பார்த்திருந்தது.அது சீழ் பிடித்து நெறிகட்டிவிட,வேலைக்குப் போக முடியாமல் வீட்டிலே முடங்கிப்போனார் கோவிந்தன்.சில நாட்களாகத் தான் கொஞ்சம் ஊன்றி ஊன்றி நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

 இலவச வண்ணத் தொலைக்காட்சியில் சீரியலின் அரிதாரம்பூசிய அழுகையில் ஆழ்ந்து மூழ்கியிருந்தாள் நிறைமாத கர்ப்பிணியான மாதவனின் மனைவி செல்வி.

"அப்பாவ...போற வழியில பெரியாஸ்பத்திரியில கொஞ்சம் இறக்கி விட்டுட்டு போறியா " தன் மகனுக்கு சாப்பாட்டை பரிமாறிக்கொண்டே மெதுவாகக் கேட்டாள் மாதவனின் தாய் கோமதி...

"ஏன்...அந்தாளுக்கு காலு மொத்தமா வெளங்காமலையா  போச்சி.அவர நடந்துப் போகச்சொல்லு"

எதுவும் பேசாமல் மௌனமாக இருந்த கோமதி மீண்டும் மெல்லிய குரலில் தயங்கியபடி கேட்டாள்.

"தம்பி..எனக்கு கொஞ்ச நாளா கண்ணு சரியா தெரிய மாட்டேங்குதுய்யா.கண் ஆஸ்பத்திரி கூட்டிபோகச் சொன்னேனே...எப்பக் கூட்டிட்டுப் போற."

"எல்லாத்துக்கும் என்னையே எதிர்பாக்காத..ஏன் நீயும் கெளம்பி போக வேண்டியதுதானே...சும்மா சாப்பிடுற நேரத்தில தொன தொனன்னுட்டு..."

"அதுல்லப்பா...அதுக்கு 500  ரூவா வேணும்மா.அதான்.."  அச்சத்துடனே கேட்டாள் கோமதி.

"இங்க பணம் என்ன மரத்திலையா காய்க்குது...இல்ல நீயும் உன் புருசனும் எனக்கு சொத்து சேத்து வச்சிருக்கீங்களா..." அவனின்  முகம் சிவந்தது.

"அப்ப... காசுக்கு நாங்க எங்கப்பா போறது.....? "

"எங்கயாச்சும் போய்த் தொலைங்க..." சாப்பிட்டத் தட்டை விசிறி எறிந்து விட்டு சட்டையை மாற்றி புறப்பட்டான் மாதவன்.

"ச்சே..வீட்டுக்கு வந்தா நிம்மதியே இல்லை..ரெண்டு கிழங்களும் கெடந்துட்டு என் உசுர வாங்குது. இதுங்களுக்கு ஒரு சாவு வர மாட்டேங்குது." கத்திக் கொண்டே வெளியேறினான் மாதவன்.

கட்டிலில் படுத்திருந்த கோவிந்தன் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டு புறப்படுவதைக் கவனித்த கோமதி சற்றுப் பதட்டமானாள்.

"எங்க கெளம்பிட்டீங்க .."

"பக்கத்துத் தெரு மாரிமுத்து எதோ செக்யுரிட்டி வேலை இருக்கிறதா சொன்னான்.அதான் போயி என்னான்னு கேட்டுட்டு வாறேன்."

"என்ன சொல்றீங்க...இந்த நிலமையில உங்களால வேலையெல்லாம் செய்ய முடியுமா?..புள்ள எதோ சொல்லிட்டானு இப்படியா பன்றது?..என்னதான் சொன்னாலும் அவன் நம்ம புள்ளைங்க..."

"நம்ம புள்ள...நம்ம புள்ள.. போதும்டி எல்லாம். ஒத்தப் புள்ளனு  செல்லம் கொடுத்து வளத்ததாலதான் இன்னிக்கி அப்பன் ஆத்தாவ மதிக்க மாட்டேங்கிறான்.அன்னிக்கி எங்க அப்பன் ஆத்தா செல்லம் கொடுக்காம என்ன அடிச்சி வளத்திருந்தாங்கனா,எனக்கு நல்லது கெட்டது எதுன்னு தெரிஞ்சிருக்கும்.பாவம்...வயசான காலத்தில அவங்களுக்கு கஞ்சி கூட ஊத்தாம பட்டினி போட்டிருக்கேன்.அவங்க எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கனு இப்பப் புரியுதுடி.அந்தப் பாவம் தாண்டி இப்ப நம்மள இப்படிவந்து படுத்துது. புள்ளைங்களுக்கு சொத்து சேத்து வைக்கலனாலும் பரவாயில்ல.கட்டுப்பாட்டோட வளர்த்திருக்கணும். அன்னிக்கி என் அப்பன் ஆத்தாள திட்டினதப் பாத்து இன்னிக்கி நம்மள திட்டுறான்.நாளைக்கு பொறக்கப் போற கொழந்தை இதப் பார்த்து வளந்ததுனா,பிற்பாடு அதுவும் இப்படிதான் பேசும்.நம்ம அடுத்த தலைமுறைக்கு காசு பணம் சேத்து வைக்கலனாகூட பரவாயில்ல..அவங்களுக்கு தவறான முன்னுதாரணமா நாம இருந்திடக்கூடாது.இப்ப நாம பன்ற தப்புக்கு தண்டனையா அடுத்தத் தலைமுறை நம்மள திருப்பியடிக்கும். என் ஒடம்புல உசுரு இருக்கிற வரைக்கும் நான் என் சொந்தக் காலில்தான் நிக்கப்போறேன்." தீர்க்கமாக பேசிவிட்டு வெளியேறினார் கோவிந்தன்.

--------------------------------------------((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))------------------

Saturday, 14 April 2012

வூடு கட்டி அடி.....(சிறுகதை)


"ம்ப்பா..இந்த வூட்ட, டவுனுக்கு பக்கத்தில வேற எங்கயாவது கட்டியிருக்கலாமே.." மரத்துப் போன நாக்கின் செல்களை  மீண்டும் உயிர்பித்த தன் அம்மாவின் கைப்பக்குவத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த மகேசிடம், கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டார்,அப்பா கந்தசாமி.

"இல்ல...டவுனுல இருக்கிற வூட்டோட வெல எல்லாம் சர சர யேறிகிட்டுயிருக்கு. இந்த கிராமத்துல இம்புட்டு காசபோட்டு....." கட்டிலின் இரு புறங்களிலும்  கைகளை ஊன்றிக்கொண்டு விட்டத்தைப் பார்த்த படி மீண்டும் முணுமுணுத்தார். 
       
"சங்கர் வீட்டுல ஏதாவது சொன்னாங்கலப்பா?...சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அப்பாவிடம் வினவினான் மகேஷ்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல...எனக்கு இந்தக் கிராமத்தில போயி வூடு கட்டுறது  அவ்வளவு சரியாப் படல..." 

"அப்ப...கட்டுன வீட்ட இடிச்சிரலாமாப்பா?" மகேசின் வாயிலிருந்து விழுந்த இந்த வார்த்தையில் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது.

"புள்ள சாப்பிடறப்பத்தான் இதெல்லாம் கேக்கணுமா..நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சி..அவன் எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.நீ சாப்புடுயா.." மகனுக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு பேசினாள் அம்மா பாக்கியவதி.

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்..எல்லாம் அவன் எதிர் காலத்துக்காகத் தான் பேசுறேன்"

"நாலு எழுத்து படிச்சவன்.அவனுக்குத் தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு? எல்லாம் காலையில பேசிக்கிலாம் போங்க"

"என் பேச்சுக்கு இங்க எந்த காலத்துல மரியாத இருந்திருக்கு .." உதறிய துண்டை தோளில் போட்டவாறு வெளிநடப்பு செய்தார் கந்தசாமி.

"எல்லாம் அந்த சங்கரப்பா செய்யிற வேல தம்பி.டீக்கடைக்கு எப்பப் போனாலும் இதப்பத்தி தான் பேசுறாராம்" கந்தசாமியின் கோபத்துக்கு விளக்கம் சொன்னாள் பாக்கியவதி.  

மகேஷ்-சங்கர் இருவரும் பள்ளியிலிருந்தே நண்பர்கள்.மகேஷ் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி தான் சங்கர் வீடு உள்ளது.இரண்டு குடும்பமும் நடுத்தர வர்க்கம்தான்.என்றாலும் இருவரையும் பாலிடெக்னிக் வரை படிக்க வைத்திருந்தனர்.இப்போது மகேஷும் சங்கரும் இருப்பது வெளிநாட்டில். அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்.
    
          இரண்டு குடும்பத்திற்கும் முகநக நட்பு இருந்தாலும் உள்ளுக்குள் பொறாமைப் பூசின ஒரு போட்டி இருந்து கொண்டு தான் வருகிறது.அது பரம்பரைப் பகையல்ல.ஒரே மட்டத்திலுள்ள நெருக்கமான இரண்டு குடும்பங்களில் ஓன்று தன் நிலையை சற்று உயர்த்திக் கொண்டால்,மற்றக் குடும்பத்திற்கு வரும்  சாதாரண ஈகோபோலியா நோய்.இருவரது வீட்டில் யார் எந்தப் பொருள் புதிதாக வாங்கினாலும் அடுத்த கணமே மற்றொரு வீட்டில் மாங்கல்யத்தை அடகு வைத்தாவது அந்தப் பொருளை வாங்கியாக வேண்டும் என்கிற கட்டாய விதி. அது,இவர்களை வெளி நாட்டுக்கு அனுப்புவதில் கூட நீடித்தது.

        ஆனால் இந்த ஒரு விசயத்தில் மட்டும் தான் இருவருக்குள்ளும் வேறுபாடு இருந்தது.அது அவர்கள் வீடு கட்டத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம்.சங்கர் தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பது டவுனில்.ஆனால் மகேஷின் தீர்க்கமான முடிவு, தன்னை வளர்த்த கிராமத்தில்.

      மகேஷ்-சங்கர் இருவருக்குமே திருமணத்திற்கு முன் எப்படியாவது வீடு கட்டி முடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது.அதற்காக இருவரும் திருமணத்தைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள்.தன் உழைப்பில் சிந்திய வியர்வையையும், ஓயாமல் பட்ட கஷ்டங்களையும் இருவரும் அவரவர்கள் கட்டும் வீட்டில் தான் விதைத்திருக்கிறார்கள்.

        இரவு பகல் பார்க்காமல் கஷ்டப்பட்டு உழைத்து பணமீட்டுபவர்கள் ஒரு போதும் ஈகோ பார்ப்பதில்லை.ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் இனம் புரியாத ஒரு அகங்காரம் இதயத்தில் குடியிருக்கும்.தான் எடுக்கும் முடிவே சரியானதே என்று வாதிடும் கர்வம் இருக்கும்,அது தவறான முடிவாக  இருந்தாலும் கூட.

      ஆரம்பத்தில் சரியெனச் சொன்ன மகேஷின் தந்தை,தற்போது மனமாறி அங்கலாய்த்துக் கொள்வதற்கான காரணமே சங்கரின் அப்பாதான் என்பது மகேஷுக்கு புரியாமல் இல்லை.ஆனால் இந்தப்பிரச்சனையை பெரிதுப் படுத்தி நல்ல நட்பை  நஞ்சாக்க அவனுக்கு விருப்பமில்லை.

   றுநாள் காலை,வங்கியில் பணம் எடுப்பதற்காக மகேஷ் தன் தந்தையை அழைத்துக் கொண்டு புறப்படலானான்.கந்தசாமியின் கோபம் இன்னும் அடங்கவில்லை என்பது அவரின் மௌனம் உணர்த்தியது.பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் உள்ள டீக்கடைய கடந்த போது அந்த குரல் கேட்டது.

 "மகேஷ்..." அது..... சங்கரின் அப்பா.  

 "என்ன மகேஷ் எப்ப வந்த ?.சங்கர் கூட .'.போன் பண்ணிருந்தான், நீ நேத்திக்கு   வருவேன்னு..." 

"........................."

"வேலையெல்லாம் பரவாயில்லையா?..நீ ரொம்ப கஷ்டப் படுறதா சொன்னான்"

இவர் இப்படித்தான்.கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலை நாசுக்கா இவரே சொல்லிவிடுவார்.நக்கலடிக்க நினைப்பவர்கள் பின்பற்றும் சுலப வழி.

"சங்கருக்கு கம்பெனியிலே வீடு குடுத்திருக்காங்கலாமே...நீயும் அது மாதிரியான  கம்பெனியா பாத்து போயிருக்கலாமே..."

"ம்ஹும்.. .'.பிரி அக்கொமொடேசன் என்கிற பேருல 'கன்டைனர்ல' தங்க வைக்கிறது இவருக்கு எங்கே தெரிய போகுது....". மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டான் மகேஷ். 

"ஆமா..இவ்வளவு அவசரமா எங்கே கெளம்பிட்டீங்க.?..முதல் முறையாக மகேசை பேசுவதற்கு அனுமதித்தார்.

"கொஞ்சம் பேங்க் வரை போறோம் மாமா..."  

"அப்படியா...சரி,வீட்டு வேலையெல்லாம் எப்படிப் போவுது?"

"முக்கால்வாசி முடிஞ்சிடிச்சி...இன்னும் பூச்சு வேலை மட்டும் பாக்கியிருக்கு. அதான் பாத்துட்டு போவலாம்னு வந்திருக்கேன்."

"ஆனாலும் நீ கொஞ்சம் அவசரப்பட்டுட்ட மகேஷ்.. " அவர் நெஞ்சிலிருந்த நஞ்சுப் பூனை லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

"இப்ப எங்களையே எடுத்துக்க..போன வருஷம் டவுன்ல நாங்க வாங்குன இடம் நாலு லட்சம்.இன்னிக்கு தேதிக்கு அஞ்சரை லட்சத்துக்கு போகுது.இன்னும் பத்து வருசத்தில அதோட விலை எங்கேயோ போயிடும்.நாலு பேருகிட்ட விசாரிச்சிதான் நாங்க இந்த முடிவ எடுத்தோம்.ஏன்னா நாள பின்ன எம் மவன் வருத்தப்படக் கூடாது பாரு.டவுன்ல வீடு கட்டுறது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா தம்பி...?. ஏன் கந்தசாமி நீயாவது உன் பையன்கிட்ட எடுத்து சொல்லியிருக்கக் கூடாதா?" 

கந்தசாமியின் மனதுக்குள் புகைந்துக் கொண்டிருந்ததை பெட்ரோல் ஊற்றி பற்ற வைக்க ஆரம்பித்தார்.ஆனால் கோபத்தை கட்டுக்குள் வைத்து அமைதியாக இருந்தார் கந்தசாமி.தன் அப்பாவின் முகம் மேலும் வாடிப் போவதை விரும்பாத மகேஷ், தீர்க்கமாக பேச ஆரம்பித்தான்.

"நீங்க எடுத்த முடிவு உங்களுக்கு சரின்னு பட்டா,தாராளமா செய்யுங்க.பணம் என்கிற ஒரு விசயத்த மட்டும் வச்சுப் பார்த்தா,நீங்க சொல்றது சரி தான் மாமா.ஆனா..எங்களுக்கு?..நானும் சங்கரும் கல்யாணத்துக்குப் பிறகு வெளிநாட்டிலே செட்டில் ஆகத்தான் முடிவு செஞ்சிருக்கோம்.எங்க குழந்தைகளும் அங்கு தான் வளரப் போகுது.அங்க,பேசிப்பழக நல்ல மக்கள் அவ்வளவா கிடையாது.நாம பெருசா மதிக்கிற பண்பாடும் கலாச்சாரமும் நம்ம அளவுக்கு அங்க யாரும் பின்பற்ற மாட்டாங்க.இது எல்லாத்தையும் எங்களோட அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கணும்னா,வருசத்துக்கு ஒரு முறையாவது நாங்க ஊருப்பக்கம் வந்துட்டு போகணும்.ஒரு மாச லீவுல ஊருக்கு வர்ற நாங்க சிட்டியிலே தங்கிட்டா, நாம வாழ்ந்த மண்ணோட மகத்துவத்தையும்,பெருமையையும் எப்படி அவங்களுக்கு உணர வைக்கிறது?.. இது நான் படிச்ச பள்ளிக்கூடம்,இதோ இந்தக் குளத்தில்தான் நான் டைவ் அடிச்சி குளிப்பேன்,இந்த மரத்தில்தான் நாங்க ஊஞ்சல் கட்டி ஆடுவோம்னு எங்க பசங்களுக்கு சொல்றப்போ அதுல கிடைக்கிற ஆனந்தமே தனி மாமா.இதோ... எங்க வீட்டிலிருந்து இங்க வர்றதுக்குள்ள எத்தனைப் பேரு.. "நல்லா இருக்கியா தம்பி...எப்ப வந்தீக"னு அன்பா கேக்கிற இந்த வார்த்தைகளை,நாங்க இங்க வந்து போற அந்த ஒரு மாசத்தில சிட்டியில எங்க போயி தேடுறது?.சிட்டியில நாம கட்டுன வீட்டோட விலை ஏறத்தான் செய்யும்.அதனால நமக்கு என்ன லாபம்?.நாம என்ன ஆசையா கட்டுன வீட்ட விக்கவா போறோம்?விக்காத வீட்டுக்கு விலை ஏறினா என்ன? இறங்கினா என்ன? சிட்டியில உள்ள நெருக்கடியையும்,தண்ணி கஷ்டத்தையும் எங்க பசங்க அனுபவிச்சா,பிற்பாடு அவங்களுக்கு இங்க வர்ற ஆசையே அத்துப் போய்டும்.என் மனசுக்கு இதுதான் சரின்னு பட்டது..." மகேஷ் பேசிக்கொண்டேப் போக அந்த அதிகாலையிலும் சங்கர் அப்பாவின் முகம் வியர்த்தது.

"நாலு பேரு நாலு விதமா சொல்வாங்கப்பா..அதையெல்லாம் நாம பொருள் படுத்தக்கூடாது.நாம பேங்க்குக்கு போகலாம் கெளம்பு மகேஷ்.." நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் மகனின் தோளைத் தொட்டுப் பேசினார் கந்தசாமி. 
 

டிஸ்கி.

     இது எனது முதல் சிறுகதை(மாதிரி).இதெல்லாம் ஒரு....அப்படீன்னு நெனைக்கிறவங்க,தாராளமா பின்னூட்டத்தில பின்னிப் பெடலெடுத்துட்டுப்  போகலாம்.

---------------------------------------------------------(((((((((((((()))))))))))))))))----------------------------