Wednesday 30 May 2012

சில்மிச 'வாத்தி'களுக்கு விழுந்த செருப்படி..எங்கே செல்கிறது ஆசிரியர் குலம் ...


 
சில மாதங்களுக்கு முன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவன் தன் பள்ளி ஆசிரியையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தமிழ்ச் சமூகத்தின் பொதுமனத்தில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த ஊடகமும் மக்கள் மனதில் தட்டையாக கட்டமைத்த சித்திரம் இப்படித்தான் இருந்தது.ஆசிரியர் நல்லவர்,ஒழுக்கமானவர்.கண்டிப்பானவர்.மாணவரின் வளர்ப்பு சரியில்லை.தவறானவர்.அந்தச்சம்பவம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கமே நாம் அவ்வாறு விளிக்கக் காரணமாயிற்று.அனைத்து ஊடகங்களும், ஆசிரியர்-மாணவர்கள் இடையே உள்ள பிரச்சனைகளை வெவ்வோறு கோணங்களில் அலசித்தீர்த்ததோடு அதன் கடமையை முடித்துக் கொண்டது.

ஆனால் ஆசிரிய-மாணவ உறவின் மற்றொரு பக்கத்தையும் தீவிரமாக அலச வேண்டிய நேரமிது.சமீப காலங்களில்...சாமியார்களின் லீலைகளுக்குப் போட்டியாக குரு ஸ்தானத்தில் இருக்கும் மற்றொரு மேன்மை பொருந்திய இனம்,தனக்கு கீழ்படிந்து நடப்பவர்களின் மீது எடுத்துக் கொள்ளும் உட்ச பட்ச உரிமையாக,அவர்கள் மீது பாலியல் ரீதியான அக்கிரமங்களை அரங்கேற்றியிருக்கிறது. அதிலிருந்து சில வக்கிர துளிகள்......

சம்பவம் 1 (பிப்-2012)

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொடூரம்...

"இரவு நேரத்தில் கல்லூரி இயக்குனர் அவரது அறைக்கு எங்களை அழைப்பார். பலூனை ஊதி கீழே போட்டுவிடுவார்.அதை எடுக்க சொல்வார். நைட்டி அணிந்திருக்கும் நாங்கள் குனிந்து பலூனை எடுக்கும் போது பார்த்து ரசிப்பார். ‘நீங்கள் யாருடனாவது உறவு வைத்திருந்தால் கூறுங்கள்,பாவமன்னிப்பு தருகிறேன்’ என்று அசிங்கமாக பேசுவார்.இதற்கு விடுதி வார்டன் உடந்தையாக உள்ளார்.இதுகுறித்து தட்டி கேட்டால் இன்டர்னல் மார்க்கில் கை வைத்து பெயிலாக்கி விடுவதாக மிரட்டுகின்றனர்" என்ற மாணவிகளின் மனக்குமுறல்கள் ஒருவழியாக வெளிச்சத்துக்கு வர,கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் விசாரணை நடத்தி,இயக்குனர் மரிய பிரான்சிசை சஸ்பெண்ட் செய்தும்,வார்டன் டயானாவையும் அங்கிருந்து இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டிக்கிறார்.

சம்பவம் 2 (பிப்-2012)

பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது.....

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பால்ராஜ் (வயது 48) என்பவர் பணியாற்றி வந்திருக்கிறார்.அவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை, பள்ளிக்கூட அலுவலர் அறைக்கு தனியாக வரவழைத்து செக்ஸ் சில்மிஷம் செய்ததாகவும்,அந்த மாணவியை செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்பட்டது.இதற்கிடையே அந்த ஆசிரியர் மேலும் சில மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக தெரிய வந்ததால்,கிராம மக்கள் திரண்டு சென்று ஆசிரியர் பால்ராஜ் இருந்த அறையின் கண்ணாடிகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். விபரீதத்தை உணர்ந்த போலீசார் உடனடியாக ஆசிரியர் பால்ராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.

சம்பவம் 3 (பிப்-2012)

கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர்.......

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்த தனியார் கல்லூரியில் ஆசிரியர் சசிகுமார்(28).அதே ஊரைச் சேர்ந்தவர் மதுமதி (18),சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது மதுமதி, தருணிடம் டியூஷனுக்கு சென்று வந்தார்.இந்நிலையில் ஒரு நாள் டியூஷன் சென்ற மதுமதிக்கு, சசிகுமார் கூல் டிரிங்ஸ்-ல் மயக்க மருந்து கலந்து கொடுத்து,பாலியல் பலாத்காரம் செய்ததோடு தனது செல்போன் கேமராவில் அதை பதிவும் செய்திருக்கிறார்.பேராசிரியர் தன்னிடம் தவறாக நடந்துள்ளது தெரியவந்ததும் மதுமதி டியூஷனுக்கு வருவதை நிறுத்திவிட, மதுமதியின் ஆபாச படங்களை காட்டி,அவரை மிரட்டி தன் இச்சைகளை தீர்த்துள்ளார் சசிகுமார்.காமபோதையின் அடுத்தக்கட்டமாக,மதுமதியை மிரட்டி தனது நண்பர்கள் சிலருக்கும் பணிய வைத்துள்ளார்.அதையும் செல்போன் கேமராவில் படம் பிடித்து வைத்துக்கொண்டார்.இந்த விஷயம் மதுமதியின் உறவினர் ஒருவருக்கு தெரியவந்திருக்கிறது.அவர், தருணிடம் தகராறு செய்து மதுமதி மற்றும் நண்பர்கள் படங்களை பதிவுசெய்து வைத்திருந்த லேப்டாப்பை பிடுங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று போட்டு பார்த்தபோது அதில் மதுமதியுடன் பேராசிரியர் இருக்கும் அந்தரங்க படங்கள் 3 மணிநேரம் ஓடியிருக்கிறது.3 ஆண்டாக மதுமதியை சீரழித்த படங்கள் அடங்கிய லேப்டாப் தற்போது கோவில்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் 4 (மார்ச்-2012)
 

மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய ஆசிரியர் கைது.....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர், ஜெகன்குமார் (வயது 26).இவர் எட்டயபுரம் அருகே கோட்டூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வக்கிரகுணம் மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது.இவர்,இந்தப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்களை ஒரு அறையில் தள்ளி பூட்டி அவர்களை ஒருவருக்கொருவர் ஓரின உறவில் ஈடுபட வைத்து பார்த்து ரசித்திருக்கிறார்.மறுநாள் அந்த 4 மாணவர்களும் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க,கலவரமடைந்த அவர்களின் பெற்றோர் தீர விசாரித்திருக்கின்றனர். அதன் பிறகே அந்த ஆசிரியரின் ஒழுங்கீனமாக செயல் குறித்து பெற்றோர்களுக்கு தெரியவந்திருக்கிறது.பிற்பாடு மக்களின் அறச்சீற்றத்துடன் கூடிய போராட்டம் வலுப்பெறவே, வேறு வழியில்லாமல் அந்த வக்கிர ஆசிரியரை போலிஸ் கைது செய்துள்ளது.

சம்பவம் 5 (மார்ச்-2012)

மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஆதிவாசி மாணவ, மாணவிகளுக்கான சற்குரு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.அங்கு தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்....

"சில ஆண்டுகளாக இங்குள்ள விடுதியில் தங்கி இப்பள்ளியில் படிக்கிறோம். உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் (46) என்பவரும்,விடுதி பொறுப்பாளர் நாகராஜ் (வயது 70-ஓய்வுபெற்ற ஆசிரியர்) என்பவரும் பாலியல் ரீதியாக எங்களை துன்புறுத்துகிறார்.இரட்டை அர்த்தத்தில் பேசுவது,கீழே குனிய சொல்வது, பின்னால் தட்டுவது, தகாத முறையில் தொட்டு பேசுவது என அவர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.பள்ளி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் அளித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது. எனவே,பாலியல் தொல்லை தந்துவரும் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று காவல்துறையிடம் மாணவிகள் துணிந்து புகார் அளிக்கவே,ஆசிரியர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சம்பவம் 6 (மார்ச்-2012)

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்..

திருத்தணி அருகே கோரமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் சுந்தரம் (52).இவர்,தங்களிடம் ஒழுங்கீனமாக நடப்பதாக மாணவிகள் பெற்றோரிடம் அடிக்கடி புகார் தெரிவித்தனர்.இந்நிலையில்,ஆசிரியர் சுந்தரம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை மாணவிகளுக்கு காண்பித்துள்ளார்.பார்க்க மறுத்ததால் மாணவிகளை பற்றி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் பயந்து போன மாணவிகள், தங்களது பெற்றோரிடம் இது பற்றி சொல்லி அழுதிருக்கின்றனர்.  பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டது .இறுதியில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சம்பவம் 7 (மார்ச்-2012)
  
17 வயது மாணவனை கடத்திச் சென்ற 37 வயது ஆசிரியை...

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் குமுது(37).இவர் யானைகவுனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியை ஆக பணிபுரிந்தார்.அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும்  சுனில்குமார் என்ற மாணவனை கடத்திச்சென்று குடும்பம் நடத்திய செய்தி மூன்று மாதங்களுக்கு முன் எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகி சந்தி சிரித்தது.நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழப் போகிறோம் என்று அந்த மாணவன் சொன்னபோது,ஆசிரியை-மாணவன் உறவே களங்கப்பட்டு விட்டது எல்லா ஊடகங்களும் கிழித்து தள்ளியது.

சம்பவம் 8 (மார்ச்-2012)

கல்லூரி மாணவியை கற்பழித்ததாக ஆசிரியர் கைது - மனைவி தற்கொலை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் இருக்கும் ஆரூர்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்த கணேசன்(32) தன்னிடம் டியூசன் படித்த கல்லூரி மாணவியை திருமண ஆசை காட்டி கற்பழித்து விட்டதாக செய்யப்பட்ட புகாரின் பேரில்,கணேசனை போலீசார் கைது செய்தனர்.இந்த அவமானத்தால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான கணேசனின் மனைவி கலாவதி,வாழ பிடிக்காமல் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் 9 (ஏப்ரல்-2012)

கவுன்சிலர் மகள் தற்கொலை வழக்கில் கல்லூரி பேராசிரியர் கைது...

சென்னை மாநகராட்சி 24-வது வார்டு அ.தி.மு.க.கவுன்சிலர் சுப்பிரமணியின் மகள் ஷோபனா (வயது 23)கடந்த மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதை புலனாய்வு செய்த போலீசார்,இதற்குக் காரணம் இவர் படித்த கல்லூரியில் கம்ப்ïட்டர் சயின்ஸ் பிரிவில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்த ராஜா என்பதைக் கண்டறிந்தனர்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தும்,தான் ஒரு பேச்சிலர் என்று ஷோபனாவை நம்பவைத்து அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.பிறகு இவரின் உண்மை சுயரூபம் தெரிய வரவே,மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஷோபனா.

சம்பவம் 10 (ஏப்ரல்-2012)

செல்போனில் செக்ஸ் படம் காட்டி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்...

குமரி மாவட்ட மலையோர பகுதியில் உள்ள ஆறுகாணியில் தனியார் பள்ளியில் டோமி (40) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அவர், 8-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாச படங்களை காட்டி, சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.பிறகு இது போலிஸ் வரை சென்று வழக்கு நடந்து வருகிறது.

சம்பவம் 11 (ஏப்ரல்-2012)

நெல்லை பல்கலைக்கழக 'செக்ஸ்' பேராசிரியர் தற்காலிக நீக்கம்.....

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவரான செல்லமணி, மாணவிகளுக்கு செ‌க்‌‌ஸ் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையொட்டி,பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ-மாணவிகள் தொட‌ர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.பிறகு கலெக்டர் வரை இந்தப் பிரச்சனை  எடுத்துச்செல்லப்பட,பேராசிரியர் செ‌ல்லம‌ணியை 45 நா‌ள் சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
 
                                            **********************************************
 
  
 
  இந்தச்செய்திகளைப் படித்தால்,ஏதோ ஒரு மூன்றாந்தர மஞ்சள் பத்திரிக்கையைப் படித்த உணர்வுதான் ஏற்படுகிறது.இவைகள் யாவுமே கடந்த மூன்று மாதங்களில் நம் மாநிலத்தில் ஆங்காங்கே ஒரு சில ஆசிரியப் பெருந்தகைகளால் நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்களில் சிலவையே...
 
     இந்தகைய செயல்களில் ஈடுபடும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் யாவுமே வெறும் மேம்போக்காகவே இருப்பதாக மக்களிடம் அதிருப்தி இருந்தது.இதனிடையே கடந்த வாரம் தமிழக அரசிடமிருந்து இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளிவந்து பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அதன்படி....மாணவ,மாணவிகளிடம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,அவர்களுக்கு கடும் தண்டனையாக கட்டாய ஓய்வு,பணி நீக்கம் மற்றும் பணியறவு(டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றிதழ் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும் இது தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி,இது போல தவறுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
            தமிழக அரசுப்பணிகளிலே மிக சௌகரிகமானக் கருதப்படுவது ஆசிரியத்தொழில்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், தீபாவளி மற்றும் பொங்கல் போனஸ்,ஓய்வூதியம்,மிகக் குறைவான வேலைநாட்கள் மற்றும் வேலைநேரம் மேலும் மற்ற அரசு ஊழியர்களைவிட அதிக சலுகை என்று அரைத்த மாவையே அரைக்கும் இந்த ஆசிரியர்களுக்கு அரசு அள்ளிக் கொடுக்கிறதென்றால் அதற்கு முதல் காரணம் ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் கல்வியை போதிப்பவர்கள் என்பதால்தான். அறியாமையின் இருட்டில் இருக்கும் மக்களை நாகரிக வெளிச்சத்துக்கு கொண்டுசெல்வதில் இவர்களின் பங்கு அளப்பரியது. ஆசிரியர்களை‘மாதா பிதா குரு தெய்வம்’ என்னும் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்திருப்பதும் ‘எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்’ எனப் போற்றுவதும் ‘ஆசிரியப் பணி அறப் பணி’ என விழுமியம் கொண்டிருப்பதும் நம் சமூகம் தான்.அதனால் தான் ஒரு சிலர் தவறு செய்தாலும் அது நம் சமூகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 
  சரி,இப்படி நல்லவைகளை எடுத்துச்சொல்லும் ஆசிரிய இனம்,ஒட்டு மொத்தமாக நம் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?
 
 
 
--------------------------------------------(((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))-------------------------------
 

4 comments:

  1. சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்கும்.

    ReplyDelete
  2. சரிதான் நண்பரே...நன்றி..

    ReplyDelete
  3. இவிங்க பாடம் எடுக்க வந்தான்களா? காட்டுமிராண்டிகள்

    ReplyDelete
    Replies
    1. காலம் இப்ப இப்படி இருக்கு பிரகாஷ்...நன்றி

      Delete