Monday 8 July 2013

சிங்க(ம்) வேட்டை..-விமர்சனம்



இந்த பார்ட்-1 ,பார்ட்-2  சமாச்சாரம் எல்லாம் ஹாலிவுட்டிலும்,பாலிவுட்டிலும் தான் வொர்க்அவுட் ஆகும் என்கிற விதியை உடைத்த வெகு சில தமிழ்ப்படங்களின் வரிசையில் சிங்கமும் இணைந்திருக்கிறது. தமிழில் வந்த ஒரிஜினல் சிங்கத்தை விட தெலுங்கில் ' டப்' பண்ணப்பட்ட 'யமுடு ' சக்கைப் போடு போட்டதால் என்னவோ சிங்கம்-2 தெலுங்கு ரசிகர்களை குறிவைத்தே படம் முழுவதும் சில்லி-பெப்பர் கலந்த மசாலா செமையாகத் தூவப்பட்டுள்ளது. 

படம் முடிந்து வெளியே வரும்போது " தோ..டிக்கெட் கொடுக்கிறானே இவன தூக்கி உள்ளே போடு..." ," தோ.. பப்ஸ் விக்கிறானே அவன தூக்கி லாக்கப்புல போடு..","படம் பாத்துட்டு வர்றவங்க ஒருத்தர் விடாம எல்லோர் மேலயும் லத்திசார்ஜ் பண்ணு....பாக்கிறிய..பாக்கிறியா..ஓ....ய்ய்.." னு கத்தனும் போல இருக்கு.படம் முழுவதுமே சூர்யா இதைத்தான் செய்திருக்கிறார்.

வில்லனை விட்டுவிட்டு, சிவனேன்னு வேடிக்கை பாத்துகிட்டு நிக்கிற ஒரு அப்பாவியை  ' ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா...' என ஒரே அடியில் சாய்த்த பழைய சிங்கத்தோடு படம் ஆரம்பிக்கிறது.சிங்கம் 1-ல் விட்ட கதையை,இதில் ஆரம்பம் முதலே சூர்யா பைனாகுலர் வைத்து தேடுகிறார்.அடுத்த பார்ட்டிலாவது கதையை கண்டுபிடிக்கட்டும்.

சிங்கம்-1 ல் பிரகாஷ்ராஜை என்கவுண்டரில் போட்டுவிட்டு, அத்தோடு வேலையை ராஜினாமா செய்துவிட்டு மளிகைக்கடை வைக்கப் போவதாக முடிவு செய்திருப்பார்
சூர்யா.வழியில் ஹோம் மினிஸ்டர் விஜயகுமார் மறித்து அடுத்த அசைன்மென்டாக தூத்துக்குடி ஹார்பரில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்டுபிடிக்கும் படி கட்டளையிடுவார்.ஆனால் அதுவரை மளிகைக்கடைக்காரராகவே இருக்குமாறு சொல்லியிருப்பார்.அதன் தொடர்ச்சிதான் சிங்கம் -2.. 

சூர்யா ஒருவேளை ஸ்கூல் யூனிபார்மில் ஹன்சிகாவை பார்த்திருப்பார் போல.பார்ட்-2 வில் ஹன்சிகா படிக்கும் பள்ளியில் NCC மாஸ்டராக இருப்பது போல் கதைத் தொடங்குகிறது.ஒத்த பைனாகுலர் வைத்தே மொத்த நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்கிறார் சூர்யா. சூர்யாவுடன் ஆலோசிப்பதைத் தவிர வேறு வேலை யில்லாத விஜயகுமாருடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசுகிறார்.ஒரு கட்டத்தில் அந்த பைனாகுலரை வைத்தே அது ஆயுதக் கடத்தலல்ல,ஹெராயின் கடத்தல் என்கிற அதிர்ச்சி உண்மையைக் கண்டுபிடிக்கிறார். பிறகு அதன் தலைவன் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் 'டானி' தான் என்பதையும் அதே பைனாகுலர் வழியாக அறிகிறார் சூர்யா.இதற்கிடையில் இரண்டு குரூப்புக்கு இடையே சாதிக்கலவரம் மூள,மீண்டும் டிஎஸ்பியாக சார்ஜ் எடுக்கிறார்.பிறகு அந்த கடத்தல் நெட்வொர்க்கைப் பிடித்தாரா..சாதிக் கலவரத்தைத் தடுத்தாரா என்பதுதான் மீதிக் கதை..

படம் முடிந்து வெளிவரும்போது, தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து சாதிப் பிரச்சனைகளுக்கும்,ஸ்மக்லிங்க் குற்றத்திற்கும் காரணமே ஒவ்வொரு போலீசுக்கும் சொந்தமாக பைனாகுலர் வழங்காததே காரணமென நம்மால் உணர முடிகிறது.

 
படத்தில் அஞ்சலி,அனுஷ்கா,ஹன்சிகா என மூன்று குல்ஃபிகள் வருகிறார்கள்.ஆரம்பத்தில் வரும் குத்தாட்டப் பாடலுடன் அஞ்சலியின் சேவை முடிகிறது. உரிச்ச வச்ச பிராய்லர் கோழி போல அஞ்சலி சூர்யாவுடன் செம குத்து போட, அந்த நேரத்திலும் அஞ்சலியை ரசிக்காமல் பைனாகுலரில் நோட்டமிடும் சூர்யாவின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

ஹன்சிகா +2 மாணவியாம். இம்மாம்பெரிய +2 ஸ்டுடென்ட் எந்த ஊர்லப்பா இருக்காங்க..? சரி ஒவ்வொரு வகுப்பிலும் பட்டறையை பலமாக போட்டிருக்கும் என்று சந்தேகித்தாலும்,அவர் நன்றாகப் படிக்கும் மாணவியாம். இந்த ஆராய்ச்சி நமக்கெதுக்கு.அடுத்தது வருவோம். அவர் சூர்யாவை லவ் பண்ணுவதாக சொல்கிறார். ஆனால் சூர்யாவுக்கு ஏற்கனவே காவ்யா(அனுஷ்கா ) உடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே சூர்யா உத்தமனாக இருந்தால் என்ன செய்திருக்கணும்..? முதலில் லவ் யு சொல்லும் போதே அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயமாகியிருக்கிறது என சொல்லியிருக்க வேண்டாமா.? கடைசியில் அதை சொல்லும் போதுதானே அவர் திருந்துகிறார்.அதைவிட்டுவிட்டு ஸ்டுடென்ட் மாஸ்டரைக் காதலிக்கக் கூடாது..உனக்கு வந்திருக்கிறது இன்பாக்சுவேசன்...இது அறியாத வயசு...என எதுக்கு அட்வைஸ் பண்ணனும்..?  இப்ப புரியுதா.. எதுக்கு மளிகைக்கடை வைக்கிறேன்னு சொல்லிட்டு போனவரு NCC மாஸ்டரானாருனு..ஒருவேளை அனுஷ்கா புட்டுகிச்சினா.!?.சூர்யாவின் மாஸ்டர் பிரைன் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. 


கடத்தல்காரர்களாக வரும் ரகுமானும்,முகேஷ் ரிசியும் உண்மையிலேயே நண்பர்கள்.ஆனால் போலிசுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக எதிரிகள் போல் நடிக்கிறார்கள். தமிழ் நாட்டுப் போலிசின் அனைத்து உயர் அதிகாரிகளும் அவர்களின் கைக்குள்ள இருக்க,தூத்துக்குடியில் நாங்கதான் டான் எனக் கொக்கரிப்பவர்கள் எதற்காக இந்த நாடகம் போடவேண்டும்..?  நடுக்கடலில் இருக்கும் முகேஷ் ரிசியை பார்க்க ரகுமான் அவசரமாக போட்டை எடுத்துக்கொண்டு தன் சகாக்களுடன் விரைகிறார்.அவரை சொற்ப தூர இடைவெளி யில் சூர்யா ஃபாலோ செய்கிறார். பாவம் அவர்களுக்கு திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லை போல. வழக்கம் போல பைனாகுலரில் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதை மட்டும் கண்டுகொண்டு திரும்பிவிடுகிறார்.(தக்காளி...முதல்ல அந்த பைனாகுலர் எங்க கிடைக்குதுன்னு விசாரிச்சி வாங்கணும்  ) 


இன்டர்நேசனல் ஸ்மக்ளர் ' டானி 'தான் அது என தெரியாமல் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார் சூர்யா. விஷயம் வெளியே தெரிந்து எம்பி,எம்எல்ஏ ஆரம்பித்து பல முனைகளிலிருந்தும் சூர்யாவுக்கு தொல்லைகள் வர, திக்குமுக்காடிப்போன சூர்யா டானியை தப்பிக்க விட்டு விடுகிறார். இது ஒரு சாதா டிஎஸ்பி என்றால் நம்பிவிடலாம். முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சரின் நேரடி தொடர்பில் இருக்கும் 'ஸ்பெசல்' டிஎஸ்பியான சூர்யா,ஏன் அவருக்கு ஒரு போன் போட்டு நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது..? 
    
சரி..சூர்யா என்ன யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் தீவிரவாதியா அல்லது அவரை யாரும் நெருங்க முடியாதா...? அவரைக் கொல் எதுக்கு இலங்கையிலிருந்து சிங்களவனைக் கொண்டு வரணும். அதிலும் மறைந்திருந்து சுடவேண்டுமா...? அப்படிக்கூட ஒழுங்கா சுட்டுச்சா அந்த சிங்கள நாயி...? அதுவும் இல்லை. ஒருவேளை இதன்மூலம் சிங்களப் பிரச்னைக்கு ஏதாவது தீர்வு சொல்ல வருகிறாரா இயக்குனர்.ஒரு எழவும் புரியல...ஆனா பாருங்க இவரையும் பைனாகுலர் வச்சிதான் சூர்யா கண்டுபிடிக்கிறார்.

டானியை கைது செய்வதற்காக சவுத்ஆப்ரிக்கா புறப்படுகிறார் சூர்யா.அதற்கு முன் ஆபரேசன் ' D ' கேன்சல் செய்யப்பட, அந்த லெட்டர் வாங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் புறப்பட்டு விடுகிறார்.பிறகு அவர் ஆப்ரிக்கா சென்றது தெரியவர அப்படியே விட்டுவிட்டு இந்தியா திரும்ப கட்டாயப் படுத்தப் படுகிறார். ஏனென்றால் டானி அவ்வளவு பவர்புல் ஆசாமியாம். சென்ட்ரல் மினிஸ்டர் வரையில் லிங்க் இருக்கிறது. இதெல்லாம் சரி...டானியை வெளுத்தெடுத்த அடுத்த காட்சியிலேயே தூத்துக்குடி சிறையில் அடைக்கப் படுவதாகக் காட்டப் படுகிறதே... ஆபரேசன் கேன்சல் செய்திருக்கையில்  எல்லோர் கண்ணிலேயும் விரலை விட்டு ஆட்டிவிட்டு 'ஜீபூம்பா...' பண்ணி தூத்துக்குடிக்கு கொண்டு வந்திருப்பாரோ...?

இப்படி படம் நெடுக லாஜிக்-ல் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுகிறது ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதை.. ஒரு படத்தில் பன்ச் டயலாக் இருக்கலாம்.படமே பன்ச் டயலாக்காக இருந்தால் எப்படி இருக்கும்...? அப்படித்தான் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார் சூர்யா.. 'வயசுப் பசங்களுக்கு பிகர் வர்றதும் வயசான பிறகு சுகர் வர்றதும் சகஜம் தானே' போன்ற சந்தானத்தின் பன்ச் வேறு..விவேக்கை விட சந்தானத்திற்கு நிறைய காட்சிகள்.
 
 
பள்ளியில் பிரேயரில் தேசியகீதம் பாடும்போது லோக்கல் ரவுடிகள் 'யாருடா என் புள்ளையை அடிச்சது' ன்னு ஆயுதங்களுடன்  உள்ளே வர, தேசியகீதம் முடியும் வரையில் விறைப்பாக நின்றுவிட்டு பிறகு பின்னி யெடுக்கிறார் சூர்யா.அவர் அடித்ததை விட, கடைசியில் பன்ச் டயலாக் பேசும் போதுதான் அடிவாங்கியவன் வலியில் துடிப்பதை நம்மால் உணரமுடிகிறது. 'த்தா... பன்ச் டயலாக்கை ஆரம்பத்திலேயே பேசியிருந்தா அப்பவே வந்த வழியே ஓடிப்போயிருப்போமடா..' என்கிற அவர்களின் மைண்ட் வாய்ஸ் நமக்கு தெளிவாக கேட்கிறது.

பார்ட்-2 வின் கண்டினியுடிக்காக விவேக்,நாசர்,ராதாரவி,மனோரமா,அனுஷ்கா,,,என பழைய ஆட்கள் இதிலும் தொடர்ந்தாலும் அனுஷ்கா மட்டும் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த தக்காளிபோல் ஃபிர
ஷாக இருக்கிறார்...அவர் தங்கையாக வரும் பிரியாவும் அப்படியே...ஹி..ஹி..

படத்தில் கேமராமேனின் உழைப்பு மட்டும் பிரமாண்டமாகத் தெரிகிறது. இசை DSP என்கிறார்கள். எந்தப் பாட்டிலும் தெரியவில்லை.பின்னணி இசையைவிட கர்ர்ர்..புர்ர்ர் என கார் கிரீச்சிடும் சவு
ண்ட் படம் நெடுக காதைக் கிழிக்கிறது. 

இரண்டரை மணிநேரம் ஒரு ரசிகனை தியேட்டரின் சீட்டில் கட்டிப்போட வைப்பதே சமகாலத்திய சினிமாவில் ஒரு சவாலான விசயமாக இருக்கையில்,அந்த சவாலை வென்றேடுத்திருக்கிறது சிங்கம் -2 என்றே சொல்லலாம். 

படத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்ட பிறகு வந்த அனைத்து நக்கல் நையாண்டிகளும் தற்போது காணவில்லை. ஜெட் வேகத்தில் சீறும் திரைக்கதையில்அங்கங்கே தெரியும் லாஜிக் ஓட்டைகள் சூர்யாவின் பைனாகுலரில் நோட்டமிட்டால் மட்டுமே புலப்படும் என்பதால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் சூர்யாவுக்கு இதுவும் ஒரு வெற்றிப்படம்தான்.

 சிங்கம்- ஒரு தூத்துக்குடி (துரை)சிங்கத்தின் வேட்டை..


    

11 comments:

  1. பைனாகுலர் உதவியுடன் விமர்சனம் நன்று... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க திண்டுக்கல் தனபாலன்

      Delete
  2. எல்லாருமே நல்ல இருக்குன்னு சிங்கத்த வெறி ஏத்துராங்களே... ஐயையோ சீக்கிரம் அடம் பார்த்தே ஆகணுமே...

    ReplyDelete
    Replies
    1. ஒருதடவை பார்க்கலாம் சீனு...நல்ல எண்டெர்டெயின்மெண்ட்

      Delete
  3. அட்டக்கத்தி வீரன்லான் பஞ்ச் டயலாக் பேசுறாம்பா.

    ReplyDelete
  4. படம் ரசிக்க வைக்கிறது.உங்களை மாதிரி எல்லாம் ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்க வைப்பதில்லை.படத்தினை சாமானிய ரசிகன் கொண்டாடுவான்.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம்னு வந்திட்டா நிறை குறைகளை சொல்லித்தானே ஆகணும் பாஸ்...வெறுமனே அது நல்லா இருக்கு இது நல்லா இருக்குனு சொல்வது விமர்சனமா.. அது விளம்பரம் அல்லவா..

      Delete
  5. வீட்டிற்கு திரும்பியவுடன் - என் கணவரிடன் நான் பஞ்ச் டயலக் பேசினேன். `தலைவா, இதுபோன்ற படங்களுக்கு எனக்கு டிக்கட் போட்ட, உனக்கு நான் டிக்கட் வாங்கிடுவேன், ஜாக்கரதை.’:)

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... செம பன்ச் சகோ...நன்றி..

      Delete
  6. Ungal vimarsanathil izhaiyodum nagaichuvai aruvai

    ReplyDelete
  7. Sorru boss arumai nu type pannum podhu thappa type panniten...

    ReplyDelete