Saturday 27 June 2015

காவல் - டம்மி துப்பாக்கி.


காவல்ன்னு ஒரு படம் வந்திருக்கு...

வாரக்கடைசி.. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த வாரம் ரிலீஸ் ஆகாததால் வழக்கம்போல ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம்னு போனேன். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எதார்த்தமாக பார்த்த நிறைய படங்கள் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு...ராஜதந்திரம்.. டிமாண்டி காலனி... காக்கா முட்டை என பெரிய லிஸ்டே இருக்கு..! 

அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்திற்கு போனேன். படத்தின் போஸ்டரில் 'புன்னகைப்பூ கீதா' கஷ்டப்பட்டு புன்னைகைத்துக் கொண்டிருந்தாங்க. இவரைப்பற்றி நம்மூர் மக்களுக்கு அவ்வளவா தெரியாது. சிங்கையிலும் மலேசியாவிலும் புன்னகைப்பூ கீதா என்றால் புன்னகைக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.. அம்மணி அந்தளவுக்கு பிரபலம்...!

10 வருடங்களுக்கு முன்பு , ஒரு தயாரிப்பாளராக 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் தடம் பதித்தாங்க.. அதில் கலெக்டராக ஒரு ' கெஸ்ட் ரோல் '  கூட பண்ணியிருப்பாங்க.. அப்போ ஹீரோயினா நடிக்க அம்மணிக்கு நிறைய ஆஃபர் வந்தது. 'குளோசப் ஷாட்' ல கொஞ்சம் டொக்காக இருந்தாலும் 'லாங் ஷாட்' ல சிக்குன்னு இருப்பாங்க.. அதுமட்டுமல்ல, வெளிநாட்டு கரன்சியும் ஒரு முக்கிய காரணம். ஓர் திரைவிழா மேடையில் நடிகர் பார்த்திபன், ஹீரோயினாக நடிக்க பகிரங்க அழைப்பு விடுத்தார் அம்மணிக்கு.. வெறும் புன்னகையை மட்டும் அப்போது பதிலாக உதிர்த்துவிட்டு, பார்த்திபனின் உள்நோக்க அழைப்பை அன்போடு நிராகரித்துவிட்டாங்க...

அப்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்து வந்தவருக்கு இப்போது மட்டும் எப்படி மனது வந்தது என்பதுதான் மில்லியன் ரிங்கட் கேள்வி..!

அது சரி.. படம் பார்த்தால் விமர்சனம் செய்தே ஆகவேண்டுமா...?. ம்ம்ம்ம்... கட்டாயம் இல்லைதான். ஆனால் கடுமையான வேலைப்பளுவுக்கிடையில் வாரம் ஒரு முறையாவது எனது வலைப்பூவை தூசி தட்ட இந்த விமரிசனங்கள் எனக்கு உதவி புரிகின்றன.  

அது போகட்டும் படம் எப்படி இருக்கு..?

காவல்துறையின் அருமை பெருமைகளைச் சொல்லும் படங்களின் வரிசையில் பத்தாயிரத்து ஒன்றாவதாக (..ஆஆஆ...வ்...) வந்திருக்கும் தமிழ்ப் படம்தான் இந்தக் காவல்.  ' நீ எல்லாம் நல்லா வருவடா..'  என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு காவலாக மாறி வந்திருக்கிறது.

பொதுவாக காவல்துறை சம்மந்தப்பட்ட படங்கள் எப்படி இருக்கும்..? ஹீரோ ஒரு போலிஸ். நகரத்தில் ஒரு சமூக விரோதி இருப்பான். அவனது பின்னணியில் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருப்பார்கள். அத்தனைப் பின்னணியையும் உடைத்து, அந்தச் சமூக விரோதியை போட்டுத்தள்ளுவான் ஹீரோ... இந்த கிளிசே வகை கருமத்தை வைத்துதான் பல வருடங்களாக ' போலிஸ் ஸ்டோரி ' என நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா...

தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக நடந்த கொலைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு அதற்குக் காரணம் கூலிப்படைதான் என்கிற அறிய கண்டுபிடிப்புடன் படம் தொடங்குகிறது. அத்தனை சம்பவங்களுக்கும் காரணம் கர்ணா என்கிற கூலிப்படைத் தலைவன். சென்னையில் கொலை,கடத்தல்,கட்டப் பஞ்சாயத்து என்று தனி ராஜ்யமே நடத்துகிறான் கர்ணா. இந்தக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போக, கர்ணாவை என்கவுண்டர் செய்ய முதல்வர் ரகசிய உத்தரவை பிறப்பிக்கிறார். அந்த அசைன்மெண்டை செய்து முடிக்க நியமிக்கப்பட்டவர்தான் 'இன்ஸ்பெக்டர்' சமுத்திரகனி..

வசூல் ராஜாக்களாக வலம்வரும் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து உட்பட சில 'கடமை தவறாத கண்ணியமிக்க' காவலர்களின் புதல்வராக விமல், அஸ்வின் ராஜா மற்றும் இருவர். தந்தைகள் காக்கிச் சட்டை போட்டு செய்யும் வசூலை மகன்கள் காக்கிச்சட்டை இல்லாமலே செய்கிறார்கள். தந்தையின் செல்வாக்கினால் இவர்களுக்கு கருணாவுடன் நட்பு கிடைக்கிறது.

கர்ணாவை என்கவுண்டர் வலையில் சிக்கவைக்க, விமல் மற்றும் அவரது நண்பர்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் சமுத்திரக்கனி. கர்ணாவுக்கு வைத்த கண்ணியில் அவனது தம்பி சிக்கி பலியாக, கர்ணாவின் கோபத்துக்கு ஆளாகிறார்கள் விமலும் அவரது நண்பர்களும். தன் தம்பி சாவுக்கு காரணமான விமல் மற்றும் அவரது நண்பர்களை கர்ணா பழிவாங்கத் துரத்த, அவர்களைக் காப்பாற்றி கர்ணாவை என்கவுண்டரில் போட துரத்துகிறார் சமுத்திரக் கனி... இறுதியில் யார் பலியாகினார்கள் என்பதே மீதிக்கதை.

ஆரம்பத்தில் விமலை ஹீரோவாக காண்பிக்கிறார்கள். பாவம்; இதில் அவர்  டம்மி பீசு.  நன்றாக ஆடுகிறார்.... ஹீரோயினிடம் வழிகிறார்... அத்தோடு முடிந்தது அவரது வேலை. இப்படியே போனால் யோகிபாபு கேரக்டர் கூட கிடைக்காது அவருக்கு.

நிகழ்ச்சிகளை வடிவமைத்துத்தரும் 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நடத்துகிறார் புன்னகைப்பூ கீதா.. இவரது மந்திரப் புன்னகையில்(!) மயங்கி காதலில் விழுகிறார் விமல். ஆனால் அம்மணி முகத்தில் புன்னகைப்பூக்கும் போதுதான் விமலுக்கு ஒண்ணுவிட்ட அக்கா போல தெரிகிறார். மிஸ்டர் ஏகாம்பரம் (ஒளிப்பதிவாளர்).... எந்த தைரியத்தில் சார் அக்காவுக்கு குளோசப் ஷாட் வச்சீங்க..?. முன்பு ரேடியோ மிர்ச்சியாக இருந்தவர். ஆனால் வாய்ஸ் கூட பிசிறு தட்டுகிறது.  நல்லவேளை அக்காவை ஆடவைக்கவோ அல்லது பாடவைக்கவோ இயக்குநர் முயற்சிக்கவில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது விபரீத முயற்சியில் அவர் இறங்கியிருந்தால், 'பேஸ்புக் புகழ் ' கவிக்குயில் கல்பனா அக்காவுக்கு போட்டியாக வந்திருப்பார்.

அக்கா புன்னகைப்பூ கீதா...

ஸ்ட்ரிக்ட் போலிஸ் இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி. இந்த விறைப்பு, மொறைப்பு எல்லாம் ஏற்கனவே ஏகப்பட்ட படங்களில் கேப்டனிடம் பார்த்தாச்சு.. இவரை பீச்சில் பலூன் விற்பவராக காண்பிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது உளவு பார்க்க வந்திருக்கிறார் என்று. பிறகு தொப்பியை மாட்டிக் கொண்டு விறைப்பாக சல்யூட் அடிக்கும்போது, "அட போங்கப்பு..... இதெல்லாம் ஒரு ட்விஸ்டா....' என்றுதான் கேட்க தோன்றுகிறது.

காவல்துறையினர் வசூல் சக்ரவர்த்திகளாக இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க அவர்களை இந்தளவுக்கு மட்டம்  தட்டியிருக்க வேண்டாம். பொதுமக்களிடம் ரவுடிகள் போல கட்டாய வசூல் செய்வது, பிறகு அதை காவல் நிலையத்தில் வைத்து வெளிப்படையாகப் பங்கிட்டுக் கொள்வது என்று ஒரு அரசு இயந்திரத்தை அப்பட்டமாக வெளுத்துவாங்குவது கொஞ்சம் ஓவர். அதனாலையோ என்னவோ இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் காமெடிக்கு எல்லாம் சிரிப்பு வரவில்லை. ' செய்கூலி உண்டு.. ஆனால் சேதாரம் இல்லை ' என்று சிங்கமுத்து தனது மகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடும்போது மட்டும் தியேட்டரில் சிரிப்பொலி. அதையே அடிக்கடி சொல்வதனால் கடைசியில் ஏதாவது சுவாரஸ்யமாக நடக்கும் என்று எதிர்பார்த்தால்..நத்திங்.. :-(

புளித்துப் போன கதைதான். ஆனால் காட்சிகளிலும் திரைக்கதையிலும் ஏதேனும் புதுமை புகுத்தி சுவாரஸ்யமாக்கியிருக்கலாம். எந்த புது முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் ஏதாவது மெஸேஜ் சொல்லவருகிறார் என்றால் அதுவுமில்லை.. ஆரம்பத்தில் இயக்குநர் கவுதம்மேனன் கரகர தொண்டையில் கதையை சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்.. ஒருவேளை இதுதான் புதுமையோ..!. கூலிப் படைத்தலைவன் பெயர் கர்ணா... அவனது கூட்டத்தில் இருக்கும் ஒருவனின் பெயர் அழகிரி... இதில் ஏதாவது குறியீடு இருக்கா..?

மொத்தத்தில்.... காவல் - டம்மி துப்பாக்கி.

5 comments:

  1. ஆஆஆ...ஆவ்... - வீட்டிலேயே... ஹா... ஹா...

    நன்றி...

    ReplyDelete
  2. நல்லவேளை இன்னைக்கு இரவு ஆன்லைன்ல பாக்கலாம்ன்னு இருந்தேன்...
    காப்பாத்திட்டீங்க ஜி.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தப்பிச்சிட்டீங்கனு சொல்லுங்க பாஸ்.. :-)

      Delete
  3. என்னோட பைக்காசெல்லாம் உங்களால் காப்பாற்றப்படுகிறது.

    ReplyDelete