Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, 1 August 2015

கலாம் ஏற்படுத்திய கலகம்...



ரண்டு நாட்களாக பேஸ்புக்கை திறந்தாலே ஒரே எரிச்சல். அதையும் மீறி அங்கிருந்திருந்தால் மூளை குழம்பி போய் ஸ்ட்ரைட்டா கீழ்பாக்கத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு நானே போயி அட்மிட் ஆகிடும் நிலை வந்திருக்கும்.

ஒரேயொரு இறப்பு... ஒரு தனி மனிதனின் மறைவு... எத்தனை எத்தனை மனிதர்களின் நிறங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது..! எத்தனைக் குபீர் போராளிகளை இணையத்தில் சந்திக்க வேண்டியுள்ளது...!

நேற்று வரைக்கும் கூடங்குளம் பிரச்சனைக்காக அப்துல்கலாமை கழுவி ஊற்றிய ஒரு குரூப், இப்போது அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்த அவர் வரவில்லை.. இவர் வரவில்லை என திட்டிக் கொண்டிருக்கிறது. (அவர்கள் வருவது இருக்கட்டும்.. முதல்ல நீ போனாயா ..?)

இன்னொரு பக்கம் மெழுகுவர்த்தி குரூப். அவரொரு கார்பரேட் கைக்கூலி, அணு உலை ஆதரவாளர். ஆதலால் கலாமின் இறப்பு எங்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று வழக்கமான புலம்பல்களை அவிழ்த்து விடுகிறது. (ஏண்டா டேய்.. ஒரு அணு விஞ்ஞானி மக்களுக்கு அணு உலை குறித்த பயத்தை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு பயமுறுத்துவா செய்வார்..? )

சந்தடி சாக்குல நம்ம காமெடி டம்பளர் பாய்ஸ், ' ஈழத்தில் உறவுகள் செத்து மடிந்த பொழுது அமைதியாக இருந்தாயே' என்று எழவு வீட்டில் இனப்பீரிடலை காண்பிக்கிறது . அந்த நேரத்தில் அப்துல்கலாம் அவர்கள் பதவியில் இல்லை என்கிற விஷயம் கூட அந்த அரைவேக்காடுகளுக்கு தெரியாது. அப்படி சிந்திக்கும் அளவுக்கு அவைகளுக்கு அறிவும் கிடையாது.

இவர்களையெல்லாம் விட மிகவும் ஆபத்தானவர்கள் 'குபீர் போராளிகள்'. பொதுவாக இவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். சமூக அக்கறை எந்தக் கடையில் கிடைக்கும் என்பார்கள். ஆனால் யாராவது இறந்து போனாலோ அல்லது ஏதாவது பரபரப்பான செய்தி வந்தாலோ போதும்,குபீர் போராளிகளாக மாறிவிடுவார்கள். உலகத்தையே உருட்டிப் போட கிளம்பி விடுவார்கள். இவர்களுக்கு சுயபுத்தி சுத்தமாகக் கிடையாது. எவனாவது எதையாவது கிளப்பிவிட்டால் அதைப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தத் தகவல் உண்மையானதா, நம்பகத்தன்மையானதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். கையில் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராயிடு ஃபோன் இருந்தால் போதும்.. காசா பணமா... தட்டிவிடு share -ஐ . நிமிஷத்துக்கு ஒன்றாக வதவதவென வரும்.

மிழகத்தைப் பொருத்தவரையில் 'சம்பவம்' என்று ஒன்று நடந்தால் முதலில் உருள்வது கலைஞரின் தலை என்பது எழுதப் படாத நியதி. அதுதானே தமிழ் இணையவாசிகளின் தலையாய முதற்கடமை. அப்படி செய்யா விட்டால் அவர்களின் குபீர் போராட்டம் நிறைவைப் பெறாமல் போய்விடும் அல்லவா..!.

அப்துல்கலாம் மரணத்திலும் முதல் அம்பு கலைஞர் மீதுதான் எய்யப்பட்டது. 'கலாம் என்றால் கலகம்' என்று எப்போதோ கலைஞர் சொன்னதைத் தற்போது மேற்கோள் காட்டி 'அவரை செருப்பால் அடியுங்கள் ' என்கிறான் கல்யாணராமன் என்கிற காவி நாய். அதைத்தொடர்ந்து அந்நிலைத்தகவல் பேஸ்புக்கில் நிறைய பகிரச்செய்து, தனது கலைஞர் எதிர்ப்பு அரிப்பைத் தீர்த்துக் கொண்டது சில அரைவேக்காட்டு முண்டங்கள்..

கலைஞர் எந்த மாதிரியான சூழலில், எதற்காக அப்படி சொன்னார் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு அறிவும் தெளிவும் அவர்களுக்கு இருந்திருந்தால் இங்கே எதற்கு குப்பைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..? . வார்டன் என்றால் அடிப்போம். கலைஞர் என்றால் கலாய்ப்போம். அவ்வளவுதான்.

இந்திய அரசியலில் ராஜேந்திரபிரசாத்துக் குப் பிறகு ஒருவர் இருமுறை ஜனாதிபதி- யாகும் நடைமுறை முடிந்தவரை தவிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தியத் திருநாட்டில் ரப்பர் ஸ்டாம்ப் வேலை செய்ய ஆட்களுக்கா பஞ்சம்..!. அப்துல் கலாம் அவர்கள் தனது பதவிகாலம் முடியும் முன்பே தனக்கு மீண்டும் போட்டியிட ஆர்வமில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். சந்திரபாபு நாயுடு அப்போது விடுத்த அழைப்பையும் நிராகரித்து விட்டார். காரணம்; கலாம் ஓய்வை விருப்பினார். அரசியல் அவரது தொழிலல்ல. ஆதலால் தனது புனிதமான ஆசிரியப் பணியை மீண்டும் தொடர விரும்பினார்.

அந்த சமயத்தில், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பிரதிபா பாட்டிலை  ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அதை ஆமோதிக்க, சுலபமாக வென்று நாட்டின் பன்னிரெண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் பிரதிபா. அதன் பின்பு நடந்த 2012 தேர்தலில் மத்தியில் பலமிக்க கூட்டணியாக இருந்த காங்கிரஸ், தமது வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை முன்நிறுத்தியது.

பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன்தான் சிக்கலே எழுகிறது.  அதுவரை அமைதியாக இருந்த மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தின் அரசியல் எதிரியான பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் அப்துல் கலாம் பெயரைப் பரிந்துரைக்கிறார். அது அப்துல் கலாம் மீது கொண்ட அபிப்பிராயத்தால் அல்ல, பிரணாப் மீது கொண்ட வெறுப்பினால். அதற்கு மம்தா பயன்படுத்திய பகடைக்காய்தான் அப்துல்கலாம்.

ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப்பை தேர்ந்தெடுத்து, அதை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் முன்மொழிந்திருந்த நிலையில், மம்தாவின் அறிவிப்பு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்துல்கலாம் தான் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தால், அதை வழிமொழியும் முதல் கட்சியாக தி.மு.க இருந்திருக்கும். ஆனால் மிகப் பெரிய கட்சியான காங்கிரசே பிரணாப்பை முன் நிறுத்திய பிறகு, அதை எதிர்த்து கலாமை திமுக ஆதரித்தாலும் கலாம் படு தோல்வியைத்தான் தழுவியிருப்பார்.

இப்படியொரு சூழலில், 'அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் நான் தேர்தலில் நிற்கத் தயார்' என்று கலாம் அறிவிக்கிறார். நிச்சயம் அவருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்காது. அப்படியானால் அப்துல் கலாமின் தோல்வி உறுதியானதுதான். அப்படியிருக்க எதற்காக இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டு புதுக்குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்...?  அப்படி நிற்கும் ஆர்வம் இருந்தால் முன் கூட்டியே அல்லவா அறிவித்திருக்க வேண்டும்... இக்குழப்பத்தைப் பற்றி செய்தியாளர்கள் கலைஞரிடம் கேட்டபோதுதான் தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் 'கலாம் என்றால் கலகம் என்றொரு பொருளும் இருக்கிறது' என்றார். இது அவர்மீது கொண்ட வெறுப்பால் சொல்லவில்லை. அப்போதிருந்த சூழலை விளக்கவே அப்படி சொன்னார்..

ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மையெல்லாம் இந்த குபீர் போராளிகளுக்கு முக்கியமில்லை. கலைஞரை கழுவி ஊற்றணும். அதற்கு ஏதாவதொரு காரணம் கிடைக்கணும். அப்படி கிடைத்த காரணம்தான் 'கலாம் என்றால் கலகம்' .

லைஞரை அடுத்து இந்த குபீர் போராளிகளின் தாக்குதலுக்கு இலக்கானது மனுஷ்யபுத்திரன்.

மனுஷ்யபுத்திரன் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ' அப்துல்கலாம் ஒரு Scientist அல்ல. அவர் ஒரு Technocrat ' என்று சொன்னார்.

அதாவது அவரை 'விஞ்ஞானி' என்பதைவிட 'சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்' என்றுதான் சொல்ல வேண்டும் என்பது அவரது வாதம். இதில் கலாம் அவர்களை எந்த விதத்திலும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை.


ஆனால் டெக்னோக்ராட் என்கிற வார்த்தையை அறியாத எவனோ அதை 'ஸ்கூட்டர் மெக்கானிக்' என தவறாக புரிந்துகொண்டு இணையத்தில் அவருக்கு எதிரான தாக்குதலுக்கு விதையை தூவிவிட்டு போயிருக்கிறான்..
அதைப் பிடித்துக் கொண்டு அப்துல்கலாமை ஸ்கூட்டர் மெக்கானிக் என்று சொல்லிவிட்டார் என்று ஒரு நாள் முழுவதும் அவரை கழுவி ஊற்றினார்கள். அவர்கள் தூவிய விதைகள் மரமாகி தற்போது இப்படி வளர்ந்து நிற்கிறது... 

தைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால் சுருட்டை முடி வச்சிருந்தவன் எல்லாம் சுருளிராஜன் என்கிற மாதிரி அப்துல் கலாமின் சிகை அலங்காரத் தோற்றத்தை ஒத்த எந்தப் புகைப்படம் கிடைத்தாலும், 'இது மாமேதை அப்துல் கலாமின் இளமை காலத்து அரிய புகைப்படம் ' என்கிற புரளியை ஒரு குரூப் பரப்பிக் கொண்டிருந்தது. அதை நமது குபீர் போராளிகள் உணர்ச்சிப் பெருக்கெடுத்துப் பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

பத்து வயது கலாமின் புகைப்படம் என்று ஒரு துல்லியமான வண்ணப் புகைப்படம் ஒன்று நிறைய பேரால் இணையத்தில் பகிரப்பட்டது. 1931-ல் கலாம் பிறந்தார். அப்படியானால் அப்புகைப்படம் 1940 வாக்கில் எடுக்கப் பட்டதாக இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் ஏதய்யா இவ்வளவு துல்லியமான வண்ணப் புகைப்படக் கருவி..? 

கலாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது எடுக்கப்பட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் கிடைத்தது. அது 1953-ல் எடுக்கப்பட்டது. அதுவே பழைய கருப்பு வெள்ளையில் இருக்கும்போது இவர்களுக்கு 10 வயது வண்ணப் புகைப்படம் எங்கிருந்து கிடைத்தது..? தவிரவும் கல்லூரியில் படிக்கும்போதே ஒட்ட வெட்டிய சிகையலங்காரத்தோடு இருக்கும் அப்துல் கலாம் பள்ளிப் பருவத்திலா இப்படி இருந்திருப்பார்..?

ஒருவேளை டைம் மெசினில் பயணம் செய்து அப்துல் கலாம் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திற்கு சென்று அப்புகைப்படத்தை எடுத்து வந்திருப்பார்களோ..! சத்தியமாக உங்களையெல்லாம் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காதுய்யா...

ன்னும் நிறைய கூத்துக்கள்  நடந்தது..

# அப்துல் கலாம் பிறந்த தினத்தை அகில உலக மாணவர்கள்  தினமாக ஐ.நா அறிவித்தது. 

# அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.. (இன்னும் சில பேர் பிரிட்டன், ஆஸ்திரேலியா , கனடா என புருடா விட்டுக் கொண்டிருந்தனர்.)

# அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாமுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் வருகிறார்.

 # இத்தாலி நாட்டில் பிறந்த சோனியாவை இந்திய பிரதமர் ஆகாமல் தடுத்ததே அப்துல்கலாம் தான்..

 # வானத்தில் ஒரு அபூர்வ உருவம் தோன்றி கலாமுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உடனே மறைந்துவிட்டது.

# கலாம் 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்ததாக சொல்லப்படுவது பொய். அது குறித்த எந்த கானொளியும் இன்னும் வரவில்லை. அப்படியானால் கலாம் கொலை செய்யப்பட்டாரா...?

இன்னும் நிறைய புதுப்புது தகவலை கண்டுபிடித்து ஒரு குரூப் பரப்பிக் கொண்டிருக்க, அத்தனை செய்திகளும் பல்லாயிரக்கணக்கில் இந்த குபீர் போராளிகளால் பேஸ்புக்கில் பகிரப்பட்டது.

வை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளியது கேப்டனின் அழுகை. அப்துல் கலாமின் மரணத்தில் சிக்சர் அடித்த ஒரே ஆள் நம்ம கேப்டன்தான். அதற்கு முன்பு வரை இணையவாசிகளால் சகட்டுமேனிக்கு கலாய்க்கப் பட்டவர், அதே வாய்களால் 'பச்ச மண்ணுய்யா நம்ம கேப்டன்..' என அச்சம்பவத்துக்குப் பிறகு சொல்ல வைத்து விட்டார். அதுசரி... கேப்டனுக்கும் கலாமுக்கும் அப்படி என்ன பெரிய பிணைப்பு ..?  

கேப்டன் டெல்லி சென்று மன்மோகன் சிங்கையும், மோடியையும் தான் சந்தித்து விட்டு வந்திருக்காரே தவிர, இங்கிருக்கும் அப்துல் கலாமை ஒருமுறையாவது சந்தித்து சமுதாய முன்னேற்றத்தைப் பற்றி ஆலோசனை செய்திருக்காரா ..?.. இந்தியா வல்லரசு ஆகணும் என தனது திரைப்படங்களில் காட்சிக்கு ஒரு முறை சொல்லும் கேப்டன், உண்மையிலேயே அதற்கு செயல்வடிவம் கொடுத்த அப்துல்கலாமை சந்தித்து ஒருமுறையாவது பாராட்டியிருப்பாரா..?

" கருப்பு நிறமென்பதால் ஆரம்பத்தில் கோடம்பாக்கத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது, ' நானிருக்கிறேன் நண்பா..  உன்னை ஹீரோவாக்கிக் காட்டுகிறேன்.. ' என்று சூளுரைத்த 'அந்த ஆருயிர் நண்பர்..."

"ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல், சொந்த ஊருக்கே திரும்பிப் போய் அரிசிமில் வேலையைப் பார்க்கப் போகிறேன் என்று மதுரைக்கு ரயிலேற கிளம்பிய கேப்டனை தடுத்து நிறுத்தி, மீண்டும் பிஸியான ஹீரோவாக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு, வாய்ப்புக்காக ஒவ்வொரு கம்பெனியின் படியேறி மறுவாழ்வு அளித்த அந்த ஆருயிர் நண்பர்...."

"திருமணம் செய்துகொண்டால் நட்பில் விரிசல் வந்துவிடும் என்பதால் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் நண்பனுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த அந்த ஆருயிர் நண்பர்..."

"ஏற்கனவே விவாகரத்து வாங்கின, உடன் நடிக்கும் எல்லா நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த அந்த விவகார நடிகையுடன் காதலில் விழுந்தபொழுது, அவரிடமிருந்து பிரித்து, பிரேமலதாவை பெண் பார்த்து மணமுடித்து அழகு பார்த்த அந்த ஆருயிர் நண்பர்.... ,"

"அந்த ஆருயிர் நண்பர்" கண்ணாடிப் பெட்டிக்குள் அடக்கமாகிக் கிடந்த பொழுது, வரும் அழுகையை அடக்க முடியாமல் உடைந்து அழுவார் கேப்டன் என நினைத்திருந்தேன். ஆனால் அண்ணியாரோடு அமைதியாக அஞ்சலி செலுத்திவிட்டு கடமை முடிந்தது என்று கிளம்பிப் போனார் கேப்டன். அப்படிப்பட்ட கேப்டனும், அண்ணியாரும் கலாமின் உடலைப் பார்த்து கலங்கி அழுதார்கள் என்பதுதான் எங்கேயோ இடிக்கிறது....! அதுசரி, ஒரு நடிகனால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அழுகையைக் கூடவா கட்டுப்படுத்த முடியாது..?

துபோன்ற கொடுமைகள் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பார்த்துவிட்டு எப்படி சுலபமாகக் கடந்து செல்ல முடியும்...? "இரண்டு நாட்களாக பேஸ்புக்கை திறந்தாலே ஒரே எரிச்சல்" என்று முதலில் எழுதியதற்கு இதுதான் காரணம்.

எது எப்படியோ... 'கலாம் என்றால் கலகம் என்றொரு அர்த்தம் இருக்கிறது...' என்று கலைஞர் சொன்னது கலாமின் இறுதிச்சடங்கிலும் பொய்க்கவில்லை என்பதுதான் இங்கே ஆச்சர்யம்..!

Saturday, 4 July 2015

சப்பாத்தியை ஓட்டை போடுவது எப்படி..?

 சிங்கை வந்த புதிது. இங்குள்ள சிங்கப்பூர் தமிழ்க் குடிமக்கள் பேசும் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு வட்டார பேச்சு வழக்கு உண்டு. நெல்லைத்தமிழ் , கொங்கு தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் என்று அந்தந்த பகுதி மக்களுக்கும் ஒரு ஸ்லாங் உண்டு.

இதை SLANG என்று சொல்வதை விட DIALECT என்று சொல்வதுதான் சரி. SLANG வேறு... DIALECT வேறு.  "ங்கோத்தா.. " என்பது சென்னை ஸ்லாங்.  "படா பேஜாருப்பா..இப்ப இன்னா சொல்லுறே நீ.." என்பது சென்னை DIALECT . புரியவில்லை என்றால் விட்டுவிடவும். நான் சொல்ல வருவது இதைப் பற்றியல்ல.

நம்மூரில் பல வட்டார பேச்சு வழக்கு இருப்பது போல சிங்கை-மலேசியாவுக்கும் தனித்துவமான வட்டார பேச்சு வழக்கு உண்டு. "அண்ணே... இத இனிமே பாய்க்க முடியாதண்ணே..." என்பார்கள். பாய்க்க முடியாது என்றால், பாவிக்க முடியாது. பாவிக்க முடியாது என்றால், பயன்படுத்த முடியாது. இதே வார்த்தை இலங்கையிலும் பாய்க்கப்படுவதாக ஸாரி..பயன்படுத்தப்படுவதாக சென்னைப் பித்தன் அய்யா பதிவு ஒன்றில் பார்த்தேன். இலங்கையில் ஒரு துணிக்கடையில் "நாங்கள் பாவிக்கும் புடவை விற்கிறோம்” என்று பதாகை எழுதி வைத்திருந்தார்களாம். உபயோகிக்கும்..பயன்படுத்தும்...என்கிற அர்த்தத்தில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கை சென்ற புதிதில், என் அலுவலகத்தில் மலேசியா நண்பன் ஒருவன் நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தான். அவனது பெயர் முருகன். காலை ஷிப்டை முடித்துக்கொண்டு நான் கிளம்பும் வேளையில் இரவுப் பணிக்கு அவன் வருவான். ஒரு நாள் பணிக்கு வந்த உடனேயே பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்..

"என்ன முருகா .. என்ன தேடிகிட்டு இருக்க..?.."

" என் சப்பாத்திய எவனோ ஓட்டை போட்டுட்டாண்ணே.."

" என்னது சப்பாத்திய ஓட்டை போட்டுட்டானுவளா.. அதப் போயி எதுக்குய்யா ஓட்டை போட்டாணுவ..  அத எங்க வச்சிருந்த..?"

" ட்ரெஸ் கழட்டுற இடத்தில தான்ணே வச்சிருந்தேன்.. "

" அத எடுத்துட்டு வா பாக்கலாம்... "

" அண்ணே.. ஓட்டை போட்டுட்டாணுவங்கிறேன்.. அத எடுத்துட்டு வா..ங்கிறீங்க.."

"சரியா.. டென்சன் ஆகாதய்யா.. வேற வாங்கிக்கிலாம் விடுய்யா ...."

"அண்ணே அது அம்பது வெள்ளிண்ணே.. "

" அம்பது வெள்ளியா.. என்னய்யா அநியாயமா இருக்கு.. சரி இனிமே வாங்குனா பேக்கு உள்ளேயே வச்சிக்க.. வெளிய வைக்காத..":

" நானே ஓட்டை போட்டுடாணுவங்கிற டென்சன்ல இருக்கேன்.. நீங்க வேற பேக்குல வய்யி.. லாக்கர்ல வய்யின்ட்டு.. "

"ஓட்டை போடுற அளவுக்கு வக்கிரம் புடிச்சவன் எல்லாம் இங்க இருக்கானா... ஒருவேள விளையாட்டா செஞ்சியிருப்பாங்க... சரி விடுய்யா... எவனாச்சும் கவர்ல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிறதுக்கு விரல விட்டு பாத்துருப்பான். ஓட்டை விழுந்திருக்கும். இருந்தாலும் சப்பாத்தி அம்பது வெள்ளி விக்கிறது அநியாயம்யா.. அந்த ஹோட்டல் எங்க இருக்கு..."

அவ்வளவுதான். செம காண்டாகி அங்கிருந்து கிளம்பி போயிட்டான். எனக்கு ஒரே குழப்பம். நம்ம ஊரு பையன் ஒருத்தன கூப்பிட்டு, " என்னப்பா சாப்பிடற சப்பாத்திய போயி எவனாவது ஓட்டை போடுவானா... மட்டமா இருக்காங்கப்பா .."

"அவனே ஷூ வை காணும்னு தேடிக்கிட்டு இருக்கான்...  அவன ஏன்ணே டென்சன் ஏத்துறீங்க.."

" யோவ் சத்தியமா தெரியாதுய்யா.. அவன்தான் சப்பாத்தியை ஓட்டை போட்டுட்டாங்கனு சொன்னான்.."

"அது சப்பாத்தி இல்லன்ணே.. சப்பாத்து.."

அடப்பாவிகளா.. ஷூவதான் சப்பாத்துனு சொல்றீங்களா.. அப்போ இவ்ளோ நேரம் ஷூ காணாம போனத பத்திதான் பேசிகிட்டு இருந்திருக்கானா.. அவன் சப்பாத்துனு சொன்னது என் காதில சப்பாத்தின்னு விழுந்திருக்கு. நான் சப்பாத்தின்னு சொன்னது அவன் காதுல சப்பாத்துனு விழுந்திருக்கு. அப்போ ஓட்டைப் போடுறதுன்னா திருடிட்டு போறது போல.. 

அப்புறம் விசாரித்தால்தான் தெரியுது. சப்பாத்து என்பது shoe-வின் தமிழாக்கமாம். ஜெயமோகன் கூட அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நமக்குத்தான் தெரியாமல் போய்விட்டது.

ஒரு தமிழ் வார்த்தையை அயல்நாடு சென்று அறிய வேண்டிய சூழல் எனக்கு. ஆனால் வேற்று மொழியிலிருந்து வந்த நிறைய வார்த்தைகள் தற்போது தூய தமிழ் சொற்கள் போல தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் எழுதும் மரபுக் கவிதைகளில் கூட அவ்வார்த்தைகள் சர்வ சாதாரணமாகத் தென்படுகிறது.

உதாரணத்திற்கு சில... (அடைப்புக் குறிக்குள் உள்ளது தூய தமிழ்ச் சொல்)

அர்ச்சனை  (மலரிட்டு வழிபடுதல்)
சுதந்திரம்  (விடுதலை)
வாகனம்  (ஊர்தி)
 வருடம்  (ஆண்டு)
பட்சி  (பறவை)
சங்கதி  (செய்தி)
வாசனை  (மணம்)
விவாகம்  (திருமணம்)
பண்டிகை  (திருவிழா)
கேணி  (கிணறு)
கடுதாசி  (கடிதம்)
ஆஸ்பத்திரி  (மருத்துவமனை)
மகசூல்  (விளைவு)
ஜமக்காளம்  (விரிப்பு)
தபால்  (அஞ்சல்)
தயார்  (ஏற்பாடு)
புகார்  (முறையீடு)
வக்கீல்  (வழக்குரைஞர்)
பந்தயம்  (பணயம்)
அசல்  (மூலம்)
ஆசாமி  (ஆள்)
இலாகா  (துறை)
சந்தா (உறுப்பினர் கட்டணம்)
மைதானம்  (திடல்)
சன்னல்  (காலதர்)
பந்தோபஸ்து  (பாதுகாப்பு)
சிபாரிசு  (பரிந்துரை)
கோர்ட்  (நீதி மன்றம்)
சிப்பாய்  (போர்வீரன்)
பாக்கி  (மிச்சம்)
வாய்தா  (நிலவரி)
ஏராளம்  (மிகுதி)
நபர்  (ஆள்)

டிஸ்கி..
ஒன்னுமில்ல... ஒரே சினிமா பதிவுகளா எழுதி எனக்கும் போரடிச்சி போச்சு. அதான் ஒரு சேஞ்சுக்கு...

-------------------------------XXXXXXXXXXXXXXXXXXXX---------------------------------

Friday, 3 July 2015

பாபநாசம்..- பாசப்போராட்டம்..!

கொலைக்குற்றத்தில் சிக்கிக் கொண்ட தன் மகளைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தந்தையின் பாசப்போராட்டம் தான் பாபநாசம். ஏற்கனவே த்ரிஷ்யம் படம் பார்த்தவர்களுக்கு பாபநாசம் படத்தின் கதையை திரும்பவும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் கடமை என்று ஒன்று இருப்பதால்......

பாபநாசம் என்கிற கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டராக சுயதொழில் செய்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). மனைவி ராணி (கவுதமி) மற்றும் இரு மகள்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை. தொழில் தவிர, தொலைக் காட்சியில் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது அவரின் பொழுதுபோக்கு.

பள்ளியில் நடக்கும் கேம்ப் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அவரது மூத்த மகளை, குளிக்கும்போது ஒருவன் செல்போனில் வீடியோ எடுத்து விடுகிறான். அதை வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி அவர்கள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான்.

இந்த விஷயம் சுயம்புவின் மனைவிக்கு தெரியவர, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றுகிறது. இதில் அவன் கொல்லப்படுகிறான். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தை மறைக்க அவர்கள் வீட்டு தோட்டத்திலே குழி தோண்டி அவனைப் புதைத்து விடுகிறார் சுயம்புவின் மனைவி.

மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பும் சுயம்புவிடம் நடந்ததை சொல்கிறார்கள். கொல்லப்பட்டவன் ஐ.ஜி யின் மகன் எனத் தெரியவர, ஒட்டுமொத்தக் குடும்பமே உடைந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் பரிதவிக்கிறது.

பிறகு சுதாகரித்துக் கொள்ளும் சுயம்பு, சட்டப்படி இது கொலையல்ல என்பதை விளக்கி அவர்களைத் தேற்றி ஆறுதல் சொல்கிறார். அதன்பின்பு ஒவ்வொரு தடையமாக அழிக்கிறார். ஆனால் விதி, அவர்களைக் காட்டிக் கொடுக்கிறது. கடைசியில் அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

 
சல் த்ரிஷ்யத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால் இதன் ஒவ்வொரு காட்சியையும் அசலோடு மனம் ஒப்பீடு செய்துக்கொண்டே வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  மலையாள த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தின் இயக்குனர். கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளையும் அப்படியே நகல் எடுத்திருக்- கிறார். மலையாள த்ரிஷ்யத்தில் குளியல் வீடியோவை வைத்து மிரட்டும் ஐ.ஜி யின் மகனை இரும்புக் கம்பியால் தாக்குவார் ஜார்ஜ் குட்டியின் மகள். இதில் அவன் வைத்திருக்கும் செல்போனைத் தாக்க முற்படும் போது அந்தக் கம்பி தவறுதலாக தலையை தட்டிவிடுவதாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். தன் அம்மாவையே இச்சைக்கு அழைக்கும் ஒருவனை மகள் கொலை செய்ய முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது..? பின்னே எதற்கு தமிழில் இந்த சமரசம்..?

வெகு இயல்பாக அறிமுகமாகிறார் உலகநாயகன். படத்தில் ஒரு இடத்தில் கூட ஹீரோயிசம் இல்லை. இப்படி ஒரு கதையில் நடிக்க சம்மதித்ததிற்கே அவரைப் பாராட்டலாம்.இரு குழந்தைகளுக்கு அப்பா என்கிற பாத்திரம் கமலுக்கு புதிதல்ல. அப்பா- மகள் கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது. கமல் பேசும் பாபநாச பாசையை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுக்கிறது. என்றாலும் எல்லாவற்றிலும் பெர்பெக்சன் எதிர்பார்க்கும் ஒரு கலைஞனின் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும்.

மோகன்லால்-கமல் ஒப்பீடு தேவையில்லைதான். ஆனால் ஜார்ஜ் குட்டி என்கிற பாத்திரத்தினுள் தெரிந்த ஒரு அக்மார்க் கேபிள்டிவி ஆபரேட்டர், அன்பான அதே நேரத்தில் கண்டிப்பான அப்பா, பிரியமான கணவன், பாசமான மருமகன் எல்லாம் சுயம்புலிங்கத்தின் பாத்திரத்தில் ஏனோ தெரியவில்லை. ஆனால் இறுதியில் கொலை செய்யப்பட்ட ரோஷன் பஷீர் பெற்றோரிடம் கமல் உருகிப் பேசும் அந்த ஒரு காட்சியில் ஜார்ஜ் குட்டியையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் சுயம்பு லிங்கமான கமல். உலக நாயகன் உக்கிரமாக ஜொலிக்கும் இடமது.

நிஜத்தில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் திரையில் கமல்- கவுதமியை தம்பதியினராகப் பார்க்கும் போது ஏதோ ஒன்று நெருடுகிறது. பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியின் தாய் இந்தளவுக்கா டொக்கு விழுந்து போயிருப்பார்..?.ஒருவேளை நிஜத்தில் இருக்கலாம். சினிமா என வருகிற பொழுது ஒரு முன்னணி  நடிகரின் மனைவியாக நடிப்பவர் என்பதால் கொஞ்சம் 'வெயிட்டான' அம்மாவைப் போட்டிருக்கலாமே..?  கமல்-கவுதமி ரொமான்ஸ் காட்சிகள் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை...

படத்தின் முதல்பாதி ஜவ்வாக இழுக்கிறது. டீக்கடையில், போலீசாக வரும் கலாபவன்மணியை கமல் கலாய்ப்பது, கமல்-கவுதமி உரையாடல்கள் , பாடல்கள் என்று சுவாரஸ்யமில்லாமல் முன்பாதி நகர்கிறது. ஆனால் பின்பாதியில்தான் திரைக்கதை வேகமெடுக்கிறது. கொலையை மறைக்கும் கமலின் தந்திரங்கள், விசாரணையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மகள்களுக்கு கமல் எடுக்கும் வகுப்பு, போலிஸ் புலன் விசாரணை என்று தடதடவென்று சிக்கல் இல்லாமல் சீறிப்பாய்கிறது திரைக்கதை.

படத்தில் பாராட்டப்படவேண்டிய மற்றொரு கதாபாத்திரம், கொலை செய்யப்பட்டவனின் அம்மாவாக வரும் ஐ,ஜி. கீதா பிரபாகர் (ஆசா சரத்). புலன்விசாரணை செய்யும் காவல் உயரதிகாரியாக அவர் காட்டும் கம்பீரமாகட்டும், தன் மகனுக்கு என்ன ஆயிற்று என்பதே தெரியாமல் ஒரு அம்மாவிடமிருந்து வெளிப்படும் தவிப்பாகட்டும், கமலுக்கு அடுத்து செம்மையாக ஸ்கோர் செய்வது இவர்தான்.

படம் முழுவதும் பச்சை பசேலென இருக்கும் ரம்மியமான மலைப்பிரதேசங்களைப் பளிச்சென பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ். ஜிப்ரனின் பின்னணி இசை அவ்வளவாக காட்சிகளோடு பொருந்தவில்லை. பாடல்கள் சுத்தம்..!

முன்பாதியில் கோட்டைவிட்டு பின்பாதியில் கொடியை நட்டு இருக்கிறார்கள். மலையாள த்ரிஷ்யம் ஒரு வருடம் ஓடியதாக சொல்கிறார்கள். ஆனால் பாபநாசம் படத்திற்கு 'ரிப்பீட் ஆடியன்ஸ்' வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருமுறை பார்க்கும்படி தான் உள்ளது.


                        ப்ளஸ்                   மைனஸ்
சிக்கலில்லாமல் சீறிப்பாயும் பின்பாதி திரைக்கதை.                                        சுவாரஸ்யமில்லாமல் நகரும் முதல் பாதி.... 
உலக நாயகனின் எதார்த்த நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள்.
காவல் உயரதிகாரியாக வரும் ஆசா சரத் நடிப்பு  விசாரணையின் போது  நடக்கும் வன்முறைக் காட்சி.
சுஜித் வாசுதேவ்வின் ஒளிப்பதிவு  கவுதமி.  ( சிம்ரன், அபிராமி,நதியா எல்லாம் பரிசீலனையில் இருந்தார்களாம். கமலின் தேர்வுதான் கவுதமி)
இறுதிக் காட்சியில் ஜெயமோகனின் வசனம்.
ஹீரோயிசம் இல்லாத இயக்கம்




Friday, 17 April 2015

தாலியை எடுத்துக் கொடுப்பவரே எப்படி அறுக்கச் சொல்லலாம் ..?

னது முந்தைய பதிவைப் படித்த தமிழ் தேசிய டம்ளர்.. ஸாரி.. நண்பர் ஒருவர், வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பிப் பார்க்கச் சொல்லியிருந்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது கைகளால் தாலியை எடுத்துக் கொடுத்து ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் நிகழ்வு அது.

" இதுதான் இணையப்போராளிகளால் நேற்று பேஸ்புக்கில் பரப்பப்பட்டு மூத்திரக் குடுவையோடு தனது இறுதி மூச்சுவரை போராடிய ஒரு கிழவனின் இயக்கத்தையே கொச்சைப்படுத்தி கழுவி ஊற்றினார்களே.. இதை எப்படி பார்க்காமல் இருப்பேன்..." என்று பதிலனுப்பினேன். 

"அப்படி என்றால் அன்று தாலியை எடுத்துக் கொடுத்து கட்டச் சொன்னவர் இன்று எப்படி தாலியை அகற்ற சொல்லலாம்.. இது பச்சைப் பொறுக்கித்தனம் இல்லையா.. " என்று பொங்கினார்.  

" தாலியை கட்ட சொன்னவரால் தானே அதை அகற்று என்று சொல்லமுடியும்..." என்று ஆரம்பித்து பெரிய விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தவுடன் செம்ம கடுப்பாகிவிட்டார்.

" தாலியே கூடாது என்றுதானே தாலி அறுப்பு விழா நடத்துகிறார்கள்.. பின்ன என்ன மயித்துக்கு தாலியை கட்ட சொல்லணும்.. நாங்க எல்லாம் கேனையன்களா... இந்த வந்தேறி திராவிட நா....." என்று ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

இப்படித்தான்.. டம்ளர் பாய்ஸ்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. இணையத்தில் டம்ளர் குரூப் எங்கேயாவது தற்குறித்தனமான கேள்விகளை கேட்டு வைக்கும். இவர்கள் அங்கு சென்று, 'அதானே.. இந்த திராவிட வடுக வந்தேறி நாய்களை தமிழ் நாட்டை விட்டே விரட்டவேண்டும்... என்று ஆரம்பித்து 'சுந்தரத் தமிழில்' சில வார்த்தைகளையும் சேர்த்து வாந்தி எடுத்து வைப்பார்கள். அத்தோடு விடுவார்களா.. அந்தக் கேள்விகளை 'காப்பி' செய்து எங்கெல்லாம் இவர்களுக்கு எதிராக நிலைத்தகவல் பதியப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதை 'பேஸ்ட்' செய்து வைப்பார்கள். அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால், தான் ஐநா சபையிலே கேள்வி கேட்டது போல காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார்கள் ஐந்து நிமிடம் ஐநா சபையில் பேசி ஈழம் பெற்றுத்தரும் சீமானின் அருமைத் தம்பிமார்கள்.

தப்பித்தவறி அவர்களையே மடக்குவது போல பதிலளித்துவிட்டோம் என்றால் அவ்வளவுதான். பதிலளித்த நாம் திராவிட வந்தேறிகளாகிவிடுவோம். மொத்த அர்ச்சனையும் நம் மீது கொட்டிவிடுவார்கள். இதுபோன்ற அரைவேக்காடுகள் நிறைய இணையத்தில் உலவுகின்றன. அவர்களிடம் வாதிடுவது நமக்குத்தான் டென்சன்.

தெரியாமத்தான் கேட்கிறேன்....

தி.க தலைவர் கி.வீரமணி ஏதோ யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமண ஏற்பாடு செய்து, எவரும் பார்க்காத நேரத்தில் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்து கட்டச்சொன்னது போலவும், அப்போது இவனுக அவர்களுக்கு தெரியாமலே  மறைந்திருந்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டது போலவும் தைய தக்கான்னு குதிக்கிறாங்களே...

ஏம்பா டம்பளர் பாய்ஸ்களா... திராவிடர் இயக்கம் தோன்றியபோது நாமெல்லாம் பிறந்திருக்கவே மாட்டோம். ஆட்சி அதிகாரத்தில் ஆர்வமில்லாமல் மக்கள் நலனை மட்டுமே கொள்கையாகக் கொண்டு போராட்ட உரத்தில் வளர்ந்த ஒரு இயக்கம், ஊரறிய தாலியை எடுத்துக்கொடுக்கிறது என்றால் அதற்குப் பின்னால் உள்ள சூட்சமத்தை புரிந்துகொள்ள வேண்டாமா..! உங்கள் சிந்தனைகள் எல்லாம் எப்போதும் அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்குமா..?

பொதுவாகவே திராவிடர் கழகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று, மூட நம்பிக்கைகளை தெளிவாக மக்களிடையே விளக்கிச் சொல்லும் வாய்வழிப் பிரச்சாரம். இன்னொன்று நேரடியாக களத்தில் இறங்கி, அந்த மூடநம்பிக்கையே தவறு என நிரூபிக்கும் செயல் பிரச்சாரம்.

உதாரணம் சொல்கிறேன். தீ மிதிப்பதும், உடலில் அலகு குத்துவதும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஊருக்கு ஊரு மேடை போட்டு முழங்குவார்கள் கருஞ்சட்டை தோழர்கள். அது தெய்வ செயல் அல்ல. கடவுள் மறுப்பாளனும் செய்யலாம் என்று விளக்குவார்கள்.  இது ஒருவகை பிரச்சாரம்.



இன்னொன்று, கழக தோழர்களே பிரும்மாண்ட தீமிதி திருவிழாவை ஏற்பாடு செய்து 'கடவுள் இல்லை.. கடவுள் இல்லை ' என்று முழங்கிக்கொண்டே தீ மிதித்துக் காண்பிப்பார்கள். அதுபோலவே அலகு குத்துதலும். இரண்டுமே பக்தியால் வருவதல்ல.. பயிற்சியால் வருவது என்பதை மக்களுக்கு நிரூபித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அந்தப் புகைப்படம்தான் மேலே உள்ளது. அந்தப் படத்தை வைத்துக் கொண்டு கடவுள் இல்லை என்று சொல்கிற தி.க கட்சிக்காரங்களே தீ மிதிப்பது சரியா என கேட்பது எப்படி முட்டாள்தனமான சிந்தனையோ அதேப் போலத்தான் கி.வீரமணி அவர்கள் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வையும் நக்கலடிப்பது.

எப்படி இரண்டும் ஒன்றாகும் எனக் கேட்கிறீர்களா..? எனக்குத் தெரிந்து சுயமரியாதைத் திருமணங்கள் இரு முறைகளில் செய்யப்படுகிறது. ஒன்று தாலி கட்டாமலே செய்யப்படுவது. மற்றொன்று தாலி கட்டுவதற்கான அனைத்து சம்பிராதயங்களையும் உடைத்து செய்யப்படுவது. இரண்டுமே சுயமரியாதைத் திருமணங்கள்தான். முதலில் சொன்னது பெரியார் காலத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது சொன்னதை நானே நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

தெளிவாகச் சொல்கிறேன். திராவிடர் இயக்கத்தின் போராட்ட முறையே, இருக்கும் மூடநம்பிக்கைகளை தவறு என்று நிரூபிப்பதுதான். அப்படியானால் அதை அவர்கள் வழியில் சென்றுதானே நிரூபிக்க முடியும்..!. இந்துக்களின் திருமணங்களில் 'தாலி' என்பதை நினைத்த நேரத்தில் கட்டிவிட முடியாது. வேதங்கள் சாஸ்திரங்களின் அடிப்படையில் நிறைய நடைமுறைகள் உள்ளது. அதை தவறென்று நிரூப்பிப்பது தானே இவர்களது வேலை..!.

ராகுகாலம் , எமகண்டத்தில் தாலி கட்டக் கூடாது... கிழக்குத் திசையில் பார்த்துதான் கட்டவேண்டும்.. வானத்தில் ஏதோ தெரியுமாம். அது தெரிந்தால்தான் கட்ட முடியும். பார்ப்பனர் வந்து வேதம் ஓதி, சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்லவேண்டும். அக்னி ஏற்றவேண்டும்.. அட்சதை தூவ வேண்டும்.. மேளம் கொட்டவேண்டும்.. அதாவது எப்படி வேதங்கள் மந்திரங்கள் ஓதி ஒரு கற்சிலையில் கடவுளை கொண்டுவந்து அடைப்பதாக சொல்கிறார்களோ (அது களவு போனால் சிலை காணாமல் போய்விட்டது என்பார்கள்) அதுபோல் வெறும் நூல் கயிற்றில் மொத்த சங்கதியையும் கொண்டுவந்து அடைக்கிறாங்களாமாம். இதையெல்லாம் செய்யவில்லை என்றால் இவர்கள் அல்பாயுசில் சென்றுவிடுவார்களாம். எந்த செல்வமும் பெருகாது. இருவரும் சேர்ந்து வாழவே முடியாது.சந்ததி விருத்தி ஆகாது... இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். இந்தக் கொடுமையெல்லாம் பொய் என்று எப்படியய்யா நிரூபிப்பது..?

எங்களைப் பொறுத்த வரையில் தாலி என்பது வெறும் கயிறுதான். நீ வேதங்களின் சாஸ்திரங்களின் அடிப்படையில் தாலியை கட்டச் சொல்கிறாய் என்றால் நாங்கள் எந்த சம்பிராதயமும் சடங்கும் இல்லாமல், அக்னி ,அட்சதை, மந்திரம் எதுவும் இல்லாமல் தமிழில் உறுதிமொழி எடுத்துத் தாலியைக் கட்டச்சொல்லி, எப்படி உன்வேதப்படி திருமணம் நடத்த தம்பதிகள் வாழ்கிறார்களோ அதைவிட ஒருபடி மேல எங்கள் வழக்கப்படி திருமணம் நடந்த தம்பதிகள் வாழ்ந்து காட்டல நான் பெரியார் தொண்டன் இல்லடா என்று அண்ணாமலையில் ரஜினி விட்ட சவால் போல நடைபெறுவதுதான் இரண்டாவது வகை சுயமரியாதைத் திருமணம். இதைத்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்.

நீ கிழக்கு திசையில் பார்த்து தாலி கட்டுச் சொல்கிறாய் என்றால் நாங்கள் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து தாலி கட்டுவோம். நீ நல்ல நேரம் பார்க்கிறாய் என்றால் நாங்கள் எமகண்டத்தில் கட்டுகிறோம். நீ “மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்” என சமஸ்கிரத மந்திரம் ஓதுகிறாய் என்றால் நாங்கள் எங்கள்  தாய்மொழியில் உறுதிமொழி எடுப்போம். மொத்தத்தில் வேதங்களையும் சாஸ்திரங்களையும் பொய்யென்று நிரூபிக்க வேண்டும்.

சரி.. தாலி என்பது உங்களுக்கு வெறும் கயிறுதான் என்றால் எதற்காக தாலி அகற்றும் போராட்டம் நடத்த வேண்டும்..?

வருடா வருடம் மேடை போட்டு தாலி அகற்றும் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. தாலி என்பது வெறும் கயிறுதான் என்பதால் அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. ஆனால் தாலி பற்றிய ஒரு விவாதத்தையே பொறுத்துக் கொள்ளமுடியாமல் இந்துத்வா கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசும் அளவுக்கு துணிகிறது என்றால் தாலி என்பது அவ்வளவு புனிதமா என்கிற கேள்வி இங்கே எழுகிறது. அதை இன்னும் புனிதமாக்கி, தங்கத்தில் தாலி அணிவது இந்து மரபுப்படி தவறு. மஞ்சள் கயிற்றில்தான் அணியவேண்டும். அப்படி அணியாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்லாமிய தீவிரவாதிகள் போல இந்துத்வா வெறியர்களும் மாறிவிட வாய்ப்புள்ளது. அதை முளையிலே கிள்ளி எறியவேண்டும். எங்கள்  தோழர்கள் அணிந்திருப்பது வெறும் கயிறுதான் என்றாலும் அது புனிதமானது அல்ல என்கிற விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்பதற்கே இந்த தாலி அகற்றும் நிகழ்வு.

Tuesday, 14 April 2015

யார் தாலியை எவன் அறுத்தால் இவர்களுக்கு என்ன..?



முதலில் தாலி அறுப்புக்கும், அகற்றுதலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சாலையில் சென்று கொண்டிருப்பவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து முச்சந்தியின் நிற்க வைத்து தாலியை அறுக்கவில்லை. அவர்கள் அவர்களது இயக்கத்தில் உள்ள சில பெண்கள் அணிந்துள்ள தாலியை அவர்களின் சம்மதத்தோடு அகற்றுகிறார்கள். சரி..  அறுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். யார் தாலியை எவன் அறுத்தால் உங்களுக்கு என்ன வந்தது..?  எதற்காக இந்த இந்து வெறியர்கள் இப்படி கூச்சல் போடுகிறார்கள்...?

இதற்கு சில இந்துத்வா அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கிறது. அது அவர்களின் பிழைப்பு, விட்டுவிடுவோம். ஆனால் இந்த டம்ளர் பாய்ஸ் எதற்கு சந்தில் சிந்து பாடுகிறார்கள்..?.

தாலி அகற்றும் நிகழ்வுக்கு ஆதரவாக பேசினால் உடனே இவர்கள் வைக்கும் முதல் கேள்வி, உன் வீட்டுக் குடும்பப் பெண்களின் தாலியை நீ அறுப்பாயா..? அதை முதலில் செய்துவிட்டு பிறகு இதற்கு அதரவு கொடு என்கிறார்கள். இதை இந்துத்வா ஆதரவாளர்கள் சொன்னால் பரவாயில்லை. இந்துத்வா கொள்கைகளையும் மோடியின் முகமூடியையும் சமூக வலைத்தளங்களில் கிழித்தெடுக்கும் டம்ளர் பாய்ஸ் சொல்வதுதான் வேதனை ..!

தாலி அகற்றும் இந்த நிகழ்வுக்கு ஆதரவாக நான் மட்டுமல்ல, முற்போக்கு சிந்தனையுடைய அனைவரும் தத்தமது குடும்பப் பெண்களின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியை கண்டிப்பாக அகற்றுவார்கள். ஆனால் அதற்கு முன்பு பெண்ணடிமைத் தளை என்கிற தாலியின் மீதான புனிதப் பிம்பம் உடைத்தெறியப்பட்ட வேண்டும். அதற்கான ஆரம்பப் புள்ளியைத்தான் திராவிடக் கழகம் வைத்திருக்கிறது.

எதற்காக கி.வீரமணி இந்த 'தாலி அகற்றுதல் மற்றும் 'மாட்டுக்கறி உண்ணும்' போராட்டத்தை முன்னெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா..? புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த 'தாலி அவசியமா' என்கிற விவாதத்திற்கு எதிர்வினையாக அந்த நிறுவன அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைச் செய்தது இந்துத்வா கும்பல். இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மாட்டுக்கறி உண்ண தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. காரணம், அது இந்துக்களின் புனிதமாம். அதனால் அது கொல்லப்படவோ உண்ணப்படவோ கூடாதாம். இச்சட்டத்தை கொண்டுவந்ததும் ஒரு இந்துத்வா அரசுதான். நாம் என்ன சாப்பிடவேண்டும், சாப்பிடக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்..?  ஒருவேளை உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்கிற அக்கரையில் சொல்கிறார்கள் என்றால் ஆடு, கோழி போன்றவைகளைச் சாப்பிடுவதற்கும் தடை விதிப்பார்களா..?.

ஆனால், சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் மற்ற நிகழ்வுகள் போல ஒருநாள் மட்டும் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சில எதிர்ப்புகளை பதிவு செய்துவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டார்களே தவிர, எந்த இயக்கமும் அதற்கு எதிரான களப்போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. காரணம் ஓட்டரசியல். இந்துக்கள் காலங்காலமாக பின்பற்றிவரும் ஒரு நம்பிக்கையில் கைவைத்தால் அது எதிர்ப்பு அலையாக மாறி தேர்தல் வரை எதிரொலிக்கும் என்கிற பயம். ஆனால் ஓட்டரசியலில் துளியும் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் தைரியமாக களத்தில் குதித்தது.

தாலி என்பது பெண்ணடிமைத்தனம் என்கிற பிரச்சாரத்தை முதலில் முன்னெடுத்தது பெரியார்தான். அன்றைய காலக்கட்டத்தில் நிறைய சுயமரியாதைத் திருமணங்கள் தி.க வினரால் நடத்தப்பட்டது. தாலி அணியாமலே நிறைய திருமணங்கள் நடந்தது. அது ஒன்றே தி.க வின் கொள்கை இல்லை என்பதால் என்னவோ பெரியார் மறைவுக்குப் பிறகு அவரது தொண்டர்களே அதைப் பின்பற்றவில்லை.

திரும்பவும் கி.வீரமணி எதற்காக அதைக் கிளறவேண்டும்...? ஒன்றைத் தெளிவு பெறுங்கள். தி.க ஒரு அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு இயக்கம். இந்த நிகழ்வை வைத்து அடுத்தத் தேர்தலில் நின்று அரசியல் ஆதாயம் அடைவது அதன் இலக்கல்ல. பரபரப்பாக ஏதாவது ஒன்றைச் செய்து மக்கள் மத்தியில் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமும் அவர்களுக்குக் கிடையாது. மக்கள் விடாப்பிடியாகப் பிடித்திருக்கும் ஒரு மூட நம்பிக்கையை அவர்களிடமிருந்து அகற்ற வேண்டுமானால் அதற்கு எதிரான முதல் போராட்டப் புள்ளியை நம்மிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும் என்று பெரியார் பின்பற்றிய அதே முறையைத்தான் கி.வீரமணியும் வழிமொழிந்திருக்கிறார்.


எதற்காக பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நானூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்..? யோசித்துப் பார்த்தீர்களேயானால், அது சுத்த மடத்தனமான செயல்போல தோன்றும். மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய மரத்தை ஏன் வெட்டி சாய்க்கவேண்டும்..? தனது பிரச்சாரத்தின் ஆரம்பமே மக்களால் பரவலாக கவனிக்கப்படவேண்டும்.. அதுவே விழிப்புணர்வுக்கான முதல் விதையாக இருக்கும் என்று நம்பினார் தந்தை பெரியார். இன்று வரை மதுவிலக்கு என்றால் பெரியார் தனது தோட்டத்தில் வெட்டி சாய்த்த மரங்கள் அல்லவா நமக்கு ஞாபகம் வருகிறது. அதே நடைமுறையைத்தான் கி.வீரமணியும் பின்பற்றியிருக்கிறார்.

உடன்கட்டை ஏறுவது மிருகத்தனமான, அறிவீனமான செயல் என்று தற்போது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அந்நடைமுறையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் முன்னொரு காலத்தில் மக்கள் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட மத நம்பிக்கையாக அது பார்க்கப்பட்டது.  அதற்கெதிராக பிரச்சாரம் செய்பவர்களை இப்படித்தான் விரோதிகள் போல தூற்றினார்கள். அதன்பிறகு கணவன் இறந்துபோனால் மனைவிமார்கள் கண்டிப்பாக வெள்ளுடை அணியவேண்டும், பொட்டுவைக்கக் கூடாது, பூச்சூடக் கூடாது என்பது போன்ற கொடூர தண்டனைகள் இச்சமூகத்தால் கணவனை இழந்தப் பெண்களுக்கு விதிக்கப்பட்டது. அப்படி செய்யாதவர்களை விபச்சாரிகள் என்று சொன்னார்கள். ஆனால் காலபோக்கில் அது மாறவில்லையா..?  அந்த மூடத்தனத்தின் கடைசி எச்சம்தான் இந்தத் 'தாலி'.


இந்து மதத்தில் கணவனை இழந்தப் பெண்ணுக்கு தாலி அறுக்கும் சடங்கு என்ற ஒன்றை தற்போது நடத்துகிறார்கள். பதினாறாவது நாள் என நினைக்கிறேன். தன் கணவனை பறிகொடுத்து சிதையின் தணலில் ஏற்றிய அந்த நாளைவிட, பிற்பாடு தாலி அகற்றும் நாள்தான் பெண்களுக்கு கொடூரமானது. கணவன் இறந்த நாளிலிருந்து எல்லோரும் ஆறுதல் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தேற்றி வருவார்கள். அவளும் ஓரளவு தேறிவரும் சமயத்தில்தான் இந்த தாலி அறுக்கும் சடங்கு நடக்கும். ஏதோ அவள் இனி இந்த உலகத்திலேயே வாழத் தகுதியில்லாதவள் போலவும், அவளது வாழ்க்கையே சூனியமாகி விட்டது போலவும் சுற்றியிருக்கும் பெண்கள் எல்லாம் அவளைக் கட்டிபிடித்து அழ ஆரம்பிப்பார்கள். தலையில் பூச்சூடி, நுதலில் திலகமிட்டு, கைகள் நிறைய வளையலிட்டு சுற்றிலும் பெண்கள் சூழ அமர வைப்பார்கள். பிறகு ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க ஆரம்பிப்பார்கள். கூடவே எழவு விழுந்த ஒப்பாரி சத்தமும் சேர்ந்துக்கொள்ளும். யோசித்துப் பாருங்கள். கணவனை இழந்தத் துயரத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உளவியல் ரீதியாக இது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும்..! எந்தத் துணையுமில்லாமல் தன்னால் இந்த உலகத்தில் வாழமுடியும் என்ற என்ற நம்பிக்கையில் மீண்டு வருபவளை அப்படியே புரட்டிப்போடும் சம்பவம் அல்லவா அது..! உடன்கட்டை ஏறுவதை விட  கொடூரமான நிகழ்வு அல்லவா இந்தச் சடங்கு...! தாலி இல்லாத பெண்களை வெறும் முண்டமாக சித்தரிக்கும் மத நம்பிக்கை நமக்கு தேவையா..?

அதற்காக எல்லோரும் தாலியை அறுத்தெறியுங்கள் என சொல்லவில்லை. இச்சமூகத்தில் தாலி மீதான புனிதப்பிம்பம் மெல்ல மெல்ல குறையவேண்டும்.. எப்படி மேட்டுக்குடி மக்களிடம் 'மெட்டி' என்கிற வஸ்து மீதான ஆர்வம் தற்போது குறையத் தொடங்கியுள்ளதோ அதேப்போல தாலி மீதான புனிதப் பிம்பமும் இன்னும் ஐம்பது அல்லது நூறுவருடங்களில் உடைத்தெறியப்பட்டு, 'தாலி' என்பது கழுத்தில் அணியப்படும் ஒரு அணிகலன் என்று சொல்லும் நிலைமை கண்டிப்பாக வரும். ஒருவேளை  இன்று நடந்த தாலி அகற்றும் நிகழ்வு ஒரு வரலாற்று சம்பவமாக அப்போது பதிவு செய்யப்பட்டிருக்கலாம்...! 

இன்று தாலியை அகற்றிய தோழர்களை விபச்சாரிகள் என்று ஒரு இந்துத்வா தலைவர் சொல்கிறார். அதற்கு இணையப் போராளிகள் ஒத்தூதிக் கொண்டிருக்கிறார்கள். இதைவொரு விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வாக உங்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். அவர்கள் உங்கள் வீட்டு பெண்களின் தாலியை அகற்றவில்லை...!

இச்சமூகத்தில் அனைத்து மூடநம்பிக்கைகளும் கடும் போராட்டத்திற்குப் பின்புதான் களையப்பட்டன. இந்துக்களின் மனதில் சிலரால் புனிதப் பிம்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் தாலி என்கிற மூடநம்பிக்கையும் அவ்வாறு கலையப்படவேண்டுமெனில் எதிர்வினைகளை கண்டு அஞ்சாமல் சிலபல போராட்டங்களை செய்துதான் ஆகவேண்டும்.

Tuesday, 27 January 2015

ஐ VS திருநங்கைகள் சில விளக்கங்களும், கேபிள் சங்கருக்கு சில கேள்விகளும்...


அறச்சீற்றம்(!) தொடர்கிறது....
படத்தில் திருநங்கைகளை வக்கிரமாகக் காட்சிப்படுத்தியது தொடர்பாக கடந்த பதிவில் எழுதியிருந்தேன். பலருக்கு அதில் உடன்பாடு இல்லை போலும். இணையத்தில் திருநங்கைகளுக்கு ஆதரவாக வந்த பதிவுகளை விட அவர்களை விமர்சனம் செய்து வந்த பதிவுகள்தான் அதிகம்.

ஒரு பெண் பதிவர் எழுதிய பதிவைப் படித்தேன். நம் சமூகம் எவ்வளவு தட்டையான சிந்தனையமைப்பு உடையது என்பதை அவரது பதிவையும் அதற்கு ஆதரவாக வந்த சில கருத்துகளையும் படித்தபோது உணர முடிந்தது.

திரைப்படங்களில் பெண்களை கெட்டவர்களாக, கொடுமைக்காரியாக சித்தரிக்கும் சில படங்களை குறிப்பிட்டு அதற்கெல்லாம் பெண்களாகிய நாங்கள் போராட்டம் நடத்தினோமா என்கிற ரீதியில் வினா எழுப்பியிருந்தார். அதேப்போல் சினிமாவில் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் போராட்டம் நடத்தினால் சினிமாவே எடுக்க முடியாது என்கிற ரீதியிலும் சிலர் கருத்துகளை சொல்லியிருந்தார்கள்.

அவர்களின் சிந்தனையை தஞ்சாவூர் கல்வெட்டில்தான் செதுக்கி வைக்கவேண்டும்..!.

திருநங்கைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சினிமாவில் ஏதாவது ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ அல்லது அந்த அமைப்பின் தலைவர்களையோ, பகடி செய்தோ அல்லது விமர்சித்தோ காட்சிகள் வந்தாலோ அல்லது வரலாம் என்கிற ஊகம் இருந்தாலோ ஒரு பெருங்கூட்டமே திரண்டு அப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. வழக்கு போட்டு தடை வாங்குகிறது. இறுதியில் அந்தப் படைப்பாளி பணிந்து போகிறார்.

ஆனால் திருநங்கைகள் பாவப்பட்டவர்கள். ஒன்றிணைந்து போராடிப் பார்த்தார்கள். யாரும் கண்டுகொள்ள வில்லை. குறைந்த பட்சம் இயக்குனர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்கள் . மிரட்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகினர். கடைசியில் எந்த நீதியும் கிடைக்காமல் பின்வாங்கிவிட்டனர். பாவம், அவர்களுக்கு படம் வெளியாகும் முன்பே வழக்குப் போட்டு தடை வாங்கத் தெரியவில்லை. படத்தை எங்களுக்கு போட்டுக் காட்டிய பிறகே வெளியிடவேண்டும் என்று சாதூர்யமாக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் நடுத்தெருவுக்கு இழுக்கத் தெரியவில்லை.

முன்பெல்லாம்  திருநங்கைகளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கும். அதைவிடவும்  கடுங்கோபம் வரும்.ஆணாகப்பிறந்த இவர்கள் ஏன் பெண்ணாக மாறவேண்டும்?.ஆணாகவே இருந்து தொலையவேண்டியது தானே. செக்ஸில் ஈடுபாடு இல்லையென்றால் திருமணம் செய்யாமலே இருந்துவிட வேண்டியது தானே. எதற்கு குறியறுத்து இச்சமூகத்தில் தங்களை மூன்றாம் பாலினித்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்?

பிறகுதான் தெளிந்தேன். அது படைத்தவனின் திருவிளையாடல் என்று... அவர்களின் தலைவிதி கருவிலே எழுதப்படுகிறது என்று... குரோமோசோம்களின் குறைபாடுகளால் கரு உருவாகும்போதே மூன்றாம் பாலினம் என்கிற முகவரியை கொடுத்துவிடுகிறான் பிரம்மன். ஆனால் அது வெளிப்படுவது ஏனோ பருவ வயதில் தான்.
சொல்லப்போனால் திருநங்கைகளும் ஒரு மாற்றுத் திறனாளிதான். பிறக்கும் போதே மூளை வளர்ச்சி இல்லாமலோ அல்லது உறுப்புகள் ஊனமாகவோ பிறக்கும் குழந்தைகள் மீது நமக்கு பரிதாபம் வருகிறது. சமூகத்தில் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டால் நமக்கு கோபம் வருகிறது. அதற்கு, நாளை நமக்கும் இதே போல குழந்தை பிறக்கலாம் என்கிற அச்ச உணர்வு கூட காரணமாக இருக்கலாம். அதே போல் இப்படியும் நடக்கலாம். நாளை நமக்குப் பிறக்கும் குழந்தை ஒரு திருநங்கையாகக் கூட  இருக்க வாய்ப்பிருக்கிறது. உடல் ஊனமாகப் பிறப்பதற்கான நிகழ்தகவு 1/100 என்றால், திருநங்கையாகப் பிறப்பதற்கு நிகழ்தகவு 1/1000... அவ்வளவுதான் வித்தியாசம்.

திரைப்படத்தில் பெண்கள் மட்டும் இழிவுபடுத்தப் படவில்லையா என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரம்யா கிருஷ்ணனோ அல்லது வடிவுக்கரசியோ வில்லியாக நடிக்கும் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவரும்போது, நாம் பார்க்கும் பெண்களையெல்லாம் அந்த கேரக்டர்களின் நகலாக நினைத்து பார்ப்பதில்லை.ஏன்,பெண்கள் வில்லியாக நடிக்கும் காட்சிகளை பெண்களே ரசிக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் 'ஐ' போன்ற ஒரு படத்தை ஓர் திருநங்கை பார்த்துவிட்டு உடன்பார்த்தவர்களின் நக்கல், நையாண்டிகளுக்கு ஆளாகாமல் குறைந்த பட்சம் அவர்களின் குரூர பார்வையில் சிக்காமல் தப்பித்து வர முடியுமா...? ஒரு பெண்ணை தவறானவளாகக் காண்பித்தால் அந்தப் பாத்திரத்தை மட்டுமே தவறாக நினைக்கும் நம் சிந்தனை, ஒரு திருநங்கையை தவறாக காட்சிப்படுத்தினால் அச்சமூகத்தையே கேலியாகப் பார்க்கும் அளவுக்கு செல்கிறதே அது ஏன்..?

கட்டுமஸ்தான உடலமைப்பு உடைய ஒருவன், உடல் ஊனமுற்ற ஒருவனைப் பார்த்து 'ஏய்..நொண்டி' என கூப்பிடுகிறான். அப்போது அந்த மாற்றுத்திறனாளி கடும் சினத்துடன் 'என்னை ஏன் நொண்டி என கூப்பிட்டாய்' என்று சண்டைக்கு வருகிறான். அதற்கு அவன் ' என்னைக் கூடத்தான் பாடிபில்டர் எனக் கூப்பிடுகிறார்கள்.. அதற்காக நான் கோபப்பட்டேனா..' என பதிலளிக்கிறார். உங்கள் தர்க்கப்படி அவன் சொல்வது சரிதானே.  ஆனால் நம் மனது அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே ஏன்..?.

மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த நம்மை பகடி செய்வதையும், பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறந்தவர்களை பகடி செய்வதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் நம் தட்டையான சிந்தனையை மாற்றத்தான் திருநங்கைகள் தங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப் படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். அவர்களின் போராட்டம் குறைந்த பட்சம் அச்சமூகத்தின் மீது நாம் கொண்டிருந்த தவறான கண்ணோட்டத்தையாவது மாற்ற வேண்டும்..!

ஷங்கர் போன்ற பிரும்மாண்ட இயக்குனர்களின் படத்தில் நடிப்பது என்னவோ ஓஜஸ் ரஜானி போன்றோருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் அவர் சார்ந்த சமூகம் கொதிப்படைந்து போராட்டம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது, வெகு இயல்பாக 'அப்படியெல்லாம் ஐ படத்தில் திருநங்கைகள் கொச்சைபடுத்தப் படவில்லை' என்று சொன்னதுதான் விக்ரம் உடலில் வைரஸ் செலுத்தியதை விடக் கொடுமையான விஷயம்.

<<<<<<<<<<<<<<<<<<<<------- &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ------->>>>>>>>>>>>>>>>>>

அன்புள்ள கேபிள் சங்கர் அவர்களே..
                                               
இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதும் என்னைப்போன்ற கத்துக் குட்டிகளின் மானசீக குருவும், எட்டுத் திக்கும் தகவல் திரட்டி, ராப்பகலா உருட்டி புரட்டி கஷ்டப்பட்டு பிளாக்ல பதிவு போட்டா நூறு ஹிட்ஸ் கூட தாண்டாத எங்களுக்கு, ஒரே நாளில் ஆயிரம் ஹிட்ஸ் வாங்குவது எப்படி என்கிற சூட்சமத்தை சொல்லிக் கொடுத்த ஆசானும், சினிமா விமர்சனம் எழுதுங்க..அதுவும் FDFS எழுதுங்க. ஒரே நாளில் பிரபலமாகி விடலாம் என்கிற பிளாக் சீக்ரட்டை பட்டவர்த்தனமாக போட்டுடைத்த பழம்பெரும் பதிவருமாகிய கேபிள் சங்கர் அவர்களே..

" சுப்புடுகள் எல்லாம் கச்சேரி செய்யலாமா..?" என்ற வினா உங்கள் மீது வீசப்பட்ட பொழுது, யதார்த்த சினிமாவை தமிழ்த் திரையுலக்கு அறிமுகப்படுத்திய மகேந்திரனே, இயக்குநர் ஆவதற்கு முன்னால் துக்ளக்கில் சினிமா விமர்சனம் எழுதியவர்தானே.. ஏன் இன்னொரு மகேந்திரனாக நீங்கள் இருக்கக் கூடாது என்கிற வினாவை நானே எழுப்பி விடை தேடிக்கொண்டேன்.

இப்படிப்பட்ட சூழலில்....  இணைய ஊடகத்திலிருந்து திரை ஊடகத்துக்கு பயணம் செய்யும் உங்களின் முதல் கலைப் படைப்பை உங்கள் ரசிகனாக முன்னிருக்கையில் குடும்பத்துடன் அமர்ந்து திரையில் காண ஆவலாக இருந்தேன். அதுமட்டுமல்ல.. அப்படைப்பை  எக்காரணம் கொண்டும் திருட்டு விசிடியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கக் கூடாது என்கிற கோட்பாட்டுடன் இருந்தேன். தயாரிப்பாளர் சிங்கப்பூர்வாசி என்பதாலும் உங்களுக்கும் சிங்கப்பூருக்கும் நீண்ட நெடிய வரலாற்று தொடர்பு இருப்பதாலும் கண்டிப்பாக தொட்டால் தொடரும் படம் சிங்கப்பூரில் வெளியாகும் என நம்பிக்கையோடு இருந்தேன்.

என் நம்பிக்கைக்கு மகுடம் வைத்தாற்போல்,சிங்கப்பூரின் பரபரப்பான தேக்கா மார்கெட்டில் முதன்முறையாக ஒரு சினிமா போஸ்டர் ஓட்டப்பட்டிருப்பதை கண்டேன். அது 'தொட்டால் தொடரும்'படத்தின் போஸ்டர். 

ஆனால் படம் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. பார்த்தால் திரையில்தான் என்ற வைராக்கியத்தில் இருப்பதால், இதற்காக 30 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்து பார்க்கக் கூடிய சூழலில் நான் இல்லை.மலேசியாவிலும் ரிலீஸ் ஆனதாக தெரியவில்லை. பாடாவதி படங்களை முதல்நாளே பார்க்கும் எனக்கு கேபிள்ஜியின் படத்தை பார்க்கவே முடியாதபடி ஆகிவிடுமோ என்கிற கவலை வாட்டுகிறது. தவிரவும், இந்த வார எனது 'கடமையை'  செய்ய முடியாமல் அறச்சீற்ற பதிவுகள் எழுதும் நிலைமைக்கு ஆளாகியுள்ளேன். இதற்கிடையில் இன்னும் சில நாட்களில் வழக்கமாக இணையத்தில் உங்களின் கலைப்படைப்பு வெளியாகலாம். அப்படிப்பட்ட சூழலில் என்ன முடிவு எடுப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது... என் குழப்பத்திற்கு என்னதான் முடிவு..?

இப்படிக்கு....

FDFS ஓவர்சீஸ் விமர்சன கம்பெனி..

Friday, 23 January 2015

'ஐ' திரைப்படம் திருநங்கைகளுக்கு எதிரானதா..?

(ஒரு முன் எச்சரிக்கை..:இந்தக் கட்டுரையில் 'சமூகம் ' என்கிற வார்த்தை ஆங்காங்கே வருவதால் அறச்சீற்றம் அடையாமல் அதைக் கடந்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.)


'ஐ' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும்தான் மந்தம். வெளிநாடுகளில் செம ரெஸ்பான்ஸ். ஐந்தாவது நாள் குடும்பத்துடன் சென்றேன். எனக்கு இரண்டாவது முறை. அம்மணியின் வற்புறுத்தல் வேறு. தவிரவும் எனது விமர்சனத்தில் ' விக்ரமின் உழைப்புக்காக இருமுறை பார்க்கலாம் ' என்று எழுதியிருந்தேன். எழுதிய நானே பார்க்காமல் போனால் எப்படி..? 'எனக்கு நானே தண்டனை'  திட்டத்தில் தியேட்டரில் இரண்டு முறை பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். 

ஆங்கிலப் படங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்தாலும், ஹவுஸ்புல்..!. ஆனால்.., படம் முடிந்து வீடு வரும் வரை கடும் அர்ச்சனை. ' ஒன்னுமே இல்லாத கதையை மூணு மணி நேரம் இழுத்து சோதிச்சிட்டாங்களே..' என்று அம்மணி புலம்பியதைக்கூட சட்டை செய்யவில்லை. ஆனால்  ' ஆம்பள இதுக்கு எவ்வளவோ பராவாயில்லை ' என்று சொன்தைத்தான் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை...!

போகட்டும்..சொல்ல வந்த விஷயம் வேறு.

'ஐ' படத்தில் திருநங்கை காதாபாத்திரம் மூலம் அச்சமூகத்தை கேவல
ப்படுத்தி விட்டார்கள் என்று மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கை சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தவாரம் புதுப்படம் எதுவும் இங்கே ரிலீஸ் ஆகாததால் வேறுவழியில்லாமல் இந்தப் பிரச்சனையைக் கொஞ்சம் கிளறி இந்தவார போஸ்டை தேத்திவிடலாம் என்று கம்பெனி முடிவு செய்திருக்கிறது.

இப்பிரச்சனையை முதலில் கிளப்பியது பேஸ்புக்கில் பலரால் அறியப்பட்ட 'லிவிங் ஸ்மைல் வித்யா' என்கிற திருநங்கை. அவருடைய பதிவில் இயக்குனர் ஷங்கரை கடுமையாக சாடிவிட்டு, ஐ படத்திற்கு விமர்சனம் எழுதியவர்களையும் குட்டு வைத்திருந்தார். 

"படத்திற்கு இணையத்தில் விமர்சனம் எழுதியவர்கள் எவரும் அதைக் கண்டிக்கவில்லை, ஒருவர் ' நயன்'தாரா கூட ஒரு வில்லன் என எழுதியிருந்தார் "என்று அவர் குறிப்பிட்டதைப் படித்த பொழுது எனக்கு 'சுருக்' கென்றது. அந்த ' நயன் 'தாரா என்கிற வார்த்தையை என் விமர்சனத்தில் பயன்படுத்தி இருந்தேன். ஒருவேளை என்னைத் தான் சொல்கிறாரோ என்கிற குற்ற உணர்வு என்னைக் குடைந்தது. நானே ஏதோ அமெச்சூர்தனமாக சினிமாப் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமில்லாமல், எண்ணத்தில் தோன்றியதைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். அது எப்படி இவர் கண்ணில் பட்டிருக்கும். உண்மையிலேயே அவர் குறிப்பிட்டது என்னைத்தான் என்றால் அப்படி நான் எழுதியதற்காக என்னை 'மன்னிச்சு.......'

ஏனெனில் வலி, வேதனை எல்லாம் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான். வெளியிலிருந்து ரசிக்கும் நமக்கு அது வெறும் நகைச்சுவை. நானும் அப்படித்தான் ரசித்தேன். ' நயன் 'தாரா என்கிற வர்ணனை அப்படத்தில் சந்தானத்தின் திருவாயால் உதிர்க்கப்பட்டது. அதை அப்படியே எனது விமர்சனத்தில் பயன்படுத்திவிட்டேன். என்ன செய்வது FDFS விமர்சனம் எழுதும்பொழுது இதுபோன்ற சவால்(!)களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அவர்கள் பொதுவாக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திருநங்கை சமூகத்தை கீழ்த்தரமாக சித்தரித்து வருகிறார்கள், உதாரணமாக பொட்டை என்கிற வார்த்தை..!

எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. பொட்டை என்கிற வார்த்தை திருநங்கைகளையா குறிக்கிறது...? கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறந்தால் ' பொட்டப் புள்ள பொறந்திருக்கு' என்பார்கள். பொட்டை என்பது பெண் சமூகத்தை குறிக்கும் ஓர் வட்டாரச்சொல். 'வாடிப் பொட்டப் புள்ள வெளியே..' என்று வடிவேல் பாடுவது திருநங்கையைப் பார்த்து அல்ல. கோவை சரளா என்கிற பெண்ணைப் பார்த்து.

ஆண் இனம் வீரம் நிறைந்தது போலவும், பெண் இனம் பயந்த சுபாவம் உடையது போலவும் ஏற்கனவே பொதுப்புத்தியில் நமது முன்னோர்கள் பதியவைத்து சென்றிருக்கிறார்கள். அதற்கு மாறாக பயந்த சுபாவம் கொண்ட ஆண் யாராவது இருந்தால் அவனை ' பொட்டை ' என்று கிராமப் புறங்களில் பகடி செய்வார்கள். சண்டைக்கு பயந்த ஒருவனை, ' பொட்ட போல பயப்படுறாண்டா...' என்று நண்பர்கள் கேலி பேசுவார்கள். இந்த இடத்தில் பொட்டை என்கிற வார்த்தை திருநங்கையைக் குறிக்க சொல்லவில்லை. அவர்களைக் குறிக்க நிறைய வார்த்தைகள் கிராமப்புறங்களில் இருக்கிறது.

ஆதலால், பெண் தன்மையுள்ள ஆண் என்பதற்கும், பயந்த சுபாவம் உடைய ஆண் என்பதற்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது. முன்னால் சொல்லப்பட்டது திருநங்கை. பின்னால் சொன்னது 'பொட்டை'.  தவிரவும், திருநங்கைகள் பயந்த சுபாவம் உடையவர்களா என்ன..? பிறகு எதற்கு பொட்டை என்கிற வார்த்தைக்கு 'பேட்டன்ட் ரைட்' எல்லாம் எடுக்கிறார்கள்...? கிட்டத்தட்ட இதே அர்த்தத்தில் சொங்கி, சோப்ளாங்கி ,சப்பை போன்ற வார்த்தைகள் கூட கிராமப் புறங்களில் பயன்படுத்தப் படுகிறது. இதற்கும் ஒட்டுமொத்த 'ரைட்ஸ்' எடுப்பார்கள் போலும்...

மற்றொரு குற்றச்சாட்டு, ஓரினச் சேர்க்கையாளர்களை தவறாகக் காண்பித்து நக்கல் செய்கிறார்கள்... அதற்கு வேட்டையாடு விளையாடு படத்தை இழுக்கிறார்கள். தெரியாமத்தான் கேட்கிறேன். ஒரு பால் ஈர்ப்பினருக்கும் திருநங்கைகளுக்கும் என்ன சம்மந்தம்..?.

பள்ளிப் பருவத்தில் தவறான நட்புகளினால் ஓரினச்சேர்க்கையில் சிலர் ஈடுபடுவதுண்டு. பிறகு வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் பெரும்பான்மையானவர்கள் அதை விட்டுவிடுவார்கள். அப்போதும் விடமுடியாத வர்கள் திருமணத்திற்குப் பின் தகுந்த கவுன்சலிங் மூலம் ஓரினச்சேர்க்கை பழக்கத்திலிருந்து விடுபட்டு தாம்பத்திய வாழ்க்கைக்கு செல்வதாக சேலம் சித்த வைத்திய டாக்டர் டிவியில் தோன்றி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் என்ன சம்மந்தம்..? திருநங்கைகள் எல்லோரும் ஓரினச்சேர்கையாளர்கள் கிடையாது. ஓரினச் சேர்க்கையாளர்கள் எல்லோரும் திருநங்கைகளும் கிடையாது.


அடுத்து ஐ படத்திற்கு வருவோம்.

இந்தப் படம் தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நான் உடன்படுகிறேன். காரணம் மிகத் தெளிவானது.

படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள். அதில் ஒருவராக திருநங்கையை இயக்குனர் தேர்ந்தெடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் மற்ற நான்கு பேரும் எப்படி வில்லனாகிப் போனார்கள் என்பதற்கு தர்க்க ரீதியான காரணங்களை  இயக்குனர் சொல்லியிருக்கிறார்.அதில் ஒரு நியாயமிருப்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் மேக்கப் ஆர்டிஸ்டாக வரும் ஒரு திருநங்கை, வில்லனாக மாறியதற்கு இயக்குனர் வைத்திருக்கும் காரணம் 'காம வெறி' . நன்றாகக் கவனியுங்கள் காதல் வெறியல்ல.. காம வெறி. அதற்கான குறியீடுகளை அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்தே வைத்திருப்பார் இயக்குனர். " கொய்ட் இன்டரஸ்டிங் " என்று ஒஜாஸ் ரஜானி விக்ரமை பார்க்கும் முதல் பார்வையிலேயே அவ்வளவு காமத்தைப் பதிவு செய்திருப்பார். அவர் விக்ரமோடு நெருங்கும் அத்தனைக் காட்சிகளிலும் காமம்தான் துருத்திக்கொண்டு இருக்குமே தவிர, துளி கூட காதல் இருக்காது.

விக்ரமைத் தடவுவது, முத்தமிடுவது , வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைப்பது என்று ஆபாசமாகவே காட்சிப்படுத்திய இயக்குனர் ஒரு காட்சியில் வக்கிரத்தின் உச்சிக்கு சென்றிருப்பார். விக்ரம் மீது எமி வைத்திருந்த காதல் உண்மையானதல்ல, தான் வைத்திருக்கும் (காம)காதலே உண்மையானது என்பதை ஒஜாஸ் சொல்லும் போது, தட்டில் இருக்கும் 'ஹாட் டாக்' கை எடுத்து அவர் லாவகமாக கடிப்பது போன்ற காட்சியை வைத்திருப்பார். எவ்வளவு வக்கிரமான சிந்தனை இயக்குனர் ஷங்கருக்கு. ஏன் திருநங்கைகளின் மனதில் காதலே அரும்பாதா..?

இவ்வளவும் செய்துவிட்டு கடைசியில், " என் லவ்வ இன்சல்ட் பண்ணினியில்ல.. என் ட்ரூ லவ் உனக்கு அருவருப்பா இருந்துச்சு இல்ல" என அவர் சொல்வது போல டயலாக் வைத்திருப்பார்.

இதன்மூலம், விக்ரம் போன்ற புஜபல பராக்கிரம இளைஞன் எப்படி ஒரு திருநங்கையுடன் உடலுறவில் ஈடுபடமுடியும் என்கிற கேள்வி, படம் பார்க்கும் சாமானிய ரசிகர்களின் மனதில் எழுந்து, அவர் மீது, குறிப்பாக அவர் சார்ந்த சமூகத்தின் மீது வெறுப்பு வரக் காரணமாக இருக்காதா...?.  ஏன் ஆரம்பத்தில் இயல்பாகப் பழகி பிறகு விக்ரம் மீது காதல்(காமமல்ல) கொள்வது போல காட்சியமைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா..? இங்கே இயக்குனரின் நோக்கம் ஒரு திருநங்கையின் காதலைப் புனிதப் படுத்துவதல்ல. கொச்சைப் படுத்துவது...!  வக்கிரமாகக் காண்பிப்பது..!.

ஷங்கரின் படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தால் ஒரு உண்மைப் புரியும். ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை உணராதவர் ஷங்கர். கவர்ச்சியான காட்சி என்று வக்கிரத்தைத் திணிப்பவர். ஜென்டில்மேன் படத்தில் சுபஸ்ரீ முறுக்கு பிழியும் போது கவுண்டருக்கு ஒரு டபுள் மீனிங் டயலாக் வைத்திருப்பார். படத்தின் மற்ற பகுதிகள் சிறப்பாக அமைந்ததால் இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. காதலன் படத்தில் நக்மா தடுக்கி விழுவது போல ஒரு சீன். அவரை பிரபுதேவா தாங்கிப் பிடிக்க வேண்டும். மலையாளப் பிட்டுப் படத்தில் கூட இப்படி ஒரு கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இவற்றின் ஒட்டுமொத்த உச்சமாகத்தான் பாய்ஸ் படம் அமைந்தது. அதில் சூடுபட்டவர் திரும்பவும் காமெடி என்ற பெயரில் வக்கிரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இதில் சில அரவேக்காடுகள் கேள்வி எழுப்புகிறது. இதற்கு முன் பிரகாஷ்ராஜ், லிவிங்க்ஸ்டன் போன்றவர்கள் திருநங்கையாக நடிக்க வில்லையா..? அப்போது வராத எதிர்ப்பு இப்போது மட்டும் ஏன் வருகிறது. அட லூசுகளா... பிரகாஷ்ராஜும்,லிவிங்க்ஸ்டனும் என்ன வேடம் போட்டு நடித்தாலும் அதில் அந்த நடிகர்கள்தான் தெரிவார்களே தவிர அவர்களின் கேரக்டர்கள் தெரியாது.இன்னும் புரியும்படி சொல்கிறேன்.அதே பிரகாஷ்ராஜ் ஒரு பெண் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க சிகரெட், தண்ணி அடிக்கிறார் என வைத்துக் கொள்வோம். இன்னொரு படத்தில் உண்மையான கதாநாயகியே படம் முழுக்க அவர் செய்ததையே செய்கிறார் என வைத்துக் கொண்டால், இந்தச் சமூகம் எந்தப் படத்திற்கு எதிராக பொங்கும்...? ஒரு ஆணை திருநங்கையாக நடிக்க வைப்பதற்கும், ஒரு திருநங்கையையே  நடிக்க வைத்து அவர்கள் மூலமாக அச்சமூகத்தைக் கேவலப் படுத்துவதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.


ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் பிரதிநிதியல்ல. சமூகத்தில் ஒருவன். அதே போல் கதாநாயகி என்பவள் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் பிரதிநிதியல்ல. அவளும் இச்சமூகத்தில் ஒருத்தி. இவர்களைக் கொச்சைப் படுத்தினால், பாதிப்பு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு மட்டும்தானே ஒழிய அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கு அல்ல.. ஆனால் ஒடுக்கப்பட்ட , ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, இனத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து சினிமா போன்ற ஒரு பவர்புல் மீடியத்தில் வைத்து வக்கிரமாக காட்சிப்படுத்தினால் அது அச்சமூகத்தையே கொச்சைப் படுத்தியது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடும் என்கிற அடிப்படை உண்மை கூடவா இத்தனை வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கருக்குத் தெரியாது..?

ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தினரை சினிமாவில் கொச்சைப்படுத்திவிட்டு, நாங்கள் கவுண்டர்களைக் கூடத்தான் கலாய்த்திருக்கிறோம் என்று வியாக்கியானம் பேசமுடியுமா..?  அதை எவ்வளவு சென்சிடிவாகப் பார்க்கிறோமோ அதே அளவு திருநங்கைகளைக் காட்சிப்படுத்தும் போதும் கவனம் வேண்டாமா..?

இன்னும் ஒருசிலர் ரயிலில் செல்லும்போது எங்களை தொந்தரவு செய்தார்கள், மிரட்டி பணம் வாங்கினார்கள். அதனால் அப்படி காண்பித்ததில் தவறு இல்லை என்கிறார்கள். இது ஒன்றும் திருநங்கைகளைப் பற்றிய ஆவணப் படம் கிடையாது. அவர்களின் அகம்,புறம், பிளஸ் ,மைனஸ் எல்லாவற்றையும் சொல்வதற்கு. ஒட்டுமொத்த தமிழ் உலகமே பார்க்கும் கமர்சியல் படம். இந்தப் படத்தின் மூலம் அச்சமூகத்தின் மீது தவறான ஒரு அபிப்ராயம் உருவாகுகிறது என்றால் அதற்கான விலையை படைப்பாளி என்கிற வகையில் இயக்குனர் ஷங்கர் கொடுத்தே ஆகவேண்டும்.அதற்கு திருநங்கைகள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.  


Monday, 1 December 2014

சார்லஸ் டார்வினுக்கே சவால்விடும் தமிழக மங்குனிகள் (சும்மா அடிச்சு விடுவோம்..)

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ சயன்ஸ் வாத்தியார் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பாடம் நடத்திட்டு இருந்தாரு. குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதற்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

உடனே நான் எழுந்திருச்சி, 'குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதா சொல்றீங்களே சார்.. இப்போது ஏன் எந்த குரங்கிலிருந்தும் மனிதன் தோன்றவில்லை' என்று கேட்டேன். உடனே அடி பின்னி எடுத்திருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க.அதுதான் இல்லை. இதுபோல கிறுக்குத்தனமா கேள்வி கேட்டாலும் வாத்தியார் பையன் என்பதால் மன்னிச்சு விட்டுடுவாங்க.

" அது வந்து... அப்படியெல்லாம் யார் சொன்னது...நம்ம ஊர்ல இல்ல.. ஆனா ஆப்ரிக்கானு ஒரு நாடு இருக்கு. அங்க எல்லாம் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிகிட்டுதான் இருக்கான்.." என்று அளந்து விட்டாரு. அப்போ எல்லாம் கேரளாவே வெளிநாடுனு நம்பிகிட்டு இருந்த நேரம். நானும் 'அப்படியா சார்' என்று கேட்டுவிட்டு அமர்ந்துவிட்டேன்.

இப்போ அந்த வாத்தியாரை நேரில் பார்த்தேனா, 'சார்.. ஆறாப்பு படிக்கிறப்போ  குரங்கிலிருந்து ஏன் மனிதன் தோன்றவில்லை என கேள்வி கேட்டேன் தெரியுமா சார். அதுக்கான பதில் கிடைச்சிட்டு சார். வர்ற வழியில உங்க பையனை பார்த்தேன். என் சந்தேகம் தீர்ந்திடுச்சி' என சொல்லலாம்னு இருக்கேன்.

பிளஸ் 2 படிக்கும்போது விலங்கியல் ஆசிரியர் சரியான விளக்கம் கொடுத்தாரு. சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான் உட்பட அனைத்து குரங்கு வகைகளுக்கும் மனித இனத்திற்கும் சேர்த்து ஒரே மூதாதையர்தான். அந்த மூதாதையரிடமிருந்து வெவ்வேறு கிளைகளாக பிரிந்ததுதான் இவைகள். அதனால் பல நூற்றாண்டுகளு க்கு பிறகு வேண்டுமானால் தற்போதைய குரங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு அமைப்புடைய குரங்கு உருவாகுமே தவிர மனிதன் உருவாக மாட்டான் என்றார்.

அன்று அவர் சொன்ன விஷயத்தை முகநூலில் பாபு என்கிற நண்பர் படம் வரைந்து எளிமையாக விளக்கியிருந்தார்.
 
அப்படியானால் மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா..? அப்போது அடைந்த பரிணாம மாற்றங்கள் தற்போது ஏன் நிகழவில்லை. ஆதலால்,குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆதாம் ஏவாள் கோஷ்டி ஓன்று சண்டைக்கு வரும். இது எப்படி இருக்கிறது என்றால் உலகம் ஒரு உருண்டை. அதன் மேல்பரப்பில்தான் நாம் இருக்கிறோம் என்று முதலில் கேள்விப்பட்டபோது, "ஹை .. அப்படினா நாம வழுக்கி விழுந்துவிட மாட்டோமா.." என்று கேட்க தோன்றியது போல் இருக்கிறது.

பரிணாம மாற்றம் என்பது ஒரே இரவில் நடப்பது அல்ல. ஆயிரம் வருடங்கள் ஆகலாம் . பல மில்லியன் வருடங்கள் கூட ஆகலாம்.சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப படிப்படியாக மாற்றங்கள் நிகழும். ஒரு உயிரினத்தின் பண்புகள் தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலமாக கடத்திச்செல்லும் போது தேவை கருதியோ, சூழல் கருதியோ அல்லது மரபணுப் பிழைகள் மூலமாகவோ காலப்போக்கில் மாறுதல் ஏற்படும்.

பொதுவாக பரிணாம மாற்றம் என்பது இயற்கைத் தெரிவமைப்பு (Natural Selection), தகவமைவு (Adaptation) மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றம்(Mutation), மரபணுப் பிறழ்வு நகர்வு (Genetic Drift) மூலமாகவும் அமைவதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்து இங்குள்ள சில விலங்கினங் களை ராக்கெட் மூலம் அங்கே விட்டுவிட்டு வந்தால் சில நூறு வருடங்களில் வேறொரு வடிவத்தில் பரிணாம மாற்றம் அடையலாம். ஆனால் மனித இனத்துக்கு சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் மனிதன் எப்போதும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான்.மாறாக,அந்தச் சுற்றுச்சூழலையே தனக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்வான்.

அது கிடக்கட்டும். உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிற டார்வினின் பரிணாமக் கொள்கை தமிழ் நாட்டில் மட்டும் ரிவேர்சாகிப் போனதாக பேசிக்கொள்கிறார்களே.. அது உண்மைதானா...?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tribute to Maestro Ilayaraja

இப்படி ஒரு தலைப்பில் சென்னையில் உள்ள Muzik Lounge School Of Audio Technology என்ற இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் செய்து YOUTUBE -ல் பதிவேற்றியுள்ளனர். முத்துமணி மாலை..., கண்ணன் வந்து பாடுகிறான்.. என்று இரு பாடல்களைத்தான் கேட்டேன். கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூறு தடவையாவது கேட்டிருப்பேன் ..Wow..! Really it was mesmerising...! இசை, காலம் கடந்து நிற்கும் என்பார்கள். ராகதேவன் இளையராஜா பல யுகங்கள் கடந்து நிற்பார்.





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா....

"எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..."

இந்த இரு பாடல்களையும் கேட்டிருக்கிறீர்களா என எழுதினால் அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து வந்து உதைத்துவிட்டு போவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டுமே ராகதேவனின் மாஸ்டர் பீஸ். 

ஒன்று வாலி மற்றொன்று பஞ்சு அருணாசலம் எழுதியது என நினைக்கிறேன். இரண்டுமே மெலடிகளின் உச்சம். நான் இங்கே சொல்ல வருவது இசையைப் பற்றியல்ல. பாடல் வரிகளைப் பற்றியது.

இந்த வரிகளுக்கு இசையோடு சேர்ந்து அழகு சேர்ப்பது எந்தன் என்கிற வார்த்தை. எந்தன் என்றால் என்ன..? 

'எனது'.. 'என்னுடைய' என்று அர்த்தமா..? 

அதுதான் இல்லை. 'எந்தன்' என்ற வார்த்தையே தமிழில் கிடையாது என்கிறார்கள் தெரியுமா..? எனக்கும் தெரியாது. சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். அது எந்தன் கிடையாது. என்றன் என்பதே சரியான வார்த்தை.  

என் + தன் = என்றன்.
உன் + தன் = உன்றன்.  

"என்றன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா...." என்று பாடினால் அவ்வளவு மென்மையாக இருக்காது அல்லவா.. அதனால் என்றன் என்பதை எந்தன் என்று மாற்றிவிட்டார்கள் போலும்.  

காலங்காலமாக தமிழ் சினிமாவில் நமது மொழியை வளர்க்க(!) பாடலாசியர்கள் செய்துவரும் தமிழ்த் தொண்டுக்கு ஒரு சிறிய உதாரணம் து.  உடனே அதற்குக் காரணம் இளையராஜாதான்.  அவர்தான் பாடலாசிரியரை மெட்டுக்கு தகுந்த மாதிரி வார்த்தையை மாற்றச்சொல்லியிருக்கிறார் என்று பேஸ்புக் பேக் ஐடி மாதிரி திடீர் அறச்சீற்றம் அடைய வேண்டாம்.

 "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.." என்று எம்.எஸ்.வி இசையில் வாலியும்,   "என் வாழ்வில் நீ வந்தது விதியானால்.. நீ எந்தன் உயிர் அன்றோ...!" என்று கண்ணதாசனும்,'எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ..'என்று  T.ராஜேந்தரும்,  " நீ தானே எந்தன் பொன்வசந்தம்......" என்று வைரமுத்துவும் ஏற்கனவே எழுதிவிட்டு போயிருக்கிறார்கள். 

சரி..அதுக்கு இப்போ என்னனு கேட்கிறீங்களா.. ஒன்னுமில்ல.. ஆனா ஒரு விஷயம்.

" என்ற வீட்டு பொண்ணு உன்ற வீட்டு மருமவளா வர கொடுத்து வச்சிருக்கனும்ங்க...." என்று கோயம்பத்தூர் காரங்க பேசும் பாசையை இனி யாரும் கிண்டல் பண்ணாதீங்க.

" என்றன் வீட்டு பொண்ணு உன்றன் வீட்டு மருமவளா வர கொடுத்து
வச்சிருக்கனும்ங்க...." என்று சுத்தமான தமிழில்தான் அவர்கள் பேசுகிறார்கள்.




Monday, 17 November 2014

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா தலித் சமூகத்தினர்...?


சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் புரட்சி கார்டூனிஸ்ட் என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டு இணைய ரவுடியாக வலம்வரும் கார்டூனிஸ்ட் பாலா என்பவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலைஞரின் காலைப் பிடித்துத் தொங்குவது போல கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார்...

இங்கு 'இணைய ரவுடி' என்கிற பதத்தை எதற்காக பயன்படுத்தியிருக்கிறேன் என்பது  அவரின் பேஸ்புக் டைம்லைனோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  பேஸ்புக் உள்ளிட்ட இணைய சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களை நக்கடித்து நிறைய நிலைத்தகவல்கள், போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அது இணையம் உருவாக்கிக் கொடுத்திருக்கும் கட்டற்ற எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு.  

வெளிநாட்டில் இருந்துகொண்டு தன் சுய விவரங்கள் எதையும் வெளிப்படுத்தாத இணையப் போராளிகள்  இதில் கைத்தேர்ந்தவர்கள். இந்திய அரசியல் தலைவர்களை 'மிக மிக நாகரிகமான' முறையில் அவர்கள் விமர்சிக்கும் முறை, எதையும் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லும் நம்மையே சில நேரங்களில் சூடேற்றிவிடும். அவர்களுக்கென்று தனி கூட்டமே இருக்கும். " நெத்தியடி... அருமை நண்பரே... எவ்வளவு கழுவி ஊத்தினாலும் அவங்களுக்கு புத்தி வராது தலைவா ...." இது மாதிரி கமெண்டுகள் பொங்கி வழியும். சரி நம் தரப்பு நியாயங்களை சொல்லலாம் என்று சில நாகரிகமான எதிர்வினைகளை மேற்கொண்டால் அவ்வளவுதான். ஏழு தலைமுறையை இழுத்து திட்டுவார்கள். அந்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்து கொள்ளும். அதையும் சமாளித்துத் தொடர்ந்தால் உடனே நம்மை பிளாக் செய்து விடுவார்கள். எதிர்கருத்துகளை ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ளத் தயங்கும் அவ்வகையான இணையப் போராளிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை இந்த கார்டூனிஸ்ட் பாலா .

தமிழ் பேஸ்புக்கை பொறுத்த வரையில் அதிகம் பேரை பிளாக் செய்தவர்களில் முதலில் இருப்பவர் இந்த பாலாவாகத்தான் இருக்கும். பிளாக் செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நியாயமான எதிர்கருத்துகளை நாகரிகமான முறையில் மேற்கொண்டவர்கள். பிளாக் செய்யப்பட பிறகு " இதைத்தான் பாலாவிடம் கேட்டேன்.. உடனே என்னை பிளாக் செய்துவிட்டார்.." என்று பலர் நிலைத்தகவல் பதிந்ததை ஆரம்பத்திலிருந்து பேஸ்புக்கை கவனித்து வருபவர்கள் உணரமுடியும். அவர் பணிபுரியும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் அந்த பிளாக் லிஸ்டில் உள்ளடக்கம் என்பது பாலாவின் நேர்மைக்கு மற்றொரு சான்று.

ஊடக செய்தி வடிவங்களில் கார்ட்டூன் மிகப் பலம் வாய்ந்தது. நூறு பேர் சேர்ந்து உரக்கச்சொல்லி புரியவைக்கும் ஓர் செய்தியை ஒரே ஒரு கார்ட்டூன் தெளிவாகச் சொல்லிவிடும். அதன் பலமே இவரை இணைய ரவுடியாக வளம் வர செய்திருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு என்று ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. அதை தனக்கான எல்லையாக அவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, என் எல்லையை யாரும் நிர்ணயிக்க முடியாது என்கிற திமிர்த்தனத்தில் நாகரிகத்தின் எல்லையை கடந்துவிடுபவர்களைத்தான் இணைய ரவுடி என குறிப்பிட்டுள்ளேன்.

சரி விசயத்திற்கு வருவோம்.

திருமாவை கலைஞரின் காலைப்பிடித்துத் தொங்குவது போல் கார்ட்டூன் போட்டு கேவலப் படுத்துகிறார் இந்த பாலா. உடனே அவர் நட்பில் இருக்கும் சிலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். அதற்கெல்லாம் மதிப்பளிப்பவாரா இந்த பாலா..? பிறகு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொறுப்பில் இருக்கும், பேஸ்புக்கிலும் ஊடகங்களிலும் இயங்கி வரும் ஆளூர் ஷானவாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த கார்ட்டூனை நீக்கும்படி கேட்கிறார். இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகியிருக்கும் பாலா இதெற்கெல்லாம் செவி சாய்ப்பவரா என்ன .? உடனே அவர் டைம் லைனில் ஆளூர் ஷானவாஸ்-சை தன் வழக்கமான நக்கல் பாணியில் கண்டித்து ஒரு நிலைத்தகவல் பதிகிறார். அதனைத் தொடர்ந்து கண்டனங்களும் வசவுகளும் அவர் டைம்லைனில் வரிசை கட்டுகிறது.



அதன் பிறகுதான் அவருள்ளே ஒளிந்திருக்கும் சாதிப்பூனை எட்டிப் பார்க்கிறது. "தலித் என்றால் விமர்சனம் செய்யக்கூடாதா..தலித்தை விமர்சனம் செய்தால் மட்டும் இவர்களுக்கு எதற்கு கோபம் வருகிறது...  தலித் கேடயத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இவர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கப்படாதா .." என்று வரிசையாக நிலைத்தகவல்கள் பதிந்து ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான தன் வக்கிர கணைகளை வீசிக்கொண்டிருக்கிறார்.

அய்யா இணைய ரவுடியே... தலித் மக்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று யார் சொன்னது...?  தலித் சமூகத்தினர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா..? அல்லது எதிர்வினையாற்றுபவர்கள் யாராவது ஒருவர், ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று கேட்டார்களா..? அப்படி இல்லாதபோது தலித் தலித் என்று வரிக்கு வரி எழுதி எதற்காக அச்சமூகத்தின் வெந்த புண்களில் வேல் பாய்ச்ச வேண்டும்..?

உங்கள் வழிக்கே வருகிறேன்.  ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் ஒரு தலித் தான். தலைவர் கூட ராசா தலித் என்பதால் தான் அவர்மீது வழக்கு போடுகிறார்கள் என்று அறிக்கைவிட்டு பின்பு வாங்கிக் கட்டிக்கொண்டது நாடே அறியும். அப்படிப்பட்ட ராசாவுக்கு எதிராக இணையத்தில் எவ்வளவு கேவலமான விமர்சனங்கள் வந்தன..!. அருவருக்கத்தக்க போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் வந்தன...! ஏன் நீங்களே எவ்வளவு நக்கலடித்து கார்ட்டூன்கள் வரைந்து கலைஞர் எதிர்ப்பாளர்களின் லைக்கை லம்பாக அள்ளினீர்கள். அப்போது எவராவது வந்து ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று உங்களுடன் வாதம் செய்தார்கள்..?

இதே திருமாவளவன் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் இணையத்தில் வரவில்லையா..? கலைஞரின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைக்குலுக்கிவிட்டு பிறகு தமிழ்நாடு திரும்பியவுடன் ராஜபக்சேவை எதிர்த்து அறிக்கை விட்டபோது இணையத்தில் திருமாவளவனை துவைத்து எடுக்கவில்லையா...? அப்போதெல்லாம் ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வரிந்துக் கட்டிக்கொண்டு வந்தார்களா...?

அதற்கெல்லாம் வராத எதிர்வினைகள் இந்தக் கார்ட்டூனுக்கு வருகிறது என்றால், அச்சமூகத்தின் வலியை புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நீயெல்லாம் என்னய்யா பிரபல கார்டூனிஸ்ட்.?.

அவர்கள் எதிர்வினையாற்றிய விதம் தவறுதான். ஆனால் அவர்கள் கோபத்தின் பின்னால் உள்ள வலியைப் புரிந்துகொள்ளாத உம்மைப் போன்றவர்கள் சமூகக் கருத்தைப் பரப்புகிறேன் என கிளம்புவது வேடிக்கையாக இல்லையா..? குறைந்த பட்சம், நான் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்று ஒரு விளக்கப் பதிவாவது உன்னால் போடமுடிகிறதா...?

தலித்தையோ அல்லது சிறுபார்மையினரையோ விமர்சிக்கும் முன்,கொஞ்சம் சென்சிடிவான விசயமாச்சே.. அரசியல் ரீதியான விமர்சனமாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதை உணராத நீயெல்லாம் என்னய்யா ஜெர்னலிஸ்ட்..?

ஒரு தலைமுறைக்கு முன்பு விழிப்புணர்வும் படிப்பறிவும் மட்டுமல்லாது  அதற்கான வழிகாட்டுதலும் தலைவனும் இல்லாமல் ஒடுங்கி வாழ்ந்த சமூகம் அது. பெரியார், அம்பேத்கார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் சீரிய முயற்சியினால் ஏதோ இப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைத்து உயரிய பதவிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களில் பெரும்பகுதியினர் இன்னமும் ஆதிக்கசாதியினரின் அச்சுறுத்தலுக்கு அடங்கித்தான் வாழவேண்டிய சூழலில் இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஓர் இயக்கத்தை உருவாக்கி அதற்கு தலைவனாக திருமாவளவன் இருக்கிறார். அவரின் தலைமையை ஒட்டுமொத்த தலித் சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சில அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி அவர் மீதுள்ள மரியாதை எவரிடத்திலும் குறையவில்லை.

மீண்டும் அந்த இணைய ரவுடியைப் பார்த்து கேட்கிறேன். திருமாவளவன் கலைஞரின் காலைப் பிடிப்பது போல வரைந்த உனது கார்ட்டூன் எந்த உள்நோக்கமும் இல்லாதது என்றால், அதற்கு வரும் எதிர்வினைகளை அவரது கட்சி சார்ந்த கண்டனங்களாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.. அதை விடுத்து தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாதா... தலித் என்றால் பெரிய கொம்பா என்கிற ரீதியில் தொடரும் உமது பதிவுகள், உண்மையிலேயே அச்சமூகத்தினரை கேவலப்படுத்தும் நோக்கிலே அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறதே..!

இன்னமும் அவர்களின் உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் ஒரு தலித்தாகப் பிறந்து பாருங்கள். அப்போதாவது அவர்களின் வலி உங்களுக்குப் புரியும்.

ஒரு பின் குறிப்பு.

பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் புலம்பித்தள்ளிய அந்தப் பதிவில் சென்று.." தலித்..தலித் என்று வரிக்கு இரண்டுதடவை நீங்கதானே சார் சொல்றீங்க..தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாது என்று யார் சொன்னது.. ஆ. ராசா மீது வராத விமர்சனமா..? அப்போது எத்தனை தலித்துகள் கண்டனம் தெரிவித்தனர்....." என்கிற ரீதியில் மிகுந்த மரியாதையாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். இந்தப் பதிவு எழுதுவதற்கு முன்பு வரை அவருடன் தொடர்பில் இருந்தேன். எழுதி முடிக்கும் தருவாயில் சென்று பார்த்தால் அன்போடு என்னை பிளாக் செய்திருக்கிறார். மிகுந்த மரியாதையுடன் கமெண்ட் போட்டால் அவருக்கு பிடிக்காது போல.. என்னை எல்லாம் அடிச்சி நீங்க இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது பாலா சார்.