Wednesday 25 February 2015

சண்டமாருதம்- சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா...

ம்மையாரை ஜெயிலுக்கு அனுப்பியாச்சி. அவருக்கு அடுத்த இடத்தில் பவரான ஆள் யாரும் கிடையாது. இந்த கேப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற நப்பாசையில் கொஞ்ச நாட்களாகவே முதல்வர் கனவில் நம்ம புரட்சித் திலகம் மிதந்து கொண்டிருக்கிறார்.

அந்த மிதப்பில், 'சார் அந்த குரங்கு பொம்மை என்ன விலை' என்று கேட்கிறார். பாவம், 'அது கண்ணாடி' என்று அவருக்கு யார் புரிய வைப்பார்களோ தெரியவில்லை. என் கட்சியினர் விரும்பினாலும் மக்கள் விரும்பினால் தான் நான் முதல்வர் ஆகமுடியும் என்று அதே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.முதல்ல அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ வாக நிற்பதற்கு அம்மையார் அனுமதிப்பாங்களா என்பதை யோசி சித்தப்பு.

அது என்ன புரட்சித் திலகம் ...? . புரட்சித்தலைவரின் ஈகைக் குணமும் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையும் கலந்து செய்த கலவை அவர் என்று எவனோ ஒருவன் ஏற்றி விட்டிருக்கிறான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலில் சாதித்த நடிகர்/நடிகைகள் என்றால் அது ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். அம்மூவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை பெயருக்கு முன்னால் இருக்கும் 'புரட்சி'. இப்ப புரியுதா எதுக்காக எங்க சித்தப்பு 'சுப்ரீம் ஸ்டார்' என்கிற பட்டத்தைத் துறந்து புரட்சித்திலகம் என மாற்றிகொண்டார் என்று..!

நம்ம புரட்சித் திலகத்தின் உலகப் படைப்பின் உச்சமான மண்டமாருதம்... ச்சீ.. சண்டமாருதம் எப்படியிருக்கு என்று பார்ப்போம்.

டடா.. எவ்வளவு நாளாச்சி இப்படியொரு மொக்கைப் படத்தை பார்த்து...! சரி,  விமர்சனம் எழுதுற நமக்கும் ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டாமா...?  மேட்டிமைத்தனத்தோடும் அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப் படும் தமிழ் சினிமா படைப்புகளுக்கு விமர்சனம் எழுதும்போது அதைவிட நுட்பமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து எழுதுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. அவ்வப்போது இது மாதிரி மொண்ணை படங்களும் வந்தால் தான் நமக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்..!


கதை, நம்ம புரட்சித் திலகத்தின் சொந்த சரக்காமாம். நான்கு வருடங்களுக்குப் பிறகு படம் எடுக்கிறார். ஒரு வேடத்தில் நடித்தால் இவ்வளவு நாட்கள்  தவமிருந்து காத்திருக்கும் ரசிகர்களின் கலைத்தாகத்திற்கு சரிவர தண்ணி காட்டாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் இரண்டு வேடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் புரட்சித் திலகம்.  டபுள் ஆக்ட் என்று முடிவு செய்தாயிற்று. அப்பா-மகன், அண்ணன்- தம்பி, தாத்தா -பேரன் என எல்லா காம்பினேசனிலும் நடித்தாயிற்று. தமிழ் சினிமா கண்டிராத ஒரு புது காம்பினேசனை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்கிற வெறிகொண்டு சித்தியோடு சேர்ந்து சீரியஸாக சிந்திக்கும் வேளையில்தான் நம்ம புரட்சித் திலகத்திற்கு இப்படி ஒரு ஐடியா உதித்திருக்க வேண்டும். ஒருவர் ஹீரோவாம் இன்னொருவர் வில்லனாம். அப்படி என்றால் இதற்கு முன் யாருமே அப்படி நடிக்கவில்லையா என்று தானே கேட்கிறீர்கள். அவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் புரட்சித் திலகம் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

படத்தோட கதை என்னான்னா....  இந்தியாவை அழிக்க நினைக்கும் ஒரு பயங்கரவாதியை ஒரு 'அண்டர் கவர் காப்' போட்டுத்தள்ளுவதே இந்த தண்டமாருதம்.. ச்சீ.. சண்டமாருதம் படத்தின் ஒன் லைன்.

பயங்கரவாதி - கும்பகோணத்தில் (அந்த ஊரு உங்களுக்கு என்னய்யா பாவம் பண்ணிச்சி..) பயங்கர தாதாவாக வலம்வரும் 'சர்வேஸ்வரன்' சரத்குமார்.

அண்டர் கவர் காப்- குடும்பத்துக்கே தெரியாம ரகசியமா ஓவர் நைட்டுல படிச்சி, ட்ரைனிங் எல்லாம் முடிச்சி சொந்த ஊரிலே மப்டியில் போலிசாக வலம் வரும் 'சூர்யா' சரத்குமார்.

இதில் வில்லனாக வரும் பயங்கரவாதி சர்வேஸ்வரன் முதல் முறையாக ஆஸ்கார் கதவை தட்டப்போவதாக, நான் இண்டெர்வலில் பாத்ரூம் கதவை தட்டிக்கொண்டிருக்கும் போது இருவர் பேசிக்கொண்டிருந்தனர். "சூர்யா ஹீரோன்னா..நான் யாரு..?  வில்லன்ன்ன்ன்.... ஹா..ஹா..." என்ற குதிரை கனைக்கும் சத்தத்தைக் கேட்டு பக்கத்து சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடிக்கிட்டு வீறிட்டது. அப்படியே லாலிபாப்பை சப்பிவிட்டு "ஐ ஆம் ஏ ஸ்வீட் வில்லன் " என்று பன்ச் அடிக்கும் அந்தக் காட்சிக்கு மட்டும் ஆறு ஆஸ்கார் தரலாம்.

ஒரு காட்சியில் சீரியஸ் வில்லனாக வருபவர் அடுத்தக் காட்சியிலேயே லாலிபாப், குச்சி மிட்டாய் சாப்பிடும் நான்கு வயது குழந்தையாக மாறி நடிப்பில் ஒரு வேரியேஷன் காண்பித்திருப்பது ஆஸ்கார் கமிட்டியையே குழப்பச்செய்யும் அற்புத நடிப்பு. சூரியன் சுள்ளென்று அடிக்கும் பகலில் தலையில் முண்டாசு மற்றும் கறுப்புக் கூலிங் கிளாசோடு வருபவர் நள்ளிரவிலும் அதே கறுப்புக் கூலிங் கிளாசோடு வருவது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத புதிய உத்தி மட்டுமல்ல 'கன்டினியுட்டி' மிஸ் ஆகிவிடக்கூடாது என்கிற அக்கறையும் கூட. 

"பாக்கு பாக்கு வெத்தல பாக்கு.. டாமு டூமு டையா... ஐத்தலக்கட்டி கும்தலக்கடி கும்பக்கோணம் பையா.. ஏ கும்பகோணம் பையா..." என்று அவர் வாயிலே வண்டி ஓட்டும் காட்சியில் பக்கத்தில் மிரண்டு போயிருந்த குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. வில்லன், ஹீரோ ரோல் மட்டுமல்ல காமெடியன் ரோல் கூட அவருக்கு  நன்றாக வருகிறது  என்பதை ஆஸ்கார் கமிட்டி கவனத்தில் கொள்ளவேண்டும் . இதைத் தன் பாடலின் ஆரம்பத்தில் பயன்படுத்திக்கொள்ள ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்கும் கடும் போட்டி ஏற்படும் என்பது திண்ணம்.

சர்வேஸ்வரன் சரத்குமாரும் சூர்யா சரத்குமாரும் மோதிக்கொள்ளும் அந்த இறுதிக்காட்சி, தசாவதாரம் ஜப்பான் கமலும் வெள்ளைக்கார கமலும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சிக்கு விடும் நேரடி சவால். இரண்டு சரத்குமார்களும் மோதிக்கொள்ளும் காட்சியை எப்படி தத்ரூபமாக எடுத்திருப்பார்கள் என்று படம் பார்க்கும் ரசிகன் சிந்தித்து சிரமப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில், சண்டைப் போடுவது ஒரு டூப்புதான் என்பதை கேமரா மிகத்தெளிவாக காட்டும்படி செய்திருப்பது இயக்குனரின் ரசிகன் மீதான அக்கறையை காட்டுகிறது.

ஒரே வீட்டில் மூன்று தலைமுறைகளுடன் கூட்டுக் குடும்பமாக 'சூர்யா' சரத்குமாரின் குடும்பம் வாழ்கிறது. நாயகியும் அதே வீட்டில் சிறுவயது முதல் வளர்கிறார். ஆனால் அவர் போலிஸ் என்பது அவரது அப்பாவைத் தவிர யாருக்கும் தெரியாது என்பது மட்டுமல்ல அவர் போலிசுக்கு படித்ததே யாருக்கும் தெரியாது என்பது இதுவரை  தமிழ் சினிமா கண்டிராத ட்விஸ்ட். அவர் போலிஸ் என்று வில்லன் 'சர்வேஸ்வரன்' சரத்குமார் சொல்லும்போது 'பெத்த தாய்' உட்பட மொத்தக் குடும்பமே உறைந்து நிற்கிறது. ஏம்பா.. 'அண்டர் கவர் காப்' என்பதை சீக்ரெட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் போலிஸ் என்பதைக் கூடவா சீக்ரட்டாக வைத்திருக்கணும்..?.  அதிலும் , கும்பகோணத்தில் பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னணியில் ரவுடிகளை டப்பு..டப்பு..சுட்டுத் தள்ளுகிறார் ரகசிய போலிஸ் புரட்சித் திலகம். இருந்தாலும் அவர் யார் என்பது யாருக்குமே தெரியாது என்பதில்தான் இயக்குனரின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

காமெடிக்கு தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி இருந்தும் தொய்வு விழுகிறது. அப்படி விழுந்த தொய்வை செங்குத்தா தூக்கி நிறுத்த வெண்ணிற ஆடை மூர்த்தி வருகிறார். ஆனால் மூன்று காமெடியன்கள் இருந்தாலும் கிளைமாக்சில் சர்வேஸ்வரன் சரத்குமார் செய்யும் காமெடிக்கு முன்பு இவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.

காசி சொம்புனு ஒன்னு காண்பிக்கிறாங்க. கேட்டா 'ஓஃ பாலஸீக்கா' னு கதை விடுறாங்க.. சரி..ஏதோ ஒரு புது விஷயம் சொல்ல வராங்கனு சீட் நுனிக்கு வந்து கேட்டா பத்தாம் வகுப்புல சயன்ஸ் வாத்தியார் பாடம் நடத்துற மாதிரி விளக்கம் கொடுக்கிறாங்க.. அதிலும் அந்த வின்சென்ட் அசோகன் இருக்கிறாரே.. ஏதோ ரிசர்ச் இன்ஸ்டிடியூட் வைவாவுல விளக்கம் சொல்றமாதிரி நின்னு நிதானமா விளக்கம் சொல்கிறார். அதை எல்லாம் கேட்டு நாங்க என்ன பரிட்சையா எழுதப் போகிறோம்.. இந்த இடத்தில் கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

நிறைய எழுத்தாளர்கள் சினிமாவில் வெற்றிகரமாக வளம் வந்திருக்கிறார்கள். மகேந்திரன், பாலுமகேந்திரா, வசந்த் உள்ளிட்ட நிறைய இயக்குனர்கள் கலைத்துறைக்கு வருவதற்கு முன் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள்தான். சுஜாதா, பாலகுமாரன், சுபா போன்றவர்கள் கதை, திரைக்கதை, வசனம் என்கிற எல்லையோடு தனது பயணத்தை சுருக்கிக் கொண்டாலும் பூவைச்சுற்றும் வண்டு போல முன்னணி இயக்குனர்கள் இவர்களை மொய்க்கும் அளவுக்கு சாதித்துக் காட்டியவர்கள். தமிழகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் மாத இதழின் நூலாசியர் ராஜேஷ்குமார் அவர்கள் ஏற்கனவே பட்டும் படாமல் வைத்தக் காலை தற்போது பலமாக சினிமா என்கிற மைதானத்தில் ஊன்றியிருக்கிறார். 

திரைக்கதை ,வசனம் என்கிற இரண்டு முக்கிய பொறுப்பு அவருக்கு. என்ன கொடுமை என்றால் அது இரண்டும்தான்  படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். சமீபத்திய படங்களில் எதிலுமே வசனங்கள் உறுத்தியதாகத் தெரியவில்லை. ஒன்று, அட போட வைக்கும் அல்லது படத்தின் ஓட்டத்தோடு அதுவும் போகும். இந்தப் படத்தில் கேரக்டர்கள் பேசும் வசனங்கள் நம்மிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கிறது. பேச்சுத்தமிழ் வேறு.. மேடைத்தமிழ் வேறு.  ஒரு வாக்கியம் பேசினால் அதில் பாதி வார்த்தைகள் சுந்தரத் தமிழில் இருக்கிறது. போலிஸ் ஆபீசர்கள் பேசிக்கொள்ளும்போது பள்ளியில் தமிழாசிரியர் இருவர் சந்தித்துக் கொண்டால் எப்படிப் பேசிக்கொள்வார்களோ அப்படி பேசுகிறார்கள். ஒன்று ஆங்கிலம் அல்லது சுந்தரத் தமிழ். படம் கும்பகோணத்தில் நடப்பதாக காண்பிக்கிறார்கள். தஞ்சை , கும்பகோணம் ,திருவாரூர் பகுதிகளுக்கென்று ஒரு தனி ஸ்லாங் இருக்கிறது. ஆனந்தம் படத்தைப் பாருங்கள். தெளிவாகப் புரியும்.

அதேப்போல் திரைக்கதையிலும் நிறைய ஓட்டைகள். எண்பதுகளில் வந்த எஸ்.பி. முத்துராமன் படங்களைப் பார்த்த உணர்வு. திரைக்கதை அமைப்பதில் தமிழ் சினிமா எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அவரது கிரைம் நாவல் படிக்கும் பொழுது ஏற்படும் பரபரப்பு இதில் கொஞ்சம் கூட இல்லை. படத்தில் இருக்கும் ட்விஸ்டும் மொக்கைத் தனமாக இருக்கிறது. எனது ஆதர்ஷ எழுத்தாளர். ஆனால் திரையுலகில் சாதிக்க இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் போல.. அடுத்தப் படத்தில் சாதிப்பார் என நம்புவோம்.


தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு போய்கிட்டு இருக்குனு எவன்யா சொன்னான்..? 80 -களில்  வெளிவந்த எஸ்.பி.முத்துராமன் படங்களை இப்போது தொலைகாட்சியில் பார்க்கும்போது அவ்வளவு கோபம் வருகிறது. படத்தில் சில தர்க்கப் பிழைகள் இருக்கலாம். படமே பிழையாக இருந்தால் எப்படி...? அவர் படங்கள் எல்லாம் அப்போது எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்ற கேள்விக்கு நேரடியான பதில் என்னிடம்இல்லை. ஆனால் அதே காலகட்டத்தில் வெளிவந்த மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை  இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகான சந்ததிகளும் சிலாகித்து ரசித்துப் பார்ப்பார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.

தேரை இழுத்து தெருவில் விடுவது போல அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை இதுபோல சில படங்கள்  திரும்பவும் 80 களின் காலகட்டத்திற்கு கொண்டு செல்லுமோ என்கிற அச்சம் தமிழ் சினிமா மீதான  நம்பிக்கையையே சிதறடிக்கச் செய்கிறது.

அதெல்லாம் சரி...  ஓவியாவை வைத்து  நம்ம புரட்சித் திலகம் ஏதோ அகழ்வாராய்ச்சி செய்யிற மாதிரி போஸ்டர் எல்லாம் வெளியிட்டீங்க. அதை நம்பித்தானய்யா நாங்க எல்லாம்  படம் பார்க்க வந்தோம். ஆனால் போஸ்டர்ல இருக்கிற சீனு ஒன்னு கூட படத்தில காணோமேய்யா... இவ்வளவு தானாய்யா உங்க டக்கு..?

படத்தின் கிளைமாக்ஸில் நம் ரத்தமே உரையச்செய்கிற அளவுக்கு ஒரு திகிலான காட்சி இருக்கு. இதுதான் படத்திற்கு மிகப்பெரிய டர்னிங் பாய்ன்ட். அதாவது படத்தில வருகிற  இரண்டு ஹீரோயின் உடம்பிலேயும் 'டைம் பாம் ' செட் பண்ணி சங்கிலியால் கட்டி வச்சிடுவாங்க. பாம் என்றால் அதில் பச்சை ஒயரும் சிவப்பு ஒயரும் கண்டிப்பாக இருக்கும் என்பதும் அந்த இரண்டு ஒயரில் ஒரு ஒயரை இரண்டு வினாடிகளே மீதம் இருக்கும் தருவாயில் ஹீரோ கட் பண்ணி பாம்மை டெஃப்யூஸ் செய்து விடுவார் என்பதும் காலங்காலமாக தமிழ் சினிமா பின்பற்றும் நடைமுறை ..

இதில் முதலில் ஓவியா உடம்பில் டைம் பாம் செட் பண்ணி வைக்கிறார் சர்வேஸ்வரன். அதை நம் போலிஸ் சித்தப்பு தெரிந்து கொள்கிறார். அருகில் சென்று அந்த பாமை உற்று நோக்குகிறார். என்ன ஆச்சர்யம்..! அதே பச்சை ஒயரு.. சிவப்பு ஒயரு.. (எத்தனை வருஷம் ஆனாலும் நாங்க கலர மட்டும் மாத்த மாட்டோம்டி..). இரண்டில் எந்த ஒயரை கட் பண்ணுவது என்று நம்மைப் போலவே சித்தப்புவும் குழம்பிப் போய்  நிற்கிறார். நமக்கும் மனது கிடந்து பக்..பக் என அடித்துக் கொள்கிறது. பச்சை ஒயரா.. சிவப்பு ஒயரா.? பச்சையா..சிவப்பா..? ப...சி...?. கடைசியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிவப்பு ஒயரை கட்டிங் பிளேயரால் கட் பண்ணி விடுகிறார் சித்தப்பு. (அந்த இடத்தில சித்தப்பு கையில கட்டிங் பிளேயர் எப்படி வந்தது என யாராவது கேள்வி கேட்டீங்க.. கொண்டே புடுவேன்). அதன் பிறகு திக் திக் நிமிடங்கள். நீங்கள் தள்ளிப்போய் விடுங்கள் என்று ஓவியா கெஞ்சுகிறார். நம்ம சித்தப்புவோ உன்னை விட்டால் நான் யாரை வைத்து அகழ்வாராச்சி செய்வது என்று கலங்கிய மனதுடன் அங்கிருந்து நகர மறுக்கிறார். வினாடிகள் குறைகிறது. துரதிஷ்டவசமாக பாம் வெடித்து விடுகிறது. அப்போது சர்வேஸ்வரன், " ஹ.ஹா...நீ கட் பண்ண வேண்டியது செவப்பு ஒயர் இல்ல... பச்சை ஒயரு.." என்று அடிக்கும் செம பன்ச்-க்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.  என்ன செய்வது . சித்தப்புவுக்கு ஒயர் கட் பன்றதுல முன் அனுபவம் இல்ல போலும் ..

அடுத்ததா இன்னொரு ஹீரோயின் உடம்பிலேயும் டைம் பாம் கட்டி வைத்துவிடுகிறார் வில்லன் சர்வேஸ்வரன். இதுவும் போயிடிச்சினா அகழ்வாராச்சி பண்ண ஆளே கிடைக்காது என்பதால் சித்தப்புவுக்கு  தவிப்பு இன்னும் அதிகமாகிறது. திரும்பவும் கட்டிங் பிளேயரோடு அருகில் செல்கிறார். இங்கேயும் அதே பச்சை ஒயரு.. சிவப்பு ஒயரு.. இங்கதான் ஒரு ட்விஸ்ட் வைக்கிறாங்க. அந்த டைம் பாமை நன்றாக உத்துப் பார்க்கிறார். என்ன ஆச்சர்யம். பச்சைக் கலரு,சிவப்புக் கலரு ஒயருக்கு பின்னால் மஞ்சள் கலரில் இன்னொரு ஒயரும் இருக்கிறது. வழக்கமாக இல்லாமல் மூன்றாவது ஒயரையும் காண்பித்திருப்பது நிச்சயம் தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒரு புதிய உத்தி. தற்போது அவருக்கு மூளை பரபரவென வேலை செய்கிறது. மற்ற இரண்டு ஒயரையும் விட்டுவிட்டு அந்த மூன்றாவது ஒயரை கட் பண்ணுகிறார். நல்லவேளையாக பாம் டெஃப்யூஸ் ஆகிறது. அதுவரை சீட்டின் நுனியில் உட்கார்ந்திருந்த நாம் ரிலாக்சாக பின்னால் சாய்கிறோம். பிறகு அந்த பாம் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை ஒரு தட்டு தட்டுவார். அது தனியாக கழண்டு விழும். அட கூறுகெட்ட சித்தப்பு... இத முன்னாடியே செஞ்சிருக்க வேண்டியதுதானே..ஓவியாவை காப்பாற்றி இருக்கலாமே . இப்போ பாருங்க அகழ்வாராச்சி பன்றதுக்கு ஆள் குறையுது.

எப்படியிருந்தாலும் கடைசி நேர இந்த திகில் அனுபவங்களை தியேட்டரில் சென்று காணத் தவறாதீர்கள்.

மொத்தத்தில் சண்டமாருதம்  ..................... ( வேணாம் விடுங்க...)


ப்ளஸ்
மைனஸ்
இன்டர்வெல்-லில் சாப்பிட்ட பாப்கார்ன். (வழக்கமாக சால்ட் பாப்கார்ன் தான் சாப்பிடுவேன். இந்த தடவை வித்தியாசமாக ஸ்வீட்  பாப்கார்ன் சாப்பிட்டேன். சுவை நன்றாக இருந்தது.)


9 comments:

  1. Deyyyyyyiiiiiiii......padamaadaaa edukarenkaa.............
    Sir is their any way is there to get back our theater ticket money back since the product is. Waste...............

    New law should be introduce in theater they should display the screen play before by the ticket we can. Plan....
    Seshoo

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி.. எதிர்காலத்தில் நடந்தாலும் நடக்கலாம்.

      Delete
  2. புரட்சி எனும் சொல்லே வருத்தப்படும்...! ஆஸ்கார் வேறா...!!!

    இதுவல்லவோ மிகப்பெரிய டர்னிங் பாய்ன்ட்...! ஹா... ஹா...

    ReplyDelete
  3. கண்களில் நீர் வழிய சிரித்தேன் சகோ.. செம ரகளை உங்களின் விமர்சனம். ஹாஹாஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... நன்றி சகோ...

      Delete
  4. Replies
    1. நன்றி பரிவை சே.குமார் ;-)

      Delete
  5. படத்தினை இப்படியா பொதுவில் பாராட்ட வேண்டும்![ ஓவியாவின் பாடல் காட்சி பொழுது போக்க போதும்[[[[[[[[[[[[[

    ReplyDelete